Thursday 12 December 2013

முதலீடும் வட்டியும்..

பூரியா சப்பாத்தியா என்ற குழப்பத்திற்கு விடை தேடி முடிக்கையில் உப்புமா வந்து உட்கார்ந்து கொள்கிறது காலை உணவாக.

கற்பித்தலின் மூலம் கற்றுக்கொள்வதை விட பார்த்தும் கேட்டும் உணர்ந்தும், ஏற்படும் அனுபவத்தால் கற்றுக்கொள்வதே அதிகமும் வழி காட்டுகிறது.

சுமையாய் நினைக்காத வரை கனம் உணரப்படுவதில்லை.

நமது போதனைகளிலிருந்து கற்றுக்கொள்வதை விட நம்மிடமிருந்தே அதிகமும் கற்றுக்கொள்கின்றன குழந்தைகள்.

பக்குவப்பட்டவனை எதுவும் பாதிப்பதில்லை.

‘வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. சிலருக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது.

வாழ்வின் ஆரம்ப காலங்களில் செய்யும் முதலீட்டுக்கான வட்டியே பிற்பாதியில் கிடைக்கிறது. நல்லதை முதலீடு செய்து மகிழ்ச்சியைப் பெறுவோம்.

பிறரின் கண்ணீருக்குக் காரணமாக இருப்பவன் இறுதியில் அவர்களை விட அதிகமாகக் கண்ணீர் விட நேரிடும்.

கண்ணீர்ப்பூக்களைப் புன்னகைப்பூக்களாக மாற்ற வல்லது அன்பு.

ஆரம்பகால உற்சாகம் அடுத்து வைக்கும் அடிகளிலும் குன்றாதிருப்பதே வெற்றியை நோக்கி நம்மை வேகமாக இட்டுச்செல்லும்.

Saturday 9 November 2013

எப்படிச்சொல்வேனடி தோழி!! (குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்)

ஃபேஸ்புக்கில்"குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது. எனது சாரல்துளிகளும் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கம் என்றாலும் இந்தத்தடவை தனது அளவற்ற அன்பினால் என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டாள் என் தோழி. செப்டம்பர் இறுதி நாளில் தொடங்கி அக்டோபர் 10-ம் தேதி வரைக்கும் ஒன்றிரண்டு நாட்களைத்தவிர தினமும், அதாவது கிட்டத்தட்ட அந்த வாரம் முழுவதையுமே எனது "சாரல் துளிகளுக்காக" ஒதுக்கிய அவளது அன்பை என்னவென்பது.

"இந்த வாரம்.. எனது வாரம்" என்று வீட்டில் சற்றே கர்வப்பட்டுக்கொண்டேன். பின்னே,.. நம் அருமை பெருமைகளை வீட்டிலுள்ளவர்களிடம் இது மாதிரியான சமயங்களில்தானே டமாரம் அடித்துக்கொள்ள முடியும். நமக்கென்று ஒரு கெத்து இருக்கிறதல்லவா :-)))

உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதே சமயம் என் கல்வெட்டுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமே. ஆகவே இங்கே பகிர்ந்து விட்டேன் :-)








இன்னொரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி.

Monday 4 November 2013

பாதுகாப்பே மகிழ்ச்சியானது..

தீபாவளிக்கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?.. பெண்களெல்லாம் பலகாரங்கள் சுட்டு முடித்த களைப்பில் இருப்பார்கள். மற்றவர்கள் அவற்றை ஒரு கை பார்த்த களைப்பிலும் புதுப்படங்களைக் கண்டு களித்த மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். ஆனால், இந்தப் பொட்டுப்பொடிசுகளுக்கு மட்டுந்தான் இன்னும் தீபாவளி முடியவில்லை. பின்னே.. வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகள் இன்னும் மீதம் இருக்கிறதே :-) நடுராத்திரி என்றும் பாராமல் வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். சிறிசுகள் பட்டாசு கொளுத்தும் ஸ்டைலைப் பார்த்தால் பழமொழியில் பொய்யில்லை என்றுதான் தோன்றும் :-). புதுத்துணிகள் பலகாரங்கள் கொடுப்பதை விட பட்டாசுகள்தானே அவர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி.

"எக்கா.. லெச்சுமி வெடி, குருவி வெடியெல்லாம் வெடிக்கறது இருக்கட்டும். அணுகுண்டை வெச்சு வெடிக்க வைப்பியா?" என்று நக்கலுடன் கேட்டான் வயதில் இளையவனானாலும் விளையாட்டுத்தோழனான வெங்கிட்டு. எல்லாம் ஒரு காலத்தில் நான் பட்டாசு வெடித்த லட்சணத்தைப் பார்த்துத்தான். ஒரு தாளைக் கிழித்து அதில் பட்டாசுத்திரி படும்படி வைத்துவிட்டு தாளின் ஒரு முனையைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ பரவி பட்டாசுத்திரியைத் தொட்டதும் படாரென்று வெடிக்கும். அவ்வளவு வீர தீர தைரியசாலியான என்னை.. என்னைப் பார்த்து ஒரு சிறுவன் இப்படிக் கேட்கலாமோ!! :-))). நக்கலடித்ததுமில்லாமல் "நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். 

 நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

இங்கேயும் சில பிரகஸ்பதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். வெடிகளை மட்டுமென்ன, ராக்கெட்டுகள், பூச்சட்டி என்று சொல்லப்படும் பொறிவாணங்களையும் கூட அனாயாசமாகக் கையில் பிடித்துக்கொண்டுதான் பற்ற வைக்கிறார்கள்.அது பொங்கி மங்களம் பாடும்போது இவர்களும் சேர்ந்து கொண்டு "ஐயோ.. அம்மா, வலிக்குதே" என்று கோரஸ் பாடுவதுண்டு.

மும்பையில் தீபாவளி தேய்பிறை ஏகாதசியன்று ஆரம்பித்து, வளர்பிறை துவிதியை வரைக்கும் ஏழு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் லக்ஷ்மி பூஜை மிகவும் முக்கியமான பண்டிகை. இதைப்பற்றி விவரமாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சாயந்திரம் வீட்டில் லக்ஷ்மி பூஜையை முடித்து விட்டு, புதுசை உடுத்திக்கொண்டு பார்க்கிங்கிற்குப் போய் வாகனங்களுக்குப் பொட்டிட்டு, மாலை சாற்றி, ஊதுவத்தி காண்பித்து பூஜை செய்தபின் பட்டாசுகளைக் கொளுத்துவது இங்கே வழக்கம். நாங்களும் வழக்கம்போல் வீட்டில் பூஜை முடித்து, வாகனங்களுக்கும் பூஜை செய்து விட்டு பட்டாசு கொளுத்த ஆரம்பித்தோம். பையருக்கு நட்சத்திரப்படி நேற்று பிறந்தநாளும் கூட :-))

எங்கள் வீட்டில் கடந்த சில வருடங்களாக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக்கொண்டு ஒளிவெள்ளத்தில் மூழ்கடிக்கும் பட்டாசுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். "Go green" என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளின் ஆர்டர். அவ்வப்போது குழந்தைகள் சொல்வதையும் பெரியவர்கள் கேட்க வேண்டும்தானே :-). இந்த வருடம் மும்பை முழுக்கவே ஒலிப்பட்டாசுகள் குறைவாகவும் ஒளிப்பட்டாசுகள்தான் அதிகமாகவும் வெடிக்கப்பட்டதாக நாளிதழ் தகவல் கொடுத்தது. இதைக் கண்கூடாகவும் கண்டோம். 

பட்டாசு கொளுத்தி முடித்தபின் வீட்டுக்கு வந்து, தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் பில்டிங்கின் எதிர் வரிசையிலிருக்கும் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் கடைகளும் உண்டு. கடைக்காரர்கள் பை நிறைய விதவிதமான பட்டாசுகளை வைத்துக்கொண்டு ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். கேலியும் கூத்துமாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. வெடிகளில் 25 shots என்றொரு வெடிவகை உண்டு. இரண்டு செங்கல்களை ஒட்டி பாக்கெட் போட்டுக்கொடுத்தாற்போன்ற அமைப்பிலிருக்கும் அதை திரியைக் கொளுத்தி வைத்து விட்டால் போதும். 25 வெடிகளும் பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகக் கிளம்பி வானத்தில் போய் வெடித்துப் பூப்பூவாய்ச் சிதறும். இதை அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருத்தர் பற்ற வைத்து விட்டு யதாஸ்தானம் திரும்பினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

சர்ர்ர்ரென்று வேகமாக வந்த ஹோண்டா சிட்டி வாகனமொன்று புகைந்து கொண்டிருந்த வெடியின் மேலாகக் கடந்து அதை இழுத்துக்கொண்டு சென்றது. "அரே.. பாப்ரே.." என்று அலறினார்கள் அக்கம்பக்கம் நின்றவர்கள் அனைவரும். நடந்த விபரீதத்தை வண்டியின் டிரைவர் உணருமுன்னே வண்டிக்கடியில் மாட்டியிருந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு வெடியாகக் கிளம்பி டாம்.. டாமென்று வெடிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான் தடதடவென்று வண்டியிலிருந்தவர்கள் இறங்கி ஓடி  பாதுகாப்பாக நின்று கொண்டார்கள். உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது என்று சொல்வார்களே!! அதை அன்று கண் முன் கண்டேன். கெட்டதிலும் நல்லதாக ஒரு விஷயம் நடந்திருந்தது. அதாவது வண்டியில் மாட்டி இழுத்த வேகத்தில் பெட்டி கிடைமட்டமாகச் சரிந்திருந்ததால் வெடிகளும் மேற்புறமாகக் கிளம்பாமல் கிடைமட்டமாகச் சாலையில் சென்று வெடித்துக்கொண்டிருந்தன. மேற்புறமாகக் கிளம்பியிருந்தால் வண்டி என்னவாகியிருக்குமென்று நினைத்துப்பார்க்கவே குலை நடுங்குகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதே. அதுவும் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தை குட்டிகளுடன் சென்று கொண்டிருந்த குடும்பம் அது.

சாலைகளில் வெடிகளை வைப்பவர்கள் கடந்து செல்பவர்களை எச்சரிக்க வேண்டாமோ!! வழக்கமாக "பட்டாசு வெச்சிருக்கோம். கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க" என்று அனைவரும் எச்சரிக்கை செய்வது வழக்கம்தான். என்னவோ போங்க.. அன்றைக்கு அந்தக் குடும்பத்தினரின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியந்தான். காரின் கீழிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வெடிகளையும் பதைபதைக்கும் மனங்களோடு நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு சின்னப்பொறி எத்தனையோ குடும்பங்களின் வீடுகளை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறது. அதேபோல் கண்ணீர்க்கடலிலும் மூழ்கடித்து விடவும் வல்லது. நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத்தான் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். காலத்துக்கும் நினைத்துப் பார்த்து வெம்பி வேதனைப்பட அல்ல.
நேற்று இரவில் சுமார் பதினொரு மணியளவில் பக்கத்துப் பில்டிங்கில் எல்லோருடைய தூக்கத்தையும் கலைக்கும் வண்ணம் அதிரும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. தவுசண்ட் வாலாவோ என்னவோ!!. "திவாலி முடிஞ்சாச்சு.. போய்த்தூங்குங்க" என்று கத்த வேண்டும் போலிருந்தது. அதன் பின் ஒன்றரை மணியளவில் ஆரம்பித்து விடியற்காலை சுமார் நான்கு மணி வரைக்கும் கூட பட்டாசுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாம். ear muffler மற்றும் ear plugs துணையிருந்தும் சத்தம் காரணமாகத் தூங்க முடியாமல் தவித்த பையர் விடியலில்தான் தூங்கியிருக்கிறார். நமக்கே இப்படியென்றால் கைக்குழந்தைகள் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் என்ன கதியோ!!. பண்டிகையின் மகிழ்ச்சியையே கெடுத்து விடுகிறது இப்படிப்பட்ட சிலரின் செயல்கள். அததற்கென்று நேரம் காலம் இருக்கத்தானே செய்கிறது.

எல்லோரும் சந்தோஷப்படத்தான் பண்டிகைகள். அத்தனை பேரையும் வேதனைக்குள்ளாக்கி ஒரு சிலர் சந்தோஷப்பட அல்ல. நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. (எங்கூர்ல இன்னும் திவாலி முடியலை :-))

Thursday 19 September 2013

பூந்தோட்டம்.. (19-09-2013 அன்று பூத்தவை)

மணிச்சிகை: கோலாகலமாய் அம்ச்சி மும்பைக்கு வந்த கணபதி அதே கோலாகலத்தோடு திரும்பிப் போயிருக்கிறார். குழுவினர் தங்கள் முழு பலத்தையும் காட்டி வாசித்த பாண்டு வாத்திய இசையைக் கேட்டவண்ணம் வந்தபோதே அடுத்து வரும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவருக்கான ஆசனத்தில் அமர்த்தி, மாலை மரியாதை செய்து, மோதகம் நிவேதனம் செய்து, காதுக்கினிமையாக ஆரத்திப் பாடல்களைப்பாடி அவரை மகிழ்வித்தனர். உபசாரங்களில் மகிழ்ந்து சற்றே ரிலாக்ஸாக இருந்த பொழுதில் திடீரென்று ஹைபிட்சில் ஒலித்த 'லுங்கி டான்ஸ்' பாட்டால் தூக்கி வாரிப் போட்டதன் காரணமாக கையில் வைத்திருந்த மோதகம் தெறித்து எங்கோ விழுந்து விட்டதாகக் கேள்வி. போன வருஷப் பிள்ளையார்கள் 'ஷீலா கி ஜவானி, சிக்னி சமேலி' போன்ற காலத்தால் அழியாக் காவியங்களைக் கேட்டு இன்புற்றதை இந்த வருஷப் பிள்ளையார்கள் அறியவில்லை.. பாவம்.

தினமும் ஆரத்தி முடிந்ததும் அடுத்து அனுபவிக்கப்போகும் இ(ம்)சையை எதிர்நோக்கி காதுகளை இறுக மூடிக்கொண்டதால் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்குக் கூட சரியாக காதுகொடுக்க முடியவில்லையாம். "போனால் போகட்டும் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லி வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். வந்து நிம்மதியாக உட்கார்ந்து கொண்டார். ரெண்டு வகை மோதகங்கள், போளி எல்லாம் சாப்பிட்டு விட்டு, "அம்மாடி,.. இங்கே ஒண்ணரை நாள் நிம்மதியா இருந்தேன். அடுத்த வருஷமும் வாரேன்" என்றுவிட்டுப் போயிருக்கிறார்.
எங்க வீட்டுப்பிள்ளை..
"பாட்டா பாடுறீங்க?.. உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்று கறுவியர், மும்பையின் ஒரு மண்டலில் ட்ரெஸ் கோட் கொண்டு வந்துவிட்டார். தேசிய உடையான பெர்முடாஸில் வந்தவர்களை அலேக்காகக் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் பந்தலுக்கு வெளியே விடும்படி அமைப்பாளர்களின் மனதில் புகுந்து கொண்டு இவர் செய்த திருவிளையாடலை என்னவென்பது!!! "இருங்க,.. இன்னும் பதினஞ்சு நாளில் எங்கம்மா வருவாங்க. அவங்க கிட்ட உங்க விளையாட்டைக் காட்டினா தெரியும் சேதி" என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார். "ஹைய்யோ.. ஹைய்யோ.. புரியாத விளையாட்டுப் பிள்ளையா(ரா) இருக்கியே. அந்தம்மா வந்தாங்கன்னா பத்து நாளும் எங்களோட சேர்ந்து கும்மியடிப்பாங்க தெரியுமோ" என்று மக்கள் மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

உந்தூழ்(மூங்கில் பூ): புகைப்படப்பிரியனில் நான் எடுத்த இந்தப்படம் முத்துக்கள் பத்தில் ஒரு முத்தாக வெற்றி பெற்றது. தீர்ப்பு சொன்ன நாட்டாமைக்கு நன்றி :-)

எறுழம்பூ: வீட்டுக்கு வெளியே போனாலே சுவாரஸ்யமான அனுபவங்களுக்குக் குறைவிருக்காது. ஒரு சமயம் வண்டியை ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே பார்க்கிங்கில் சுவரையொட்டி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றோம். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தால் பின்னால், பக்கவாட்டுகளில் என்று சகட்டு மேனிக்கு வண்டிகளை நிறுத்தியிருந்தார்கள். எந்த வகையிலும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டோம். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தோம்.. ஹார்ன் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று முயற்சிக்கலாமென்றால் அதற்கும் பலனிருக்காது. அந்தச்சாலையில் ஓடும் எக்கச்சக்க வண்டிகளில் ஏதாவதொரு வண்டியின் ஹார்ன் என்று நினைக்கப்பட வாய்ப்பிருக்கிறதே. கடைசியில், வண்டியின் ஹெட்லைட்டுகள் மற்றும் பிற லைட்டுகளைப் போட்டு விடச்சொல்லி ரங்க்ஸிடம் சொன்னேன். லைட்டுகளைப் போட்டு விடுவதால் பாட்டரி டவுன் ஆகிவிடுமே என்று ரங்க்ஸுக்குத் தயக்கம். பயந்தால், தயங்கினால் காரியம் ஆகுமா என்ன?. "சும்மா வெறும் ரெண்டு செகண்டுக்குப் போட்டு விடுங்க. லைட் அணைஞ்சு அணைஞ்சு எரியறதைப் பார்த்தால் யாராவது வருவாங்க" என்று சொல்லிக்கொண்டே....... இருந்தேன். அது படியே ஆகிற்று :-). என் நச்சரிப்புத் தாங்காமல் விளக்குகளை எரிய விட்டார்.

முதல் தளத்திலிருந்த ஒரு கடைப்பையர் பார்க்கிங்கிலிருக்கும் வண்டியின் விளக்குகள் எரிவதைப் பார்த்து விட்டு உதவிக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், "அந்த வண்டியின் ஓனரின் ஆபீஸ் இங்கேதான் இருக்கு. விஷயத்தை அவரிடம் சொல்றேன்" என்று கூறிவிட்டு ஓனரை அழைத்து வந்தார். 'ஸாரி' கேட்டு விட்டு அந்த வண்டி நகர்ந்து வழியேற்படுத்திக் கொடுத்ததும், நாங்கள் கிளம்பினோம். "சொன்னாக் கேக்கணும்ன்னு இதுக்குத்தான் சொல்றது" என்று சொன்னபடியே அவரைப் பார்த்தேன். என்றுமில்லா முனைப்போடு சாலையைக் கவனித்துக் கூர்ந்து பார்த்தபடி கியரை மாற்றினார் அவர் :-))))))))

சுள்ளி(மராமரப்பூ): சாரல் துளிகளில் ஒரு துளியை "குங்குமம் தோழி" ஃபேஸ்புக்கின் முக வரி பகுதியில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தோழி.
கூவிரம் பூ: எல்லைப்பிரச்சினையென்பது அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவியிருப்பது என்னவோ உண்மைதான். என்றாலும் மின்சார ரயில்களிலும் அவை அதிகமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன போலும். எதையாவது விற்றுக்கொண்டு வருபவர்கள் அதைத் தீவிரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதைச் சமீபத்திய ஒரு பயணத்தில் காண நேர்ந்தது. பத்து ரூபாய்க்குப் பதினைந்து எலுமிச்சம் பழங்கள் விற்கும் இரண்டு பசங்கள் ஒரே சமயத்தில் ரயிலில் ஏறி விட்டார்கள். அப்புறமென்ன வாய்த்தகராறுதான் இருவருக்கும். "இது என் ஏரியான்னு தெரியுமில்லே.. அப்புறம் ஏன் வண்டியில் ஏறினே?.." என்று கேட்டான் முதலாமவன். "ரயில் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?" என்று கேட்டு விட்டு வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான் இரண்டாமவன். முதலாமவன் திகைத்து நின்று விடவில்லை. "தஸ் கா லிம்பு லே லோ..(பத்து ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கிக்கோங்க)" என்று இரண்டாமவன் சவுண்ட் விடும்போதெல்லாம் "அச்சா,.. படாவாலா இதர் ஹை (பெரிய நல்ல பழங்களெல்லாம் இங்கே கிடைக்கும்)" என்று தன் கையிலிருந்த பழப்பொதிகளைக் காண்பித்துக்கொண்டிருந்தான். உண்மைக்குமே அவன் வைத்திருந்த பழங்கள் நல்ல தரமானவையாக இருந்தமையால் சட்சட்டென விற்றுத்தீர்ந்து கொண்டிருந்தன. முகம் சிறுத்துப்போன இரண்டாமவன் எந்த ஸ்டேஷனில் இறங்கி வெளியேறினான் என்று தெரியவில்லை :-)))

Friday 23 August 2013

இலைகள்.. PIT போட்டிக்காக..

மலர்களுக்கு வாரி வழங்கிய வர்ணங்களையும் வடிவமைப்பையும் எந்த வித கஞ்சத்தனமுமில்லாமல், பாரபட்சமில்லாமல் இலைகளுக்கும் வழங்கியிருக்கிறாள் இயற்கையன்னை. பூக்களின் அழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்து விடாத "இலைகள்"தான் இம்மாத 'பிட்'போட்டிக்கான கருப்பொருள். கண்டதையெல்லாம் பிடித்துக்கொண்டு வந்ததில் இரண்டாவது படத்திலிருக்கும் க்ரோட்டன்ஸ் 'நான் போட்டிக்குப் போகிறேன்' என்று அடம் பிடித்ததால் அதை 'சென்று வா.. வென்று வா' என்று வீரத்திலகமிட்டு வாழ்த்தி அனுப்பியிருக்கிறேன். மீதமிருப்பவை எக்ஸிபிஷனில்..

நான் போட்டிக்குப் போறேனே..










 காடு மேடு எல்லாம் சுற்றினாலும் தோட்டத்து மூலிகையை மறந்து விட முடியுமோ!!.. எங்கள் வீட்டு வெற்றிலைகள் முகம் மறைத்து.. 

Monday 19 August 2013

கிளைத்துச்செழித்த மரம்..

சிலரிடம் நேரிடையாகப் பேசும்போதுதான் அவர்களைப்பற்றி அதுகாறும் நாம் கொண்டிருந்த மதிப்பீடும் புரிதலும் மறுமதிப்பீட்டிற்குள்ளாகிறது.

ஒரு செயலில் இறங்கும்போது, அந்த ஆர்வத்திற்கு அணை போடுவதற்குக் காரணமாக அமைவது அழுக்காறா அக்கறையா என்பது அதைச்செய்பவர்களுக்கும் நமக்குமான உறவைத்தீர்மானிக்கிறது.

பயத்தைக் களைந்து, துணிச்சலை வார்த்து வந்தால் தன்னம்பிக்கை மரம் கிளைத்து வளரும்.

எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் ஒரு துளி உதவி கொடுக்கும் நிம்மதியைப் பெருஞ்செல்வம் கூட சில சமயங்களில் கொடுத்து விட முடிவதில்லை.

கடனே என்று கடமையைச் செய்வதை விட சும்மா இருப்பது மேலானது. சும்மா இருப்பதை விட மன நிறைவுடன் கடமையைச் செய்வது அதிமேலானது.

வியாபாரம் போன்ற தொழில்களில் உறவுகள் உருவானால் இரண்டும் செழிக்கும். அதுவே உறவுகளுக்கிடையே வியாபாரம் நுழைந்தால் இரண்டும் இல்லாமற்போய்விடும்.

நெல்லிடை வளரும் புல் களையெனக் கொள்ளப்படுகிறது. இருந்தும் கால்நடைகளுக்குத்தீவனமாய் பிறருக்குப் பயன்படும்படி அதன் வாழ்வு அமைகிறது. அவ்வாறே மனிதருக்கும் தத்தம் பிறவிப்பயன் என்று ஒன்றுண்டு.. கண்டறிவோம்.

பிரச்சினைகளைக் குறித்து வெறுமனே கவலைப்படுவது நம்மைக் கட்டிப்போடுகின்றது. அவற்றைத் தீர்க்கும் சிந்தனை ஒன்றே அதிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது.

இதழ்களில் ஏந்திக்கொள்ளும் சிறுபுன்னகை, மோசமான தினத்தைக்கூட ஓரளவு சீரமைக்கும் வல்லமை கொண்டது.

கடமை சமைக்கிறது.. அன்பும் பாசமும் ருசியைக்கலக்கின்றன.

Saturday 17 August 2013

"என்னவோ போடா மாதவா.."

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் வாழ்வையும் ஈந்த எத்தனையோ தியாக உள்ளங்களைப்பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களையும் நம் வருங்காலத்தலைமுறையினருக்கு நம்மில் ஒருசிலரேனும் எடுத்துரைத்துக்கொண்டுதானிருக்கிறோம். என்றாலும் பிற பண்டிகைகளையும் காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு தினங்களையும் கொண்டாடும் அளவுக்கு நாம் குடியரசுதினத்தையும், சுதந்திரதினத்தையும் கொண்டாடுகிறோமா என்றால் வேதனைக்குரிய பதில்தான்  கிடைக்கிறது. அதிலும், "குடியரசுதினம் கொண்டாடப்படுமளவுக்குச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?.. இங்கே மட்டுந்தான் இப்படியா? அல்லது தேசம் முழுக்கவே இப்படியான மனோநிலைதான் நிலவுகிறதா!" என்பதில் எனக்கு என்றுமே சந்தேகமுண்டு..
மற்ற இடங்களில் எப்படியோ.. மும்பையில் குடியரசுதினம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. குடியிருப்புகளும் அரசாங்க அலுவலகங்களும், வீதிகளும் அன்று அட்டகாசமாக தேசியக்கொடியின் தோரணங்களாலும், வண்ணக்காகிதங்கள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையில் கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தேறும். அதன்பின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகளும் நடத்திப் பரிசளிக்கப்படும். அன்று நல்ல நேரத்தில் சத்ய நாராயணா பூஜை செய்யப்பட்டு தேச, மற்றும் மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடக்கும். மாலையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ‘ஹல்திகுங்கும்’ நிகழ்ச்சியுமுண்டு. குடியிருப்பில் அன்று லஞ்சோ அல்லது டின்னரோ கட்டாயமுண்டு.


இத்தனை அமர்க்களங்களும் வேண்டாம்.. அதில் ஒன்றிரண்டையாவது சுதந்திரதினத்தன்று கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அலுவலகங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில குடியிருப்புகளையும் தவிர மற்ற இடங்களில் கொடி கூட ஏற்றுவதில்லை. இப்படியிருக்கும் சுதந்திரத்தையும் அந்தச்சுதந்திர தினம்தானே நமக்கு வழங்கியிருக்கிறது. 

சென்ற சுதந்திர தினத்தன்று, வழக்கம்போல் புகைப்பட வேட்டைக்காகப் புறப்பட்டேன்.(வண்டிக்கருகில் வந்த விற்பனையாளர்களைத்தவிர சாலைக்காட்சிகளெல்லாம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குற்றம் குறை பொறுத்தருள்க). ஒன்றிரண்டு இடங்களிலாவது பொதுஇடங்களில் கொடியேற்றும் வைபவம் நடக்கும்.. பார்க்கலாம், காமிராவிலும் பிடிக்கலாம் என்று ஆசையோடு கிளம்பிய எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வழியில் தென்பட்ட ஒன்றிரண்டு மாண்டிசோரி நர்சரிப்பள்ளிகளில் மட்டும், மூவர்ணப்பலூன்களும் கொடிகளுமாக அலங்காரங்களும் தேசபக்திப்பாடல்களுமாகக் குழந்தைகள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏதோ.. குழந்தைகளாவது கொண்டாடுகிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதைத்தவிர தெருவில் சுதந்திரதினம் என்பதற்கான எந்த அடையாளமுமில்லை. அரசு அலுவலகங்களிலும்கூட பிரத்தியேகமான அலங்காரங்கள் எதுவும் தென்படவில்லை. போனால் போகிறதென்று கொடி மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. 



தொல்லைக்காட்சியின் முன் மக்கள் முடங்கி விட்டதால், அதிகம் ஆளரவமற்ற கடைத்தெருவிலும் சாலைகளின் சிக்னல்களிலும் கொடிகளை விற்றுக்கொண்டிருந்தவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்தியமாக இதுவும் இன்னொரு நாளாகத்தான் தெரிந்தது. வீட்டுக்குத்திரும்பும்போது வாங்கி வந்த காகிதக்கொடிகளில் ஒன்றைக் குடியிருப்பின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளியின் மேசையில் குத்தி வைத்து விட்டு வந்தேன். இப்படியாக, ‘எங்க குடியிருப்பிலும் கொடியேத்தியாச்..”

Wednesday 14 August 2013

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்"

பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-)

நகர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்களுக்காக..




'இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

LinkWithin

Related Posts with Thumbnails