Wednesday 13 March 2024

"நல்லாச்சி" அணிந்துரை - கீதா சுதர்சனம்

நல்லாச்சி நூலுக்கு எழுத்தாளரும், வெண்பா கற்றுத்தந்த குருவும், தோழியுமான கீதா சுதர்சனம் அளித்த அணிந்துரை. மிக்க நன்றி கீதா.
**************************************************

குழந்தைகளுக்குத் தம் தாத்தா, பாட்டிகளுடன் இருக்கும் பிணைப்பு அலாதியானது. 

கூட்டுக் குடும்பமாக இருக்கும்போதும், தனிக் குடும்பமாக இருந்தால் அவ்வப்போது பார்க்கும்போதும், வெளியூரிலோ, வெளி நாட்டிலோ இருந்தால் விடுமுறை நாட்களில் சந்திக்கும் போதும் என்று, தாத்தா, பாட்டிகளுடனான நம் சிறு வயதுத் தொடர்புகள், நாம் வளர்ந்த பின்னும் நினைவில் நின்று நெகிழ/மகிழ வைப்பவை.

கருவறையிலிருந்து வெளிவந்த கணம் முதல்  சிறிது சிறிதாக விரிவடைகிறது குழந்தைகள் உலகம். அவ்வப்போது எழும் ஆர்வம் கலந்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள அவர்களிடமிருந்து கேள்விக் கணைகள் பிறந்த வண்ணம் இருக்கும்.  அவர்களே தேடி விடை காணும் வயது வரும் வரையில் தாய், தந்தையார் இல்லா நேரத்தில் அல்லது அவர்களுடன் இணைந்து தாத்தா, பாட்டிகள் வகிக்கும் பங்கு முக்கியமானது நம் நாட்டின் குடும்பக் கட்டமைப்பில்.

வயல்வெளி, தோட்டம், துரவு, ஆடு, மாடு என்று ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆச்சியைக் காணப் பட்டணத்திலிருந்து வருகிறாள் பேத்தி. அவர்கள் இருவருக்குமிடையேயான பாசப் பிணைப்பை , அவர்கள்  உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்துபவையே சாந்தி மாரியப்பனின் "நல்லாச்சி" கவிதைகள்!

இக்கவிதைகளில் சிலவற்றை முகநூலில் அவ்வப்போது கண்ணில் படும்போது படித்து இரசித்திருக்கிறேன் என்றாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்தது இனிய அனுபவம்.  படித்ததும் ஒரு குறும்படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.  கிராமப் பின்னணியில் நல்லாச்சியும், பேத்தியும் உயிர்ப்புடன்  கண்முன் வந்து நின்றனர்.  பேத்தியின் அறியாப் பருவக் கேள்விகளும், நல்லாச்சியின் சமயோஜிதமும், வெகுளித் தனமும் வெளிப்படும் பதில்களும் சில சமயம் புன்னகையையும் சில சமயம் நெகிழ்வையும் விளைவிக்கக் கூடியவை. 

பல் கொட்டும் வயதான நல்லாவுடன் அவள் தாயும்  இருக்கிறாள். தனக்கு முன், தன், பின்னிரு என்று நான்கு தலைமுறைகளை அரவணைத்துச் செல்லும் அன்பு ஆச்சியே நல்லாச்சி.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கையை, நல்லாச்சி பேத்திக்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றுக்கு ஒப்பான நகர வாழ்க்கை அம்சங்கள் குறித்துப் பேத்தி பாட்டிக்குப் பாடம் எடுப்பதும்,  நெருங்கிய தோழிகள் போல அவ்வப்போது  பிணங்கி இணைவதுமாக நேரம் நகர்கிறது இருவருக்கும்.

இட்லி, தோசை, தொப்பி என ஆச்சி மருதாணி வைக்க, நூடுல்ஸ் மெஹந்தியை பேத்தி ஆச்சிக்கு அறிமுகப்படுத்துகிறாள்!

புள்ளிக் கோலம் போட ஆச்சி கற்பிக்க, பேத்தி அவளுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறாள்!

பேத்தி பம்ப் செட்ட்டில் கொட்டும் நீரை சிறு அருவி என்றால் ஆச்சி அருவியை பெரிய பம்ப் செட் என்கிறாள்!

நகரம் சார்ந்த கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றும் பேத்தி, கோவில் யானை எப்படி முகக் கவசம் அணியும் என்று கவலைப் படுகிறாள். 

ஆச்சி கிராமத்து அன்றாட நிகழ்வுகளை வைத்து நேரம் கணித்தால், பேத்தி  குறும்பாக ஆச்சியின் அன்றாடச் செயல்களை வைத்து நேரம் கணிக்கிறாள்!

பேத்தி உறங்குவதற்காக ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்து, அதை விஞ்சும் வகையில் பேத்தி அளந்து விடும் கதைகளில் ஆச்சி முதலில் உறங்கி விடுகிறாள்! 

மரம், செடி, கொடிகள், காய், கனிகள், பறவைகள், விலங்குகள் அனைத்தும் இவர்களுடைய நாடகத்தில் பங்கேற்கின்றன. தாத்தாவும் அவ்வப்போது மாட்டிக்கொண்டு விழிக்கிறார். 

எம்பிக் குதித்தும் கைக்கெட்டா உயரத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவோடு பேத்தி காய் விட,

"ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்"

இந்த வரிகளில்தான் எத்துணை நயம்! 

இவ்வாறு  பல அழகான நிகழ்வுகளை நெல்லை, குமரி வட்டார வழக்குச் சொற்களோடு பிணைத்து, பாட்டியாகவும், பேத்தியாகவும் மாறி மாறி சாந்தியின் கற்பனைக் குதிரை தாவியோடுகிறது. 

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாசகர்கள் உய்த்துணரக் கொஞ்சம் விட்டுவைக்க வேண்டுமே என்று நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இறுதியில்  சுட்ட கொழுக்கட்டை சாப்பிடுவாளா இல்லை சுடாத கொழுக்கட்டையா என்கிற வினாவுடன்
"அவ்வைக் கிழவி நம்கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி "

என்ற பாட்டோடு
அவ்வைப் பாட்டியும் இவர்கள் பேச்சில் புகுந்து புறப்படுகிறாள்.

இதே சந்தத்தில் நம் நல்லாச்சிக்கும் ஒரு கவிதை சமர்ப்பித்து, சாந்தியின் முயற்சிக்கு என் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
***
நல்லா என்றோர் நல்லாச்சி
...நயமாம் அவளின் சொல்லாட்சி
தள்ளா வயதில் தானிருந்தும்
...தன்தாய் காக்கும் சேயாச்சி 
பொல்லாச் சனத்தின் கண்ணேறு
..போக்கிப் பேத்தி காத்திடுவாள்
நில்லாக் கணைகள் அவள்விடுக்க
...நிறைவாய் விளக்கம் அளித்திடுவாள்; 
நல்லா ஆச்சி நலமுடனே
...நீடு வாழ வாழ்த்துவமே! 

நல்லாச்சியும், பேத்தியும் தொடர்ந்து இன்னும் பேசத்தான் போகிறார்கள். அதனால் சாந்தியின் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பாகமும் நிச்சயம் வெளிவரும் என்னும் நம்பிக்கையுடன்,

கீதா சுதர்சனம்.

Tuesday 27 February 2024

"நல்லாச்சி" வாசிப்பனுபவம் - கல்பனா ரத்தன்

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பைப்பற்றி அன்புத்தோழி கல்பனா ரத்தனின் வாசிப்பனுபவம். நன்றி கல்பனா.
********************************************************

சாந்தி மாரியப்பன் மும்பையில் வசிக்கிறார். நாகர் கோவில் பூர்வீகம். சாரல் என்ற பெயரில் புகைப்படங்கள், சாரல் துளிகள் என கவிதைகள் அருமையாக பகிர்ந்திருக்கிறார்.

நல்லாச்சி இவருடைய கவிதைத் தொகுப்பு .

பாட்டிக்கும் பேத்திக்குமான பாசப்பிணைப்பை, அன்பின் ஆழத்தை இந்தத் தொகுப்பில் காண்பது சிறப்பான ஒன்று.

அடுத்தது திருநவேலி, நாரோயில் பகுதிகளின் தமிழ். அங்குள்ள மண்வாசம் வீசும் பேச்சுத் தமிழ் உயிரோட்டமாக உள்ளது.

பாட்டிக்கும் பேத்திக்கும் நடுவிலுள்ள தலைமுறை இடைவெளிகளை இருவரின் வேறுபட்ட மண் சார்ந்த, மனம் சார்ந்த மற்றும் இருவேறு கலாச்சாரங்களை அழகாக இணைத்துப் பின்னப்பட்ட கவிதைகள்.

தொகுப்பில் என்னைக் கவர்ந்தவை :

"நாலாம் பிறை கண்டால்
நாய் படாத பாடு பட வேண்டியிருக்கும் "
பேத்தியைக் கடிந்து கொண்டாள் நல்லாச்சி
ஜன்னல் வழியே நிலா பார்த்த பொழுதில்.
செய்வதறியாது கலக்கத்துடன் விழித்தது
தடாகத்தில்
தன் முகம் ரசித்துக்கொண்டிருந்த நிலா.

அழகிய கற்பனை.

நல்லாச்சிக்கு அருவி பெரிய பம்ப்செட்டாகத் தெரிகிறது. ஆச்சிக்கு அருவி அதிசயமென்றால் பேத்திக்கு பம்ப்செட் அதிசயம்.

**
" இதென்ன? அதென்ன?
வீதிகளை அளந்தபடி
பேத்தி வீசும் கேள்விகளுக்கெல்லாம்
பதிலளித்த நல்லாச்சி
" இது யார்? என்ற கேள்விக்கு
எப்படிப்பதிலளிப்பாள்
தாத்தா கொணர்ந்த
' இன்னொரு ' ஆச்சியென்று".

கிராமங்களில் இயல்பாக அப்போது நடப்பதும், கிராமத்துப் பெண்மணிகள் தங்கள் வலிகளை மறைத்து வாழ்வதையும் ரொம்ப இயல்பாகக் கூறியிருக்கிறார்.


அரிசி மாக்கோலம் போட்டு எறும்புகளுக்கு உணவாகும் என்றவளிடம் கோலத்தில் நீர் தெளித்து எறும்புகள் விக்கலெடுத்தால் என்ன செய்யும் என்கிறாள் பேத்தி.

தலைமுறை மாற்றங்கள் சிந்தனைகளிலும் வளர்ந்திருப்பது சிறப்பான ஒன்று.

எட்டாத உயரத்தில் உள்ள செம்பருத்தியிடம் காய் விடுகிறாள் பேத்தி.

ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்....

அரிசி மரம் பார்க்கக் கிளம்பிய பேத்திக்கு அது நெற்பயிர் என விளக்கினாள் ஆச்சி.
பேத்தியின் அடுத்த கேள்வி
இதில் பச்சரிசிப் பயிர் எது?
புழுங்கலரிசிப் பயிர் எது?

பேத்திக்கு ஒரு குழப்பம். வடாம் போட்ட நாளில் ஓடி வரும் காகங்களை விரட்டுறீங்கள். தலைவாழை விருந்து வைத்த நாளொன்றில் அதை முன்னோரென மதித்து வா என்கிறீர்கள்?

நியாயமான குழப்பம் தான்.

பாட்டி பேத்திக்கு நிறைய அறிமுகப் படுத்துகிறாள். இயற்கையை, பம்ப்செட், பறவைகள், பூக்களை. மருதாணி, செவலைப்பசு, கொடுக்காப்புளி, சொக்கப்பனை, பொற்கொன்றை மரம், அவ்வைக் கொழுக்கட்டை, ஏழாங்கல், பல்லாங்குழி என ரசித்து மகிழ நிறைய இருக்கின்றன பேத்திக்கு

பேத்தியிடமிருந்து ஆச்சியும் மெஹந்தி, ஈ பாஸ், மாஸ்க், டூத் ஃபேரி என நிறையக் கற்றுக் கொள்கிறாள்.

80 கள் மற்றும் அதற்கு முன் பிறந்தவர்களின் பால்யங்கள் எவ்வளவு பசுமையாக இருந்திருக்கின்றன.

கிராமங்கள், வயல்வெளிகள், ஆடு, மாடு, கோழி, கிணறு, வாய்க்கால், சூரியகாந்தி,என இக்கால ஈராயிரக் குழந்தைகள் அறிந்திருக்காத விஷயங்கள், இழந்த சந்தோஷங்கள் எத்தனை?

பாட்டி பேத்தி என்பது வெறும் உறவு மட்டுமல்ல.. கடந்த தலைமுறையின் அடையாளங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அன்புப் பிணைப்பு.

படிக்கப் படிக்க பால்ய காலத்திற்குச் சென்று வந்த உணர்வு.

வாழ்த்துகள் சாந்தி.

Wednesday 21 February 2024

"நல்லாச்சி" வாசிப்பனுபவம் - ராஜா ஹஸன்.

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பைப்பற்றிய சகோ.ராஜா ஹஸனின் வாசிப்பனுபவம். நன்றி சகோ.
****************************************************************

தற்போது மும்பையில் வசித்து வரும் சாந்தி மாரியப்பன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் .இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 'அமைதிச்சாரல்' என்ற வலைப்பூவில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருகிறார்.

சாந்தி மாரியப்பன் எழுதிய இந்த 'நல்லாச்சி' கவிதைத் தொகுப்பை புரட்டியதில் கவிதைகள் கடினமான மொழியில் இல்லாமல் இலகுவாக வட்டார வழக்கில் இருந்தமை காரணமாக ஈர்ப்புடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

பேத்தியுடன் நல்லாச்சி பாட்டியின் அனுபவங்களே கவிதை மொழியாக உருப்பெற்றிருக்கின்றன.

பேத்தியை உறங்கச் செய்வதற்காக ஆச்சி கதை சொன்னால் பேத்தி அவிழ்த்து விடும் கதைகளில் ஆச்சியே உறங்கி விடுகிறார்.

கூட்டுக் குடும்பத்தில் பெரியோர்களுடன் சிறியவர்கள் நடத்தும் சின்ன சின்ன உரையாடல்களை கவிதை நயத்தில் மிகவும் அழகுச் சரமாக தொகுத்திருப்பது சிறப்பு.

பேத்திக்கும் பாட்டிக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை இந்த கவிதை மூலம் நம்மை அறியச் செய்கிறார் நூலாசிரியர்.

"மெஹந்தி இடத் தெரியாத நல்லாச்சியை
உள்ளங்கையில் சிவந்திருந்த
நூடுல்ஸ் வரிகளும் அன்னமும் சற்றே மிரளச் செய்திருந்தன
தொப்பி அணிந்த விரல்களும்
இட்லி தோசையிட்ட உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த அந்தக் கிராமத்து மனுஷி
சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தால் அச்சூழலில்"

கைகளில் இடப்பட்ட மருதாணியைப் பார்த்து நல்லாச்சி பாட்டி தன் உள்ளக்கிடக்கைகளை மெலிந்த நூடுல்ஸ் போன்ற வடிவங்கள் வியப்புக்குள்ளாக்குகின்றன.. என்ன ஒரு எளிமையான சிந்தனை கோலம்.

பாட்டியிடம் பேத்தி தனக்கு இட்லி தோசை வரைந்து கூடுதலாய் விரல்களுக்கு தொப்பிகளும் வைக்குமாறு கேட்டுக் கொண்டாளாம்..

"மருதாணி பூங்கரங்களில் முத்தமிட்ட ஆச்சியின்
அன்பு சிவந்திருந்தது பேத்தியின் கைகளில் மருதாணி வாசத்துடன்." என்ன ஒரு அற்புதமான தருணம் .

இவ்வாறாக பேத்திக்கும் பாட்டிக்கும் இடையிலான ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு கவிதைகளின் தொகுப்பு மிகவும் அருமை.

"கலகலக்கும் நகரத்து தீபாவளியை விட்டு
கிராமம் நோக்கி இம்முறை பேத்தி பயணப்பட்டதற்கு அதிரசத்தையும் கைமுறுக்கையும் தவிர நல்லாச்சி வீட்டில் பொறிந்திருந்த கோழிக்குஞ்சுகளும் தோட்டத்து மரத்தில் குடிவந்திருக்கும் கிளிகளும் காரணமென்பதை "
பாட்டியும் பேத்தியும் மட்டுமே அறிவர்.

சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சின்ன சின்ன சம்பவங்களில் பெரியவரான பாட்டியும் சிறிய பேத்தியும் உவகை கொள்வதைக், அருகில் இருந்தே நாம் கண்டு களிக்கும் வண்ணம் நூலாசிரியர் சூழல்களை நயத்துடனும் எளிய கவித்துவத்துடனும் படைத்திருக்கிறார். ❤️

கோவிட் நோய் தொற்று காலத்தில் ஈ- பாஸுடன் ஊர் வந்த பேத்தி, சமூக விலகல் அவசியம் என மாடுகளை விலகிக் கட்டச் சொன்ன பேத்தியின் கட்டளையை சிறப்பாக நிறைவேற்றிய பாட்டி ...அவள் கேட்ட ஒரு கேள்வியால் தடுமாறுகிறார்..

" கோவில் யானையை முகக் கவசம் அணியச் சொன்னால் என்ன செய்யும் எப்படி அணியும்?"

"வாசலுக்கு மங்கலமூட்டுவதோடு பிற உயிரினங்களுக்கும் உணவாகும்"
ஏனென்று கேட்ட பேத்திக்கு விளக்கியபடி அரிசி மாக்கோலமிடுகிறாள் நல்லாட்சி பேத்தியின் சிறு கை அள்ளிய நீரெல்லாம் கோலத்தின் வழி இழியக் கண்டு பதறிய ஆச்சியை அமர்த்தி நவில்கிறாள் பேத்தி.

" எறும்புக்கு விக்கல் எடுப்பின் என் செயும்? ஆகவே நீரும் வைத்தேன்" ஞே..யென மயங்கிச் சாயும் ஆச்சியின் முகத்தில் ஆரேனும் நீர் தெளிப்பீராக..

இவை போல நல்லாச்சிக்கு அருவி விருப்பமென்றால் பேத்திக்கு பம்ப் செட் அதிசயம்.. பேத்திக்கு புலி பெரிய பூனையென்றால் நல்லாச்சிக்கு பூனை சிறிய புலி.

பாட்டி பேத்திக்கு இடையிலான அனுபவங்களையே கருப்பொருளாக்கி அவற்றை மிகவும் எளிய மொழியில் வாசித்தவுடன் உணர்ந்து அனுபவிக்கச் செய்யும் நூலாசிரியரின் இந்த நல்லாச்சி கவிதைத் தொகுப்பு.. சிறப்பு.

'நல்லாச்சி' -கவிதைத் தொகுப்பு ஆசிரியர் -சாந்தி மாரியப்பன்
விலை- ரூபாய் 70
பக்கங்கள் -70
வெளியீடு -கோதை பதிப்பகம்
முதல் பதிப்பு பிப்ரவரி 2024

Monday 19 February 2024

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பு வெளியீடு.


"நல்லாச்சி" கவிதைகளை எழுத ஆரம்பிக்கும்போது ஆச்சி இப்படி அழுத்தமாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என அறியவில்லை. சொல்ல நினைப்பவற்றை போகிற போக்கில் பேத்தியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வேடிக்கையும் விளையாட்டுமாகச் சொன்னபடி, அனைத்தும் அறிந்த அனுபவஸ்தியானாலும் பேத்தியின் முன் எதுவுமே தெரியாதவளாய் திருதிருவென விழித்துக்கொண்டு அவள் வந்தபோதே தெரிந்து விட்டது நல்லாச்சி தனிக்காட்டு ராணியாகத்தான் வலம் வரப் போகிறாளென. 

சில வருடங்களுக்கு முன் துளித்துளியாக எழுத ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் சற்றேறக்குறைய தினமுமே அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சுடுபாதையில் குளிர்தருவாக அவளே ஆறுதலளித்தாள். முன்னட்டையை அலங்கரிக்கும் என் அம்மாவின் அம்மா "பொன்னம்மாச்சி" எனக்கு உந்துதலாக இருந்தாலும் என்னைச்சுற்றியிருந்த பல்வேறு நிஜமும் கற்பனையுமான ஆச்சிகளும் இந்நூலில் நடமாடுகிறார்கள். 

எனக்கு இந்த வருட பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் "நல்லாச்சி" கோதை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. மிக்க நன்றி தேனாச்சி. பபாசியின் துணைத்தலைவர் திரு. புருஷோத்தமன் கைகளில் "நல்லாச்சி"யைக் கண்ட தருணம் மகிழ்வானது, மறக்க முடியாதது.

