Tuesday 28 February 2012

கட்டாந்தரையும் காரணிகளும்..


ஒரு மனிதனின் செல்வச் செழிப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை அவனது தேவைகளும் விருப்பங்களும் மட்டுமே.

பொறுமை, நம்பிக்கை, பொறுப்புணர்வு இவைகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா?…. ஒரு செடியை வளர்க்க ஆரம்பியுங்கள். பொறுப்பில்லாமல் ஒரு நாள் தண்ணீர் ஊற்ற மறந்தால் கூட, வாடி வதங்கி இது பிழைக்குமா இல்லையா என்று நம் பொறுமையையும், எப்படியும் பிழைத்து விடும் என்ற நமது நம்பிக்கையையும் ரொம்பவே சோதித்து விடும்.

நாம் எப்போதும் வளமான எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்களாக இருக்கிறோம்,.. அதற்கான விதைகள் நிகழ்காலத்தில் மட்டுமே ஊன்றப்படுகிறது என்பதை மறந்து விட்டு.

வளர்ந்தபின் இந்த உலகத்தையே மாற்றி குறைகளில்லாத ஒரு புது உலகைப் படைப்பேன் என்பதே ஒவ்வொரு இளம் மொட்டின் கனவாக இருக்கிறது. வளர்ந்தபின்தான் புரிகிறது, உலகத்தில் நாமும் அடக்கமென்பது. சோப்பானது தன்னையும் சுத்தமாக வைத்துக் கொண்டு நம்மையும் சுத்தப்படுத்துவதைப் போல், முதலில் நாம் குறையில்லாத மனிதராய் மாறி உலகைக் குறைகளற்றதாக்குவோம்.

அறைகளில் அடைத்து வைத்துக் கற்பிக்கப்படுவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும், பொறுமையையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்வதும் கல்வியே.

அளவுக்கு மீறிப் பராமரித்தாலும் கெடும், பராமரிப்பின்றி விட்டாலும் கெடும் மனித உறவுகளும் தாவரங்களும் ஒன்றே. ‘பீலிபெய் சாகாடும்’  என்று வள்ளுவரும் ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று தமிழ்ப்பாட்டியும் எச்சரித்தது இதைத்தானோ..

அன்றைய தினத்தை மிகவும் மன நிறைவுடனும் திருப்தியுடனும் கழித்தவனுக்குத் தூக்கம் வர மெத்தையின் சொகுசும், மாத்திரையின் துணையும் தேவையில்லை.

நம்மீது உண்மையான அன்பு கொண்டவர் மனதில் நமக்கென்று விசாலமான நிலையான இடத்தை விடவும் விலையுயர்ந்த சொத்தை, வாழ்நாளில் நம்மால் சம்பாதித்து விட முடிவதில்லை.

உள்ளுணர்வென்பதும் கடவுளின் கொடைதான். கணவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்பதை மனைவியும், மனைவி அதைக் கண்டுபிடித்து விட்டாள் என்றறிந்து எதிராளி தன்னைக் கேள்வி கேட்குமுன் கணவனும் உள்ளுணர்வால் எச்சரிக்கப்பட்டுச் சுதாரித்துக் கொள்கிறார்கள்.

கட்டாந்தரையைப் பார்த்துப் பூந்தோட்டம் அழகாயில்லை என்பவனும், வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்று அலுத்துக் கொள்பவனும், அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதைக் கடைசிவரை புரிந்து கொள்வதேயில்லை.

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.


Friday 24 February 2012

அதிர்ச்சி வைத்தியம் பலனளிக்குமா?..

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும். விதை விதைச்சதும் முளைச்சு, விளைஞ்சு அறுவடையாகிரும்ன்னு அவசரப்பட முடியுமோ?.. குறைஞ்ச பட்சம் வேரூன்றித் தழைக்க ஆரம்பிச்சாலாவது எப்படியும் பிழைச்சுரும்ன்னு நம்பிக்கையோட இருக்க முடியும். அது வரைக்கும் பொறுமை.. பொறுமை.. அண்ட் பொறுமை தேவை. பொறுமை எருமையை விடப்பெரியதுன்னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க.

எப்பவும் போல அன்னிக்கும், பொறுமையா ஒரு சிகரெட் புகைக்கலாம்ன்னு பொட்டிக் கடைக்கு வந்து ஒரு சிகரெட் வாங்கிக்கிட்டு, கடையிலிருந்த லைட்டரோட பட்டனை அமுக்கினா, அது..ராம் நாம் சத்ய ஹை"அப்டீன்னு சவுண்டு விடவும் பதறியடிச்சுப் பின் வாங்கிய மக்களுக்கு, ஒரு இயக்கம் கொடுக்கற அதிர்ச்சி வைத்தியம் அதுன்னு மொதல்ல புரியலை..
காமிராவில் பிடிச்சாந்தது..
வடக்கே இந்துக்களின் இறுதி ஊர்வலத்தும்போது, கூடவே நடக்கறவங்க "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு மெதுவான குரல்ல உச்சாடனம் செஞ்சுட்டே போவாங்க. போற உசுரு கடவுள் நாமத்தைக் கேட்டுக்கிட்டே போகட்டுமேங்கற நினைப்புத்தான். அதைத்தவிர வீண் அரட்டையோ அல்லது வேறு எந்த நிகழ்வுகளோ இருக்காது. அந்த உச்சாடனத்தைக் கேக்கறப்ப கொஞ்சம் நம்ம உசுரையே அசைச்சுப் பார்த்துடற மாதிரி இருக்கும். பொதுவாவே இறுதிச்சடங்கு நிகழ்வுல கலந்துக்கறவங்களுக்கு ஒரு விதமான பற்றற்ற மனநிலை இருக்கும். பூமியில உசிரோட இருக்கறவரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய மனுஷன் கடைசியில் என்னத்தைக் கொண்டு போறான். நாமளும் அப்படித்தானே போகப்போறோம்,.. அதனால இருக்கறவரைக்கும் மத்தவங்களுக்குப் பிரயோசனமா இருக்கணும், அன்பா இருக்கணும்ன்னு ஒரு வைராக்கியமே வரும். இதைத்தானே மயான வைராக்கியம்ன்னு சொல்றோம். அந்த இடத்தை விட்டு வெளியில வந்தப்புறம், "பழைய குருடி கதவைத்திறடி"ன்னு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பறது தனிக்கதை :-) இங்கெல்லாம் இறுதி யாத்திரை போகுதுன்னா, கிட்டக்கப் போயி இறந்தவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டு அவங்கவங்க வழியில போவாங்க.

மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.

ஆனாலும் நம்ம அரசாங்கத்துக்கு மக்கள் மேல அபார நம்பிக்கைதான். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், இது போக வழக்கமான கல்வி நிலையங்கள்ன்னு எக்கச்சக்கமா ஏற்படுத்திக் கல்வியை ஊட்டறோமே.. அது வீணாப் போகுமா?. எப்படியும் மைக்ராஸ்கோப் வெச்சுப் படிச்சாவது தெரிஞ்சுக்குவாங்க என்ற அசாத்திய நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. அதனாலதான் கடுகை விடச் சின்னதா "Cigarette is Injurious to Health"ன்னு சிகரெட் பொட்டியில் எழுதி வெச்சிருக்காங்க. ஒரு வேளை இங்க்லீஷ் படிக்கத் தெரியலைன்னா என்னா செய்யறதுன்னுதான் "புகை பகை".. "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"ன்னு தமிழ்லயும் எழுதி வெச்சிருக்காங்க.

ஆனாலும் மக்கள் இந்த வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) விடறதா இல்லை. பொது இடங்கள்ல புகை பிடிச்சா அபராதம்ன்னும் ஒரு சட்டம் வந்துச்சு. ஆனாலும் ஓரளவுக்கு குறைக்க முடிஞ்சுதே தவிர முழுசும் இதை தடுக்க முடியலை. சிகரெட்டால புற்று நோய் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாக்கூட மக்கள் சட்டை செய்யறதா இல்லை. இதுக்கு மேல ஒரு அரசாங்கம் மக்களை எப்படித்தான் எச்சரிக்கை செஞ்சு பாதுகாக்க முடியுமாம்.. யக்கா நீ சொல்லேன்!! அண்ணாத்தை நீங்க சொல்லுங்களேன் :-)

நடமாடும் புகை போக்கிகள் அதான் சிகரெட் பிடிக்கிறவர்கள் தங்களோட வீட்ல தனியிடத்துலயோ, இல்லைன்னா, மறைவா எங்கியாவதோ பிடிச்சா மத்தவங்களுக்குப் பிரச்சினையில்லை. அட்லீஸ்ட் வாங்குன கையோட கடை மறைவுல நின்னு கதையை முடிச்சுட்டுக் கிளம்புனாக்கூட தொந்தரவில்லை. ஆனா, இரு சக்கரத்துலயோ நாலு சக்கரத்துலயோ போற போக்குலயும், நடந்து போகறச்சயும் புகையை மத்தவங்களுக்கும் சப்ளை செய்யறவங்களை என்னன்னு சொல்றது. சிலருக்கு அந்த வாசனை விருப்பமானதா இருக்கலாம். ஆனா, ரோட்டுல குழந்தைகளும் நடமாடுது, அவங்களுக்கு இந்தப் புகை அலர்ஜியாக் கூட இருக்கலாம்ங்கறதையும் இவங்க யோசிக்கிறது நல்லது.

புகை பிடிக்கிறவங்களை விட அதைச் சுவாசிக்கிறவங்களுக்குப் பாதிப்பு கூடுதல்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சமீபத்தில் பையருக்கு உடம்பு சரியில்லாம மருந்து வாங்கப் போயிருந்தப்ப, கடையில் ஒரு குடும்பம் நின்னுட்டிருந்தது.கடைப்பையரும் அவங்க குடும்பமும் நண்பர்கள் அதனால மனசு விட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. கசமுசன்னு கடைப்பையன் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சதும் காதை அந்தப் பக்கம் அனுப்புனேன். ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிருக்கும் அவங்களோட மூத்த பையருக்கு கான்சராம். கல்யாணம் நிச்சயமாகி ஒரு மாசமே ஆகியிருந்த நிலையில் ரொம்ப சீரியஸான கட்டத்துல அட்மிட் ஆகியிருக்கார். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத அவருக்கு, செயின் ஸ்மோக்கரான அவங்கப்பா மூலமா கான்சர் பரவியிருக்குது. பாதிக்கப்பட்ட பையருக்கு வயசு இருபத்தஞ்சைக் கூட தாண்டலைங்கறதுதான் கொடுமை.

சிகரெட்டை முடிச்சுட்டுக் கனிஞ்சுட்டிருக்கற துண்டை, அப்படியே வீசிட்டுப் போறவங்களையும் சொல்லணும். நம்ம நாட்ல கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் செருப்பில்லாம வெறுங்காலோட நடக்குற நிலைமையில் இன்னும் கூட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இங்கேயும் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வெறுங்காலோட சிக்னல்கள்ல அங்கியும் இங்கியும் ஓடறதைப் பார்த்திருக்கேன். ஏதாவதொரு ஆட்டோ, அல்லது காரிலிருந்து விழும் கனல்துண்டு அதுங்க பாதத்தைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கே.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்மூரு வாத்தியார் பாடி வெச்சது இங்கேயிருக்கும் Cancer Patients Aid Association- (சுருக்கமா)CPAA-க்கு எப்படித்தான் தெரிஞ்சதோ.. திருடங்களைத் திருத்தணும்ன்னா அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும்ன்னு துணிஞ்சு இறங்கிட்டாங்க. மொதல்ல குறிப்பிட்ட சிகரெட் லைட்டர்தான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இது மின்சாரத்துல இயங்கறதால ஷாக் ட்ரீட்மெண்டுன்னும் இங்க்லீஷ்ல சொல்லிக்கலாம்.

மும்பையில் பான் கடைகள் ரொம்பவே பிரபலம். பான் வகைகளும், குட்கா போன்ற வஸ்துகளோட சிகரெட்டும் இருக்கும். இதான் சரியான களம்ன்னு களமிறங்கிய CPAA மும்பையில் மட்டும் மொத்தம் 25 இடங்கள்ல இந்த லைட்டர்களை கடைக்காரங்களோட அனுமதியோட வெச்சிருக்கு. நிறையப்பேர் இதை வெச்சுக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்கதான். சரிதானே?.. தன்னோட காலைத் தானே கோடரியால வெட்டிக்க யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?. இதை வெச்சுக்க அனுமதிச்சா எங்க பொழைப்பு என்னாகறதுன்னு கேக்கறாங்க. உங்க பொழைப்புக்காக மத்தவங்க வாழ்க்கையில் விளையாடறது ஞாயமான்னு கேக்குற CPAA  இந்தத்திட்டத்தை கட்டாயமாக்க வேணப்பட்ட சட்ட பூர்வமான முயற்சிகளையும் எடுத்துட்டு வருதுன்னு இதோட இயக்குனர் தெரிவிச்சுருக்கார். கான்சருக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் கிட்ட பரப்பும் முறைகளில் இந்தத் திட்டமும் ஒன்னு..

யூடியூப்ல ச்சும்மா வலை மேய்ஞ்சுட்டிருந்தப்ப கிடைச்ச புதையல் இது. மேற்கொண்டு தகவல் தேடுனப்ப இவங்களுக்குன்னு தளமும் இருக்கறதைக் கண்டு பிடிச்சேன். சேவைகள், கான்சருக்கான சிகிச்சை முறைகள்ன்னு ஒரு தகவல் சுரங்கமே இருக்குது அங்கே. லைட்டரோட ஸ்விட்சை அமுக்கினதும் எப்படி ஷாக் அடிச்சு, ஓரோருத்தரும் ஜெர்க்காகுறாங்கங்கறதை நீங்களே வீடியோவில பாருங்க ..

ஒரு சிலர் மட்டும் இந்த உச்சாடனத்தை தனக்கான எச்சரிக்கை ஒலிக்கிறதா எடுத்துக்கிட்டு , "இந்த சிகரெட் பழக்கம் இனிமேலும் அவசியமா"ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மெஷினைக் கண்டு பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னும் சில துணிஞ்ச மனசுள்ளவங்க அந்த லைட்டரைத் தைரியமா உபயோகப் படுத்தறாங்களாம். வழக்கமா அரசாங்கம், ஜோரா ஆரம்பிச்சு ஆரம்ப ஜோர்ல கொண்டாடப்பட்டு, கடைசியில காயலாங்கடைக்குப் போற நல்ல திட்டங்கள் மாதிரி இல்லாம, பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..

இப்போ தீர்ப்பு மக்கள் கையில்....


Wednesday 22 February 2012

அசலும் நகலும் - ஜோதிர்லிங்கங்கள் - 2


இரண்டாம் பாகம் தொடர்கிறது...

இராமநாதர்- இராமேஸ்வரம்- தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் என்ற தீவில் இருக்கும் இந்தக் கோயிலுக்குப் பாம்பன் பாலம் வழியாகச் செல்லலாம். மொத்தம் 36 தீர்த்தங்கள் கொண்ட, திராவிடக் கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் பிரகாரங்கள் உலகப் புகழ் பெற்றவை.
தலவரலாறு: இராவணனை அழித்தபின் அயோத்தி திரும்பிக் கொண்டிருந்தபோது பிரம்மஹத்தி பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிவபூஜை செய்ய நினைச்சார் ராமர். சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற அனுமன் திரும்பி வரத் தாமதமாகவே சீதா பிராட்டி தன் கையாலயே மணலைப் பிசைந்து லிங்கம் உருவாக்கினார். ராமர் அந்த லிங்கத்துக்குப் பூஜை செஞ்சதால் இங்கேயுள்ள சிவன் ராமலிங்கர் என்று நாமகரணம் சூட்டப்பட்டார். பிற்பாடு அனுமர் கொண்டு வந்த லிங்கமும் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு காசிலிங்கம், அனுமன்லிங்கம் என்ற பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே கடலாடிப் பாவங்களைப் போக்கிக் கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் காசி-ராமேஸ்வரம் இரண்டுமே முக்கியமானவை. காசியிலிருந்து ஆரம்பிக்கும் தலயாத்திரை ராமேஸ்வரம் வந்து ராமலிங்கத்தைத் தரிசித்துக் கங்கை நீரால் அபிஷேகம் செய்தால்தான் முழுமை பெறும். இங்கேயிருந்து ஆரம்பிக்கும் யாத்திரைக்கும் அப்படியே.

கேதார்நாத்-கேதார்-உத்தராகாண்ட்
ருத்ர இமயமலைப் பகுதியில், மந்தாகினி நதி தீரத்திலிருக்கும் கேதார் மலையுச்சியில் இந்தக் கோயில் இருக்கிறது. இங்கிருக்கும் பருவ நிலை காரணமாக ஏப்ரலிலிருந்து நவம்பர் வரை மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் இந்தக் கோயிலின் பூசாரிகள் உகிமந்த் என்ற இடத்துக்குப் போய் அங்கிருந்து பூஜையைத் தொடருவார்கள். இந்தக் கோயிலுக்கு கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து மலையேறித்தான் போக வேண்டும். கேதார் நாத் யாத்திரை போகும் புனித யாத்திரீகர்கள் கங்கோத்ரியிலிரிந்து கங்கை நீரையும் யமுனோத்ரியிலிருந்து யமுனை தீர்த்தத்தையும் கொணர்ந்து கேதார நாதருக்கு அபிஷேகம் செய்வார்கள்.
தலவரலாறு: நர-நாராயணர்களின் தவத்தை மெச்சி அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஜோதிர்லிங்கமா இங்கே கோயில் கொண்டார். இந்தக் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதா சொல்லப்படுகிறது, அர்ஜூனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றது, திரௌபதி கேட்ட கல்யாண சௌகந்திகம் என்ற பூவைக் கொண்டு வரக் கிளம்பிப்போன பீமன் முதன் முதலா அனுமனைச் சந்தித்தது, ஈசனின் இடப்பக்கம் கேட்டு பார்வதி தவம் செய்து அர்த்தநாரீஸ்வரர் ஆனது என்று இங்கே நடந்ததாகச் சொல்லப்படும் புராண விஷயங்கள் ஏராளம்.

காசிநாதர்- காசி- உத்தரப்பிரதேசம்
இந்துக்களோட வழிபாட்டுத் தலங்களில் காசி ரொம்ப ரொம்ப முக்கியமான இடம். இங்கே இறப்பவர்களில் காதுகளில் அந்த சிவனே தாரக மந்திரத்தை உச்சரித்து நேரடியாகச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறதாக ஐதீகம்.
தலவரலாறு: தன்னுடைய முன்னோர்களுக்கு முக்தியளிக்கும் பொருட்டுத், தவம் செய்த பகீரதனுக்காக ஆகாயகங்கையைத் தன் முடிமேல் தாங்கிப் பூலோகத்துக்குக் கொண்டுவந்த இறைவன் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். அசலான கோயில் 1490-ல் முதன்முறையாகக் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், தொடர்ந்த படையெடுப்புகள் மற்றும் கொள்ளையடிப்புகள் காரணமாகப் பலமுறை அழிக்கப்பட்டது. இந்தோரைச் சேர்ந்த ராணி அகல்யா பாய் ஹோல்க்கரின் கனவில் வந்து சிவன், தன்னுடைய கோயிலைச் செப்பனிடுமாறு கட்டளையிடவே 1777-ல் உண்மையான விசுவநாதர் ஆலயத்திலிருந்து சற்றுத் தொலைவில் தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

த்ரம்பகேஷ்வர்-த்ரிம்பாக்-மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரிலிருந்து 28 கி.மீ தொலைவில் த்ரிம்பாக் என்ற நகரில் இக்கோயில் அமைந்திருக்கிறது. கோதாவரி ஆறு இங்கிருந்துதான் பாயத்தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மும்மூர்த்திகளின் முகங்களுடன் அமைந்திருப்பது சிறப்பு. பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது சிற்பக்கலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
தலவரலாறு: ஒரு சமயம் கௌதம முனிவர் தன் மனைவி அகல்யாவுடன் இங்கே வசித்து வந்தார். வருணபகவானின் அருளால் அவருக்குக் கிடைத்த அட்சய பாத்திரத்தைக் கண்டு பொறாமையுற்ற மற்றவர்கள் தவ வலிமையால் ஒரு பசுவை உருவாக்கி அது கௌதம முனிவரின் தோட்டத்தில் மேயும்படிச் செய்தனர். கௌதம முனி ஒரு தர்ப்பைப்புல்லால் அதை விரட்டவே, அது அங்கேயே இறந்தது. பசுஹத்தி செய்த பாவத்தைப் போக்க கௌதம முனிவர் சிவபெருமானிடம் ஆகாய கங்கையை வேண்டவே கங்கை ஆசிரமத்துக்கு வந்து தன்னுடைய நீரால் பாவத்தைப் போக்கினாள். கங்கை மற்றும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமானும் மற்ற கடவுளரும் அங்கேயே தங்குவதாக அருள் பாலித்தனர். பன்னிரண்டு வருடங்கள்க்கு ஒரு முறை இங்கே நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடியபோது அடிமுடியில்லா பிழம்பாய் ஐயன் நின்றதும் இங்கேதான் என்றும் ஒரு கதை உலவுகிறது.

