Wednesday 24 September 2014

துணிவே துணை..

பொழியப்படும் அன்பை அலட்சியப்படுத்துவதைப் போன்றதொரு வன்முறை வேறெதுவுமில்லை.

சுகர் இல்லாத வரைக்கும்தான் சுகப்பிரும்மம். 

புரிந்து கொள்ளவில்லை என்று அங்கலாய்ப்பவர்களில் பலர் புரிய வைக்க முயற்சிப்பதேயில்லை.

ஒருவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுவது என்பதை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வழங்கப்படும் உரிமமாகவே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் சிலர்.

வாழ்க்கை எண்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

இடம், பொருள், காலம் என்று அத்தனையும் சாதகமாக இருப்பினும் துணிவு இல்லையெனில் அத்தனையும் வீணே.

கொள்ளும் பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மட்டும் மாற்றிக்கொண்டு, தன்னியல்புகளை மாற்றிக்கொள்ளாத தண்ணீரின் குணம்தான் எத்தனை உன்னதமானது.

ஒன்றைப் புரிந்துகொள்ள இயலாவிட்டால் குறைந்தபட்சம் அதைப்பற்றித் தவறாக விமர்சிக்காமலாவது இருப்போம்.

பெய்த ஒவ்வொரு சூரியத்துளியும் குளத்தை நிரப்பியது வெடிப்புகளாலும், மீன்களின் கல்லறைகளாலும்.

ஒரு நொடி சலனம் பல கால நற்பெயரையும் கட்டமைப்பையும் தகர்த்து விடுகிறது.

Wednesday 17 September 2014

உறங்கும் எரிமலை..


மூச்சடக்கி இருக்கும் எல்லா எரிமலைகளும் குளிர்ந்து அமைதியாய் இருப்பதாய் அர்த்தமில்லை. அவற்றில் சில ஆயத்தமாகிக்கொண்டிருக்கவும் கூடும்.

கூரையில் பிடிமானம் கிட்டாது சறுக்கிய கால்கள் கைவிட, தரை தொடவிருந்த இறுதிக்கணத்தில் உதவிக்கு வந்தன அதுகாறும் மடக்கியே வைத்திருந்த இறக்கைகள்.

சொற்கள் காயப்படுத்தும், வன்மத்தை விதைக்குமெனில் அவ்வாறான சொற்களை வெளி விடாமல் ஆயுட்சிறைக்கு உட்படுத்துவதே மேல்.

வினையாக முடிந்தவையில் சில, விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கக்கூடும்.

பால்யத்தில் தொலைந்த நிலா திரும்பக்கிடைத்தது காட்ராக்ட் திரைக்கு அப்பால். இத்தனை நாள் எங்கிருந்தாயென்று இருவருமே கேட்டுக்கொள்ளவில்லை.

இறகின் நீர்த்துளியில் ஒளிந்திருக்கும் சூரியனை அறியாமல் சிறகு கோதிக்கொண்டிருக்கிறது குருவி.

எல்லாக்காதுகளும் மூடிக்கொள்ளும்போது மனது திறந்து கொள்கிறது சொற்களை வரவேற்க.

போனால்தான் என்ன? வராமலா போய்விடும்?

சிந்திய ஒரு சொட்டு நிலவினைப்பருக அடித்துக்கொண்டன அத்தனைக் கண்களும்.

செய்த தவறுகளையெல்லாம் மறந்து விடுவதாகச் சொல்லிக்கொள்பவர்களில் பலர் தாங்கள் செய்த தவறுகளை மட்டுமே மறக்கிறார்கள்.

Saturday 13 September 2014

வெற்றியைத்தேடி..



புறத்தால் அகம் விழிக்கிறது, அகத்தால் புறம் செயல் புகுகிறது.


பொரிந்து தள்ளுவதை விட புரிந்து கொள்ளும்படி பேசப்படுவதே கவனத்தில் நிற்கும்.

பயத்தை வெல்ல ஒரே வழி அதனுடன் தோழமை ஏற்படுத்திக்கொள்வதுதான்.

ஒட்டிக்கொண்டிருந்த கல்துணுக்குகளைத் தூசாய்த்தட்டி விட்டு விட்டு எழுந்து நின்றது சிற்பம்.

ஆர்வத்தாலோ ஆர்வக்கோளாறாலோ, எப்படி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் முழுமூச்சுடன் உழைக்க ஆரம்பிக்கும் ஒரு கட்டத்தில் இரு பாதைகளும் இரண்டறக்கலந்து வெற்றியை நோக்கிப் பயணத்தைத் தொடர்கின்றன.

பிறர் தோளில் சவாரி செய்யும் குழந்தைகள் கூட ஓர் நாளில் சுயமாய் நடக்கத்துவங்கி விடுகிறார்கள். சொகுசு கண்ட சோம்பேறிகளோ அதிலேயே உறைந்து விடுகிறார்கள்.

பிடிமானம் உறுதுணையாக இல்லாத இடமானால் அங்கே உறுதிக்கு இலக்கணமான நாணலாலும் தாக்குப்பிடிக்க இயலாது.

சொல்பவர்கள் இறைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். சொற்கள்தாம் கிடந்து அரைபடுகின்றன.

நம் அழுத்தங்களையும் சுமையையும் தாங்குமளவு பிறர் தோள்கள் வலுவுள்ளவையா என்பதைப் பெரும்பாலான சமயங்களில் நாம் அறிவதேயில்லை.

"என்னைத்தூக்கிக்கோ.." என்று கைகளை உயர்த்தும் குழந்தையை நோக்கி நீள்கின்றன ஒன்றுக்கும் மேற்பட்ட தாய்க்கரங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails