Monday, 8 July 2013

முரண்பாடுகளும் ஆழிப்பேரலைகளும்..

அலைகடலிடம் அமைதியையும், குளத்தில் ஆழிப்பேரலைகளையும் எதிர்பார்ப்பது போன்றதே சிலரிடம் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளும்..

உர்ர்ர்ர்ர்ர்சாகமாக விடியும் பொழுதை, சில இனிய நிகழ்வுகள் உற்சாகமாக மலர வைத்து விடுகின்றன.

ரசித்துச்சிரிக்கத் தெரிந்தவனுக்கு அழகாய்த்தெரியும் உலகம், தெரியாதவனுக்கு கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது.

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.

எறியப்பட்ட கல் குளத்தில் எழுப்பும் அலைகள் கரையிலிருப்பவரையும் தொட்டுச்செல்வது போல், ஒருவர் மேல் காட்டப்படும் கருணையானது பலருக்கும் பரவுகிறது.

அன்பு--- எல்லாச்சுமைகளையும் வலிகளையும் நீக்கவும், கொடுக்கவும் வல்ல ஒரே உணர்வு.

சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்.

உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புபவர்களின் கண்களுக்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்படுவதில்லை.

சிக்கல்களில்லாமல் எளிமையாக, நிம்மதியாக வாழ்வதென்பதே இன்றைய சூழலில் மனிதனுக்கு சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.

முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.

Friday, 5 July 2013

பூந்தோட்டம்.. (05-07-2013 அன்று பூத்தவை)

பச்சிலைப்பூ: எல்லா ஊர்களையும்போலவே மும்பையிலும் இவ்வளவு நாளாக சமையல் வாயு வேண்டுமென்றால் பதிவு செய்து காத்திருந்தோ அல்லது நேரடியாகப் போயோ வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால், இனிமேல் ரீஃபில் சிலிண்டருக்கான பதிவு முறை மொபைல் போனிலோ அல்லது லேண்ட் லைன் மூலமாகவோ மட்டுமே செய்யப்படுமாம். இந்த முறை கோவா, ரத்னகிரி, சிந்துதுர்க் ஏரியாக்களில் ஆரம்பித்து மும்பை வரை  வந்திருக்கிறது. இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமது வினியோகஸ்தர்களிடம் ரேஷன் கார்டு, மற்றும் கியாஸ் கார்டு சகிதம் சென்று, அதைக் கண்ணில் காட்டி விட்டு, இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களது மொபைல் நம்பர், அல்லது லேண்ட் லைன் நம்பரைக் கொடுக்க வேண்டும். அவர்கள் நாம் அங்கேதான் இணைப்பு வாங்கியிருக்கிறோம் என்பதை உறுதிசெய்து, நம் விவரங்களை ஆன்லைனில் அவர்கள் தளத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டு IVRS(Interactive Voice Response System)நம்பரான 9420456789ஐ கியாஸ்கார்டில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதன் பின் நமக்கு ரீஃபில் சிலிண்டர் தேவைப்படும்போது IVRS நம்பரை மட்டும் டயல் செய்தால் போதும். தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு விடும். 

மொபைல் நம்பர் மூலமாக சிலிண்டர் பதிவு செய்யும்போது reference நம்பர் எஸ்.எம்.எஸ் மூலமாக வந்து விடும். அதேபோல் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதும் அதை உறுதி செய்தும் ஒரு தகவல் கொடுத்து விடுவார்கள். இதையெல்லாம் கடை வாசலில் ஒரு பணியாள், அனைவருக்கும் விளக்கிக்கொண்டிருந்தார். இந்த ரெஜிஸ்ட்ரேஷனை, ஆபீசர் மூலமாக அல்லாமல் நாமே மொபைல் மூலமாகவும் செய்யலாம் என்றும், அதை எப்படிச்செய்வது என்று விளக்கி ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸுக்கு வழி காட்டிக்கொண்டுமிருந்தார். கடைக்குள் கூட்ட நெரிசலைத்தடுக்க இப்படியொரு ஐடியாவாம். எட்டியெட்டிப் பார்த்தும் தலைகள்தான் தெரிந்தனவேயல்லாமல் நோட்டீஸ் கண்ணில் படவில்லை. ஆகவே 'என் வழி நேர் வழி' என்று கடைக்குள் நேரடியாகப் போய்ப் பதிவு செய்தேன். www.ebharatgas.com என்ற அவர்களது தளத்திலும்போய்ப் பதிவு செய்து ivrs நம்பரைப் பெற்றுக்கொள்ளலாம். 

வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு சகோதரர் உதிர்த்த முத்து.. "இதுவரைக்கும் இதெல்லாம் தங்க்ஸ்கள் பாடுன்னு இருந்துட்டோம். இப்ப நம்ம மொபைல் நம்பரைக் கொடுக்கப்போறதால், இனிமேல் 'சிலிண்டர் புக் செய்தாச்சா?'ன்னு ஆப்பீசுக்கு வீட்டிலிருந்து அடிக்கடி போன் செய்து வறுத்தெடுக்கப்போறாங்க" மொபைல் நம்பரை மட்டும் கொடுப்பவர்கள் வீட்டில் லேண்ட்லைன் இல்லையென்பது அர்த்தமெனக்கொள்க. அதுதான் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு மொபைல்களாவது இருக்கின்றனவே. அப்புறம் லேண்ட்லைன் எதற்கு :-)

வெட்சிப் பூ: ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் சென்ற வாரம் ஒரே வேடிக்கைதான். தலைப்பே அப்படியாயிற்றே. அசரடிக்கும் படங்கள் காட்டிய வேடிக்கையில் சென்ற வாரம் முழுதும் கலகலப்பாகப் போயிற்று. முத்துக்கள் பத்தில் எனது காமிராச்சிப்பி உதிர்த்ததும் இடம்பெற்றது.



யார் தந்த அரியாசனமிது :-))

செங்கோடுவேரிப்பூ: கணவரிடம் கோபித்துக்கொண்டு மனைவி, "நான் எங்க அம்மா வீட்டுக்குப்போறேன்" என்று கிளம்பினால்,  கணவர் அதைத் தடுக்கக் கூடாதாம். மாறாக, "பரவாயில்லைம்மா, நீ உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வா,.. நானும் என் மாமியார் வீட்டுக்குப் போயிட்டு வரேன், நம்ம குழந்தைகள் அவங்க நானா, நானி(அம்மம்மா, அம்மாவின் அப்பா) வீட்டுக்குப் போயிட்டு வரட்டும்." என்று சந்தோஷமாகச் சொல்ல வேண்டுமாம். சமாதானப்படுத்த இதுவும் ஒரு வழி என்கிறார் உபதேசித்தவர். பதிலுக்குக் கோபப்படவோ சண்டையிடவோ செய்தால் சண்டை இன்னும் வலுக்கும், குடும்ப அமைதி குலையும். (சானல்களைத் திருப்பிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் ஒரு பக்தி சானலில் எதேச்சையாகக் கேட்டது)

தேமாம்பூ: குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான்.. அது மனிதக்குழந்தையாக இல்லாவிட்டாலும் கூட :-)))


இது துள்சிக்காவுக்காக :-)

Tuesday, 2 July 2013

தினகரன் நாளிதழும் ஞானும் பின்னே அல்வாவும்..

பாம்பே அல்வா என்று பெயரிடப்பட்டிருப்பதால் இது பாம்பேயாக இருந்து மும்பையாக மாறியிருக்கும் ஊரைத்தான் தாயகமாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை வாசிக்கத்தெரிந்த சிறுகுழந்தை கூட சொல்லிவிடும். அதேபோல், சைனாக்ராஸ் எனப்படும் அகர்அகரை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் இந்த அல்வாவை சைனாவிலோ, பாம்பே அல்வா என்ற நாமகரணம் கொண்டிருப்பதால் மும்பையிலோ  செய்ய வேண்டுமென்ற அவசியமுமில்லை. எந்த ஊரில் செய்தாலும் அல்வா.. அல்வாதான்.

கோபால் பல்பொடி மாதிரியே இதுவும் ஆசியாவின் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சைனா, போன்ற நாடுகளில் புகழ்வாய்ந்தது. அகர் அகர் உடல்சூட்டைத்தணிக்கும் குணம் கொண்டது. ஆகவே இதில் அல்வா,  புடிங் என்று வகைவகையாகச் செய்து அசத்தலாம். இளசான தேங்காயின் நறுக்.. நறுக்கையும் வழுவழுப்பையும் கொண்டிருக்கும் இந்த அல்வாவை வெயில் காலங்களில் மட்டுமல்லாது எல்லாக்காலங்களிலும் கொடுத்து மகிழலாம். என் வீட்டினருக்கு அல்வா கொடுப்பதென்று முடிவெடுத்து விட்டால் அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன். உடனே ஓடிவிடுவேன்.. பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு :-) நினைத்த போதெல்லாம் அல்வா செய்து கொடுத்து மகிழத்தான் கிட்ஸ் கம்பெனிக்காரர்கள் உடனடி மிக்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களே. அதில் ஒன்றிரண்டு பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வருவது வழக்கந்தான் :-)

முதன்முறை இந்த அல்வா செய்யப்போய் அது எனக்கு அல்வா கொடுத்த கதையும் உண்டு. கடைசித்தம்பியின் திருமணத்தின்போது அவனுக்கு என் கையால் அல்வா செய்து கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் மும்பையிலிருந்தே பாக்கெட் வாங்கிப்போயிருந்தேன். எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டுமென்று தெரியாமல் நானே குத்து மதிப்பாக ஒரு கணக்கைப்போட்டுக்கொண்டு காய்ச்சிய பாலில் அல்வாமிக்ஸை மிக்ஸிவிட்டு அது  கரையும் வரையில் கிளறி, பாயசம் மாதிரியே இருக்கிறதே என்று மனதில் கடைசி வரையில் தோன்றிக்கொண்டே இருந்த எண்ணத்தைத் தூக்கிக்கடாசி விட்டு, அல்வாக்கலவையை தட்டில் கொட்டிவிட்டேன்.  அதுவானால் இறுகாமல் விழித்துக்கொண்டே இருந்தது. சரி, விடியும் வரைக்கும் விட்டு வைத்தால் இறுகிவிடும், டிபனுடன் பரிமாறலாமென்று எண்ணி, ஒரு தட்டைப்போட்டு மூடி வைத்து விட்டேன். விடிந்து பார்த்தால் தட்டிலிருந்ததில் பாதியைக்காணோம்.மீதி இன்னும் பாஸுந்தி மாதிரியே இருக்கிறது.

ஆஹா!!.. ருசியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது, வீட்டிலிருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் மீதம் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விழுந்தது மண். இரவோடு இரவாக உலா வந்த பூனையார் டேஸ்ட் பார்த்துவிட்டு மீதியை எங்களுக்கு விட்டு வைத்திருந்தார் :-) ஆகவே கிண்டிய அல்வாவை கடைசியில் குப்பையில் கடாச வேண்டியதாகப்போயிற்று. அதன்பின் அகர் அகர் அல்வா முயற்சியில் இறங்கவேயில்லை. சமீபத்தில் மகள் அழகாக பக்குவமாகச் செய்து பரிமாறினாள்... ஜூப்பர். கொஞ்சம் கெட்டியான பாயாசம் அளவுக்கு வரும்வரை சுமார் பத்து நிமிடங்களுக்காவது கிளறிக்கொண்டே இருக்க வேண்டுமாம், இதுதான் ரகசியம். அவ்வளவுதான்.. விட்ட பைத்தியம் மறுபடி பிடித்துக்கொண்டது எனக்கு. அரை லிட்டர் பால் மீந்தாலும் போதும். டின்னரில் தட்டில் அல்வா இருக்கும். உடலுக்கும் நல்லதாயிற்றே..

பாக்கெட்டைப் பிரித்து..

கொதித்த பாலில் அல்வா மிக்ஸைக்கொட்டிக்கிளறி..
தட்டில் ஊற்றி..
துண்டு போட்டால்..
அல்வா ரெடி..
துருவித்தூவிய பாதாம் மாயமாய் மறைந்த விந்தையென்ன என்று திகைக்க வேண்டாம். அது போன மாதம்.. இது இந்த வாரம் :-)

என்னதான் அதிலேயே ஸ்கிம்டு பால்பவுடர் இருந்தாலும் 80கிராம் பாக்கெட்டுக்கு அரை லிட்டர் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் செய்தால் அருமையாக வருகிறது. பாதாம், ஏலக்காய், குங்குமப்பூ, பிஸ்தா என்று எல்லாமும் இருப்பதால் பார்ட்டிகளுக்கு ஏற்ற டெஸர்ட்டாகவும் இருக்கிறது. உலர்பழங்கள், பால் சாப்பிடப்பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படிச் செய்து கொடுத்து சத்தை உள்ளே தள்ளிவிடலாம். 