நாகேஸ்வர்-த்வாரகா-குஜராத்
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்ட்ரா பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலின் இறைவனான நாகேஸ்வரரை வழிபட்டால் விஷப்பூச்சிகளின் விஷங்கள் அண்டாது என்று நம்பப்படுகிறது. கோமதி த்வாரகாவிலிருந்து வைத் த்வாரகா செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது.
தலவரலாறு: தாருகாசுரன் என்பவன் சிவ பக்தையான சுப்ரியாவைச் சிறையெடுத்துப் பாம்புகளின் நகரமான தாருகாவனத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தினான். பாசுபதாஸ்திரத்தால் அவனை அழித்துத் தன் பக்தையைக் காத்த இறைவன் தாருகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்கி இங்கேயே கோயில் கொண்டார். தன்னுடைய பெயரால் இத்தலம் வழங்கப்பட வேண்டும் என்ற தாருகாசுரனின் விருப்பத்துக்கிணங்க இத்தலம் நாக்நாத் என்று வழங்கப்படுகிறது.

க்ரிஷ்னேஷ்வர்-ஔரங்காபாத்-மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்ட்ராவின் அஜந்தா-எல்லோராக் குகைகளுக்கு அருகே இருக்கும் ஔரங்காபாதின் சமீபத்திலிருக்கும் தௌலதாபாதிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் வேருல் என்ற சிற்றூரிலுள்ளது இக்கோயில். இந்தக்கோயிலுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயும், இந்தோர் ராணியான அகல்யா பாய் ஹோல்க்கரும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
தலவரலாறு: தனக்குக் குழந்தையில்லாதால் தன் தங்கை குஷ்மாவைத் தன் கணவன் சுதார்முக்கு திருமணம் செய்து வைத்தாள் சுதேஹா. மூத்த சகோதரியின் அறிவுரைப்படி தினமும்101 சிவலிங்கங்களைப் பூஜை செய்து அருகிலிருந்த நதியில் விட்டு வந்தாள் குஷ்மா. சிவனின் திருவுள்ளத்தால் அவளுக்கு ஒரு மகனும் பிறந்தான். முதலில் அன்புடனிருந்த சுதேஹா நாளடைவில் பொறாமையுற்று தன் தங்கையின் மகனைக் கொன்று நதியில் வீசிவிட்டாள். இரத்தத்துளிகளைக் கண்டு சந்தேகமுற்ற குஷ்மாவின் மருமகள் அது தன் கணவனுடையதுதான் என்று தெளிந்து தன் மாமியாரான குஷ்மாவிடம் முறையிடவே,  அவள் முதலில் வருத்தமுற்றாலும் பின் இறைவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டான் என்று தெளிந்தாள்.

எப்போதும் போல் பூஜை செய்த 101 சிவலிங்கங்களை நதியில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றபோது தன்னுடைய மகன் உயிர்பெற்று நதியிலிருந்து எழுந்து வருவதைக் கண்டாள். அவளுக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சியளித்த இறைவன் அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி சுதேஹாவை மன்னித்து அங்கேயே கோயில் கொண்டார். குஷ்மாவிற்கு அருளியதால் குஷ்மேஷ்வர் என்றும் நாமம் கொண்டார்.

டிஸ்கி: தனித்தனியாப் படிக்கறதை விட மொத்த ஜோதிர்லிங்கங்களையும் பத்தி ஒரே இடத்துல படிக்க முடிஞ்சா நல்லாருக்குமேன்னு நினைக்கிற நட்புகள்.. வல்லமையின் சுட்டியைச் சொடுக்குங்க.

Monday 20 February 2012

அசலும் நகலும் - ஜோதிர்லிங்கங்கள் - 1

இது அசல்..
சிவராத்திரி விரதமும் சிவ தரிசனமும் எமபயம், மரண பயம் போக்கி, முக்திக்கு வழி கோலும்ன்னு நாயன்மார்களே சொல்லி வெச்சிருக்காங்க. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களிலும் குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு ஆகிய பஞ்சரத்ன சபைகளிலும், மற்றும் பக்கத்துல இருக்கற சிவன் கோயில்கள்லயும் சிவதரிசனம் செஞ்சா ரொம்பவும் சிறப்பு மட்டுமல்ல போற வழிக்கு புண்ணியமும் கிடைக்கும்.

மனுஷன் தன்னோட வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்பதுன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாத்துக்கும் தன்னோட கர்ம வினைகளும், செஞ்ச பாவங்களுமே காரணம்ன்னு நம்புறான். இதுலேர்ந்து விடுபடவும், பயங்களைப் போக்கிக்கவும் கடவுளைச் சரணடையறான். பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள்ன்னு விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைச்சுருது. உதாரணமா, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்கள்ல திருமால், அம்பாள், ஐயப்பன்னு ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனிச்சிறப்புக் கொடுத்து கும்பிடறோம். இதுல மாசி மாசம் வரும் சிவராத்திரியையும் சேர்த்துக்கலாம்.

சிவனுக்குரிய ராத்திரிகளான நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகியவற்றைப் பஞ்சராத்திரிகள்ன்னு சொல்லுவாங்க. இதில் மாசி மாசம் வரும் சிவராத்திரியை மஹா சிவராத்திரின்னு கொண்டாடறோம். பகல் முழுக்க உபவாசமிருந்து, சிவபுராணம், சிவ அஷ்டோத்திரம் படிச்சுட்டு ராத்திரி நாலு காலப்பூஜைகள்ல கலந்துக்கிட்டு பால், தேன், சந்தனம், இளநீர், தயிர், கரும்புச்சாறுன்னு விதவிதமா நடக்குற அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்கறது ரொம்ப விசேஷம். இதில் இரவு 11.30லேர்ந்து 1 மணி வரைக்குமான லிங்கோற்பவ காலப் பூஜையில் கலந்துக்கறது ரொம்பவே சிறப்பானது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரைக்கும் சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. லிங்க வடிவில்தான் வணங்கறோம். இந்த லிங்க வடிவங்களிலும் கூட ஜோதிர்லிங்கங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ஜோதின்னா ஒளின்னு அர்த்தம். ஒரு திருவாதிரை நாள்ல சிவன் தன்னை ஒளிமயமான லிங்க வடிவில் வெளிப்படுத்திக்கிட்டதாச் சொல்லப்படுது. அதனால மத்த நாட்களை விட திருவாதிரை தினத்தன்னிக்கு ஜோதிர்லிங்க வழிபாடு செய்யறது விசேஷம். இந்தியாவுல மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் இருக்கு.

1.      சோம் நாத் ஜோதிர்லிங்கம்குஜராத்.
குஜராத்தின் சோம்நாத் பட்டான், கத்தியவாட் தாலுகாவில் இருக்கும் இந்தக் கோயிலில்தான் முதலாவது ஜோதிர்லிங்கமான சோமநாதர் இருக்கார். ‘சோம்என்ற வார்த்தைக்கு அமிர்தம்ன்னு அர்த்தமாம். இறையருளான அமிர்தம் அஞ்ஞானத்தைப் போக்கி, அறியாமை இருளிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டு வர்றதால இவரை சோம்நாத்ன்னு அழைக்கிறது பொருத்தமே.
தல வரலாறு: தக்ஷ ப்ரஜாபதி தன்னோட மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திரனுக்கு கல்யாணம் கட்டி வெச்சார். பத்துக் குழந்தைகள் இருந்தாலும் பெற்றோருக்கு ஒரு குறிப்பிட்ட குழந்தை செல்லக் குழந்தையாகிடறதுண்டு. அது மாதிரி சந்திரனுக்கும் தன்னோட மனைவிகளில்ரோகிணிமேல் தனிப்பிரியம். அதனால சக்களத்திச் சண்டையும் வந்தது. பஞ்சாயத்து செஞ்ச தக்ஷன் மருமகனோட ஒளியும் அழகும் அழிஞ்சு போகட்டும்ன்னு சாபமிட, விமோசனத்துக்காக சந்திரன் வந்திறங்கிய இடம்தான் சோம்நாத். இங்கிருந்த ஜோதிர்லிங்கத்தைப் பூஜித்துத்தான் சந்திரனுக்கு சாப விமோசனம் கிடைச்சது. சோமன் என்ற வார்த்தை சந்திரனையும் குறிக்கும். அதனால இங்கேயிருக்கும் இறைவனுக்கு சோமநாதர்ன்னு பேர் வந்துச்சுன்னும் சொல்லிக்கிறாங்க.

இந்தக்கோயிலின் செல்வத்தைக் குறிவெச்சு நடந்த கஜினி முகமது, ஔரங்கசீப், மற்றும் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான அலஃப் கான் போன்றவர்களின் படையெடுப்புகளுக்கு வரலாற்றுச் சிறப்பு உண்டு. கணக்கற்ற தடவைகள் தாக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவோட நிக்குது.

மல்லிகார்ஜூனர்ஸ்ரீசைலம்- ஆந்திரப் பிரதேசம். 
ஆந்திராவின் கிருஷ்ணா நதி தீரத்துல பாதாளக் கங்கைக்கரையிலிருக்கும் ஸ்ரீசைலம் மலையுச்சியில் இருக்குது இந்தக் கோயில். இந்த மலையின் சிறு நுனியைப் பார்த்தாலே வினையெல்லாம் நம்மை விட்டு ஓடிருமாம். அத்தனை புண்ணியமுண்டாம்.
தலவரலாறு: ஒரு சமயம் தனக்கு முன்னாடி தன்னோட அண்ணனான புள்ளையார் கல்யாணம் கட்டிக்கிட்டதால தம்பியான முருகனுக்குக் கோபம் வந்து வீட்டை விட்டு வெளியேறிட்டாராம். எதுக்குக் கோவப்படணும். ஞானப்பழ விஷயமா நடந்த பஞ்சாயத்தே இன்னும் தீரலை. அதுவுமில்லாம சீனியாரிட்டிப்படி அண்ணனுக்குத்தானே முதல்ல கல்யாணம் நடக்கணும்?. இதெல்லாம் முருகக்கடவுளுக்குத் தெரியாதா என்ன?. அவங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். நாமதான் அஞ்ஞானிகளா கேள்வி கேக்கறோம். இந்தியாவின் சில பகுதிகள்ல பிள்ளையார் பிரம்மச்சாரியாவும், சில பகுதிகள்ல குடும்பஸ்தராவும் கருதப்படறார் என்பதையும் நினைவில் கொள்க.

சமாதானப்படுத்தறதுக்காக வந்த அப்பனும் அம்மையும் ஒண்ணாக் கலந்து ஜோதிர்லிங்க உருவெடுத்து இங்கே அருள் பாலிக்கிறாங்க. மல்லிகா என்பது பார்வதியின் ஒரு பெயர். சிவனுக்கு அர்ஜூனர்ன்னு இன்னொரு பெயரும் உண்டாம். கோயிலுக்கு பெயர் வந்த காரணக் கணக்கு சரியாப் போச்சுஇந்தக் கோயிலைப்பத்தி மஹாபாரதத்துலயும் கந்த புராணத்துலயும் சொல்லப்பட்டிருக்கு. நாயன்மார்களோட பாடல் பெற்ற சிறப்பும் இதுக்கு உண்டு. ஆதிசங்கரர் தன்னோட சிவானந்த லகிரி எனும் சமஸ்கிருத நூலை இங்கேதான் எழுதினார்ன்னும் சொல்லப்படுது.

மஹா காலேஷ்வர்- உஜ்ஜயினி- மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் இந்தக்கோயிலுக்கு சைவர்களிடையே ரொம்பவும் முக்கியத்துவம் உண்டு. மனித உயிருக்கு முக்தி அளிக்கும் ஏழு தலங்களில் இதுவும் ஒண்ணு. மற்ற மூர்த்திகளைப் போல இல்லாம இங்கேயிருக்கும் சிவன் ரொம்பவே சக்தி வாய்ந்தவராம். இங்கே தெற்கு நோக்கியிருக்கும் இறைவனின் சிலை தட்சிணாமூர்த்தியின் வடிவமாகும். தந்திர மரபுகளில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச் சிறப்பம்சத்தை  12 ஜோதிர்லிங்கங்கள்ல இங்கே மட்டுந்தான் காண முடியுது.
தலவரலாறு: ஸ்ரீகர் என்ற சிறுவன் தானும் இறைவனைப் பூஜை செய்யணும்ன்னு ஆசைப்பட்டு, ஒரு கல்லை எடுத்து வெச்சு பூஜிச்சான். அவனோட அன்புக்குக் கட்டுப்பட்டு இறைவன் ஜோதிர்லிங்கமா உருவெடுத்து இங்கே தங்கினார்ன்னும், அவந்தி நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துட்டிருந்த துஷ்ணாங்கற துஷ்ட அரக்கனை பூமியிலிருந்து  வெளிப்பட்டு அழிச்சு, மக்களைக்காத்த பின்னாடி, அவங்க வேண்டுகோளை ஏத்துக்கிட்டு இங்கே தங்கினார்ன்னும் விதவிதமாக் கதைகள் சொல்லப்படுது. இந்தக்கோயிலின் மூணாவது அடுக்குல இருக்கற நாகசந்திரேஷ்வரரை நாகபஞ்சமி அன்னிக்கு மட்டுமே தரிசிக்க முடியும்ங்கறது ஒரு சிறப்பு.

ஓம்காரேஷ்வர்- சிவபுரி-மத்தியப் பிரதேசம். 
நர்மதை ஆற்றிலிருக்கும் சிவபுரிங்கற தீவுல இந்தக் கோயில் இருக்குது. இந்தத்தீவு இந்துக்களின் அடையாளமான ஓம் என்ற வடிவத்துல இருக்கறதால இறைவன் ஓம்காரேஷ்வர்ன்னு வழங்கப்படறார். தீவின் இன்னொரு பகுதியில் அமரேஷ்வர் கோயிலும் இருக்குது.
தலவரலாறு: திரிலோக சஞ்சாரியான நாரதர் ஒரு சமயம் விந்திய மலை கிட்ட, மேரு மலையை ரொம்பவும் புகழ்ந்து பேச, பொறாமைப்பட்ட விந்திய மலை தான் அதை விடப் பெரூசா வளரணும்ன்னு ஆசைப்பட்டது. ஓம்காரேஷ்வரை நோக்கித் தவமும் பூஜைகளும் செஞ்சது. “விந்தியா,.. உன் பக்தியை மெச்சினோம். காம்ப்ளான் குடிக்காமலேயே நீ வளருவாயாகன்னு சிவனும் திருவாய் மலர்ந்தருளிட்டார். அப்றமென்ன?.. “நான் வளர்றேனே மம்மின்ன்னு வளர ஆரம்பிச்ச விந்திய மலை ஒருகட்டத்துல கர்வம் தலைக்கேறி சூரிய சந்திரர்களையே வழி மறிக்க ஆரம்பிச்சது. கடைசியில் அகத்தியர் வந்து அதன் கர்வமடக்கியது தனிக்கதை.

வைத்தியநாதர்- தேவ்கட்-ஜார்கண்ட் 
ஜார்கண்ட் மாநிலத்துல தேவ்கட் பகுதியில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டா தீராத வியாதிகளும் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்கும்ங்கற நம்பிக்கையில் மக்கள் வந்து கும்பிடறாங்க. இராவணன் சிவனைக் குறிச்சு தவம் செய்யறப்ப தன்னோட பத்து தலைகளையும் ஒவ்வொண்ணாச் சீவி எறிய, பதைச்சுப் போன சிவன் இராவணனுக்கு வேண்டிய வரங்களையும் கொடுத்து தலைகளையும் திரும்ப உருவாக வெச்சார் என்பது கர்ண பரம்பரைக் கதை.
தல வரலாறு: சிவனை தன்னோடு இலங்கைக்குக் கூட்டிட்டுப் போக விரும்பிய ராவணனுக்கு தன்னோட அம்சமா ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்தார். கூடவே இதை இலங்கைக்கு கொண்டு போய்ச் சேர்க்கறவரைக்கும் தரையில் வைக்கக்கூடாதுன்னு நிபந்தனையும் விதிச்சார். நிபந்தனையை மீற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதால சிவலிங்கம் மறுபடி எடுக்கமுடியாம தரையோட ஒட்டிப் பிடிச்சுக்கிச்சு. ஏமாத்தமடைஞ்ச ராவணன் தன்னோட ஒன்பது தலைகளையும் ஒவ்வொண்ணாக் காணிக்கையாக் கொடுக்க, பதறிய சிவன் காட்சி கொடுத்து அந்தத் தலைகளை மறுபடி ஒட்ட வெச்சார். ராவணனுக்கு வைத்தியம் பார்த்ததால வைத்தியநாதருமானார். இந்தத்தலம் 52 சக்தி பீடங்களில் ஒன்னாவும் கருதப்படுது. இது சக்தியின் இதயம் விழுந்த இடமாம்.

பீமாசங்கர்- சஹயாத்ரிமஹாராஷ்ட்ரா
பூனாவுக்கருகே சஹயாத்ரி மலைப்பிரதேசத்துல இருக்கற பவகிரி என்ற ஊரில், பீமரதி நதிக்கரையில் இருக்கும் இந்தக்கோயில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நாகரா கட்டடக் கலை முறையில் கட்டப்பட்ட இந்தக்கோயிலுக்கு சிவாஜி மன்னரும்,வருகை தந்து மானியங்களை அள்ளி வழங்கியிருக்கார். இந்தக் கோயிலின் கோபுரம் நாநா ஃபட்னவிஸ் என்பவரால் கட்டப்பட்டிருக்கு.
தலவரலாறு: இலங்கைப்போரில் கொல்லப்பட்ட கும்பகர்ணனின் மகனான பீம், விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமரால் தன் தந்தை கொல்லப்பட்டதை தாய் மூலம் அறிஞ்சு, விஷ்ணுவை பழி வாங்கறதுக்காக பிரம்மாவை நோக்கித் தவம் செஞ்சார். பிரம்மா கொடுத்த வரங்களின் பலத்தால் மூவேழு லோகங்களையும் அடிமைப்படுத்தி, தனக்குன்னு பறக்கும் கோட்டைகளையும் ஏற்படுத்திக்கிட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பிச்ச பீமனை சிவன் சண்டையிட்டு முப்புரம் எரித்து அத்துடன் பீமனையும் சாம்பலாக்கி அழிச்சார். அப்போ அவர் உடம்பில் ஏற்பட்ட வியர்வைதான் பீமரதி நதியா உருவெடுத்துது. அப்றம் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அங்கே ஜோதிர்லிங்கமா உருவெடுத்து கோயில் கொண்டார்.

டிஸ்கி: சிவராத்திரியும் அதுவுமா ஜோதிர்லிங்கங்களைத் தரிசிச்ச புண்ணியம் வெறும் ஒரே ஒரு நாள் மட்டும் கிடைச்சா ஆச்சா??.. ரெண்டாவது பகுதியில் மீதி ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்கலாம். இடுகை நீண்டுருச்சுங்கறதை நாசூக்காச் சொல்றேன். ஹி..ஹி.. :-)

டிஸ்கி-2: அசலைத்தரிசிக்க எப்ப நேரம் வரும்ன்னு தெரியலை. அதனால சமீபத்துல இங்க நடந்த ஒரு ஆன்மீக விழாவுல வெச்சிருந்த ஜோதிர்லிங்கக் கோயில்களைச் சுட்டுட்டு வந்துருக்கேன். நகல்தான்னாலும் சாமிதானே.. அவந்தான் தூண்லயும் இருக்கான் துரும்புலயும் இருக்கான்னு நம்புறவங்களாச்சே நாம. நகல்ல இருக்கற கடவுளைக் கும்புடாமயாப் போயிருவோம் :-))




LinkWithin

Related Posts with Thumbnails