Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Friday, 30 December 2011

கொண்டாட்டம் ஆரம்பம்..


உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது.  இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.
இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.
அல்வா கொடுக்க தேவையானவை:
கேரட்-1 கிலோ
சர்க்கரை-400 கிராம்
இனிப்பில்லாத கோவா-100 கிராம்
இது கிடைக்கல்லைன்னா கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக்கலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைச்சுக்கோங்க.
பால்- கால் லிட்டர்
ஏலக்காய்-2 பொடித்தது
எப்படி தயாரிக்கிறது:
கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.(சோப்பு போட்டேத்தான் கழுவணுமா, வாஷிங் மெஷின்ல வாஷ் செஞ்சா ஆகாதா,.. இல்லை ஆலாவுல ஊற வெச்சு கழுவணுமா.. டவுட்டு)
இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும். (மொதல்ல அடுப்பை பற்ற வையுங்கப்பா..)
லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும். (அடுப்பு எரிஞ்சா அதுல இருக்கற வாணலியும் எரிஞ்சுடாதா, அடுப்பை எதுல வெச்சு எரிக்கணும்ன்னு சொல்லவேயில்லை.. டவுட்டு)
(பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும். 
இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.(பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.. டவுட்டு)
விரும்பினா வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்த்து அலங்கரிச்சுக்கோங்க. (பாஸ்..ட்ரை ஃப்ரூட் ஃபேஷியலுக்கப்றம், அதை, ஐ-மேக்கப்,லிப்ஸ்டிக், காம்பேக்ட்டெல்லாம் போட்டு அலங்கரிக்கலாமா.. டவுட்டு)
டிஸ்கி1: வீட்ல இருக்குங்கறதுக்காக இஷ்டத்துக்கு கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்கிடாம, அல்வாவாக சாப்பிடுங்க. வடமாநிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.
புது வருசத்துக்காகவும், 
என்னோட ப்ளாக் ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாடவும், 
புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள் காரணமா அடிக்கடி இடுகை போட முடியாட்டியும், எப்பவாவது போடும் இடுகைகளுக்கு கடைக்கு வந்து உற்சாகமூட்டிய உங்க பொறுமைக்கான பரிசாகவும் அல்வா கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் நன்றிகளும் சொல்லிக்கிறேன். 
எல்லோரும் கேக் எடுத்துக்கிட்டு கொண்டாந்துருக்கற கிஃப்டை மறக்காம கொடுத்துடுங்க :-)

Thursday, 30 December 2010

நினைவில் நின்றவை..

'ஏதாவது ஒன்றை பெறவேண்டுமானால் ஒன்றை இழக்கத்தான் வேண்டும்'ன்னு சொல்லுவாங்க. ரொம்ப கரெக்ட். பழைய வருஷத்தை இழந்தாத்தான் புதுவருஷம் கிடைக்கும்.. 2010 போனாத்தான் 2011 வரும்.. வெங்காயத்தை வெட்டினாத்தான் பஜ்ஜி சாப்பிடமுடியும். இந்தமாதிரி தத்துவமெல்லாம் வருஷக்கடைசி ஆகும்போதுதான் எக்கச்சக்கமா கொட்டுது. உங்களுக்கு தெரிஞ்ச தத்துவங்களையும் எடுத்துவுடுங்க :-)))))

புதுவருச கொண்டாட்டத்துக்கான இறங்குமுக எண்ணிக்கை அதான் கவுண்டவுன் இஸ்டார்ட் ஆகிடுச்சு. நாளைக்கு சாயங்காலத்துலேர்ந்து ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இங்கே, அனேகமா ஒவ்வொரு அபார்ட்மெண்டுலயும் விழாக்கள் நடைபெறும். விருந்தும் இருக்கும். அதனால புதுவருஷத்தை கொண்டாடுறதுக்குன்னு ஸ்பெஷலா வெளியே எல்லாம் போறதில்லை.

இப்படித்தான், 2002 டிசம்பர் 31ஐ கொண்டாடணும்ன்னு நாங்க ஆறு பெண்கள் சேர்ந்து, ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சோம். அப்புறம், நிதி வசூலிச்சு அபார்ட்மெண்ட் மொத்தமும் கொண்டாடலாம்ன்னு திட்டம் விரிவாச்சு. அபார்ட்மெண்டில் பொதுவா ஒருத்தருக்கொருத்தர் அவ்வளவு ஈஸியா அறிமுகம் ஆகமாட்டாங்க. அதனால, ஒரு ஐடியா செஞ்சோம். குழந்தைகளோட கலை நிகழ்ச்சிகள் முடிஞ்சதும், ஒவ்வொரு குடும்பமா முன்வந்து, தன்னையும் குடும்பத்தினர்களையும் அறிமுகப்படுத்திக்கணும்ன்னு சொன்னதுக்கு ரொம்பவே வரவேற்பு கிடைச்சது. அப்படியே கையோட ஒரு நினைவுப்பரிசும் கொடுத்ததும் அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம் . மொட்டைமாடியில் விழா நடந்துச்சு. கேட்டரிங்கில் சொல்லி டின்னரும் ஏற்பாடாகியிருந்தது.

காத்து சும்மா பிச்சுக்கிட்டு போகுது. மார்கழிக்குளிருக்கு கேக்கவா வேணும். எல்லோரும் குளிரில் நடுங்கிக்கிட்டிருக்க, நான் குளிரிலும் கைவலியிலும் நடுங்கிக்கிட்டிருந்தேன். ஏன்னா, முந்தின நாள்தான் பாத்ரூம் தரையில் சிந்தியிருந்த ஆலா கரைசலில் கால்வழுக்கி கையை உடைச்சுக்கிட்டேன். எலும்பு முறியாம தசை மட்டும் முறிஞ்சு, முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரைக்கும் அங்கங்கே ஸ்பீட்ப்ரேக்கர்மாதிரி வீக்கங்கள். ஆனாலும், விடாப்பிடியா விழாவில் கலந்துக்கிட்டேன். இப்பவும் டாக்டரிடம் போகும்போது எப்போ அடிபட்டுச்சுன்னு கேட்டா, ஞாபகசக்திக்கு போட்டுக்கிட்ட முடிச்சுமாதிரி, நினைவுவர்றது அந்த புத்தாண்டுதான். அதுக்கப்புறம் எத்தனையோ புத்தாண்டுகள் வந்தாலும் இன்னிக்கும் எங்க பில்டிங்கில் அந்த முதல்புத்தாண்டைதான் பாராட்டுறாங்க.

இன்னொரு சமயம்,.... அப்ப, நாங்க அலிபாக்கில் இருந்தோம். அந்தத்தடவை நியூ இயர் கொண்டாட்டத்தை நாங்க நண்பர்கள் மட்டும் தனியா கொண்டாடலாம்ன்னு கலந்துபேசி முடிவெடுத்தோம். ரங்க்ஸோட ஃப்ரெண்ட்ஸ் , நாங்க, அப்புறம் மேலதிகாரின்னு மொத்தம் ஆறு குடும்பங்கள். ரெண்டு ஜீப்புகள்ல புறப்பட்டோம். குட்டீஸெல்லாம் நண்டும் சுண்டுமா இருந்த சமயம். எங்கே போகலாம்ன்னு மட்டும் முடிவெடுக்கலை.

அலிபாக்கை சுத்தி நிறைய கடற்கரைப்பிரதேசங்கள் உண்டு. அப்படியே போயிக்கிட்டிருப்போம். எங்கே தோணுதோ அங்கே வண்டியை நிறுத்திக்கலாம்ன்னு பேச்சு. கொறிக்கிறதுக்கு ஏதாவது வேணுமில்லையா.. கொஞ்சம் பொரி, பொரிகடலை, நிலக்கடலை, ஓமப்பொடி, வெங்காயம்( அப்ப கிலோ ஒரு ரூபாய்க்கு வித்தது.. ஹூம்..), கொத்தமல்லி இலைன்னு பேல்பூரி செய்ய தேவையான எல்லாத்தையும் வாங்கி பாக்கெட் போட்டுக்கிட்டோம்.

வண்டியில போயிக்கிட்டிருக்கும்போதே, பேசிப்பேசி கடைசியில, 'மாண்ட்வா' போகலாம்ன்னு முடிவாச்சு. அங்கே பீச்சும் நல்லாருக்கும். அதேமாதிரி கடலுக்குள் கொஞ்சதூரம் நடந்து போகிறமாதிரி ஒரு பாலமும் உண்டு. அன்னிக்கு, பாலத்துல எக்கச்சக்க கூட்டம். சில இடங்களில் ஸ்டவ் வெச்சு, சமையல் நடந்துக்கிட்டிருக்குது. 'குடிமகன்'கள் வேணுங்கிறதையெல்லாம் வாங்கிட்டு வந்து அங்கியே சமைச்சு சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்றுக்கிட்டிருந்தாங்க.

நாங்க, பக்கத்துல இருந்த ஜெட்டில(jetty) அடைக்கலமாகிட்டோம். கொண்டுபோயிருந்த பெட்ஷீட்டுகள், நியூஸ்பேப்பர்களெல்லாம் விரிப்புகளாக அவதாரமெடுத்துச்சு. பக்கத்துல மணல்ல 'bonfire' ரெடிசெஞ்சது குளிருக்கு இதமாயிருந்தது. கொண்டுபோயிருந்த பெரிய பாத்திரத்துல, பேல்பூரிக்கான பொருட்களைக்கொட்டி, எலுமிச்சை சாறு கலந்து ரெடிபண்ணோம். பேச்சும் சிரிப்புமா, கடல்காத்தோட குளிர்ல நடுங்கிக்கிட்டே கொண்டாடிய புத்தாண்டு இன்னிக்கும் பசுமையா நினைவிருக்கு.

ஒவ்வொருத்தரா ட்ரான்ஸ்பர் ஆகி வெவ்வேறு ஊர்களுக்கு போயிட்டாலும், சிலகுடும்பங்கள் மட்டும் அவ்வப்போது சந்திச்சுப்போம். அதுமாதிரி சமயங்களில், அலிபாக் வாழ்க்கையை பத்திதான் கூடுதலும் பேசிப்போம். முக்கியமா, எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பண்டிகைகளையும் விழாக்களையும்.. எத்தனையோ புத்தாண்டுகள் வந்தாலும் இது ரெண்டையும் மறக்கவேமுடியாது..

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...




Tuesday, 14 September 2010

பிள்ளையார் சதுர்த்தி..

ராக்கி கட்டி, நாரியல் பூர்ணிமா கொண்டாடி.. 'ஆலா ரே ஆலா.. கோவிந்தா ஆலா' என்று கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடங்கும் பண்டிகைக்காலம், எங்க ஊர் பிள்ளையார் சதுர்த்தியின்போது களை கட்டிவிடும். வீட்டுக்கு வீடு பிள்ளையார் வந்து ஜம்முன்னு உக்காந்துடுவார். ஹாஸ்டல்லேர்ந்து வீட்டுக்கு லீவுக்கு வந்த மகனைப்போல, ராஜ உபச்சாரம்தான் அவருக்கு :-)))


சதுர்த்திக்கு ஒன்றிரண்டு மாசத்துக்கு முன்னாலேயே.. அதாவது வெய்யில் காலத்துலயே, ஏற்பாடுகளெல்லாம் ஆரம்பிச்சுடும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் வடிவமைப்பதும், வர்ணமடிச்சு அழகுபடுத்துவதுமாக தொழிலாளர்களெல்லாம் பிஸியோபிஸியாகிடுவாங்க... இப்பல்லாம் காகிதக்கூழில் செஞ்சு, வாட்டர் கலர் அடிச்ச eco friendly புள்ளையார் மார்க்கெட்டுக்கு வந்துட்டார். நிறையப்பேர் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க.. ஆனாலும், ஜிகுஜிகுன்னு பெயிண்டில் ஜொலிக்கிற பிள்ளையாருக்கு ஒரு சில மக்கள் மத்தியில இன்னும் வரவேற்பு இருக்குது..


நம்மூர்ல பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்றது மாதிரிதான் இங்கியும் புள்ளையார வீட்டுக்கு கூட்டிட்டு வரமுன்னாடி வீட்டை சுத்தம் செய்வோம். அவரை உட்கார வைக்க சின்னதா மண்டபம் கட்டி, அலங்காரமெல்லாம் செஞ்சு..  ரெடியா வெச்சு, புள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு, 'கண்பதி பப்பா.. மோரியா!! மங்கள்மூர்த்தி மோரியா' என்ற கோஷத்தோட அவரை கூட்டிட்டு வந்து உட்கார வெச்சு, பத்து நாளும் உபச்சாரமெல்லாம் செய்வோம். தினம் ரெண்டுதடவை அவருக்கு ஆரத்தி நடைபெறும். வீட்டுல உள்ளவங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுப்போம். அபார்ட்மெண்ட்களில், எல்லோருக்கும் பொதுவான பிள்ளையார் வெச்சு,.. கூட்டு வழிபாடு நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவங்க வீட்டுல இருந்து பிரசாதமா, ஷீரா, கரஞ்சி,மோதகம், லட்டுன்னு செஞ்சு கொண்டு வருவாங்க.


பிள்ளையார் வந்ததும், 'சத்ய நாராயண பூஜை' கண்டிப்பா நடக்கும். அபார்ட்மெண்டின் மிக மூத்த தம்பதியோ அல்லது, புதிதாக திருமணமான தம்பதியோ இந்த பூஜையை தம்பதி சமேதரா செய்வாங்க. அன்னிக்கு, லஞ்ச் அல்லது டின்னர் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. இதை மஹாபிரசாதம்ன்னு சொல்லுவாங்க. தமிழ்க்குடும்பங்கள் நிறைய இருக்கும் இடங்களில் கணபதி ஹோமம் நடக்குறதுண்டு.


பொதுவா, இங்கே 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையாரை கரைக்கும் நிகழ்ச்சி, சதுர்த்திக்கான மறு நாள்(ஒன்னரை நாள்ன்னு கணக்கு), மூணாம் நாள், ஐந்தாம் நாளான 'கௌரி கண்பதி' , ஏழாம் நாள், மற்றும் ஒன்பதாம் நாள்.. அதன்பின் பத்தாம் நாளான ஆனந்த சதுர்த்தி அன்று நிறைவு பெறும். 'கௌரி கண்பதி' அன்னிக்கு மகனைப்பார்க்க பார்வதி தேவி வருவதாக ஐதீகம். அன்னிக்கு சிலவீடுகளில், கௌரிபூஜையும், விருந்துச்சாப்பாடும் நடக்கும்.அது முடிந்தபின், கௌரி, மற்றும் கண்பதியை விசர்ஜன் செய்வார்கள். விசர்ஜன் செய்யப்படும் நாட்களில் சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுவிடும். ஊரிலுள்ள எல்லாப்புள்ளையார்களையும் அன்னிக்கு ஆர அமர பார்த்து.. 'பை..பை' சொல்லிட்டு வரலாம்.


ஆனந்த சதுர்த்தி அன்னிக்கு ரோட்டுல எள் போட்டா விழ இடமிருக்காது!!!(எள்ளை ஏன் போடணும்ன்னு சொல்றாங்கன்னே புரியலை.. இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன் :-))). அவ்வளவு நாள் பயபக்தியா ஆராதிச்ச புள்ளையார்களை அன்னிக்கு க்ரேன்ல கட்டி ஆழமான கடல்ல தூக்கிப்போட்டுடுவாங்க. (அம்பூட்டு உசரமா இருப்பாருங்க). ஆனாலும், கரைச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் மனசுக்கு ஒரு வெறுமை வருமே... அதை சொல்லத்தெரியலை.


எங்க ஊர்ல புள்ளையார் ஆரத்திக்குன்னே ஸ்பெஷல் பாட்டு இருக்குது. இங்கே புள்ளையார் சதுர்த்தி பிரபலமானதுக்கும்.. இந்திய விடுதலைப்போருக்கும் சம்பந்தமிருக்குது. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல, கூட்டம் கூட தடை போடப்பட்ட காலத்துல...நம்ம பாலகங்காரதர திலகர் கண்டுபிடிச்ச வழிதான் இது. 1892 -லிருந்து இது சமூகவிழாவா கொண்டாடப்பட ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி, மராட்டிய பேஷ்வாக்கள் மட்டுமே, சிறிய அளவில் கொண்டாடியிருக்காங்க.. பேஷ்வாக்களின் அழிவுக்குப்பின்னால, க்வாலியர் மற்றும் குஜராத் அரசர்கள் இதை சாதாரண மக்களிடம் கொண்டு வந்தாங்க.


இங்கெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்த திலகருக்கு, இது மக்களை ஒருங்கிணைக்கும் வழியாக தோன்றியது. கடவுளைக்கும்பிட்ட கையோட, அங்கிருந்த கூட்டத்துக்கிட்ட விடுதலை தாகத்தை உண்டாக்க, புள்ளையார் சதுர்த்தி, திலகருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. இப்பவும், மக்களெல்லாம் ஆரத்தி முடிஞ்சதும், 'பாரத் மாதா கீ... ஜெய்' ன்னு கோஷம் எழுப்ப தவறுவதில்லை. மும்பையில் 'லால்பாக்' என்னும் இடத்துல வைக்கப்படும் புள்ளையார் ரொம்பவே பிரபலமாயிட்டார். திருப்பதி மாதிரியே அங்கியும் வரிசையில நின்னுதான் தரிசனம் செய்யணும். விலையுயர்ந்த நகைகள், பொருட்களெல்லாம்கூட காணிக்கையா கொடுக்கப்படுதாம். இங்கே வந்து போகாத மும்பை வி.ஐ.பிக்களே இருக்கமுடியாது. அவர்கிட்ட கேட்கும் வேண்டுதல்களெல்லாம் நிறைவேறுதுன்னு ஒரு புதுப்பேச்சு கிளம்பியிருக்கு.  'லால்பாக்ச்சா ராஜா' ன்னுஅவருக்கு செல்லப்பேரும் உண்டு. இந்தப்பேருக்கு பேடண்ட் எடுத்திருக்காங்கன்னா அவரு எவ்வளவு பிரபலம்ன்னு பாத்துக்கோங்க.


மஹாராஷ்ட்ராவில் பிரபலமானஆரத்திப்பாட்டு இது.....



இது எங்கவீட்டு புள்ளையார்...


டிஸ்கி: எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. இவர் எங்க குடியிருப்பின் பொதுவான புள்ளையார்.கௌரி கண்பதி வரைக்கும் இருப்பார் :-)))))))












Friday, 2 July 2010

விருது விருது.... வருது வருது!!!

அன்பு சகோதரர்கள் எல்.கேயும், ஜெய்லானியும் தங்கமகன் விருது கொடுத்திருக்காங்க. தங்கம் விக்கிற விலையில், விருது கொடுத்த அவங்க அன்புக்கும்,தங்கமனசுக்கும் நன்றி. கிடைச்ச தங்கத்தை லாக்கர்ல வெச்சுக்காம, நானும் பகிர்ந்து கொடுக்க நினைக்கிறேன்.


இந்த விருதை பெற்றுக்கொள்ள நான் அழைப்பது,





மற்றும் அம்மு.







Friday, 28 May 2010

தோழி வந்திருக்காங்க.....

பாராட்டு விழாவுக்கு புறப்பட்டுக்கிட்டிருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது. வைர மோதிரம் வாங்க விட்டுப்போனது. அந்தக்குறை விழாமேடையில் தீர்ந்துடுச்சு. சென்னை சதுரத்தின் பொருளாளர் சந்தனமுல்லை , மேடையில் வெச்சு ஒரு வைர பென்டென்ட் பரிசா கொடுத்திருக்கார். வைரம் பெண்களின் தோழின்னு சொல்லுவாங்க .ஸோ பிடிக்காம இருக்குமா:-)) நன்றி சந்தனமுல்லை.


இதை நானும் பகிர்ந்தளிக்கிறேன்.






அனைவருக்கும் வாழ்த்துக்கள்.





Wednesday, 14 April 2010

புதுவருஷம் பூத்தாச்சு..வாழ்க வளமுடன்...


அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....

விரோதியை வழியனுப்பிவிட்டு விக்ரதி ஆண்டு பிறந்திருக்கிறது. எங்க வீட்டில் எப்பவும் தமிழ்ப்புத்தாண்டை விஷுக்கனி பார்த்துதான் கொண்டாட ஆரம்பிப்போம். முதல் நாளே, பூஜை அறையில், அல்லது சாமிபடத்துக்கு அருகில் முகம் பார்க்கும் கண்ணாடியை வெச்சி, அது முன்னால, பணம், காசு, நகைகள்,சரக்கொன்றைப்பூ, பழங்கள் எல்லாம் வெச்சிடுவோம். இருள் பிரியாத விடியற்காலையில் எழுந்து கண்ணை மூடிக்கிட்டேவந்து ,முதலில் தீபதரிசனம், அப்புறம் சாமி தரிசனம். அப்புறம் அப்படியே கண்ணாடியில முகத்தை பாத்துக்கிடுவோம்.அதன்பின் கண்ணாடிமுன் இருக்கும் பொருட்களை பார்ப்போம். இது எதுக்குன்னா,... வருஷம் முழுக்க இதுமாதிரி 'நல்ல' பொருட்களின் தரிசனம் எப்பவும் கிடைக்கும்ன்னு ஐதீகம். (காலைல யார் மூஞ்சில முழிச்சனோன்னு மத்தவங்களை திட்டவேண்டாம் பாருங்க :-))))))

இந்த வருஷம், அலங்கார ஏற்பாடு என்னுடைய மேற்பார்வையில் ரங்க்ஸ் செய்தது. அசத்தலா இருக்குதில்ல.....



விஷுக்கனி பார்த்துட்டு, குளிச்சு முடிச்சு அப்புறம் பூஜை நடக்கும். அவலுடன், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் எல்லாம் போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடிச்சு வெச்சு நைவேத்தியம் நடக்கும். அப்புறம், சின்னவங்களுக்கு பெரியவங்க ஆசிர்வாதம் செஞ்சு கைநீட்டம் கொடுப்பாங்க. கை நீட்டம்ன்னா காசு, பணம்தான். அன்னிக்கு நிறைய வசூல் நடக்கும். அப்புறமா கோவிலுக்கு போய்ட்டு வந்து செஞ்சு வெச்ச டிபனை வெட்ட வேண்டியதுதான்.

உங்களுக்கும் கை நீட்டம் இதோ இருக்கு.

இன்னிக்கி டிவி பொட்டி முன்னாடி முடங்கிடாம ஃப்ரெண்ட்ஸை,பெரியவங்களை போய்ப்பாருங்க, குடும்பத்தோட வெளியே,வாசல்ன்னு போயிட்டு வாங்க. குழந்தைகளோட சிரிச்சிப்பேசி சந்தோஷமா இருங்க . பண்டிகைங்கிறதே சந்தோஷமா இருக்கத்தானே.

பண்டிகையையும் கோடையையும் சேர்த்துக்கொண்டாட சின்ன பிக்னிக் போயிட்டு வரலாம். ரெடியா இருங்க.(இப்பத்தான் எழுத நேரம் வந்திருக்கு)

நேத்து இரவு 11.59 இருக்கும். படபடன்னு பட்டாசு வெடிக்கற சத்தம். தவுசண்ட்வாலாவோ என்னவோ!!!. அதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகள். ஆங்கிலப்புத்தாண்டோன்னு ஒரு நிமிஷம் நினைப்பு ஜனவரிக்கு ஓடுது.பேண்ட்வாத்தியம் முழங்குனதை பார்த்ததும்தான் புரிஞ்சது.... ஒரு கல்யாண ஊர்வலம் போகுதுப்பா.. நல்லா கிளப்புறாங்க!!!!


மறுபடியும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, 16 March 2010

வாழ்த்துக்கள்..புதுகைத்தென்றல்..


புதுகைத்தென்றலுக்கு ஒரு யுகாதிப்பரிசு . அளித்தவர்.. .ஆனந்த விகடன்'. ஆமாம். இந்தவார விகடனில் வரவேற்பறையில்அவரது கூட்டுப்பதிவான கானகந்தர்வன் பாராட்டப்பட்டுள்ளது.

நல்ல மெலோடியஸான பாடல்களை கேக்கணும்னா வலையிலிருந்து தரவிறக்கம் செய்வது வழக்கம். அப்படியான ஒரு பொழுதில்தான் இந்த வலைப்பூ கிடைத்தது.

இப்பல்லாம் நல்ல மெலோடியஸான பாடல்களை கேக்கணும்னா அங்கேயும் விசிட் அடிக்கிறது உண்டு. ஜேசுதாஸின் நல்ல கலெக்ஷன் இங்கே இருக்கு. நவரத்தினங்களில் எது சிறந்தது என்று சொல்வது கஷ்டம்தான். என்னுடய ஃபேவரிட் பாடல்...."தேரி தஸ்வீர் கோ சீனே ஸே லகா ரக்கா ஹை"

வாழ்த்துக்கள் தென்றல்.



Tuesday, 12 January 2010

மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்





உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம், தை பிறந்தா வழி பிறக்கும், இதெல்லாம் பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும், சில பொன் மொழிகள். நம் ஊரில் தைமாசம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுக்க உழைத்த, தனக்கு உதவிய ஜீவன்களுக்கு நன்றி சொல்லி,ஆதவனை ஆராதிக்கும் பண்டிகையிது .

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே வீடு, வாசல் கழுவி , வீட்டை தூய்மைப்படுத்தி, சாதனங்கள் சேகரித்து என்று, பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும்.கிராமங்களில் கட்டி அடுப்பு என்று ஒன்றை வீட்டிலேயே செய்வார்கள். மண்ணைக்குழைத்து, வேண்டிய அளவிலிருக்கும் பழைய, ஓரடி உயரத்திலிருக்கும் பக்கெட்டோ, பாத்திரமோ எடுத்து, மண்ணை அதில் அழுத்திஅடைத்து அப்படியே திருப்பி பின்னால் ஒரு தட்டு... துண்டாக வந்து விழும் கட்டியை அப்படியே காய விட்டுவிடுவார்கள்.வேண்டிய எண்ணிக்கையில் செய்து காயவிட்டு வீட்டுக்கு அடிக்கும் சுண்ணாம்பில் அதற்கும் கொஞ்சம் பூசி, காவிப்பட்டையால் அலங்கரித்து வைப்பார்கள்.

பொங்கலன்று இந்த அடுப்பில் பானையை ஏற்றி, சாஸ்திரத்துக்கு ரெண்டு பனைஓலையை வைத்து அடுப்பை ஆரம்பிச்சுட்டு அப்புறம் , விறகுகளின் துணை கொண்டு பொங்கல் கொதிக்க ஆரம்பிக்கும். விறகுகளின் இடையே சில பனங்கிழங்குகளை செருகி விட்டால் பிறகு கடித்துக்கொள்ளலாம்.சமயம் பார்த்து காற்றும் சோதனை செய்யும்... புகையுடன் போராடி, பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி, சூரியனுக்கு படையல் செய்வார்கள்.இஞ்சி மஞ்சளின் பச்சைமணமும், கரும்பின் இனிப்பும் கூடுதல் மகிழ்ச்சி தருது..

பொங்கல் பண்டிகை கிராமங்களில் மண்மணத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த அளவு இல்லை என்றாலும், நகரங்களிலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அடி நாதமாய் அது இரண்டு இடங்களிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது.




மஹாராஷ்டிராவில் பொங்கல் 'மகர சங்கராந்தி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பச்சை காய்கறிகள், வெளிறிப்போயிருக்கும் கரும்பு ,எல்லாம் இங்கேயும் உண்டு. அரிசியும் பயத்தம்பருப்பும் போட்டு செய்யற கிச்சடிதான் இன்றைய ஸ்பெஷல். நம்மூர் வெண்பொங்கலாச்சேன்னுதானே நினைக்கிறீங்க. எஸ்ஸ்.. ஆனால், மைனஸ் மிளகு, மைனஸ் சீரகம், மைனஸ் முந்திரிப்பருப்பு. ஆனா, டேஸ்ட்டு மட்டும் ப்ளஸ்.. ப்ளஸ்.. காலை பூஜை முடித்ததுமே சாயங்காலத்துக்கு ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து விடும்.

இரண்டு நாட்களுக்கு முன்னாடியே பொருட்கள் சேகரிக்கப்பட்டுவிடும். தெரிந்தவர்கள்.. நண்பர்களுக்கு...அழைப்பு அனுப்பப்பட்டுவிடும்.

சாயந்திரம் நன்கு அலங்கரித்துக்கொண்டு, சிறிதாக நறுக்கப்பட்ட காய்கறிகள், கரும்பு இவற்றின் கலவையை ஒரு சிறிய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு,இதனுடன் எள்ளுமிட்டாய்,சர்க்கரையை வைத்து தயாரிக்கப்படும் எள்ளுருண்டை,பூ, பழம், பூ,தாம்பூலம், வைத்துக்கொடுக்க ஏதேனும் ஒருபொருள், இவற்றுடன் தயாராக காத்திருப்பார்கள்.


ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் அளித்து, எள்ளுமிட்டாய், சீனிஉருண்டை கலவையை"தில் குட் க்(G)யா.....கோ(G)ட்....கோ(G)ட்....போ(b)லா.." என்று சொல்லி கொடுப்பார்கள். அதாவது "இனிக்கும் எள்ளை எடுத்துக்கிட்டு இனிமையாக பேசு" என்று அர்த்தம்.வயதில் சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளும் ஒரு டப்பாவில் சீனி, எள் உருண்டைகளை போட்டுக்கொண்டு க்ரூப்பாக கிளம்பி விடுவார்கள். வீடுவீடாக சென்று எல்லோருக்கும் கொடுத்து  பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்று வருவார்கள். அவர்கள் ஒருவயது கூடுதலானவர்களாக இருந்தால் கூட பெரியவர்கள் என்ற பதவி அளிக்கப்பட்டுவிடும் . நிறைய வீடுகளில் இவர்களுக்காக இனிப்புகள் வாங்கி வைத்திருந்து, கொடுப்பார்கள்.


எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப்பெயரில் கொண்டாடினாலும் பண்டிகை மகிழ்ச்சியையும், இனிமையையும் தரட்டும்.


எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

டிஸ்கி: படங்கள் வலை(போட்டு)யில் பிடித்தவை.

Friday, 1 January 2010

இன்னுமொரு புத்தாண்டு.


இதோ,

இன்னுமொரு புத்தாண்டு.

வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம்.

சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே.மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகிவிடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகிவிடாமல்,புது வருடத்திற்கும், புதுவாழ்க்கைக்குமாய்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Happy New Year

LinkWithin

Related Posts with Thumbnails