Saturday 29 December 2012

நட்சத்திரங்களின் வழிநடத்தல்..

காரியங்களைச் சாதித்துக் கொள்ளும்போது மட்டுமல்ல எல்லாப் பொழுதுகளிலும் செலுத்தப்படுவதே அன்பு.

வலியைவிட வலிக்குமே என்ற உணர்வுதான் அதிகமான வலியைத்தருகிறது.

இராக்கால ஒற்றையடிப்பாதையாயினும் நட்சத்திரங்களின் கீற்றொளியே போதுமானதாகி விடுகிறது தன்னம்பிக்கை உடையவனுக்கு.

நாம் தேர்ந்தெடுப்பவையும் நம்மைத்தேர்ந்தெடுப்பவையும் நம் வாழ்வின் போக்கைத் தேர்ந்தெடுக்கின்றன.

சினம் ஒரு நெருப்பு என்பது பேருண்மை என்று ஒத்துக்கொள்கிறோம், சூடு பட்டபின்.

ஏதாவதொரு நல்ல நோக்கத்துடன் வாழ்ந்து அதில் வெற்றியடைவதே நம் வாழ்வியல் நோக்கமாக இருக்கட்டும்.

கையிலிருப்பதை விட கை நழுவிச்சென்று விட்டவற்றைப்பற்றியே வருத்தப்பட்டு, இறுதியில் இருப்பதுவும் நழுவுவதை அறியாதவர்களாகிறோம்.

சின்னப்பூக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் பூங்கொத்தாய் மணக்கிறது வாழ்க்கை சின்னச்சின்ன முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் சந்தோஷங்களால்.

ஆடிக்கொண்டேயிருக்கிறது தராசுமுள் சில சமயங்களில், மனசாட்சிக்கும் செயலுக்கும் இடையில்.

நம்மை மீறிச்சென்று விட்ட விஷயங்களைப்பற்றி வீணே கவலைப்படுவதை விட அதை எவ்விதத்திலாவது சரி செய்ய இயலுமாவென்று முயலுவது மேலானது.

Thursday 27 December 2012

முத்தான மூன்று..

நேற்றுத்தான் ஆரம்பித்தது போலிருக்கிறது. அதற்குள் மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ப்ளாக் எழுத ஆரம்பித்து. புத்தாண்டையும் ஏசுபிரான் பிறந்தநாளையும் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்ல. என் ப்ளாகுக்கும் இது கொண்டாட்டக் காலம்தான் :-) ஆகவே கேக் எடுங்கள்.. கொண்டாடுங்கள் :-))
பேஸ்புக்கில் நண்பர் மெர்வின் அன்டோ நடத்தி வரும் புகைப்படப் பிரியன் குழுவில் வாராவாரம் நடக்கும் போட்டிகளில் "ரயில் மற்றும் ரயில் பயணங்கள்" என்ற தலைப்பில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தப்படம் முத்துகள் பத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதமிருமுறை வெளிவரும் இன் அண்ட் அவுட் சென்னை இதழில் நான் எழுதிய அட்சிங்கு.. என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழாளர்களுக்கு என் நன்றி உரித்தாகுக..
கேக்கைச் சுவைத்துக்கொண்டே ரயிலில் அமர்ந்து சிறுகதையை வாசியுங்கள் :-))

இத்தனை வருடங்களாக என் எழுத்தை வாசித்துப் பின்னூட்டி உற்சாகமும் ஆதரவும் கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday 20 December 2012

ஒன்றும் ஆயிரமும்..


'சும்மா ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்'என்று சொல்லி ஆரம்பிப்பவர்கள் ஒரு பேருரையையே நிகழ்த்தி விடுகிறார்கள்.

கனிகளைத் தராத மரத்தைக் கடிந்து கொள்கிறோம், அதன் வேரில் வெந்நீரை ஊற்றி விட்டு.

பிறர் நம்மீதோ நாம் பிறர் மீதோ வைத்திருக்கும் முழுநம்பிக்கையை இழக்க ஒரு நொடி போதும். அதை மீண்டும் பெறுவதற்கோ ஒரு பிறவி கூடப் போதாமலாகி விடுகிறது சில சமயங்களில்.

பகையை வளர்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் முறிக்க  சகிப்புத்தன்மையுடன் கூடிய விட்டுக்கொடுத்தல் எனும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.

எதிரிகளாக இருப்பவர்கள் திடீரென்று புகழ ஆரம்பிப்பதும், நண்பர்களாக இருப்பவர்கள் காரணமில்லாமல் விலக ஆரம்பிப்பதும் அதற்குப்பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று யோசிக்கத்தூண்டுகிறது.

வாதத்தை விட விதண்டாவாதத்தையே பலரும் பிறரைப் பணியச்செய்யும் வழியாகக் கைக்கொள்கின்றனர்.

கடந்தகாலக் கசப்புகளை மறக்க முயல்வதே எதிர்கால சந்தோஷங்களுக்கான திறவுகோல்.

ஒருவரின் தவறை மன்னிக்கிறோமென்றால் அத்தவறை முழுவதுமாக மறந்தும் விடுவதே நல்லது.

பொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டு வெறும்பெட்டியைக் காவல் காக்கிறோம் பல சமயங்களில்.

சொல்வதைவிட ஏற்று நடப்பதுதான் கடினமாக இருக்கிறது அறிவுரைகளைப் பொறுத்தமட்டில்.

Monday 17 December 2012

“ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..”


குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு நிரந்தர வீட்டை விட்டு தற்காலிகக் குடியிருப்பு தேடிய போது, இந்த வீட்டைப் பார்த்ததுமே பிடித்துப்போனதற்கு ஹாலுக்கப்பால் புல்வெளி, புல்வெளிக்கப்பால் மரம், செடி, கொடிகள், பறவைகள் மண்டிக்கிடந்த மனை, மனைக்கப்பால் காற்றின் வழியைத் தடைசெய்யாத உயரம் குறைந்த குடியிருப்புகள், குடியிருப்புகளுக்கப்பால் பாலருவி வழிந்து கொண்டிருந்த மரகதமலையும் ஒரு காரணம். கோடைக்காலத்தில் மரகதத்தை அடகு வைத்து விட்டு மூளியாய் நின்றிருக்கும் மலைக்கு, வருணக்கணவன் வந்ததும் அதை மீட்டுக் கொடுப்பது வருடாவருடம் நடக்கும் கூத்து.

தினமும் காலையில் பல குரல்களில் பாடித் திருப்பள்ளியெழுப்பும் பறவைகள் கூட்டம். குடியிருப்பின் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் நேரத்துக்குக் கரெக்டாக அந்தப்பக்கம் வந்து ஆஜர் கொடுக்கும் மைனாக்களைக்கண்டதும் சீனியர்களைக்கண்ட ஜூனியர்களைப்போல் அலறியடித்துக்கொண்டு புறாக்கள் இந்தப்பக்கம் பறந்து விடும். தண்ணீரில் விளையாட வரும் குருவிகள், தென்னை மரக்கிளையில் அமர்த்தலாக உட்கார்ந்து கொண்டு ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் காகங்கள் என்று லூட்டிக்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் அடிக்கும் கொட்டத்தினிடையே பக்கத்துக்குடியிருப்பிலிருந்து கூண்டுக்கிளியொன்றின் கதறல் ஒலியும் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்.
கம்பிகளுக்கப்பால்..
இப்படியான ஒரு காலைப்பொழுதில்தான் டுவ்வீக்.. டுவ்வீக்.. என்றொரு வித்தியாசமான பறவைக்குரல். எங்கிருந்து வருகிறதென்று அனுமானிக்க முடியவில்லை. அதேசமயம், பக்கத்து மனையில் மண்டிக்கிடந்த புதரில் ஆங்காங்கே அசைவுகள், திடீரென ஒரு சின்னஞ்சிறிய உருவத்தின் தாவல்கள் தென்பட்டன. ஒன்று.. இரண்டு.. நாலைந்து ஜோடிகள் இருக்கலாம். அன்று முழுவதும் காத்திருந்தும் தரிசனம் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் சென்றிருக்கலாம். சோம்பலான ஒரு மதிய வேளை. எதேச்சையாக வெளியே பார்த்தால் குடியிருப்பின் காம்பவுண்டுச்சுவரில் குருவிக்கூட்டம் ஒன்று உட்கார்ந்திருந்தது. உட்கார்ந்திருந்தது என்றா சொன்னேன்?. ஒரு நிமிஷம் கூட சேர்ந்தாற்போல் உட்காரவில்லை. அங்குமிங்கும் தாவுவதும், தள்ளிப்போய் உட்கார்ந்திருக்கும் தன்னுடைய இணையின் அருகே போய் உட்கார்ந்து கொள்வதும், யாராவது வருவதுபோல் தெரிந்தால், சட்டென மதிலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆமணக்குச் செடியின் இலை மறைவில் மறைந்து கொள்வதுமாக ஒரே சேட்டை. பார்த்தால் சாதாரணக் குருவிகள் மாதிரியும் தெரியவில்லை. தலைக்குக் கறுப்புத்தொப்பி வேறு போட்டுக்கொண்டிருந்தன. வீட்டிலிருந்து கீழிறங்கிப்போய்ப் பார்ப்பதற்குள் பறந்தாலும் பறந்து விடும். எடு காமிராவை. ஜும் செய்து பார்த்தால்… ஹைய்யோ!!. “புல்புல்”. சமீப வருடங்களில் பார்த்ததில்லை. இந்த வருடம்தான் புதுவரவு போலிருக்கிறது.
அடித்த காற்றில் ஃபோகஸ் பறந்துவிட்டது. பொறுத்தருள்க :-)
சில நாட்கள் பொறுமையாகக் கவனித்ததில் தினமும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. ஒரு நாள் கொஞ்சம் அரிசி மணிகளைக்கொண்டு போய் அவைகள் வழக்கமாக உட்காருமிடத்தில் போட்டு விட்டுக் கொஞ்சம் தள்ளிப்போய் காமிராவுடன் நின்று கொண்டேன். வந்து உட்கார்ந்தவை சுதாரிக்குமுன் சுட்டுத்தள்ளினேன்.

புல்புல்கள் அந்த மனைக்குக் கிட்டத்தட்ட பட்டா போடாத சொந்தக்காரர்கள் ஆகிவிட்டன என்றே சொல்லலாம். குடியும் குடித்தனமுமாக சொந்தபந்தம் சூழ வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி விழுந்தாலும் போதும். சட்டென ஆமணக்கு இலைக்குடைக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ளும். மழை விட்டதும் வெளியே வந்து சுவரில் உட்கார்ந்து பொழுதைப்போக்கும். ரொம்பவே கூச்சசுபாவமுடையவை. கொஞ்சம் தொலைவில் ஆள் நடமாட்டம் தெரிந்தாலே “புடிக்க வர்றாங்க.. ஓடிக்கோ” என்பதுபோல் சரேலென்று மறைந்து விடும். மழைக்காலத்தைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தன. காலையிலும் மாலையிலும் வழக்கமான நேரத்தில் வந்து விடுவார்கள். வந்து விட்டேன் என்று அறிவிப்பதைப்போல் “டுவீக்..டுவீக்” என்று குரலெழுப்பிக்கொண்டே தோட்டம் முழுக்கச் சுற்றிப் பார்வையிட்டு விட்டு, அரைமணி நேரம்போல் விளையாடிவிட்டுச் சென்று விடுவார்கள்.
படம் மீள்பதிவு :-)
மழைக்காலம் முடிந்து பச்சைப்பசேல் புற்களெல்லாம் காய்ந்து காவி அணியத்துவங்கியிருந்த சமயம். தினமும் இரவில் காய்ந்த புற்களைத் தீக்குத்தின்னக்கொடுக்கும் படலம் ஆரம்பமாகியிருந்தது. இதுவும் வருடாவருடம் நடப்பதுதான். அதன்பின் இயந்திரங்களைக்கொண்டு வந்து ஓரளவு செடி செத்தைகளையெல்லாம் அகற்றி, தரையைச் சமன்படுத்துவார்கள் எதிரிலிருக்கும் திருமண மண்டபத்துக்காரர்கள். இல்லாவிட்டால் திருமணத்திற்கு வருபவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவதாம்? கோடிக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய இடத்தை உரிமையாளர் சும்மா போட்டு வைப்பாரா என்ன?

இந்த அலங்காரங்களெல்லாம் முடிந்த ஒரு சாயந்திர வேளை. வழக்கம்போல் விசிட்டுக்கு வந்த புல்புல் வித்தியாசத்தை உணர்ந்து திணறியது.. தடுமாறியது. “கிணத்தைக் காணோம்..” என்று கூப்பாடு போட்ட வடிவேலுவைப்போல் “ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..” என்று அதன் மொழியில் டுவ்வீக்.. டுவ்வீக் என்று அலறியபடியே சுவரில், ஒரு காலத்தில் அதன் இருப்பிடமாயிருந்த ஆமணக்குச்செடியின் மொட்டைக்கொம்புகளில், அருகிருந்த மரக்கிளையில் என்று தாவித்தாவி அமர்ந்து அலைபாய்ந்தது. அந்த இடத்தின் மேலாகப் பறந்து பறந்து தேடியது. பின் சென்று விட்டது.

குடியிருக்கும் வீட்டைப் பறிகொடுப்பதைப் போன்ற துயரம் எதுவுமே கிடையாது. நம்முடைய சுகங்கள், துக்கங்கள், வறுமை, சந்தோஷம், செல்வச்செழிப்பு எல்லாவற்றையுமே தனதாக்கிக்கொள்ளும் ஒரு நட்பு அது. செங்கல் சிமெண்டுடன் நம் உயிரையும் சேர்த்தல்லவா பிணைத்துக்கொண்டு அது நிற்கிறது. ‘எது இருக்கிறதோ இல்லையோ தலைக்கு மேல் சொந்தமாக ஒரு கூரை இருந்தால் அதுவே போதும்’ என்பதே நிறையப்பேரின் தாரகமந்திரமாகவும் இருக்கிறது என்பதற்குப் பெருகி வரும் வீட்டு விளம்பரங்களே சாட்சி. குடியிருந்த குடிசையைத் தீவிபத்தில் தொலைத்து விட்டு ஓரிரவில் நடுத்தெருவுக்கு வரும் மக்களின் துயரமோ சொல்லவொண்ணாதது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனக்கென்று ஓர் கூரை இருக்கிறதென்ற நிறைவுதானே மனிதனை அத்தனையையும் தாங்கச்செய்து, நிம்மதியான உறக்கத்தை இரவில் பரிசளிக்கிறது.

அதன்பின் இரண்டொரு நாட்கள் காலையிலும் மாலையிலும் பக்கத்து மனையில் டுவ்வீக்.. டுவ்வீக் என்ற கதறல் கேட்டபடியே இருந்தது. தன்னுடைய இருப்பிடம் மறுபடியும் கிடைத்துவிடுமென்ற நப்பாசையில் வந்திருக்குமோ என்னவோ. அதன்பின் காணாமலே போயிற்று.

ஒரு நாள் சாயந்திரம் அந்தக்காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தன மீசை முளைத்த சில இளம்பறவைகள்..

Friday 7 December 2012

இது அவங்க ஏரியா..

சாப்பிடவும் ஒலி எழுப்பவும் வாய் இருந்தாலும், மனிதர்களைப்போல் பேச முடியாத காரணத்தினாலேயே விலங்குகளை வாயில்லாப்பிராணிகள் என்று குறிப்பிடுகிறோம். மனிதர்களிலும் கூட மனதில் நினைப்பதை வெளியே கூறும் துணிச்சல் இல்லாதவர்களையும் அந்தப்பெயரிலேயே அழைப்பது வேறு விஷயம் :-)

மனிதனை விட விலங்குகள் என்னதான் புத்தி கூர்மையானவை என்று சொல்லப்பட்டாலும் மனிதன் தந்திரமாக அவைகளையெல்லாம் அடக்கி ஆண்டு விடுகிறான். ஒரு மரத்தையே முறித்துப்போடும் வலிமையுள்ள யானை ஒரு சிறு இரும்புச்சங்கிலிக்குக் கட்டுப்பட்டு ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தும் கொடுமையே இதற்குச் சான்று.

கண்ணில் அகப்பட்ட ஒரு சில மிருகங்களை இங்கே கட்டிப்போடாமல் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறேன். அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசியுங்கள். அனுமதிக்கட்டணம் கிடையாது :-)

இன்னிக்காவது வாழைப்பழமும் தேங்காயும் கிடைக்குமா?
ரெண்டு செகண்டுதான் அசையாமல் நிற்பேன். போட்டோ பிடிச்சுக்கோ
அல்லோ.. எச்சூஸ் மீ. இது எங்களுக்கு லஞ்ச் டைம்.
சிந்தனை செய் மனமே.. 

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்ல கலந்துக்கறதுக்கு பயிற்சி எடுத்திட்டிருக்கேன்..
அம்மாவைக்காணோம்.. 
கண்ணா.. முறுக்கு தின்ன ஆசையா :-)
போனி டெயில் இப்ப ஃபாஷன் இல்லையாம். அதான் லூஸ்ல விட்டுட்டேன் :-)
பாவம் போல் ஒரு பார்வை..
அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருக்கறவங்கல்லாம் சட்டுன்னு வாங்க. போலாம் ரைட்ட்ட்..

Tuesday 4 December 2012

மம்மியைப்பார்க்கப்போனோம்..


ஏதோ இப்பவாவது எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்க வேண்டுமென்று தோன்றியதே.. நம்மூருக்கு வந்தவங்களை நாம் போய்ப் பார்க்கவில்லையென்றால் எப்படி? வயதில் நம்மை விட மூத்தவர்களாக இருந்தால் நாம் நேரில் போய்ப்பார்ப்பதுதானே மரியாதை. அதுவும் எங்களையெல்லாம் விட 3000 வருஷம் வயதில் பெரியவர்களாகப் போய் விட்டார்கள். பார்த்து விட்டு வருவோமென்று நானும் பெண்ணும் பெண்ணின் தோழியுமாகக் கிளம்புனோம். :-)
எங்களூர் மியூசியத்தில்தான் இப்போது தற்காலிக வாசம். போன மாதம் அதாவது நவம்பர் 21-ம் தேதியன்று வந்தார்கள். அடுத்த வருஷம் மார்ச் 24-ம் தேதி வரைக்கும்(இந்த டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழிஞ்சுராம இருந்தா) இங்கேதான் ஜாகை. மும்பையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இப்ப இதுவும் சேர்ந்து விட்டது. நாலைந்து மம்மிகளும் கூடவே அவர்களுக்குண்டான பொருட்களுமாக மியூசியத்தின் முதல் மாடியில் நல்லாவே செட்டிலாகி விட்டார்கள்.

வேல்ஸ் மியூசியமென்று முன்னாளிலும் சிவாஜி வஸ்து சங்க்ரஹாலயா என்று இன்னாளிலும் அழைக்கப்படும் இந்த மியூசியத்திற்கு மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது சர்ச் கேட் ரயில் நிலையத்திலிருந்தோ பொடி நடையாகவே போய்ச்சேரலாம். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் இடது கைப்பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் மும்பையின் புகழ் பெற்ற ஃப்ளோரா ஃபவுண்டனுக்கு அடுத்தபடியாக மியூசியத்தின் வாசலில்தான் நம் கால்கள் சென்று நிற்கும். மியூசியத்தைத் தொட்டடுத்துதான் ஜஹாங்கீர் ஆர்ட் காலரி இருக்கிறது.

இந்தக்கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று தனியா ஏதும் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. மியூசியத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக மாணவர்களிடம் 20, பொதுமக்களிடம் 50, வெளி நாட்டினரிடம் 300 ரூபாய்கள் வசூலிக்கிறார்கள். மாணவர்கள் தங்களோட ஐ.டி கார்டை கூடவே கொண்டு வரவேண்டியது அவசியம். நம்ம நாட்டைப்பத்தித் தெரிந்து கொள்ள ஆவலோடு வரும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டே கூடுதல் காசு வசூலிப்பதுதான் கொஞ்சம் இடிக்குது. இவ்ளோ அதிகத் தொகை வசூலித்தால் வருபவர்கள் வாசலோடு போய்விட மாட்டார்களா?.. 

நாம் கொண்டு செல்லும் பைகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து விட்டு, உள்ளே அனுப்புகிறார்கள். தண்ணீர் பாட்டில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. பிடுங்கிப்போட்டுக்கொண்டு டோக்கனைத்தந்து அனுப்புகிறார்கள். 

மியூசியத்தின் முன்பகுதியிலேயே 3D காட்சி நடக்கிறது. உள்ளே இருக்கும் மம்மியை அதன் கட்டுகளைப்பிரிக்காமலேயே சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே, எல்லாம் செய்து அதன் ரகசியங்களைக் கண்டறிந்து நமக்கு விளக்கிச்சொல்கிறார்கள். மம்மியை வைத்திருக்கும் மரப்பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அதன் பெயர், குடும்பத்தகவல்கள் போன்ற எல்லாவற்றையும் கண்டறிந்து விளக்குகிறார்கள். இந்த ஷோவைப் பார்த்து விட்டு அப்புறம் கண்காட்சியைப் பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் மாடியில் மம்மிகள் இருக்கும் இடத்துக்குப் போனதுமே படமெடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் மியூசியத்தில் மற்ற பகுதிகளைச் சுற்றிப்பார்க்கும்போது படம் எடுத்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவுக்கு 20, ஸ்டில் காமிராவுக்கு 200 மற்றும் வீடியோ காமிராவுக்கு 1000 ரூபாய்கள் வசூலிக்கப்படுகிறது. ஃப்ளாஷுக்கும், ட்ரை பாடுக்கும் அனுமதியில்லை. மற்றபடி தாராளமாக வளைத்து வளைத்துச் சுட்டுக்கொள்ளலாம். காமிராவுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியதும் அதை ஒரு நூலில் இணைத்து காமிராவிலேயே கட்டித்தொங்க விட்டு விடுகிறார்கள். மணிக்கட்டிலும் சின்னதாக ஃபோட்டோ பாஸ் என்று எழுதப்பட்ட ஒரு பாண்டேஜைக் கட்டி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரா போட்டோவுக்கு பாஸ் எடுத்துருக்கீங்களா என்று கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லாமல் காமிராவையும் கையையும் பார்த்ததுமே விலகி வழி விடுகிறார்கள்.

மம்மிகளெல்லாம் பாவம்போல் படுத்திருக்கிறார்கள். போரடித்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளக்கூட முடியாதபடி அவர்களது உடம்போடு வாயையும் சேர்த்து துணியால் பொதிந்து வைத்திருக்கிறார்கள்.  :-) மொத்தம் நான்கு மம்மிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுமாக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. மம்மிஃபையிங் என்று சொல்லப்படும் முறையில், மூளையை மூக்கு வழியாக வெளியே இழுக்க உபயோகப்படுத்தப்படும் கருவிகள் முதற்கொண்டு சில ஒரிஜினல்களும் பல மாதிரிகளுமாகப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மம்மிகளெல்லாம் காபினில் சமர்த்தாகப் படுத்துக்கொண்டிருக்க,, காற்றாட வெளியே வந்து படுத்திருந்த, வெறுமே பாண்டேஜ் துணியால் சுற்றப்பட்ட மம்மி ஒன்றை நம் கண்ணெதிரே பார்ப்பது விசித்திரமான அனுபவம்தான். 

இங்கே இருக்கும் மம்மிகள் அனைத்தும் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. பொதுவா இந்தியாவில் ஆங்காங்கே மியூசியங்களில் மம்மிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எகிப்திலிருந்து, அதுவும் பிரமிடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரிஜினல் மம்மிகள் இந்தியாவுக்கு வருவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த வகையில் அதைப்பார்வையிட்ட நாங்களும் வரலாற்றில் இடம் பிடித்தோம்.

இங்கே இருக்கும் மம்மிகளில் “நெஸ்பரனூ”வின் மம்மி குறிப்பிடத்தகுந்தது. இதன் ரகசியங்களைத்தான் பல்வேறு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தப்படம் இணையத்தின் நன்கொடை..
“நெஸ்பரனூவும் அவரது தந்தையும் கார்னாக் கோயிலில் பூசாரிகளாக இருந்தவர்கள். சுமார் ஐம்பது வயதில், அதுவும் ப்ரெயின் ட்யூமர் காரணமாக நெஸ்பரனூ இறந்திருக்கக்கூடும். என்று அறியப்படுகிறது. இந்த மம்மியில் வெகு நாட்களாகக் யாருமறியாமல் இருந்த ஒரு சுவாரஸ்யமான ரகசியம் கண்டறியப்பட்டிருக்கிறது.

பொதுவாக மம்மிகளை அடுத்த உலகத்திற்கான வாழ்க்கைக்காகத் தயார் செய்யும்போது சில பொருட்களையும் மந்திரச்சொற்களையும், மந்திரசக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சில படங்களையும் அதனுடன் வைத்து மூடுவது வழக்கம். இதனுடன் கூடுதலாக நெஸ்பரனூவின் தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு களிமண் கிண்ணம் ஆராய்ச்சியின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை வைக்கும் சம்பிரதாயம் கிடையாதே என்று விவாதித்து அலசும் வேளையில்தான் ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.

அதாவது, உடலைப் பதப்படுத்தும்போது ஒரு விதப் பசையை உடல் முழுக்கப் பூசி விடுவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் மூளையை வெளியே எடுத்தபின் தலைப்பகுதியில் பூசும்போது அதிகப்படியான பசை வழிந்து தேங்குவதற்கு ஏதுவாக தலைக்கடியில் களிமண் கிண்ணம் ஒன்றை வைத்தவர்கள் அதை எடுக்க மறந்து விட்டார்கள். ஞாபகம் வந்து அதை எடுக்க முயற்சித்தபோது அது நன்றாக ஒட்டிகொண்டு விட்டது. இப்போது என்ன செய்வதென்று குழம்பிய அவர்கள், பிறர் தன்னுடைய தப்பைக் கண்டுபிடித்து விடுமுன் மளமளவென்று பாண்டேஜ்களைச் சுற்றி வைத்து விட்டார்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

நாங்கள் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை மணி ஆறு ஆகிவிட்டது. மியூசியம் மூடப்படும் நேரம். அனேகமாக மியூசியம் மொத்தமுமாக அங்கிருந்த கடைசி பத்து ஆட்களில் நாங்களும் அடக்கம். குழந்தைகளுக்கானால் இன்னும் பார்த்துத்தீரவில்லை. அந்த அரையிருட்டுச் சூழ்நிலையில் வெறுமே பாண்டேஜால் சுற்றப்பட்ட அந்த மம்மி, லேசானதொரு அமானுஷ்ய உணர்வைத்தூண்டியதென்னவோ நிஜம். 

“நாம உள்ளே இருக்கறதைக் கவனிக்காம வெச்சுப்பூட்டிட்டுப் போயிட்டாங்க, ராத்திரியானதும் மம்மிகளுக்கெல்லாம் உயிர் வந்துருதுன்னு வெச்சுக்குவோம். என்னவாகும்?” என்று ஒரு பிட்டைப்போட்டேன்.

“என்னாகும்,.. அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.”ன்னு கோரசா பதில் வந்தது. நிறைய இடுகைகளுக்கு ஐடியா கிடைக்கும் போலிருக்கே :-)

Thursday 29 November 2012

திருவிளக்கிற்கோர் பண்டிகை திருக்கார்த்திகை..


ஐப்பசி மாதம் அமாவாசை கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை வரும்போதே, கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படும் திருக்கார்த்திகைப் பண்டிகைக்கான உற்சாகமான மனநிலையையையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். இரண்டு பண்டிகைகளுக்கும் இடையே குறைந்த அளவே கால இடைவெளி இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். முன்பெல்லாம் தீபாவளிக்கு வாங்கி வெடித்து முடியாமல் மீதம் வந்த மத்தாப்பு, வெடிகளை திருக்கார்த்திகை சமயம் காலி செய்தது போய், இப்போதெல்லாம் தீபாவளிக்குப் பட்டாசு வாங்கும்போதே இதற்கும் சேர்த்து வாங்கும் காலமாகி விட்டது.
கொண்டாடப்படும் விதத்திலிருந்து, நைவேத்தியம் வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கும். பனைமரத்துண்டால் கட்டப்பட்ட கம்பத்தில் பனைமரத்தின் ஓலைகளைக் கொண்டு வந்து மேலிருந்து கீழ்வரை வரிசையாக அடுக்கிக்,கோபுரம் போல் கட்டி விடுவார்கள். தீபாராதனை ஆனதும் சொக்கப்பனை கொளுத்தப்படும். இதன் சாம்பலையும், பாதி எரிந்த ஓலைத்துண்டுகளையும் பிரசாதமாக வீட்டுக்குக் கொண்டு போவார்கள். அந்த ஓலைத்துண்டை வயலில் நட்டு வைத்தால் விளைச்சல் அதிகமாகக் கிடைக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. சின்ன வயதில் பாட்டியின் ஊரில் ஒருதடவை சொக்கப்பனை முதலும் கடைசியுமாகக் காணக் கிடைத்தது.

திருக்கார்த்திகைக்கு தமிழ் நாட்டின் சில ஊர்களில் கார்த்திகைப்பொரி செய்யப்படும். ஆனால், நாஞ்சில் நாட்டில் தெரளியப்பமும், இலையப்பமும்தான் அதிகம் செய்யப்படும். பிரிஞ்சி இலை என்று சொல்லப்படும் கிராம்பு இலையைத்தான் நாங்கள் தெரளி இலை என்று சொல்லுவோம். சுற்று வட்டாரங்களிலிருந்து ஃப்ரெஷ்ஷாக முதல் நாளே பச்சைப்பசேலென்று கொத்துக்கொத்தாக வந்து இறங்கி விடும். மும்பையில் அதற்கு வழி கிடையாது, ஆகவே சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது கொண்டு வந்திருந்த இலைகளை, அதெல்லாம் காய்ந்து விட்டாலும்கூட பத்திரப்படுத்தி வைத்து, உபயோகப்படுத்த வேண்டியதாயிற்று. பண்டிகையன்று ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறப்போட்டால் ஃப்ரெஷ் இலை ரெடி. வாசனையும் பரவாயில்லை. மரத்திலிருந்து பறித்தவுடன் விற்பனைக்கு வரும் அந்த இலையின் கிறுகிறுக்க வைக்கும் வாசனை இங்கே மிஸ்ஸிங்தான்.
தெரளியப்பம்..
அரிசி உணவைப் பையர் சில காலமாக அறவே தவிர்த்து விட்டதால், பச்சரிசி மாவுக்குப் பதிலா ராகி மாவு, கரகரப்புக்குக் கொஞ்சம் தினை ரவை சேர்த்த கலவையை, சுக்கும் ஏலக்காயும் தட்டிப்போட்ட, வெல்லம் கலந்த கொதிக்கும் நீரில் போட்டு கிண்டோ கிண்டென்று கிண்டி, ஆற வைத்தபின், பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து, தெரளி இலையில் சுருட்டி, இட்லிப்பாத்திரத்தில் வேக வைத்ததும் தெரளியப்பம் ரெடி. வெல்ல நீரில் கல், மண், பூச்சிகள் எதுவுமில்லாதபடிக்கு வடிகட்டி விட்டு அப்புறம் மாவைச் சேர்ப்பது உத்தமம். இல்லையென்றால் “கல்லைத்தான் மண்ணைத்தான் அவித்துத்தான் தின்னத்தான் கற்பித்தானா” என்று கொழுக்கட்டைப் படைப்புத்தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் பேச்சு கேட்க வேண்டியிருக்கும்.

தங்கள் கலைத்திறமையைக் காட்ட நினைக்கும் இளவயசுப் பெண்கள் சாயந்திரம் விளக்கு வைக்கும் மணைப்பலகை, விளக்கைக் கொண்டு வந்து வைக்கப்போகும் வாசல் முற்றத்திலிருந்து வீடு முழுக்க இண்டு இடுக்கு இடம் கூட விடாமல் மாக்கோலம் போட்டு வைத்து, அது காயும் வரை வீட்டிலிருக்கும் மற்றவர்களைத் தாவித்தாவி பாண்டி விளையாட வைக்கலாம். “கொழுக்கட்டை எப்போம்மா ரெடியாகும்?” என்று நச்சரிக்கும் சிறுவர்களையும், ரவுசு பண்ணும் மற்றவர்களையும், “அதெல்லாம் ஆகுறப்ப ஆகும். இப்ப இலையப்பம் அவிக்கணும். அதுக்கு பூவரச இலை வேணும். இல்லைன்னா வாழையிலையாவது வேணும். அதுக்கான வழியைப் பார்க்கக்கூடாதா?” என்று கிளப்பி விட்டு, அவை வந்து சேர்வதற்குள் உண்டான அவகாசத்தில் பரபரவென்று நைவேத்தியத்திற்கான ஏற்பாட்டை, சாமர்த்தியமுள்ள இல்லத்தரசி கவனிக்கலாம்.

கார்த்திகை விளக்கு வைப்பதற்காக வீட்டிலிருக்கும் வெண்கலம், பித்தளை முதற்கொண்டு அகல் விளக்குகள் வரைக்கும் எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஆனால், வீடு முழுக்க விளக்குகள் ஜொலிக்கிறதைப் பார்க்கும்போது அந்த அழகில் அப்படியே மனது நிறைந்து போய் விடுகிறது. வீட்டின் பூஜையறையிலிருக்கும் வாழைப்பூ விளக்கை வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் வைத்து ஐந்து முகமும் ஏற்றி, சுற்றிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது நாஞ்சில் நாட்டு வழக்கம். வீட்டில் திண்ணைகளோ மதில் சுவர்களோ இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்கப்படும். நீளமான தெருவாயிருந்தால் தெரு முழுக்க விளக்குகளெரியும் இந்தக்காட்சி தகதகவென்று அப்படியே அள்ளிக்கொண்டு போகும்.
மும்பையின் தமிழர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்காகக் கட்டி வைக்கப்படும் அலங்கார மின்விளக்குகளை கார்த்திகைப் பண்டிகை முடிந்துதான் கழற்றி வைப்போம். வாசலிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி விட்டு, பால்கனியிலும் விளக்கேற்றி நிமிர்ந்தால், ஹைய்யோ!!.. ஆகாயத்திலும் விளக்கேற்றி வைத்திருக்கிறாள் இயற்கையன்னை. ஜொலித்துக்கொண்டிருக்கிறது விளக்கு கார்த்திகைப் பௌர்ணமியாக..

Sunday 25 November 2012

பூந்தோட்டம்.. (25-11-2012 அன்று பூத்தவை)


அனிச்சம்: சாப்பிட்ட சாப்பாடு விஷமாகி அதனால் உயிரிழந்த கதைகளை நிறையக்கேட்டிருக்கிறோம். இங்கே சாப்பிடும் முன்பே, அந்தச் சாப்பாட்டாலேயே உயிரை இழக்க நேரிட்ட நிலை ஒரு பாம்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் இங்கல்ல தைவான் நாட்டில். Nantoun பகுதியில் குடியிருப்புக்குப் பக்கத்துல சுமார் 35 அங்குலம் அளவு நீளமுள்ள விரியன் பாம்பைப் பார்த்த மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்து சொன்னதும் வீரர்கள் வந்து அதை அள்ளிக்கொண்டு போனார்கள். மிருகக்காட்சிச்சாலையில் ஒப்படைக்குமுன் அதைப் பாதுகாப்பாக இருக்கட்டுமென்று சின்னக் கூண்டு ஒன்றில் அடைத்து வைத்தார்கள். வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு உபசாரமாக மதிய உணவாக எலி ஒன்றையும் அந்தக்கூண்டுக்குள் அனுப்பினார்கள். கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிடுவதென்று அந்த எலி தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. சுமார் 30 நிமிடப்போராட்டத்திற்குப்பின் எட்டிப்பார்த்த வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடலெங்கும் சிராய்ப்புகளுடனும் கடிபட்ட காயங்களுடனும் பாம்பு இறந்து கிடக்க எலி, ”இந்த வீரச்செயலுக்கு விருதொன்றும் கிடையாதா?” என்று பார்வையால் அவர்களைக்கேட்டது. 

இயல்வாகை: எங்கோ வாசித்ததில் பிடித்தது --- Manage your anger which is one letter shorter than danger.

வாகை: நமக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் ஒரு தடவை தொலைந்தாலோ, அல்லது பறிமுதல் செய்யப்பட்டாலோ மறுபடியும் அதைப்பெறுவதற்குள் ‘உன்னைப்பிடி, என்னைப்பிடி’ என்று ஆகிவிடுகிறது. ஆனால் மும்பையைச் சேர்ந்த மோதிவாலாவுக்கோ இதெல்லாம் ஜுஜூபி மேட்டர். கிட்டத்தட்ட ஆறு வருட காலமாக, உரிமம் பறிபோனபோதெல்லாம் மறுபடியும் சம்பந்தப்பட்ட ஆபீசுக்குப் படையெடுத்தோ, அல்லது அபராதம் கட்டியோ மீட்டு விடுவார், அல்லது டூப்ளிகேட் உரிமமாவது வாங்கி விடுவார். இந்த உண்மை இப்போது சமீபத்தில்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. கெத்து அதிகமாகி ஒரு நாள் உரிமமே இல்லாமல் வண்டி ஓட்டியபோது பிடிபட்டார். ஃபோர்ஜரி மற்றும் பிறரை ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்து 700 ரூபாய் அபராதமும் விதித்ததோடு அல்லாமல் அவரது உரிமமும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

அனங்கம்: பேஸ்புக்கில் வாராவாரம் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்து கொண்ட இப்படம், முத்துக்கள் பத்தில் ஏழாவது முத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கார்த்திகைப்பூ: குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற கருத்தில் நமக்கெல்லாம் கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் ரஞ்சனி பரஞ்ச்பாயே என்பவர் ஒரு படி மேலே சென்று அவர்களுக்குக் கல்வி வழங்கி வருகிறார். மும்பையின் ஒரு கல்லூரியில் ஆராய்ச்சித்துறைத்தலைவியாக இருக்கும் அவர், ஒரு சமயம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க ஆர்வமிருந்தாலும் தொழில் காரணமாக அடிக்கடி நேரும் இடப்பெயர்ச்சியின் விளைவாக படிக்க முடியாமலிருப்பதை அறிந்தார். இவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக “வீட்டருகே பள்ளி” என்ற முறையில் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறார். கட்டிடத்தொழில் நடைபெறும் அந்த இடத்திலேயே, ஒரு ஓரத்தில் அமைக்கப்படும் தகரக்கொட்டகைதான் பள்ளிக்கூடம். இந்தப்பள்ளியில் சேருவதற்கு மூன்று வயது நிரம்பியிருந்தால் போதும்.வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். கணக்கு, அறிவியல், சமூகவியல் போன்றவை மராத்தி மீடியத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்புவரை படித்தவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டு இங்கே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். 1988-ல் ஆரம்பிக்கப்பட்டு மும்பை மற்றும் பூனாவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் இப்பள்ளிகளில் சுமார் 25000 பேர் பயில்கிறார்களாம். குழந்தைகளால் இயலும் பட்சத்தில் நகராட்சிப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில இங்கே தயார்படுத்தப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். கைக்குழந்தைகளாக இருக்கும் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு காரணமாக பள்ளிக்கு வர இயலாமலிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு பேபி சிட்டிங்கும் இங்கே இருக்கிறது. “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும்” மனித நேயமிக்க இவர்களைப் போன்றவர்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறையத்தேவை.

காகிதப்பூ: "இனியெல்லாம்.." என்ற எனது சிறுகதை இன் அண்ட் அவுட் சென்னை இதழின் செப்டம்பர் மாதப் பதிப்பில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இதழாளர்களுக்கு நன்றி.   

Tuesday 20 November 2012

கடைசித் துருப்புச்சீட்டு..

  • புகழை ஏற்றுக்கொள்ள முன் வருவதைப்போன்றே அதற்கான தனது கடமையையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • எந்த விதப் போலித்தனமுமின்றி நாம் நாமாக இருக்க முடிவது உண்மையான நட்புகள் மற்றும் உறவுகளின் முன் மட்டுமே.

  • நேற்றைய சரித்திரங்களைப்பற்றியே எப்போதும் மலைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்றைய சரித்திரத்தின் ஒரு துளியாக நாளைய சரித்திரத்தில் பேசப்படப்போவதை அறியாமலே.

  • உதிர்ந்த இலையொன்று வியந்து கொண்டிருக்கிறது மரத்தின் பிரம்மாண்டத்தினைக்கண்டு. அதன் ஒரு பகுதியாகத் தானும் இருந்ததை அறியுமுன் அடித்துச் செல்கிறது காற்று.

  • எல்லாமே அற்புதங்களாகவும் அர்த்தமற்றும் ஒரே நேரத்தில் தெரியும் வாழ்க்கையை அதிகம் ஆராயாமல் அதன் போக்கில் விடுவதே அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான முதல் முயற்சி.

  • நம்பிக்கையே உணவாய், நற்செயல்களே நிழலாய், அறிவே பகலொளியாய், மனதின் வழிகாட்டல்களே இருளின் வழித்தடமாய்க் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கைப்பயணம்.

  • ஜெயித்து விட்ட நிம்மதியுடன் நிமிர்ந்து அமரும்போதுதான் கடைசித்துருப்புச் சீட்டை இறக்குகிறது விதியென்று சொல்லப்படும் ஒன்று.

  • பறவைக்குஞ்சின் திறந்த அலகினுள் வந்து விழும் உணவாய்ச் சில வெற்றிகள் தாமாகவே வாய்த்து விடுகின்றன, பிறர் உழைப்பை விழுங்கிக்கொண்டு.

  • வெற்றி பெற உழைப்பதை விட,தோற்று இருப்பைத் தொலைத்து விடாமலிருக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.

  • எதிர்பார்த்த சம்பவங்களாயினும் எதிர்பாரா சந்தர்ப்பங்களில் நிகழ்ந்து விடும்போது ஒரு சிறிய பரபரப்பு அலை பரவித்தணிகிறது.

Friday 16 November 2012

கொண்டாட்டங்கள் முடியவில்லை..

மழை முடிந்தபிறகு குடை பிடித்த கதையாக தீபாவளி வாழ்த்துகளை அனைவருக்கும் இப்போது சொல்லிக்கொள்கிறேன். எங்களூரில் இன்னும் தீபாவளி முடியவில்லை. ஆகவே வாழ்த்துச்சொல்வதிலும் தப்பில்லை :-)
செமஸ்டர் பரீட்சையைக் காரணம் காட்டி சிஸ்டத்தைக் குழந்தைகள் பிடுங்கிக்கொண்டு விட தற்காலிகமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. பற்றாக்குறைக்கு செமஸ்டர் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முதல் நாள், மகள் கீழே விழுந்து உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அடி பட்டுக்கொண்டு வந்தாள். மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பரீட்சை சமயம் உறக்கம் வந்தாலும் வரலாம். அப்புறம் பட்ட பாடெல்லாம் வீணாகி விடும் என்று வெறும் முதலுதவியோடு நிறுத்திக்கொண்டு விட்டாள். அவள் நன்கு தூங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, "பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சதுல அடிபட்டிருச்சு" என்று வாய்மொழியை உதிர்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார் பையர். பின்னே, மகளின் காதில் இந்த கமெண்ட் விழுந்தால் யார் மாத்து வாங்குவது? :-) அப்புறம் பரீட்சைகள் முடிந்தபின் ஸ்கேன் எடுத்தல், எக்ஸ்ரே எடுத்தல் என்று மருத்துவமனைக்கு அலைந்தது தனிக்கதை :-)

இந்த களேபரத்தில் வீடு சுத்தம் செய்வது, அலங்கார மின் விளக்குகள் கட்டுவது போன்ற தீபாவளி வேலைகளை பையரின் உதவியோடு ஓரளவு செய்து முடித்து, தீபாவளிக்கு முதல் நாள் மிச்சம் மீதி ஷாப்பிங்கும் முடிந்தது. பட்டாசு விலையேற்றம் காரணமாகவும், சுற்றுப்புற சூழல் மீதுள்ள அக்கறை காரணமாகவும் இந்த வருஷம் மும்பையில் அமைதியான தீபாவளியாகக் கழிந்தது. புது வருடத்தை மிகவும் தாம்தூமென பட்டாசு வெடித்துக் கொண்டாடும் குஜராத்தியர் கூட கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். 
கடைகளில் தொங்கும் கந்தில்கள் எனப்படும் விளக்கலங்காரங்கள்..
எக்கச்சக்க அலங்காரங்கள், விளையாட்டுகள் என்று களை கட்டும் மால்கள் கூட கொஞ்சம் சுரத்தின்றி ஆனால் ஓரளவு களையுடன் இருந்தன. 
இருந்தாலும் எண்ணெய்யின்றி திரியுமின்றி விளக்கேற்றி,
பட்டாசு வெடித்து,
 



நேற்றைய பாவ்பீஜ் வரைக்கும் தீபாவளியைக் கொண்டாடி முடித்தாயிற்று. ஆனால் இன்னொரு கொண்டாட்டமும் இன்றைக்கு இருக்கிறது. இன்று அதாவது நவம்பர்-16 என் பையரின் பிறந்த நாள். 

எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாஸ்கர்..
கேக்கை மட்டும் அவனிலும் சுடவில்லை, காமிராவாலும் சுடவில்லை. கூகிளில் சுட்டேன் :-)

Monday 29 October 2012

ஒவ்வொன்றும் ஒரு விதம்..

அனங்காம கொள்ளாம ஒரு இடத்துல இருந்தாத்தானே.. ஓரக்கண்ணால நாம கிட்டே வர்றோமான்னு பார்க்கறதும் நாம ஒரு எட்டு எடுத்து வெச்சாலும் சர்ர்ர்ருன்னு பறக்கறதுமா ஒரே அலப்பறை. என்னதான் பூனைப்பாதம் வெச்சு மெதுவா நாம நடந்தாலும் ஒரு அசைவிலேயே கண்டு பிடிச்சுருதுகள். 

இவர் cattle egret இனத்தைச் சேர்ந்தவர். பச்சைப்பசேல் புல்லை மேய்ஞ்சுட்டிருக்கும் ஆடு, மாடுகளோட பின்னாடியே வால் மாதிரி போயிட்டிருப்பார். அதுகள் புல் மேயும் போது வெளிப்படுற புழு, பூச்சிகள்தான் இதுக்கு உணவு.

இவங்க கொஞ்சம் சாதுவானவங்க. மும்பையைப் பொறுத்தவரை மக்கள் கூட்டத்தோடயே இருந்து பழக்கப்பட்டுட்டதாலயோ என்னவோ, ஆட்களைக் கண்டதும் ஓடறதில்லை. 'உன் வழியில் நீ போயிக்கோ'ன்னு கொஞ்சம் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துட்டு அவங்க வேலையைப் பார்த்துட்டிருப்பாங்க. அடுக்களை ஜன்னல் கொஞ்சம் திறந்திருந்தா "இன்னிக்கு என்ன சமையல்?"ன்னு எட்டிப்பார்த்து விசாரிச்சுட்டுப் போற அளவுக்கு ஜகஜமா இருப்பாங்க :-)
முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்ன்னா அது இவங்க ஆட்கள்தான். பத்தடி தூரத்துல இருந்தாலும் லேசான அசைவையும் கண்டுபிடிச்சு உஷாராயிடுவாங்க. 
தீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கிக்கொடுக்க மாட்டேன்னு ஊட்டுக்காரர் சொல்லிட்டாராம். உர்ர்ர்ர்ன்னு இருக்காங்க. கிட்டே போயி ஏதாச்சும் கேட்டா கடிச்சு வெச்சாலும் வெச்சுருவாங்க. வாங்க,.. அந்தப்பக்கமா போயிடலாம் :-)
இந்த கெட்டப்பை இன்னும் கொஞ்ச நாளைக்கு மெயிண்டெயின் செஞ்சாத்தான் பர்ஸ் பொழைக்கும் :-)
என்னா லுக்கு!!!..
வாஷிங் மெஷின்லேருந்து இப்பத்தான் வெளியில எடுத்தேன். பளபளக்கிறாங்க..
குடியிருப்பையடுத்து இருக்கும் சின்ன காலி மனையில் தற்காலிகமா இவங்க குடியிருக்காங்க. கிட்டத்தட்ட அஞ்சு நாளா முயற்சி செஞ்சு இதைக் கிளிக்கினேன். ரொம்பவும் கூச்ச சுபாவமுள்ள புல்புல் இவங்க. ஆனா, ஒரு செகண்டுக்கு மேல ஒரு இடத்துல இருக்கறதில்லை. இடம் மாறி மாறிப் பறந்துட்டே இருப்பாங்க. வழக்கமா பறவைகளைப் படம் பிடிக்கறப்ப ஷட்டர் ஸ்பீடு 1/1000 இருந்தாலே போதும், ஆனா, இவங்களைப் பிடிக்கறப்ப 1/2000 வரைக்கும் தேவைப்பட்டது. மேனுவல் செட்டிங்கில் 1/2000 ஷட்டர் ஸ்பீட், அப்பர்ச்சர் 4 அல்லது 5.6 வெச்சு எடுக்கும்போது ரிசல்ட் நல்லாவே கிடைக்குது.
"என்னடி மைனாம்மா உன் கண்ணுலே மையி.."
போகுமிடமெல்லாம் கூடவே போயி ஃப்ரெண்டு பிடிச்சு, ஏதாவது தின்னக் கொடுத்து "நீ ரொம்ப நல்லவ"ன்னு அதுகள்ட்ட பேரு வாங்கிட்டா போறும். பறவைகளும் விலங்குகளும் போட்டோ செஷனுக்கு நல்லாவே ஒத்துழைக்கும். இது என்னோட அனுபவம். இன்னொரு பறவைத்தொகுப்பையும் விரைவில் எதிர்பாருங்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails