Thursday 17 July 2014

குதூகல ஏமாற்றம்..


காயம் பட்டவர்களின் வலியை ஆயுதம் என்றும் அறிந்ததில்லை.

சோம்பல் தனியே வருவதில்லை, முயற்சியின்மை, ஒத்திப்போடுதல், சாக்குச் சொல்தல் போன்ற நண்பர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வருகிறது.

பயணிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கும் சேர்த்து கையசைத்து விடை கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.

தொலைந்து போனதைத் தேடித்தேடி கடைசியில், "போய்த்தொலைகிறது " என்று விட்டு விடுவதுதான் பக்குவப்படுவதன் அடுத்த படி.

மதிக்கப்படும் இடங்களில் ஒரு துளிக் கண்ணீரும் ஒரு துளி தண்ணீரும் விலை மதிப்பற்றவை.

ஏமாறுவதும் குதூகலமளிக்கிறது, ஏமாற்றுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்.

கசந்த காலத்திற்கு நிகழ்காலத்திலும் உயிரூட்டிக்கொண்டிருந்தால் எதிர்காலம் இனிக்காது.

உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமிடையே அரைபட நேரிடும் போது, நழுவிச் செல்லத்தெரிந்தவர்களே தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள்.

குறும்புத்தனத்துடன் முன்னே ஓடி, விசுவாசத்துடன் பின்தொடர்ந்து, பின் களைப்புற்ற நாய்க்குட்டியாய்க் காலடியில் குறுகியது நிழல்.

கட்டறுத்துக்கொண்டு ஓடும் எண்ணங்களை அடக்கியாள்வதும் , அவற்றால் துவைத்து எடுக்கப்படுவதுமாக மனித வாழ்வில் நடக்கிறது தினம் ஒரு ஜல்லிக்கட்டு.

Monday 14 July 2014

படிப்படியாய்..


நம்பிக்கையின்மையை நப்பாசை முந்திச்செல்ல முயல்கிறது, சில சமயங்களில் வென்றும் விடுகிறது.

அளவு கடந்த பயம் தேவையற்ற கற்பனையைத்தூண்டுகிறது, கற்பனை மேலும் பயத்தை வளர்த்தெடுக்கிறது.

ஓங்கி உயர்ந்து வரும் ஒரு கிளையை அரக்கினாலும், தளராமல் உடம்பெல்லாம் கிளைக்கும் தாவரத்திடமும் கற்றுக்கொள்ள இருக்கிறது ஒரு வாழ்க்கைப்பாடம்.

அறிவுரைகளோ, ஆலோசனையோ நம்பிக்கையையும் தைரியத்தையும் மேலும் வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர சிதைப்பதாக இருக்கக்கூடாது.

அவநம்பிக்கை புகுந்திருக்கும் மனதில் மருட்சி இருளாய் நிரம்பி விடுகிறது. ஞான அகலேற்றி அவற்றை விரட்டுவோம்.

கற்றுக்கொடுக்க உலகெங்கும் புல்பூண்டு வடிவில்கூட ஆசிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள், ஆனால் பரீட்சையை மட்டும் விதி தன்னந்தனியே நடத்துகிறது.

நமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை அப்படியே ஏற்காமல், அந்தந்தக் காலகட்டத்திற்கும் அப்போதைய நிலைக்கும் நன்மை பயப்பவற்றை மட்டும் ஏற்றல் நலம்.

தீ, விவாதம், கடன், விரோதம் போன்றவைகளை மீதம் வைக்காமல் அப்போதைக்கப்போது முடித்துவிட வேண்டும்.

தலையைக் குனிந்து கொண்டு சென்று கொண்டிருந்த மந்தையில், நிமிர்ந்து நடந்த ஆடொன்று புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தது அந்த நொடிகளிலிருந்து.

எதிர்பாரா விதமாக அந்த நொடியில் நிகழ்ந்தவையாக நினைக்கப்பட்டவையெல்லாம் உண்மையில் அதற்கு முந்தைய நொடிகளிலிருந்தே நிகழ்வை ஆரம்பித்தவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails