Tuesday 28 January 2014

"சிறகு விரிந்தது" புத்தக வெளியீட்டு விழா..

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். கூடவே ராமலக்ஷ்மியின் “இலைகள் பழுக்காத உலகம்” புத்தகத்திற்கான வெளியீடும் நடந்தது.

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில், பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா..
முகநூலில் தினமும் வெளியாகும் புத்தக வெளியீட்டு விழா பகிர்வுகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம், சென்னையில் வசிக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கமாகவும் இருந்தது. போகட்டும்.. பிழைத்துக்கிடந்தால் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் :-)

தன்னுடைய படைப்புகளைப் புத்தகமாகப் பார்ப்பதென்பது, அதுவும் முதல் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில்.. அதை விடப் பேரின்பம் ஒரு எழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களினிடையே என்னுடைய புத்தகமும் தென்பட்டதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத உணர்வு என்னை ஆட்டிப்படைத்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் புத்தகங்களைப் பதிப்பித்துப் புத்தகத்திருவிழாவிற்குக் கொண்டு வந்ததோடு, என்னைப்போல் தூரதேசத்தில் இருப்பவர்களுக்காக புத்தக வெளியீட்டையும் நடத்திக்கொடுத்த பொன் வாசுதேவனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

என்னுடைய கவிதைத்தொகுப்பும் இங்கே கிடைக்க ஆரம்பித்து விட்டது. 

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))

Friday 3 January 2014

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். 
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன். 
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails