Monday 28 January 2019

சிறுகிழங்கு துவரன்.

பெயருக்கேற்றார்போல் சின்னதாக இருந்தாலும் சிறுகிழங்கின் சுவை மற்ற எந்தக்கிழங்கு வகைகளுக்கும் குறைந்ததில்லை. ச்சைனீஸ் பொட்டேட்டோ என அழைக்கப்படும் இக்கிழங்கு ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டாலும், தமிழகத்தைப்பொறுத்தவரை அதன் தென் மாவட்டங்களான நெல்லை, மதுரை மற்றும் கன்யாகுமரிப்பகுதிகளில் விளைந்து அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. தவிர, கேரளா வரைக்கும் கூட இதன் புகழ் எல்லை கடந்து பரவியிருக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே அதைப்போல் சுவை விஞ்சி நிற்கும் இந்தக்கிழங்கு கோலிக்குண்டு அளவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு வரையே இருக்கும். உருளை, சேனை, சேம்பு என மற்ற கிழங்கு வகைகளைப்போல் இது வருடம் முழுவதும் கிடைக்காது. பொங்கலையொட்டி சந்தைக்கு விற்பனைக்கு வரும் இக்கிழங்கு இரண்டொரு மாதங்களுக்கு மட்டுமே கண்ணில் தட்டுப்படும். அச்சமயத்தில் வாங்கி சமைத்து ஆசை தீர உண்ண வேண்டியதுதான். அதற்குப்பின் "எப்போ வருவாரோ!!!" என அடுத்த ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.
சமைப்பதற்கும், உண்பதற்கும் எத்தனை எளிதானதோ அத்தனை கடினமானது இதைச் சுத்தம் செய்வது. புதுக்கிழங்கு முழுவதும் மண் அப்பிக்கொண்டிருக்கும். அதையாவது தண்ணீரில் ஊறப்போட்டு கரைத்து ஊற்றி விடலாம். ஆனால், தோல் இருக்கிறதே... எக்கச்சக்கமாக வேலை வாங்கும். லேசாக நகத்தால் சுரண்டினாலே வந்துவிடுமளவிற்கு மெல்லிய தோல் கொண்டதாயிருப்பினும், அத்தனையையும் தோலுரித்துச் சுத்தம் செய்வதற்குள் நகத்தோடு விரலும் மணிக்கட்டு வரை தேய்ந்து விடும். இண்டு இடுக்குகளிலிருக்கும் தோலைச்சுரண்டியெடுக்கும் வகையில், கத்தி அவ்வப்போது கை கொடுக்குமே தவிர முழுவதும் அதை நம்பி வேலையில் இறங்க முடியாது. கிலோ கணக்கில் துவரன் செய்ய வேண்டியிருந்தாலோ அவ்வளவுதான்.. முதுகு ஒடிந்து விடும். அதிகம் மண் ஒட்டாத கிழங்காயிருந்தால் நேரடியாகக் களத்திற்கு கிழங்கைக் கொண்டு சென்று தோலுரித்து விடலாம்.

சின்ன வயதில், லீவு நாட்களில் சிறுகிழங்கு தொவரன் செய்வதாயிருந்தால், அதன் தோலை உரிக்கும் வேலையை என்னிடம் தள்ளி விடுவார்கள். 'கொல்ல கொண்டு போவது மாதிரி' இருக்கும் அத்தருணம். பின்னே?... கிழங்குக்கூடை லேசில் காலியாகாமல் அமுதசுரபி மாதிரி கிழங்கு வந்து கொண்டேயிருந்தால் வெப்ராளம் வராதா என்ன? :). முதன் முதலில் அப்படி மாட்டிக்கொண்ட போது, ஆச்சி ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக்கொடுத்தார். எப்படியென்றால் சொரசொரப்பான ஒரு துணிப்பை அல்லது சணல் பையை எடுத்துக்கொண்டு அதனுள் அரை கிலோ அளவில் கிழங்குகளைப் போட்டு அதன் வாய்ப்பகுதியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, கிழங்குகள் கிடக்கும் அடிப்பகுதியை 'பொத்துனாப்ல' தரையில் துணி துவைப்பது போல் துவைக்க வேண்டும். ஒன்றரை டன் வெயிட் அளவுக்கு ஓங்கியடிக்கக்கூடாது. ஒரு பத்து நிமிடத்துக்கு இப்படித் துவைத்தபின் கிழங்குகளை சொளவிலோ, தரையிலோ, அல்லது விரித்து வைத்திருக்கும் செய்தித்தாளிலோ தட்டினால், ஆஹா!! ஆஹாஹா!! முக்கால் பாகம் தோல் தானாகவே உரிந்திருக்கும். மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் தோலை சணல் பையால் அழுத்தித்துடைத்தால் அதுவும் உரிந்து வந்து விடும்.

இப்படியாகத்தானே எல்லாக்கிழங்குகளின் தோலையும் உரித்தபின், தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வடிய விடவும். டிஸ்கி: இதற்கு மேல் நான் சொல்லப்போவதெல்லாம் எங்கள் குமரி மற்றும் நெல்லைச்சீமைக்கே உரிய சமையல் முறை, அதைத்தவிர வேறில்லை. பிற பகுதி முறைகளோடு ஒத்துப்போனால் அது தற்செயலானதே. தண்ணீர் வடிந்தபின் துடைத்து, கிழங்குகளை புளியங்கொட்டை அளவிற்கு சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொதி நிலை வரும் வரை சூடானபின், கிழங்குத்துண்டுகளை அதிலிட்டு முக்கால் வேக்காடு வரும் வரை வைக்கவும். பின்னர் நீரை வடிய விடவும். தப்பித்தவறி மண் துகள்கள் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அவையும் நீங்கி விடும், பல்லில் கடிபட்டு கூச வைக்காது. தவிரவும் நறுக்கியதால் வெளியான பால் நீங்கி, கிழங்குத்துவரன் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் குழையாமல் அமையும். 

தண்ணீர் முழுவதும் வடிவதற்குள் துவரனுக்கான மசாலாவைத் தயார் செய்து கொள்ளலாம். நாஞ்சில் மற்றும் கேரள மக்களைப்பொறுத்தவரை தேங்காயில்தான் காய்கறிகளைச்சேர்த்து தொடுகறி வைப்போம் ;) கறிகளில் தேங்காய்தான் பிரதானமே தவிர காய்கறிகளை கொஞ்சம் தேடித்தான் தின்ன வேண்டியிருக்கும். அந்தப்படியே, ஒரு கிலோ கிழங்கு என்றால் குறைந்தது அரை மூடி தேங்காய் தேவை. அதற்கு மேல் இரண்டு பிடியளவு சேர்த்தாலும் சுவையாகத்தானிருக்கும். முதலில் அரைத்தேக்கரண்டி சீரகத்தையும் அதேயளவு மிளகையும் நுணுக்கிக்கொண்டு அதனுடன் ரெண்டு பல் பூண்டைச் சேர்த்து அதையும் நுணுக்கியபின் தேங்காயைச் சேர்த்து காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சட்பொடியையுமிட்டு பிருபிருவென.. அதாவது, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மையாக அரையக்கூடாது.

வாணலியில் இரண்டு தேக்கரண்டி தேங்காயெண்ணெய் அல்லது ஏதாவது சமையல் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடுகும் உளுந்துமிட்டுப் பொரிந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு அதுவும் பொரிந்ததும் துவரன் மசாலாவை இடவும். அதிலேயே தேவைக்கேற்ப உப்பிட்டு லேசாகப் பிரட்டி ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் தெளித்து குறைந்த தணலில் மூடி வைக்கவும். மசாலா வேக வேண்டுமல்லவா, அதற்காகத்தான் அந்த சிறுதுளி நீர். இரண்டு நிமிடத்தில் மசாலா வெந்துவிடும். அதோடு, வெந்த கிழங்குத்துண்டுகளைச்சேர்த்துப் பிரட்டி உப்பு காரம் சரி பார்த்து, சேர்க்க வேண்டியிருந்தால் சேர்த்து மறுபடி மூடி விட்டு நன்கு வேகும் வரை சமைக்கவும். மசாலாவும் கிழங்கும் ஒன்றி மணம் வந்ததும் இறக்கி கரண்டிக்காம்பால் ஒரு முறை கிளறி வைத்தால் முடிந்தது. எல்லா வித குழம்புகளுக்கும் அருமையான தொடுகறியாக அமையும். தவிரவும் சும்மாவே சாப்பிடலாம். 

சிறுகிழங்கில் ஏராளமான சத்துகள் இருப்பதும், அது மூல நோய்க்காரர்களுக்கு நல்லதொரு மருந்து என்பதும் போக, சமைத்த பின்னும் நீங்காத அதன் மண் மணமே நம்மை இன்னும் இன்னுமென உண்ணத்தூண்டும். இத்தனை காரணங்கள் இல்லாவிட்டாலும் அதன் ருசிக்கெனவே சாப்பிடலாம்.

குமரிப்பகுதிகளில் சாயந்திரம் காப்பிக்கு இதை ஒரு கிண்ணத்திலிட்டு எடுத்துக்கொண்டு கடியும் குடியுமாகக் களிக்கும் ஆட்களைப் பார்க்க நேர்ந்தால், "என்ன? பாட்டா.. காப்பிகுடியா? நடக்கட்டு.. நடக்கட்டு" என்பதும் "வா மக்ளே... நீயும் ஒரு மடக்கு குடிச்சிற்றுப்போ" னப் பதில் பெறுவதும் ஒரு காலத்தில் சகஜமான காட்சி.

Monday 21 January 2019

சாரல் துளிகள்

.அகங்காரத்தினுள் தைத்த சொல், வஞ்சம் தீர்ப்பதற்காக பூநாகமெனக் காத்திருக்க ஆரம்பிக்கிறது.

அனைத்தையும் விட மிகக்கொடிய ஆயுதம் எண்ணத்தில் உருவாகிறது. சொல்லும், செயலும், எண்ணத்தொடருமென ஒவ்வொரு நிலையாகப் பெருகிச் செல்வதும் அதுவே.

உள்ளத்தில் சென்று தைக்காத எந்தச்சொல்லும் அலைவுறச்செய்வதில்லை.

ஒரு சொல் அது மதிப்புறும் இடத்தில் மட்டுமே நல்மணியெனக் கொள்ளப்படுகிறது. மதிப்பறியா இடங்களிலோ, அது வெறும் ஒலி மட்டுமே.

கிழிந்த மேகத்தினூடே வழுக்கி விழுந்த சூரியக்கற்றையைக் கொத்திக்கொண்டு போகும் பறவையின் பின் பறக்கிறது சொற்கூட்டம்.

நானாவித சொற்களால் மாசுபட்ட மனதை, மெல்ல கழுவிச் சுத்தப்படுத்துகிறது நற்சொல்மழை.

குவிந்த பூவில் வண்டென, ரீங்காரித்துக்கொண்டிருக்கிறது சொல்லொன்று, வெளியேறும் திசையறியாது.

முதற்பறவையிலிருந்து கிளம்பிய சொல்லுடன், பிற பறவைகளில் ஆரோகணித்திருந்த சொற்களும் இணைந்து உருவான தொடரில் ஒட்டிப்பறந்து கொண்டிருந்தான் ஆதவன்.

அதற்கு மேல் அதைப்பற்றி அறிந்து கொள்ள ஏதுமில்லை எனும்போது அவ்விஷயத்தின் மேல் சலிப்பு கொள்ள ஆரம்பிக்கிறோம்.

சுடரிலிருந்து மெல்ல முனகியபடி பொறியாய்த் தெறித்ததொரு சொல். ஆமாமென்று அதை ஆமோதித்தன சில சொற்கள், இல்லையென ஆட்சேபித்தன வேறு சில. ஆமோதிப்பும் ஆட்சேபிப்புமாய் களத்தில் எரியெழுந்தபோது கள்ளச்சிரிப்புடன் நழுவிச்சென்றது முதற்சொல்.

Saturday 19 January 2019

பலாக்கொட்டை துவரன் (நாஞ்சில் நாட்டு சமையல்)

ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்தே பலாப்பிஞ்சுகள் சந்தையில் வந்திறங்கத்தொடங்கி, பிப்ரவரி மார்ச்சில் முற்றிய பலாக்காய்கள் கிடைக்க ஆரம்பித்து கோடைக்காலம் முழுவதும் பலாப்பழங்கள் மலிந்து கிடக்கும். இடிசக்கைத்தொவரன், ஊறுகாய் என பிஞ்சுகளைப் பக்குவமாக்கி உண்டது போக, பலாக்காய்ச்சுளைகளையும் அதிலிருக்கும் இளங்கொட்டைகளையும் போட்டு புளிக்கறியும் செய்வர் எம்மக்கள். பழம் மலியும் காலத்திலோ பலாக்கொட்டைகள் வீடெங்கும் இறைபடும். அவற்றையும் வீணாக்காமல் அவித்தோ, வறுத்தோ இல்லையெனில் தணலில் சுட்டோ சாப்பிடலாம். இன்னும் மீதமிருக்கும் கொட்டைகளை அளவாக நீளநீளமாக நறுக்கி தேங்காயெண்ணெய்யில் பொரித்து, அதில் உப்பும் மிளகாய்த்தூளும் அளவாய்க்கலந்து தூவிக்குலுக்கி வைத்தால் சாயந்திர நேர காப்பிக்கு தொட்டுக்கிட ஆயிற்று. இத்தனைக்குப் பின்னாலும் மீதமிருக்கும் பலாக்கொட்டைகளைச் சக்கொட்டைத்தொவரன் செய்தால் "இன்னா பிடி" என்று காலியாகி விடும்.

பலாக்கொட்டைகளை அரிவாள்மணையில் இரண்டாக வகிர்ந்தால் அதன் மேலிருக்கும் ப்ளாஸ்டிக் லேமினேஷன் போன்ற மேல்தோல் சுலபமாகக் கழண்டு விடும். இல்லையெனில் சுத்தியல், அம்மிக்கல் போன்ற ஏதேனும் கனமான பொருளால் 'நச்'சென அதன் தலையில் ஒரு போடு போட்டாலும் இலகுவாகக் கழண்டு விடும். பின்பு, ப்ரவுன் நிற உள்தோலை கத்தி அல்லது கரண்டியால் சுரண்டி எடுக்கவும். முழுவதும் எடுக்க வராவிட்டாலும் பாதகமில்லை. அதன்பின் பலாக்கொட்டைகளை நன்கு அலசிக் கழுவிக்கொண்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சிறிது உப்புடன் முக்கால் வேக்காடு வரை வேக விடவும். வெந்தபின் தண்ணீரை வடித்து விட்டு சிறிது ஆறியபின் வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஐந்து நல்லமிளகு, கொஞ்சம் சீரகம் இவற்றைப் பொடித்துக்கொண்டு இத்தோடு கைப்பிடி தேங்காய்த்துருவலுடன் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் மஞ்சட்பொடி சேர்த்து கரகரவென அரைத்துக் கொண்டால் துவரன் மசால் ரெடி. கடாயில் கொஞ்சம் எண்ணெயை சூடாக்கி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து, மசாலாவைச் சேர்த்து துளி உப்பிட்டு கிளறி இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக விட்டபின், நறுக்கிய பலாக்கொட்டைத் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் வேக விட்டால் போதும். சக்கொட்டை துவரன் மணமணத்துக்கொண்டு சாப்பிட ரெடியாக இருக்கும். இறக்கும்போது ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணை சேர்த்தல் சிறப்பு.

சக்கைக்குரு என்று கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்கப்படும் பலாக்கொட்டைக்கு வாயு பகவான் தனது அருளை மிதமிஞ்சி வழங்கியிருப்பதால் சக்கொட்டையால் ஆன பதார்த்தங்களை அளவோடு உண்ணுதல் நலம். இல்லையெனில், "சாப்பிட்டவர் வருவார் பின்னே... ஏப்பம் வரும் முன்னே" என்பது போல் ஆகி விடும். இன்ன பிற பக்கவிளைவுகள் சபை நாகரீகம் கருதி இங்கே விலக்கப்படுகின்றன.

Saturday 5 January 2019

நெகிழி வதம்.. ஆரம்பம்.

தறி கெட்டு ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்த கடிவாளம் போட்டு இழுத்துப்பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வருவதைப்போல், பூமியின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தும் ஆபத்தாக விளங்கும் ப்ளாஸ்டிக்கின் உபயோகத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் என்பதை உலக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப்பற்றி முன்பொரு முறை எழுதிய கட்டுரை இங்கே. இந்தியாவைப்பொறுத்தவரை அவ்வப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதைப்பற்றி விவாதித்தாலும், ஒரு நல்ல முடிவு எடுக்கப்படாமலே இருந்து வந்தது. கடைசியில், பூனைக்கு மணி கட்டும் விதமாக டில்லி, மஹாராஷ்ட்ரா, ஒடிசா, பிகார் என ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பகுதிகளில் ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தப்பட்டியலில் நம் தமிழகமும் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி.

எனக்குத்தெரிந்து எண்பதுகளின் பிற்பகுதியில்தான், சரியாகச்சொன்னால் 1989ல்தான் கேரிபேக் எனப்படும் ப்ளாஸ்டிக் பைகள் புழக்கத்துக்கு வந்தன. மங்கலான வெள்ளைப்பின்னணியில் நீலம், குங்குமக்கலர், பச்சை, மஞ்சள் என வெவ்வேறு கலர்களில் பட்டைக்கோடுகள் போட்டதோ, அல்லது தனிக்கலர்களிலோ வர ஆரம்பித்தன. முதற்கட்டமாக காய்கனிகள் விற்பவர்கள் பொருட்களை அதில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த கட்டமாக மளிகைப்பொருட்களை ப்ளாஸ்டிக் பைகளில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். சில கடைகளில் இன்னும் ஒரு படி மேலே போய், பொருட்களை ஐம்பது கிராமில் ஆரம்பித்து ஒரு கிலோ வரையிலான அளவுகளில் நிறுத்து ஆயத்தமாகப் பாக்கெட் போட்டு வைத்தார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அப்படியே எடுத்துக்கொடுத்தால் ஆயிற்று. அதன்பின், ஒவ்வொரு வியாபார ஸ்தலமாக தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக்கொண்டே சென்றது ப்ளாஸ்டிக். தேக்கிலையில் பூவைப்பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்த வியாபாரிகள் சிறு பையில் போட்டுக்கொடுக்க ஆரம்பித்ததுதான் இதன் உச்சகட்டம். இந்த ப்ளாஸ்டிக் கேரி பேகுகள் இலவசமாகக் கிடைத்ததுதான் இவை பெருமளவில் பரவி இன்றைய சீர் கேடுகளுக்கு வழி வகுத்தன என்றால் மிகையல்ல.
மஹாராஷ்ட்ராவில் தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் பைகள். இவற்றில் பாலிதீன் பை 50மைக்ரானுக்கு மேற்பட்டது.
அது நாள் வரை, துணிப்பைகள், வயர் கூடைகள், பிக் ஷாப்பர் எனும் கட்டைப்பைகள் சகிதம் கடைகளுக்குச் சென்றவர்களுக்கு, 'இனிமேல் அப்படி எதையும் தூக்கிச்சுமக்கத் தேவையில்லை, அழுக்குப்படிந்த பைகளைச் சுத்தம் செய்து பத்திரப்படுத்த வேண்டியதுமில்லை, பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சேமித்ததும், பைகளை தூர எறிந்து விடலாம்' என்ற நினைப்பே இனித்தது. காய்கறிகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் தனித்தனி கேரிபேகுகளில் வாங்கிக்கொண்டால், வீட்டிற்கு வந்ததும், ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து மறுபடி அதே பைகளில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளும் பழக்கம் பெருகியது. மல்லிகைப்பூவின் வாசனை தோசைமாவு, வத்தக்குழம்பு இன்ன பிற அயிட்டங்களில் பரவாமை கண்டு மகிழ்ந்தனர். மும்பையைப் பொறுத்தவரை, ஆபீசுக்கு மதிய உணவாக சப்பாத்தி செய்து அதை பால் கவர்களில் கட்டி கொண்டு சென்றவர்கள், ப்ளாஸ்டிக் கேரிபேகுகளுக்கு மாறினார்கள். ஒரு தடவை உபயோகித்தபின் தூக்கி எறிந்த பைகளால் ஊர் நிரம்பியது.  ப்ளாஸ்டிக் கேரிபேகுகளின் ஆயிரம் உபயோகங்கள் என வீட்டுக்குறிப்புகள் எழுதுமளவுக்கு அவற்றை விதவிதமாகப் பயன்படுத்தினர் மக்கள். இதற்காகவே, காய்கறிகள் வாங்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தனி கேரிபேக் கேட்டு வாங்கத்தொடங்கினர். இரண்டு எலுமிச்சம்பழங்கள் வாங்கினால் கூட அவற்றையும் தனிப்பையில் போட்டுக்கொடுக்க வேண்டும். கடைக்காரர்களும் சளைத்தவர்களல்ல.. சுண்டல் வினியோகம் கெட்டது போங்கள்... அய்யா வாங்க... அம்மா வாங்க.. என அள்ளியள்ளிக்கொடுத்தார்கள். திடீர் மழை வந்தால் தலை நனையாதிருக்க கேரிபேகை மாட்டிக்கொண்டவர்கள் அனேகம் பேர். ஒரு சில மக்கள், ஹெல்மெட்டுக்குப் பதிலாக, கேரிபேகை உபயோகித்ததாகவும் கேள்வி.

இப்படியெல்லாம் கொடுத்துப் பழக்கியபோது, இந்த ப்ளாஸ்டிக் பின்னாளில் ஓர் அழிக்க முடியாத அசுரனாக உருவெடுக்கும் என்பதை யாரும் உணர்ந்தாரில்லை. அந்நாளில் ஃபேஸ்புக், வாட்சப் போன்றவை இல்லாதிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையில் பெரு வெள்ளம் வந்து அவதிப்பட்டபோது, மழை நீர் வடிகால்களில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக்கொண்டதால்தான் வெள்ளம் வடியவில்லை என்று கண்டுபிடித்தபோது, இனிமேல் கடைகளில் 50 மைக்ரானுக்கு அதிகமான அளவுள்ள ப்ளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. வெளியான சூட்டில் ஆங்காங்கே சோதனைகளும் நடந்து முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பெற்றது. ஆனால், பெருவாரியான எதிர்ப்பால் இந்த விழிப்புணர்வு சீக்கிரமே வலுவிழந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது ஆர்வலர்கள் தீயை ஊதி ஊதி கனன்று கொண்டிருக்கச் செய்து கொண்டிருந்தார்கள்.

நாளாக நாளாக, பொது மக்களிடையேயும் விழிப்புணர்வு மெல்ல பரவத்தொடங்கியது. ஒரு சிலர் வீட்டிலிருந்து பைகளை முன்போல் எடுத்துச்செல்லத்தொடங்கினோம். கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் கொடுத்தாலும் மறுத்தோம். கடைக்காரர்கள் மற்றும் சக மக்களின் வினோதமான பார்வையை அலட்சியம் செய்தோம். சந்தையிலிருந்து திரும்பும்போது, எங்கள் கட்டைப்பைகளில் அவரையும் தக்காளியும் கொத்துமல்லியும் பச்சைமிளகாயும் கலந்துதான் கிடக்கும். வீட்டிற்கு வந்ததும், அவற்றை வகை பிரித்து ஃப்ரிஜ்ஜில் அடுக்கினோம். தப்பித்தவறி கிடைக்கும் கேரிபேகுகளையும், முடிந்த வரை மறு உபயோகம் செய்தோம்.

இனி பொறுப்பதில்லை என முடிவு செய்த அரசு, கடந்த 2018ம் வருடம் மார்ச் வாக்கில், ஒரு சில அத்தியாவசிய பொருட்களைத்தவிர மற்ற அனைத்து ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதும் தடையுத்தரவு பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பொருட்களின் பட்டியல் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வழியாக அறிவிக்கப்பட்டது. தவிரவும் கடைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அறிவிப்புப்பட்டியல் ஒட்டப்பட்டது.  மூன்று மாத கால அவகாசமளித்து, அக்கால கட்டத்தில் தங்களிடமிருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை முறையாக ஒழிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. மும்பை மாநகராட்சியின் தலைமையலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில், நகரில் ஆங்காங்கே சேகரிப்புத்தொட்டிகள் அமைக்கப்பட்டன. குடியிருப்புகள் தங்கள் பகுதி மக்களிடம் சேகரித்து அவற்றை நகராட்சியிடம் ஒப்படைத்தன. ப்ளாஸ்டிக்குக்கு மாற்று ஏற்பாடுகள் என்னென்ன என்று ஒரு கண்காட்சி நடத்தி மக்களுக்கு தெளிவுறுத்தப்பட்டது. துணி, சணல் பைகள், மறுபடி முழு உபயோகத்திற்கு வந்தன. வீட்டு அடுக்களைகளில் கண்ணாடி, எவர்சில்வர் பாத்திரங்கள், பாட்டில்கள் மறுபடி இடம் பிடித்தன. எங்கள் வீட்டில் மளிகைப்பொருட்கள் இன்றும் ப்ளாஸ்டிக் பெட் ஜார்களில்தான் இருக்கின்றன. தேன் முதலானவை வரும் பாட்டில்களைச் சுத்தம் செய்து அதில் பொருட்களை நிரப்பி வைத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கும் கண்ணாடிக்கும் ஏழாம் பொருத்தம்.
தடை செய்யப்பட்ட மற்றும் படாத ப்ளாஸ்டிக் பொருட்களின் பட்டியல்
இதனாலெல்லாம் மஹாராஷ்டிரத்தில் ப்ளாஸ்டிக் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டதா? என்றால், அதுதான் இல்லை. அறிவிப்பு வந்த புதிதில் அதிகாரிகள் கடைகள், சந்தை, சிறு வியாபாரிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் முழு வீச்சில் சோதனை நடத்தி, 50 மைக்ரானுக்கும் குறைந்த பைகள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். நெல்லைச்சீமையில், “புது மாடு குளிப்பாட்டுதல்” என்றொரு சொல் உண்டு. எதுவும் புதிதாக இருக்கையில் விழுந்து விழுந்து கவனித்து விட்டு, பழசான பின் கண்டு கொள்ளாமல் விடுவதை அப்படி எகத்தாளமாகக் குறிப்பிடுவார்கள். ப்ளாஸ்டிக் ஒழிப்பும் அப்படித்தான்… மறுபடி நிறைய இடங்களில் ப்ளாஸ்டிக் பையைத்தவிர பிற ப்ளாஸ்டிக்கின் உபயோகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், சற்றே கட்டுக்குள் இருக்கிறதென்றே சொல்லலாம்.

ப்ளாஸ்டிக்  உபயோகம் பெருமளவில் கட்டுக்குள் வந்து விட்டாலும், இந்த அறிவிப்பால் அதிருப்தி கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சின்ன கடைகளில் கேரிபேகுகளையும் ப்ளாஸ்டிக் கவர்களையும் தடை செய்து விட்டு பெரிய கடைகளில் ப்ராண்டட் பொருட்களைப் ப்ளாஸ்டிக்கில் பொதிந்து விற்பனைக்கு வைத்திருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனிந்த பாரபட்சம் என அவர்கள் கேட்கிறார்கள். தவிரவும், இன்றும் காய்கறிக்கடைகளுக்குச் சென்று கேரிபேக் கேட்டு அடாவடியாகச் சண்டை போடும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடைகளில், காகிதம், டிஷ்யூ, சணல், மற்றும் துணிப்பைகளில் பொருட்களைப்போட்டுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சில கடைகளில் காகிதத்தில் பொதிந்தும் கொடுக்கிறார்கள். இவற்றில் சணல் மற்றும் துணிப்பைகள் அவற்றின் அளவுக்கேற்ப விலையில் கிடைக்கின்றன. துணிக்கடைகளில் கூட, காசு கொடுத்தால்தான் பை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து பை கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். காகிதம், மற்றும் சின்ன அளவு டிஷ்யூ பைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இலவசமாகக் கிடைக்கின்றன என்பதாலேயே மக்களும் டிஷ்யூ பைகளுக்கு பாலிதீன் கேரிபேகுகளுக்குக் கொடுத்த அதே வரவேற்பை அளிக்கிறார்கள். அதான்.. அதேதான். வாங்கிக்குவிக்கவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கியெறியவும் ஆரம்பித்திருக்கிறார்கள். தனித்தனி டிஷ்யூ பைகளில் போட்டுத்தரச்சொல்லி காய்கறிச்சந்தையில் சில வாடிக்கையாளர்கள் சண்டை போடுவதும், கடைக்காரர் மறுப்பதும் கண் கொள்ளாக் காட்சி.

காகிதப்பைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விடுமே? மரங்களை அதிகம் வளர்க்க வேண்டிய இப்போதைய சூழலில், ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டினால் என்னாகும்? என இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. தவிரவும், ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எறியப்படும் டிஷ்யூ பைகள் மட்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காதா? அவை, மழை நீர் வடிகால்களில் சென்று அடைத்துக்கொள்ளாதா? என்னதான் இப்பைகள் விரைவில் மக்கி விடும் என்றாலும், இவற்றையும் அளவில்லாமல் குப்பையாகச் சேர்ப்பது சரிதானா? என பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. 

LinkWithin

Related Posts with Thumbnails