இப்பொழுது ஏன் அல்வா கொடுக்கிறேன் என்று இந்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.. கேட்காவிட்டால்?... ஹி..ஹி.. நானே சொல்லி விடுவேனாக்கும் :-)))

என்னுடைய புகைப்படப்பதிவுகளைப்பற்றிய பேட்டி குங்குமம் தோழி இதழின் "கண்கள்" பகுதியில் வந்தது தெரிந்ததே.
அந்தப்பேட்டி இப்பொழுது மே மாதம் எட்டாம் தேதி வெளியான தினகரன் நாளிதழிலும் மறுபதிப்பு ஆகியிருக்கிறது. கண்டெடுத்துச்சொன்ன புகைப்படப்பிரியன் அதிபர் சகோதரர் "மெர்வின் அன்டோ" அவர்களுக்கும், புகைப்படப்பிரியன் பக்கத்தில் அறிவித்த சகோதரர் "சுந்தரராஜன்"அவர்களுக்கும் வாழ்த்திய அனைவர்க்கும் எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டாமா!! ஆகவேதான் அல்வா கொடுத்து நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

தினகரன் நாளிதழின் மகளிர் பகுதியில் எனது நேர்காணலை வாசிக்கச் சொடுக்குங்கள் சாட்டையை.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1792

Friday, 28 June 2013

பொம்மை மனிதர்கள்..

ஒரு விடையைப் பெறுவதற்காக அனேகமான கேள்விகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

‘ஆம்’ என்ற பதில் வந்து விடுமோவென்ற அச்சத்தினால் கூட, நிறையக்கேள்விகள் தயங்கி நின்று விடுகின்றன.

வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்.

அதிகம் பேசுவதால் மட்டுமன்றி தேவையான இடங்களில் பேசாமல் இருப்பதாலும் சில சமயங்களில் அவதிப்பட நேரிடுகிறது.

நாட்டியமாடும் மின்னலுக்கு, இடி ஜதி சொல்கிறதென்று, போட்டியாக மேளம் கொட்டுகிறது தகரக்கூரையில் மழை.

விலையுயர்ந்த நேரத்தை வீணாய்ச் செலவழிப்பவன் சோம்பேறி, பயனாய்ச் செலவழிப்பவன் உழைப்பாளி, பார்த்துப்பார்த்துச் செலவழிப்பவன் புத்திசாலி.

இறைவன் நம்மை இவ்வுலகிற்கு தனியே அனுப்புவதில்லை. திறமையெனும் நண்பனுடன்தான் அனுப்பி வைக்கிறார்.

'வாழ்க்கையென்றால் அப்படித்தான்’ என்று நாமாகவே சொல்லிக் கொள்கிறோமே ஒழிய, அது தன்னைப்பற்றி எதுவுமே சொல்லிக் கொள்வதில்லை.

சூரியனை மட்டுமே நோக்கியிருக்கும் சூரியகாந்தியாய் வாழ்க்கையின் நல்ல பகுதிகளை மட்டுமே நினைவில் நிறுத்துவோம். நிழல்கள் காலடியில் இருந்து விட்டுப் போகட்டுமே.

மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது. 

Wednesday, 26 June 2013

கிருஷ்ண கமல்..

பச்சைப்பசேல் பின்னணியில் நீலக்கற்களைப் பதித்தது போல் பூத்திருப்பவைகளைக் கண்டாலே மனது நிறைந்து போகிறது. 'க்ருஷ்ண கமல்' இப்படித்தான் மஹாராஷ்டிர மக்கள் இந்தப்பூவை அழைக்கிறார்கள். 'பிரம்மகமலுக்கு' அடுத்தபடியாக இந்தப்பூவை வீட்டில் வளர்ப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். வீட்டில் இந்தப்பூச்செடியை வளர்த்தால் ஐஸ்வரியம் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் இந்தப்பூவை 'Passion flower' என்று அழைக்கிறார்கள். கொடி வகையைச்சேர்ந்ததால் மல்லிகையைப்போலவே வாசலில் இதைப் பந்தலிட்டும் வளர்க்கலாம். பற்றிப்படர ஏதுவாக தொட்டியிலேயே நான்கு அல்லது ஐந்தடி உயரத்திற்கு சில மூங்கில் குச்சிகளை ஊன்றி வைத்து அதிலும் படர விடலாம். நர்சரிகளில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.மேலும் சில வழிமுறைகள் இங்கே இருக்கின்றன. கொஞ்சம் விலையுயர்ந்த வகை என்பதால் நர்சரிகளில் எண்ணிக்கையில் குறைவாகத்தான் வைத்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கும் அளவு மற்றும் நர்சரிகளைப்பொறுத்து, ஒரு செடி 200 ரூபாயிலிருந்து 400 வரை விலை போகிறது.

வெள்ளை, பிங்க், மற்றும் நீல வண்ணங்களில் பூக்கும் க்ருஷ்ணகமலில் நீலம் நாட்டு வகையைச் சேர்ந்ததாம். மற்றவையெல்லாம் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தவை என்று நர்சரி நடத்துபவர் கூறினார். க்ருஷ்ணகமலில் சுமார் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். எங்கள் வீட்டில் வளர்வது எந்த வகை என்று அறியும் ஆவலில் விக்கியண்ணனிடம் கேட்டபோது அது 'passiflora incarnata' வகையைச் சேர்ந்தது என்று கூறினார். மேலும் பல விவரங்களை அள்ளித்தந்திருக்கிறார்.

இதற்கு எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றனவாம், கூடவே பக்க விளைவுகளும். மூலிகையாயிற்றே.. பக்க விளைவுகள் இருக்குமா என்ன? என்று ஆச்சரியத்தோடு மேலும் கேட்டால் அதிர்ச்சியூட்டும் தகவல்களை நம் முன் அள்ளிக்கொட்டுகிறார் கூகிளாண்டவர். ஆகவே இந்தச்செடியை வெறுமே அலங்காரத்திற்கும் பூஜைக்குமாக மட்டுமே வளர்ப்பது சாலச்சிறந்தது. எங்கள் வீட்டில் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே..

மொட்டு ஒன்று மலர்ந்திடக்காத்திருக்கிறது..
மெல்ல மெல்ல இதழ் விரித்து..
ரகசியமாய் ஒரு புன்னகையுடன்..
மலர்ந்து சிரிக்கிறது..

பூவைத்தேடி வந்த தேனீ..
பளீரென்ற சிரிப்பு..
இந்தப்பூவுக்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்றும் பெயருண்டு என்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. அதாவது..

நீலக்கலரில் சுற்றியிருக்கும் இதழ்கள் கௌரவர்களாம்..

அதன் உட்புறம் மஞ்சள் கலரில் இருக்கும் ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்களாம்..

அதற்கு மேற்புறம் மஞ்சள் கலந்த பச்சைக்கலரில் உருண்டையாக இருப்பது திரௌபதியைக்குறிக்குமாம்..

அதற்கும் மேற்புறம் இருக்கும் மூன்று இழைகள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளைக் குறிக்கின்றனவாம்.

நீலத்தின் உட்புறம் தெரியும் பர்ப்பிள் வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச்சக்கரத்தைக் குறிக்கிறதாம்.

இப்படியெல்லாம் நினைத்துப்பார்க்க சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது இல்லையா :-)

வேடிக்கை காட்டிய களைப்பில் நொந்து நூடுல்ஸாகி..
இந்தப்பூவை வீட்டில் வளர்த்தே ஆகவேண்டும் என்று தவமாய்த்தவமிருந்து வாங்கிக் கொண்டு வந்து, "இது என் செடி, நானே தண்ணி ஊத்தி வளர்க்கப்போறேன்" என்று சொல்லி வீட்டில் நட்டு வைத்து விட்டு, அப்புறம் அதை அம்பேல் என்று விட்டு விட்ட என் பெண்ணிற்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-)))))))

என் செடிகளுக்குப் பொசியும் நீர் ஆங்கே கிருஷ்ண கமலுக்கும் பொசிகிறது :-))

Thursday, 13 June 2013

ஒன்றும் இன்னொன்றும்..

நாட்கள் என்றுமே தம்மைப் புதுப்பித்துக்கொள்வதில்லை. தினமும் புதிதாய்ப் பிறக்கின்றன. நாமும் புதிதாய்ப் பிறப்போம், சோர்வூட்டும் கணங்களை மீறி.

பொருந்திய சூழல்களில் சந்தோஷத்துடன் இருப்பவனைவிட பொருந்தாச்சூழல்களிலும் தன்னைப்பொருத்திக்கொண்டு சந்தோஷமாய் இருப்பவன் பாராட்டுக்குரியவன்.

நேற்றிலிருந்து கற்றுக்கொண்டு, நாளையில் நம்பிக்கை வைத்து இன்றில் வாழ்வோம்.

செயல்களின்றித் தவறுகளில்லை, தவறுகளின்றி அனுபவங்களில்லை, அனுபவங்களின்றி ஞானமில்லை.

புன்னகைத்திரையிட்டு கண்ணீரை மறைக்கத்தெரிந்த நமக்கு நம் கண்ணீருக்குக் காரணமானவர்கள் புன்னகைத்துக் கொள்வதைச் சில சமயங்களில் அறிந்து கொள்ளத் தெரியாமல் போய்விடுகிறது.

வெற்றிக்கோபுரத்தை நோக்கி இட்டுச்செல்லும் படிக்கட்டுகளில் சில தோல்விகளும் புதைந்து கிடக்கலாம்.

அருகில் சென்று உற்றுப்பார்க்காத வரைக்கும் எல்லாப் பூக்களுமே அழகாகத்தான் தெரிகின்றன..

‘எதுவும் நிரந்தரமல்ல’ என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றன எண்ணிலடங்கா உணர்வுகள்.

மேலோட்டமாகப் பார்க்கையில் சலனமற்றுத்தெரிபவை உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கவும் கூடும்

உழைப்பு உடலையும் அனுபவங்கள் உள்ளத்தையும் பக்குவப்படுத்துகின்றன.

Wednesday, 8 May 2013

ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா.. (பாகம்-2)

ஒவ்வொரு நிமிடத்திற்கும் கலக்கலாய்க் கலர்கலராய் ஆடை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் ஆகாயப்பெண். அவளுக்கும் அலுக்கவில்லை, சப்ளை செய்யும் சூரியனாருக்கும் அலுக்கவில்லை. பார்க்கும் நமக்கு மட்டும் அலுக்குமா என்ன?. 

நீல வெல்வெட்டில் வர்ணக்குப்பியைக் கொட்டிக்கவிழ்த்த குறும்புக்குழந்தை யார்?.. இப்பவே தெரிந்தாகணும் :-))


மழைக்காலத்தைய மந்தஹாசமானதொரு மாலைப்பொழுதில் மலைப்பகுதியில் மாட்டிய மரங்கள்...


கம்பத்தை விட விளக்கைப் பெரிதாகப் படைத்த சிற்பி யாரோ!!!

இன்னுமொரு நாளே.. புறப்படுவோம் இலக்கு தேடி..

வேகவேகமாய் உருவங்களை மாற்றிக்கொள்ளும் மேகங்களிடம் உருவங்களைக் கண்டறிதல் சிறுகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் வேடிக்கையான பொழுதுபோக்கு. இந்தப்படங்களிலிருக்கும் மேகங்களில் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று சொல்லுங்களேன். கண்டறிந்து விளையாடுவோம் :-))





நிலமும் நீரும் ஆகாயமும் நெருப்பும் காற்றுமாக பஞ்சபூதங்களும் சந்திக்கின்றன இந்தக் குமரி முனையில்..

கதிரவனின் கண்ணாமூச்சி விளையாட்டு. எத்தனைதான் மேக முந்தானையில் முக்காடிட்டுக் கொண்டாலும் கொண்டையை மறைக்கத்தெரியவில்லை :-))))



இதோ கண்டுபிடித்து விட்டேனே :-))

முதல் பாகம் இங்கேயிருக்கு..

LinkWithin

Related Posts with Thumbnails