Sunday 23 November 2014

தேங்குதல் தவிர்ப்போம்..

முட்டுக்கட்டைகள் தடுத்து நிறுத்த மட்டுமல்ல, நல்வழியில் திசை திருப்பவும் போடப்படுவதுண்டு.

பாசம் பிடித்த மனதில் வைராக்கியத்தால் ஊன்றி நிற்க முடிவதில்லை.

நிகழ்காலத்தைப் பாதிக்காத வரைக்கும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் நல்லதே.

'நடக்காது.. வராது' என்று பிதற்றிக் கொண்டிருந்தால் நடக்காமலே போய் விடும், 'நடக்கும்.. வரும்' என்று நம்பிக்கொண்டிருந்தால் நடந்தே தீரும்.

எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதில்தான் பொறுமையின் பெருமை அடங்கியிருக்கிறது.

அந்த நேர நெருக்கடியிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் நிரந்தரத்தீர்வுகளைத் தருவதில்லை.

பாதுகாக்கத் தெரியாவிட்டாலும் பாழாக்காமலாவது இருப்போமாக.

பெற்றுக்கொள்வதற்கும் பிடுங்கிக்கொள்வதற்கும் இருக்கும் அதே அளவு வித்தியாசம், திணிப்பதற்கும் தேவையறிந்து கொடுப்பதற்கும் இருக்கிறது.

இன்றைய வெற்றி கொடுத்த இனிய நினைவுகளிலேயே தேங்கி நின்று விடாமல் எதிர்கால வெற்றிகளுக்கான நகர்தலில் ஈடுபடுபவனே அறிவாளி.

எதிர்பார்க்கும் வெற்றிப்புள்ளிகளுக்கும், சாதிக்கும் திறனுக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் கடக்க நேரெண்ண மனப்பான்மை மட்டுமே உதவும்.

Thursday 30 October 2014

கண்ணாமூச்சி..

எடுத்து வைக்கும் முதல் அடியைப்பாராட்டி ஊக்குவித்தால் ஆமையும் மாரத்தான் வெல்லும், மாறாக நகையாடினால் அந்த எள்ளல் நாளடைவில் சிறுத்தையைக்கூட முடக்கி விடும்.

எத்தனைதான் ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் இரையெடுக்க பூமிக்கு வந்து தீர வேண்டியிருக்கிறது.

பயமும் அவநம்பிக்கையும் கொண்டவரிடத்தில் தோல்வி ஒரு திருடனைப்போல் நுழைந்து உரிமையாளனைப்போல் குடி கொண்டு விடுகிறது.

நல்லவர்களாக இருப்பதை விட, நல்லவர்களாகவே நீடிப்பதுதான் அதிகக்கடினமானதும் சோதனைகள் நிரம்பியதுமாகும்.

வாழ்வில் நாம் இன்னொருவரை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நம்மை முன்மாதிரியாக யாரேனும் கொண்டிருக்கக்கூடும்.

தன்னை ஆக்கிரமிக்கும் பயங்களையும், அவநம்பிக்கைகளையும் வென்று, தன்னைச் சிறந்த முறையில் ஆளும் ஒவ்வொரு மனிதனும் மாமன்னனே.

சிற்றறிவு கொண்ட எறும்பிற்குக்கூட அதன் வாழ்வை நடத்தத் தேவையான அறிவை அளித்திருக்கும் இறைவன் மற்றவர்களையும் வெறுங்கையோடு அனுப்பி விடவில்லை.

பிறரின் நிம்மதியான வாழ்வையும் மகிழ்ச்சியான மனநிலையையும் கெடுக்கும் மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

ஊகங்களுக்கும் வரையறுத்தல்களுக்கும் நடுவே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது உண்மை.

எப்பொழுதும் அப்படித்தான் என்பதால் எப்பொழுதுமே அப்படியிருக்கத்தேவையில்லை. மாற்றங்கள் ஏற்படலாம்.

Monday 13 October 2014

தெளிவும் .. குழப்பமும்.

திறமையற்ற உழைப்பும், உழைக்க மனமற்ற திறமையும் வீணே. 

அறியாமை பிழையல்ல.. அறிந்து கொள்ள கடுகளவேனும் முயலாமல் இருப்பதே பெரும்பிழை.

"இனி பொறுப்பதற்கில்லை" என்று சொல்லிக்கொண்டே மேலும் மேலும் பொறுத்துக்கொள்கிறோம் ஒவ்வொன்றையும்.

இன்றைய வெற்றி கொடுத்த இனிய நினைவுகளிலேயே தேங்கி நின்று விடாமல் எதிர்கால வெற்றிகளுக்கான நகர்தலில் ஈடுபடுபவனே அறிவாளி.

பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

வெளிக்காட்டிக் கொள்ளாததாலேயே எதுவும் இல்லையென்று ஆகி விடுவதில்லை.

அவசர புத்தியும் ஆராயாத்தன்மையும் சிந்தனையை மழுங்கடித்து எண்ணங்களையும் பாழ்படுத்தி விடுகிறது.

எண்ணங்களைக் கெடுத்துக்கொள்வதை விட, தெளிந்த பின்னும் அவற்றைத் திருத்திக்கொள்ளாதிருப்பதே பெருந்தவறு.

அன்பு செய்தலும் செய்யப்படுதலும் வாழ்வின் மிக இனிய வரங்கள்.

கிடைப்பதுதான் கிடைக்கும் என்று சோர்ந்து உட்காராமல் நமக்கு வேண்டியதைப்பெற அயராது முயல்வோம்.

குழப்பவாதிகள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

Wednesday 24 September 2014

துணிவே துணை..

பொழியப்படும் அன்பை அலட்சியப்படுத்துவதைப் போன்றதொரு வன்முறை வேறெதுவுமில்லை.

சுகர் இல்லாத வரைக்கும்தான் சுகப்பிரும்மம். 

புரிந்து கொள்ளவில்லை என்று அங்கலாய்ப்பவர்களில் பலர் புரிய வைக்க முயற்சிப்பதேயில்லை.

ஒருவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுவது என்பதை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வழங்கப்படும் உரிமமாகவே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் சிலர்.

வாழ்க்கை எண்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

இடம், பொருள், காலம் என்று அத்தனையும் சாதகமாக இருப்பினும் துணிவு இல்லையெனில் அத்தனையும் வீணே.

கொள்ளும் பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மட்டும் மாற்றிக்கொண்டு, தன்னியல்புகளை மாற்றிக்கொள்ளாத தண்ணீரின் குணம்தான் எத்தனை உன்னதமானது.

ஒன்றைப் புரிந்துகொள்ள இயலாவிட்டால் குறைந்தபட்சம் அதைப்பற்றித் தவறாக விமர்சிக்காமலாவது இருப்போம்.

பெய்த ஒவ்வொரு சூரியத்துளியும் குளத்தை நிரப்பியது வெடிப்புகளாலும், மீன்களின் கல்லறைகளாலும்.

ஒரு நொடி சலனம் பல கால நற்பெயரையும் கட்டமைப்பையும் தகர்த்து விடுகிறது.

Wednesday 17 September 2014

உறங்கும் எரிமலை..


மூச்சடக்கி இருக்கும் எல்லா எரிமலைகளும் குளிர்ந்து அமைதியாய் இருப்பதாய் அர்த்தமில்லை. அவற்றில் சில ஆயத்தமாகிக்கொண்டிருக்கவும் கூடும்.

கூரையில் பிடிமானம் கிட்டாது சறுக்கிய கால்கள் கைவிட, தரை தொடவிருந்த இறுதிக்கணத்தில் உதவிக்கு வந்தன அதுகாறும் மடக்கியே வைத்திருந்த இறக்கைகள்.

சொற்கள் காயப்படுத்தும், வன்மத்தை விதைக்குமெனில் அவ்வாறான சொற்களை வெளி விடாமல் ஆயுட்சிறைக்கு உட்படுத்துவதே மேல்.

வினையாக முடிந்தவையில் சில, விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கக்கூடும்.

பால்யத்தில் தொலைந்த நிலா திரும்பக்கிடைத்தது காட்ராக்ட் திரைக்கு அப்பால். இத்தனை நாள் எங்கிருந்தாயென்று இருவருமே கேட்டுக்கொள்ளவில்லை.

இறகின் நீர்த்துளியில் ஒளிந்திருக்கும் சூரியனை அறியாமல் சிறகு கோதிக்கொண்டிருக்கிறது குருவி.

எல்லாக்காதுகளும் மூடிக்கொள்ளும்போது மனது திறந்து கொள்கிறது சொற்களை வரவேற்க.

போனால்தான் என்ன? வராமலா போய்விடும்?

சிந்திய ஒரு சொட்டு நிலவினைப்பருக அடித்துக்கொண்டன அத்தனைக் கண்களும்.

செய்த தவறுகளையெல்லாம் மறந்து விடுவதாகச் சொல்லிக்கொள்பவர்களில் பலர் தாங்கள் செய்த தவறுகளை மட்டுமே மறக்கிறார்கள்.

Saturday 13 September 2014

வெற்றியைத்தேடி..



புறத்தால் அகம் விழிக்கிறது, அகத்தால் புறம் செயல் புகுகிறது.


பொரிந்து தள்ளுவதை விட புரிந்து கொள்ளும்படி பேசப்படுவதே கவனத்தில் நிற்கும்.

பயத்தை வெல்ல ஒரே வழி அதனுடன் தோழமை ஏற்படுத்திக்கொள்வதுதான்.

ஒட்டிக்கொண்டிருந்த கல்துணுக்குகளைத் தூசாய்த்தட்டி விட்டு விட்டு எழுந்து நின்றது சிற்பம்.

ஆர்வத்தாலோ ஆர்வக்கோளாறாலோ, எப்படி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் முழுமூச்சுடன் உழைக்க ஆரம்பிக்கும் ஒரு கட்டத்தில் இரு பாதைகளும் இரண்டறக்கலந்து வெற்றியை நோக்கிப் பயணத்தைத் தொடர்கின்றன.

பிறர் தோளில் சவாரி செய்யும் குழந்தைகள் கூட ஓர் நாளில் சுயமாய் நடக்கத்துவங்கி விடுகிறார்கள். சொகுசு கண்ட சோம்பேறிகளோ அதிலேயே உறைந்து விடுகிறார்கள்.

பிடிமானம் உறுதுணையாக இல்லாத இடமானால் அங்கே உறுதிக்கு இலக்கணமான நாணலாலும் தாக்குப்பிடிக்க இயலாது.

சொல்பவர்கள் இறைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். சொற்கள்தாம் கிடந்து அரைபடுகின்றன.

நம் அழுத்தங்களையும் சுமையையும் தாங்குமளவு பிறர் தோள்கள் வலுவுள்ளவையா என்பதைப் பெரும்பாலான சமயங்களில் நாம் அறிவதேயில்லை.

"என்னைத்தூக்கிக்கோ.." என்று கைகளை உயர்த்தும் குழந்தையை நோக்கி நீள்கின்றன ஒன்றுக்கும் மேற்பட்ட தாய்க்கரங்கள்.

Thursday 17 July 2014

குதூகல ஏமாற்றம்..


காயம் பட்டவர்களின் வலியை ஆயுதம் என்றும் அறிந்ததில்லை.

சோம்பல் தனியே வருவதில்லை, முயற்சியின்மை, ஒத்திப்போடுதல், சாக்குச் சொல்தல் போன்ற நண்பர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வருகிறது.

பயணிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கும் சேர்த்து கையசைத்து விடை கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.

தொலைந்து போனதைத் தேடித்தேடி கடைசியில், "போய்த்தொலைகிறது " என்று விட்டு விடுவதுதான் பக்குவப்படுவதன் அடுத்த படி.

மதிக்கப்படும் இடங்களில் ஒரு துளிக் கண்ணீரும் ஒரு துளி தண்ணீரும் விலை மதிப்பற்றவை.

ஏமாறுவதும் குதூகலமளிக்கிறது, ஏமாற்றுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்.

கசந்த காலத்திற்கு நிகழ்காலத்திலும் உயிரூட்டிக்கொண்டிருந்தால் எதிர்காலம் இனிக்காது.

உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமிடையே அரைபட நேரிடும் போது, நழுவிச் செல்லத்தெரிந்தவர்களே தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள்.

குறும்புத்தனத்துடன் முன்னே ஓடி, விசுவாசத்துடன் பின்தொடர்ந்து, பின் களைப்புற்ற நாய்க்குட்டியாய்க் காலடியில் குறுகியது நிழல்.

கட்டறுத்துக்கொண்டு ஓடும் எண்ணங்களை அடக்கியாள்வதும் , அவற்றால் துவைத்து எடுக்கப்படுவதுமாக மனித வாழ்வில் நடக்கிறது தினம் ஒரு ஜல்லிக்கட்டு.

Monday 14 July 2014

படிப்படியாய்..


நம்பிக்கையின்மையை நப்பாசை முந்திச்செல்ல முயல்கிறது, சில சமயங்களில் வென்றும் விடுகிறது.

அளவு கடந்த பயம் தேவையற்ற கற்பனையைத்தூண்டுகிறது, கற்பனை மேலும் பயத்தை வளர்த்தெடுக்கிறது.

ஓங்கி உயர்ந்து வரும் ஒரு கிளையை அரக்கினாலும், தளராமல் உடம்பெல்லாம் கிளைக்கும் தாவரத்திடமும் கற்றுக்கொள்ள இருக்கிறது ஒரு வாழ்க்கைப்பாடம்.

அறிவுரைகளோ, ஆலோசனையோ நம்பிக்கையையும் தைரியத்தையும் மேலும் வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர சிதைப்பதாக இருக்கக்கூடாது.

அவநம்பிக்கை புகுந்திருக்கும் மனதில் மருட்சி இருளாய் நிரம்பி விடுகிறது. ஞான அகலேற்றி அவற்றை விரட்டுவோம்.

கற்றுக்கொடுக்க உலகெங்கும் புல்பூண்டு வடிவில்கூட ஆசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள், ஆனால் பரீட்சையை மட்டும் விதி தன்னந்தனியே நடத்துகிறது.

நமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை அப்படியே ஏற்காமல், அந்தந்தக் காலகட்டத்திற்கும் அப்போதைய நிலைக்கும் நன்மை பயப்பவற்றை மட்டும் ஏற்றல் நலம்.

தீ, விவாதம், கடன், விரோதம் போன்றவைகளை மீதம் வைக்காமல் அப்போதைக்கப்போது முடித்துவிட வேண்டும்.

தலையைக் குனிந்து கொண்டு சென்று கொண்டிருந்த மந்தையில், நிமிர்ந்து நடந்த ஆடொன்று புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தது அந்த நொடிகளிலிருந்து.

எதிர்பாரா விதமாக அந்த நொடியில் நிகழ்ந்தவையாக நினைக்கப்பட்டவையெல்லாம் உண்மையில் அதற்கு முந்தைய நொடிகளிலிருந்தே நிகழ்வை ஆரம்பித்தவையாக இருக்கும்.

Tuesday 15 April 2014

ஜய.. ஜய.. ஜய..

பூக்கள் புதிது
புலர்காலை புதிது
இன்பம் புதிது
இனியவை புதிது
காற்று புதிது
கடப்பவை புதிது
வசந்தம் புதிது
வருடமும் புதிது
ஆனால்
அதே பழைய 'நான்'
தூக்கியெறிவோம்
புதிதாய்ப்பிறப்போம் 'நாம்'
எதிலும் ஜெயம் கண்டிடுவோம்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வால்: வாழ்த்துகளைச் சுமந்து கொண்டு யானைகளிரண்டும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அன்ன நடையிட்டு வந்ததால் அனைவருக்கும் ஒரு நாள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் :-)))

Thursday 10 April 2014

வனம் சுமந்த பழம்..

1.இளைப்பாறுதலை அடுத்த கட்டத்திற்கான திட்டமிடலுக்குப் பயன்படுத்துபவன் முன்னேறுகிறான், சோம்பியிருப்பவனோ புலம்பித்திரிகிறான்.

2.கூரையில் விழுந்த இறகுப்பந்தை, "எனது எந்த நண்பனுடையதாய் இது இருக்கக்கூடும்!" என்று திகைப்புடன் பார்க்கிறது புறா.

3. இறந்தபின்னும் பறக்கிறது ஒரு பறவை, இறகுப்பந்தாய்..

4.மாற்றிக்கொள்வதை விட திருத்திக்கொள்வது நல்லது, அதுவே நீடித்து நிற்கும்.

5.முன் தீர்மானங்களுடன் பேசுபவரிடம் விவாதிப்பதென்பது, ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளை ஓட்டி சக்தியை வீணாக்குவதற்குச் சமம்.

6.நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.

7.விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்வதில் ஆரம்பிப்பது இறுதியில் விதிமீறலுக்கு வழி கோல்கிறது.

8.நிதானமும் பொறுமையும் சஞ்சலத்துக்குட்படும் தருணங்களில்தான் அதிக மனவுறுதி தேவைப்படுகிறது. ஒரு நிமிட நிதானமின்மை ஒட்டுமொத்த காரியத்தையும் கெடுத்து விடும்.

9.விழுங்கிக் கடக்கும்போது நம்மைப் புடம் போட்டு விடுவதால் பெருங்கசப்பும், பெருந்துயரும் கூட நல்லதே.

10.தலைக்கு மேல் வட்டமிடும் பருந்தை அறியாது வனத்தைக் கர்ப்பம் சுமந்த பழத்தை உண்டு கொண்டிருக்கிறது குருவி. காடு பிழைக்குமோ.. பருந்து பிழைக்குமோ.

Saturday 5 April 2014

ஜீவ ஒளியும் குமிழ் முத்தமும்..

ஓட்டைப்பாத்திரமும் நிம்மதியற்ற மனமும் ஒருநாளும் நிறையாது,.. அவற்றை நிரந்தரமாய் அப்படியே விட்டு வைக்கும்வரை.

கூத்து நிறைவுற்றபின் ஒப்பனையைக் கலைக்கத்துவங்கினர் ஒவ்வொருவராக, அடுத்த திருவிழாவை எதிர்நோக்கியபடி முடங்கிக்கிடந்தது காவல்தெய்வம் சருகுகளைச் சுமந்தபடி.

வெறுமனே பேச்சளவில் திட்டமிடுபவனை விட திட்டத்தின்படி செயலைச் செய்து முடிப்பவனே பாராட்டத்தக்கவன்.

நடந்த தவறுக்காய் பிறரைக் குற்றம் சாட்டுமுன் ஒரு நிமிடம் நிதானித்து யோசிப்பது நல்லது, ஏனெனில் தவறுக்கான ஆரம்பம் நம்மிலிருந்தும் இருக்கலாம்.

நம் திறமையையும் வளர்ச்சியையும் மதிப்பிட எப்பொழுதும் பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்காமல், நமது முந்தைய மற்றும் தற்போதைய நிலைகளையும் அவ்வப்போது ஒப்பிட்டு நோக்குவோம்.

இரை கவ்வி நீராழம் பதுங்கிய மீன் பரிசளித்த குமிழ் முத்தத்தை, கன்னம் மாற்றிக் குதூகலிக்கிறது குழந்தை.

கூடு கட்ட சுள்ளிகளைப்பரிசளித்த மரத்திற்கு குஞ்சுமொழியில் தினம் நன்றி நவில்கிறது பறவை

அத்தனையையும் அழுதோ சிரித்தோ தீர்த்துவிட முடியுமென்றால் எத்தனை நன்றாக இருக்கும்!. முடியாதென்பதால்தான் செயலில் ஈடுபடுகிறோம்.

உண்மையின் உறுதியான குரலுக்கு முன் பொய்யின் ஆரவாரக்கூச்சல் தேய்ந்து முடிவில் ஓய்ந்து விடுகிறது.

இடைஞ்சல்கள் சூறாவளியாய்ச் சுழன்றடித்தாலும், மனதிலிருக்கும் வெல்ல வேண்டுமென்ற ஜீவஒளியை அணையாமல் பார்த்துக்கொண்டால் அதுவே நமக்கு வழிகாட்டி வெளிக்கொணர்ந்து விடும்.

Monday 10 March 2014

இன்னும் மீதமிருக்கும் பறவை..

வரமாகவும், சாபமாகவும், சிலருக்கு தப்பித்துக்கொள்ளும் யுக்தியாகவும் இருக்கிறது மறதி.

தான் சாப்பிடும்போது காக்கா , குருவி, ஆடு, மாடு, நிலா, கட்டாந்தரை என்று அத்தனை பேரின் பசியையும் ஆற்றிவிடுகிறது குழந்தை.

இலக்கை அடைவதற்கான கெடு நெருங்கும்போது ஏற்படும் பதற்றமான மனநிலையைக் கட்டுக்குள் வைப்போம். இல்லையெனில் தவறுகள் ஏற்படக்காரணமாகி இலக்கிற்கும் நமக்குமான இடைவெளியை அதுவே அதிகப்படுத்திவிடும்.

உறவுகளிலோ பொருட்களிலோ உண்டான விரிசலைச் சரி செய்து விட்டதாய் நினைத்துக் கொண்டாலும், நினைவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஓர் ஓரத்தில்.

இன்னும் வானை அளந்து கொண்டிருக்கிறது முன்னெப்போதோ பறவையாக இருந்த ஒரு சிறகு. 

காலை வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக்கொண்டு, மொத்தமாய் மூழ்கடிக்கும் புதைகுழி போன்றது சுயபரிதாபம்.

துளியும் முன்னேற்பாடின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவதென்பது, நட்சத்திரங்களின் சூட்டில் குளிர் காய்வதற்கு ஒப்பானது. 

சரியான நேரம் வாய்த்தும், செய்து முடிக்காமல் காலம் தாழ்த்த வைக்கும் சோம்பேறித்தனமே வெற்றியின் முதல் எதிரி. 

வேர்களின் உழைப்பிற்கான பரிசை கிளைகளும் பகிர்ந்து கொள்கின்றன. 

தலையிலோ கன்னத்திலோ வைத்துக்கொண்டு இடிந்து உட்காரப்படைக்கப்படவில்லை கைகள். அவற்றுக்கான ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் மீதமிருக்கின்றன. 

Sunday 2 March 2014

நீட்சி..

வென்றவன் முதலில் இலக்கைத் தீர்மானிக்கிறான், அதற்கான திட்டத்தை உருவாக்குகிறான், அதன்பின் அயராது உழைத்து இலக்கை அடைகிறான். பார்வையாளர்களோ 'அதிர்ஷ்டம் 'என்ற ஒற்றைச்சொல்லில் அத்தனையையும் கடந்து செல்கின்றனர்..

கொண்ட நம்பிக்கையை இழத்தலென்பது, கட்டடத்தின் அஸ்திவாரத்திலிருந்து ஒரு கல்லை உருவுவதற்குச் சமம்.

ஒரே செயலைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்ளத்தேவையில்லை. இலக்கை அடைவதற்கான வெவ்வேறு பாதைகளே அவை.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

'எல்லாம் முடிந்தது'.. என்று இடிந்து உட்கார்பவர்கள் கண்ணுக்குத்தெரியாத நீட்சியினை உணரத்தவறி விடுகிறார்கள்.

மாற்றம் மனதின் ஆழத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், வெறும் வாய்வார்த்தைகளில் அல்ல.

திறமை, குறிக்கோள் எனும் இரு கரைகளையும் இணைக்கும் பாலமாக நேர்ச்சிந்தனைகளுடன் கூடிய முயற்சி விளங்குகிறது.

எல்லா வகையிலும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகப் பிறரைச் சிறுமைப்படுத்துதல் பெருந்தவறு.

பாராட்டுகளையும் புகழையும் எதிர்பார்த்து வானவில் பூப்பதில்லை, கடமையை விரும்பிச் செய்வோம் மற்றதெல்லாம் தானே தேடி வரும்.

புரிந்து கொள்ளலுடன் கூடிய அன்பு, உறவுகளுக்கிடையே நிம்மதியையும் நெருக்கத்தையும் கொண்டு வருகிறது.

வால்: சிஸ்டத்தை மகரும் லேப்டாப்பை மகளும் பிடுங்கிக்கொண்டதால் (பரீட்சை வருதுப்பா..) அடிக்கடி பதிவிடவோ நட்புகளின் இடுகைகளுக்குப் பின்னூட்டமிடவோ இயலவில்லை. மொபைல் உதவியால் பேஸ்புக்கில் மட்டுமே நடமாட்டம். ஆளைக்காணோம் என்று தேடுபவர்கள் மன்னித்து 'அங்கே' கண்டடைவீர்களாக :-))

Tuesday 18 February 2014

"சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது" - மதிப்புரைக்கு நன்றி தேனக்கா :-))

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு 'தேனக்கா' என்று நான் அன்புடன் அழைக்கும் நம் தேனம்மை லக்ஷ்மணன்  அளித்த மதிப்புரை.

குழந்தைகளைக் கொஞ்சியபின்னும் நம்மேல் ஒரு குழந்தை வாசம் அடித்துக் கொண்டேயிருக்கும். அது நம் வீட்டுக் குழந்தையாயினும் சரி. பக்கத்து வீட்டுக் குழந்தையாயினும் சரி. ஒரு குட்டிப் பயலின் குட்டிப் பெண்ணின் குழந்தமை வாசம் பட்டு நம் முந்தானையும் கழுத்தும் தோள்பட்டையும் திரும்பும்போதும் அசையும்போது காற்றில் ஒரு குழந்தைமை வாசத்தைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கும். அதே உணர்வுதான் ஏற்பட்டது சாந்தி மாரியப்பனின் சிறது விரிந்ததைப் படித்ததும்.

மழலைத் தூதுவர்களை ரசிப்பதா. தென்றல் தீட்டும் வானவில்லில் வண்ணங்களை பட்டாம்பூச்சி இறகுகளில் தொட்டுப் பார்ப்பதா, தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் பறவையைப் பிடிப்பதா, குழந்தைகள் பறவைகளாகி இங்குமங்கும் நம் எண்ணம் கொறிப்பதும், பறவைகள் குழந்தைகளைப் போன்று தத்தித் தத்திச் சிறகடிப்பதும் நிகழ்கிறது கவிதைத் தொகுதி வாசிக்கும்போது.
”அந்த இரவில்’  மிகவும் நெகிழ வைத்த கவிதை. 

உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த் தருகிறார்
வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை
என் தகப்பன்.

’’பரஸ்பரம் கடவுளும் குடிகாரனும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து விடமாட்டார்களா என எண்ணத் தூண்டிய வித்யாசமான கவிதைப் பார்வை. 

வென்றுவிட்டதாய்ப் 
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான  யுத்தங்கள்.

ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுக்குப் போகும்போது நினைக்கக்கூடியதுதான் ”வீடென்பது.”

அன்னியோன்யமாய் இருந்து வந்து
அடுத்த தலைமுறையின் முடிசூட்டலுக்குப் பின்
உரித்தெரியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப்பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு. 

இந்தத் தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்த கவிதை ’எவரேனும்’

தலைசாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின் கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும் 
யாரேனும் இருக்கக் கூடுமோ..

குடும்பம், குழந்தைகள் இவற்றைச் சுற்றிவரும் சந்திரனாயும் சூரியனாயும் இருக்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குக் கிடைத்த சொற்ப வெளியில் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை வெற்றியைப் பிரகடனப் படுத்துகின்றன. 

வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன சாந்தி மாரியப்பனின் கவிதைகளில். சில சமயம் நம்மைக் கையகப்படுத்த மாட்டாரா என்ற ஏக்கத்தோடு சில காத்தும் கிடக்கின்றன. பொருத்தமான வார்த்தைகளில் பொருந்த வசீகரமாகச் சொல்லிச் செல்லும்போது அடுத்து நமக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என மிச்சமும் பின் தொடர்கின்றன. மொத்ததில் மிகவும் பாந்தமான சொற்களில் மென்மையான ஒரு கவிதைத் தொகுதியைப் படித்த சந்தோஷம் ஏற்பட்டது. 

கவிதை வாசிப்பது என்பதும் தானே உணரவேண்டிய ஒரு அனுபவம். உணர்ந்து பாருங்கள்.

 கிடைக்குமிடம்.:-
அகநாழிகை பதிப்பகம். சென்னை.

விலை ரூ.  80. 

இணையத்தில் வாங்க. 


வாசித்தமைக்கும் அருமையான வார்த்தைகளுக்கும் நன்றி தேனக்கா..

Saturday 15 February 2014

கடப்போம்.. நடப்போம்..

வெறுமனே கடந்து சென்றதாய் நினைத்துக்கொள்ளும் அந்த நாளின் ஏதோவொரு நொடித்துளியில் ஒளிந்திருக்கக்கூடும் மிக இனிய நினைவொன்று.

பொறுப்புகளையும் முயற்சியையும் தட்டிக்கழிப்பவர்களை வெற்றி தேவதையும் தட்டிக்கழித்து விடுகிறாள்.

கரைந்து விட்ட சூரியனுக்காக வருத்தப்படுபவர்களை ஆறுதல் படுத்தவென்று உருக்கொண்டெழுகிறது நிலா.

ஒருமுறை கூட விழாமலிருப்பதிலல்ல, விழும் ஒவ்வொரு முறையும் மேலும் உறுதியாக எழுவதில்தான் இருக்கிறது பெருஞ்சிறப்பு.

பூவின் வாசனைக்கு எளிதில் மயங்கிவிடும் மெல்லிய மனமே முட்களாலும் எளிதில் காயப்பட்டு விடுகிறது, ஆகவே உறுதியை வளர்த்துக்கொள்வோம்.

எல்லாவற்றையும் கடந்து நடப்போம் மென்மேலும் உறுதியாக அடியெடுத்து வைத்தபடி.

தகுந்த காலம், வாய்ப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் விட முக்கியமானது, எப்படியாவது செய்து முடிக்க வேண்டுமென்ற தன்னார்வமே.

பின்விளைவுகளையும் தீர அலசி ஆராய்ந்தபின் ஆரம்பிக்கும் செயல்கள் பெரும்பாலும் தோற்றுப்போவதில்லை.

சலனமுற்ற மனதில் தீர்வுகளும் நிலைபெறாமல் தளும்பிக்கொண்டேதான் இருக்கும்.

மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டுமாயின், முதலில் அதை மற்றவர்க்குக் கொடுக்கப் பழக வேண்டும்.

Tuesday 11 February 2014

"நிழற்படக் கவிதைகள்".. நன்றி முனைவர் அண்ணாகண்ணன் :-)

இலக்கிய உலகில் திரு. அண்ணா கண்ணனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருப்பினும் பூக்கடைக்கு ஒரு அறிமுகம் :-))

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

இனி,
நிழற்படக் கவிதைகள் - முனைவர் அண்ணாகண்ணன்

கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது, கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.

மாநகரம், எத்தனையோ பழிகளையும் வசைகளையும் சுமந்துகொண்டு நிற்கிறது. இங்குள்ள நெருக்கடிகள், துரத்தல்கள், பற்றாக்குறைகள், சிக்கல்கள், ஏமாற்றங்கள்.... அனைத்தும் பல்வேறு கோணங்களில் பல்லோரால் பல்லாண்டுக் காலமாகப் பதிவாகி வருகின்றன. இந்தப் பதிவுகளின் விளைவுகள் என்ன என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். மாநகரச் சூழல் எவ்வளவு வறட்சிகரமாக இருப்பினும் இதனால், இங்கு வாழும் படைப்பாளர்களின் படைப்பூக்கமும் படைப்பாக்கமும் வறண்டுவிடவில்லை. இது, எதிர்மறைக்குள்ளும் ஒரு நேர்மறை அம்சம்.

மும்பை மாநகரில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், மாநகரின் அழுத்தங்களுக்கு இடையிலும் தன்னை ஒரு படைப்பாளியாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். இவர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம்... எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருகிறார். வல்லமை மின்னிதழின் ஃபிளிக்கர் படக் குழுமத்தையும் இவரே நிர்வகித்து வருகிறார். இவருடைய நிழற்படங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  அவை, தனித்துவம் வாய்ந்தவை. புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடுகள்... எனப் பலவும் இவரின் நிழற்படங்களில் மிளிருகின்றன.

நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் சூரியச் சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளை, கொத்துக் கொத்தாய்ப் பூத்த பறவைகளின் வாசத்தில் கிறுகிறுத்து நின்ற மாமரம், ஏகாந்த வெளியில் ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்கள், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பறவை.... எனப் பலவும் நேரடியாகக் காணும் உணர்வை நம்முள் ஏற்படுத்துகின்றன. தேய்பிறைப் புன்னகை என்ற சொல்லாடல், நேர்த்தியான காட்சிப் பதிவு.

குழந்தைகள், மன அழுத்தத்திலிருந்து நம்மைக் காத்து வருகிறார்கள். எவ்வளவு சிக்கல்கள் இருப்பினும் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, மனம் லேசாகிவிடுகிறது. குழந்தைகளைக் கருவாகக் கொண்ட இவரது கவிதைகளை நான் பெரிதும் ரசித்தேன். அறிதுயில் என்ற கவிதை, மிக அழகு. ரயிலோடும் வீதிகள், வாசனையாய் ஒரு வானவில், மழலை நிலா... உள்ளிட்ட பல கவிதைகளில் குழந்தைமையை இவர் கொண்டாடியிருக்கிறார்.

சிறைப்படும் 
ஒவ்வொரு தருணத்திலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்

என்ற வரிகளில்தான் எவ்வளவு உற்சாகம்!

கதைக் கவிதைகளும் இவருக்கு இயல்பாக வருகின்றன. தாத்தா இறந்த பிறகு திண்ணைக்கு இடம்பெயரும் பாட்டியும் பொறந்த வீட்டுச் சொத்தில் பங்கு கேட்டு மனைவியை விரட்டுகையில் நிகழும் திருப்பமும் நிகழ்காலச் சிக்கல்களின் சூடான பதிவுகள். 

வென்றுவிட்டதாய்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்

என அவர் குறிப்பிடுவது, வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடங்களில் ஒன்றாகும்.

இந்தக் கவிதைத் தொகுப்பு, கலவையான உணர்வுகளுடன், கதம்பமாக மணம் வீசுகிறது. சாந்தி மாரியப்பன், ஏதோ பெயருக்கும் எண்ணிக்கைக்கும் எழுதாமல், உள் உணர்வுக்கும் சமூகப் பயனுக்குமாக எழுதி வருகிறார். எதிர்காலத்தில் இவரது மொழி,  இன்னும் கூர்மை பெறும். இவரால் இன்னும் சிறப்பான படைப்புகளை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது கவிதைப் பயணம் சிறப்புடன் தொடர, எனது நல்வாழ்த்துகள். இவரது வல்லமையால் இந்த மாநிலம் பயனுறட்டும்.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிக் கௌரவித்த முனைவர் அண்ணா கண்ணனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்..

கவிதைத்தொகுப்பைத் தபாலில் வாங்க..

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110

aganazhigai@gmail.com

Thursday 6 February 2014

சாரல் துளிகள்

அனுமார் வாலில் கட்டிய மணியாய் சப்தித்துக்கொண்டிருக்கிறது, வாலின் நுனியில் நின்று கொண்டிருக்கும் வாகனமொன்று..

ஊம்.. ஊம் என்று மிரட்டுகிறது காற்று, ஆம்.. ஆம்.. என்று ஆமோதிக்கிறது கடல். பயப்படாத ஆட்டுக்குட்டியாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறது சிறுபடகு.

இப்பக்கமும் அப்பக்கமும் தாவாமல், நெடுக நடந்து சென்றது பூனை.. மதில் நுனியில் பூனைக்குட்டி.

அத்தனை விதமான மருந்துகளாலும் ஆயுதங்களாலும் துரத்தப்பட்ட கொசு சொன்னது.. "நாராயணா.. இந்த மனுசங்க தொல்லை தாங்கலைடா. அவ்வ்வ்வ்வ்வ்.."

வரப்போகும் வெயில் காலத்திற்குப் பூத்துக்குலுங்கிக் கட்டியம் கூறுகின்றன மாமரங்கள்.

ஸ்வெட்டரைப் போட்டுக்கொள்ளவா? அல்லது மழைக்கோட்டைப் போட்டுக்கொள்ளவா? என்று சற்று நேரம் மும்பை மக்களைக் குழப்பி விட்டுச் சென்று விட்டது பருவம் தப்பி வந்த மழை..

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??..

தவளையை விழுங்க வரும் பாம்பாய் சிவப்பு விளக்கு மின்னும் நாற்சந்தியில் மெதுமெதுவே ஊர்ந்து பாதுகாப்பான தொலைவைக்கடந்தபின், சிறுத்தையாய்த் தலைதெறிக்க ஓடுகிறது வாகனமொன்று..

புகைத்துகள்களில் கரி குளித்து, மேலும் கருமையழகுடன் மினுமினுக்கின்றன நகரத்துக்காக்கைகள்..

மங்கி குல்லா போட்ட குட்டிப்பாப்பாக்களுக்கென்று தனியழகு வந்து விடுகிறது.

டிஸ்கி: சாரல் துளிகள் மட்டுமன்றி அவ்வப்போது ஃபேஸ்புக்கில் மொழிந்தவையும் இனிமேல் இவ்வாறு பகிரப்படும் என்று பகிரங்க மிரட்டல் விடுக்கப்படுகிறது :-)))))

Tuesday 28 January 2014

"சிறகு விரிந்தது" புத்தக வெளியீட்டு விழா..

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். கூடவே ராமலக்ஷ்மியின் “இலைகள் பழுக்காத உலகம்” புத்தகத்திற்கான வெளியீடும் நடந்தது.

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில், பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா..
முகநூலில் தினமும் வெளியாகும் புத்தக வெளியீட்டு விழா பகிர்வுகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம், சென்னையில் வசிக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கமாகவும் இருந்தது. போகட்டும்.. பிழைத்துக்கிடந்தால் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் :-)

தன்னுடைய படைப்புகளைப் புத்தகமாகப் பார்ப்பதென்பது, அதுவும் முதல் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில்.. அதை விடப் பேரின்பம் ஒரு எழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களினிடையே என்னுடைய புத்தகமும் தென்பட்டதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத உணர்வு என்னை ஆட்டிப்படைத்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் புத்தகங்களைப் பதிப்பித்துப் புத்தகத்திருவிழாவிற்குக் கொண்டு வந்ததோடு, என்னைப்போல் தூரதேசத்தில் இருப்பவர்களுக்காக புத்தக வெளியீட்டையும் நடத்திக்கொடுத்த பொன் வாசுதேவனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

என்னுடைய கவிதைத்தொகுப்பும் இங்கே கிடைக்க ஆரம்பித்து விட்டது. 

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))

Friday 3 January 2014

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். 
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன். 
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.

அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails