Monday 10 March 2014

இன்னும் மீதமிருக்கும் பறவை..

வரமாகவும், சாபமாகவும், சிலருக்கு தப்பித்துக்கொள்ளும் யுக்தியாகவும் இருக்கிறது மறதி.

தான் சாப்பிடும்போது காக்கா , குருவி, ஆடு, மாடு, நிலா, கட்டாந்தரை என்று அத்தனை பேரின் பசியையும் ஆற்றிவிடுகிறது குழந்தை.

இலக்கை அடைவதற்கான கெடு நெருங்கும்போது ஏற்படும் பதற்றமான மனநிலையைக் கட்டுக்குள் வைப்போம். இல்லையெனில் தவறுகள் ஏற்படக்காரணமாகி இலக்கிற்கும் நமக்குமான இடைவெளியை அதுவே அதிகப்படுத்திவிடும்.

உறவுகளிலோ பொருட்களிலோ உண்டான விரிசலைச் சரி செய்து விட்டதாய் நினைத்துக் கொண்டாலும், நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஓர் ஓரத்தில்.

இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு. 

காலை வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக்கொண்டு, மொத்தமாய் மூழ்கடிக்கும் புதைகுழி போன்றது சுயபரிதாபம்.

துளியும் முன்னேற்பாடின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவதென்பது, நட்சத்திரங்களின் சூட்டில் குளிர் காய்வதற்கு ஒப்பானது. 

சரியான நேரம் வாய்த்தும், செய்து முடிக்காமல் காலம் தாழ்த்த வைக்கும் சோம்பேறித்தனமே வெற்றியின் முதல் எதிரி. 

வேர்களின் உழைப்பிற்கான பரிசை கிளைகளும் பகிர்ந்து கொள்கின்றன. 

தலையிலோ கன்னத்திலோ வைத்துக்கொண்டு இடிந்து உட்காரப்படைக்கப்படவில்லை கைகள். அவற்றுக்கான ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் மீதமிருக்கின்றன. 

Sunday 2 March 2014

நீட்சி..

வென்றவன் முதலில் இலக்கைத் தீர்மானிக்கிறான், அதற்கான திட்டத்தை உருவாக்குகிறான், அதன்பின் அயராது உழைத்து இலக்கை அடைகிறான். பார்வையாளர்களோ 'அதிர்ஷ்டம் 'என்ற ஒற்றைச்சொல்லில் அத்தனையையும் கடந்து செல்கின்றனர்..

கொண்ட நம்பிக்கையை இழத்தலென்பது, கட்டடத்தின் அஸ்திவாரத்திலிருந்து ஒரு கல்லை உருவுவதற்குச் சமம்.

ஒரே செயலைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்ளத்தேவையில்லை. இலக்கை அடைவதற்கான வெவ்வேறு பாதைகளே அவை.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

'எல்லாம் முடிந்தது'.. என்று இடிந்து உட்கார்பவர்கள் கண்ணுக்குத்தெரியாத நீட்சியினை உணரத்தவறி விடுகிறார்கள்.

மாற்றம் மனதின் ஆழத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், வெறும் வாய்வார்த்தைகளில் அல்ல.

திறமை, குறிக்கோள் எனும் இரு கரைகளையும் இணைக்கும் பாலமாக நேர்ச்சிந்தனைகளுடன் கூடிய முயற்சி விளங்குகிறது.

எல்லா வகையிலும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகப் பிறரைச் சிறுமைப்படுத்துதல் பெருந்தவறு.

பாராட்டுகளையும் புகழையும் எதிர்பார்த்து வானவில் பூப்பதில்லை, கடமையை விரும்பிச் செய்வோம் மற்றதெல்லாம் தானே தேடி வரும்.

புரிந்து கொள்ளலுடன் கூடிய அன்பு, உறவுகளுக்கிடையே நிம்மதியையும் நெருக்கத்தையும் கொண்டு வருகிறது.

வால்: சிஸ்டத்தை மகரும் லேப்டாப்பை மகளும் பிடுங்கிக்கொண்டதால் (பரீட்சை வருதுப்பா..) அடிக்கடி பதிவிடவோ நட்புகளின் இடுகைகளுக்குப் பின்னூட்டமிடவோ இயலவில்லை. மொபைல் உதவியால் பேஸ்புக்கில் மட்டுமே நடமாட்டம். ஆளைக்காணோம் என்று தேடுபவர்கள் மன்னித்து 'அங்கே' கண்டடைவீர்களாக :-))

LinkWithin

Related Posts with Thumbnails