Saturday 26 November 2016

பூச்சிகள் ராஜ்யத்தில்..

பூச்சிகள் முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த கணுக்காலிகள் வகையுள் அடங்கும் முதன்மையான உயிரினமாகும். இவை தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று ஜோடிக்கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு ஜோடி உணர்வுறுப்புக்களையும் கொண்டவையாக இருக்கின்றன. இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. 

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையில் பூச்சிகளே மிக அதிகப் பங்கு, அதாவது சுமார் 90%மாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் அடங்கியுள்ளன,இவ்வுலகிலிருக்கும் மொத்த விலங்கினத்தில் பெரும்பகுதியளவுக்கு பூச்சியினம் இருக்குமென கருதப்படுகிறது. மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் அதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. 

பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் தம்மை இசைவாக்கிக்கொள்ள வல்லனவாகவும் இருக்கின்றன. குளிரான காலநிலை, சூடான காலநிலை இரண்டிலும் அவை வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் இருக்கின்றனவாகவோ உள்ளன. வேறு சில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை தம் இனவிருத்தியைத் தள்ளிப்போடுகின்றன.

பூச்சி ஆங்கிலத்தில் Insect என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான insectum என்பதிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. insectum என்பதன் பொருள் வெட்டப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட உடல் என்பதாகும், இச்சொல்லுக்கேற்ப பூச்சிகளின் உடல், தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

தலைப் பகுதியானது ஒரு ஜோடி உணர்விழைகளையும், ஒரு ஜோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1லிருந்து 3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கியப் பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.

மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு ஜோடிக்கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு ஜோடிச் சிறகுகளும் காணப்படும்

வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும். வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.

மனிதர்களால் பல பூச்சிகள் தீங்குயிர்களாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை வேளாண்மை மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்கள், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கோ, அல்லது விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் தானியங்கள், காய்கறிகள், மற்றும் ஏனைய உணவு வகைகள், கால்நடைகள் அல்லது நேரடியாகவே மனிதருக்குக் கேடு விளைப்பனவாக உள்ளன

சில பூச்சிகள் மனிதர்களால் பயிர் செய்யப்படும் பயிர்கள் அல்லது அவற்றின் விளைபொருளின் சாற்றை உறிஞ்சுவதால் அல்லது இலைகள், பழங்களை உண்ணுவதனால் தீங்கு விளைவிக்கின்றன, வேறுசில ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும், வேறு சில நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகளைப் பரப்புகின்றன.   கறையான் போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன. 
அதேவேளை சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி உயிரியல் சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன. அனேகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து அவற்றிற்குக் கிடைக்கின்றது. அத்துடன் விதைகளின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுகின்றன. பட்டுப்புழு மூலம் பட்டுநூல் பெறப்படுகின்றது. தேனீயானது தேனையும், மெழுகையும் உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
சில பூச்சிகள் தமது கொன்றுண்ணல் செயற்பாட்டினால் அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால், மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன.

சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது. சில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள் மனிதருக்குத் தேவையான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில பூச்சிகளை மீன்பிடித்தலின்போது, மீனுக்கான இரையாகப் பயன்படுத்துவர்








பொதுவாகப் பூச்சிகள் தனி வாழ்வு கொண்டனவாக இருப்பினும் சில பூச்சியினங்கள் சமூக வாழ்வைக் கொண்டிருக்கின்றன. தேனீ, எறும்பு, கறையான், குளவி போன்றவை கட்டுக்கோப்பான ஒரு சமூக வாழ்வை மேற்கொள்வதுடன், மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட பெரிய  குழுக்களாக வாழும் தன்மை கொண்டவை.

வால்: தகவல்களித்த இணையம் மற்றும் எனது விலங்கியல் பாடப்புத்தகத்திற்கு நன்றி.

Monday 21 November 2016

பாலும் பழமும் கடைகளில் தேடி..

"எல.. மணீண்டன் கல்யாணத்துக்கு ஸ்ருதிக்கி புளியங்கொட்ட பட்டுப்பாவாட எடுத்தாச்சி. இனும ஒனக்கு மட்டுந்தான் சேல எடுக்கணும். விடிஞ்சதும் ஆரெம்கேவி போலாம்" என்று அம்மா சொன்னதும் பட்டுப்பாவாடை துணியை கையில் வாங்கிப்பார்த்தேன். மெரூன், பச்சை, மஞ்சள் என்று கட்டம்போட்ட டிசைன் ஒரு மார்க்கமாகத்தான் இருந்தது. 

"ஒனக்கு வேற டிசைனே கெடைக்கலியா? இல்ல கலர்தாம் கிடைக்கலியா?" 

"தச்சுப்போட்டப்றம் பாரு, அதுவும் போட்டோல பாரு. இதாம் எடுப்பா இருக்கப்போவுது. ப்ளெயின் பாவாடதான் அவாட்ட நெறய இருக்கே" என்று எனது ஆட்சேபத்தை இடது கையால் ஒதுக்கிய அம்மாவின் கூற்று எத்தனை உண்மையானது என்பதை திருமண புகைப்படங்கள் வந்தபின் புரிந்து கொண்டேன். அப்பொழுதிலிருந்தே அந்த டிசைனில் புடவை வாங்கி மகளின் பட்டுப்பாவாடைக்கு மேட்சாகக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை வளர்ந்தது. எப்பொழுதாவது ஊருக்குப்போகும்போது புடவைக்கடைகளில் தேடுவேன். அது கிடைக்காது.. சொக்கா!!! எனக்கில்ல.. எனக்கில்ல. இல்லவேயில்ல. விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட என புடவை ஆசையை விட்டொழித்தேன்.

இப்படியாகத்தானே சில வருடங்கள் போனபின், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் என் நண்பிகளான முப்பெருந்தேவியர் ஒரே மாதிரியான புடவை கட்டி போட்டோ போட்டு வெறுப்பேத்தினார்கள். அது வேறேதுமில்லை. புளியங்கொட்டை டிசைன் என என் அம்மா நாட்டு வழக்கில் சொன்ன பாலும் பழமும் டிசைனேதான். கி கி கி. மறுபடி புத்தியில் தீ பற்றிக்கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது நெல்லையி்லிருக்கும் சென்னை சில்க்ஸிற்குப் போனேன்.

"பாலும் பழமும் டிசைன்ல புடவை இருக்கா?"

உடனே பட்டுப்புடவை செக்ஷன் முழுக்க "ஏ.. பாலும் பழமும் எடுத்துப்போடு" என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. கடைசியில் முஹூர்த்தப்புடவைகள் இருக்கும் செக்ஷனில் இருந்தவர் என் செவியில் பால் வார்த்தார்.

"இருக்குங்க. பாதிப்பாதி இருக்கு." அவர்சொன்னது half and half. அதாவது புடவையானது முட்டி வரைக்கும் ஒரு டிசைனும் கணுக்கால் வரைக்கும் பாலும் பழமும் கட்டம் போட்டதுமாக இருந்தது. அதுவும் நான் கேட்ட மல்ட்டி கலரில் இல்லாமல் மஞ்சளும் பச்சையும், காவியும் மெரூனும் என காவியக்கலர்களில் இருந்து கண்ணைப்பறித்தது. கடையைத் தலைகீழாகப் புரட்டி தேடியவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு வெறும்கையோடு நடையைக் கட்டினேன். இங்கில்லாவிட்டாலென்ன? ஆரெம்கேவியில் இருக்கும் என அங்கும் சென்றேன்.

"பாலும் பழமுமா? இன்னேரத்துக்கு பாலுக்கும் பழத்துக்கும் நா எங்க போக?". புடவை இருக்கிறதா எனக்கேட்ட சக பணியாளருக்கு இன்னொரு பணியாளர் அளித்த பதிலில் நெல்லைக்கே உரிய குசும்பு இருந்தது :-). என்றாலும், கடையை மூடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும் வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒவ்வொருவரும் தேடத்தொடங்கினர். கடைசியில் ஒருவர், "கெட்டு நாளைக்குத்தான் பிரிப்போம். ஆனா நீங்க ஆசையா கேக்கேளேன்னு இப்பமே பிரிச்சுட்டேன். பிடிச்சதைப் பாருங்க" என நாலைந்தை எடுத்துப்போட்டார். நல்லாத்தான் இருந்தது என்றாலும் நான் கேட்ட மல்ட்டி கலரிலோ பார்டரிலோ இல்லாததால் "போனால் போகட்டும் இந்தத் தடவையும்" என்ற மன நிலையை அடைந்திருந்தேன்.. எனினும் மகளுக்குப் பிடித்துப்போனதால் ஒன்றை எடுத்துக்கொண்டேன். ஆனாலும் "பாலும் பழமும் போச்சே" என வெம்பிய மனதை, "ஹெ.. யாருக்கு வேணும் பாலும் பழமும்? இந்தா இருக்கே பொடி தோசை.. சாப்டு" என சமாதானப்படுத்தியாயிற்று.

மறுநாள் நாகர்கோவிலில் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோமோ எனத்தோன்றியது. வேப்பமூடு ஜங்க்ஷனில் இருக்கும் "நல்லபெருமாள் சில்க்ஸ்" நல்ல டிசைன் துணிகளுக்குப் பெயர் போனது. ஒரு காலத்தில் நெல்லை வட்டாரத்திலிருந்து கூட ஜவுளி எடுக்க இங்கேதான் வருவார்கள். இதை மறந்து விட்டோமே என என்னை நானே கடிந்து கொண்டு, கடைக்குள் நுழைந்து, நேராக பட்டுப்புடவை செக்ஷனுக்குச் சென்றேன். "பாலும் பழமும் டிசைன் இருக்கா?" எனக்கேட்டதுதான் தாமதம். நாலைந்தை எடுத்துப்போட்டார். அத்தனையும் நான் எதிர்பார்த்த மல்ட்டிகலர் கட்டங்கள் போட்ட புடவைகள். அளவான அழகான கட்டங்களும் அசத்தலான பார்டர்களுமாக ஜிலுஜிலுத்தன. "அள்ளிக்கோ" என பரபரத்த மனதை அடக்கிக்கொண்டு ரொம்பவும் பிடித்த புடவையை பத்தே நிமிடத்தில் செலக்ட் செய்து கையில் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "ஆயிரம் சொல்லு.. இல்லே, ஐநூறு சொல்லு. கடைசில எங்கூர்தான் எனக்கு வேணுங்கறதைக் கொடுத்துச்சு" என மகளிடமும் பெருமையடித்துக்கொண்டேன். 

என்ன ஒன்று, இந்தப்புடவையைப் பார்க்கும்போது, "லேய்.. அன்னிக்கி என்னமோ, புளியங்கொட்டைலாம் பழைய டிசைன்.. இதப்போயி எடுத்தியேன்னு கேட்டியே" எனக் கிண்டலடிக்கலாம் அம்மா. அடுப்பில் காய் கருகுவதைக்கவனிக்கச் செல்வதைப்போல் நழுவி விட வேண்டும். அடுப்பே எரியாவிட்டாலும் கூட.

Thursday 13 October 2016

படமும் பாடலும் - 3

படம் அளித்த தூண்டுதலால் எழுதப்பட்ட பாக்கள் இங்கேயும் தொடர்கின்றன. 

பொற்புறுத்தப் போதுமில்லை பொற்சரிகை நான்வேண்டேன் 
பெற்றவரு டன்மக்கள் பாங்குடனே வசித்திடவே
சிற்றலகாற் சேர்த்திட்ட சிறுதுரும்பும் சுள்ளிகளும்
மற்றதெலாந் திரட்டியேநான் மணிவீடு கட்டுகிறேன் (கலி விருத்தம்)

2) மூவகை மாவொடு முச்சரக் கிட்டரைத்து
தூவலா யிஞ்சியுடன் தேங்காயுந் தான்கலந்து
ஆவலாய்ச் சுட்டதை சட்னியோ டுண்ணவே
தேவமிழ் தன்ன அடை (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
அரிசி, உளுந்து, பருப்பு இம்மூன்றையும் சேர்த்தரைத்த மாவோடு நல்லமிளகு, மிளகாய், சீரகம் என்ற மூன்று சரக்குகளையும் சேர்த்து இட்டு அரைத்து தேங்காய், இஞ்சி இரண்டையும் துருவித்தூவிக் கலந்து ஆவலுடன் சுட்டதை சட்னியுடன் உண்டால் தேவாமிர்தமாக அடை ருசிக்கும்.

3)அடைமழை மாசுகம் சூடாய்ப் பருப்பு
வடையுடன் டீயும் பெறின்.
புசித்தும் அடக்கவொண்ணா ஊறுநீர் நாவே
ருசிப்பாய் தினமும் வடை

வடையுடன் சட்னியை வாயிட சொர்க்கம்
தடையின்றி மண்ணில் வரும். (ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்)

4) ஊறிய நற்பயிறு முப்பொடு தேங்காயும்
தேறிய தக்காளி தக்க மசாலுடன்
சீறிய தண்ணீரில் வெந்த உசலுக்கு
மாறிய பன்னே ருசி (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)


Wednesday 7 September 2016

கண்பதி - 2016


மஹாராஷ்ட்ராவைப்பொறுத்தவரை வினாயகர் சதுர்த்திக்கு குறைந்தது பதினைந்து இருபது நாட்கள் இருக்கும்போதே மக்களிடம் “பண்டிகைக்கால மனநிலை” தொற்றிக்கொண்டு விடும். தெருவுக்குத்தெரு ஏரியாவுக்கு ஏரியா கொட்டகை போட்டு பிள்ளையாரின் உருவச்சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட ஆரம்பித்ததுமே மக்கள் அங்கே படையெடுக்க ஆரம்பித்து தங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் பிள்ளையார்களை முன்பதிவு செய்து விடுவர். அந்தப்படியே நாங்களும் எங்கள் வீட்டுக்கான பிள்ளையாரை தெரிவு செய்யச்சென்றோம். ஹைய்யோ!!.. விதவிதமான வடிவங்களில் அலங்காரங்களில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் சிலைகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற உலகமகாக் குழப்பமே வந்தது. ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் அழகு. கடைசியில் ஒரு வழியாக தேர்வு செய்த கையோடு, வீட்டில் எப்பொழுதும் வைத்து அழகு பார்க்கவென ஒரு குட்டிப்பிள்ளையாரையும் தேர்வு செய்து கொண்டோம். இங்கே மஞ்சள் உடையில் அமர்ந்திருப்பவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது செவ்வாடை தரித்து வந்தார்.
வருடத்துக்கு ஒரு முறை பெரியவர் வீட்டுக்கு வரும்போது வீடு கச்சாம் முச்சாமென்று இருந்தால் நன்றாகவா இருக்கும். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் இந்த ஏரியா என்று டைம்டேபிள் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட முழு வீட்டையும் தண்ணீரில் முக்கிக் கழுவாத குறையாக வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் சுத்தப்படுத்தியாயிற்று. என்னதான் தினம் பெருக்கித்துடைத்தாலும், அடிக்கடி அலமாரிகளை ஒழித்துச் சுத்தம் செய்தாலும் பண்டிகை என்று வரும்போது மொத்தமாக மறுபடியும் சுத்தம் செய்தால்தான் மனதிருப்தி. தவிர, வீட்டில் கொஞ்சமாகவா பொருட்களை வாங்கி அடுக்கி அடைத்து வைக்கிறோம். சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் அவற்றையெல்லாம் கடாசினால்தானே மறுபடியும் அந்த காலியிடத்தை நிரப்ப முடியும்? ஊடே ஊடே பூ மற்றும் பழங்கள் போன்ற விரைவில் கெட்டுப்போகும் பொருட்களைத்தவிர்த்து மண்டப அலங்காரம், பூஜை மற்றும் பிரசாதங்களுக்கான பொருட்களையும் ஏற்கனவே தயாரித்து வைத்த லிஸ்டைச்சரி பார்த்து வாங்கி வைப்பது என்று நாட்கள் விரைந்து ஓடின.

கட்டக்கடைசியாக பூவும் பழங்களும் வாங்கி வந்து விடலாம் என்று கிளம்பினோம். இங்கே நெருல் எனுமிடத்தில் இருக்கும் காமாட்சியம்மன் கோவிலுக்கான பூக்கடையில் அருகம்புல் மாலை கிடைத்தது. வழக்கமாக வைத்திருக்கும் மல்லிகை, கதம்பச்சரங்கள் அன்றைக்கு கிடைக்கவில்லை. வாஷியில், செக்டர் -17ல் இருக்கும் வள்ளி ஸ்டோர்சின் முன்னால் கிடைக்குமென்று சென்ற எங்களை ஏமாற்றாமல் மல்லிகை, ஜாதிமுல்லை, அரளி, கதம்பம் என்று விதவிதமான பூச்சரங்கள் கொட்டிக்கிடந்தன. கூடவே பன்னீர் ரோஜாவும் செண்பகமும் தாமரை மொட்டுகளும். விமானத்தில் வந்ததாலோ என்னவோ பூக்களின் விலையும் வானத்தைத் தொட்டுக்கிடந்தது. சரமாகத்தொடுத்த பூச்சரம் முழம் ஐம்பது ரூபாய்க்கு விற்றதென்றால், நெருக்கித்தொடுத்த மல்லிகைச்சரத்தின் விலை 200 ரூபாயாக இருந்தது. நாம் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் சகாய விலையில் ஓரிரு முழம் கூடுதலாகக் கிடைத்தது. வேண்டியதை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.

பிள்ளையாரை தெர்மோகோலில் செய்யப்பட்ட மண்டபத்தில் அமர்த்துவதும் இங்கே வழக்கம். அந்த மண்டபத்தை ‘மக்கர் (maker”) என்று சொல்வார்கள். பிள்ளையார் சிலைகள் விற்கப்படும் கடைகளைத்தவிர ஸ்டேஷனரிகளிலும் தனிக்கடைகளிலும் கூட இவற்றை செய்து விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இவற்றின் விலை மக்கரின் அளவைப்பொறுத்து ஐநூறு ரூபாயிலிருந்து ஆரம்பித்து ஏறிக்கொண்டே செல்லும். எங்கள் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக உபயோகித்த மக்கர் கொஞ்சம் பழசாகி விட்டதால் பழையது கழிந்து புதியது புகுந்து மகள் கையால் அலங்காரம் செய்து கொண்டது..
முக்கியமான அந்த நாளும் வந்தது. விடிந்தால் வினாயகர் சதுர்த்தி. அன்றைக்கு காலையில் வினாயகரை வீட்டுக்கு அழைக்கப்போனால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். தவிரவும் பிரம்ம முஹூர்த்தத்தில் வந்து பூஜை செய்து வைப்பதாக பண்டிட்ஜியும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆகவே, முதல் நாளிரவே சென்று பிள்ளையாரை முறைப்படி அழைத்து வந்தோம். வந்து மண்டபத்தில் இருத்தியபின், குளித்து முடித்து விடிய விடிய தூங்காமல், பச்சரிசி இட்லி, மோதகம், தேங்காய்க்கொழுக்கட்டை, கடலைப்பருப்பு சுண்டல், பூரி, உலர்பழ ஷீரா, சாதம், பருப்பு என சாமிக்கான பிரசாதங்களும், வீட்டிலிருக்கும் ஆசாமிகளுக்கென உருளைக்கிழங்கு மசாலாவும் தயார் செய்து, நாங்களும் தயாராகவும் பண்டிட்ஜி வரவும் சரியாக இருந்தது. விடியலின் மௌனமும் மழைக்காலக்குளிரும் சங்கமித்த அப்பொழுதில் கலசம் ஸ்தாபித்து, பிராணபிரதிஷ்டை செய்து ஆரம்பிக்கப்பட்ட பூஜை மனதுக்கு நிறைவாக அமைந்தது. ஊருக்குச் சென்றிருந்தபோது மகள் எனக்குப் பரிசளித்த ஒரு ஜோடி அன்னவிளக்குகளையும் இன்று அரங்கேற்றியாயிற்று.
சதுர்த்தியன்று ஆரம்பித்து ஒன்றரை நாள், மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பத்தாம் நாள் என்ற கணக்கில் மூர்த்திகள் கரைக்கப்படுவது வழக்கம். எங்கள் வீட்டில் ஒன்றரை நாள் குடியிருந்து விட்டு “நான் போயிட்டு வாரேன்” என்று கிளம்பினார். அனுப்ப மனதே வரவில்லை. வீட்டில் அவர் இருக்கும்போது ஒரு தனித்தெம்பும் பாதுகாப்பு உணர்வும் தோன்றியது நிஜம். ஆனாலும், போனால்தானே அடுத்த வருடம் திரும்பி வர முடியும். 
யதாஸ்தானம் பிரதிஷ்டா செய்து சற்று வடக்கே நகர்த்தி வைத்து புனர்பூஜையை முடித்த கையோடு, கட்டுச்சோறும் கொடுத்து அவரைக் கைகளில் சுமந்து கொண்டு, வீடு முழுக்கச் சுற்றிக்காண்பித்தபின் “கண்பதி பப்பா மோரியா.. புட்சா வர்ஷி லௌக்கர் யா” என்ற வேண்டுகோளுடன் அவரைக்கரைக்க கிளம்பினோம். ஒவ்வொரு ஏரியாவாகச்சென்று தரிசனம் செய்ய நேரமில்லையா?.. கவலை ஏன்?. விசர்ஜன் நடக்கும் நீர் நிலைக்குச் சென்றால் போதும். ஃபேஷன் பரேடு தோற்றது போங்கள்.. வரிசையாக வந்து கொண்டிருக்கும் அழகுப்பிள்ளையார்களைப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். விசர்ஜன் செய்யுமுன் அங்கும் ஒரு முறை ஆரத்தி எடுக்கப்படும். முடிந்தபின் தங்கள் குறைகளை பிள்ளையாரின் காதில் போட்டுக்கொண்டிருந்த சில மக்களையும் காண முடிந்தது. அதெல்லாம் கேட்டுக்கொள்ளத்தானே இத்தனை பெரிய காதுகள் அவருக்கு இருக்கின்றன. என்ன ஒன்று!!.. வாங்கி அந்தக்காது வழியாக விடுகிறாரா இல்லையா என்றுதான் தெரிந்து கொள்ள முடியாது. 
 வெறுமை :-(
காலியான பேரல்களை அடுக்கிக் கட்டப்பட்டிருந்த தெப்பத்தின் மேல்பலகையில் ஓரளவு எண்ணிக்கையில் பிள்ளையார்கள் வரிசையாக அமர்த்தி வைக்கப்பட்டு குளத்தின் ஆழமான பகுதிக்குக்கொண்டு சென்றபின், ஒவ்வொருவராகக் கரைக்கப்பட்டனர். முன்னதாக, பிள்ளையாருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மலர்மாலைகள் களையப்பட்டு, அவை தனியாக நிர்மால்ய கலசத்தில் சேகரிக்கப்பட்டது சிறப்பு. இதனால், குளத்தில் பூக்கள் மிதப்பது தவிர்க்கப்படுகிறதே. குறைந்த பட்சம் அந்த அளவுக்காவது சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது அல்லவா? பிள்ளையார் கரைக்கப்பட்டதும் மணைப்பலகையில் கொஞ்சம் குளத்து மண்ணை வைத்துத் தருவார்கள். அதையும் கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காயையும் மணையில் விரிக்கப்பட்டிருந்த சிகப்புத்துணியில் வைத்துக்கட்டி வீட்டில் தொங்க விடுவது இங்குள்ள வழக்கம். இதை அடுத்த வருடம் நிர்மால்யத்தில் சேர்த்து விட்டு புதிய கலசத்தேங்காயைக் கட்டுவார்கள். பிள்ளையாருக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தோம். அவரை அமர்த்தியிருந்த இடத்தில் காலி மணையை வைத்து ஆரத்தி எடுத்தபோது எவரிடமும் அதிகம் சுரத்தில்லை. பரவாயில்லை.. நம் வீட்டிலிருந்து விடைபெற்றிருக்கிறார். ஆனால், மற்ற இடங்களில் இன்னும் பத்து நாட்களுக்கு இருப்பாரே!! அங்கு போய் கண்டு கொண்டால் ஆயிற்று.

“கண்பதி பப்பா மோர்யா.. மங்கள் மூர்த்தி மோர்யா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”

Saturday 27 August 2016

நாகரம்மன் கோவில் (நாகர்கோவில்)

அக்காலத்தில் “கோட்டாறு” என்று அழைக்கப்பட்டு வந்த அவ்வூரின் ஒரு பகுதியில் தன் வீட்டுக் கால்நடைகளுக்காகப் புல்லறுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். வேகவேகமாகப் புல்லறுத்துக்கொண்டிருந்தவள் திடீரென மண்ணிலிருந்து ரத்தம் பீறிடுவதைக்கண்டு பயந்து அலற, சத்தம் கேட்டு அக்கம்பக்கம் மாடு மேய்த்துக்கொண்டும் புல்லறுத்துக்கொண்டும் நின்றுகொண்டிருந்த மக்கள் ஓடி வந்தார்கள். அவளது விரல் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தவர்கள் சற்றே வியப்புடனும் பயத்துடனும் தங்களுக்குள் கிசுகிசுவெனப் பேசிக்கொண்டார்கள். அவள் காட்டிய திசையில் இருந்தது ஒரு சிறிய நாகர் சிலை. அக்கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவர் கண் மூடிப் பிரார்த்தித்துக்கொண்டு சிறிது மண்ணை எடுத்து ரத்தம் வந்த பூமியின் மேல் இட உடனே அது நின்றது. பக்திப்பரவசப்பட்ட மக்கள் தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி நாகராஜனை வணங்கினர். அந்த இடத்தில் நாகராஜனுக்கு ஒரு சிறிய கோவிலும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். கோவிலின் புகழ் கொஞ்சங்கொஞ்சமாகப் பரவத்தொடங்கியது.

அச்சமயத்தில் களக்காட்டை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த வேணாட்டு மன்னர் உதயமார்த்தாண்ட வர்மா தோல்நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். இக்கோவிலைப்பற்றிக்கேள்விப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து தரிசனம் செய்து சென்றவரின் வியாதி நாளடைவில் குணமடைய ஆரம்பித்தது. பெருமகிழ்ச்சியுற்ற அவர் இக்கோவிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்தார். அவர் ஆரம்பித்த வழக்கத்தைத் தொடர்ந்து இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகரம்மனை வணங்கி பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் தரிசனத்திற்காக அலைமோதும்.

இந்தியாவிலேயே நாகரை மூலவராகக் கொண்ட ஒரே கோவில் இதுதான். அதன் காரணமாகவே இவ்வூரும் “நாகர்கோவில்” எனப்பெயர் பெற்றது. கோவிலின் பெயரையே தன் பெயராகத்தாங்கி நிற்கும் ஒரே ஊரும் இதுதான் என்ற சிறப்புகள் நாகர்கோவிலுக்கு உண்டு. இக்கோவிலுக்கு முத்து தியேட்டரின் அருகிலிருக்கும் கிழக்கு வாசல் வழியாகவோ அல்லது தெற்கிலிருக்கும் பெரிய வாசல் வழியாகவோ வரலாம். கோவிலின் முன்பக்கத்திலிருக்கும் நாகசுனையில் கால் நனைத்து விட்டு அருகிலிருக்கும் பெரிய மேடையில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வலம் வந்து வணங்கி, இம்மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணக்கற்ற நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி மற்றும் பாலால் அபிஷேகம் செய்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும். வெளியூர் பக்தர்களின் வசதிக்காக பால் கோவிலிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 40, மற்றும் ஐம்பது ரூபாய் என இரண்டு விதங்களில் கிடைக்கின்றன. வாங்கி ஒவ்வொரு நாகரின் தலையிலும் துளித்துளியாய் ஊற்றிக்கொண்டே சென்றால் ஆயிற்று. இந்த மேடையில் ஒரு காலத்தில் இரண்டு பெரிய அரச மரங்கள் இருந்தன. தொண்ணூறுகளில் ஒரு பெரிய மழையின்போது ஒரு மரம் விழுந்து தற்சமயம் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கிறது. 
அனந்தனுக்கும் நாகரம்மனுக்கும் தனித்தனியாக நுழைவாயில்கள் இருந்தாலும் பொதுவாக நாகரம்மன் சன்னிதியின் நுழைவாயில் வழியாகச் செல்வதே மரபு. உள்வாசலில் துவாரபாலகர்களாக தர்னேந்திரனும் பத்மாவதியும் ஐந்து தலை நாகத்தின் வடிவில் ஆளுயுரச்சிலைகளாக அமர்ந்திருப்பது கண் நிறைந்த காட்சி. சமீப வருடங்களாக பாதுகாப்புக்காக கம்பித்தடுப்புக்குள் பித்தளைக்கவசம் அணிந்து ஜொலிக்கிறார்கள். கவசத்தில் அடைபடாமல் கற்சிலைகளாக இருந்த முற்காலத்தில் அவர்களுக்கும் துளி பால் ஊற்றி விட்டு உப்பும் மிளகும் தூவி விட்டுச்செல்வோம். இப்பொழுதோ தொட்டுக்கும்பிட வேண்டுமென்றாலும் பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. மூலவர் நாகரம்மன் ஓலை வேய்ந்த கருவறையில் ஐந்து தலை நாகத்தின் வடிவில் ஈரமான மண்தரையில் அமர்ந்திருக்கிறார். இம்மண்ணே இன்றும் நாகரம்மன் கோவிலின் முக்கியப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது வருடத்தில் ஆறுமாதம் கறுப்பாகவும் மீதி ஆறுமாதம் வெள்ளையாகவும் இருக்கும். நாகரம்மனுக்கு உகந்த ஆயில்யம் நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாலபிஷேகம் மற்றும் பால் பாயசம் நிவேதனம் செய்வது சிறப்பு. சமீப காலங்களில் ஆவணி ஞாயிறன்று முன்னூறு ரூபாய் சிறப்புத்தரிசன வரிசையில் சென்று தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் பால்பாயசம் அடங்கிய எவர்சில்வர் டப்பாவும் இன்ன பிற பிரசாதங்களும் வழங்கப்படுவதாக செய்தி.

கோவிலின் உட்பிரகாரத்தில் நாகரம்மனுக்கு இடது புறமாக வலம் வந்தால், சிவன் அனந்தன், கன்னி மூலை கணபதி மற்றும் உற்சவர் சன்னிதிகளை தரிசிக்கலாம். உற்சவர் சன்னிதிக்கு முன்புறம் இடது பக்கத்தில் சுவரிலிருக்கும் சிறிய ஜன்னல் வழியே கர்ப்பக்கிரகத்தின் ஓலைக்கூரையும் காணலாம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் இந்த ஓலைக்கூரையை புதிதாக மாற்றிக்கட்டுவார்கள். இத்திருப்பணியை கோவிலில் பூஜை செய்பவர்களே செய்வது வழக்கம். வேறு யாரும் செய்ய அனுமதியில்லை. இன்றும் இங்கே ஒரு பாம்பு வசிப்பதாக தகவலுண்டு, முன்பெல்லாம் பக்தர்கள் இந்த ஜன்னல் வழியே முட்டைகளையும் காசுகளையும் நாகரம்மனுக்குக் காணிக்கையாக அளித்து விட்டுச்செல்வது வழக்கம். முன்னொரு காலத்தில் இந்த இடத்தில் “ஓடவள்ளி” என்றொரு மூலிகைக்கொடி படர்ந்திருந்தது. இதன் இலைகளைப் பிரசாதமாகக் கொடுத்து வந்தனர். இதன் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவையிலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாம்புகளின் இருப்பிடமாக இது இருந்ததால் ஓர் அதிகாரி இதை வெட்டி அகற்ற உத்தரவிட்டார் என்றும் பின்னர் அதன் அருமை தெரிந்த பின்னர் அதை நட்டு வளர்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் இயலவில்லை என்றும் அக்கால ஆட்கள் சொல்லக்கேள்வி.

உட்பிரகாரம் சுற்றி வெளி வந்தால் கற்துண்டுகள் பாவிய இரண்டாம் பிரகாரமான வெளிப்பிரகாரம். இதன் தென்பக்கத்தில் பத்திருபது வருடங்களுக்கு முன் இரண்டு பன்னீர்ப்பூ மரங்கள் வானளாவி வளர்ந்திருந்தன. தரையெங்கும் பாவிக்கிடக்கும் பூக்களை அள்ளிச் சேகரித்துக்கொண்டு ஒவ்வொரு சன்னிதியிலும் இட்டுச்செல்வது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. மூப்பாலோ அல்லது வேறெந்த காரணத்தாலோ அவை தற்போது வெட்டப்பட்டது வருந்த வைத்தாலும் அடிமரத்திலிருந்து துளிர்த்து வளர ஆரம்பித்திருப்பது சற்றே ஆறுதலளித்தது. வெளிப்பிரகாரத்தில் தென்பக்கம் பூதத்தார் சன்னிதியும் வடபக்கம் மணிகண்டனின் சன்னிதியும் உள்ளன. 
இதன் பின்பக்கமிருக்கும் வாசலில் வடபுறமாக இரண்டு படியேறினால் துர்க்கையும் குமரனும் வேணுகோபாலனும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள் பாலிக்கிறார்கள். கோவிலின் திருக்குளத்திலிருந்து கிடைத்தவளாகையால் இவளுக்கு தீர்த்த துர்க்கை என்றும் பெயருண்டு. ராகுகாலங்களில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவதற்காக மக்கள் கூட்டம் பெருமளவில் வரும். இந்த சன்னிதிகளின் முன்பிருக்கும் பெரிய கூடத்தில் அனுமனும் கண்ணாடிப்பெட்டிக்குள் காட்சியளிக்கிறான். அப்படியே திரும்பி நடந்தால் திருக்குளமருகிருக்கும் வாசல் பக்கத்தில் சன்னதி கொண்டிருக்கும் இடும்பனையும் தரிசிக்கலாம். இடும்பனைத்தரிசித்து விட்டு அதன் பின் வந்த வழியே திரும்பி நடந்து சாஸ்தா சன்னிதியின் முன்புற வாசல் வழியே வந்து அனந்தன் சன்னிதியின் முன்னாலிருக்கும் கொடிமரத்தினருகே விழுந்து வணங்குதல் மரபு. நாகர் இருக்குமிடத்தில் கருடன் இருத்தாலாகாது என்பதால் அனந்தன் எனும் ஆதிசேஷனுக்குரிய வாகனமான ஆமை கொடிமரத்தில் இடம்பெற்றுள்ளது. கொடிமரத்தின் பீடத்தில் சற்றுக்கீழே சிறிய நாகமொன்று நெளிந்து செல்லும் கோலத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கோவிலிலிருந்து வெளியேறும் தெற்கு வாசலருகே கலை நிகழ்ச்சிகளுக்காகக் கட்டப்பட்ட மண்டபமொன்று திருமண மண்டபமாகி தற்பொழுது அன்னதானக்கூடமாக உருமாறியிருக்கிறது. முன்பெல்லாம் தை மாதம் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் சேஷகோபாலன், வெ.ஆ. நிர்மலா போன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கட்டாயம் இடம்பெறும். இதற்காகவே சுசீந்திரத்தின் மார்கழித்திருவிழாவை அடுத்து நாகரம்மன் கோவிலின் தைத்திருவிழா குமரி மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும். தை மாதம் நடக்கும் தேர்த்திருவிழாவும், சப்பர ஊர்வலமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும்,கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும் தினமும் காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை. மாலை 5.00 மணிமுதல்இரவு 8.30 மணிவரை நடை திறந்திருக்கும். தற்காலத்தில் தேர்த்திருவிழா அன்றைக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பூட்டிக்கிடக்கும் கோவிலின் தெற்கு உள்வாசல் சப்பர ஊர்வலத்தை முன்னிட்டு மட்டுமே திறக்கப்படுவது வழமை.
சைவ, வைணவ, சமண மதங்களின் ஒருங்கிணைப்பான இக்கோவில் நேபாளக் கட்டடக்கலையை ஒத்திருக்கிறது என்பாரும் உளர். முன்பு இக்கோவில் சமணர்களுக்கானதாக இருந்தது எனவும் ஆராய்ச்சிகள் பல நடந்துள்ளன. அவற்றில் ஒன்று இங்கே.  

இக்கோவிலின் குளக்கரை, கோவில் மதிற்சுவர்கள், உட்புறச்சுவர்கள் மற்றும் பிரகாரங்களில் பதிக்கப்பட்டிருக்கும் நாகர்சிலைகளுக்குக் கணக்கே கிடையாது. பாம்புகளின் நடமாட்டமிருந்தாலும் பாம்பு கடித்து மரணமடைந்தவர் இவ்வூரிலும் சுற்று வட்டாரத்திலும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. ராகு கேது பரிகாரத்தலமாகவும் உடல் மற்றும் தோல் நோய்களைத் தீர்த்து வைக்கும் ஸ்தலமாகவும் இக்கோவில் அறியப்படுகிறது. நோய் தீர வேண்டிக்கொண்டு உப்பும் நல்லமிளகும் வாங்கிப்போடுவதும் உடல் பாகங்களை வெள்ளியாலோ அல்லது மரத்தாலோ செய்து காணிக்கையாகப் போடுவதும் உண்டு. தவிரவும் பாம்பு மற்றும் முட்டைகளை வெள்ளியால் செய்து காணிக்கை செலுத்துவதும் உண்டு. அதுவும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்யவும் காணிக்கை செலுத்தவுமாக கோவிலில் கூட்டம் நெரியும். அத்தனை நாளும் பார்த்த கோவில்தானா என்று நமக்கு சந்தேகம் வருமளவுக்கு ஜேஜே என்று திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். சிறார்களுக்கான நடைவண்டிகள், பழக்கடைகள், வரவிருக்கும் நவராத்திரிக்கான கொலுபொம்மைகள், மஞ்சள் குங்குமக்கடைகள் மற்றும் பல என்று ஷாப்பிங்கிற்கும் குறைவிருக்காது. 

Friday 29 July 2016

ஒரு சொல்.. பல பாக்கள் -2

"ஆழி" என்னும் சொல்லுக்கு கடல், சக்கரம் என மேலும் சில அருஞ்சொற்பொருட்களும் உண்டு.

1) கொடுத்தான் கிடந்தான் புதைத்தான் சமரில்
எடுத்தானே ஆழியை மால்

விளக்கம்: (கணையாழி கொடுத்தான் பாற்கடலில் கிடந்தான், பாரதப்போரில் தேர்ச்சக்கரத்தை அழுத்தி அர்ச்சுனனைக் காத்தான், அசுரர்களை வதம் செய்ய சுதர்சனச்சக்கரத்தை எடுத்தான் திருமால்)

2) ஆழியில் வீற்றிருந்து ஆடியது போதுமே
நாழி பலவாச்சே வா

3) திருவாழி மார்பன் அணிந்த படையாம் 
திருவாழி காப்பு நமக்கு

விளக்கம்: (திருமகளான லக்ஷ்மி வாழ்கின்ற திருமார்பை உடையவன் அணிந்த ஐம்படைகளில் ஒன்றான சுதர்சனச்சக்கரம் நம்மைக் காக்கட்டும். நாகர்கோவில் அருகேயுள்ள திருப்பதி சாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் திருப்பெயர் திருவாழி மார்பன் இங்கே என்பது குறிப்பிடத்தக்கது.

4) மாலனை சங்கரன் மைத்துனனை கண்ணனை
பாலாழி ஈந்த திருவின் பதியை
கிருஷ்ணனை மோகினியை மாமருந்தே யன்ன
திருத்துழாயைப் பாடும் குழல் (பல விகற்ப இன்னிசை வெண்பா) 

5)
பாலாழி நீங்கினோன் காலாழி ஏத்தியே
வேலாழி ஏகினன் வாயுமகன்- சீர்மிகக்
காட்டினன் ஆழி வழுத்தியு யிர்த்தன்னை
மீட்டும் அளித்தாள் மணி (பல விகற்ப இன்னிசை வெண்பா) 

விளக்கம்: பாற்கடலை விட்டு அகன்று பூவுலகில் அவதாரமெடுத்திருக்கும் ராமனின் பாதத்தை வணங்கி அவனருளால் கடலையும் கடந்து வந்த ராமதூதனாகிய அனுமன், ராமனது கணையாழியை சீதையிடம் காண்பித்தான். புத்துயிர் பெற்ற அன்னை அவனை வாழ்த்தி தனது அடையாளமாக தன்னுடைய சூடாமணி எனும் நகையை ராமனிடம்  சேர்ப்பிக்கச்சொல்லி அனுமனிடம் கொடுத்தனுப்பினாள்.

Tuesday 7 June 2016

மணக்கும் மகிழம்..

அப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மணமும் மங்கி மறைந்து விடுகிறது. ஆனால், வாடினாலும் மணம் குறையாத, சொல்லப்போனால் வாடுந்தோறும் மணம் அதிகரித்துக்கொண்டே போகும் ஒரே பூ மகிழம்பூ மட்டுமே. 


எழுத்தாளர் லக்ஷ்மியின் கதைகளில் இப்பூ நிறையவே இடம் பெற்றிருக்கும். கண்ணால் கண்டதில்லை எனினும் அவரது எழுத்தின் மூலம் கண்ட மகிழம்பூ தரிசனம் என்றாவதொரு நாள் மகிழம்பூவைக் கண்ணால் காண மாட்டோமா என்று ஏங்கச்செய்திருந்தது. எதேச்சையாக ஒரு நாள் எங்களூர் ரயில் நிலையத்தின் வெளியே இளநீர் அருந்திக்கொண்டிருந்தபோது கடையின் பின்னால் வளர்ந்திருந்த குறுமரம் கண்ணில் பட்டது. குட்டிக்குட்டியாகப் பூத்திருந்த பூக்களை படமெடுக்கும் நோக்கில் அருகே சென்று காமிராக்கண் வழியே உற்று நோக்கினேன். ஹைய்யோ!! என் கண்களையே என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை காலமும் இணையத்தில் மட்டும் கண்டு களித்த மகிழமரம் இப்போது என் கண் முன். நாலைந்து பூக்களைப் பறித்து நுகர்ந்தேன். மயக்கும் நறுமணம் உச்சி வரை ஏறி கிறங்கச்செய்தது. இன்னும் சில பூக்களைப் பறித்து வந்து சாமி அலமாரியில் சிறு கிண்ணத்திலிட்டு வைத்தேன். 


பச்சை வான்வெளி போன்ற மரத்தில் லேசான வெண்ணிறத்தில் சின்னஞ்சிறு நட்சத்திரங்களாகப் பூத்திருக்கும் இப்பூக்கள் கண்ணுக்கும் நாசிக்கும் ஒரு சேர இன்பமளிக்கின்றன. இப்பூ இறைவழிபாட்டிற்கும் உகந்தது. திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.  
மகிழம்பழங்கள் சாப்பிடவும் உகந்தவை. மனதை மகிழவைக்கும் பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில்களிலும், வீடுகளிலும் இவை வளர்க்கப்படுகின்றன. கரும்பச்சை நிறத்தில் சற்றே நாவல் மர இலைகளைப்போல் தோற்றம் கொண்டிருக்கும் இலை மறைவில் இலைக்கணுக்களிலிருந்து கொத்துக்கொத்தாகத் தோன்றும் மொட்டுகள் பூத்து உதிர்ந்தாலும் மேலும் மேலும் அதே கணுக்களில் மொட்டுகள் தோன்றிக்கொண்டே இருப்பது இதன் சிறப்பு. விடியலில் மலர்ந்து மாலையில் கூம்பி விடுவதால் ஒரு நாள் அதிகாலையில் சென்று படம் பிடித்து வந்தேன். இம்மரம் ஏப்ரல் மாதத்திலிருந்து பூக்க ஆரம்பித்து ஜூன் ஜூலையில் பழங்கள் வர ஆரம்பிக்கின்றன. மஹாராஷ்டிராவில் பெண்கள் இப்பூக்களை ஊசி நூலால் கோர்த்து தலையில் சூடி மகிழ்வர். சந்தையிலும் பூச்சரங்கள் கிடைக்கின்றன. ஒன்று வாங்கி வந்து வார்ட்ரோபில் வைத்தாயிற்று. சரமென்னவோ வாடி சருகாகி விட்டது. ஆனாலும், வார்ட்ரோப் கதவைத்திறக்கும்போதெல்லாம் அதன் மணம் கும்மென்று மூக்கில் மோதுகிறது. 

பொதுவாக ஸ்பானிஷ் செர்ரி எனவும், சமஸ்கிருதம், மராட்டி மற்றும் பெங்காலியில் பாகுலி (Bakuli) எனவும், ஹிந்தியில் மௌல்சரி எனவும் அழைக்கப்படும் இப்பூ தமிழில் மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என அழைக்கப்படுகிறது. இதன் தாவரப்பெயர்  Mimusops elengi ஆகும். சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சிறப்பும் இப்பூவுக்கு உண்டு. மகிழ மரத்தின் இலை, பூ, காய், கனி மரப்பட்டை என அனைத்துப்பாகங்களும் ஆயுர்வேத வைத்தியத்தில் உபயோகிக்கப்படுகின்றன. காய்ந்த மகிழம்பூவோடு செண்பகம். ரோஜா இதழ்களையும் காய வைத்து சிறுபயறுடன் அரைத்துப்பொடித்து கஸ்தூரி மஞ்சள் பொடியோடு கலந்து வைத்துக்கொண்டால் மணம் மிக்க குளியல்பொடி தயார். முகத்தில் பூசிக்குளிக்க நன்றாகவே இருக்கிறது. 

வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மரம் இருபது அடி முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. சுமார் ஐந்தடி உயரம் வளர்ந்ததுமே பூக்க ஆரம்பித்து விடும் இம்மரம் மிக மெதுவாகத்தான் வளரும் ஆகவே விரைவில் பலன் பெற விரும்புவோர் இதை வளர்க்க விரும்புவதில்லை. ஆனால் இதை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கு நல்லது என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு. வருடமுழுவதும் உதிராத அடர்த்தியான இலைகளையுடைய, நல்ல நிழல் தரும் இம்மரத்தின் கீழே உறங்குவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது எனவும் கூறப்படுகிறது.

Monday 16 May 2016

பொறுமைக்கும் எல்லையுண்டு ( திரை விமர்சனம்)

குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் துணிச்சலாக வெளிவந்து தனக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிப்பேசவும் எதிர் நடவடிக்கை எடுக்கவும் துணியும் பெண்கள் மிகச்சிலரே. “பொறுத்துப்போ.. அடங்கிப்போ” என்று கூறும் பெரியவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும், சமூகத்தின் பார்வைக்குப் பயந்தும் மிக முக்கியமாக, பெற்ற குழந்தைகளின் எதிர்கால நலனை உத்தேசித்தும், முடங்கிவிடும் பெண்களே அதிகம். இதில் உலக நாடுகளின் எந்த மூலைகளில் வசிக்கும் பெண்களும் விதிவிலக்கல்ல. அவர்களில் “பொறுத்தது போதும்” என்று பொங்கியெழுந்து தன்னைக்கொடுமைப்படுத்தியவனைத் துவம்சம் செய்யும் ஒரு பெண்ணின் கதைதான் ‘enough’.

கதாநாயகி ‘ஸ்லிம்’மின் கணவன் பிற பெண்களுடன் சுற்றுபவனாக, கட்டுப்பாடற்ற மணவாழ்க்கையை விரும்புபவனாக, தட்டிக்கேட்டால் அடித்துத்துவைப்பவனாக, அதேசமயம் குழந்தையின் முன் நல்லவனாக நடிப்பவனாக இருந்தபோதிலும் தங்களது பெண்குழந்தைக்காக அவனைச் சகித்துக்கொள்கிறாள். குழந்தைகளுக்கு தாயைப்போலவே தகப்பனும் அவசியம் தேவை என்று எண்ணுகிறாள். ஆகவேதான் போலீசில் புகார் செய்ய ஆலோசனை அளிக்கும் தோழியிடம், “என் குழந்தையின் தகப்பனை ஜெயிலுக்கு அனுப்ப என்னால் இயலாது” என்று கூறிவிடுகிறாள்.

ஒரு கட்டத்தில் நண்பர்களின் உதவியுடன், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி. செல்லுமிடமெல்லாம் தன்னைக் கொலைசெய்யத்துரத்தும் கணவனிடமிருந்து தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக்கொள்ளப்போராடுகிறாள். இறுதியில் எந்தக்குழந்தைக்காக அவ்வளவையும் சகித்துக்கொண்டாளோ அதே குழந்தை இந்தப்போராட்டத்தில் அலைக்கழிக்கப்படுவதைச் சகியாமல் எல்லாவற்றுக்கும் முடிவு கட்டத்துணிந்து, “தற்காப்புக்காகத்திருப்பித் தாக்க நேரும்போது எதிரி மரணமடைய நேர்ந்தால் அது கொலையாகாது” எனக் கூறும் பயிற்சியாளரின் சொல்லையும் நினைவில் கொண்டு கணவனைத்திருப்பித்தாக்க தற்காப்புக்கலையும் கற்றுக்கொள்கிறாள். அத்தனை கொடூரமான கணவனை என்ன செய்தாள் என்று விவரிக்கும் உச்சகட்டக்காட்சிகள் நம்மை உலுக்கி விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் அறையும்போது ஒரே அடியில் சுருண்டு விழும் பலகீனமானவளாக, அவனிடமிருந்து தப்ப ஊரூராய் ஓடியலையும் அபலையாக, இறுதியில் அவனை அவனது இருப்பிடத்திற்கே சென்று பழி வாங்கும் ஆவேசமுற்றவளாக என்று நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார் ஜெனிஃபர் லோபஸ். 

குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார் ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

எழுத்தாளர் அன்னா குயிண்ட்லென்னின் Black and Blue என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, மைக்கேல் அப்டெட்டின் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு வெளியான இந்தப்படம் ஏராளமான அளவில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் நடிகர்களின் திறமை பெருமளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கொடுமைக்காரக் கணவனாக நடித்திருக்கும் Billy Campbellன் நடிப்பு செம. குழந்தையின் முன் தன் குட்டு வெளிப்படும் இடத்தில் அவரது நடிப்பு மிளிர்கிறது.

கணவனிடமிருந்து தப்பி ஒவ்வொரு ஊராகத் தலைமறைவாக வாழும் கதாநாயகியின் மேல் முதலில் சற்று எரிச்சல் வரத்தான் செய்கிறது. இவ்வளவு பயந்தாங்கொள்ளியாக, கோழையாக ஒரு பெண் இருக்கத்தான் வேண்டுமா? என்றும் தோன்றுவது இயல்பே. ஆனால், அவளைக் கட்டிப்போட்டிருப்பது தாய்ப்பாசமேயன்றி வேறேதும் இல்லை. பெண் தாயாகவும் வாழ நேரிடும்போது அதுவும் இயல்பாகி விடுகிறதே. அவளது வாழ்வு தனது குழந்தைகளின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தல்லவா இருக்கிறது. வாழ்நாள் முழுதும் தனியாக வாழ்ந்தாலும் ஆணைக் கேள்வி கேட்காத இந்த சமூகம் பெண்ணை அப்படி விட்டு வைக்கிறதா என்ன?. அவளை நோக்கி எத்தனை கணைகளை ஏவுகிறது. தானே தனக்குப் பிரச்சினையாகிப்போன பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்!!. தனது பிரச்சினையை இந்தக்கதாநாயகி தீர்த்த விதம் பலருக்குப் பிடிக்காதுதான். ஆனாலும், "வன்முறையால் அடக்குபவரிடம் அடங்க மறு" என்ற நீதியையாவது எடுத்துக்கொள்ளலாம்.

Monday 2 May 2016

உழைப்பாளர் தினம் - மே தினம் - மஹாராஷ்ட்ர தினம்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, மேற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பிரதேசங்கள், மன்னர்கள் ஆண்ட ராஜ்ஜியங்கள் போன்றவற்றை இணைத்து மராட்டிய மாகாணம் உருவானது. தற்கால குஜராத் மாநிலம், மகாராட்டிர மாநிலத்தின் கொங்கன், தேஷ், கான்தேஷ் பகுதிகள், கர்நாடகத்தின் வடமேற்குப் பகுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், ஏமன் நாட்டின் ஏடன் நகரம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன. 


தனி மாநிலம் வேண்டுமென்று போராடிய சம்யுக்த மராட்டிய இயக்கத்தினரின் ஒரு போராட்டத்தின் போது 105 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மராட்டிய மாகாணம் கலைக்கப்பட்டு, தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960ல்உருவானது. மஹாராஷ்டிர மாநிலம் பிறந்த இத்தினத்தை இங்குள்ள மக்கள் "மஹாராஷ்டிர திவஸ்" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உழைப்பாளர் தினமான மே தினமும், மஹாராஷ்ட்ர தினமும் ஒவ்வொரு வருடமும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 



மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள், முந்தைய ஹைதராபாத் மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் போன்றவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. குஜராத்தி மொழி பெருவாரியாகப்பேசப்படும் பகுதிகள் இணைக்கப்பட்டு குஜராத் மாநிலமும் இதே நாளில்தான் உருவானது. இன்றைய தினம் தாதரிலிருக்கும் சிவாஜி பார்க்கில் ஊர்வலங்கள், மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவதோடு மராட்டிய மாநில ஆளுநரின் உரையும் கட்டாயம் இடம் பெறும். மஹாராஷ்டிர தினத்தன்று மாநிலம் முழுவதும் மதுபான விற்பனையும் கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருக்கும்.








வால்: மஹாராஷ்டிர தினத்தையும் உழைப்பாளர் தினத்தையும் இணைத்துக்கொண்டாடும் எங்கள் வழக்கப்படி, உழைப்பாளர்களின் உழைப்பும் சாதனைகளும் இங்கே ஒளிப்பட வடிவில் கொண்டாடப்படுகின்றன :-)

LinkWithin

Related Posts with Thumbnails