Wednesday 24 October 2018

ராமலஷ்மியின் பார்வையில் - சிறகு விரிந்தது.

இணைய உலகில் தோழி ராமலஷ்மியைத் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. "முத்துச்சரம்" என்ற வலைப்பூவில் எழுதி வரும் ராமலஷ்மி ஒளிப்பட வல்லுநரும் ஆவார். இவருடைய படைப்புகள் பல்வேறு இணைய இதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வெளியாகியுள்ளன. "அடைமழை" என்ற சிறுகதைத்தொகுப்பையும், "இலைகள் பழுக்கா உலகம்" என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். எனது கவிதைத்தொகுப்பான  "சிறகு விரிந்தது" பற்றி "திண்ணை" இணைய இதழில் வெளியான அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

கவிதைகளை மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன. உரக்கச் சொல்லவில்லை எதையும். ஆனால் உணரச் செய்கின்றன அழுத்தமாக. நூலிம் 91 கவிதைகளையும் நாம் கடந்து வரும்போது இது புரிய வரும். இயற்கையின் உன்னந்தங்கள், சமூகத்தின் அவலங்கள், இயந்திரமான நகர வாழ்வில் தொலைந்து போன அருமைகள், அன்றாட வாழ்வின் அவதானிப்புகள், வாழ்க்கையில் மாற்றவே முடியாது போய் விட்ட நிதர்சனங்கள் என நீள்கின்றன இவரது பாடுபொருட்கள்.

அழகிய மொழி வளமும், கற்பனைத் திறனும் இவர் கவிதைகளின் பலம்.

மனதைக் கவருகிறது ‘மகிழ்வின் நிறம்’:
“எந்தவொரு புதினத்தையும் விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது

ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்த வெளியில்
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்

காற்றில் வழிந்து வரும்
புல்லாங்குழலை விட
இனிமையான மழலையின் நகைப்பும்….”

அவரவர் துயரத்தின் போது அடுத்தவர் வேதனையையும் எண்ணி பதைக்கும் ஒரு மனதைப் பார்க்க முடிகிறது ‘எவரேனும்’ கவிதையில் எழுப்பட்டக் கேள்வியில்..
“தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின்கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்

பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
யாரேனும் இருக்கக் கூடுமோ?”

சமுதாயத்தில் அது, இது, எதுவுமே சரியில்லை எனும் எந்நாளும் சலித்துக் கொள்ளும் நாம் சரியில்லாத ஒன்றை சந்திக்க நேரும்போது செய்வதென்ன என்பதை கேட்கிறது, ‘சொல்வதெளிதாம்’. “விட்டு வந்த வயலும் வீடும் குளமும் குயில் கூவும் தோப்பும் கனவுகளாய் இம்சிக்க” ‘நகரமென்னும்’ மாயையான சொர்க்கத்தில் மயங்கி நாம் கிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

“காடுகளை அழித்து இன்னொரு காடு” ஆக ‘கான்க்ரீட் காடு’கள்:
“விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்
இயல்பைத் தொலைத்து
குறுகி நிற்கின்றன

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்
கான்க்ரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்”

சபிக்கப்பட்ட்டவர்களாய் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பரம பதத்தில் முன்னேறி சிம்மாசனத்தைப் பிடிக்கிறார்கள் ‘தாயம்’ கவிதையில். ஆனால் காலம் மாறினாலும் சமூகம் முழுவதுமாகவா மாறி விடுகிறது? இன்றும் அங்கே இங்கே எனத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது கள்ளிப்பால் கதைகள். ‘சன்னமாய் ஒரு குரல்’ பிசைகிறது மனதை:
“உணவென்று நம்பி அருந்திய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே
உறக்கம் கொண்டு விட்டோம்
கள்ளித்தாய் மடியிலேயே
பெற்றவளின் முகம் கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி
என் முகம் அவள் பார்த்த
தருணமென்றொன்று இருந்திருக்குமா.”

தேர்ந்த நிழற்படக் கலைஞரான இவர் எடுத்த படமே சிறகை விரித்து சிட்டுக் குருவியாய் நிற்கிறது அட்டையில். அனைத்து உயிர்களுக்குமான பூமியை மனிதன் சுயநலத்தோடு ஆக்ரமித்துக் கொள்ள அலைக்கழியும் சிட்டுக்குருவிகளின் ஆதங்கத்தை வடித்திருக்கிறார் ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ கவிதையில். நெகிழ வைக்கிறது, ‘அந்த இரவில்’ மகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பு. மனிதர்கள் சுமந்து திரியும் ‘முகமூடிகள்’, ‘தொடங்கிய புள்ளியிலேயே’ நிற்கிற காலம், மீனவர் துயர் பேசும் ‘ரத்தக் கடல்’, மனசாட்சியை உறுத்த வைக்கும் ‘இன்று மட்டுமாவது’, அன்பெனும் ‘மந்திரச் சொல்’, கடவுளின் ‘கையறு நிலை’, ஆழ்மன வேதனையாய் ‘கணக்குகள் தப்பலாம்’ எனத் தொகுப்பில் கவனிக்கத் தக்கக் கவிதைகளின் பட்டியல் நீண்டபடி இருக்கிறது.

பால்ய காலத்துக்கே அழைத்துச் சென்ற ‘ரயிலோடும் வீதிகள்’ ஏற்படுத்திய புன்னகை வெகுநேரம் விலகவில்லை:
“..அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு”

அழகியலோடு வாழ்வியலும், அவலங்களோடு ஆதங்கங்களும் வெளிப்படும் கவிதைகளுக்கு நடுவே மனித மனங்களில் நம்பிக்கையை விதைக்கச் செய்ய வேண்டியக் கடமையை மறக்கவில்லை ஆசிரியர். இளையவர் பெரியவர் பாகுபாடின்றி சந்திக்கும் எல்லாத் தோல்விகளுக்கும் தேடித் தேடிக் காரணம் கண்டு பிடித்து, பிறரைக் குறை சொல்லி, தம் தவறுகளை நியாயப்படுத்தியபடியே இருக்கிற உலகம் இது:
“விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்
பெருங்கடலாயினும் குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக் கற்றுக் கொண்ட மீன்கள்.”

ஆசிரியரின் கவிதை மீதான நேசமும் உணர்வுப் பூர்வமான வரிகளும் நம் எண்ணங்களின் சிறகை விரிய வைத்திருக்கின்றன.

வாழ்த்துகள் சாந்தி மாரியப்பன்!

‘சிறகு விரிந்தது’
சாந்தி மாரியப்பன்
‘அகநாழிகை’ வெளியீடு
96 பக்கங்கள், விலை ரூ.80/-
தபாலில் பெற்றிட:
aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட:
http://aganazhigaibookstore.com

அருமையான மதிப்புரைக்கு மிக்க நன்றி ராமலஷ்மி. மதிப்புரையை அவரது வலைப்பூவிலும் வாசிக்கலாம்.

Tuesday 2 October 2018

வீதிவலம்.. (நெல்லையப்பர் கோவில்)

சிறு கோவிலோ பெரிய கோவிலோ… அதைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் நடந்தே பார்த்து ரசிப்பது பிடித்தமான ஒன்று. கோவிலை வலம் வந்தாற்போலவும் ஆயிற்று, சுற்றியுள்ளவற்றைப் பார்வையிட்டாற்போலவும் ஆயிற்று என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதுவும் அவ்வீதிகள் ரதவீதிகளாக அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ரதவீதிகளுக்கென்றே ஒரு அமைதியான அழகு இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, தரிசனம் முடித்து வெளியே வந்ததும் ரதவீதிகளில் உலா வந்தோம்.

கீழரத வீதியில் தெற்கு நோக்கி நடக்கும்போது, நெல்லையப்பர் கோவிலின் எதிரிலிருக்கும் உணவகத்தையொட்டினாற் போலிருக்கும் இருட்டுக்கடையை அறியாதவர் இருக்க முடியாது. பகல் முழுவதும் பூட்டிக்கிடக்கும் கடை மாலை ஆறு மணியளவில் திறந்து வெகு விரைவிலேயே மூடிவிடும். அக்குறுகிய கால இடைவெளிக்குள் அல்வாவை வாங்கி விட வேண்டுமென்று பெருங்கூட்டம் காத்துக்கிடக்கும். முன்பு மாதிரி முண்டியடிக்காமல் இப்பொழுதெல்லாம் மக்கள் வரிசையில் நின்று வாங்கிச்செல்ல ஆரம்பித்திருப்பதால் அப்பகுதியில் நெரிசலும் தள்ளுமுள்ளும் குறைந்திருக்கிறது. நல்ல விஷயம்தான். 
 நெல்லை ஜங்க்ஷனிலிருக்கும் லஷ்மி விலாஸ் இனிப்பகம்

ஜங்க்ஷனிலிருக்கும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.
கீழரத வீதியிலேயே இன்னும் சற்று நடந்தால் வலப்பக்கம் சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட் உள்ளது. உள்ளே நுழைந்து கொஞ்சம் உடங்குடிக்கருப்பட்டியும் சின்ன வெங்காயமும் வாங்கிக்கொண்டு முறுக்கு வாசனை அழைத்த வழியில் மேலே நடந்தோம். மூன்றடிக்கு மூன்றடி இருந்த அந்தக் குறுகிய இடத்தில் விறகடுப்பில் கைமுறுக்குகள் வெந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து நடத்தும் கடை அது. வாசனையே பிரமாதமாக இருந்ததால் கொஞ்சம் கைமுறுக்கு வாங்கிக்கொண்டோம். எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு மாறாக சுவையாகவே இருந்தது. அடுத்த தடவை செல்லும்போது இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த மார்க்கெட் வீதியில் பார்க்க ஏதுமில்லாததால் திரும்பி நடந்து ரதவீதிக்கே வந்தோம். 
கோவில் வாசல்.

நெல்லையப்பர் கோவில் ராஜகோபுரம்

கீழ ரத வீதியும் தெற்கு ரதவீதியும் சந்திக்குமிடத்தை வாகையடி முக்கு என அழைக்கிறார்கள். அங்கிருக்கும் வாகைமரத்தின் கீழ் கோவில் கொண்டிருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாம். கோவிலின் வெளியே இருந்த கடையில் மும்பையில் பொங்கல் சமயம் மட்டுமே காணக்கிடைக்கும் கருப்பு கரும்பின் ஜூஸ் கிடைத்தது வெயிலுக்கு இதமாக இருந்தது. வாகையடி முக்கிலிருக்கும் லாலா கடை, இனிப்புக்கும் பலகாரங்களுக்கும் பெயர் போனதென்று உள்ளூர் மக்கள் சொல்லக்கேள்வி. அங்கிருந்து தெற்கு ரதவீதியிலேயே சில தப்படிகள் நடந்தால் உள்ளூரில் அல்வாவுக்கிணையாகப் புகழ் பெற்ற “திருப்பாகம்” என்ற இனிப்பு விற்கப்படும் கடையொன்று இருக்கிறது. ஒரு சில மளிகைக்கடைகளைத் தவிர அவ்வீதியில் குறிப்பிட்டுச்சொல்லும்படியாக ஏதும் காணப்படவில்லை. 
வாகையடி முக்கு.

தெற்கு ரதவீதி முடிவடைந்து மேற்கு ரதவீதி ஆரம்பிக்கும் முக்கில் சந்திப்பிள்ளையார் கோவில் இருக்கிறது. இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் கோவில் கொண்டிருப்பதால் அவருக்கு அக்காரணப்பெயர். கோவில் திறந்திருக்கும் சமயமானால் உள்ளே சென்று வணங்கலாம். அவ்வாறில்லையெனில் வெளியில் நின்றே மானசீகமாக வணங்கி தோப்புக்கரணமிட்டு குட்டிக்கொண்டு நகரலாம். எவ்வாறாயினும் அவர் அருள் பாலிப்பார். அவர்தான் கருவறையிலும் இருப்பார், கோபுரத்திலும் இருப்பவராயிற்றே. 
மேலரத வீதியில் சிறிதும் பெரிதுமாக நகைக்கடைகள் அதிகமும் காணப்படுகின்றன. வீதியிலிருந்து பிரிந்து செல்லும் சந்துகளுக்கு சமயப்பெரியவர்களான அப்பர், சுந்தரர் இன்னும் பலரின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. “முடுக்கு” என்று தெற்கத்தி மக்கள் அழைக்கும் சந்துகளில் ஒரு சிலவற்றில் பொற்கொல்லர்களின் கடைகள் இருக்கின்றன. ஒரு சமயம் நெல்லை சென்றிருந்த போது ஒரு நகையை ரிப்பேர் செய்ய வேண்டியிருந்தது. பெரிய கடைகளில் ரிப்பேர் வேலைகளை எடுப்பதில்லை எனக்கூறி, அங்கிருந்த பணியாள் ஒருவர் கை காட்டிய போதுதான் பொற்கொல்லர்களின் பட்டறைகள் அங்கிருப்பதை அறிந்தேன். எதிர்பார்த்ததை விட திருப்தியாகவே செய்து கொடுத்தனர். வீதிவலத்தால் கிடைத்த பலன்களில் இதுவுமொன்று.

இலக்கிய மணம் கமழும் பெயர்களைத்தாங்கியுள்ள மேலரத வீதியில் அமைந்திருந்திருக்கிறது அடுக்கு சுடலைமாடன் கோவில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு  போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற காரணப்பெயர் கொண்டது. இவ்வீதியிலிருந்து உட்செல்லும் சுடலைமாடன் கோவில் தெரு மிக முக்கியமானது. //தமிழகத்தின் முக்கியப் படைப்பாளிகளும் அரசியல் தலைவர்களும் வந்து சென்ற சிறப்புடையது. இத்தெருவில்தான் திரு. தி.க.சி. ஐயா அவர்கள் வசித்து வந்தார். தெருவின் இறுதியில், உயர்ந்த அந்தக் காரை வீட்டின் சந்துக்குள் சென்றால், பெரிய வானவெளி தென்படும். அந்தப் பெரிய வளவினுள் கடைசியாய் இருக்கும் வீட்டில் தி.க.சி ஐயா இருந்தார்.//(வரிகளுக்கு நன்றி நாறும்பூ நாதன் அண்ணாச்சி) அவரது தனயனும் மனதை வருடும் எழுத்துக்குச் சொந்தக்காரருமான வண்ணதாசன் ஐயா, கலாப்ரியா அண்ணாச்சி, போன்றோர் வசித்ததும் இவ்வீதியில்தான். சுடலைமாடன் கோவிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால் சற்றுத்தொலைவில் வரும் வைரமாளிகை உணவகத்தை சுகாவின் எழுத்தில் வாசகர்கள் தரிசித்திருக்கக்கூடும்.
மேலரத வீதியும் வடக்கு ரத வீதியும் சந்திக்கும் முக்கிலிருக்கும் பஸ் ஸ்டாப்பின் எதிரேயிருக்கும் டீக்கடையில் டீ நன்றாக இருக்கும் என்ற அரிய தகவலை இங்கே பதிவு செய்வது அதி முக்கியமானதாகும். இவ்வளவு நேரமும் நடந்த களைப்பைப் போக்க சூடாக டீ அருந்தி விட்டு வலத்தைத் தொடர்வது முக்கியம். ஏனெனில் ஆரெம்கேவி, போத்தீஸ், ராம்ராஜ் போன்ற ஜவுளிக்கடல்களும், சின்னச்சின்ன ஜவுளிக்கடைகளும் ஒரு சில நகைக்கடைகளும் இருக்கும் ஆபத்தான இப்பகுதியைக் கடக்க மிகுந்த மனத்துணிவும் உடற்தெம்பும் தேவை. லிஸ்டும் நாலைந்து கோணிகளும் தேவையான பணமும் கொண்டு வந்தால் ஒரு கல்யாணத்துக்குத் தேவையான நகை, மளிகை, ஜவுளி என எல்லாப்பொருட்களையும் இந்த ஒரு வீதியிலேயே வாங்கி விடலாம். வற்றல் வடகத்துக்கென்று பிரத்தியேகமாக இருந்த கடையில் மோர் மிளகாய், சீனியவரைக்காய் வற்றல், மிதுக்கு வற்றல், பாகற்காய் வற்றல் என ஒவ்வொன்றும் அணி வகுத்திருந்தது என் போன்ற நாக்கிற்கு அடிமையானவர்களுக்கு கண் கொள்ளாக்காட்சி. அங்கிருந்து வாங்கி வந்த மிதுக்கு வற்றல் செம ருசி. ரோஜாக்களுக்குப் போட வாங்கிய கடலைப்பிண்ணாக்கு எங்களுடன் மும்பைக்குப் பயணித்தது. ஆனால், வந்தபின் மழையில் நனைந்து வீணானது தனிக்கதை. ரயிலில் கட்டுச்சோறு கட்டுவதற்கான சில்வர் ஃபாயில் டப்பாக்கள் வற்றல் வடகம் கடையிலேயே கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. ஏனெனில் ஒவ்வொரு சமயம் இதெல்லாம் நெல்லையில் எங்கே கிடைக்கும் எனத்தெரியாமல் தேடியலைந்த சிரமம் எனக்குத்தான் தெரியும். 
ஆரெம்கேவியின் புதிய கிளை வண்ணாரப்பேட்டையில் திறந்தாலும் பழைய கடை இன்னும் இயங்கி வருகிறது. கைராசி உள்ள கடை என அக்கம்பக்கம் கிராமத்தார் இன்னும் இதைத்தான் தேடி வருவதாக முன்பொருமுறை அங்குள்ள பணியாளர் சொன்ன ஞாபகம். அவர்களுக்காக பட்டுப்புடவைப்பிரிவு இங்கும் இயங்குகிறது. அருகிலேயே ராயல் டாக்கீசை இடித்துக்கட்டப்பட்ட போத்தீஸ் கம்பீரமாக நிற்கிறது. டீ மற்றும் சிறுதீனிகள் விற்கும் கடைகள், பூ, பழங்கள் விற்கும் வண்டிகள், கரும்பு ஜூஸ், லொட்டு லொசுக்கு சாதனங்கள் விற்பவர்கள் என எப்பொழுதும் இந்த வீதி ஜே ஜே என இருக்கிறது. சீசன் சமயங்களில் கண்ணாடிப்பெட்டிக்குள் மின்னும் நாவல் பழம் வண்ணதாசன் ஐயாவை நினைவு படுத்தியதென்னவோ உண்மை. போத்தீஸின் எதிரே விற்றுக்கொண்டிருந்த பட்டாணி சுண்டல் சூடும் சுவையுமாக இருந்ததில் மகிழ்ச்சி. ஒரு பொட்டலம் வாங்கிக் கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு எத்தனை நேரமானாலும் நடக்கலாம். மல்லி, பிச்சி போன்ற பூக்களுக்கு அலந்து கிடக்கும் மும்பை வாழ்க்கையில் உழன்ற என் போன்றவர்களுக்கு அவற்றைக் கூடை கூடையாகப் பார்ப்பதிலேயே மனம் நிறைந்து விடும்.
வீதிவலம் இங்கே நிறைவுற்றது
ராயல் டாக்கீஸ் முக்கிலிருந்து வலப்பக்கம் திரும்பி, கீழ ரத வீதிக்குள் நுழைந்தால் ஆண்டி நாடார், வேலாயுதம் நாடார் பாத்திரக்கடல்கள் வரவேற்கின்றன. பித்தளை, எவர்சில்வர் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக்கடைகள். எத்தனை கடைகள் வந்தாலும், ஆண்டி நாடார் கடையின் பித்தளைப்பாத்திரங்களுக்கு இன்றும் மவுசு இருக்கிறது. பட்டாணிக்கடலையைக் கொறித்துக்கொண்டே மெல்ல நடந்து கோவில் வாசலை வந்தடைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டபின் கோவிலின் எதிரில் மண்டபத்திலிருக்கும் வளையல், சுவாமி அலங்காரப்பொருட்கள் மற்றும் கொலு பொம்மைக்கடைகளைப் பார்வையிட்டு வேண்டியதை வாங்கிக்கொண்டு கூட்டுக்குத் திரும்பினோம். 

இருட்டுக்கடை அல்வா வாங்கவில்லையா? எனக் கவலைப்படும் சமூகத்திற்கு… அதெல்லாம் ஜங்ஷனில் லஷ்மி விலாசிலேயே வாங்கியாயிற்று. லஷ்மியும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்சும் ஜங்க்ஷனில் எதிரெதிரே இருப்பது எத்தனை வசதியாயிருக்கிறது தெரியுமா?.

LinkWithin

Related Posts with Thumbnails