ரெண்டும் ஒருமிச்சு இருந்தா, அந்த சங்கீதம் இனிக்கும்... ஒண்ணுக்கொண்ணு தெற்கும் வடக்குமா முறைச்சுக்கிட்டு நிக்குதா.. நம்ம காதுக்கு இனிஷியல் போட்டுக்க வேண்டியதுதான். அதுவும் அரசாங்க கெஜட்ல போயி K.காது அப்படீன்னு பேரை மாத்திட்டு வந்துடும் :-))). ஆனா, எங்க வீட்டைப்பொறுத்தவரை ரெண்டும் முட்டிக்கிட்டாலும் சரி,.. ஒத்துமையா இருந்தாலும் சரி.. பல்புகள் வாங்குறதென்னவோ நாங்கதான்.
ஒத்துமையா இருந்தா, ரெண்டும் சேர்ந்துக்கிட்டு எங்களை சுத்தல்ல விட்டுடும். முட்டிக்கிட்டு இருந்தா,.. இவங்களுக்கிடையே பஞ்சாயத்து பண்ணியே நெளிஞ்சுபோன சொம்புகள் ஏராளம்.. ஏராளம். ஆமா,, ஆமா,..ன்னு தலையை பலமா ஆட்டி ஆமோதிக்கும் பெற்றோரா நீங்கள்.. அப்படீனா இடுகை எதைப்பத்தின்னு கரெக்டா யூகிச்சிருப்பீங்க. நான் பெற்ற செல்வங்களின் திருவிளையாடல்களை பதிவு செஞ்சு வெச்சு, என்னோட அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச்சொல்லும் தலையாய கடமை என்னை அழைக்கிறது..
சுதி: "டேய்.. டிவியை ஆஃப் பண்ணு"
லயம்: "அம்மா.. இவ என்னை டேய் போட்டு கூப்பிடறா"
சுதி:"டேய்.. டிவியை ஆஃப் பண்ணு"அப்படீன்னு.. அம்மா சொல்லுவாங்கன்னு சொல்லவந்தேன்.. அதுக்குள்ள கம்ப்ளைண்ட் பண்ணக்கூடாதுப்பா.."
**********************
லயம்: எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!அவ்வ்வ்வ்வ்.... என் பேரை மொதல்ல மாத்துங்க...
நான்: ஏன்ப்பா... உன் பேரு நல்லாத்தானே இருக்குது. ஒரு பெரிய அறிவியல் அறிஞரோட பேரைத்தான் உனக்கு வெச்சிருக்கேன்.. தெரியுமா!!
லயம்: அது சரி.. ஆனா, சில சினிமாக்கள்ல என் பேரை கிச்சடி ஆக்குறாங்க தெரியுமா!!! என் பேரை வெச்ச ஹூரோக்களை உருப்படியாவே காமிக்க மாட்டேங்குறாங்க :-)))
"பாஸ்... என்ற பாஸ்கரன்" படத்தைப்பார்த்துட்டுதான் சார் இப்படி வெக்ஸ் ஆகிட்டார். ஏன்னா, லயத்தோட பேரு... "பாஸ்கர்" :-))))))))
சுதி தூவிய மொளகாப்பொடி: அட்லீஸ்ட் ஹீரோவுக்காவது உன் பெயரை வெச்சாங்களே.. அதை நினைச்சு சந்தோஷப்படு. ஹா..ஹா..ஹா...
**************************
பண்டிகைகள் வந்தா கலாய்த்தலும் ஆரம்பிச்சுடும். ரக்ஷாபந்தன் சமயம் ஆரத்தி எடுத்த தங்கைக்கு பணம் கொடுக்கணும்ன்னு சொன்னதும், எவ்வளவு கொடுக்கட்டும்ன்னு கேட்டார். 'பதினொரு ரூபாய் கொடு போதும்'ன்னு தங்கை பெரிய மனசு செஞ்சு சொல்லிட்டாங்க.. அடுத்தது அண்ணன் செஞ்சதுதான் ஹைலைட். '1&1=11..இந்தா என்னோட அன்பளிப்பு' ன்னு சொல்லி நீட்டுனது ரெண்டு ஒரு ரூபாய் நாணயங்களை...
**************************
'சின்னவயசுல எவ்ளோ ஒத்துமையா இருந்தீங்க.. இப்போ ஏன் இப்படி எலியும் பூனையுமா இருக்கீங்க??'ன்னு ஒரு நாள் கேட்டேன்.. மேடம் அப்டியே சீலிங்ஃபேனை பார்த்தாங்க.. கொசுவத்தி சுத்தறாங்களாமாம்..
"ஒரு நாள், என்னாச்சு தெரியுமா?.. வாஷிங்மெஷினோட ட்ரெயினேஜ் பைப் இருக்குதில்லியா!!! அதுல ஒத்தைக்கண்ணை வெச்சு அண்ணா ரொம்ப நேரமா உள்ளே பாத்துக்கிட்டிருந்தார். என்ன பார்க்குறேன்னு கேட்டப்ப,.. இதுல இருந்து 'சூப்பர் ஹ்யூமன் சாமுராய்' வரப்போறார்.. அதான் காத்துக்கிட்டிருக்கேன்னு சொன்னார். அதை உண்மைன்னு நம்பி, நானும் பார்க்கணும்ன்னு சண்டை போட்டு.. ரெண்டு மணி நேரமா, ஒக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன். தெரியுமா??... அதான், இப்பல்லாம் அவரு என்ன சொன்னாலும் நான் நம்புறதில்லை "
"ஆமா.. இது எப்போ நடந்தது?"
"நா அப்போ யூ.கேஜில இருந்தேன்னு நினைக்கேன்"
சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டேன், "சரி!! சாமுராய் வந்தாரா இல்லியா"
"ம்ம்... வந்தாரு. அந்தச்சமயம் அண்ணா பார்த்துக்கிட்டிருந்த கார்ட்டூன்ல...."
டிவியை கைப்பற்ற இப்படியும் வித்தியாசமா யோசிக்கலாமோ :-))))))))))
*************************
இந்தியில் சகோதரனை,"பையா"(Baiya)ன்னு கூப்பிடுவாங்க.. [யாருக்காவது தமன்னா ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்ஸ் இல்லை :-))]. தமிழில் சின்னப்பையன்களை 'பையா'ன்னு கூப்பிடுவாங்க(paiya). லயம் கவனிக்காதபோது, paiya ன்னு கூப்பிடறதும், அவரோ இல்லை நானோ கவனிச்சு 'எப்படி கூப்பிட்டே'ன்னு கையும் களவுமா பிடிச்சா 'baiya'-ன்னு சொன்னேன்'ன்னு சமாளிச்சு கலாய்ப்பதும் சுதியின் பொழுதுபோக்கு.
சின்ன வயசில் அண்ணனை, 'நீங்க.. வாங்க.. போங்க'ன்னு ரொம்ப மரியாதையாத்தான் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் வளந்தப்புறம் அப்படி கூப்பிட்டா வேத்தாள் மாதிரி தோணுது, இனிமே ஒருமையிலேயே கூப்பிட்டுக்கிறேனேன்னு அண்ணாகிட்ட அனுமதி வாங்கினப்புறம்தான் அட்டகாசம்.
*************************
'
நாஸ்ட்ரடாமஸ்'.. இவரைப்பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா??. இரட்டைக்கோபுரங்களை விமானம் வைத்து தகர்த்தது , மற்றும் இவர் முன் கூட்டியே கணிச்சு சொல்லிவெச்ச நிறைய விஷயங்கள் பலிச்சிருக்காம்,... அவரோட மரணம் உட்பட. இதைப்பத்தி ஒரு நாள் நானும் சுதியும் பேசிக்கிட்டிருந்தப்ப, லயம் அங்கே வந்தார்.
லயம்: நிஜமாவே,.. அவர் கணிச்ச எல்லாமே பலிச்சிருக்கா??
சுதி: ஆமாம்.
லயம்: வருங்காலத்தில் நடக்கப்போவது எல்ல்ல்லாத்தையுமே அவர் கணிச்சிருக்காரா??
சுதி: நிறைய விஷயங்களை கணிச்சிருக்காரு.. கொஞ்சம் இப்போதான் தெரியவந்திருக்கு. மத்தபடி போகப்போகத்தான் தெரியும்.
லயம்: எனக்கும் ஒரு விபரம் வேணுமே..
சுதி:சொல்லு.
லயம்: 'Dhoom-3' எப்போ ரிலீஸ் ஆவும்ன்னு கணிச்சிருக்காரான்னு, கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்..
அதுக்கப்புறம் சுதி நடத்திய ஒரு இனிமையான தாளக்கச்சேரி நடந்ததுன்னு சொல்லணுமா என்ன :-))). கச்சேரி நடந்த இடம் லயத்தின் முதுகு.....
*************************