Friday 30 December 2011

கொண்டாட்டம் ஆரம்பம்..


உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது.  இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.
இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.
அல்வா கொடுக்க தேவையானவை:
கேரட்-1 கிலோ
சர்க்கரை-400 கிராம்
இனிப்பில்லாத கோவா-100 கிராம்
இது கிடைக்கல்லைன்னா கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக்கலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைச்சுக்கோங்க.
பால்- கால் லிட்டர்
ஏலக்காய்-2 பொடித்தது
எப்படி தயாரிக்கிறது:
கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.(சோப்பு போட்டேத்தான் கழுவணுமா, வாஷிங் மெஷின்ல வாஷ் செஞ்சா ஆகாதா,.. இல்லை ஆலாவுல ஊற வெச்சு கழுவணுமா.. டவுட்டு)
இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும். (மொதல்ல அடுப்பை பற்ற வையுங்கப்பா..)
லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும். (அடுப்பு எரிஞ்சா அதுல இருக்கற வாணலியும் எரிஞ்சுடாதா, அடுப்பை எதுல வெச்சு எரிக்கணும்ன்னு சொல்லவேயில்லை.. டவுட்டு)
(பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும். 
இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.(பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.. டவுட்டு)
விரும்பினா வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்த்து அலங்கரிச்சுக்கோங்க. (பாஸ்..ட்ரை ஃப்ரூட் ஃபேஷியலுக்கப்றம், அதை, ஐ-மேக்கப்,லிப்ஸ்டிக், காம்பேக்ட்டெல்லாம் போட்டு அலங்கரிக்கலாமா.. டவுட்டு)
டிஸ்கி1: வீட்ல இருக்குங்கறதுக்காக இஷ்டத்துக்கு கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்கிடாம, அல்வாவாக சாப்பிடுங்க. வடமாநிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.
புது வருசத்துக்காகவும், 
என்னோட ப்ளாக் ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாடவும், 
புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள் காரணமா அடிக்கடி இடுகை போட முடியாட்டியும், எப்பவாவது போடும் இடுகைகளுக்கு கடைக்கு வந்து உற்சாகமூட்டிய உங்க பொறுமைக்கான பரிசாகவும் அல்வா கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் நன்றிகளும் சொல்லிக்கிறேன். 
எல்லோரும் கேக் எடுத்துக்கிட்டு கொண்டாந்துருக்கற கிஃப்டை மறக்காம கொடுத்துடுங்க :-)

Saturday 17 December 2011

கலர்ஃபுல் மாசம் கொண்டு வரப் போகுது பரிசு..


மார்கழி பொறந்தாச்சு..தெனமும் வாசல்ல புள்ளியை வெச்சு ரெண்டு கம்பியை இழுத்துட்டு நானும் கோலம் போட்டேன்னு பெயர் பண்ணிட்டு வர்றவங்க கூட இந்த மாசம் முழுசும் தெனமும் என்னென்ன புதுப்புது வகையில கோலம் போடலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க.

கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.. கோலங்கள் சீரியலைச் சொல்லலை. நிஜமான கோலத்தைச் சொல்றேன். இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பகுதியிலயும் அவங்கவங்க வழக்கப்படிக் கோலம் போடறாங்க. தமிழ் நாடுன்னா புள்ளி வெச்ச, வைக்காத இழைக்கோலங்கள், கேரளான்னா அத்தப்பூக்கோலம் அப்றம் வட மாநிலங்கள்ன்னா ரங்கோலின்னு ஒவ்வொரு பகுதியோட பேரைச் சொல்றப்பவும் அந்தப் பகுதிக்குண்டான கோலங்களும் சேர்ந்தேதானே ஞாபகம் வருது.
அத்தப்பூக்களம்ன்னு சொல்லணுமா என்ன :-)
கேரளாவோட பூக்கோலத்துக்கு வடக்கே ரொம்பவே வரவேற்பு. அலுவலகங்கள்லயோ அல்லது பள்ளிக் கூடங்கள்லயோ ஒரு விழா நடந்தா பூக்கோலம் போட்டு அசத்தறாங்க. ரங்க்ஸோட ஆப்பீஸ்ல எப்ப புதுவருசக் கொண்டாட்டம் நடந்தாலும், அத்தப்பூக்கோலம் போட்டு நடுவுல நம்மூட்டு வெளக்கை ஏத்தி வெச்சு முக்கியமான அதிகாரிகள் அஞ்சு பேரை வெளக்கேத்தி வைக்கச் சொல்றது வழக்கம். ஒருக்கா ஆரம்பிச்சு வெச்சது இங்க உள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி அப்றம் வருசா வருசம் மத்த பிரிவுகள்ல இருக்கறவங்களும் அதே மாதிரி காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம தென்னிந்திய இழைக்கோலங்களை இங்கே இருக்கறவங்க ரொம்பவே அதிசயிச்சுப் பார்ப்பாங்க. அதெப்படி விரல் நடுங்காம அவ்ளோ தெளிவா கோடுகள் வருதுன்னு அவங்களுக்கு அதிசயம். இங்கேயும் புள்ளிக் கோலங்கள் போடறதுண்டு. என்ன செய்வாங்கன்னா, வேணுங்கற அளவுல சதுரமா ப்ரவுன் பேப்பர் ஒண்ணை வெட்டியெடுத்துக்குவாங்க. அதுல ஸ்கேல் வெச்சு அளவெடுத்து புள்ளிகளை வைப்பாங்க. அப்றம் அந்தப் புள்ளிகள் மேல துளையிட்டுக்குவாங்க. ச்சார்ட் ரெடி. செம்மண் பூசிக் காய விட்டு தயாரா வெச்சிருக்கற இடத்துல இந்தப் பேப்பரை வெச்சுட்டு அந்தத் துளைகள்ல கோலமாவை ஒவ்வொரு சிட்டிகையா வைப்பாங்க. அம்புட்டுத்தேன். அப்றம் பேப்பரை எடுத்துட்டு ரெண்டு ரெண்டு புள்ளியா இணைச்சு கோலம் போடுவாங்க. இதுக்காகவே தீவாளி சமயங்கள்ல பேப்பர்+கோலமாவு+கலர்ப்பொடி பாக்கெட்டுகள் அடங்கிய ‘கோலம் கிட்’ ஒண்ணு மார்க்கெட்டுகள்ல கிடைக்கும்.

நம்மூர்ல விசேஷங்களுக்கு பச்சரிசி மாவால கோலம் போடுறது சம்பிரதாயம். வாசல்ல போடற கோலங்கள் வீட்டுக்குள்ள துர்சக்திகள் நுழையாதபடிக்கு காவல் காக்குதுங்கறது ஐதீகம். வீட்டுக்குள்ள நுழையப் பார்க்கற சக்திகள் அந்த இழைகள்ல மாட்டிக்குமோ என்னவோ.. ஆனா, அமாவாசையன்னிக்கு மட்டும் கோலம் போடாம விட்டு வைக்கிறது வழக்கமாம். ஏன்னா பித்ருக்கள் வீட்டுக்குள்ள வரணுமேன்னு சொல்லுவாங்க. கேள்விப் பட்டது ரைட்டா இல்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அதேமாதிரி நல்ல விசேஷங்கள் நடக்கறப்ப போடறதுக்குன்னு தனி வகைகளும் ‘அல்ல’ விஷயங்கள் நடக்கறப்ப இன்னொரு வகைகளும் இருக்காம். நல்ல விசேஷங்கள் நடந்தா கண்டிப்பா ரெட்டை இழைக்கோலம்தான் போடறது வழக்கம்.
சன்ஸ்கார் பாரதிக்கோலம்
நம்மூர் இழைக்கோலங்கள் அப்றம் அத்தப்பூக்கோலம் மாதிரியே இங்கே ‘சன்ஸ்கார் பாரதி’ங்கற கோல வகை ரொம்பவே பிரசித்தம்.இதுவும் கிட்டத்தட்ட நம்மூர் இழைக்கோலம்தான். இந்தக் கோலம் போடப் புறப்படறதே ஒரு போருக்கு புறப்படற மாதிரி இருக்கும். கோலமாவு அடங்கிய பொட்டலங்கள், நாலஞ்சு அளவுகள்ல சாய் வடிகட்டிகள், ரெண்டு மூணு சல்லடைகள், மண்ணெண்ணெய் ஊத்துற புனல் அப்றம் நீளமான நூல்ல கட்டிய சாக்பீஸ்ன்னு ஏராளமான உருப்படிகளோட கிளம்புவாங்க.

நூல்ல கட்டிய சாக்பீஸை எடுத்துக்கிட்டு கோலம் போடத் தேர்ந்தெடுத்த இடத்துல நூலோட நுனியை தரையோட அழுத்திப் பிடிச்சுக்குவாங்க. இன்னொருத்தர் அடுத்த நுனியில் இருக்கற சாக்பீஸை வெச்சு உக்காந்திருக்கறவரைச் சுத்தி பிரதட்சிணம் வந்து அளவா அழகா ஒரு வட்டம் போட்டுக்குவாங்க. இது நம்ம கணக்குப் பாடத்துல உபயோகப்படுத்தற காம்பஸை அடிப்படையாக் கொண்டதுன்னு கொள்க. இதான் அடிப்படை.இனிமே டிசைனைப் பொறுத்து அங்கங்க அரை வட்டங்களும் வளையங்களும் பூக்களோட டிசைன்களும் வரையப்படும். அப்றம் ஒவ்வொரு பகுதியா கலர்ப்பொடி கொண்டு நிரப்புவாங்க. பெரிய பகுதிகளுக்கு சல்லடையும் சின்ன பகுதிகளுக்கு டீ வடிகட்டிகளும் உபயோகப் படுத்துவாங்க. கலர்ப்பொடியை நிரப்பி லேசா தட்டிக்கிட்டே இருந்தா அழகா எல்லா இடங்கள்லயும் ஒண்ணு போல கலர் நிரம்பும்.இப்டி மொதல்ல கலரை நிரப்பினப்புறம் வெள்ளைக் கோலமாவை புனல்ல எடுத்துக்கிட்டு அங்கங்க இழைகளால அலங்கரிப்பாங்க.

ரொம்பவே  எக்ஸ்பர்ட்டுகளுக்கு புனல் தேவைப்படறதில்லை. அப்றம் எப்படிக் கோலம் போடுவாங்க?.. சொல்றேன். சின்னக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டறப்ப அஞ்சு விரல்களையும் எப்படிக் குவிச்சு வெச்சிருப்பீங்க?.. ஆங்.. அதேதான். கை நிறைய அள்ளிய கோலமாவை குவிச்சு வெச்ச விரலிடுக்கு வழியா வழிய விடுங்க.. ஜூப்பர். இப்ப நீங்களும் சன்ஸ்கார் பாரதி எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க.
அரிசியில் கலர் கொடுத்துப் போட்ட கோலம்

உப்புடன் கலர் கலந்து போட்ட கோலம்

தண்ணிக்குள்ள கோலம்

ஹை.. நம்மூருக் கோலம்
இது போக நீர்மேல் கோலம், தண்ணிக்குள்ள கோலம், காய்கறிக் கோலம், உப்பு, அரிசி, தானியங்களால போட்ட கோலம்ன்னு வகை வகையா இருக்கு. ஆயிரம்தான் இருந்தாலும் பசுஞ்சாணியைக் கரைச்சுத் தெளிச்சு, தூசு தும்பு போகப் பெருக்கிய மொசைக் மாதிரியான மண்தரையில் வெள்ளை வெளேர்னு மினுங்கற கோலத்துக்கு ஈடு இணையாகுமா?.. வெள்ளிச் சரிகையிட்ட பச்சைப் பட்டுப்புடவை மாதிரி அட.. அட.. அட..என்னவொரு அழகு. விடிகாலைல எழுந்து கோலம் போடுறதுங்கறது உடலுக்கும் மூளைக்கும் நல்லதொரு பயிற்சியாச்சே. கவனமா எண்ணி புள்ளி வெச்சு அதெல்லாத்தையும் இணைச்சு அழகான கோலமாக்குறதுங்கறது லேசுப்பட்ட காரியமா என்ன!!

கலர்ப்பொடிகள் அப்பல்லாம் தீவாளி, பொங்கல் சமயங்கள்ல மட்டுந்தான் யாவாரத்துக்கு வரும். அது கிடைக்காத சமயங்கள்ல எல்லாம் குங்குமம், மஞ்சப்பொடி, அப்றம் பச்சைக் கலருக்கு இலைகளை அரைச்செடுத்த சாறு, நீலக்கலருக்கு சொட்டு நீலம் இல்லைன்னா பேனாவுக்கு ஊத்தற இங்க்ன்னு வெரைட்டி காட்டுவோம்..ஈரமான கோலமாவுல இந்தக் கலர்கள் ஈஸியா கலந்துடும். அப்றம் ஒரு வாணலியில இந்த மாவைப் போட்டு லேசா வறுத்துக்கிட்டே இருந்தா நல்லாக் காய்ஞ்சு அழகா கலந்து வந்துடும். வாணலியை வீணாக்கியதுக்காக வாங்கிய திட்டெல்லாம் கோலத்தோட அழகுக்காக வாங்கிய பாராட்டுகள்ல மறந்தே போயிடும்.

இப்பல்லாம் கோலம் போடுற கலை கொஞ்சம் கொஞ்சமா அருகிக்கிட்டே வருது. ஒரு காலத்துல அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளும் கோலம் போட ஆசையா கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் எதுக்கும் டைம் இல்லைன்னு ஓடிடுதுங்க.ஏதோ பண்டிகை சமயங்கள்லயாவது கோலம் போட ஹெல்ப் செய்யுதுங்களேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதுவுமில்லாம இருக்கற அவசர யுகத்துல காலைலயும் சாயந்திரமும் வாசத்தெளிச்சு கோலம்போட யாருக்கு நேரமிருக்கு?.. அதனால ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடறாங்க. அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்புன்னா கேக்கவே வேணாம். நம்மூட்டு ஸ்டிக்கர்ல பாதியை பக்கத்தூட்டு ஸ்டிக்கர் மறைச்சுட்டு இருக்கும்.

இவ்ளோ அழகான கலையை அழிய விடலாமா?.. அதனாலதான் உதயம் இன் மற்றும் தமிழ் நண்பர்கள் இணைய தளங்கள் சேர்ந்து ஒரு போட்டியை அறிவிச்சுருக்காங்க. உங்களுக்காக வல்லமையில் வெளியான அறிவிப்பு இதோ. உதயத்தோட தளத்துலயும் அறிவிச்சுருக்காங்க. விதிமுறைகளும் அங்கேயே இருக்குது. ஜனவரி 10 போட்டிக்கான கோலங்களை அனுப்பறதுக்கான  கடைசி நாளு. கலர்ஃபுல்லானதொரு போட்டியில் கலந்துக்கிட்டு கலக்குங்க.. பரிசெல்லாமும் கூட அறிவிச்சுருக்காங்க. ஜமாய்ங்க.

வெற்றி பெற வாழ்த்துகள்.

டிஸ்கி 1: படங்களெல்லாம் இணையத்தில் சுட்டவை.

டிஸ்கி2: வல்லமையில் பொங்கல் மலருக்காக கட்டுரைகள், கதைகள், கவிதைகள், புகைப்படங்கள், உங்க வீட்டுக் குட்டீஸின் கைவண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன என்பதை துணையாசிரியர்ங்கற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவிச்சுக்கறேன். விருப்பமுள்ளவங்க vallamaieditor@gmail.com  என்ற ஈ மெயில் முகவரிக்கு அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் வல்லமையின் சிறப்பிதழில் வெளியாகும். வெளியானப்புறம் உங்க ப்ளாகிலும் போட்டுக்கலாம்ன்னு சொல்லத் தேவையில்லை இல்லையா :-)



Wednesday 7 December 2011

ஆத்தா!!! நான் ஹாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானது)

யம்மா.. நான் மேற்படிப்புக்கு வெளியூருக்குப் போய்த் தங்கிப் படிக்க வேண்டியிருந்தா என்னை அனுப்புவீங்களா?..”இப்படித்தான் ஆரம்பிக்கும் என் பெண்ணின் கலாய்ப்பு நேரம்.

அதுக்கென்னா.. தாராளமா போயிப் படிச்சுட்டு வாயேன். இதுக்கெல்லாம் அனுப்பாம இருப்பாங்களா என்ன?.. படிப்பு விஷயத்துல விளையாடக் கூடாது தெரியுமா?..” நான்  விட்டுக் கொடுக்காம பதிலளிப்பேன்.

அப்போ என்னைத் தேடவே மாட்டீங்களா?.. என் ஞாபகமே வராதா உங்களுக்கு. ச்சே!!.. ஒரு பேச்சுக்காவது ‘உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது, தொலைதூரத்துக்கெல்லாம் உன்னை அனுப்ப மாட்டேன்’னு சொல்லுறாங்களா பாரு.”ன்னு செல்லமா அலுத்துக்குவா.

“அதெப்படிம்மா.. படிப்பு விஷயமாச்சே.. வெளியூரென்ன? வெளி நாடென்ன? அனுப்ப வேண்டி வந்தா அனுப்பித்தானே ஆகணும்.” நானும் சளைக்காம சீண்டுவேன்.

“உன் தொல்லை இல்லாம வீடு அமைதியா இருக்குமில்ல..”என் சீமந்த புத்திரன் தன் பங்குக்கு எரியுற தீயில் ரெண்டு ஸ்பூன் நெய்யை வார்ப்பார்.

“பையா,.. உன்னை யாரு கேட்டா??.. நீ சும்மாரு..”ன்னு அவரை ‘அன்பா’ அடக்கிட்டு, “நல்லதுக்கு காலமே இல்லை.. யாராவது ஒருத்தராவது வேண்டாம், நீ போகாதேன்னு சொல்றாங்களா?. அப்பா.. நீங்க சொல்லுங்க”ன்னு மேடம் ரங்க்ஸைப் பிடிச்சுக்குவா.

“நானா?.. எனக்கும் உன்னைத் தேடாதே.. ஏன்னா, தேடுச்சுன்னா அடுத்த நிமிஷம் நீ இருக்கற ஊருல வந்து நின்னுடுவேன்ல..”ன்னு சொல்லிட்டு “நாங்க உன்னை பார்க்காம இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொதல்ல உனக்கு வீட்டு ஞாபகம் வராம இருக்குமான்னு சொல்லு.”ன்னு மடக்கவும் “ஹி..ஹி..ஹி..”ன்னு தோல்வியை ஏத்துக்குவா. “சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும், காசு குடு”ன்னு மறுநாளும் இந்த எபிஸோட் தொடங்கும்.

அப்டி ஒர் நாள்லதான் இப்படி வெளியூர்ல தங்கிப் படிக்கிறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது. தனியா தங்கிப் படிக்கிறதோட நன்மைகளை எடுத்துச் சொன்னேன். என் தோழியின் பெண்ணுக்கு வீட்லேருந்து காலேஜுக்கு போக வர பயணத்துலயே நேரம் சரியா இருந்துச்சு. படிக்க நேரமில்லை, நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வர வேண்டிய நிலைமை, அதனால வீட்ல உள்ளவங்களுக்கு டென்ஷன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள். அதனால, காலேஜ் பக்கத்துலயே தங்கிப் படிக்கலாமான்னு ஒரு யோசனை. ஏனோ தெரியலை, ஹாஸ்டலை அந்தப் பொண்ணு உறுதியா மறுத்துட்டது.

அப்டீன்னா, ரெண்டு மூணு பொண்ணுங்க தனியா வீடு எடுத்து தங்கிப் படிக்கலாமேன்னும் ஒரு யோசனை அவங்களுக்கு. மும்பையில் இது இப்போ ஜகஜமாகிட்டு வருது. ஆளுக்கொரு சாமான் செட்டைக் கொண்டாந்துரலாம். வாடகை, அட்வான்ஸ், மற்ற செலவுகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கறதுனால கையையும் கடிக்காது. இங்கெல்லாம் அபார்ட்மெண்ட் கலாச்சாரம்தான். ஒவ்வொரு பில்டிங்கிலும் செக்யூரிட்டி அனுமதியில்லாம யாரும் உள்ளே நுழைஞ்சுட முடியாது.. அதனால பாதுகாப்புக்கும் கவலையில்லைன்னு முடிவெடுத்தாங்க. கடைசியில கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டுப் பார்த்துட்டு, “வேணாம், நான் வீட்லேர்ந்தே போயிக்கறேன்”ன்னு அந்தப் பொண்ணு டமால்ன்னு பல்டியடிச்சுட்டுது.

ஹாஸ்டலோ, தனிக்குடித்தனமோ ரெண்டுலயும் நல்லது கெட்டது ரெண்டும் இருக்குது. நல்லதைச் சொல்லிக் கொடுத்துட்டா அப்றம் கெட்டதை அவங்களே உதறித் தள்ளிட மாட்டாங்களா என்ன?..

பசங்களுக்காவது பரவால்லை. பொண்ணுங்க அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டே ஆயுசுக்கும் சுத்த முடியாது. கல்யாணமோ, மேற்படிப்போ இல்லை வேலை வாய்ப்போ வந்து பிரிக்கத்தான் போகுது. முதலாவது காரணத்துனால பிரிவு ஏற்படறப்ப, நினைச்சப்ப எல்லாம் அம்மா வீட்டுக்கு வர்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை. அந்தப் பிரிவுக்கு இது ஒரு வெள்ளோட்டமா இருக்கட்டுமே. கணவனும் மனைவியும் மட்டுமல்ல ரூம்மேட்ஸோ, நல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்.

அப்டி அமையலைன்னாலும், ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு வந்துட்டுப் போறப்ப அம்மா கொடுத்து விடற ஊறுகாய், முறுக்கு, அதிரசம், இன்ன பிற தீனிகளை அவங்க கூட பகிர்ந்துக்கிட்டு அவங்க கூட நல்ல நட்பை ஏற்படுத்திக்கிட்டா, அவங்களே உடன் பிறவா உடன்பிறப்பாகி சிலசமயம் வீட்டு ஏக்கத்தைக் குறைப்பாங்க J. தன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமயும் அதே சமயம் மத்தவங்களை மதிச்சும் நடக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாச்சே. இப்படி கலந்து பழகற குணமிருக்கறவங்க கண்டிப்பா புகுந்த வீட்டிலோ இல்லை அலுவலகத்துலயோ தன்னைச் சுலபமாப் பொருத்திக்கிடுவாங்க.

தனி வீடுன்னா பிரச்சினையில்லை. ஆனா, ஹாஸ்டல்ன்னாலே கலாட்டாவுக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் காலேஜ் திறந்த புதுசுல ராகிங்கும் சேர்ந்துக்கும். இந்த மாதிரியான சமயங்கள்ல பயந்து ஓடக் கூடாது. இப்பல்லாம் ராகிங் செஞ்சா கடுமையான தண்டனையும் உண்டு. அதனால சீனியர்களே கூட பெயர் கேக்கறது, தரையில் நீச்சடிக்கச் சொல்றதுன்னு சிம்பிளா இறங்கிட்டாங்க. இதெல்லாம் புதுசா வர்றவங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறதுக்காக நடத்தறது. சில கல்லூரிகள்ல ஜூனியர்களை உற்சாகப் படுத்த சீனியர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடத்தறாங்களாம்.

இப்படி ஆபத்தில்லாத ராகிங்கா இருந்தா மறுபேச்சு பேசாம அவங்க சொல்றதைச் செய்யறது நல்லது. அப்படியில்லாம உடலுக்கோ உள்ளத்துக்கோ கஷ்டம் கொடுக்கற ராகிங்கா இருந்தா தயங்காம தைரியமா அவங்க முகத்துக்கு நேரயே, ”இது தப்பு”ன்னு எச்சரிக்கை செய்யறது நல்லது. அப்டியும் கேக்கலைன்னா வார்டன் கவனத்துக்கு கொண்டு போறது நலம். தனக்கு ஒரு கெடுதல் நடக்குதுன்னா அதைத் தட்டிக் கேக்கற தைரியம் இதனால வளர்க்கப்படுது இல்லியா. இதுமாதிரி சின்னச்சின்ன விஷயங்களைத் தானே சமாளிக்கிறதால தன்னம்பிக்கையும் வளருதே. பூச்சி புழுவே எதிர்த்து நிக்கிறப்ப, ஆறறிவு மனுஷங்க நாம ஏன் எதுக்கெடுத்தாலும் பயந்து சாகணும்??

ஹாஸ்டலோ தனிவீடோ, தன்னோட உடைமைகளைத் தானே பத்திரமா பார்த்துக்கறது நல்லது. அதுக்காக என்னவோ புகுந்த வீட்டுக்குப் பொண்ணை அனுப்பற மாதிரி நகைகளை மாட்டி அனுப்பாதீங்க. இப்பல்லாம் மாணவிகள் மத்தியில் ‘நோ கோல்ட்’தான் ஃபேஷன். அதான் அவங்களுக்குப் பாதுகாப்பும் கூட. முடிஞ்சா அவரவருக்குன்னு தனியா குட்டி பீரோவோ, பூட்டிக்கிற வசதி இருக்கற ஷெல்போ வெச்சுக்கறது நல்லது. விலை கூடின பொருட்களையோ, பணத்தையோ இல்லை துணிமணிகளையோ பத்திரமா வெச்சுக்கலாம். கண்ட இடத்துல இறைச்சுட்டு, அப்றம் அதைக் காணோம் இதைக் காணோம்ன்னு தேடற வேலை மிச்சம். விலை கூடின பொருட்கள் காணாமப் போயிருந்தா நம்ம ரூம்மேட்ஸை தேவையில்லாம சந்தேகப்பட்டு உறவே பாழாகும்.

பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கவும், பட்ஜெட் போட்டுச் செலவு செய்யவும் சொல்லிக் கொடுக்கறதும் அவசியம். நாம அனுப்பற பணத்துக்கு கரெக்டா கணக்கு வெச்சிருக்காங்களான்னு செக் செய்யறதும் முக்கியம். அவங்க தங்கியிருக்கும் ஊர்லயே ஒரு நம்பகமான வங்கியில கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்து, அதை அவங்களையே பராமரிக்கவும் சொல்லணும். படிப்பு, சாப்பாடு மாதிரியான முக்கியச் செலவுகளுக்கு முதலிடம் கொடுக்கணும். முடிஞ்சா அதுல அவசரத் தேவைகளுக்குன்னு கொஞ்சம் சேமிச்சும் வைக்கச் சொல்லிக் கொடுக்கலாம். திடீர்ன்னு ஏதாவது படிப்புச் செலவோ, இல்லை உடம்பு சரியில்லாம டாக்டர் கிட்ட போகவோ வேண்டி வந்தா, வீட்லேருந்து பணம் வர்ற வரைக்கும் சேமிப்பு கைகொடுக்கும்.

காலேஜ்ல, ஹாஸ்டல்லன்னு பொருளாதாரத்துல ஏற்றத் தாழ்வுள்ள பசங்க ஒண்ணா படிக்கிறப்ப, சிலபேர் தாம்தூம்ன்னு செலவு செய்வாங்க. புதுச்செருப்பு வாங்குனதுக்கெல்லாம் ட்ரீட் கொடுப்பாங்க. அதுமாதிரியெல்லாம் எல்லோராலயும் இருக்க முடியாதே. சிலருக்கு பிடிக்கவும் பிடிக்காது. அதுவும் ரொம்ப நெருங்கின நண்பர்கள் ட்ரீட் கேட்டு நெருக்கடி கொடுக்கற சமயங்கள்ல தன்னோட நிலையை உடைச்சுச் சொல்லிடறது உத்தமம்.

வீட்ல அனுப்புன பணமும் பத்தாம, அதிகப்படி செலவுக்காக வீட்ல பொய் சொல்லிப் பணம் கேட்டு வாங்கி வீண் பந்தாவுக்காகச் செலவு செஞ்சு அப்றம் மாட்டிக்கிட்டு முழிக்கிற அவஸ்தை தேவையா என்ன?.. இதனால பெற்றோருக்கும் பசங்க மேல இருக்கற நம்பிக்கை குறைஞ்சு போகுதே. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் மெஸ் ஃபீஸ்ன்னு ஒருதடவையும், சாப்பாட்டுக் கட்டணம்ன்னு இன்னொரு தடவையும் வாங்கிக் கிட்டிருந்தார். படிப்பறிவில்லாத பெத்தவங்களை ரொம்ப நாளுக்கு ஏமாத்த முடியலை. மாட்டிக் கிட்டப்புறம் செம அர்ச்சனை நடந்தது

தன்னோட இருப்பிடத்தைச் சுத்தமா வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். அது உலகத்துக்கும் நல்லது. காலேஜ் விட்டு வந்ததும் துணிங்களை ஒரு மூலையிலும், புத்தகங்களை இன்னொரு மூலையிலும் விட்டெறியறது வீட்டுல வேண்ணா நல்லாருக்கும். எடுத்து வைக்க ‘அம்மா’ங்கற ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும். ஆனா, தனியா இருக்கறப்ப மூக்கால அழுதுக் கிட்டாவது அதை நாமதான் செஞ்சுக்கணும்ன்னு முதல்லயே அவங்க புரிஞ்சுக்கணும்.

ரூம் மேட்ஸ் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செஞ்சுக்கிட்டா மலையும் தூசு மாதிரியாயிடும். சுத்தமான இடத்துல உக்காந்து படிச்சா பாடமும் கடகடன்னு மண்டைக்குள்ள ஏறும். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்

ஹாஸ்டலோ, தனி வீடோ பசங்களுக்கு டால், உப்புமா, ப்ரட் டோஸ்ட்ன்னு ஒரு அவசரச் சமையல் செஞ்சுக்கச் சொல்லிக் கொடுக்கறது உத்தமம். “போம்மா,.. நான் படிப்பேனா, சமையல் செய்வேனா?..”ன்னு கேக்கற உங்க பிள்ளைச் செல்வம், “நேத்திக்கு ஸ்ட்ரைக்கா!!, மெஸ்ல/ஹோட்டல்ல ஒண்ணும் சாப்பிடக் கிடைக்கலை. கடைசில நீங்க குடுத்து விட்ட சின்ன ரைஸ் குக்கர்ல கொஞ்சூண்டு சாதம் வெச்சு, பருப்புப் பொடியோட சமாளிச்சேன். என் ரூம் மேட்டோடயும் பகிர்ந்துக்கிட்டேன். சூப்பர்மா!!.. எப்படிம்மா உங்களுக்கு இந்த யோசனை தோணிச்சு?..”ன்னு கேக்கும். அடுத்த தடவை புள்ளை ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகறச்சே புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி, ஜாம், ஊறுகாய்ன்னு தனியா இன்னொரு லக்கேஜும் ஹாஸ்டலுக்கு படிக்கப் போகும்.

அப்படி முடியலைன்னா, பசங்க தங்கியிருக்கற இடத்துக்கு சாப்பாடு சப்ளை ஏதாவது இருக்குதான்னு விசாரிச்சுக்கோங்க. மும்பையில் நிறைய இடங்கள்ல இந்த டப்பா சர்வீஸ் இருக்குது. மாசம் பணம் கட்டிட்டாப் போதும், மூணு வேளையும் சுடச்சுட சாப்பாடு நாம இருக்கற இடத்துக்கே வரும். அளவு அதிகமாருந்தா ரெண்டு பேர் பகிர்ந்துக்கலாம். இதனால பணமும் மிச்சப்படுது.

எல்லாத்தையும் விட முக்கியமானது ஒண்ணு இருக்கு. அதான் தனியா இருக்கக் கிடைச்ச சுதந்திரத்தை தவறாப் பயன்படுத்தாம இருக்கறது. இதுலயே கிட்டத்தட்ட எல்லாமும் அடங்கிடுது. பசங்க தங்கற ஊர்ல நம்ம சொந்தக்காரங்க இருந்தா இன்னும் விசேஷம். நம்மைக் கண்காணிக்க ஆளிருக்குன்னு அவங்க ஒரு கட்டுப்பாட்டோடயும் இருப்பாங்க, பாதுகாப்பும் கூட. நாம இருக்கிற இடத்துக்குன்னு தனி விதிமுறைகள் இருக்கலாம். அதையெல்லாம் அனுசரிச்சு நடக்கப் பழகிக்கணும். ‘விதிமுறைகள்ங்கறதே மீறத்தானே’ன்னுதான் இள ரத்தம் நினைக்கும். எதெல்லாம் கூடாதுன்னு சொல்றோமோ அதெல்லாம் செய்யணும்ன்னு துடிக்கும். இதை சகஜம்ன்னு எடுத்துக்கிட்டா ஆபத்து வர்றதும், மீள முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறதும் சகஜம்தான்னும் எடுத்துக்கணும்.


டிஸ்கி:நவம்பர் மாத லேடீஸ்ஸ்பெஷல்ல வெளியான இந்தக் கட்டுரையை உங்களுடனும் பகிர்ந்துக்கறேன்.



Tuesday 29 November 2011

பூந்தோட்டம்..(29-11-11 அன்று பூத்தவை)

பிச்சி: கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்ன்னு சொல்லுவாங்க. ஏதோ முழுக்க கெடுறதுக்கு முன்னாடியே முழிச்சுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். எங்கும் எதிலும் ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக்ன்னு இருந்த மோகத்திலேர்ந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைய ஆரம்பிச்சிருக்காங்களே அதைத்தான் சொல்றேன். மும்பையைப் பொறுத்தவரை 'அந்த' மழைக்கப்றம் ப்ளாஸ்டிக் பைகளைப் பத்தின ஒரு விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பிச்சிருக்குது. மால்கள்ல கூட பை வேணும்ன்னா காசு கொடுத்துத்தான் வாங்கிக்கணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சின்னச் சின்னக் கடைகள்ல பேப்பர் பைகள் புழக்கத்துக்கு வந்தாச்சு. செய்யறதுக்குச் சுலபமான இந்தப் பைகள் இங்கே சில குடும்பங்களையும் வாழ வெச்சுக்கிட்டிருக்குது.

மும்பையின் காந்திவிலி பகுதியைச் சேர்ந்த பத்துப் பெண்கள் ஒண்ணாக் கூடி இதை ஒரு குடிசைத் தொழிலாவே செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அக்கம்பக்கத்துக் கட்டிடங்கள்ல சொல்லி வெச்சு, நாளிதழ்களைத் தினமும் சேகரிச்சு பைகள் செய்யறாங்க. இதை அக்கம் பக்கத்துல இருக்கற இனிப்பகங்கள், மருந்துக் கடைகள், அப்றம் சின்னச் சின்ன கடைகள்ல வாங்கிக்கறாங்க. நாமளும் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியா பலமா இருக்கோம்ங்கறதுல இந்தப் பெண்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.

இருவாட்சி: உலகப் புகழ் பெற்ற அஜந்தா எல்லோராக் குகைகளுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்குதாம். இதை நம்ம இந்தியத் தொல்பொருட்துறை ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சு, அறிவிச்சுருக்குது. வெளி மாநிலங்கள்லேர்ந்தோ, இல்லை உள்ளூர்க் காரங்களோ ஷிர்டி, சனிஷிங்கனாப்பூர்க்கு தரிசனம் செய்ய வந்தா அங்கேருந்து பக்கத்துல அவுரங்காபாத்ங்கற நகர்லேர்ந்து அஞ்சே கி.மீ தொலைவுல இருக்கற அஜந்தா எல்லோராக் குகைகளுக்குப் போயி சிற்பங்களை ரசிக்காம வர மாட்டாங்க. இப்படி தினமும் கூடுற டூரிஸ்ட்டுக் கூட்டத்தாலதான் அந்தக் குகைகளுக்கு ஆபத்தாம்.

கூட்டம் அதிகமா இருக்கறதால அங்கே கரியமில வாயுவோட அளவு காத்துல கூடுதலாகிடுச்சு. இப்படி கூடுதலான வாயு குகையோட கற்கள்ல இருக்கற கால்ஷியம் கார்பனேட்டோட வினை புரிஞ்சு பயோகார்பனேட் ஆகுது. இது பாறைத்துணுக்குகளுக்கு இடையேயான பிணைப்பைத் தகர்க்குதாம். இதனால என்ன ஆகும்ன்னு கேக்கறவங்களுக்கு அங்கே ரெண்டாம் குகையின் கூரைப்பகுதியிலேர்ந்து பொடிப்பொடியா உதிர்ந்து வர ஆரம்பிச்சுருக்கும் மணற்துகள்களே பதில் சொல்லும். இந்தியாவின் பொக்கிஷங்கள்ல ஒண்ணான அஜந்தா, எல்லோராக் குகைகளை இனிமேல் புகைப்படங்கள்ல மட்டுந்தான் பார்க்க முடியும்ங்கற நிலைமை வந்துடும் போலிருக்கு.

கனகாம்பரம்: “வொய் திஸ் கொலவெறிமும்பை இளசுகளின் உதட்டில் சமீப காலமா வந்து உக்காந்துக்கிட்டு இருக்குது. காலேஜ் காண்டீன்கள்ல இந்தப் பாட்டு எத்தனை தடவை ஒலிக்குதுன்னு கணக்கே வெச்சுக்க முடியலை. எங்கூர் மராட்டி மொழியில் ஆரம்பிச்சு குழந்தைகளின் விருப்பமான சிப்மங்க்ஸ் வரைக்கும் பாடற மாதிரியான எக்கச்சக்கமான ரீமிக்ஸுகளும் வந்தாச்சு. ஏற்கனவே நம்மூரு டாக்குட்டர் விஜய் ஆடிப் பாடுனஅப்டிப் போடு.. போடுஇன்னி வரைக்கும் வடக்கே நடக்கற கல்யாணங்கள்லயும் கொண்டாட்டங்கள்லயும் டிவிக்கள்லயும் போடுபோடுன்னு போட்டுக்கிட்டிருக்கு. பத்தாததுக்குநாக்கமுக்கபாடல் ஒரு இந்திப் படத்துல பின்னணி இசையாவும் பயன் படுத்தப் பட்டிருக்கு. இப்போகொலவெறியையும் பாலிவுட் படங்கள்ல உபயோகப்படுத்தலாமான்னு மக்கள் கிட்ட கருத்துக் கணிப்பும் நடத்திக்கிட்டுருக்காங்க. தமிழேண்டா :-)

மந்தாரை: நம்ம கவுண்டர் ஒரு படத்துல சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டிருப்பார். ஒரு நாள் சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கறப்ப திடீர்ன்னு டமால்ன்னு சைக்கிளைப் போட்டுட்டு அவரும் கீழே விழுவார். அக்கம் பக்கத்துல நின்னுட்டிருந்தவங்க ஓடி வந்து அவரைத் தூக்கி விட்டுட்டு, அடிபட்டிருச்சான்னு கேக்கவும், நான் இப்படித்தான் சைக்கிள்லேர்ந்து இறங்குவேன்ன்னு கூலா சொல்லிட்டு போயிட்டேருப்பார். இந்தக் காட்சியை ஞாபகப் படுத்தறமாதிரி சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துது.

நவிமும்பையின் வாஷிக்கு போயிட்டு திரும்பி வந்துட்டிருந்தேன். ட்ரெயின் ஜஸ்ட் புறப்பட்டு வேகமெடுக்க ஆரம்பிக்கையில் எங்க பொட்டியிலிருந்து ஒரு பொண்ணு தடார்ன்னு வண்டிக்கு வெளியே பப்பரப்பேன்னு மல்லாக்க விழுந்துட்டா, கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரமா வண்டி இன்னும் ஸ்டேஷனுக்கு வெளியே வரலை. அதனால ப்ளாட்பாரத்துல விழுந்ததும் பக்கத்துல இருந்தவங்க சட்ன்னு அவளைத் தாங்கிப் பிடிச்சுட்டாங்க. எழுந்தவ சிரிச்சுட்டே தன்னோட பையைக் குனிஞ்சு எடுத்துக்கிட்டா. தள்ளுமுள்ளுல விழுந்துருப்பாளோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு பொட்டிக்குள்ள கூட்டமுமில்லை. ஒருவேளை அவளைக் கேட்டிருந்தா, “நான் எறங்கற இஸ்டைலே இப்படித்தான்”ன்னு சொல்லியிருந்துருப்பாளோ என்னவோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செவ்வந்தி: மும்பையில் சமூக அமைதியைக் குலைக்கிற விதமா அடிக்கடி நடக்கும் சம்பவங்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுக்கணும்ன்னா பொதுமக்களோட கை கோர்த்துக்கிட்டுச் செயல்படறது அவசியம்ங்கறதை எங்கூர் காவல்துறை உணர்ந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு ஏரியாவோட மூலை முடுக்கையும் அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நல்லாத் தெரியும்ங்கறதால திருட்டு, போதைப்பொருள் நடமாட்டம், வன்முறையாளர்களோட நடமாட்டம்ன்னு எல்லாத்தையும் ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சுடலாம் இல்லியா. இது கிட்டத்தட்ட நம்மூர் ஊர்க்காவல் படையோட மாறுபட்ட வடிவம்தான். அதேமாதிரி கடலுக்குள்ள கண்காணிக்கறதுக்காக மீனவர்களோட உதவியையும் கேட்டிருக்காங்க. தரைவழியாவோ கடல்வழியாவோ இந்தியாவுக்குள்ள தீவிரவாதிகள் நுழையறதைத் தடுக்கறதுக்கான முயற்சிதான் இது. மும்பை முழுக்க ஆங்காங்கே கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கவும் யோசனை நடக்குது. கடந்த வருஷங்கள்ல மும்பை மேல் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களாலதான் இப்படியொரு யோசனை எழுந்துருக்குது. அதே சமயம் பொது மக்களோட பங்களிப்போட நகரத்துல நடக்கற கிரிமினல் சம்பவங்களையும் கட்டுக்குள்ள கொண்டாந்துடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-)

ஆர்க்கிட்: நான் எழுதிய பவளமல்லி சிறுகதை நம்ம லேடீஸ் ஸ்பெஷலோட தீபாவளி மலர்ல வெளியாகியிருக்குது. வெளியிட்ட நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
                                   


Monday 14 November 2011

மழலை உலகம் மகத்தானது...(தொடர்பதிவு)


எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்..
ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப்பு இருக்குது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தோட சிறப்பு.

நவம்பர் 20-ஐ அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும் யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலுலேர்ந்து கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் பிரகடனப் படுத்தப்பட்டிருக்குது. அத்தோட ஜூன் ஒண்ணாம் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுது.
முள்ளில்லா ரோஜாக்களும் அவங்க ராஜாவும்..
அப்படியிருந்தும் நாம மட்டும் ஏன் நவம்பர் 14-ஐ குழந்தைகள் தினமாகக் கொண்டாடுறோம்ன்னா அதுக்கு முழுக்க முழுக்க நம்ம நேருமாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேருன்னும் தெற்கில் நேருமாமான்னும் அழைக்கப்படற நம்ம சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 1889ஆம் வருஷம் பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் ரொம்பவும் பாசம் கொண்டவர். அதனாலதான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுது.

குழந்தைகள்ன்னதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வர்றது அவங்களோட வெள்ளை மனசுதான்.எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரிஞ்ச நம்ம குழந்தைப் பருவத்தை நினைக்கிறச்சே,..”ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம்”ன்னு ஒரு ஏக்கப்பெருமூச்சு வர்றதையும், கூடவே இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் எப்படிக் கழியுதுன்னு ஒப்பிட்டுப் பார்க்கறதையும் நம்மால நிச்சயமா தவிர்க்க முடியலை. ஏன்னா, இப்பத்திய குழந்தைகள் வாழும் சூழல் அப்படி. அதை நாமே உருவாக்கி வெச்சிட்டோம்ங்கறதும் வேதனைக்குரிய உண்மையே.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40% இருக்கும் குழந்தைங்க சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் இன்னும் இருக்கு. இதுல முக்கியமானது ஆண்குழந்தை மோகத்தால் பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காம இருக்கறது, பிறந்த குழந்தைங்களும் தாக்குப் பிடிக்க முடியாம சின்ன வயசுலயே இறந்துடுறது, குழந்தைங்க மீது நடத்தப் படற வன்முறைகள்ன்னு எவ்வளவோ இருக்கு.

இந்தக் காலத்துக் குழந்தைகள் எதிர் நோக்க வேண்டியிருக்கற வாழ்க்கை சவால்கள் நிறைஞ்சதாவே இருக்குது. இன்றைய குழந்தைகள் வளர்ந்து பெரியவங்களாகும்போது தனக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கணும்ன்னு குறிக்கோளோட இருக்கறாங்க. அப்டி நினைக்கிறது தப்பேயில்லை. ஆனா, அப்படி இருந்தாத்தான் வாழ்க்கையில் ஜெயிச்சதாவும், அப்படியில்லைன்னா தான் எதுக்கும் லாயக்கில்லைன்னும் நினைக்கிறாங்க. சின்னத் தோல்விகளைக்கூட தாங்கிக்கற மனப்பக்குவம் அவங்களுக்கில்லை. எது சரி?.. எது தப்பு?ன்னு சரியான முடிவெடுக்கத் தெரியாம சட்ன்னு குழம்பிடறாங்க.

இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிஞ்சுட்டு வர்றதும் பள்ளிகள்லயும் மாரல் வகுப்புகள் நடக்கறதில்லைங்கறதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும் மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. “ஓடி விளையாடு பாப்பா”ன்னு பாரதி பாடி வெச்சுட்டுப் போயிட்டார். ஆனா, இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடி இல்லைன்னா வீட்ல தொலைக்காட்சி, அல்லது கணினி முன்னாடி மட்டுமே கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடறது?..

குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாச்சாரப் பண்புகள், அப்றம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித் தரும் அனுபவப் பெட்டகங்களா தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. வீட்ல இருக்கற தாத்தா பாட்டிகள்லயும் சிலபேர் போட்டி போட்டுக்கிட்டு சீரியல் பாக்கறதும், ரிமோட்டுக்காக பேரப்பிள்ளைகள் கிட்ட மல்லுக்கு நிக்கிறதும்தான் சில வீடுகள்ல நடக்குது.

கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தை இப்ப தொலைக்காட்சியும் கணினியும் பிடிச்சுக்கிட்டது. அதிலும் முக்கியமா தொலைக்காட்சி குழந்தைகள் மனசுல ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே அதிகம். இப்பல்லாம் குழந்தைகளுக்கான நல்ல சினிமாவோ, இல்லை கார்ட்டூங்களோ கூட வர்றதில்லை. நிதர்சனத்தைக் காட்டுறதா சொல்லிக்கிட்டு காண்பிக்கப்படற அடிதடி, ரத்தம், முறையற்ற உறவுகள் மற்றும் வன்முறைகள் நிரம்பி வழியும் அந்தக் காட்சிகள் குழந்தைகளோட பிஞ்சு மனசுல நிச்சயமா விஷ விதைகளைத் தூவுது. சமுதாயத்தைப் பத்தின அவங்களோட சிந்திக்கும் கோணத்தையே நிச்சயமா மாத்துது.

இப்பத்திய கல்வியமைப்பும் குழந்தைகளுக்கு ரொம்பவே மன அழுத்தம் கொடுக்கக் கூடியதா அமைஞ்சுருக்கு. அவங்களுக்கு பிடிச்சதையோ அல்லது அவங்க எதுல திறமைசாலியோ அதைப் படிக்க அனுமதிக்கப்படாம, பெற்றோர்களோட விருப்பத்தை நிறைவேத்த நிர்ப்பந்திக்கப் படறாங்க. எல்லாத்துலயும் முதலிடம் வந்தேயாகணும்ன்னு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமுதாயத்துலேர்ந்து வர்ற எதிர்பார்ப்புகளை நிறைவேத்த முடியாம திணறிப் போற குழந்தைகள் எக்கச்சக்கம்.
பாவம்.. குழந்தைகள். எத்தனைதான் பாரம் சுமப்பாங்க??
குழந்தைத் தொழிலாளர்கள் கூடாதுன்னு எத்தனை முறை எச்சரிக்கை செஞ்சாலும், சட்டம்,அபராதம், தண்டனைன்னு அரசாங்கம் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் அந்தக் கொடுமை ரகசியமாத் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. ஏன்னா, அவங்களுக்குக் குறைவான கூலி கொடுத்தாப் போதுமில்லே.. ஆனா, அதுக்குப் பதிலா விலையுயர்ந்த அவங்களோட குழந்தைப் பருவத்தை பறிச்சுக்கிறோம்ன்னு யாருக்குமே தோணறதில்லை.

வீட்டோட நிலை காரணமா குழந்தைங்க பள்ளிக்கு அனுப்பப் படாம வேலைக்கு அனுப்பப்படுறதா காரணம் சொல்லப்படுது. பள்ளியில் சேர்க்கப்படற பத்துக் குழந்தைங்கள்ல நாலுபேர் ஆரம்பப் பள்ளியோட நின்னுடறாங்க, பத்துல அஞ்சு பேர் அஞ்சாம் வகுப்பைக் கூடத் தாண்டறதில்லை. பத்துல ஏழு பேர் மேல் நிலை வகுப்போட நின்னுடறதா புள்ளி விவரம் சொல்லுது. இப்படி பள்ளிப் படிப்பை நிறுத்தும் குழந்தைகளில் மூன்றில் ரெண்டு பங்கு அளவு பெண்குழந்தைளாக இருப்பது இன்னொரு கொடுமை. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழிச்சு அவங்களைப் பள்ளிக்கு அனுப்பினா நிச்சயமா அடுத்து வர்ற தலைமுறைகளும் பயனடையும். இதுக்கு பெற்றோர், ஆசிரியர், சமுதாயம்ன்னு எல்லோரோட ஒருங்கிணைஞ்ச முயற்சியும்  நிச்சயமாத் தேவை.

இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியதும், அவங்க எதிர் கொள்ள வேண்டியிருக்கற பாதையை இடைஞ்சல்கள் இல்லாமச் சீர்திருத்திச் செப்பனிட்டுக் கொடுக்கறதும் நம்ம கடமைதானே?. இதைச் செஞ்சாத்தானே குழந்தைகள் தினம் கொண்டாடுறதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இப்படியொரு நல்ல சூழல்ல வளர்ற குழந்தைகளுக்கு வருஷம் முழுக்கக் குழந்தைகள் தினக் குதூகலமும் கிடைக்கும்.
வர்ஷா வடிவமைச்ச லோகோ..
ஊக்குவிக்கப்படற குழந்தைகள் நிச்சயம் சாதிப்பாங்கங்கறதுக்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த   வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். இந்தியாவின் இசைக் கருவிகளை நினைவூட்டும் விதமா கூகிளின் லோகோவை வடிவமைக்கிறதுக்காக நடந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்காங்க மூணாம் வகுப்பு படிக்கும் இந்த ஏழே வயசான குட்டிப்பெண். பரிசா ஒரு மடிக்கணினியும், அவங்க படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் மதிப்புல தொழில் நுட்ப வசதிகளும் கிடைச்சிருக்குது.அவங்க வடிவமைச்ச லோகோதான் இன்னிக்கு கூகிளின் முகப்பை அலங்கரிச்சுட்டிருக்குது.

நல்ல வாய்ப்புகளும் உற்சாகமும் கிடைச்சா எந்தக் குழந்தையும் சாதிக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம். அவங்களை வாழ்த்துவோம். அவங்களுக்காக ஒரு நாலஞ்சு வரிகளை எழுதியிருக்கேன். 


எங்களுக்கே என்றதோர் உலகம்
அதில்
ஆட்சியாளர்கள் மட்டும்
நாங்களில்லை..

கிட்டிப்புள்ளென்றும் பம்பரமென்றும்
கிராமமென்றும் கிணறென்றும்
டோரிமானென்றும் நிக்ளோடியனென்றும்
விளங்கவியலா விசித்திரச் சொற்களால்
குழம்புவதும் குழப்புவதுமே
எங்களது வாடிக்கையாகிப் போய்விட்டது..

துரத்தித் திரிந்த தும்பிகளையும்
பூவரச இலை பீப்பீயையும்
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து
விவரிக்கும்போது
பனையோலைக் காற்றாடிகளுடன்
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள்
சென்ற தலைமுறையின்
மனதெங்கும் அப்பிக் கிடக்கும்
செம்மண் புழுதியில்..

கணினி ஜன்னலில் முகம் புதைத்து
ஆசுவாசமுறும்
கூண்டுக்கிளிகளை
நோக்கி நகைக்கின்றன
அந்தக் காலச் சுதந்திரக்கிளிகள்..

டிஸ்கி: ஷைலஜா மேடம் அழைச்ச தொடர்பதிவுக்குப் பொருத்தமா அமைஞ்சுட்டதால, வல்லமையின் குழந்தைகள் தினச் சிறப்பிதழுக்காக எழுதியதையே இங்கே தொடர்ந்துட்டேன். இந்தத் தொடர்பதிவைத் தொடர.. 

பெண் பதிவிகளில்,

ஆண் பதிவர்களில்,
ஆகிய நால்வரையும் அழைக்கிறேன். 

பெண்களில் இருவர், ஆண்களில் இருவர்ன்னு அழைக்கணும், முடிஞ்சா இடுகையுடன் ஒரு கவிதையும், ஒரு புதிரும் இணைச்சா நலம். 

குழந்தைங்க அப்றம் குழந்தையுள்ளம் கொண்டவங்க அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Saturday 12 November 2011

கெளம்பிட்டாங்கய்யா.. கெளம்பிட்டாங்கய்ய்யா...

படம் கொடுத்ததுக்கு நன்றி கூகிள் அண்ணாத்தை
'இந்திய நண்டுகள்' கதை கேள்விப் பட்டிருக்கீங்களா?..  நிச்சயமா கேள்விப் பட்டிருப்பீங்க. கேள்விப் படாதவங்களுக்காக இன்னொருக்கா சொல்றேன்.

வெளிநாடுகளுக்கு ரகசியமா விலங்குகளைக் கடத்தல் செஞ்சுட்டிருந்த ஒரு கூட்டம் தனக்குச் சொந்தமான ஒரு கப்பல்ல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்ப வேண்டிய விலங்குகளைப் பத்திரமா காற்று நுழையும் வசதி கொண்ட கண்டெய்னர்கள்லயும், சிலதை சின்னச்சின்ன கூடைகள்லயும் அடைச்சு வெச்சு தயார் செஞ்சுட்டிருந்தாங்க. (இது கதை, அதனால லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. சொல்லிட்டேன் :-))) அதுல நண்டுகள் இருந்த ஒரு கூடையை மட்டும் மூடாம அப்படியே விட்டு வெச்சிருந்தாங்க. இதை அந்தக் கம்பெனியில புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு ஊழியர் கவனிச்சுட்டார். ஐயய்யோ.. அதெல்லாம் வெளிய ஓடிடுமே.. அப்றம் சட்ன்னு பிடிக்கவும் முடியாதே'ன்னு அவருக்கு கவலையாப் போச்சு. உடனே கூடையை மூடி வைக்கிறதுக்காக தன்னோட மேலதிகாரி கிட்ட போய் உதவி கேக்கப் போனார். 

மேலதிகாரி அவரை லட்சியமே செய்யலை. 'ஒண்ணும் சிரமப்பட வேணாம். அப்படியே விட்டுடு'ன்னார். தொழிலாளிக்கு ஒண்ணும் புரியலை, 'அப்படியே விட்டுட்டா அது ஓடிப் போயிடாதா?'ன்னு அவரோட அடிமனசுலேர்ந்து கேள்விகள்  தண்ணி பட்ட ஈனோ உப்பு மாதிரி குபீர்ன்னு பொங்குது.'உனக்கு சந்தேகமாருந்தா அந்தக் கூடையை நல்லா கவனிச்சுப்பாரு'ன்னுட்டு மேலதிகாரி போயே போயிட்டார். குழம்பிய தொழிலாளி கூடைக்குள்ள பார்த்தா நல்லா கொழுகொழுன்னு பத்துப்பதினஞ்சு நண்டுகள் உள்ள கிடக்குது. அதுல ஒண்ணு மெதுவா மேல ஏறி வெளியே வரப் பாக்குது. பாதி வழி ஏறிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு நண்டு கபால்ன்னு முதல் நண்டோட காலைப் புடிச்சு கூடைக்குள்ள இழுத்துப் போடுது. இப்படியே விளையாட்டு தொடருது. மொத்தத்துல ஒரு நண்டு கூட கூடையை விட்டு வெளியே வரலை. இதைக் கொஞ்ச நேரம் கவனிச்சுட்டிருந்த நம்மாளு, மேலதிகாரி கிட்டப் போயி, 'மொதலாளி.. கூடைய மூட வேணாம்ன்னு நீங்க ஏன் சொன்னீங்கன்னு இப்பத்தான் புரியுது. ஆனா, இவ்ளோ நண்டுக் கூடைகள் இருக்கறப்ப அந்த நண்டுகள் மட்டும் ஏன் அப்படி வித்தியாசமா நடந்துக்குது. எனக்கு ஒண்ணும் புரியலை"ன்னார்.

"புரியாததாலதான் நீ இன்னும் தொழிலாளியா இருக்கே. புரிஞ்சுக்கிட்டதாலதான் நான் மேலதிகாரியா ப்ரமோஷன் வாங்கி வந்துருக்கேன். சரி. சொல்றேன் கேட்டுக்க. அதெல்லாம் இந்தியாவுலயும் அதைச் சுத்தியிருக்கற கடற்பகுதிகள்லயும் பிடிச்ச நண்டுகள். ஏதாவது ஒரு நண்டு முன்னேற முயற்சி செஞ்சாலும், பக்கத்துல இருக்கற நண்டுகள் காலைப் பிடிச்சு இழுத்து அதை முன்னேற.. அதாவது கூடையை விட்டு வெளியேற முடியாம செஞ்சுடும். இது அதுங்களோட இயற்கைக் குணம். புரிஞ்சதா?"ன்னுட்டுப் போயிட்டார்.

'இந்தியர்களான நமக்கு நம்மில் ஒருத்தர் முன்னேறுனா பொறுக்காது'ங்கறதை சொல்றதுக்காக கட்டி விடப்பட்ட கதை இது. இத மொதமொதல்ல உருவாக்குன ஆளு மட்டும் கையில கிடைச்சார்... அந்த நண்டுக் கூடையிலயே போட்டு அடைச்சு, கூடுதலா நாலஞ்சு நட்டுவாக்காலிகளையும் விடணும். கிர்ர்ர்ர்... ஆனா, கொஞ்சம் உங்க சொந்தச் செலவுல ரூம் போட்டு யோசிச்சுப் பாருங்க. இலைமறை காய் மறையா கொஞ்சம் உண்மையும் எட்டிப் பாக்குதுன்னுதான் சொல்லணும். தனக்குத் தெரிஞ்சவங்களோட,.. முக்கியமா சொந்தக்காரங்களோட, வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து எத்தனை பேர் உண்மையிலேயே மனசார சந்தோஷப்படறோம்? இது ஒரு கேள்விக்குறியாவே ஏன் எப்பவும் இருக்குது?.

ஆனா, எப்பவுமே எதுவுமே அப்படி இருக்கறதில்லை. முன்னே பின்னே தெரிஞ்சவங்க முன்னேறுனா வேண்ணா பொறாமைப்படுவோமா இருக்கலாம். ஆனா, முன்னே பின்னே தெரியாதவங்களை முன்னேத்தியே தீருவோம்ன்னு வைராக்கியமாஒரு கூட்டமே அலையுது தெரியுமோ?.  நம்ம ஈமெயிலுக்கு ஒரு லெட்டர் அனுப்பி, 'உங்க மெயிலுக்கு பெரிய தொகையொண்ணு பரிசு விழுந்துருக்குது.. ஃப்ரம் டுடே நீங்க ஒரு கோடீஸ்வரர்'ன்னு சொல்ற நல்ல மனசோ,..  இல்லைன்னா, தன்னோட சொத்துல ஒரு பகுதியை நம்ம பேருக்கு எழுதி வெச்சுட்டு செத்துப் போற பெரிய மனசோ வெளிநாட்டுக் காரங்களுக்கு மட்டுந்தான் இருக்குது. நம்மள்ல எத்தனை பேருக்குங்க இருக்குது?... :-)

அட.. மெயிலை விடுங்க.. அது ஓல்டு யுகம். டெக்னாலஜி முன்னேறும்போது கொளுகையை பரப்பற வழியையும் முன்னேத்தணுமா இல்லியா?.. அதனால அடுத்தாப்ல மொபைல்ல மெஸேஜ் அனுப்ப ஆரம்பிச்சாங்க. காசு பணம் மட்டும் கொடுத்தாப் போதுமா?.. அதனால முத்துமாலை, தங்க நெக்லஸ்ன்னு அவங்க நமக்குக் கொடுக்கற அன்புப்பரிசு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. பாசக்காரங்களா இருக்காங்களேப்பா :-))))

இப்ப லேட்டானாலும் லேட்டஸ்டா இன்னொரு ஹைடெக்கான வழியைக் கண்டுபிடிச்சுருக்காங்க. இப்பல்லாம் நம்ம நம்பருக்கே போன் செஞ்சு நேரடியா அட்டாக்தான். எப்படியாவது நம்மை கோடீஸ்வரங்களாக்கியே தீரணும்ன்னு விடாமுயற்சி செய்யற அந்த அன்பை நினைக்கிறப்ப கண்கள் பனிக்கின்றன.. காதுகளும் இனிக்கின்றன :-)

அப்படியொரு உடன்பிறவா உடன்பிறப்பு கிட்டயிருந்து சமீபத்துல எனக்கும் ஒரு போன் கால் வந்தது. கைவேலையா இருந்ததால ரங்க்ஸே அட்டெண்ட் செஞ்சார். இது எங்களுக்குள்ள ஜகஜம்தான்.

"ஹலோ.."

"......"

"நெஜமாவா.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்லலியே.."

"...................."

"ஹைய்யோ... என்னால நம்பவே முடியலை. ஆச்சரியமா இருக்குது."

".................."

"ஆனாலும், உங்களுக்குப் பெரிய மனசுங்க. இவ்ளோ பெரிய தொகை.... எப்டீங்க? எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போலிருக்கே"

"..................." 

இதுவரைக்கும் ரங்க்ஸ் கொடுத்த ஓவர் ஆக்டிங்லயே என்னவோ வில்லங்கம்ன்னு புரிஞ்சு போச்சு. இந்தச் சமயத்துல மொபைலைப் பிடுங்கி லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு, மறுபடியும் ரங்க்ஸ் கைல கொடுத்தேன்.

"உங்கூர்ல இருக்கற '****' பாங்க்ல பணத்தைப் போட்டுடுவோம். அதை வெளிநாட்டு பேங்க்லேர்ந்து கொண்டு வர வேண்டியிருக்கு இல்லியா.. அதுக்கான சார்ஜை மட்டும் நீங்க கொடுத்தாப் போதும். உங்களுக்கு இருபத்தஞ்சு லட்சம் கிடைச்சுடும்"ன்னு பேசிக்கிட்டிருக்கச்சயே லைன் கட்டாகிடுச்சு. க்ளைமாக்ஸ் சீன்ல மலை விளிம்புல நின்னுட்டிருக்கற ஹீரோயினை வில்லன் காப்பாத்துவாரா?.. இல்லை ஹீரோ காப்பாத்துவாரா?.. ன்னு நகத்தைக் கடிச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கறப்ப கரண்ட் கட்டானது மாதிரி இருந்தது.

யாரு என்ன?.. ன்னு ரங்க்ஸ் கிட்ட விவரம் கேட்டேன். விஷயம் ரொம்ப சிம்பிள்தான். ஈமெயில்ல அடிக்கடி நடக்கறதுதான். என்னோட மொபைல் நம்பருக்கு குலுக்கல் முறையில் பரிசு கிடைச்சுருக்கு. ஜஸ்ட் இருபத்தஞ்சு லட்சம் ரூபாய்கள். ஒரு வெளிநாட்டுக் கம்பெனி பரிசு கொடுக்குது. வெளிநாட்ல உள்ள பாங்கிலிருந்து இங்கிருக்கும் பாங்குக்கு பணத்தைக் கொண்டாந்து நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவாங்களாம். அதுக்கு ச்சார்ஜா குறிப்பிட்ட அமவுண்டை அவங்க கொடுக்கற அட்ரசுக்கு அனுப்பிட்டா, நமக்கு இந்தியாவுலயே ஒரு அட்ரஸ் கொடுப்பாங்க. அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்த்தா நம்மூரு பாங்குக்கான ஏஜண்ட் இருப்பார். அவர் கிட்ட நமக்கான பரிசுப் பணம் இருக்கும். அவர் கூடப் போனா நம்ம பாங்குல நம்ம அக்கவுண்டுல நம்ம கண்ணு முன்னாடியே பரிசுப் பணத்தை டெப்பாசிட் செஞ்சுடுவாங்க. இந்த மாதிரியெல்லாம் தில்லுமுல்லு நடக்குதுன்னு ரங்க்ஸுக்கும் தெரியும். அதனாலத்தான் முதல்லே எதிர்முனையில் இருந்த பார்ட்டி அடிச்ச கூத்துக்கெல்லாம் பதில் கொடுத்துட்டிருந்தார் :-))

ஆஹா!!.. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு நம்ம வித்யாசாகர் ஒரு கதை எழுதியிருந்தாரேன்னு ஞாபகம் வந்தது. அதுல ஹீரோ ஏமாந்துடுறதா கதை முடியும். அந்தக் கதையை ரங்க்ஸ் கிட்ட சொன்னேன்.  கொஞ்சம் யோசிச்ச ரங்க்ஸ் அந்த நம்பரைக் கூப்பிட்டார். 

"சார்.. நீங்க சொன்ன அமவுண்டை அனுப்பிடறேன். எங்கே அனுப்பணும்ன்னு சொல்லுங்க.."

"நீங்க மொதல்ல காசை அனுப்பிடுங்க.. அப்றம் நானே அட்ரசை மெஸெஜ் அனுப்பிடறேன்"

"சார்.. " அப்டீன்னு ஆரம்பிச்சு ரங்க்ஸ் பாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டே போறார். போனையே முன்னே பின்னே பார்க்காத ஒருத்தர், கத்திப் பேசுனாத்தான் எதிர் முனையில் இருக்கற ஆளுக்கு கேக்கும்ங்கறமாதிரி நினைச்சுக்கிட்டு ஊரையே கூட்டுவாரே.. அந்த மாதிரி ஹை டெஸிபல்ல பேசுறதையும், மீட்டர் கணக்குல ரீல் உட்டதையும் கேட்டுக்கிட்டிருந்த நாங்க ஒரு கட்டத்துல வாயை இறுக்கப் பொத்திக்கிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சுட்டிருந்தோம். சிரிப்புச் சத்தம் கேட்டு எதிராளி உஷாராயிடக் கூடாதே. 

பசங்க வேற 'அப்பா.. போதும்'ன்னு சைகை காட்டுதுங்க. இவரானா மணிக்கு இத்தனை கி.மீங்கற வேகத்துல ரீல் விட்டுக்கிட்டிருக்கார். 'ஆஹா.. ஒரு அடிமை சிக்கிட்டார்டா..'ன்னு இவருக்கு ஒர்ரே பூரிப்பு. ஒரு வேளை எதிராளியும் அப்படித்தான் நினைச்சுருப்பானோ??.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பேச்சு வாக்குல, 'சரீங்க.. உங்க அட்ரசைச் சொல்லுங்களேன்"ன்னு நைசா ஒரு பிட்டைப் போட்டார்.

".............."

"ஹலோ..ஹல்லோ.."

அவ்ளோதான்.. லைன் கட். இவர் மறுபடி மறுபடி அந்த நம்பருக்கு போன் செஞ்சுட்டே இருக்கார். லைன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுன்னு ஒரு பொண்ணு கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்குது. பாவம்.. தொண்டை கட்டிக்கப் போவுதுன்னுட்டு பரிதாபப்பட்டு போன் செய்யறதை விட்டுட்டார்.

அப்றம் ஆற அமர உக்காந்து இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதுதான் அந்த நம்பரை நமக்குத் தெரிஞ்ச போலீஸ் நண்பர் மூலமா ட்ரேஸ் செஞ்சு ஆளைப் பிடிக்கலாமேன்னு ஒரு நினைப்பு. பிடிச்சு மரியாதை செலுத்த வேணாமா?.. ஏன்னா, நமக்கு தொலைபேசுன ஆளு ஒரு இந்தியன். இந்தியன் முன்னேறணும்ன்னு துடியாத் துடிக்கிற ஒரு இந்தியனுக்கு மாலை மரியாதை கூட செய்யலைன்னா அப்றம் எப்படி?.

மொபைலை எடுத்துப் பார்க்கறச்சே.. 'ஆஹா!!,... வட போச்சே..'ன்னு நொந்துட்டேன். கால் ஹிஸ்டரி ரொம்பி வழிஞ்சதால பேச்சு வாக்குல என்னையறியாமலேயே அத்தனையையும் க்ளியர் செஞ்சுருக்கேன்.. அடப்பாவி மக்கா!!! மறுபடியும் எங்க கிட்ட இல்லைன்னாலும் வேற யார் கிட்டயாவது மாட்டாமயா இருப்பே :-))

ஆகவே மக்களே.. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்கறதா சொல்லிக்கிட்டு எந்த ரூபத்துல வேண்ணாலும் பொறி வைக்கப்படலாம். மாட்டிக்காம எச்சரிக்கையா இருந்து தப்பிச்சுக்கோங்க.. ஆனா, அறியாமையாலும், பேராசையாலும் இப்படிப் பட்ட ஆட்கள் கிட்ட மாட்டிக்கிடற பாமரர்கள் கதிதான் பரிதாபத்துக்குரியது. 

LinkWithin

Related Posts with Thumbnails