Thursday 28 July 2011

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு :-))))



'அரிது.. அரிது.. ஆரோக்கியமாய் இருத்தல் அரிது; அதனினும் அரிது மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடல்'ன்னு நிகழ்காலக்கலம்பகத்துல படிச்சப்பகூட நான் நம்பலை.. வறுபட்டு ஃப்ரைட்ரைஸ் ஆனப்புறம்தான் நம்புனேன் :-)))

அந்த சரித்திரமுக்கியத்துவம் பெற்ற சம்பவம் நடைபெற்று பத்துப்பதினஞ்சு நாளானப்புறமும்கூட அதோட பாதிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு நீங்கலைன்னா, அதோட மகிமை என்னான்னு புரிஞ்சுக்கோங்க. பையருக்கு பல்லில் பிரச்சினை காரணமா, பல்டாக்டரைப்பார்க்கவேண்டி வந்தது (பல்டாக்டரைப்பார்க்காம பின்னே,.. கண் டாக்டரையா பார்ப்பாங்கன்னு கமெண்டுறவங்கல்லாம் அப்டியே ஒன் ஸ்டெப் பேக் :-)).

இந்த E.N.T. ஸ்பெஷலிஸ்டுகளெல்லாம் ஏன், பல்லுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடாதுன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். காது,மூக்கு,தொண்டை எல்லாத்துக்கும் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருக்கறமாதிரியே பல்லோடயும் சம்பந்தம் இருக்குதுதானே!!.. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்க இல்லியா :-)

சொல்லவந்ததை விட்டுட்டு எங்கியோ போயிக்கிட்டிருக்கேன்.. முந்திய நாளே ஆசுத்திரிக்கு போன் செஞ்சு, 'இந்த மாதிரி இந்தமாதிரி பையனுக்கு பிரச்சினை இருக்கு,.. அதனால இந்தமாதிரி இந்தமாதிரி டாக்டர்கிட்ட கலந்தாலோசிக்கணும். அதனால அப்பாயிண்ட்மெண்ட் குடுங்க'ன்னு கேட்டேன். அதுக்கு அங்க வரவேற்பறையில இருந்தவங்க,' இந்த மாதிரி இந்த மாதிரி மொத நாளே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது,.. அதனால நாளைக்கு காலேல போன் செய்யுங்க'ன்னு சொன்னாங்க.

அதேமாதிரி மறு நாள் காலேல போன் செஞ்சப்ப, 'டாக்டர் மத்தியானம் ஒருமணிக்குத்தான் வருவாரு,.. உங்களுக்கு ரெண்டுமணிக்கு அப்பாயிண்ட்மெண்டு கொடுத்திருக்கேன்'னு சொன்னாங்க. சரீன்னுட்டு 'நோயாளியோட பேரை எழுதிக்கோங்க'ன்னுட்டு பையரோட பேரைச்சொன்னேன். 'பரவால்லைங்க.. நீங்க மத்தியானம் வரச்சே வரவேற்புப்பிரிவுல வந்து பேரைச்சொன்னாப்போதும்'ன்னாங்க. அவங்க சொன்னதை நம்ம்ம்ம்பி மெத்தனமா இருந்துட்டேன்.

மத்தியானமா, குறிச்ச நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னாடியே கிளம்புனோம். ஆக்சுவலி அந்த ஆசுத்திரிக்கு பதினஞ்சு நிமிஷத்துலயே போயிடலாம். ஆனா, ஆசுத்திரிக்கும், பஸ் நிலையத்துக்கும் நடுவால இருக்கற ரோட்டுல பாலம் கட்டுற வேலை நடக்குது. அதனால, ஊரெல்லாம் ஊர்கோலம் போயித்தான் சேரணும். அங்க போனா, மூணாவது மாடிக்கு போங்கன்னாங்க. அங்க போயி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா காத்திருந்தோம். ஒவ்வொரு காமணி நேரத்துக்கொருக்கா, சிஸ்டர் கிட்ட டாக்டர் வந்தாச்சான்னு கேக்கறதும், இப்ப வந்துடுவார்ன்னு அவங்க பதில் சொல்றதும், இடையிடையே, எதுக்காப்ல இருந்த வார்டுகள்ல இருக்கற குட்டிக்குட்டி பேஷண்டுகளை வேடிக்கை பார்க்கறதுமா இருந்தோம்.

கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சதும்,   டவுட்டு வந்து தலைல தட்டுச்சு. தடவிவிட்டுக்கிட்டு, மறுபடி வரவேற்புப்பிரிவுல வந்து 'டாக்டர் எப்போங்க வருவாரு.. குறைஞ்சபட்சம் அவருக்காவது போன் செஞ்சு கேளுங்களேன்'னு ஐடியா கொடுத்தேன்.. (எல்லாம் நேரம்... அவங்க வேலையையும் நாமளே பாக்க வேண்டியிருக்கு!!..). போன் செஞ்சு கேட்டவங்க, அப்படியொரு குண்டைத்தூக்கிப்போடுவாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.

விஷயம் என்னான்னா,.. அன்னிக்கு காலைல டியூட்டியில இருந்தவங்க,.. நாங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கறதையே டாக்டர்கிட்ட சொல்லாம இருந்திருக்காங்க.உடனே, நானே நேரடியா டாக்டர்கிட்ட பேசி, ரெண்டு நாளைக்கப்புறம் அப்பாயிண்ட்மெண்டை அவர்கிட்டயே உறுதிசெஞ்சுக்கிட்டு, அப்றமா பழைய வரவேற்பாளினியை லேசா டோஸ்விட்டுட்டு வந்தேன்.அவங்க சார்பா இவங்க மன்னிப்பு கேட்டாலும், 'மாஃபி.. இந்தியில எனக்கு புடிக்காத ஒர்ர்ரே வார்த்தை'ன்னுட்டு கிளம்பி வந்துட்டோம்.

அப்றமா, டாக்டர் கிட்ட போயி செக்கப் செஞ்சப்ப, B12ங்கற விட்டமின் குறைபாடு இருக்குமோன்னு தோணுது. எதுக்கும் இரத்தப்பரிசோதனை செஞ்சுடுங்கன்னு எழுதிக்கொடுத்தாரு. அங்க இருக்கற லேபோட லட்சணம் தெரிஞ்சும், இப்பவாவது குறையையெல்லாம் சரிசெஞ்சுருப்பாங்கன்னு நம்ம்பி,.... லேபுக்கு போனா,.. பையரை விட்டுட்டு, ஜாலியா கையைக்கட்டிக்கிட்டு அங்கியும் இங்கியும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கற எங்கிட்ட ஊசியும் கையுமா ரத்தம் எடுக்கவர்றாங்க.. (எனக்கெதிரா உள் நாட்டு சதி நடக்குதோ???) எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரியலை.

 'ஏங்க.. பேஷண்டோட பேரை படிச்சுப்பாக்கமாட்டீங்களா??..பேஷண்ட் யாருன்னுகூட செக் பண்ண மாட்டீங்களா'ன்னு அழாக்குறையா கேட்டேன். தப்பு எம்மேலதானாம்.. நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம். (அது பேஷண்டா இல்லைன்னாக்கூடவா :-))))). ரிப்போர்ட் வந்ததும் போன்செஞ்சு சொல்லுவோம். நீங்க வந்து வாங்கிக்கலாம்ன்னு சொல்லிட்டு போன் நம்பரை அவங்க தப்பா எழுதிக்கிட்டதும், அதை ஒருவாரத்துக்கப்புறம் நான் போனப்ப கண்டுபிடிச்சு டோஸ்விட்டப்ப,.. எங்கிட்டயிருந்து வாங்கிக்கட்டிக்கிட்டதும் இடைச்செருகல் :-))

ஒருவாரத்துக்கப்புறம் ரிப்போர்ட்டை வாங்கிக்கிட்டு, டாக்டர்கிட்ட போனா,.. பி12 குறைச்சலா இருக்கு. இங்கிருக்கற பொதுமருத்துவர்கிட்ட நான் அனுப்பினேன்னு சொல்லி, ரிப்போர்ட்டை காமிங்க, மருந்து கொடுப்பார்ன்னு சொல்லி அனுப்பிவெச்சார். பொதுமருத்துவரும் ஊசிபோடணும்ன்னு சொல்லி, எழுதிக்கொடுத்தார். அங்கிருந்த மருந்தகத்துல சிரிஞ்ச் உட்பட வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதுல விட்டமினோட அளவு குறைச்சலா இருக்குதுன்னுட்டு சிஸ்டரையே சரியான மருந்தை வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்பிவெச்சார். மருந்து மட்டும் போதும்.. புதுசிரிஞ்ச் அவங்களே கொடுப்பாங்கன்னு சொன்னதால நான் வாங்கின சிரிஞ்சை திருப்பிக்கொடுத்தேன். ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே :-))

அடுத்து நடந்ததுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம்..
நான் : "மொத்தம் எவ்ளோங்க ஆச்சு??.."
மருந்தாளுனர் : "104 ரூபா ஆச்சுங்க.."
நான் : (குழப்பத்தோட)"சிரிஞ்சோட விலை எட்டு ரூபாயை இதுல கழிச்சுக்கச்சொன்னேனே.. செய்யலையா ?.."
மருந்தாளுனர் : "அட!.. ஆமால்ல. இதோ கழிச்சுடறேன்... ம்ம்ம் ஆங்... இப்போ, 196 ரூபா தரணும் நீங்க.." (இவரு எந்த ஊர்ல கணக்குப்பாடம் படிச்சார்ன்னு தெரியலியே )

ஊசியே போடவேணாம் போங்க.. :-)))). இத்தனைக்கும் அந்த ஆசுத்திரியில எங்கூரு பெரியதலையின் மருமகள் நிர்வாக இயக்குனர்களில் ஒருத்தரா இருக்காங்க. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கிட்ட இவ்ளோ அலட்சியமா நடந்துக்காம அவங்களுக்கு உதவறது, மருத்துவர்களுக்கு மட்டுமான கடமை இல்லைதானே??. அங்கிருக்கறவங்களுக்கும் அந்தக்கடமை உண்டுதானே!!.. அங்கேயுள்ள லட்சணம் ஓரளவு தெரிஞ்சிருந்தும் அங்கே ஏன் போனீங்கன்னு உங்க அடிமனசுல கேள்விகள் வருதுல்ல.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதில்லையா,.. அதேமாதிரி அங்கேயுள்ள டாக்டர்கள் நல்லபடியாத்தான் சேவை செய்யறாங்க. இந்த பரிவார தேவதைகள்தான் இப்படி :-))

Thursday 21 July 2011

சேவை செய்யறவங்களுக்கொரு சேவை..

( நன்றி- இணையம்)

"ட்ராபிக் ஜாம் ஆனா என்ன செய்யணும்.."
"ப்ரெட் வாங்கிட்டு வந்து அதுல தடவி, சாப்பிடணும்.."

ஜோக்குக்காக சொல்லப்பட்டாலும், மாநகரங்கள்ல போக்குவரத்து நெரிசல்ல, அதுவும் சிக்னல் இல்லாத இடங்கள்ல மாட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே.. அப்பப்பா!!!.. இஞ்ச் இஞ்சா ஊர்ற வாகனங்கள்ல இருந்துக்கிட்டு போக்குவரத்து காவலர்களை கரிச்சுக்கொட்டுவோம். (இங்கே சிலசமயங்கள்ல காவலர்கள் இல்லாத நேரங்கள்ல நெரிசல் இல்லாம அழகா வாகனங்கள் தானே வழி ஏற்படுத்திக்கிட்டு போறதும், காவலர் ஒழுங்கு படுத்துற நேரங்கள்ல நெரிசல் ஏற்படறதும் விந்தையான ஒண்ணுதான் :-))

ஆனா, அவங்கல்லாம் வெப்ப நிலை மாறுபாடுகளையும், இரவு பகல்களையும் பொருட்படுத்தாம நடுரோட்டுல தூசுதும்புகளுக்கு மத்தியிலும், வாகனப்புகை ஏற்படுத்தும் மாசுகளுக்கு மத்தியிலும் வேலை பார்க்கறதை எத்தனை பேரு ஊன்றிக்கவனிச்சிருப்போம். அதான் 'சம்பளம்' வாங்கறாங்கல்லன்னு மனசாட்சி முனகுனாலும், அது வாய்ல ப்ளாஸ்டரை ஒட்டிவெச்சுட்டு எத்தனை பேரு யோசிச்சிருப்போம்.. நான் உட்பட :-))

ஆனா, செம்பூரைச்சேர்ந்த சூரஜ் ஷா, கொளுத்தும் வெய்யில்ல போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, சரியாகிறதுக்காக காத்திருந்தப்ப இதை யோசிச்சார். அதன் பலனா உருவானதுதான் 'வெப்பத்தை முறியடிப்போம்'ங்கற அமைப்பு. மும்பை ஃப்லிம்சிட்டியின் Rotaract க்ளப்பின் தலைவரான ஷா,.. போக்குவரத்து காவலர்களைப்பத்தி மட்டும் யோசிக்காம, வெய்யில்ல இறங்கி வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கற மத்த தொழிலாளர்களான, தெருக்கூட்டும் துப்புரவாளர்கள், ரயில்வே ஸ்டேஷன்கள்ல வேலை செய்யற துப்புரவுத்தொழிலாளிகள், ரோடு போடுறவங்க, பஸ் ட்ரைவர்+கண்டக்டர்கள்ன்னு எல்லோரையும் பத்தி யோசிச்சதுதான் அற்புதமான விஷயம்.

அவங்களுக்கெல்லாம்,.. தன்னோட அமைப்புல உள்ளவங்களையும் கூட்டு சேர்த்துக்கிட்டு, குடிநீர், சிற்றுண்டிகள், எலுமிச்சை ஜூஸ்ன்னு விளம்பி சந்தோஷப்படுத்தியிருக்கார். கொஞ்சமா வெய்யிலும் வெப்பமும் கூடுதலானாலே நாமெல்லாம் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ள தஞ்சமாயிடறோம். போக்குவரத்து நெரிசல்ல சிக்கிக்கிட்டாக்கூட வாகனங்களோட குளிர்சாதன வசதியை சட்ன்னு உபயோகிக்க ஆரம்பிச்சுடறோம்.

அப்படியிருக்க அவஸ்தைகளையெல்லாம் தாங்கிக்கிட்டு, பொது நலத்தோட நமக்காக உழைக்கிற அவங்களுக்கு இந்த சின்ன உதவியை செஞ்சா தப்பேயில்லை. இப்போதைக்கு தெற்கு மும்பை மற்றும் புற நகர்களின் சிலபகுதிகள்ல மட்டும் ஆரம்பிச்சிருக்கற இந்தத்திட்டம் அடுத்த கோடையில் இன்னும் விரிவாக்கப்படலாம்ன்னு சொல்றாங்க...

முக்கியமா போக்குவரத்து காவலர்களுக்காகவே அரசாங்கத்தோட சார்பா ஸ்பெஷலா, இன்னொரு திட்டமும் கொண்டுவரப்பட்டிருக்கு. சென்ற மழைக்காலத்துல பதினஞ்சு ஆப்பீசர்களுக்கு 'லெப்டோஸ்பைரோசிஸ்'ன்னு சொல்லப்படற ஒருவகைக்காய்ச்சல் வந்துருக்கு. இது தேங்கி நிற்கிற மழைத்தண்ணீர்ல விலங்குகளோட கழிவுகள் கலக்கறதுனால பெருகும் 'லெப்டோஸ்பைரோ'ங்கற ஒருவகைக்கிருமியினால வருது. ரோட்டுல அந்தத்தண்ணியில நின்னு வேலை பார்க்கிறதால அவங்களை இந்தக்காய்ச்சல் தாக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த மழைக்காலத்துலயும் இதுமாதிரி வராம இருக்கறதுக்காக போக்குவரத்துத்துறை அவங்களுக்காக முழங்கால் வரைக்கும் உயரமுள்ள கம்பூட்ஸ்களையும், மருந்துகளையும் ஏற்பாடு செஞ்சுருக்காங்களாம். கொட்டற மழையிலும் நடுரோட்டுல வெள்ளத்துல நின்னு கடமையைச்செய்யற அவங்களுக்கு செய்யப்படும் இந்த வசதிகள் பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். அப்படியே வெள்ளத்தால கஷ்டப்படும் பொதுமக்களையும் அரசாங்கம் கொஞ்சம் கவனிச்சா தேவலைன்னு ஒரு நினைப்பு மனசோரத்துல எட்டிப்பார்க்கறதை தவிர்க்க முடியலை...

Tuesday 19 July 2011

எதிர்பாராத வேளையில்..

'க்ணிங்..க்ணிங்..' என்ற மணிச்சத்தத்தோடு சைக்கிளை வாசலில் நிறுத்திய தபால்காரர், சைக்கிளில் இருந்தபடியே தபாலை வீட்டுக்குள் விசிறிவிட்டுப்போனார்.

நாற்காலியில் அமர்ந்தபடி நகம் வெட்டிக்கொண்டிருந்த நாராயணனுக்கு லேசான மேல்பார்வையிலேயே.. தபால் எங்கிருந்து வந்திருக்கிறதென்று புரிந்துபோனது. 'அப்பா கவனிக்காமல் இருக்கவேண்டுமே!!..' என்ற வேண்டுதலுடன் அந்த கவரை எடுக்க குனிந்தான். முதுகைத்துளைத்த பார்வையை உணர்ந்து ஓரக்கண்ணால் பக்கவாட்டிலேயே லேசாக தலையை திருப்பினான். எதிர்பார்த்ததுபோல, செய்தித்தாளை லேசாக தாழ்த்தி அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா.

அவன் பார்த்ததும் லேசாக புன்னகைத்தார். சட்டென தபாலை பிரிப்பதுபோல பாவனை செய்துகொண்டே தன்னுடைய அறைக்கு நகர்ந்துவிட்டான்.. ' இதுவும் திரும்பிவந்துடுச்சா??...' அவருடைய பார்வைக்கு இதுதான் அர்த்தம். பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். கதை, கவிதை, கட்டுரைகள் என்று ஏதாவது அனுப்பிக்கொண்டேயிருப்பான். அவர்களும் சளைக்காமல், 'பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற ஒற்றைவரியில் அவனுடைய கனவுகளை சுக்கு நூறாக தகர்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆயினும், என்றாவது ஒரு நாள் தன்னுடைய படைப்புகளும் பத்திரிகைகளில் வெளியாகும் என்று நம்பினான். நம்பிக்கைதானே வாழ்க்கை??.. அவனுடைய அப்பாவுக்கோ இதெல்லாம் வெட்டியாக செய்யும் காரியமாக பட்டது.  எதையாவது எழுதி எழுதி, சரியாக வரவில்லையென்றால் கசக்கிவீசும் காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் கொலைசெய்யப்பட்டனவோ?.. சாப்பாட்டில் கவனமில்லாமல், எதையாவது யோசித்துக்கொண்டு சோற்றை அளைந்துகொண்டிருப்பான். கேட்டால் அவன் சொல்லும் பதில்..,'நல்ல ஒரு தாட் வரும்போது கட் பண்ணாதீங்க'

அப்பாவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆரம்பத்தில் அவர் ஊக்குவிக்கத்தான் செய்தார், ஆனால் நடைமுறை வாழ்க்கையையும் கவனிக்கவேண்டும் என்ற நடைமுறை தெரிந்தவர் அவர். அதனால், பையனின் கனவு நனவாக வேண்டுமென்று விரும்பினாலும், வெளிப்பார்வைக்கு கிண்டலும் கேலியும் செய்துகொண்டேயிருப்பார். அப்படியான ஒரு நேரத்தில்தான் அவனிடம் கேட்டார்.

"சரி!!... உன்னோட படைப்புகள் பத்திரிக்கையில் வெளியாகுதுன்னே வெச்சுக்குவோம். வர்ற சன்மானத்தில் எனக்கென்ன வாங்கிக்கொடுப்பே.."

"உங்களுக்கு என்னவேணும்ன்னு மொதல்ல சொல்லுங்க. வாங்குறதை அப்புறம் பார்ப்போம்"

"ம்ம்.... வேற ஒண்ணும் வேணாம். எனக்கு ஒரு சால்வை வாங்கிக்கொடு. அப்புறம் இந்தத்தெருவுல இருக்கிறவங்களுக்கெல்லாம் ஸ்வீட்டும் கொடு,.. எம்பையன் ஒரு படைப்பாளின்னு பெருமையா சொல்லிப்பேன்.. அதுபோதும் எனக்கு"

"கொடுக்கிறேனா.. இல்லியான்னு பாருங்க"

வழக்கம்போல சிரித்துக்கொண்டார். அப்படிப்பட்ட அப்பா இறந்துவிட்டதாகத்தான் ஆபீசுக்கு, வீட்டிலிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. அலறியடித்துக்கொண்டு ஓடினான். அவன் வீட்டுக்குள் நுழையும்போதே அழுகுரல் அவனை வரவேற்றது.

ஆபீசிலிருந்து அவன் சாயந்திரம் வீட்டுக்குள் நுழையும்போது, 'வாடா... கைகால் கழுவிட்டு வா.. காப்பி சாப்பிடலாம்' என்று வரவேற்கும் அப்பா... அறைக்குள் அவன் இறைத்துவிட்டுப்போன புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் ஒழுங்குபடுத்தி வைக்கும் அப்பா.. ஆயிரம்தான் கிண்டல் செய்தாலும், மகனுடைய வாசிப்பிற்காக தேடித்தேடி புத்தகங்கள் வாங்கிக்கொடுத்த அப்பா... இப்போது அவன் வீட்டுக்குள் வந்ததே தெரியாமல் படுத்துக்கிடந்தார். எப்பொழுதும் வரவேற்கும் வாய் இன்று ஏனோ ஊமையாகிவிட்டிருந்தது.

எவ்வளவு நேரம் அப்பாவின் பக்கத்தில் அவர்முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் என்று நினைவில்லை. முகத்தையும் கண்ணீரையும் ஒருங்கே துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், கைப்பையை வைப்பதற்காக தன்னுடைய அறைக்கு சென்றான். மேசையின்மேல் வைக்கும்போதுதான் காற்றில் பறந்துவிடாமலிருக்க பேனாஸ்டாண்ட் மேலே வைக்கப்பட்டிருந்த அந்த தபாலை பார்த்தான். வழக்கம்போலத்தான் இருக்கும் என்ற அசிரத்தையும், அப்போது அவனிருந்த மனநிலையும் ஒருசேர, கவரை கையிலேயே வைத்துக்கொண்டு நின்றான். பின் தன்னையறியாமலேயே மெதுவாக பிரித்து, உள்ளிருந்த கடிதத்தை படித்தவன் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஐநூறு ரூபாய்க்கான காசோலை நழுவி கீழேவிழுந்தது.

அன்றைக்கு அவன் நடந்துகொண்டதை பார்த்தவர்கள் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நம்பினார்கள். இறந்த தகப்பனுக்கு சால்வை போர்த்தியதுகூட அவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், அழுதுகொண்டே வீடுவீடாக சென்று இனிப்புகொடுத்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்... அவன் பைத்தியமா??.....

டிஸ்கி: இந்தக்கதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி..



Thursday 14 July 2011

1+1=22

வழக்கம்போல இந்த வருஷமும், இந்த நாளை மறந்ததுபோல நடிச்சு, சர்ப்ரைஸா பாதுஷாவும் கையுமா மத்தியானமே வந்து நின்ன ரங்க்ஸுக்கு சர்ப்ரைஸா நானும் ட்ரீட் கொடுத்தேன்... (நேத்திய மும்பை கோரத்தால விஸ்தாரமா கொண்டாட மனசு வரலை.. இன்னிக்கும் ரங்க்ஸ் வீட்டுக்கு வந்து சேர்றவரைக்கும் மனசுக்குள்ள பக்.. பக்ன்னு இருந்தது)

உங்க எல்லோருக்காகவும் விருந்து ரெடி செஞ்சுருக்கேன். இருந்து சாப்பிட்டுட்டு மறக்காம மொய்யெழுதிட்டுத்தான் போகணும் :-)))



Monday 4 July 2011

இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..



கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.

இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி,  போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.

படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.

3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.  ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.

வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.

முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.

 'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.

 "வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.

இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."

"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.

 'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம்,  அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,...  'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.

 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...




LinkWithin

Related Posts with Thumbnails