Friday 30 December 2011

கொண்டாட்டம் ஆரம்பம்..


உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது.  இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.
இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.
அல்வா கொடுக்க தேவையானவை:
கேரட்-1 கிலோ
சர்க்கரை-400 கிராம்
இனிப்பில்லாத கோவா-100 கிராம்
இது கிடைக்கல்லைன்னா கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக்கலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைச்சுக்கோங்க.
பால்- கால் லிட்டர்
ஏலக்காய்-2 பொடித்தது
எப்படி தயாரிக்கிறது:
கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.(சோப்பு போட்டேத்தான் கழுவணுமா, வாஷிங் மெஷின்ல வாஷ் செஞ்சா ஆகாதா,.. இல்லை ஆலாவுல ஊற வெச்சு கழுவணுமா.. டவுட்டு)
இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும். (மொதல்ல அடுப்பை பற்ற வையுங்கப்பா..)
லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும். (அடுப்பு எரிஞ்சா அதுல இருக்கற வாணலியும் எரிஞ்சுடாதா, அடுப்பை எதுல வெச்சு எரிக்கணும்ன்னு சொல்லவேயில்லை.. டவுட்டு)
(பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும். 
இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.(பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.. டவுட்டு)
விரும்பினா வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்த்து அலங்கரிச்சுக்கோங்க. (பாஸ்..ட்ரை ஃப்ரூட் ஃபேஷியலுக்கப்றம், அதை, ஐ-மேக்கப்,லிப்ஸ்டிக், காம்பேக்ட்டெல்லாம் போட்டு அலங்கரிக்கலாமா.. டவுட்டு)
டிஸ்கி1: வீட்ல இருக்குங்கறதுக்காக இஷ்டத்துக்கு கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்கிடாம, அல்வாவாக சாப்பிடுங்க. வடமாநிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.
புது வருசத்துக்காகவும், 
என்னோட ப்ளாக் ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாடவும், 
புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள் காரணமா அடிக்கடி இடுகை போட முடியாட்டியும், எப்பவாவது போடும் இடுகைகளுக்கு கடைக்கு வந்து உற்சாகமூட்டிய உங்க பொறுமைக்கான பரிசாகவும் அல்வா கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் நன்றிகளும் சொல்லிக்கிறேன். 
எல்லோரும் கேக் எடுத்துக்கிட்டு கொண்டாந்துருக்கற கிஃப்டை மறக்காம கொடுத்துடுங்க :-)

Saturday 17 December 2011

கலர்ஃபுல் மாசம் கொண்டு வரப் போகுது பரிசு..


மார்கழி பொறந்தாச்சு..தெனமும் வாசல்ல புள்ளியை வெச்சு ரெண்டு கம்பியை இழுத்துட்டு நானும் கோலம் போட்டேன்னு பெயர் பண்ணிட்டு வர்றவங்க கூட இந்த மாசம் முழுசும் தெனமும் என்னென்ன புதுப்புது வகையில கோலம் போடலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க.

கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.. கோலங்கள் சீரியலைச் சொல்லலை. நிஜமான கோலத்தைச் சொல்றேன். இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பகுதியிலயும் அவங்கவங்க வழக்கப்படிக் கோலம் போடறாங்க. தமிழ் நாடுன்னா புள்ளி வெச்ச, வைக்காத இழைக்கோலங்கள், கேரளான்னா அத்தப்பூக்கோலம் அப்றம் வட மாநிலங்கள்ன்னா ரங்கோலின்னு ஒவ்வொரு பகுதியோட பேரைச் சொல்றப்பவும் அந்தப் பகுதிக்குண்டான கோலங்களும் சேர்ந்தேதானே ஞாபகம் வருது.
அத்தப்பூக்களம்ன்னு சொல்லணுமா என்ன :-)
கேரளாவோட பூக்கோலத்துக்கு வடக்கே ரொம்பவே வரவேற்பு. அலுவலகங்கள்லயோ அல்லது பள்ளிக் கூடங்கள்லயோ ஒரு விழா நடந்தா பூக்கோலம் போட்டு அசத்தறாங்க. ரங்க்ஸோட ஆப்பீஸ்ல எப்ப புதுவருசக் கொண்டாட்டம் நடந்தாலும், அத்தப்பூக்கோலம் போட்டு நடுவுல நம்மூட்டு வெளக்கை ஏத்தி வெச்சு முக்கியமான அதிகாரிகள் அஞ்சு பேரை வெளக்கேத்தி வைக்கச் சொல்றது வழக்கம். ஒருக்கா ஆரம்பிச்சு வெச்சது இங்க உள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி அப்றம் வருசா வருசம் மத்த பிரிவுகள்ல இருக்கறவங்களும் அதே மாதிரி காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம தென்னிந்திய இழைக்கோலங்களை இங்கே இருக்கறவங்க ரொம்பவே அதிசயிச்சுப் பார்ப்பாங்க. அதெப்படி விரல் நடுங்காம அவ்ளோ தெளிவா கோடுகள் வருதுன்னு அவங்களுக்கு அதிசயம். இங்கேயும் புள்ளிக் கோலங்கள் போடறதுண்டு. என்ன செய்வாங்கன்னா, வேணுங்கற அளவுல சதுரமா ப்ரவுன் பேப்பர் ஒண்ணை வெட்டியெடுத்துக்குவாங்க. அதுல ஸ்கேல் வெச்சு அளவெடுத்து புள்ளிகளை வைப்பாங்க. அப்றம் அந்தப் புள்ளிகள் மேல துளையிட்டுக்குவாங்க. ச்சார்ட் ரெடி. செம்மண் பூசிக் காய விட்டு தயாரா வெச்சிருக்கற இடத்துல இந்தப் பேப்பரை வெச்சுட்டு அந்தத் துளைகள்ல கோலமாவை ஒவ்வொரு சிட்டிகையா வைப்பாங்க. அம்புட்டுத்தேன். அப்றம் பேப்பரை எடுத்துட்டு ரெண்டு ரெண்டு புள்ளியா இணைச்சு கோலம் போடுவாங்க. இதுக்காகவே தீவாளி சமயங்கள்ல பேப்பர்+கோலமாவு+கலர்ப்பொடி பாக்கெட்டுகள் அடங்கிய ‘கோலம் கிட்’ ஒண்ணு மார்க்கெட்டுகள்ல கிடைக்கும்.

நம்மூர்ல விசேஷங்களுக்கு பச்சரிசி மாவால கோலம் போடுறது சம்பிரதாயம். வாசல்ல போடற கோலங்கள் வீட்டுக்குள்ள துர்சக்திகள் நுழையாதபடிக்கு காவல் காக்குதுங்கறது ஐதீகம். வீட்டுக்குள்ள நுழையப் பார்க்கற சக்திகள் அந்த இழைகள்ல மாட்டிக்குமோ என்னவோ.. ஆனா, அமாவாசையன்னிக்கு மட்டும் கோலம் போடாம விட்டு வைக்கிறது வழக்கமாம். ஏன்னா பித்ருக்கள் வீட்டுக்குள்ள வரணுமேன்னு சொல்லுவாங்க. கேள்விப் பட்டது ரைட்டா இல்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அதேமாதிரி நல்ல விசேஷங்கள் நடக்கறப்ப போடறதுக்குன்னு தனி வகைகளும் ‘அல்ல’ விஷயங்கள் நடக்கறப்ப இன்னொரு வகைகளும் இருக்காம். நல்ல விசேஷங்கள் நடந்தா கண்டிப்பா ரெட்டை இழைக்கோலம்தான் போடறது வழக்கம்.
சன்ஸ்கார் பாரதிக்கோலம்
நம்மூர் இழைக்கோலங்கள் அப்றம் அத்தப்பூக்கோலம் மாதிரியே இங்கே ‘சன்ஸ்கார் பாரதி’ங்கற கோல வகை ரொம்பவே பிரசித்தம்.இதுவும் கிட்டத்தட்ட நம்மூர் இழைக்கோலம்தான். இந்தக் கோலம் போடப் புறப்படறதே ஒரு போருக்கு புறப்படற மாதிரி இருக்கும். கோலமாவு அடங்கிய பொட்டலங்கள், நாலஞ்சு அளவுகள்ல சாய் வடிகட்டிகள், ரெண்டு மூணு சல்லடைகள், மண்ணெண்ணெய் ஊத்துற புனல் அப்றம் நீளமான நூல்ல கட்டிய சாக்பீஸ்ன்னு ஏராளமான உருப்படிகளோட கிளம்புவாங்க.

நூல்ல கட்டிய சாக்பீஸை எடுத்துக்கிட்டு கோலம் போடத் தேர்ந்தெடுத்த இடத்துல நூலோட நுனியை தரையோட அழுத்திப் பிடிச்சுக்குவாங்க. இன்னொருத்தர் அடுத்த நுனியில் இருக்கற சாக்பீஸை வெச்சு உக்காந்திருக்கறவரைச் சுத்தி பிரதட்சிணம் வந்து அளவா அழகா ஒரு வட்டம் போட்டுக்குவாங்க. இது நம்ம கணக்குப் பாடத்துல உபயோகப்படுத்தற காம்பஸை அடிப்படையாக் கொண்டதுன்னு கொள்க. இதான் அடிப்படை.இனிமே டிசைனைப் பொறுத்து அங்கங்க அரை வட்டங்களும் வளையங்களும் பூக்களோட டிசைன்களும் வரையப்படும். அப்றம் ஒவ்வொரு பகுதியா கலர்ப்பொடி கொண்டு நிரப்புவாங்க. பெரிய பகுதிகளுக்கு சல்லடையும் சின்ன பகுதிகளுக்கு டீ வடிகட்டிகளும் உபயோகப் படுத்துவாங்க. கலர்ப்பொடியை நிரப்பி லேசா தட்டிக்கிட்டே இருந்தா அழகா எல்லா இடங்கள்லயும் ஒண்ணு போல கலர் நிரம்பும்.இப்டி மொதல்ல கலரை நிரப்பினப்புறம் வெள்ளைக் கோலமாவை புனல்ல எடுத்துக்கிட்டு அங்கங்க இழைகளால அலங்கரிப்பாங்க.

ரொம்பவே  எக்ஸ்பர்ட்டுகளுக்கு புனல் தேவைப்படறதில்லை. அப்றம் எப்படிக் கோலம் போடுவாங்க?.. சொல்றேன். சின்னக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டறப்ப அஞ்சு விரல்களையும் எப்படிக் குவிச்சு வெச்சிருப்பீங்க?.. ஆங்.. அதேதான். கை நிறைய அள்ளிய கோலமாவை குவிச்சு வெச்ச விரலிடுக்கு வழியா வழிய விடுங்க.. ஜூப்பர். இப்ப நீங்களும் சன்ஸ்கார் பாரதி எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க.
அரிசியில் கலர் கொடுத்துப் போட்ட கோலம்

உப்புடன் கலர் கலந்து போட்ட கோலம்

தண்ணிக்குள்ள கோலம்

ஹை.. நம்மூருக் கோலம்
இது போக நீர்மேல் கோலம், தண்ணிக்குள்ள கோலம், காய்கறிக் கோலம், உப்பு, அரிசி, தானியங்களால போட்ட கோலம்ன்னு வகை வகையா இருக்கு. ஆயிரம்தான் இருந்தாலும் பசுஞ்சாணியைக் கரைச்சுத் தெளிச்சு, தூசு தும்பு போகப் பெருக்கிய மொசைக் மாதிரியான மண்தரையில் வெள்ளை வெளேர்னு மினுங்கற கோலத்துக்கு ஈடு இணையாகுமா?.. வெள்ளிச் சரிகையிட்ட பச்சைப் பட்டுப்புடவை மாதிரி அட.. அட.. அட..என்னவொரு அழகு. விடிகாலைல எழுந்து கோலம் போடுறதுங்கறது உடலுக்கும் மூளைக்கும் நல்லதொரு பயிற்சியாச்சே. கவனமா எண்ணி புள்ளி வெச்சு அதெல்லாத்தையும் இணைச்சு அழகான கோலமாக்குறதுங்கறது லேசுப்பட்ட காரியமா என்ன!!

கலர்ப்பொடிகள் அப்பல்லாம் தீவாளி, பொங்கல் சமயங்கள்ல மட்டுந்தான் யாவாரத்துக்கு வரும். அது கிடைக்காத சமயங்கள்ல எல்லாம் குங்குமம், மஞ்சப்பொடி, அப்றம் பச்சைக் கலருக்கு இலைகளை அரைச்செடுத்த சாறு, நீலக்கலருக்கு சொட்டு நீலம் இல்லைன்னா பேனாவுக்கு ஊத்தற இங்க்ன்னு வெரைட்டி காட்டுவோம்..ஈரமான கோலமாவுல இந்தக் கலர்கள் ஈஸியா கலந்துடும். அப்றம் ஒரு வாணலியில இந்த மாவைப் போட்டு லேசா வறுத்துக்கிட்டே இருந்தா நல்லாக் காய்ஞ்சு அழகா கலந்து வந்துடும். வாணலியை வீணாக்கியதுக்காக வாங்கிய திட்டெல்லாம் கோலத்தோட அழகுக்காக வாங்கிய பாராட்டுகள்ல மறந்தே போயிடும்.

இப்பல்லாம் கோலம் போடுற கலை கொஞ்சம் கொஞ்சமா அருகிக்கிட்டே வருது. ஒரு காலத்துல அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளும் கோலம் போட ஆசையா கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் எதுக்கும் டைம் இல்லைன்னு ஓடிடுதுங்க.ஏதோ பண்டிகை சமயங்கள்லயாவது கோலம் போட ஹெல்ப் செய்யுதுங்களேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதுவுமில்லாம இருக்கற அவசர யுகத்துல காலைலயும் சாயந்திரமும் வாசத்தெளிச்சு கோலம்போட யாருக்கு நேரமிருக்கு?.. அதனால ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடறாங்க. அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்புன்னா கேக்கவே வேணாம். நம்மூட்டு ஸ்டிக்கர்ல பாதியை பக்கத்தூட்டு ஸ்டிக்கர் மறைச்சுட்டு இருக்கும்.

இவ்ளோ அழகான கலையை அழிய விடலாமா?.. அதனாலதான் உதயம் இன் மற்றும் தமிழ் நண்பர்கள் இணைய தளங்கள் சேர்ந்து ஒரு போட்டியை அறிவிச்சுருக்காங்க. உங்களுக்காக வல்லமையில் வெளியான அறிவிப்பு இதோ. உதயத்தோட தளத்துலயும் அறிவிச்சுருக்காங்க. விதிமுறைகளும் அங்கேயே இருக்குது. ஜனவரி 10 போட்டிக்கான கோலங்களை அனுப்பறதுக்கான  கடைசி நாளு. கலர்ஃபுல்லானதொரு போட்டியில் கலந்துக்கிட்டு கலக்குங்க.. பரிசெல்லாமும் கூட அறிவிச்சுருக்காங்க. ஜமாய்ங்க.

வெற்றி பெற வாழ்த்துகள்.

டிஸ்கி 1: படங்களெல்லாம் இணையத்தில் சுட்டவை.

டிஸ்கி2: வல்லமையில் பொங்கல் மலருக்காக கட்டுரைகள், கதைகள், கவிதைகள், புகைப்படங்கள், உங்க வீட்டுக் குட்டீஸின் கைவண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன என்பதை துணையாசிரியர்ங்கற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவிச்சுக்கறேன். விருப்பமுள்ளவங்க vallamaieditor@gmail.com  என்ற ஈ மெயில் முகவரிக்கு அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் வல்லமையின் சிறப்பிதழில் வெளியாகும். வெளியானப்புறம் உங்க ப்ளாகிலும் போட்டுக்கலாம்ன்னு சொல்லத் தேவையில்லை இல்லையா :-)



Wednesday 7 December 2011

ஆத்தா!!! நான் ஹாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானது)

யம்மா.. நான் மேற்படிப்புக்கு வெளியூருக்குப் போய்த் தங்கிப் படிக்க வேண்டியிருந்தா என்னை அனுப்புவீங்களா?..”இப்படித்தான் ஆரம்பிக்கும் என் பெண்ணின் கலாய்ப்பு நேரம்.

அதுக்கென்னா.. தாராளமா போயிப் படிச்சுட்டு வாயேன். இதுக்கெல்லாம் அனுப்பாம இருப்பாங்களா என்ன?.. படிப்பு விஷயத்துல விளையாடக் கூடாது தெரியுமா?..” நான்  விட்டுக் கொடுக்காம பதிலளிப்பேன்.

அப்போ என்னைத் தேடவே மாட்டீங்களா?.. என் ஞாபகமே வராதா உங்களுக்கு. ச்சே!!.. ஒரு பேச்சுக்காவது ‘உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது, தொலைதூரத்துக்கெல்லாம் உன்னை அனுப்ப மாட்டேன்’னு சொல்லுறாங்களா பாரு.”ன்னு செல்லமா அலுத்துக்குவா.

“அதெப்படிம்மா.. படிப்பு விஷயமாச்சே.. வெளியூரென்ன? வெளி நாடென்ன? அனுப்ப வேண்டி வந்தா அனுப்பித்தானே ஆகணும்.” நானும் சளைக்காம சீண்டுவேன்.

“உன் தொல்லை இல்லாம வீடு அமைதியா இருக்குமில்ல..”என் சீமந்த புத்திரன் தன் பங்குக்கு எரியுற தீயில் ரெண்டு ஸ்பூன் நெய்யை வார்ப்பார்.

“பையா,.. உன்னை யாரு கேட்டா??.. நீ சும்மாரு..”ன்னு அவரை ‘அன்பா’ அடக்கிட்டு, “நல்லதுக்கு காலமே இல்லை.. யாராவது ஒருத்தராவது வேண்டாம், நீ போகாதேன்னு சொல்றாங்களா?. அப்பா.. நீங்க சொல்லுங்க”ன்னு மேடம் ரங்க்ஸைப் பிடிச்சுக்குவா.

“நானா?.. எனக்கும் உன்னைத் தேடாதே.. ஏன்னா, தேடுச்சுன்னா அடுத்த நிமிஷம் நீ இருக்கற ஊருல வந்து நின்னுடுவேன்ல..”ன்னு சொல்லிட்டு “நாங்க உன்னை பார்க்காம இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொதல்ல உனக்கு வீட்டு ஞாபகம் வராம இருக்குமான்னு சொல்லு.”ன்னு மடக்கவும் “ஹி..ஹி..ஹி..”ன்னு தோல்வியை ஏத்துக்குவா. “சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும், காசு குடு”ன்னு மறுநாளும் இந்த எபிஸோட் தொடங்கும்.

அப்டி ஒர் நாள்லதான் இப்படி வெளியூர்ல தங்கிப் படிக்கிறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது. தனியா தங்கிப் படிக்கிறதோட நன்மைகளை எடுத்துச் சொன்னேன். என் தோழியின் பெண்ணுக்கு வீட்லேருந்து காலேஜுக்கு போக வர பயணத்துலயே நேரம் சரியா இருந்துச்சு. படிக்க நேரமில்லை, நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வர வேண்டிய நிலைமை, அதனால வீட்ல உள்ளவங்களுக்கு டென்ஷன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள். அதனால, காலேஜ் பக்கத்துலயே தங்கிப் படிக்கலாமான்னு ஒரு யோசனை. ஏனோ தெரியலை, ஹாஸ்டலை அந்தப் பொண்ணு உறுதியா மறுத்துட்டது.

அப்டீன்னா, ரெண்டு மூணு பொண்ணுங்க தனியா வீடு எடுத்து தங்கிப் படிக்கலாமேன்னும் ஒரு யோசனை அவங்களுக்கு. மும்பையில் இது இப்போ ஜகஜமாகிட்டு வருது. ஆளுக்கொரு சாமான் செட்டைக் கொண்டாந்துரலாம். வாடகை, அட்வான்ஸ், மற்ற செலவுகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கறதுனால கையையும் கடிக்காது. இங்கெல்லாம் அபார்ட்மெண்ட் கலாச்சாரம்தான். ஒவ்வொரு பில்டிங்கிலும் செக்யூரிட்டி அனுமதியில்லாம யாரும் உள்ளே நுழைஞ்சுட முடியாது.. அதனால பாதுகாப்புக்கும் கவலையில்லைன்னு முடிவெடுத்தாங்க. கடைசியில கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டுப் பார்த்துட்டு, “வேணாம், நான் வீட்லேர்ந்தே போயிக்கறேன்”ன்னு அந்தப் பொண்ணு டமால்ன்னு பல்டியடிச்சுட்டுது.

ஹாஸ்டலோ, தனிக்குடித்தனமோ ரெண்டுலயும் நல்லது கெட்டது ரெண்டும் இருக்குது. நல்லதைச் சொல்லிக் கொடுத்துட்டா அப்றம் கெட்டதை அவங்களே உதறித் தள்ளிட மாட்டாங்களா என்ன?..

பசங்களுக்காவது பரவால்லை. பொண்ணுங்க அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டே ஆயுசுக்கும் சுத்த முடியாது. கல்யாணமோ, மேற்படிப்போ இல்லை வேலை வாய்ப்போ வந்து பிரிக்கத்தான் போகுது. முதலாவது காரணத்துனால பிரிவு ஏற்படறப்ப, நினைச்சப்ப எல்லாம் அம்மா வீட்டுக்கு வர்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை. அந்தப் பிரிவுக்கு இது ஒரு வெள்ளோட்டமா இருக்கட்டுமே. கணவனும் மனைவியும் மட்டுமல்ல ரூம்மேட்ஸோ, நல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்.

அப்டி அமையலைன்னாலும், ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு வந்துட்டுப் போறப்ப அம்மா கொடுத்து விடற ஊறுகாய், முறுக்கு, அதிரசம், இன்ன பிற தீனிகளை அவங்க கூட பகிர்ந்துக்கிட்டு அவங்க கூட நல்ல நட்பை ஏற்படுத்திக்கிட்டா, அவங்களே உடன் பிறவா உடன்பிறப்பாகி சிலசமயம் வீட்டு ஏக்கத்தைக் குறைப்பாங்க J. தன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமயும் அதே சமயம் மத்தவங்களை மதிச்சும் நடக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாச்சே. இப்படி கலந்து பழகற குணமிருக்கறவங்க கண்டிப்பா புகுந்த வீட்டிலோ இல்லை அலுவலகத்துலயோ தன்னைச் சுலபமாப் பொருத்திக்கிடுவாங்க.

தனி வீடுன்னா பிரச்சினையில்லை. ஆனா, ஹாஸ்டல்ன்னாலே கலாட்டாவுக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் காலேஜ் திறந்த புதுசுல ராகிங்கும் சேர்ந்துக்கும். இந்த மாதிரியான சமயங்கள்ல பயந்து ஓடக் கூடாது. இப்பல்லாம் ராகிங் செஞ்சா கடுமையான தண்டனையும் உண்டு. அதனால சீனியர்களே கூட பெயர் கேக்கறது, தரையில் நீச்சடிக்கச் சொல்றதுன்னு சிம்பிளா இறங்கிட்டாங்க. இதெல்லாம் புதுசா வர்றவங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறதுக்காக நடத்தறது. சில கல்லூரிகள்ல ஜூனியர்களை உற்சாகப் படுத்த சீனியர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடத்தறாங்களாம்.

இப்படி ஆபத்தில்லாத ராகிங்கா இருந்தா மறுபேச்சு பேசாம அவங்க சொல்றதைச் செய்யறது நல்லது. அப்படியில்லாம உடலுக்கோ உள்ளத்துக்கோ கஷ்டம் கொடுக்கற ராகிங்கா இருந்தா தயங்காம தைரியமா அவங்க முகத்துக்கு நேரயே, ”இது தப்பு”ன்னு எச்சரிக்கை செய்யறது நல்லது. அப்டியும் கேக்கலைன்னா வார்டன் கவனத்துக்கு கொண்டு போறது நலம். தனக்கு ஒரு கெடுதல் நடக்குதுன்னா அதைத் தட்டிக் கேக்கற தைரியம் இதனால வளர்க்கப்படுது இல்லியா. இதுமாதிரி சின்னச்சின்ன விஷயங்களைத் தானே சமாளிக்கிறதால தன்னம்பிக்கையும் வளருதே. பூச்சி புழுவே எதிர்த்து நிக்கிறப்ப, ஆறறிவு மனுஷங்க நாம ஏன் எதுக்கெடுத்தாலும் பயந்து சாகணும்??

ஹாஸ்டலோ தனிவீடோ, தன்னோட உடைமைகளைத் தானே பத்திரமா பார்த்துக்கறது நல்லது. அதுக்காக என்னவோ புகுந்த வீட்டுக்குப் பொண்ணை அனுப்பற மாதிரி நகைகளை மாட்டி அனுப்பாதீங்க. இப்பல்லாம் மாணவிகள் மத்தியில் ‘நோ கோல்ட்’தான் ஃபேஷன். அதான் அவங்களுக்குப் பாதுகாப்பும் கூட. முடிஞ்சா அவரவருக்குன்னு தனியா குட்டி பீரோவோ, பூட்டிக்கிற வசதி இருக்கற ஷெல்போ வெச்சுக்கறது நல்லது. விலை கூடின பொருட்களையோ, பணத்தையோ இல்லை துணிமணிகளையோ பத்திரமா வெச்சுக்கலாம். கண்ட இடத்துல இறைச்சுட்டு, அப்றம் அதைக் காணோம் இதைக் காணோம்ன்னு தேடற வேலை மிச்சம். விலை கூடின பொருட்கள் காணாமப் போயிருந்தா நம்ம ரூம்மேட்ஸை தேவையில்லாம சந்தேகப்பட்டு உறவே பாழாகும்.

பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கவும், பட்ஜெட் போட்டுச் செலவு செய்யவும் சொல்லிக் கொடுக்கறதும் அவசியம். நாம அனுப்பற பணத்துக்கு கரெக்டா கணக்கு வெச்சிருக்காங்களான்னு செக் செய்யறதும் முக்கியம். அவங்க தங்கியிருக்கும் ஊர்லயே ஒரு நம்பகமான வங்கியில கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்து, அதை அவங்களையே பராமரிக்கவும் சொல்லணும். படிப்பு, சாப்பாடு மாதிரியான முக்கியச் செலவுகளுக்கு முதலிடம் கொடுக்கணும். முடிஞ்சா அதுல அவசரத் தேவைகளுக்குன்னு கொஞ்சம் சேமிச்சும் வைக்கச் சொல்லிக் கொடுக்கலாம். திடீர்ன்னு ஏதாவது படிப்புச் செலவோ, இல்லை உடம்பு சரியில்லாம டாக்டர் கிட்ட போகவோ வேண்டி வந்தா, வீட்லேருந்து பணம் வர்ற வரைக்கும் சேமிப்பு கைகொடுக்கும்.

காலேஜ்ல, ஹாஸ்டல்லன்னு பொருளாதாரத்துல ஏற்றத் தாழ்வுள்ள பசங்க ஒண்ணா படிக்கிறப்ப, சிலபேர் தாம்தூம்ன்னு செலவு செய்வாங்க. புதுச்செருப்பு வாங்குனதுக்கெல்லாம் ட்ரீட் கொடுப்பாங்க. அதுமாதிரியெல்லாம் எல்லோராலயும் இருக்க முடியாதே. சிலருக்கு பிடிக்கவும் பிடிக்காது. அதுவும் ரொம்ப நெருங்கின நண்பர்கள் ட்ரீட் கேட்டு நெருக்கடி கொடுக்கற சமயங்கள்ல தன்னோட நிலையை உடைச்சுச் சொல்லிடறது உத்தமம்.

வீட்ல அனுப்புன பணமும் பத்தாம, அதிகப்படி செலவுக்காக வீட்ல பொய் சொல்லிப் பணம் கேட்டு வாங்கி வீண் பந்தாவுக்காகச் செலவு செஞ்சு அப்றம் மாட்டிக்கிட்டு முழிக்கிற அவஸ்தை தேவையா என்ன?.. இதனால பெற்றோருக்கும் பசங்க மேல இருக்கற நம்பிக்கை குறைஞ்சு போகுதே. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் மெஸ் ஃபீஸ்ன்னு ஒருதடவையும், சாப்பாட்டுக் கட்டணம்ன்னு இன்னொரு தடவையும் வாங்கிக் கிட்டிருந்தார். படிப்பறிவில்லாத பெத்தவங்களை ரொம்ப நாளுக்கு ஏமாத்த முடியலை. மாட்டிக் கிட்டப்புறம் செம அர்ச்சனை நடந்தது

தன்னோட இருப்பிடத்தைச் சுத்தமா வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். அது உலகத்துக்கும் நல்லது. காலேஜ் விட்டு வந்ததும் துணிங்களை ஒரு மூலையிலும், புத்தகங்களை இன்னொரு மூலையிலும் விட்டெறியறது வீட்டுல வேண்ணா நல்லாருக்கும். எடுத்து வைக்க ‘அம்மா’ங்கற ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும். ஆனா, தனியா இருக்கறப்ப மூக்கால அழுதுக் கிட்டாவது அதை நாமதான் செஞ்சுக்கணும்ன்னு முதல்லயே அவங்க புரிஞ்சுக்கணும்.

ரூம் மேட்ஸ் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செஞ்சுக்கிட்டா மலையும் தூசு மாதிரியாயிடும். சுத்தமான இடத்துல உக்காந்து படிச்சா பாடமும் கடகடன்னு மண்டைக்குள்ள ஏறும். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்

ஹாஸ்டலோ, தனி வீடோ பசங்களுக்கு டால், உப்புமா, ப்ரட் டோஸ்ட்ன்னு ஒரு அவசரச் சமையல் செஞ்சுக்கச் சொல்லிக் கொடுக்கறது உத்தமம். “போம்மா,.. நான் படிப்பேனா, சமையல் செய்வேனா?..”ன்னு கேக்கற உங்க பிள்ளைச் செல்வம், “நேத்திக்கு ஸ்ட்ரைக்கா!!, மெஸ்ல/ஹோட்டல்ல ஒண்ணும் சாப்பிடக் கிடைக்கலை. கடைசில நீங்க குடுத்து விட்ட சின்ன ரைஸ் குக்கர்ல கொஞ்சூண்டு சாதம் வெச்சு, பருப்புப் பொடியோட சமாளிச்சேன். என் ரூம் மேட்டோடயும் பகிர்ந்துக்கிட்டேன். சூப்பர்மா!!.. எப்படிம்மா உங்களுக்கு இந்த யோசனை தோணிச்சு?..”ன்னு கேக்கும். அடுத்த தடவை புள்ளை ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகறச்சே புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி, ஜாம், ஊறுகாய்ன்னு தனியா இன்னொரு லக்கேஜும் ஹாஸ்டலுக்கு படிக்கப் போகும்.

அப்படி முடியலைன்னா, பசங்க தங்கியிருக்கற இடத்துக்கு சாப்பாடு சப்ளை ஏதாவது இருக்குதான்னு விசாரிச்சுக்கோங்க. மும்பையில் நிறைய இடங்கள்ல இந்த டப்பா சர்வீஸ் இருக்குது. மாசம் பணம் கட்டிட்டாப் போதும், மூணு வேளையும் சுடச்சுட சாப்பாடு நாம இருக்கற இடத்துக்கே வரும். அளவு அதிகமாருந்தா ரெண்டு பேர் பகிர்ந்துக்கலாம். இதனால பணமும் மிச்சப்படுது.

எல்லாத்தையும் விட முக்கியமானது ஒண்ணு இருக்கு. அதான் தனியா இருக்கக் கிடைச்ச சுதந்திரத்தை தவறாப் பயன்படுத்தாம இருக்கறது. இதுலயே கிட்டத்தட்ட எல்லாமும் அடங்கிடுது. பசங்க தங்கற ஊர்ல நம்ம சொந்தக்காரங்க இருந்தா இன்னும் விசேஷம். நம்மைக் கண்காணிக்க ஆளிருக்குன்னு அவங்க ஒரு கட்டுப்பாட்டோடயும் இருப்பாங்க, பாதுகாப்பும் கூட. நாம இருக்கிற இடத்துக்குன்னு தனி விதிமுறைகள் இருக்கலாம். அதையெல்லாம் அனுசரிச்சு நடக்கப் பழகிக்கணும். ‘விதிமுறைகள்ங்கறதே மீறத்தானே’ன்னுதான் இள ரத்தம் நினைக்கும். எதெல்லாம் கூடாதுன்னு சொல்றோமோ அதெல்லாம் செய்யணும்ன்னு துடிக்கும். இதை சகஜம்ன்னு எடுத்துக்கிட்டா ஆபத்து வர்றதும், மீள முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறதும் சகஜம்தான்னும் எடுத்துக்கணும்.


டிஸ்கி:நவம்பர் மாத லேடீஸ்ஸ்பெஷல்ல வெளியான இந்தக் கட்டுரையை உங்களுடனும் பகிர்ந்துக்கறேன்.



LinkWithin

Related Posts with Thumbnails