Friday 29 July 2016

ஒரு சொல்.. பல பாக்கள் -2

"ஆழி" என்னும் சொல்லுக்கு கடல், சக்கரம் என மேலும் சில அருஞ்சொற்பொருட்களும் உண்டு.

1) கொடுத்தான் கிடந்தான் புதைத்தான் சமரில்
எடுத்தானே ஆழியை மால்

விளக்கம்: (கணையாழி கொடுத்தான் பாற்கடலில் கிடந்தான், பாரதப்போரில் தேர்ச்சக்கரத்தை அழுத்தி அர்ச்சுனனைக் காத்தான், அசுரர்களை வதம் செய்ய சுதர்சனச்சக்கரத்தை எடுத்தான் திருமால்)

2) ஆழியில் வீற்றிருந்து ஆடியது போதுமே
நாழி பலவாச்சே வா

3) திருவாழி மார்பன் அணிந்த படையாம் 
திருவாழி காப்பு நமக்கு

விளக்கம்: (திருமகளான லக்ஷ்மி வாழ்கின்ற திருமார்பை உடையவன் அணிந்த ஐம்படைகளில் ஒன்றான சுதர்சனச்சக்கரம் நம்மைக் காக்கட்டும். நாகர்கோவில் அருகேயுள்ள திருப்பதி சாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் திருப்பெயர் திருவாழி மார்பன் இங்கே என்பது குறிப்பிடத்தக்கது.

4) மாலனை சங்கரன் மைத்துனனை கண்ணனை
பாலாழி ஈந்த திருவின் பதியை
கிருஷ்ணனை மோகினியை மாமருந்தே யன்ன
திருத்துழாயைப் பாடும் குழல் (பல விகற்ப இன்னிசை வெண்பா) 

5)
பாலாழி நீங்கினோன் காலாழி ஏத்தியே
வேலாழி ஏகினன் வாயுமகன்- சீர்மிகக்
காட்டினன் ஆழி வழுத்தியு யிர்த்தன்னை
மீட்டும் அளித்தாள் மணி (பல விகற்ப இன்னிசை வெண்பா) 

விளக்கம்: பாற்கடலை விட்டு அகன்று பூவுலகில் அவதாரமெடுத்திருக்கும் ராமனின் பாதத்தை வணங்கி அவனருளால் கடலையும் கடந்து வந்த ராமதூதனாகிய அனுமன், ராமனது கணையாழியை சீதையிடம் காண்பித்தான். புத்துயிர் பெற்ற அன்னை அவனை வாழ்த்தி தனது அடையாளமாக தன்னுடைய சூடாமணி எனும் நகையை ராமனிடம்  சேர்ப்பிக்கச்சொல்லி அனுமனிடம் கொடுத்தனுப்பினாள்.

LinkWithin

Related Posts with Thumbnails