Thursday 30 October 2014

கண்ணாமூச்சி..

எடுத்து வைக்கும் முதல் அடியைப்பாராட்டி ஊக்குவித்தால் ஆமையும் மாரத்தான் வெல்லும், மாறாக நகையாடினால் அந்த எள்ளல் நாளடைவில் சிறுத்தையைக்கூட முடக்கி விடும்.

எத்தனைதான் ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் இரையெடுக்க பூமிக்கு வந்து தீர வேண்டியிருக்கிறது.

பயமும் அவநம்பிக்கையும் கொண்டவரிடத்தில் தோல்வி ஒரு திருடனைப்போல் நுழைந்து உரிமையாளனைப்போல் குடி கொண்டு விடுகிறது.

நல்லவர்களாக இருப்பதை விட, நல்லவர்களாகவே நீடிப்பதுதான் அதிகக்கடினமானதும் சோதனைகள் நிரம்பியதுமாகும்.

வாழ்வில் நாம் இன்னொருவரை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நம்மை முன்மாதிரியாக யாரேனும் கொண்டிருக்கக்கூடும்.

தன்னை ஆக்கிரமிக்கும் பயங்களையும், அவநம்பிக்கைகளையும் வென்று, தன்னைச் சிறந்த முறையில் ஆளும் ஒவ்வொரு மனிதனும் மாமன்னனே.

சிற்றறிவு கொண்ட எறும்பிற்குக்கூட அதன் வாழ்வை நடத்தத் தேவையான அறிவை அளித்திருக்கும் இறைவன் மற்றவர்களையும் வெறுங்கையோடு அனுப்பி விடவில்லை.

பிறரின் நிம்மதியான வாழ்வையும் மகிழ்ச்சியான மனநிலையையும் கெடுக்கும் மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

ஊகங்களுக்கும் வரையறுத்தல்களுக்கும் நடுவே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது உண்மை.

எப்பொழுதும் அப்படித்தான் என்பதால் எப்பொழுதுமே அப்படியிருக்கத்தேவையில்லை. மாற்றங்கள் ஏற்படலாம்.

Monday 13 October 2014

தெளிவும் .. குழப்பமும்.

திறமையற்ற உழைப்பும், உழைக்க மனமற்ற திறமையும் வீணே. 

அறியாமை பிழையல்ல.. அறிந்து கொள்ள கடுகளவேனும் முயலாமல் இருப்பதே பெரும்பிழை.

"இனி பொறுப்பதற்கில்லை" என்று சொல்லிக்கொண்டே மேலும் மேலும் பொறுத்துக்கொள்கிறோம் ஒவ்வொன்றையும்.

இன்றைய வெற்றி கொடுத்த இனிய நினைவுகளிலேயே தேங்கி நின்று விடாமல் எதிர்கால வெற்றிகளுக்கான நகர்தலில் ஈடுபடுபவனே அறிவாளி.

பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

வெளிக்காட்டிக் கொள்ளாததாலேயே எதுவும் இல்லையென்று ஆகி விடுவதில்லை.

அவசர புத்தியும் ஆராயாத்தன்மையும் சிந்தனையை மழுங்கடித்து எண்ணங்களையும் பாழ்படுத்தி விடுகிறது.

எண்ணங்களைக் கெடுத்துக்கொள்வதை விட, தெளிந்த பின்னும் அவற்றைத் திருத்திக்கொள்ளாதிருப்பதே பெருந்தவறு.

அன்பு செய்தலும் செய்யப்படுதலும் வாழ்வின் மிக இனிய வரங்கள்.

கிடைப்பதுதான் கிடைக்கும் என்று சோர்ந்து உட்காராமல் நமக்கு வேண்டியதைப்பெற அயராது முயல்வோம்.

குழப்பவாதிகள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails