Sunday 23 November 2014

தேங்குதல் தவிர்ப்போம்..

முட்டுக்கட்டைகள் தடுத்து நிறுத்த மட்டுமல்ல, நல்வழியில் திசை திருப்பவும் போடப்படுவதுண்டு.

பாசம் பிடித்த மனதில் வைராக்கியத்தால் ஊன்றி நிற்க முடிவதில்லை.

நிகழ்காலத்தைப் பாதிக்காத வரைக்கும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் நல்லதே.

'நடக்காது.. வராது' என்று பிதற்றிக் கொண்டிருந்தால் நடக்காமலே போய் விடும், 'நடக்கும்.. வரும்' என்று நம்பிக்கொண்டிருந்தால் நடந்தே தீரும்.

எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதில்தான் பொறுமையின் பெருமை அடங்கியிருக்கிறது.

அந்த நேர நெருக்கடியிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் நிரந்தரத்தீர்வுகளைத் தருவதில்லை.

பாதுகாக்கத் தெரியாவிட்டாலும் பாழாக்காமலாவது இருப்போமாக.

பெற்றுக்கொள்வதற்கும் பிடுங்கிக்கொள்வதற்கும் இருக்கும் அதே அளவு வித்தியாசம், திணிப்பதற்கும் தேவையறிந்து கொடுப்பதற்கும் இருக்கிறது.

இன்றைய வெற்றி கொடுத்த இனிய நினைவுகளிலேயே தேங்கி நின்று விடாமல் எதிர்கால வெற்றிகளுக்கான நகர்தலில் ஈடுபடுபவனே அறிவாளி.

எதிர்பார்க்கும் வெற்றிப்புள்ளிகளுக்கும், சாதிக்கும் திறனுக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் கடக்க நேரெண்ண மனப்பான்மை மட்டுமே உதவும்.

LinkWithin

Related Posts with Thumbnails