எனது முதல் கவிதைத்தொகுப்பான "சிறகு விரிந்தது" வெளியான சமயம் என்னால் போக இயலாத சூழல், ஆகவே இந்தத்தடவை எப்படியும் சென்னை புத்தகத்திருவிழாவுக்குச் செல்ல வேண்டுமென்று கிளம்பி விட்டேன். ஜனவரி 16ம் தேதி மாலை எழுத்தாளர் கலாப்ரியா அண்ணாச்சியின் திருக்கரங்களால் "நல்லாச்சி" எனும் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு இனிதே வெளியிடப்பட்டது. தோழிகள் ஜெயந்தி நாராயணன், வல்லபா ஸ்ரீநிவாசன், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் நட்புகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

புத்தகத்தை வாங்க கோதை பதிப்பகத்தின் 9080870936 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Thursday 15 February 2024

சங்க காலத்து வெயில் - கலாப்ரியா


நவீன கதைமுகங்களில் மிக முக்கியமானவர் ‘சோமசுந்தரம்’ என்ற இயற்பெயர் கொண்ட “கலாப்ரியா” அண்ணாச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். நவீன கவிதைகளின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அப்போதைய கவிதைகளின் வெகுஜனப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்ததில், இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. "சங்க காலத்து வெயில்" எனும் இந்நூல் உட்பட  கவிதைத்தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள், நாவல்கள், சிறுகதைத்தொகுப்பு என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

கலாப்ரியாவின் கவிதைகள் முற்றிலும் சிறப்பானவை, தனித்துவம் கொண்டவை, பெரும்பாலான கவிதைகள் தன்னளவில் வெளிப்படையான காட்சிவடிவமும், அகத்தே உள்ளோட்டமாகக் காத்திரமான குறியீடும் கொண்டவை.

“சித்தார்த்தா
என்றழைத்த
முதுகுரல் கேட்டுத்
திரும்பிய புத்தன்
சிரித்துக்கொள்கிறான்
சொல்லைத் தாண்ட முடியாது
ஞானத்தால் என்று”

“கடலின் மேல்மட்டத்திற்கு
வரும்போதெல்லாம்
ஆகாயத்தின் உயரம்
பார்த்துப் பயந்து
வேகமாய் ஆழம் புதைகிறது
மீன்”

“நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை”
போன்ற கவிதைகளை உதாரணமாகச்சொல்லலாம்.

“இலக்கியவாதியின் சட்டி
கையைச் சுடுவதே இல்லை
அவன் கைகள்
விட்டு விடுவதுமில்லை”
என்ற கவிதையில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்.

வென்றவர்களைப்பற்றி மட்டுமே இவ்வுலகம் எப்போதும் பேசும், ஆனால், தோல்வியுற்றவர்களை அது நினைவில் வைத்திருப்பதில்லை, சொல்லப்போனால், அவர்களைச் சித்திரத்திலிருந்தே முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விடுகிறது. அத்தகைய உலகில், இசை நிற்கிறபோது இசை நாற்காலி விளையாட்டிலிருந்து விலகும் நாற்காலியைக் குறித்து வருத்தம் யாருக்கேனும் உண்டா? என கவிஞர் வினவும்போது அந்த நாற்காலி சற்றே ஆறுதல் கொண்டிருக்கும்.

கலாப்ரியாவின் கவிதைகளில் காட்சிகளாய்த் திரண்டு விரிகிறது உலகம். தான் கண்டவற்றை, உணர்ந்தவற்றை அப்படிக்கப்படியே அதிகப்படியான வர்ணனைகள், வெற்று அலங்காரச்சொற்கள் ஏதுமின்றி எளிய வாக்கியங்களில் வாசகனுக்குக் கடத்துபவை அவரது கவிதைகள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எளிய வரிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு திறப்பாகத் திறந்து கொண்டு புதிய தரிசனம் கிடைக்கிறது.

“ஊர் திரும்பும்போது
பார்வையில் பட்டால்
மகிழ்ச்சியை வழங்கும்
ஊரைப்பிரிகையில்
வருத்தம் பகிரும்
மைல் கற்களால்
வேறென்ன செய்ய முடியும்
நின்று கொண்டேயிருப்பதைத்தவிர” மேலோட்டமாக எளிதாகத் தோன்றும் இக்கவிதையின் மைல் கற்கள் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அச்சித்திரம் மறைந்து, கவிதை சொல்லும் கதையால் மனம் அலைவுறுகிறது. 

“ரசிக்கப்படும் போதெல்லாம்
செதுக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதன்
பேர்தான் கலையோ” எனில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது.

Tuesday 6 February 2024

ராஜவனம் - ராம்தங்கம்


சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம்தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி. சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்புகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள் என இவரது படைப்புகளும் பெற்ற விருதுகளும் ஏராளம். "திருக்கார்த்தியல்" என்ற தொகுப்புக்காக இவ்வாண்டின் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதாளர்.

காடு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்து ஒளித்து வைத்திருக்கிறது. புறத்தே அது ஒன்றாகக் காட்சியளித்தாலும் அகத்தே அது இருப்பது வேறொன்றாக. அதை அறிய, காடு நமக்குச் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ள அதனிடம் சரணாகதி அடைவதன்றி யாதுளது? அப்படியொரு காடுதான் இங்கே ராஜவனமாகப் பரந்து செழிப்புற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டத்திலுமாகப் பரவியிருக்கும் மேற்கு மலைத்தொடரின் வனாந்திரத்தைக் கதைக்களமாகக்கொண்டுள்ள இந்நூலில் நுழைந்த சில நிமிடங்களிலேயே காடு நம்மைத் தன்னுடன் இணைத்துக் கரைத்துக்கொள்கிறது.

பொதுவாக வனாந்திரங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் சாகசப்பயணம் செய்வதில் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நாட்டமுண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள காளிகேசம் அருவி, கீரிப்பாறை எஸ்டேட், கோதையாறு அருவி போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் குழுக்களாக தத்தம் வாகனங்களில் பயணம் செய்வதைக் கண்டிருக்கிறேன். கன்யாகுமரி மாவட்டத்தில் பாயும் நந்தியாற்று நதிமூலம் தேடி கோபாலும் அவனது நண்பர்களும் அப்படித்தான் பயணிக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியின் வர்ணனைகளும், பட்டியலிடப்படும் கானுயிர்களும், தாவரங்களின் பெயர்களும் வியப்பூட்டுகின்றன.

கல்குளம் தாலுகா பகுதியில் பரந்திருக்கும் அக்காட்டை முற்ற முழுக்க அறிந்தவராயிருந்தால் மட்டுமே இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க முடியும். எழுத்தாளர் ஜெயமோகனின் “காடு” நாவலிலும் அவரது பல சிறுகதைகளிலும் குமரி மாவட்டத்தின் காட்டைப்பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் அது அளித்த தரிசனம் வேறு, ராம்தங்கத்தின் ராஜவனம் அளிக்கும் தரிசனம் முற்றிலும் வேறு. காடு பெருக, நிலைத்திருக்க யானைதான் முக்கியமான காரணம் என்பர். காட்டின் உண்மையான அரசன் என்றே அதைச் சொல்லலாம். அப்பேர்ப்பட்ட யானையைத் தந்தங்களுக்காக அழிக்கும் கொடூரர்கள் கையாளும் வழிமுறைகள், முக்கியமாகப் “பன்னிவெடி” பதற வைக்கிறது.

காட்டின் அபாயங்களைப்பற்றி அறிந்தும், அசட்டுத்துணிச்சலுடன் நதியின் பிறப்பிடத்தை அறியச்சென்ற கோபால் ஒரு கட்டத்தில் மறைந்த தன் தந்தையைப்பற்றி முழுதாக அறிந்து கொள்கிறான். காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்து அவரது ஆத்மார்த்தமான வழிகாட்டல் அவனுக்கு அமைகிறது. சுற்றுச்சூழல், வனவிலங்குகள், மற்றும் மலையில் வசிக்கும் காணிமக்களின் மேல் பெரும் பரிவு கொண்ட அவரது மறுபக்கம் காணிகளால் அவனுக்குக் காட்டப்படுகிறது. காணிகளுக்கு அப்பெயர் எப்படி வந்தது? அவர்களது வாழ்வியல், சடங்குகள், உணவுகள், சட்டத்துக்குப் புறம்பாக வனத்துள் நடைபெறும் அவச்செயல்கள் என பல தகவல்கள் அறியத்தரப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தின் தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏற்கனவே தமிழும் மலையாளமும் கலந்துதான் அது பேசப்படுகிறது எனினும், ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதிரியாக என உச்சரிப்பும் வழக்கும் சில கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஒவ்வொரு வகையாக மாறுபடும். நாவலின் கதைக்களமாகக் கல்குளம் தாலுகா அமைந்திருப்பதால் அம்மக்கள் பேசும் மலையகத்தமிழையே நாவலின் மக்கள் பேசும் வட்டார வழக்காக அமைத்திருப்பது பெருஞ்சிறப்பு. நாகர்கோவிலில் பள்ளியிலும் கல்லூரியிலும் உடன்பயின்ற தோழிகளின் தமிழை மீண்டுமொரு முறை கேட்டதுபோல் உணர்ந்தேன். கன்யாகுமரி மாவட்டத்தின் காணி மக்களின் மொழியும் சிறப்புற உறுத்தலின்றி அமைந்துள்ளது.

சுமார் ஒன்றரை வருட தேடல், வாசிப்பு, பயணங்கள் போன்றவற்றால் இந்நூல் உருவானதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலை வாசிக்கும்போது அந்த உழைப்பு தெளிவாகப் புலப்படுகிறது. ராஜவனத்தில் உலாவுபவர் புத்துணர்ச்சியோடு வெளிவருவது உறுதி.

வெளியீடு: வம்சி பதிப்பகம்.

Sunday 4 February 2024

மரம் விடு தூது - ந. பரந்தாமன்


சிப்பியின் மேல் எவ்வளவோ துரும்புகளும் மணற்துகள்களும் படிந்தாலும் ஏதோவொன்றுதான் நல்முத்தாக விளைகின்றது. காணும் காட்சிகள், தோன்றும் எண்ணங்கள் யாவற்றையும் கவிதைக்களமாய்க் காண்பது கவிஞனின் மனம். அவற்றில் கவிமனதில் ஆழமாய்ப்பதிந்து உயிர்த்து ஒரு சிலவே கவிதைகளாய்ப் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த 119 கவிதைகளை "மரம் விடு தூது" என்ற முத்துமாலையாய் நம் முன் வைத்திருக்கின்றார் புதுவையைச் சேர்ந்த கவிஞர் ந. பரந்தாமன்.

ஒவ்வொரு கவிதையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுள்ளது. அன்றாட வாழ்வின் நுணுக்கமான கூறுகள், உணர்வு வெளிப்பாடுகள், அங்கலாய்ப்புகள் என அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. ஆறுதல், கட்டம் போட்ட நோட்டு போன்ற கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை. "ஒரு கவிதை நூலை வாசிக்கும்போது இதுவரை காணாமல் போயிருந்த நான் கிடைக்கப்பெற்றேன்" என்ற வரியில் கவிதைக்கும் வாசகனுக்குமுள்ள தொடர்பைக் கூறுகிறார். "அந்தோ என் ஓய்வுக்காலம் ஏதேனும் சட்டம் இயற்றப்படுமா (முதிய)குழந்தைத் தொழிலாளர் தடுப்புக்காக" என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. விருப்பப்பட்டுச் சுமக்கிறவர்கள் மத்தியில் வலிந்து சுமை ஏற்றப்பட்டுச் சுமக்கும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள்தானே. மொழிச்சிடுக்குகளுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அதிகம் சிக்கிக்கொள்ளாமல் எல்லையற்ற சுதந்திரத்துடன் புரண்டோடும் இவரின் மொழி இன்னும் சற்றுக் கூர்மை பெறின் பெருங்கவனம் பெறும். "கவிஞன் மென்மையானவன் அவன் எழுதும்
தாளை விட.." எனக்கூறும் இந்த மென்மையான கவிஞனிலிருந்து வீரியமிக்க கவிதைகள் பிறக்கட்டும்.

மரம் விடு தூது (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர்: ந. பரந்தாமன்
வெளியீடு: படி பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

LinkWithin

Related Posts with Thumbnails