Showing posts with label பிளாஸ்டிக். Show all posts
Showing posts with label பிளாஸ்டிக். Show all posts

Saturday, 5 January 2019

நெகிழி வதம்.. ஆரம்பம்.

தறி கெட்டு ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்த கடிவாளம் போட்டு இழுத்துப்பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வருவதைப்போல், பூமியின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தும் ஆபத்தாக விளங்கும் ப்ளாஸ்டிக்கின் உபயோகத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் என்பதை உலக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப்பற்றி முன்பொரு முறை எழுதிய கட்டுரை இங்கே. இந்தியாவைப்பொறுத்தவரை அவ்வப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதைப்பற்றி விவாதித்தாலும், ஒரு நல்ல முடிவு எடுக்கப்படாமலே இருந்து வந்தது. கடைசியில், பூனைக்கு மணி கட்டும் விதமாக டில்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா, பிகார் என ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பகுதிகளில் ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தப்பட்டியலில் நம் தமிழகமும் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி.

எனக்குத்தெரிந்து எண்பதுகளின் பிற்பகுதியில்தான், சரியாகச்சொன்னால் 1989ல்தான் கேரிபேக் எனப்படும் ப்ளாஸ்டிக் பைகள் புழக்கத்துக்கு வந்தன. மங்கலான வெள்ளைப்பின்னணியில் நீலம், குங்குமக்கலர், பச்சை, மஞ்சள் என வெவ்வேறு கலர்களில் பட்டைக்கோடுகள் போட்டதோ, அல்லது தனிக்கலர்களிலோ வர ஆரம்பித்தன. முதற்கட்டமாக காய்கனிகள் விற்பவர்கள் பொருட்களை அதில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த கட்டமாக மளிகைப்பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். சில கடைகளில் இன்னும் ஒரு படி மேலே போய், பொருட்களை ஐம்பது கிராமில் ஆரம்பித்து ஒரு கிலோ வரையிலான அளவுகளில் நிறுத்து ஆயத்தமாகப் பாக்கெட் போட்டு வைத்தார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அப்படியே எடுத்துக்கொடுத்தால் ஆயிற்று. அதன்பின், ஒவ்வொரு வியாபார ஸ்தலமாக தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக்கொண்டே சென்றது ப்ளாஸ்டிக். தேக்கிலையில் பூவைப்பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்த வியாபாரிகள் சிறு பையில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்ததுதான் இதன் உச்சகட்டம். இந்த ப்ளாஸ்டிக் கேரி பேகுகள் இலவசமாகக் கிடைத்ததுதான் இவை பெருமளவில் பரவி இன்றைய சீர் கேடுகளுக்கு வழி வகுத்தன என்றால் மிகையல்ல.
மஹாராஷ்ட்ராவில் தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் பைகள். இவற்றில் பாலிதீன் பை 50மைக்ரானுக்கு மேற்பட்டது.
அது நாள் வரை, துணிப்பைகள், வயர் கூடைகள், பிக் ஷாப்பர் எனும் கட்டைப்பைகள் சகிதம் கடைகளுக்குச் சென்றவர்களுக்கு, 'இனிமேல் அப்படி எதையும் தூக்கிச்சுமக்கத் தேவையில்லை, அழுக்குப்படிந்த பைகளைச் சுத்தம் செய்து பத்திரப்படுத்த வேண்டியதுமில்லை, பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சேமித்ததும், பைகளை தூர எறிந்து விடலாம்' என்ற நினைப்பே இனித்தது. காய்கறிகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் தனித்தனி கேரிபேகுகளில் வாங்கிக்கொண்டால், வீட்டிற்கு வந்ததும், ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து மறுபடி அதே பைகளில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளும் பழக்கம் பெருகியது. மல்லிகைப்பூவின் வாசனை தோசைமாவு, வத்தக்குழம்பு இன்ன பிற அயிட்டங்களில் பரவாமை கண்டு மகிழ்ந்தனர். மும்பையைப் பொறுத்தவரை, ஆபீசுக்கு மதிய உணவாக சப்பாத்தி செய்து அதை பால் கவர்களில் கட்டி கொண்டு சென்றவர்கள், ப்ளாஸ்டிக் கேரிபேகுகளுக்கு மாறினார்கள். ஒரு தடவை உபயோகித்தபின் தூக்கி எறிந்த பைகளால் ஊர் நிரம்பியது.  ப்ளாஸ்டிக் கேரிபேகுகளின் ஆயிரம் உபயோகங்கள் என வீட்டுக்குறிப்புகள் எழுதுமளவுக்கு அவற்றை விதவிதமாகப் பயன்படுத்தினர் மக்கள். இதற்காகவே, காய்கறிகள் வாங்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தனி கேரிபேக் கேட்டு வாங்கத்தொடங்கினர். இரண்டு எலுமிச்சம்பழங்கள் வாங்கினால் கூட அவற்றையும் தனிப்பையில் போட்டுக்கொடுக்க வேண்டும். கடைக்காரர்களும் சளைத்தவர்களல்ல.. சுண்டல் வினியோகம் கெட்டது போங்கள்... அய்யா வாங்க... அம்மா வாங்க.. என அள்ளியள்ளிக்கொடுத்தார்கள். திடீர் மழை வந்தால் தலை நனையாதிருக்க கேரிபேகை மாட்டிக்கொண்டவர்கள் அனேகம் பேர். ஒரு சில மக்கள், ஹெல்மெட்டுக்குப் பதிலாக, கேரிபேகை உபயோகித்ததாகவும் கேள்வி.

இப்படியெல்லாம் கொடுத்துப் பழக்கியபோது, இந்த ப்ளாஸ்டிக் பின்னாளில் ஓர் அழிக்க முடியாத அசுரனாக உருவெடுக்கும் என்பதை யாரும் உணர்ந்தாரில்லை. அந்நாளில் ஃபேஸ்புக், வாட்சப் போன்றவை இல்லாதிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையில் பெரு வெள்ளம் வந்து அவதிப்பட்டபோது, மழை நீர் வடிகால்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டதால்தான் வெள்ளம் வடியவில்லை என்று கண்டுபிடித்தபோது, இனிமேல் கடைகளில் 50 மைக்ரானுக்கு அதிகமான அளவுள்ள ப்ளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. வெளியான சூட்டில் ஆங்காங்கே சோதனைகளும் நடந்து முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பெற்றது. ஆனால், பெருவாரியான எதிர்ப்பால் இந்த விழிப்புணர்வு சீக்கிரமே வலுவிழந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது ஆர்வலர்கள் தீயை ஊதி ஊதி கனன்று கொண்டிருக்கச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாளாக நாளாக, பொது மக்களிடையேயும் விழிப்புணர்வு மெல்ல பரவத்தொடங்கியது. ஒரு சிலர் வீட்டிலிருந்து பைகளை முன்போல் எடுத்துச்செல்லத்தொடங்கினோம். கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் கொடுத்தாலும் மறுத்தோம். கடைக்காரர்கள் மற்றும் சக மக்களின் வினோதமான பார்வையை அலட்சியம் செய்தோம். சந்தையிலிருந்து திரும்பும்போது, எங்கள் கட்டைப்பைகளில் அவரையும் தக்காளியும் கொத்துமல்லியும் பச்சைமிளகாயும் கலந்துதான் கிடக்கும். வீட்டிற்கு வந்ததும், அவற்றை வகை பிரித்து ஃப்ரிஜ்ஜில் அடுக்கினோம். தப்பித்தவறி கிடைக்கும் கேரிபேகுகளையும், முடிந்த வரை மறு உபயோகம் செய்தோம்.

இனி பொறுப்பதில்லை என முடிவு செய்த அரசு, கடந்த 2018ம் வருடம் மார்ச் வாக்கில், ஒரு சில அத்தியாவசிய பொருட்களைத்தவிர மற்ற அனைத்து ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதும் தடையுத்தரவு பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பொருட்களின் பட்டியல் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வழியாக அறிவிக்கப்பட்டது. தவிரவும் கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அறிவிப்புப்பட்டியல் ஒட்டப்பட்டது.  மூன்று மாத கால அவகாசமளித்து, அக்கால கட்டத்தில் தங்களிடமிருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை முறையாக ஒழிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. மும்பை மாநகராட்சியின் தலைமையலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில், நகரில் ஆங்காங்கே சேகரிப்புத்தொட்டிகள் அமைக்கப்பட்டன. குடியிருப்புகள் தங்கள் பகுதி மக்களிடம் சேகரித்து அவற்றை நகராட்சியிடம் ஒப்படைத்தன. ப்ளாஸ்டிக்குக்கு மாற்று ஏற்பாடுகள் என்னென்ன என்று ஒரு கண்காட்சி நடத்தி மக்களுக்கு தெளிவுறுத்தப்பட்டது. துணி, சணல் பைகள், மறுபடி முழு உபயோகத்திற்கு வந்தன. வீட்டு அடுக்களைகளில் கண்ணாடி, எவர்சில்வர் பாத்திரங்கள், பாட்டில்கள் மறுபடி இடம் பிடித்தன. எங்கள் வீட்டில் மளிகைப்பொருட்கள் இன்றும் ப்ளாஸ்டிக் பெட் ஜார்களில்தான் இருக்கின்றன. தேன் முதலானவை வரும் பாட்டில்களைச் சுத்தம் செய்து அதில் பொருட்களை நிரப்பி வைத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கும் கண்ணாடிக்கும் ஏழாம் பொருத்தம்.
தடை செய்யப்பட்ட மற்றும் படாத ப்ளாஸ்டிக் பொருட்களின் பட்டியல்
இதனாலெல்லாம் மஹாராஷ்டிரத்தில் ப்ளாஸ்டிக் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டதா? என்றால், அதுதான் இல்லை. அறிவிப்பு வந்த புதிதில் அதிகாரிகள் கடைகள், சந்தை, சிறு வியாபாரிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் முழு வீச்சில் சோதனை நடத்தி, 50 மைக்ரானுக்கும் குறைந்த பைகள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். நெல்லைச்சீமையில், “புது மாடு குளிப்பாட்டுதல்” என்றொரு சொல் உண்டு. எதுவும் புதிதாக இருக்கையில் விழுந்து விழுந்து கவனித்து விட்டு, பழசான பின் கண்டு கொள்ளாமல் விடுவதை அப்படி எகத்தாளமாகக் குறிப்பிடுவார்கள். ப்ளாஸ்டிக் ஒழிப்பும் அப்படித்தான்… மறுபடி நிறைய இடங்களில் ப்ளாஸ்டிக் பையைத்தவிர பிற ப்ளாஸ்டிக்கின் உபயோகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், சற்றே கட்டுக்குள் இருக்கிறதென்றே சொல்லலாம்.

ப்ளாஸ்டிக்  உபயோகம் பெருமளவில் கட்டுக்குள் வந்து விட்டாலும், இந்த அறிவிப்பால் அதிருப்தி கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சின்ன கடைகளில் கேரிபேகுகளையும் ப்ளாஸ்டிக் கவர்களையும் தடை செய்து விட்டு பெரிய கடைகளில் ப்ராண்டட் பொருட்களைப் ப்ளாஸ்டிக்கில் பொதிந்து விற்பனைக்கு வைத்திருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனிந்த பாரபட்சம் என அவர்கள் கேட்கிறார்கள். தவிரவும், இன்றும் காய்கறிக்கடைகளுக்குச் சென்று கேரிபேக் கேட்டு அடாவடியாகச் சண்டை போடும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடைகளில், காகிதம், டிஷ்யூ, சணல், மற்றும் துணிப்பைகளில் பொருட்களைப்போட்டுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சில கடைகளில் காகிதத்தில் பொதிந்தும் கொடுக்கிறார்கள். இவற்றில் சணல் மற்றும் துணிப்பைகள் அவற்றின் அளவுக்கேற்ப விலையில் கிடைக்கின்றன. துணிக்கடைகளில் கூட, காசு கொடுத்தால்தான் பை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து பை கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். காகிதம், மற்றும் சின்ன அளவு டிஷ்யூ பைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இலவசமாகக் கிடைக்கின்றன என்பதாலேயே மக்களும் டிஷ்யூ பைகளுக்கு பாலிதீன் கேரிபேகுகளுக்குக் கொடுத்த அதே வரவேற்பை அளிக்கிறார்கள். அதான்.. அதேதான். வாங்கிக்குவிக்கவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கியெறியவும் ஆரம்பித்திருக்கிறார்கள். தனித்தனி டிஷ்யூ பைகளில் போட்டுத்தரச்சொல்லி காய்கறிச்சந்தையில் சில வாடிக்கையாளர்கள் சண்டை போடுவதும், கடைக்காரர் மறுப்பதும் கண் கொள்ளாக் காட்சி.

காகிதப்பைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விடுமே? மரங்களை அதிகம் வளர்க்க வேண்டிய இப்போதைய சூழலில், ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டினால் என்னாகும்? என இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. தவிரவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எறியப்படும் டிஷ்யூ பைகள் மட்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காதா? அவை, மழை நீர் வடிகால்களில் சென்று அடைத்துக்கொள்ளாதா? என்னதான் இப்பைகள் விரைவில் மக்கி விடும் என்றாலும், இவற்றையும் அளவில்லாமல் குப்பையாகச் சேர்ப்பது சரிதானா? என பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. 

Tuesday, 29 March 2011

ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...

பாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.

"வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் இதமா இருக்கும்.."ன்னு பரிதாபமா கேட்டதும் சரின்னு ஒப்புக்கிட்டார்.(ஒட்டகம் எங்கியாவது பேசுமான்னு ஆராவது கேட்டீங்க ஒட்டகத்து கிட்டயே பிடிச்சுக்கொடுத்துடுவேன் :-)) இன்னும் கொஞ்சம் நேரமானதும் பாதி உடம்பை கூடாரத்துக்குள்ள வெச்சிக்க அனுமதி கேட்டது. கூடாரத்துக்குள்ள கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்குமேன்னு யோசிச்சாலும் ஒட்டகத்து மேல பரிதாபப்பட்டு சரின்னுட்டு ஒரு ஓரமா ஒதுங்கி படுத்துக்கிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரமானதும், 'ரொம்ப குளிருது.. கூடாரத்துக்குள்ளயே வந்துடறேனே'ன்னு சொல்லிச்சு.

'வேண்டாம்.. கூடாரத்துக்குள்ள ரெண்டுபேரு தங்கற அளவுக்கு இடமெல்லாம் கிடையாது'ன்னு அவர் சொல்லிக்கிட்டிருக்கையிலேயே ஒட்டகம் கூடாரத்துக்குள்ள வந்து நின்னுது. சுத்தும் முத்தும் பாத்துட்டு, 'நீ சொன்னது சரிதான், இந்த கூடாரத்துக்குள்ள ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு.. அதனால, நா இங்கே தூங்கறேன். நீ வெளியே படுத்துக்கோ'ன்னு சொல்லி பயணியை வெளியே தள்ளிட்டுது. பாவம் அவர்.. பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததுக்கு தனக்கு இப்படி ஒரு கதியான்னு குளிர்ல வெறைச்சிப்போயி நின்னாரு.

கிட்டத்தட்ட இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. ஒரு காலத்துல, வீட்டுக்கு ஏதாவது பொருட்கள் வாங்குனா, அதை காகிதப்பைகள்ல போட்டுக்கொடுப்பாங்க. சிலசமயங்களல நம்ம அஜாக்கிரதையால பேப்பர் கிழிஞ்சுட்டா, பொருட்கள் எல்லாம் சிந்திடும். முக்கியமா.. மழைக்காலங்கள்ல பேப்பர்லாம் தண்ணியில ஊறிப்போயி பொருட்களும் கெட்டுப்போயிடும். அந்த சமயத்துல, ப்ளாஸ்டிக் பைகள் பேப்பரின் உபயோகத்தை குறைச்சு, மரங்களை காப்பாத்த வந்த ஆபத் பாந்தவன், அனாத ரட்சகனா தெரிஞ்சதுல வியப்பேதும் கிடையாது. பல்பொருள் அங்காடிகளில் மட்டுமல்ல, இப்பல்லாம் சின்னக்கடைகளில் கூட சின்ன அளவுகளான அம்பதுகிராம், நூறுகிராம்லயும் பொருட்களை எடைபோட்டு, பாக்கெட் போட்டு வெச்சிடறாங்க. நாம கேட்டதும் சட்ன்னு எடுத்துக்கொடுத்துடறாங்க.

அதுவுமில்லாம அப்பல்லாம் ஏதாச்சும் வாங்கணும்ன்னா, கையில் பை கொண்டு போகணும். திரவப்பொருட்களான பால்,தயிர், எண்ணெய் இதெல்லாம் வாங்கணும்ன்னா பாத்திரம் கொண்டு போகணும்.இதையெல்லாம் நொச்சுப்பிடிச்ச வேலையா நினைச்ச மக்களுக்கு, மார்க்கெட் போகணும்ன்னா கையை வீசிக்கிட்டுப்போலாம்,  எதுவானாலும், அவங்களே பையில் போட்டுக்கொடுத்துடுவாங்க.. என்ற நினைப்பே தேவாமிர்தமா இனிச்சிருக்கும். பலன்.. கிராமங்கள், பெருநகரங்கள்ன்னு பாகுபாடு இல்லாம ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பைன்னு வாங்கி குப்பையை குவிச்சிக்கிட்டிருந்தாங்க.. ஆனா இந்த விஷயத்துல, கிராமங்களால நகரங்கள விட கூடுதல் குப்பை சேர்க்கமுடியலை.. என்ன இருந்தாலும் நகரத்துக்காரங்க கொஞ்சம் ஃபாஸ்டு இல்லியா :-))

முக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு. இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ?... சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.

நாம வேணாம்ன்னு தூக்கிப்போடற பிளாஸ்டிக்குகள்தான் கொஞ்சம் கொஞ்சமா நம்மோட சுற்றுப்புற சூழ்நிலையை கெடுக்குது. அங்கங்கே உண்டாகும் குப்பை மலைகள், அப்புறம் காத்துல பறந்து ஆபத்தை விளைவிக்கும் பாலிதீன் பைகளைப்பத்தி சொல்லவே வேணாம். இந்தப்பைகளெல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் இதிலெல்லாம் போய் அடைச்சிக்கிட்டா அங்கங்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு அதிலெல்லாம் கொசுக்கள் வாடகை கொடுக்காமலேயே குடியும் குடித்தனமுமா இருக்கும். மழை சமயங்கள்ல வெள்ளம் தேங்கி ஏகப்பட்ட சேதத்தையும் உண்டுபண்ணும். மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருந்ததால்தான் அதுக்கப்புறம் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடைசெஞ்சாங்க. மீறி உபயோகப்படுத்தினா அபராதம்ன்னும் எச்சரிக்கை விடுத்தாங்க.

 நீர், நிலம், ஆகாயம், பூமின்னு இயற்கையின் நாலு பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம் இது. ஒரு பிளாஸ்டிக் துண்டு சிதைவடைய சுமார் ஆயிரம் வருஷங்களாகும். வெயில்ல காய்ஞ்சாலும் நுண்ணிய துண்டுகளாகுமே தவிர முழுசும் அழியாது. இந்த மாதிரி நுண்ணிய துண்டுகள்ல தண்ணீரில் அடிச்சிட்டுப்போறதெல்லாம் ஆத்துலயும் கடல்லயும் ஒதுங்கும், இல்லைன்னா மூழ்கிப்போயிடும். இப்படி மூழ்கற சின்னச்சின்ன துண்டுகளை சாப்பாடுன்னு நினைச்சு கடல்வாழ் உயிரினங்கள் முழுங்கிவெச்சுடும். வயித்துக்குள்ள போன பிளாஸ்டிக் செரிக்காம உணவுமண்டலக்குழாயை அடைச்சிக்கிடும். அதனாலயே பட்டினிகிடந்து மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கறதும் உண்டு.

கடலில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அறுந்ததால் தூக்கிவீசப்பட்ட மீன்பிடி வலைகளில் மாட்டிக்கிட்டும் உசிரைவிடும் கடல்வாழ் உயிர்கள் ஏராளம். சுமாரா நூறுமில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுல கடல்ல ப்ளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கலாமாம். இதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைக்கவே பயமாருக்கு. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் தண்ணீர்ல கரைஞ்சு, மீன்களின் உடலில் கலக்குது. அதே மீனை மனுஷன் சாப்பிட்டா அந்த விஷம் மனுஷனோட உடம்பில் கலந்தா என்னெல்லாம் விளைவுகளை உண்டாக்கும் :-(

அளவுக்கு மேல சேருதேன்னு இதுகளை அழிக்கவும் முடியாது. தானாவே அழியறதுக்கு சுமார் ஆயிரம் வருஷங்களாவுதேன்னு தீக்கு தின்னக்கொடுத்தா அது சுற்றுச்சூழலை இன்னும் மாசுபடுத்துது. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும்போது வெளியேறும் நச்சுவாயுக்கள் கான்சரைக்கூட வரவழைச்சுடும். இதெல்லாம் தண்ணீரில் கரைஞ்சும், காத்துல கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதெல்லாம் சுவாசிப்பதால் நம்ம நரம்புமண்டலமும் பாதிக்கப்படற அபாயம் இருக்கு.

பழைய பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, மெஷின் மூலம் நுணுக்கப்பட்டோ, அல்லது நார்களா உரிக்கப்பட்டோ மறுசுழற்சிக்கு தயாராகுது. மறுசுழற்சி செய்யறதுமூலம் பூமியிலிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்ன்னாலும் அது நிரந்தரத்தீர்வாகாது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தரம் நிச்சயமா குறைஞ்சதாகவே இருக்குது. அதுல காரீயத்தின் அளவு கூடுதலா இருப்பதாகவும், அதை உபயோகப்படுத்தி செய்யப்படும் பொருட்கள், முக்கியமா விளையாட்டுப்பொருட்கள் குழந்தைகள் உபயோகப்படுத்த ஏத்தவை இல்லைன்னும் சொல்லப்படுது. அதுவுமில்லாம உற்பத்தி செய்யப்படும்போது எப்படி நச்சு வாயுக்கள் வெளிப்படுதோ.. அதேமாதிரி மறுசுழற்சி செய்யப்படும்போதும் வெளிப்படுது. இது காத்துல கலக்கறதுனால, தோல் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் எல்லாம் உருவாகுது.

எல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.

1 -  பெட் பாட்டில்கள்,

2 - HDPE ( High Density Polyethylene) லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது.

3 - PVC (Poly Vinyl Chloride)சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது.

4 - LDPE (Low Density Polyethylene) உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது.

5 - PP (Poly propylene) சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது.

6 - P (PolyStyrene) சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.

7 - இதர வகைகள். இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.

இதுல 3,6,7 ஆம் வகைகளை மறுசுழற்சி செஞ்சா சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும். மேலும் கெடுதலை தவிர்க்கணும்ன்னா உற்பத்தி குறைக்கப்படணும். இதனால இதுகளை உற்பத்திசெய்ய ஆகும் பெட்ரோல் செலவும் மறைமுகமா குறைக்கப்படுது. ஆனா, தண்ணியில விட்டதை தண்ணியிலேயே பிடிக்கிறமாதிரி, நாக்பூரில் ராய்சோனி எஞ்சினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா இருக்கும் அல்கா உமேஷ் சட்காவ்ங்கர் என்பவர் மார்ச் 3, 2003 அன்று, ஒருகிலோ ப்ளாஸ்டிக் கழிவிலிருந்து 800கிராம் பெட்ரோலை பிரிச்செடுத்து சாதனை செஞ்சுருக்கார்.

எல்லோருக்குமே சவாலா இருக்கறது பாலிதீன் பைகள்தான். மழைத்தண்ணி பூமிக்குள்ள போகாம இது பெரும்பாலும் தடுத்துடறதால நிலத்தடி நீர் குறையற அபாயமும் இருக்கு. வெய்யில்ல காய்ஞ்சு பொடிப்பொடியாகும் இந்தப்பைகள்ல இருக்கற காரீயம் போன்ற நச்சுக்கள் தேங்கற ஓரளவு நிலத்தடி நீர்ல கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குது. காத்துல பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குது. ஆடுமாடுகளும் அதை இரைன்னு நினைச்சு தின்னுட்டு உணவுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு உசிரை விடுது.

இந்தப்பைகளை குப்பை சேகரிக்கறவங்க கிட்டேயிருந்து சேகரிச்சு அதை bitumen என்ற வேதிப்பொருளுடன் கலந்து ரோடு போடறதுக்கு பயன்படுத்தலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. மதுரை தியாகராஜர் இஞ்சினியரிங் காலேஜ் ப்ரொஃபசரான ஆர். வாசுதேவன்தான் அந்த பெருமைக்குரியவர். நவம்பர் 2002ல் பரிசோதனை முயற்சியா ரோடும் போட்டிருக்காங்க. பைகளையும் அழிச்சாச்சு.. ஆயுசு கெட்டியான ரோடும் போட்டாச்சு.. குப்பைகளை சேகரிச்சு அதுல வரும் காசில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் எளிய மக்களுக்கு வேலையும் கொடுத்தாச்சுன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா :-)

சோதனை முயற்சியின் அடுத்த கட்டமா நம்ம பெங்களூர்ல இருக்கற k.k. plastic waste management கம்பெனி 3500 டன் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி 1200கிலோமீட்டர் தூரத்துக்கான ரோட்டை அமைச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அதேசமயத்துல ஸ்ட்ராங்கான ரோடும் கிடைச்சிருக்கு.
(உபயம்: கூகிளாத்தா)

இருக்கற ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வழி கண்டுபிடிச்சாச்சு.. இனிமேலும் குப்பை சேராம இருக்க என்ன செய்யலாம் !!!

1. கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))

2.தவிர்க்கமுடியாம பைகள்ல பொருட்கள் வாங்க நேரிட்டா.. அதான் நிறைய கிடைக்குதேன்னு பொசுக்குன்னு தூக்கி வீசிடாதீங்க. நம்ம வீட்லயே அதுக்கு நிறைய உபயோகங்கள் இருக்குது. அடுத்ததடவை கடைக்கு போறப்ப அந்த பையை உபயோகப்படுத்தலாம். வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..

3. உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.

4.பாலிதீன் பைகள் நிறைய மிஞ்சிப்போனா, காய்கறி, பூ, மீன் விற்கிறவங்ககிட்ட அவங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்டு, பட்டா தயங்காம கொடுங்க.அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.

5. பார்க், பீச்சுக்கு போனீங்கன்னா, குப்பைகளை மறக்காம குப்பைத்தொட்டியில் போடுங்க. மறந்தும் சாக்கடைகள்ல போட்டுடாதீங்க. அப்புறம் வாசனையால் அந்தப்பக்கமே போகமுடியாது..

6. சிலபேர் கார், பஸ், ட்ரெயின்ல பயணம் செய்யும்போது குப்பைகளை அப்படியே வெளியே வீசுவாங்க. இல்லைன்னா நடைபாதையில் நைசா போட்டுட்டு போயிடுவாங்க. மும்பையில் நகருக்குள் இப்படி குப்பைபோட்டு யாராவது பிடிபட்டா அபராதமும் உண்டு. தெரிஞ்சவங்க வந்தா 'சாக்லெட் தின்னுட்டு கவரை வெளியே வீசாதீங்க'ன்னு முதல் எச்சரிக்கையே அதுதான் :-)

 கடைக்காரங்களும் கொஞ்சம் கவனிக்கணும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை பொறுத்தவரைக்கும் ஒவ்வொண்ணையும் பாக்கெட் போட்டிருக்கறது பத்தாதுன்னு, பில் போடுற இடத்துலயும் பைகளை அள்ளி வழங்குவாங்க. நாலே பைகள் ஆகற இடத்துல ஏழெட்டுப்பைகள். சொன்னாலும் சிலசமயங்கள்ல கேக்கறதில்லை. ட்ரெஸ் எடுக்கப்போனாலும் பேண்ட் ஒரு பையிலும், ஷர்ட் ஒரு பையிலுமா போட்டுக்கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆவுறதில்லைன்னு சொன்னாலும் 'காம்ப்ளிமெண்ட்தானே.. இருக்கட்டும்'ன்னு ஒரு பதில் கிடைக்குது.
( நானே சுட்டது)
இப்ப, 'டி மார்ட்'டில் புதுச்சா ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. அவங்க கொடுக்கற பைகளை திருப்பி அவங்ககிட்டயே கொடுத்துடலாமாம். நுழைவாசல்ல ரெண்டு பெரிய டப்பாக்களை வெச்சு பை சேகரிப்பு நடக்குது. மறுபடியும் உபயோகப்படுத்துவீங்களான்னு கேட்டா, மறுசுழற்சி செய்யறதுக்காம். சரி... நடக்கட்டும்.. நல்ல விஷயங்களெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கணும் :-))




LinkWithin

Related Posts with Thumbnails