Monday 24 April 2017

ஒரு சிறு இசை(வண்ணதாசன்) - புத்தக விமர்சனம்

கவிழ்ந்து படுத்துக்கொண்டு அடம்பிடிக்கும் குழந்தையாய் இதழ்களைப் பரப்பிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் பாதிரிப்பூவை மென்கரங்களால் வருடி ஆற்றுப்படுத்தும் மென்காற்றைப்போன்றது வண்ணதாசனின் எழுத்து.. நம் மனம்தான் அந்தப்பாதிரிப்பூ. அம்மென்காற்றிலிருந்து பிறந்த “ஒரு சிறு இசை” நம்மை எந்தெந்த உயரங்களுக்கோ கொண்டு சென்று, லயிக்கவும் வாழ்வின் வண்ணங்களைத் தரிசிக்கவும் வைக்கிறது.

நித்திய வாழ்வின் வலிகளைச் சுமந்தலைகிற மனிதர்கள் சற்றே அன்பின் நிழலில் இளைப்பாறுவதும் அந்நிழல் அவர்களுக்குக் கிடைப்பதும் எத்தகைய கொடுப்பினை. பிரதிபலன் எதிர்பாராமல் அமிர்த ஊற்றாய் அன்பைச்சொரியும் மனிதர்கள் வாய்ப்பது எத்தகைய வரம். முரட்டு மனிதர்கள் என நாம் எண்ணுபவரிடத்தும் அத்தகைய அடைபட்ட ஊற்றுக்கண் திறக்கப்படக் காத்திருக்கக்கூடும். அத்தகைய அன்பை மையமாய்க்கொண்டவையே வண்ணதாசனின் கதைகள். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே முகிழ்த்த அன்பாய் இருந்தால்தான் என்ன? எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் அன்பு அன்புதானே?. சற்றே நூல் பிசகினாலும் வேறு வண்ணங்கொள்ள சாத்தியமுள்ள அந்த அன்பை விகல்பமில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லிச்செல்வதுதான் வண்ணதாசனின் வெற்றி.

பதினைந்து சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பிற்கு, 2016-ம் ஆண்டுக்கான "சாகித்ய அகாடமி" கிடைத்துள்ளது. இத்தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையிலுமே ஒரு சிறு இசை ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது. அன்பின், நேசத்தின் இசை நம்மைச்சூழ்ந்து கொள்வதை உணர முடிகிறது. ஒவ்வொரு மனித மனமும் ஒரு பெட்டியே. எத்தனையோ ரகசியங்களை அது ஒளித்து வைத்துக்கொண்டு பொருத்தமான சாவிக்காகக் காத்திருக்கிறது. சரியான நேரத்தில் அது திறக்கப்படும்போது வெளிப்படும் சிறு இசை, அதற்குரிய அங்கீகாரத்தை அடைகிறது. மணமானவுடனே விதவையாகி விட்ட மூக்கம்மா ஆச்சியின் அடிமன ஆசையை அவள் அக்காள் புரிந்து கொண்டு, தன் கணவரின் சட்டையோடு மூக்கம்மா ஆச்சியின் புகைப்படத்தைச் சேர்த்து வைத்து அதற்குரிய அங்கீகாரத்தை வழங்கியதைப்போல், பிரமநாயகத்தை கல்பனா ஸ்டுடியோவில் தம்பதியாகப் போட்டோ எடுத்துக்கொள்ளச்சொல்ல வேண்டுமென்று கைலாசம் விழைவதைப்போல், இக்கதைகளில் ஆங்காங்கே ஒலிக்கும் சிறு இசை ஓர் இசைக்கோர்வையாய் நம் மனதை நிறைக்கிறது.

நிரப்புவதும் நிரம்புவதும் அத்தனை எளிதா? எத்தனை மார்ட்டின் மல்லிகள் பூத்தாலென்ன? எத்தனை குருவிகள் வந்து தண்ணீர் அருந்தினாலென்ன? மரமல்லிகள் உதிர்ந்து பாய் விரித்தாற்போல் பரந்து கிடந்தால்தான் என்ன? பிறந்த பெண்குழந்தையைப் பறி கொடுத்து விட்டு வெறுமையாய்க்கிடக்கும் குருசாமி-பார்வதி தம்பதியரின் முற்றம், “நம்ம வீட்டுக்குப் போலாமா?” என அவ்வீட்டின் தகப்பன் கூட்டி வரப்போகும் நாய்க்குட்டியால் நிச்சயம் நிரம்பி விடும். ஒரு தாமரைப்பூ போதும் ஒரு குளத்தை நிரப்ப. ஒரு பூ உதிர்ந்தாலும் இன்னொரு பூ இட்டு நிரப்பும்.. சுப்புவைப்போல். ஒரே ஒருத்தர் அத்தனை பேர் இடத்தையும் நிரப்புவதுதானே விசேஷம்.

காந்தி டீச்சருக்கும் நமசுவின் அப்பாவுக்கும் இருக்கும் உறவுக்கும் தண்டவாளங்களுக்கிடையே இருக்கும் உறவுக்கும் வித்தியாசமொன்றுமில்லை. அருகருகே இருந்தாலும் நெருங்கிச்சென்று இணைவது போல் தோற்றம் காட்டினாலும் இணைவதேயில்லை. அப்படி இணைந்து விட்டாலோ அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆகவே அதை அப்படியே தாண்டிப்போய் விட வேண்டியதுதான். சிந்திய தண்ணீரைத் தாண்டுவதைப்போல் நமசுவின் அப்பா அவ்வுறவைத் தாண்டிச்செல்வதும், காந்தி டீச்சர் தண்டவாளத்தைத் தாண்டிச்செல்வதும் ஒன்றுதான். 

பொழுது போகாமல் ஒவ்வொருவர் வாழ்விலும் விளையாடும் சதுரங்கம்தான் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் அது ஏற்படுத்தும் பாதிப்பும். வெற்றி தோல்வி மனப்பான்மை ஏதுமின்றி, வாழ்வதை ஒரு கடமையாக மட்டும் எடுத்துக்கொண்டு வெறுமையான மனங்களுடன் இருப்பது வேறென்னவாக இருக்க முடியும்? இத்தனை சிறு களத்தில் எத்தனை போட்டி, பொறாமை, சந்தேகம், சக உயிரின் மீது அன்பின்மை, சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் வெட்டி வீழ்த்தத்துடிக்கும் வஞ்சகம், புரிந்து கொள்ளாத சித்திரவதை என எத்தனை விதமான நகர்வுகள்!! அத்தனைக்கும் ஈடு கொடுத்து விளையாடி முடித்தபின் இறுதியில் கணக்குப்பார்த்தால் நம் கையில் மிஞ்சுவதென்ன? வாழ்நாள் முழுவதும் ஒருவரோடொருவர் இணக்கமின்றி இருக்கும் அம்மச்சி டீச்சருக்கும் அவள் கணவனான சூரிக்குமிடையே நடக்கும் போராட்டத்தில் தனுக்கோடிக்கும் நிச்சயம் ஒரு பங்கிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ அச்சதுரங்கத்தில் அவரும் ஒரு காயாக இடம் பெற்று, அலைக்கழிந்து பின் தானாகவே விலகிச்சென்று விடுகிறார். அதன்பின்னும் அவர்கள் மனம் ஒட்டாமல் வாழும் வாழ்வே “பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்” 

நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்து புழுங்கும் வாழ்வின் இடுக்குகளில் அன்பின் தென்றல் வீசுவது எத்தனை சுகம்!! அப்படி அன்பு வெளிப்படும் அரிய தருணங்களை வெளிப்படுத்தி காட்சிப்படுத்துபவை வண்ணதாசனின் கதைகள். உரைநடை வரிகளினூடே இழையோடிச்செல்லும் கவிநயம் வாசிப்பை ஆனந்தமானதாக்குகிறது. படிமங்கள் நிரம்பிய சிறுகதைகள் எளிமையான வரிகளால் பின்னப்பட்டிருந்தாலும் சற்றே ஆழ்ந்து வாசிக்குங்கால், அத்தனை கனமான உட்பொருளையும் கொண்டுள்ளது. சிந்திக்குந்தோறும் அதன் பொருள் விரிந்து வாசகனின் சிந்தனையை விரிவாக்குகிறது. வாசக மனதை அங்கிங்கு அலைய விடாமல் கட்டிப்போடும் சீரான ஒழுக்குப்போன்ற மொழிநடை இன்னொரு பலம். ‘குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல் எதிர்ச்சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது’ போல் நம் மனதில் இச்சிறுகதைத்தொகுப்பின் மாந்தர் வரையும் சித்திரங்களும் அத்தகைய அரூபமானதே.

ஆசிரியர்: வண்ணதாசன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.
இணையத்தில் வாங்க: 





Wednesday 19 April 2017

செம்பருத்தி(தி.ஜானகிராமன்) - புத்தக விமர்சனம்

தி.ஜாவின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற்ற நாவல்களை விட இதில் மன விசாரங்களும், தத்துவ விசாரங்களும் சற்று அதிகமாகவே இடம்பெற்று அலசப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் அவரது நாவல்களில் “செம்பருத்தி” தனியிடத்தைப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

விருப்பத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலிருக்கும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் அது கிடைப்பதற்கும் இடையிலேற்படும் ஊசலாட்டம், உறவுகளைப் பேணிக்காக்கும் இச்சைக்கும் அது பலிப்பதற்கும் இடையிலுள்ள போராட்டம் என இவற்றை வெவ்வேறு காலப்பின்னணியில் வைத்து அலசும் புனைவை சட்டநாதன் உட்பட்ட கதை மாந்தர்கள் வழியாக நம்முன் வைக்கிறார் தி.ஜா. பணத்தை விட மனிதர்களைச் சம்பாதித்து அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியமாகி, காலங்கள் கடந்தபோதும் அவை நிலைத்திருக்கச்செய்வதே மனிதனின் உண்மையான வெற்றி. 

“செம்பருத்தி”யின் சட்டநாதனும் இவ்வகைதான். பெண்கள் நிரம்பிய அவனது உலகத்தில் அவர்களூடே பயணித்து அவர்களைப் புரிந்து கொள்ள, அவர்களைத்தக்க வைத்துக்கொள்ள முயலும் அவனது வாழ்வும், அவன் கடந்து வரும் மூன்று பெண்கள் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இந்நாவல். இவற்றைக்கூறுவதன் மூலம் குடும்பம், சமுதாயம் இவற்றைக்கட்டமைப்பதில் பெண்களின் பங்கு எத்தகையது என்பது புரிய வருகிறது. அப்பெண்களின் இயல்புகளையும் அவர்களது துக்கம், கண்ணீர், மென்னகை போன்றவற்றையும் கூறி வரும்போதே அவர்களிடையே சிக்கித்தவிக்கும் ஆணின் கதையும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. பெண் மட்டுமல்ல ஆணும் பல சமயங்களில் பரிதாபத்துக்குரியவனே. 

பால்யத்தில் பிரியம் வைத்த பெண் சந்தர்ப்ப வசத்தால் தனக்கு அண்ணியாகி, எதிர்பாரா விதமாக விதவையுமானபின், ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபின்னும் அந்நெருப்பில் பற்றிக்கொள்ளாமல் அதே சமயம் அதன் அருகே வாழ்ந்து வரும் நனைந்த பஞ்சான சட்டநாதன் தன்னறத்தை இயல்பாகக்கொண்டு வாழ்வின் ஓட்டத்தில் அதைத்தொலைத்து விடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இயல்பான மனிதன். சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து நொடித்த பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது. இறக்குந்தருவாயில் சின்ன அண்ணன் பார்த்து வைத்து விட்டுப்போன புவனாவை மணந்து கொள்வதன் மூலம் சட்டநாதனுக்கெனவும் ஓர் குடும்பம் அமைகிறது. பெரியண்ணனின் சொற்படிக்கூறுவதானால் கருடாழ்வார் போல் அனைவரையும் தாங்கும் சட்டநாதன், தேள் கொடுக்காய்க் கொட்டும் பெரிய அண்ணியையும், “பார்த்துக்கிட்டே இருந்தாப்போதும்” என தன் உள்ளக்கிடக்கையை காலங்கடந்து வெளிப்படுத்தும் சின்ன அண்ணியையும் சேர்த்து தங்களுக்கிடையேயான கண்ணியமான உறவு கெட்டு விடாமல் தாங்குகிறான். முற்றிலும் வேறுபட்ட இம்மூவரின் குணாதிசயங்களும் அக்குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் தி.ஜாவின் தனித்தன்மை. தஞ்சை மண்ணின் ஒரு சிறு கிராமத்தில் நிகழும் கதைக்களத்தின் துணை மாந்தர்களும் தன்னிருப்பை நம்முள்ளத்தில் ஆழப்பதிக்கிறார்கள் கிட்னம்மாவையும் ஆண்டாளையும் போல்.

தி.ஜாவின் செம்பருத்தியில் பெண்களின் துர்க்குணங்கள் சற்று அதிகமாகவே விவரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது ஆணின் மேல் ஏற்படும் பரிதாபத்தை சற்று அதிகப்படுத்துவதற்காகவும் இருக்கலாம். அதிலும் சட்டநாதனின் பெரிய அண்ணியின் பாத்திரப்படைப்பு சிக்கலான ஒன்று. அவளது துர்க்குணங்கள் காரணமாக அவளை, “புளியமரம்” என்றே அனைவரும் ஜாடையாகக்குறிப்பிடுகின்றனர். தன் சுபாவத்தால் பிறரை நிம்மதியிழக்கச்செய்யும் அவள் மேல் நமக்கு ஆத்திரமும் அசூயையும் ஏற்படும் அதே சமயம் தன் குணத்தை எண்ணி வருந்தி, தன்னையே வெறுத்து பட்டினி கிடந்து தன்னையே வருத்திக்கொண்டு இறக்கும் அவள் மேல் ஒரு துளி அனுதாபமும் ஏற்படுகிறது. 

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கப்பட வேண்டுமென்றான் பாரதி. கணவன் பிற மகளிரை விழைவதை எந்தப்பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டாள். பொறுத்துக்கொண்டு அன்பு செலுத்த மாட்டாள். அவள் அவனுக்கு உண்மையாக இருப்பதைப்போலவே அவனும் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று அவள் எதிர்பார்ப்பது இயற்கைதானே. அது பிறழும்போது அவள் வருந்துவதும் சினம் கொள்வதும் இயல்புதானே.. இதிலென்ன தவறு இருக்கிறது? ஆனால், அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இன்முகத்துடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண், அவள் தன் மனப்புழுக்கத்திற்கு வடிகாலாக யாரோடோ வெறுமனே பேசிச்சிரித்தால் அவளைச் சந்தேகப்படுவது எவ்விதத்தில் நியாயம்?. பெரியண்ணியின் பாத்திரப்படைப்பைப் பொறுத்தவரை அவள் தன் கணவனின் மேலுள்ள கசப்பைத்தான் பிறர் மேலும் துப்புகிறாள். அவள் மனதில் ஊறிக்கசியும் அக்கசப்பே அவளை அனைவரும் வெறுக்கக்காரணமாக அமைந்து விடுகிறது. அவளைச் சற்றேனும் புரிந்தவள் புவனா மட்டுமே.

விரும்பியவனுக்கு அண்ணியாக சந்தர்ப்ப வசத்தால் ஆக நேர்ந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்த குஞ்சம்மா, விதவையானபின், சட்டநாதனைப் பார்த்துக்கொண்டேயாவது வாழ்ந்து விடுவது என முடிவெடுத்து அந்நேசத்தை ஆராதித்து அவ்வீட்டில் வாழும்போது அவள் மேல் ஏற்படும் பச்சாதாபம், தனக்கும் அவனுக்குமான உறவை அவன் மனைவியிடமும் ஒன்று விடாமல் கூறியிருக்கிறான் என அறிந்து அவனை வெறுத்து தன் பெண்ணோடு நிரந்தரமாக இருக்கப் புறப்படும்போது கலைந்து விடுகிறது. அவ்வளவுதானா மனிதர்கள்! எனத்தோன்றுகிறது. எனினும், தன்னுடைய அந்தரங்கம் வெளிப்பட்டு விட்ட இடத்தில் ஒரு மனுஷியால் மீதமுள்ள காலத்தை எவ்வித உறுத்தலுமில்லாமல் கடந்து விட இயலுமா? என்ற கேள்வியையும் விதைக்கிறது.

ஒரு ஆதர்ச மனைவியாக, அவ்வீடு எந்தச்சிக்கலுமில்லாமல் ஓட அடிப்படையான அச்சாணியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் புவனாவின் படைப்பு இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா என வியக்க வைக்கிறது. அதுவும் தன் கணவன் கல்யாணத்திற்கு முன் பிரியம் வைத்த பெண்ணே தனது ஓர்ப்படியாக ஒரே வீட்டில் வாழும்போது, அதை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன! தினந்தோறும் நடக்கும் நல்லது கெட்டதுகளை கணவன் தன்னோடு பகிரும்போது அதைக்கேட்டு, தேவைப்படும்போது நல்ல வழியும் காட்டி அவனுக்கு ஒரு நல்ல துணையாக இருந்தவள் மெனோபாஸ் சமயத்தில் அதே சின்ன அண்ணியோடு கணவனைத்தொடர்பு படுத்தி அவன் மேல் சந்தேகப்பட்டு தங்கள் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளும்போது, அத்தனை நாள் அவன் அவள்மேல் இறக்கி வைத்த பாரத்தைச் சுமந்த துன்பம்தான் இப்படி வெளிப்படுகிறதோ எனத்தோன்றுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவும் வேண்டுமோ என ஐயத்தை ஏற்படுத்துகிறது. அர்த்தநாரீசுவரான சிவனாலேயே தன் மனைவியுடன் இரண்டறக்கலக்க இயலவில்லை எனும்போது நாம் யார்?

சரளமான நடை, பெரும்பாலும் உரையாடல் மூலமாகவே கதையை நகர்த்தும் உத்தி, கதையின் முடிச்சை சொற்களில் பொதிந்து தரும் லாகவம் என தி.ஜாவின் முத்திரை இந்நாவலிலும் அழுந்தப்பதிந்துள்ளது. சாவி ஆசிரியராக இருந்த சமயம் தினமணி கதிரில் 1968-ம் வருடம் தொடராக வந்தது இந்த நாவல்,

ஆசிரியர்: தி.ஜானகிராமன்.
வெளியீடு: ஐந்திணைப்பதிப்பகம்(2003-செம்பதிப்பு)
இணையத்தில் வாங்க: 

Monday 17 April 2017

நெடுமரம்..

நாம் சொல்லும் எந்தச்சொல்லுக்கும் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் சும்மா அமைதியாக நிற்பவரை "மரம் மாதிரி நிக்கறியே"எனத் திட்டுகிறோம். உண்மையில் மரம் எதற்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் சும்மாவா நிற்கிறது? ஒவ்வொரு பருவகாலத்துக்குமேற்ப தன்னுடலில் அது வெளிப்படுத்தும் மாற்றங்கள் எத்தனையெத்தனை!!

வசந்த காலம் வந்ததும் மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, வெள்ளை என பலப்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறதே.. இத்தனை வண்ணமலர்களை அதுகாறும் எங்கே ஔித்து வைத்திருந்தது அது? உதிர்ந்து வழியெங்கும் பூம்பாய் விரித்த மலர்கள் போக சிலவற்றை தனது வம்சவிருத்திக்கென விதையுற்பத்திச்சாலை சுமக்கும் கனிகளாக உருமாற்றும் இரசவித்தையை ஒவ்வொரு நாளும் பிறரறியாமல் நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறது. இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு உடலெங்கும் செம்பூக்களை மட்டும் அணிந்து நிற்கிறதே இந்த மரம்.. எந்தப் பருவகாலத்திலிருந்து இதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்ததோ!! யாருக்குத் தெரியும்?

வாழும் ஒவ்வொரு நொடியும் தனக்காகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உயிர்ப்புடன் பேரமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்ச்சாலையல்லவா அது!! புரட்டிப்போடும் புயலுக்கிசைந்து தன்னுடலில் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலும், மறு நொடியிலிருந்தே அவ்விழப்பைச் சரிக்கட்டும் முயற்சியில் அதன் வேர்களும் திசுக்களும் ஒன்றிணைந்து சத்தமில்லாமல் பாடுபடத் தொடங்கி விடுவதை யாரறிவார்.

அசைவற்று அது நிற்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதற்குள் ஒரு பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிந்தோமில்லை. அதைப்போய் சும்மா நிற்கிறது என மனிதனோடு எப்படி ஒப்பிடவியலும்? வேண்டுமானால், காய்ந்து பட்டுப்போன மரத்தைப் பார்த்து, "மனிதனைப்போல் சும்மா நிற்கிறாயே" என்று ஒப்பிட்டுச் சொல்லிக்கொள்ளலாம்.

Wednesday 12 April 2017

"கம்பாநதி" - வண்ணநிலவன். (புத்தக விமர்சனம்)

ஓடினால்தான் நதி, தேங்கினால் கசம். வாழ்வும் அப்படித்தான்.. அதன்போக்கிலேயே நீந்திச் செல்பவன் மட்டுந்தான் கரையேறுகிறான். அப்படியில்லாமல் சற்றே தேங்குபவனை சுழியில் தள்ளி தத்தளிக்க விடுகிறது வாழ்வு. அப்படி நீந்தியும் தேங்கியும் வாழ்வோடு எதிர்நீச்சல் போடும் மனிதர்களைப் பற்றியதே வண்ணநிலவனின் "கம்பாநதி".

"அந்தக்காலத்துல.. பாண்டியராசா காலத்துல இந்த வழியாத்தான் கம்பாநதின்னு ஓர் ஆறு போச்சாம். பின்னால எப்படியோ அந்த ஆறு நின்னு போச்சு. அந்த ஞாபகத்துக்குத்தான் அந்தக் குட்டி மைய மண்டபம் இருக்குது... அந்த மண்டபத்துக்கு கீழ பாத்தியன்னா கசங் கணக்கா தண்ணி கெடக்கும்." திருநெல்வேலியில் ஒரு காலத்தில் ஓடிய கம்பாநதி இன்று காணாமல் போய் கசம் எனப்படும் சிறு குட்டை மட்டும் மீந்ததைப்போல் இக்கதையில் வரும் ஒவ்வொரு மாந்தருக்குள்ளும் ஓடிய ஆறும் சிறு மீதத்தை வைத்திருக்கிறது. ஆராம்புளியிலிருந்து தன் கணவனை விட்டு சங்கரன் பிள்ளையோடு வந்து குடும்பம் நடத்தத்தொடங்கி வெகு காலமான பின்னும் அவள் மனதில், "அதிகாரியாவே போயிட்டாஹ" என்று அவள் கணவன் நினைக்கப்படுவது கசமாக மீந்திருக்கும் அவர்கள் வாழ்வுதான்.

திருநெல்வேலியைக் கதைக்களமாகக் கொண்டு அம்மக்களின் மொழியைப் புழங்கும் இந்நாவலை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைக் கவனித்தால், வேறு ஊரைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் இந்நாவல் இதே உணர்வுகளையே எழுப்பியிருக்கும் என்றே தோன்றுகிறது. வண்ணதாசன் மற்றும் சுகாவின் திருநெல்வேலியும் வண்ணநிலவனின் திருநெல்வேலியும் ஒன்றல்ல என்ற உணர்வு தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

வண்ணநிவலனின் மனிதர்கள் யாருக்கும் யார் மேலும் ஆவலாதி இல்லை. 'அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்?' என்ற கேள்வியோடு அவர்களைக் கடந்து செல்கின்றனர். யாரும் யாருக்காகவும் தேங்கி நின்று கம்பாநதியைப் போல் காணாமல் போய் விடுவதுமில்லை. நதிக்கரை மனிதர்களைப்போல் இந்நாவலின் மனிதர்களும் அவரவர்களுக்கான தனித்தனி வாழ்க்கையின் விவரிப்போடும் அதன் முக்கியத்துவத்தோடும் உலா வருகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்வும் பிறரின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பிணைந்தேயிருக்கிறது, பாலத்தை லாரி கடந்தால் தான் இண்டர்வியூவில் தேர்ச்சி பெற்று விடுவோம் என நம்பும் பாப்பையாவின் நம்பிக்கையைப்போல. வாசிப்பவருக்கு அது மூடநம்பிக்கையாய்த் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை வேலை கிடைத்து விட்டால் கோமதியைக் கல்யாணம் செய்து கொள்ளும் கனவுக்கான முதற்படியல்லவா..

நதியின் போக்கையும் வாழ்வின் போக்கையும் தீர்மானிப்பது யார் கையிலும் இல்லை. தன் போக்கில் செல்லும் நதியை மறித்து அதன் நீரை தேவைக்கு உபயோகப்படுத்துவதைப் போலவே கோமதியின் வாழ்வோட்டமும் பாப்பையாவை நோக்கிச் செல்லாமல் மறிக்கப்பட்டு கதிரேசனுடன் இணைக்கப்பட்டு விடுகிறது. இரண்டிலும் சம்பந்தப்பட்டவர் அனுமதி கேட்கப்படவேயில்லை. என்றாலும் அவை சுணங்காமல் புதுப்பாதையில் ஓடத்தான் செய்கின்றன. அதற்கான காரணகாரியங்கள் பிறர்க்குப் புரிவதில்லை. "என்னமோ போலத் தோணிச்சி. அதான், அழுதேன்" என்று கலுங்கில் அமர்ந்து அழுத கோமதி பாப்பையாவுக்குச் சொல்லும் காரணம் போலத்தான் அவையும்.

சங்கரன் பிள்ளை, அவரது மனைவிகளான மரகதம் மற்றும் சௌந்திரம் மற்றும் பிள்ளைகளின் பாத்திரப்படைப்பும் அப்படியே. ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புரியாத காரணகாரியங்களால் நிகழ்ந்தவையும் நிகழ்பவையுமே அவ்வாழ்க்கையின் மர்ம முடிச்சு. "எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும், அதையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன". அப்படித்தான் ஒரேயடியாக கம்பாநதியைப் போல் வறண்டு போகாமல், தாமிரபரணியைப்போல் ஈரம் வற்றாத மனசைக் கொண்டிருக்கின்றனர் இம்மனிதர்கள். அந்த ஈரம் பட்டு வரும் காற்று வாசகரின் மனதையும் சற்றே ஆற்றுகிறது.

"நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது." ஆற்றின் போக்குப்போல் நகரும் கதையின் மாந்தர்கள் அவர்களுக்கான தனிப்பட்ட விசேஷமான குணங்களுடன் வலம் வரும்போது, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது நாமும் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகிறோம். தன்னில் வந்து சேரும் எதையும் வாரியணைத்துச் செல்வதுதானே நதியின் இயல்பு? அப்படி நம்மைப் பயணப்பட வைப்பதே மனிதர்களின் அகஉணர்வுகளை அலசும் வண்ணநிலவனின் எளிமையான எழுத்தின் பலம்.

ஆன்லைனில் வாங்க.



Monday 10 April 2017

18-வது அட்சக்கோடு(அசோகமித்திரன்) - புத்தக விமர்சனம்

இந்திய தேசிய விடுதலைப்போராட்டக் காலத்தின் ஒரு முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தைப் பற்றிய நூலே அசோகமித்திரனின், "பதினெட்டாவது அட்சக்கோடு". அப்போது, ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தைக் கதைக்களமாகக் கொண்ட இந்நூலில், இந்தியப் பிரிவினை சார்ந்த வரலாற்றுப் பூர்வமான இந்த இலக்கியப் பதிவில், சந்திரசேகரனும் அவன் வாழ்ந்து வந்த செகந்தராபாத் நகரமும் இந்திய சுதந்திரத்துக்குப்பின்னிருந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாகும் வரையிலான காலஇடைவெளியில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களையும், அந்நகரம் வன்முறையில் சிக்கி எப்படி அவதிப்பட்டது என்பதையும் அசோகமித்திரன் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார். பதின்ம வயது இளைஞன் சந்திர சேகரனின் பள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரை அவன் பார்த்த, அனுபவித்த செகந்தராபாத் வாழ்க்கை, அதில் போராட்ட காலத்தில் அவனது பங்கு, பள்ளியைப் பகிஷ்கரித்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவது, என அனைத்தும் அவனது கூற்றாகவும் படர்க்கைக் கூற்றாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப்பிரிவினைக்குப்பின் பிரிந்து கிடந்த குறுநாடுகளையும் சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து சர்தார் வல்லபாய் பட்டேல் இன்றிருக்கும் இந்தியாவை உருவாக்கினார். சிலர் உடனே இணைந்தாலும் சிலரை பெரும் பாடுபட்டு இணைக்க வேண்டியிருந்தது. இந்தியாவுடன் இணைய மறுத்த சமஸ்தானங்களை வலுக்கட்டாயமாக இணைக்க வேண்டியிருந்தது. அப்படித்தான் இந்திய ராணுவத்தின் துணையோடு ஹைதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது. தனித்தியங்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமுடன் ஏற்பட்ட சிக்கல் மதக்கலவரச் சிக்கலாக உருவெடுத்தது. அத்தனை நாள் எந்த மதவேறுபாடுமின்றி ஒற்றுமையாய்ப் பழகி வந்தவர்கள் கூட, பிறரை எதிரியாய்க்கருதி ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். பிறர் உடமைகளுக்குச் சேதம் விளைத்தனர். உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது.

நிஜாமின் அடியாட்களான ரஜாக்கர்களுக்கு அஞ்சியவர்கள் தம் குடும்பத்தாரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பத் தொடங்குகின்றனர். ஆனால் இந்திய ராணுவம் வந்திறங்கியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது. அதுவரை ஓடியொளிந்தவர்கள் ரஜாக்கர்களைத் திருப்பித்தாக்க ஆரம்பிக்கிறார்கள். அச்சமயம் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்படும் சந்திரசேகரன் அதை உறுதிப்படுத்திக்கொள்ள செகந்தராபாதின் சந்துக்களில் அலையும்போதுதான் தன் உயிரைக் காக்க ஒரு வீட்டுக்குள் புக நேரிடுகிறது. அச்சமும் பதற்றமுமாக அவ்வீட்டில் ஔிந்திருக்கும் ஒரு குடும்பத்தின் சிறுமி, தன்னை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்தை விட்டுவிடுமாறு வேண்டும்போது கலங்கிப் பதறுவது சந்திரசேகரன் மட்டுமல்ல நாமும்தான். தன்னை ஒரு பெண் எதிரியாய்க்கருதி மானத்தை இழந்தாவது தன் குடும்பத்தைக் காக்க நினைக்கும்படி அமைந்துவிட்டதே என்ற மனக்கசப்பை அவன் வாந்தியாய் துப்புவதோடு நாவல் முடிகிறது.

ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படும் காலம் வரையிலான நாவல் நிகழ்வில் செகந்தராபாத் நகரின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், கடைவீதிகள், வீதி அமைப்புகள், மக்களின் இயல்புகள், அவர்களின் குரூரம், சுயநலம், மூர்க்கமான குழுமனப்பான்மை முதலியவைகளை சாவதானமாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவரலாறும் மக்களின் சாமான்ய வரலாறும் ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து ஒரே இழையாய் சொல்லப்படுகின்றன. கலவரம் முளைவிட்டு வளரத்தொடங்கும் பொழுதுகளிலும் அம்மக்கள் கேரம், கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடிக்கொண்டு, 'வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்ற மனப்பாங்கிலேயே இருக்கின்றனர். சந்திரசேகரனைச்சுற்றிலும் ஆங்கிலோ இந்தியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் நிரம்பியிருக்கின்றனர். மதவேறுபாடு கலவரத்தில் கொண்டு விட்டபோதுதான் அம்மக்கள் தனித்தனித் தீவுகளாகி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மதம் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இருந்த சந்திரசேகரனும் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு மதசார்புள்ளவனாகக் கருதி, பிறரை எதிரியாய்க் கொண்டு இறுதியில் தெளிவுறுகிறான்.

சந்திரசேகரன் என்னும் சிறுவனுக்குள் இருக்கும் வெறுப்புணர்வுடன் நிகழ்வுகளையும் மனிதர்களையும் முன் வைத்துக் கதையை நகர்த்தும் அசோகமித்திரன் அதன் வழியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பண்பாட்டுக் கூறுகளால் பிளவுண்ட மனிதர்களுக்கிடையே உருவாகும் மனமுறிவுகள், ஐயங்கள், பயம், பதற்றம் என்பனவற்றைச் சித்திரித்துக் கொண்டே போகிறார்
இந்நாவலில் குறிப்பிடத் தக்க அம்சமாக அநேகமாக உரையாடல்களாலேயே இது உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இந்த உரையாடல்கள் மூலம் பாத்திரங்களின் குண விசேஷங்களும், பண்புகளும் பிரசன்னமாவதைக் கூர்ந்து நோக்கினால் காணமுடியும். நாவலில் அங்கங்கே இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் காட்சிகளை மிகத்துல்லியமான விவரங்களோடு, நுண்தகவல்களோடு அதே சமயம் அதிக அலங்காரமில்லாமல் விவரித்திருப்பது இந்நாவலை விட்டு சற்றேனும் விலக முடியாதவாறு நம்மைக் கட்டிப்போடுகிறது. ஒரு தனிமனிதனின் அனுபவங்களின் ஊடாகவே காட்சிகள் விவரிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடைய ஆன்மாவின் மௌன ஓலத்தை இதில் கேட்க முடிகிறது.

Saturday 8 April 2017

"சிலிர்ப்பு" - புத்தக விமர்சனம்.

மனிதர்களைப்பற்றி, அவர்களின் அழகுகள், ஆசாபாசங்கள், பலம், பலவீனம் என அத்தனையையும் பற்றி எழுதியவர் தி.ஜானகிராமன். தஞ்சை மண்ணைச் சொந்தமாகக்கொண்ட அவரது கதைகளில் பெரும்பாலும் அம்மண்ணும் மண் சார்ந்த கலாச்சாரமுமே பெருமளவில் பிரதிபலிக்கின்றன. அதிக அலங்காரமில்லாத அம்மன் சிலையின் அழகைப்போன்ற எளிமையான அவரது எழுத்தில் இதுதான்..இப்படித்தான் எனப் பட்டவர்த்தனமாக கனமான விஷயங்களை நம்முன் பரிமாறிவிட்டு ஒதுங்கி விடுகிறார். ஜானகிராமனின் சிறுகதைகளில் சிறந்தவை என தனக்குப் பட்டவற்றைத் தொகுத்து எழுத்தாளர் பிரபஞ்சன் வழங்கியிருக்கும் “சிலிர்ப்பு” என்ற சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அனைத்துமே முத்தும் ரத்தினமுமேயாகும்.

//தி.ஜானகிராமனின் கதைகள் யதார்த்த வகைப்பட்டவை. ஆனால் அவரது யதார்த்தம் வேறுவகைப்பட்டது. இருப்பதை, கண்டதை எழுதிக்கொண்டு போவதன்று அவர் யதார்த்தம். அவர், ‘வாழ்க்கை’ என்று எதை நம்பினாரோ அதை எழுதிய யதார்த்தம் அவரது கதைகள்.// என தனது முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிட்டிருப்பது சத்தியமான உண்மை. கதையை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே நதிச்சுழல்போல் அது வாசகனை தன்னுடன் இழுத்துக்கொள்கிறது. எவ்வித அசௌகரியமுமில்லாமல் அவனும் அத்துடனேயே பயணிக்கிறான். தன்னையும் கோடானுகோடி நீர்த்துளிகளில் ஒன்றாக உணர்கிறான். கதையின் மாந்தர்களோடு தன்னையும் ஒரு பாத்திரமாக உணர்ந்து பங்கெடுக்கத்துவங்கி விடுகிறான். கதையின் இறுதியில் அவர்கள் இறக்கி வைக்கும் சுமையைத் தாளமுடியாமல் தத்தளிக்கிறான். மேலோட்டமாக வாசிக்கும்போது ஜனரஞ்சகமாகவும் சற்றே உள்நோக்கி வாசிக்கும்போது அழகிய இலக்கிய நுண்மை மிக்கதாகவும் இருக்கின்றன அவரது கதைகள். அந்த அழகின் ஆழத்தில் மனிதனின் ஆதார உணர்வுகளனைத்தும் அமிழ்ந்து கிடக்கின்றன. இச்சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்குந்தோறும் அவை ஒவ்வொன்றாக மேலெழுந்து வருகின்றன.

ஜானகிராமன் எழுத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று உரையாடல் மூலமே கதையை நகர்த்திச்செல்வது. அவரது கதைகளில் தேவையற்ற விளக்கங்கள், வர்ணனைகள் என எதுவுமே இல்லை. உரையாடல் மூலமே பாத்திரங்களின் குணாம்சங்கள், அவர்களது உறவு முறைகள், மன ஓட்டம், பண்பு முதலிய அனைத்தையும் வாசகனுக்குப் புரிய வைத்து விடும் அபூர்வ எழுத்து அவருடையது. ஆண் பெண் உறவுகளைப்பற்றியும் அதிலிருக்கும் சிடுக்குகளைப்பற்றியும் அதிகம் எழுதிய ஜானகிராமன் தனது கதைகளில் பெண்களின் அசாத்திய ஆளுமையை அழகியலோடு பதிவு செய்திருக்கிறார். தன்னைப் போஷிக்கும் ஆணை, “எந்த நேரத்துலே பேசினாலும் எல்லாத்துக்கும் வரம்பு இருக்கு. பொம்மனாட்டி கொஞ்சம் பாக்கும்படியா இருந்திட்டா, இப்படிப் பைத்யம் புடிச்சுப் பாயைப் பிராண்டிக்கிட்டுப் பேத்திக்கிட்டுத் திரியணுமா?” என்று துரத்தும் ஆளுமை எப்பேர்ப்பட்டது!!. அப்படிப் பெண்ணின் ஆளுமை புரிந்த ஆணாக இருப்பதால்தான், “உள்ள போறியா இல்லையா?” என்று கபோதிக்கோபத்தில் கிழவியை விரட்டுகிறார் கிழவர். “என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே.. போயிட்டியேடி” என்று மனைவி வாலாம்பாளை நினைத்து உருகுகிறார் சாமநாது. 

ஜானகிராமனின் கதைகளில் வரும் பெண்கள் தங்களது இன்ப துன்பங்களில் வெளிப்படுத்தும் ஆளுமை அழகியல் மிக்கது. அந்த ஆளுமையே நம்மை அவர்கள் மீது மரியாதை செலுத்தத் தூண்டுகிறது. வயிற்றுப்பாட்டிற்காக தன் குடும்பத்தைப் பிரிந்து எங்கோ தொலைதூரத்திலிருக்கும் கல்கத்தாவிற்கு குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குப் புறப்பட்டிருக்கும் குஞ்சுவிற்கு வெறும் பத்து வயதுதான். குழந்தைத்தனம் மாறாத இச்சிறுவயதிலேயே முகம் தெரியாத ஏதோ ஒரு வீட்டிற்குப் பயணப்பட வேண்டியிருக்கும் அச்சூழலை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன!! பசியை வாயைத்திறந்து சொல்லக்கூட தயங்கி மறைப்பது சமர்த்தில் சேர்த்தியா? பட்டுப்பட்டு பாறையாய்க் காய்த்துப்போன உள்ளத்துக்குத்தான் அப்படி மறைக்க வரும். “எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு, எனக்கு இதுக்கு மேல வக்கில்லை” என மறுகும் சக பயணியரில் ஒருவர்தான் நாம். கண்ணீர் வழியக் கடந்து செல்வதைத்தவிர நாம் செய்யக்கூடுவது வேறொன்றுமில்லை.

மனித மனங்களின் உணர்வுகளை உளவியல் கலந்து சொல்லிச்சென்றவர்களில் தி.ஜானகிராமனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆண்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்த்திருக்கும் ஜானகிராமன், போட்டி மனப்பான்மை, பொறாமை, கலக்கம், குற்றவுணர்வு, கையாலாகாத்தனம் என உணர்வுகளால் ஆட்டி வைக்கப்படும் மனிதர்களை நம்முன் ரத்தமும் சதையுமாய் உலவ விடுகிறார். இச்சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “பாயசம்” சிறுகதையில் வரும் சாமிநாது தனது உளவியல் சிக்கல்கள் தன் மனதில் ஏற்படுத்திய வெறுமையைச் சமாளிக்க தனது உடல்பலத்தை தனது பெருமையாய் எண்ணி அவ்வெறுமையை நிரப்புகிறார். தனது அண்ணன் மகனான சுப்பராயனுக்குக் கிடைக்கும் நற்பெயர் ஏற்படுத்திய பொறாமைப்புகைச்சலே அவரை நகர்த்த நாலாள் தேவைப்படும் பாயச ஜோடுதவலையை ஒற்றையாளாய்க் கவிழ்க்கச்செய்கிறது. தனது எதிராளிக்கு வயல் கிடைத்துவிடக்கூடாது என்ற போட்டி மனப்பான்மைதான் ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டமடையச்செய்கிறது சுந்தர தேசிகரை. அத்தனை நாள் வலதுகையாய் இருந்தவரை நம்பாமற்போனதால்தான் ஆண்டவன் தன்னைத் தண்டித்து விட்டான் எனக்குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது. 

பெரிய மனிதர்கள், சின்ன மனிதர்கள், ஆண்கள், பெண்கள் என அத்தனை பேரையும் தன் பார்வையில் எழுதிச்சென்ற ஜானகிராமனின் எழுத்து பல பரிமாணங்களிலும் நீள்வது. புதிய வாசகனுக்கு அவரது கதைகள் மேம்போக்கான, எளிமையானவையாகத் தோன்றினாலும் வாசிக்குந்தோறும் அவரது கதைகளில் ஒளிந்திருக்கும் அசாதாரணம் சாதாரணமாக வளைய வருகிறது. “கண்டதுக்கெல்லாம் தவங்கிடந்தா மனசுதான் ஒடியும். தண்டனைதான் கிடைக்கும்” எனவும், “எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணி இந்த உடம்பையும் நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும் மனுஷன். இல்லாட்டா பாவம் பின்னாலே வந்து வந்து அறுக்கும்” எனவும் கூறும் இவரது மனிதர்களில் ஒருவனான காலதேவன் பசியின் வடிவாக உட்கார்ந்திருக்கிறான். பார்க்கத்தான் நமக்கு அகங்காரமில்லாத கண் வேண்டும்.

தி.ஜானகிராமன் எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 கதைகளைக் கொண்டு, "சிலிர்ப்பு" எனத்தலைப்பிடப்பட்ட இச்சிறுகதைத்தொகுப்பு, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களால் தொகுக்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.

Friday 7 April 2017

சாபுதானா கிச்சடி.

மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை உபயோகப்படுத்திச் செய்யப்படும் உப்புமா மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காலை அல்லது மாலை டிபனாகவும் விரத நாட்களுக்கான உணவாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வடக்கர்களால் "சாபுதானா கிச்சடி" என்றழைக்கப்படும் இப்பண்டம் செய்வதற்கு மிகவும் எளிதானது. மேலும், மாவு மற்றும் ப்ரோட்டின் சத்து நிரம்பியது.

மளிகைக்கடைகளில் வற்றல் போட உபயோகப்படும் ஜவ்வரிசி எனக் கேட்டு வாங்கவும். நைலான் ஜவ்வரிசி கிச்சடி செய்ய உதவாது. ஒரு கப் ஜவ்வரிசியை இரண்டு முறை நன்கு தண்ணீரில் அலம்பி வடித்து விடவும். பின் ஜவ்வரிசியின் மேற்பரப்பில் ஒரு செ.மீ அளவே தண்ணீர் நிற்குமளவிற்கு நீரூற்றி ஊற விடவும். வாகைப்பொறுத்து ஜவ்வரிசி ஊற அரைமணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரம் வரைக்கும் ஆகலாம். காலையில் கிச்சடி செய்ய வேண்டுமானால் இரவே ஊற வைத்து விடலாம். மாலையில் வேண்டுமெனில் முற்பகலில் ஊற வைக்கவும். அத்தனை நீரையும் உறிஞ்சிக்கொண்டு நன்கு ஊறி உதிர்உதிராக வந்துவிடும். ஊறிய ஜவ்வரிசியில் ஒன்றை எடுத்து நசுக்கினால் மசிய வேண்டும். மசியவில்லையெனில் மேலும் சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அரை கப் வேர்க்கடலையை கருகாமல் வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். காரத்திற்கேற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைப் பொடியாக ஒரு தேக்கரண்டியளவு நறுக்கிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிவராத்திரி, ஏகாதசி போன்ற விரத நாட்களில் செய்வதானால் வெங்காயம் சேர்க்க வேண்டாம்.

ஒரு அகன்ற வாணலியில் இரண்டு டேபி்ஸ்பூன் நெய்யைச்சூடாக்கி அதில் கால் தேக்கரண்டி சீரகத்தைப்போட்டு பொரிய விடவும். பின் நறுக்கி வைத்த மிளகாய், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றைப்போட்டு வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கியபின், அத்துடன் ஜவ்வரிசியையும் ருசிக்கேற்ப காலாநமக் அல்லது சாதாரண உப்பைச் சேர்த்துக்கிளறியபின் மூடி ஒரு நிமிடம் வேகவிட்டு, பொடித்த வேர்க்கடலை மற்றும் உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆகும்வரை மறுபடியும் மூடியி்ட்டு குறைந்த தீயில் வேக விடவும். அவ்வப்போது மூடியைத்திறந்து கிச்சடியைக் கிளறிக்கொடுக்கவும். உதிர்உதிராக நன்கு வெந்தபின் இறக்கி கொத்துமல்லித்தழையைத்தூவி சிறு எலுமிச்சைத்துண்டுடன் பரிமாறவும். சாப்பிடும்போது சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைப்பிழிந்து கிச்சடியுடன் கலந்து பின் சாப்பிடுதல் மரபு.

LinkWithin

Related Posts with Thumbnails