Friday 2 August 2024

சாரல் துளிகள்

இணை வைக்கப்படும் எதையும் ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது கண்ணீரின் கனம்.

யாருமற்ற வனாந்திரத்தில் தன்னந்தனியாய் தன்னுடனே உரையாடிக்கொண்டிருக்கிறது பாறையிடுக்கில் மலர்ந்திருக்கும் ஒற்றை மஞ்சள் மலர்.

எத்தனையோ யுகங்களாய்த் திருவிளையாடியும் நிறைவுறா சொக்கனை நோக்கி குறும்புடன் மலர்கிறது மீனாட்சியின் மூக்குத்திப்பூ.

ஒவ்வொரு பன்னீர்ப்பூவிலும் ஒவ்வொரு ராகத்தை ஊதுகின்றன வண்டுகள், ராகமாலிகையாய் மணக்கிறது வனம்.

ரகசியமாய் என்ன சொல்லிப்போனதோ காற்று.. மெல்லமாய்ச் சிலிர்க்கிறது மரம்.

பல்லாயிரம் ஊசிகளால் தையலிடுகிறது மழை. ஆயினும், அத்தனை பொத்தல்களின் வழியும் மழலைகள்போல் எட்டிப்பார்க்கின்றன முளை விட்ட விதைகள்.

முன்னுச்சிக்கேசம் கலைத்துப்போகும் மென்காற்றுக்கு குழந்தையின் பிஞ்சு விரல்கள்.

"திமிங்கிலங்களென்ன இந்த மீன்களை விடப்பெரியவையா?" எனக் கேலி செய்தன கிணற்றுத்தவளைகள், இணைந்து கொண்டு பரிகசித்தன சிறு மீன்கள். இறுதிவரை அவை அக்கிணற்றைக்கூட அறியவில்லை.

புறத்தே சீறும் பேரொலியெல்லாம் அகத்தே இறங்காமல் விரட்டியொடுங்கும் உள்ளமைதியில் மொட்டு வெடிக்கும் ஓர் மலர்.

தையத்தையவென தாளமிட்டாடும் குதிரைகளின் கால்களின் கவனமெல்லாம் கடிவாளத்தில் மையம் கொண்டிருந்தன.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

சாரல் துளிகள் அனைத்தும் நன்று. மூன்றாம் சாரல் - சிறப்பான ரசனை.

LinkWithin

Related Posts with Thumbnails