Saturday 22 September 2018

கண்பதி - 2018

“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”


எங்கள் வீட்டுப்பிள்ளையார்
இவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பிள்ளையார்
என வேண்டி விரும்பி அழைக்கும் மக்களின் அழைப்பையேற்று பிள்ளையார் எங்களூருக்கு வந்து கொலுவிருந்து அருள் பாலித்து வருகிறார். வழக்கம்போல் பத்து நாட்கள் இருந்து விட்டு "நா போயிட்டு வரேன்" என பத்தாம் நாளான அனந்த சதுர்த்தசியன்றி விடைபெற்றுக்கொண்டு விடுவார். ஆரத்தி பூஜை, பஜனை என கோலாகலமாக இருந்து விட்டு அவர் விடைபெற்றுச் சென்றதும் சட்டென்று ஒரு சூன்யம் மனதைச் சூழ்ந்து கொண்டு அரிக்கத்தொடங்கிவிடுகிறது. நவராத்திரிக்கு அம்பாள் வந்து கொலுவிருக்கும் வரைக்கும் இதே சூன்யம்தான் மனதை ஆளப்போகிறது. 

சுற்றுப்புறச் சூழலைக்காக்கும் பொருட்டு மஹாராஷ்ட்ராவில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மக்கர் எனப்படும் தெர்மோகூல் பொருட்களும் அடங்குவதால் பிள்ளையாருக்கான தெர்மோகூல் மண்டபங்கள் இவ்வருடம் எங்குமே காணக்கிடைக்கவில்லை. மூங்கில், மற்றும் துணிகளைக்கொண்டு செய்யப்பட்ட அலங்காரங்களே எங்கும் காணக்கிடைத்தன. கல்யாணிலிருக்கும் "பாயி கா புத்லா" பகுதியில் மூங்கில் கம்புகளால் மோதகம் மற்றும் தேங்காய் வடிவில், சட்டம் அமைக்கப்பட்டு அதில் தேங்காய் நாரைப் பொதிந்து உருவம் கொடுக்கப்பட்ட மண்டபங்கள் நிறையச் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வண்ணமே கைகளால் செய்யப்பட்டு நீர் வண்ணமடிக்கப்பட்டிருந்த பிள்ளையார்களும் இவ்வருடம் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்போதாவது சூழலைப்பற்றிய அக்கறை வந்ததே எனத்தோன்றியது நிஜம்.


வழக்கப்படி எங்கள் வீட்டுக்கும் பிள்ளையார் வந்த, ஐந்து நாட்கள் கொலுவிருந்து, ஐந்தாம் நாளான "கௌரி கணபதி" தினத்தன்று விடைபெற்றுச் சென்றார். பார்வதியின் இன்னொரு பெயர்தான் கௌரி. பிள்ளையார் சதுர்த்திக்கு முன் தினம் இவரை சில வீடுகளில் இருத்தி பூஜை செய்வார்கள். பின்னர் சதுர்த்தி ஆரம்பித்த ஐந்தாம் தினத்தன்று அனைவருக்கும், முக்கியமாக சுமங்கலிகளுக்கு விருந்திட்டு, தாம்பூலமளித்து பின்னர் கௌரியையும் பிள்ளையாரையும் விசர்ஜன் செய்வர். சில வீடுகளில் பிள்ளையாரை இருத்தாமல் கௌரியை மட்டும் வைத்துப் பூஜை செய்வதுமுண்டு. 


எங்கள் பிள்ளையாரையும் யதாஸ்தானம் அனுப்பி, கையில் கட்டுச்சோறு கொடுத்து, விசர்ஜன் செய்து விட்டு வந்தோம். நிர்மால்யம் என அழைக்கப்படும் களைந்து வைத்த பூஜைப்பொருட்கள் ஒரு பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், சில சமயம் அது நிரம்பி வழிந்து பக்தர்களின் காலில் மிதிபடுவது மனக்கஷ்டம் கொடுக்கக்கூடிய காட்சி. இம்முறை ஒரு பெரிய ட்ரக்கைக் கொண்டு வந்து நிறுத்தி, ஆட்கள் அங்கே நின்று அதில், நிர்மால்யத்தைச் சேகரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. நல்ல விஷயம்தான்.


வழக்கமாக, சதுர்த்தி ஆரம்பித்த பின்னும் லேசான மழை இருந்து அனந்த சதுர்த்தசிக்குப் பின் நின்று விடும். மழையில் நனைந்து கொண்டே ஆரத்தி செய்த அனுபவங்களும் மும்பைக்கர்களுக்கு உண்டு. ஆனால் ஏனோ இவ்வருடம் பத்து நாட்களில் மழையே இல்லாமல் இருந்தது. இவ்வருடம் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் பிள்ளையார்தான் காக்க வேண்டும். 

கட்டுச்சோறும் கையுமாக.
கிளம்பிச்சென்ற பிள்ளையாரின் இனிய ஞாபகங்களோடும் வரவிருக்கும் நவராத்திரியைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடும் இப்பண்டிகைக்காலம் இனிதே ஆரம்பித்திருக்கிறது. வரும் காலமெல்லாம் எல்லோருக்கும் எல்லா நலனும் விளைய இறைவன் அருள்வானாக.

"கணபதி பப்பா மோர்யா"

வால்: ஒன்றிரண்டு படங்களைத்தவிர மற்ற அனைத்தும் மொபைலில் க்ளிக்கியவை. இன்னுமிருக்கும் படங்கள் வரவிருக்கும் இடுகையில்.

Thursday 20 September 2018

புட்டுப்புட்டு வைத்தாயிற்று..

பிட்டுக்கு மண் சுமந்து அந்த ஈசன் பிரம்படியே பட்டிருக்கிறானென்றால் இதன் சுவைக்கு அளவுகோலும் வேண்டுமோ?!. கேரளாவைத் தாயகமாகக்கொண்ட இவ்வுணவு கேரளாவின் தங்கையான கன்யாகுமரி மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், தூரத்துச் சொந்தங்களான ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகாவிலும் அதிகம் சமைக்கப்படுகிறது. முன்பெல்லாம் கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் காலையுணவாக புட்டு சாப்பிடப்பட்டது. மொத்தமாக மாவை இடித்து பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டால் நினைத்த போதுகளிலெல்லாம் செய்து கொள்ளலாம். பச்சைப்பயிறு என்றழைக்கப்படும் சிறுபயிறை மட்டும் அவ்வப்போது ஊறவைத்து அவித்துத் தாளித்துக்கொண்டால் போதுமானது. தவிரவும் தென்னந்தோப்புகள் மலிந்த இவ்விடங்களில் தேங்காய்க்குப் பஞ்சமா என்ன?
எங்களூர் வழக்கில் புட்டுத்தோண்டி என்றும், உலக வழக்கில் புட்டுக்குடம் என்றும் அழைக்கப்படும், புட்டு செய்யப்பயன்படும் பாத்திரம் முன்பெல்லாம் பித்தளை அல்லது தாமிரத்தில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது. சின்னப்பானை போன்ற கீழ்ப்பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதன் வாய்ப்பகுதியில் புட்டுக்குழல் வைக்கப்பட்டு ஆவியில் புட்டு வேகும். குழல் சரியானபடி பொருந்துவதற்காக அப்பகுதியில் துணி சுற்றி வைக்கும் வழக்கமும் இருந்தது. இப்பொழுது எவர்சில்வரிலும் கிடைக்க ஆரம்பித்திருக்கும் புட்டுக்குடம் மற்றும் குழலின் வடிவமைப்பும் நவீனமடைந்திருக்கிறது. டிஜிட்டல் உலகிற்கேற்றவாறு மேம்பட வேண்டும் இல்லையோ?! தண்ணீர் கொதிக்கும் கீழ்ப்பாத்திரமும் அதன் வாய்ப்பகுதியில் வைக்கப்படும் குழல் போன்ற பாத்திரமுமாக இரண்டு பகுதிகளைக்கொண்ட புட்டுக்குடத்தைத் தவிர இப்பொழுதெல்லாம் புட்டுக்குழல் மட்டுமேயும் கிடைக்கிறது. இதை குக்கரின் வெயிட் வால்வில் பொருத்தி உபயோகிக்கலாம். இதைத்தவிரவும் சிரட்டை என்றழைக்கப்படும் கொட்டாங்கச்சி வடிவிலான கிண்ணமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் சிறிய அளவில் புட்டு அவித்துக்கொள்ளலாம்.
(படக்கொடை- இணையம்)
பக்கவாத்தியங்களின்றி மெயின் கச்சேரி சோபிக்காது. அவ்வண்ணமே புட்டுக்கும் சில பக்கவுணவுகள் தேவை. புட்டும் பயறும் என்பது எங்களூர் வழக்கு. இங்கே பயறு என்பது சிறுபயிறைக்குறிக்கும். பொதுவாகவே கேரள மற்றும் கன்யாகுமரி மாவட்ட உணவுகளில் சிறுபயிறு மற்றும் பயத்தபருப்பு அதிகமும் உபயோகப்படுவது கண்கூடு. சிறுபயிறை நன்கு ஊற வைத்து உப்பிட்டு வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். இரண்டு மூன்று வற்றல் மிளகாய்களைப் பிய்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மற்றும் வற்றல் மிளகாய்களைப் போட்டு மிளகாய் வறுபட்டதும் அவித்த பயறைப்போட்டுக் கிளறவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி தேங்காய்த்துருவலையும் இட்டுக் கிளறி இறக்கவும். பயறு ரெடி. மலையாளப்பப்படம் கிடைத்தால் அதையும் பொரித்து வைத்துக்கொள்ளவும். சாதாரணப்பப்படம் கிடைத்தால் அதுவும் நன்றே.

புட்டு சாதாரண அல்லது சிவப்புப் பச்சையரிசியில்தான் தயார் செய்யப்படுகிறது. கல் மண் உமி நீக்கி சுத்தம் செய்த பச்சையரிசியை தண்ணீரிலிட்டு நன்றாகக் கழுவி அரிவட்டி என்றழைக்கப்படும் அரிபெட்டியிலிட்டு நீரை வடிய விடவும். ஊற விட வேண்டாம். முன்பெல்லாம் பனை நார் அல்லது ஓலையால் செய்யப்பட்ட கெட்டியான அரிபெட்டிகள் கிடைக்கும். இப்போது அது அரிதாகி எவர்சில்வரிலான சல்லடைப்பாத்திரங்களும் ப்ளாஸ்டிக்கிலான சிறுகண்ணுடைய கூடைகளும் கிடைக்கின்றன. அவற்றையும் உபயோகித்துக்கொள்ளலாம். தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு துணியில் பரப்பி நன்கு காய்ந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மிக்ஸியிலிட்டு கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் அளவு அரிசியைப் பொடித்ததும் பெரிய கண் கொண்ட சல்லடையிலிட்டு சலித்துக்கொள்ளவும். கிடைக்கும் மாவு ரவை பதத்தில் இருப்பது நலம். எல்லா அரிசியையும் பொடித்து மாவாக்கியதும், பெரிய வாணலியிலிட்டு மிதமான தீயில் வறுக்கவும். மாவு பொலபொலவென உதிரியாகி மணக்க ஆரம்பிக்கும். அதிலிருந்து சிறு சிட்டிகையளவு எடுத்து கோலம் போடுவது போல் இழையாக இடவும். சுலபமாக இட முடிந்தால் அதுவே சரியான பக்குவம். இப்போது மாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். இவ்வளவு மெனக்கெட நேரமில்லையெனில் ரெடிமேடாகக் கிடைக்கும் புட்டு மாவை வாங்கிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் ராகி, கேழ்வரகு, கப்பை, போன்றவற்றிலும் புட்டு மாவுகள் கிடைக்கின்றன. தவிரவும் சேமியா, கோதுமை மாவு, கோதுமை ரவை, பாம்பே ரவை போன்றவற்றிலும் புட்டு செய்யலாம். எந்த மாவாயினும் மணம் வரும் வரை வறுத்தே பயன்படுத்த வேண்டும்.

ஒன்றரைக்கப் புட்டு மாவை எடுத்துக்கொண்டு அதில் சிட்டிகை உப்பிட்டு நன்கு விரவிக்கொள்ளவும். பின் கொஞ்சங்கொஞ்சமாக தண்ணீரைத் தெளித்து பிசிறிக்கொண்டே இருக்க வேண்டும். தெளித்த தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாவு மறுபடியும் வறளும். இச்சமயம் மறுபடியும் தண்ணீர் தெளித்துப்பிசிற வேண்டும். மாவில் கட்டிகள் தென்பட்டால் விரல்களாலேயே உதிர்த்துக்கொள்ளவும். மாவைக் கைகளில் எடுத்து இறுக்கிப் பிடித்தால் கொழுக்கட்டை போல் பிடிபடவும், விட்டால் உதிரவும் வேண்டும். இப்பக்குவம் வரும் வரை பிசிறவும். தண்ணீர் அதிகமானது போல் தோன்றினால் லேசாக மாவைத் தூவிச் சேர்த்துப் பிசிறவும். ரெடிமேட் மாவுகளானால் ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் தானாகவே உலர்ந்து விடுகிறது. தேங்காயைத் துண்டுகளின்றி பூவாகத் துருவி வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது, புட்டுக்குழலினுள் அதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய சல்லடைத்தட்டையிட்டு அதன் மேல் ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலை இட்டு அதன் மேல் புட்டு மாவை முக்கால் கப் அளவில் இடவும். பின் மறுபடியும் தேங்காய்த்துருவலையிடவும். இப்படியே குழல் நிரம்பும் வரை மாவையும் தேங்காயையும் அடுக்குகளாக இட்டு மேலாக துருவலையிட்டுப் பொதிந்து குழலை மூடியால் மூடி, தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும் புட்டுக்குடம் அல்லது குக்கரின் வால்வில் பொருத்தவும். புட்டுக்குழலின் மூடியிலிருக்கும் துளைகள் வழியே ஆவி வெளியாக ஆரம்பித்து, புட்டு மணமும் வந்தால் புட்டு வெந்து விட்டது என்றறிக. பின் அதை மெல்ல இறக்கி, காத்துக்கொண்டிருக்கும் தட்டு அல்லது வாழையிலையில் பக்கவாட்டில் சரித்து, கொடுக்கப்பட்டிருக்கும் கம்பியைக்கொண்டு கீழ்ப்பகுதியிலிருக்கும் துளையின் வழியே சல்லடைத்தட்டைத் தள்ள வேண்டும். புட்டு மெதுவாக பிதுங்கி வெளியே வரும். குழலை நேரே நிறுத்தி ராக்கெட் போல் புட்டை நிறுத்துவது உங்கள் சாமர்த்தியம்.
 நவீன புட்டுக்குழல்

ஒரு தட்டில் புட்டு, தாளித்த பயறு, பப்படம், பழம் மற்றும் சீனி அல்லது வெல்லத்தை  சீர்வரிசைத் தட்டு போல் அழகுற அடுக்கிப் பரிமாறவும். புட்டை மேலாக அழுத்தி உடைத்து, பப்படத்தை நொறுக்கிச் சேர்த்து, மேலாக பயிறையும் சீனியையும் தூவி எல்லாவற்றையும் விரவிக்கொண்டு, பழத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக இக்கலவையுடன் பிசைந்து வாயிலிட்டு.. ஆஹா!!!.. ஆஹாஹா!! எனக் கண் மூடி சொக்குவது எம் மக்களின் பண்டைய பழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் கடலைக்கறி என்றொரு வஸ்து வந்து மடத்தைப் பிடுங்கப்பார்க்கிறது. "புட்டும் பழமும் காப்பியும் போச்சு" என்றுதான் எம் மண்ணின் தாத்தன் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைவாள் தன்னுடைய நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தில் "கோடேறிக் குடிமுடித்த படலத்தில் 497வது வரியில் சொல்லியிருக்கிறாரேயன்றி கடலையைத் தொட(வில்)லை. ஆனால், விதவிதமான ருசிகளைக் கேட்கும் நாக்கு, கடலையோடு நின்று விடாமல் தேங்காய்த்துருவலின் இடத்தில் வேறு கறி வகைகளை இருத்தி நிரப்பி புட்டவித்து, ருசித்து மகிழ்கிறது. கறி வகைகளோடு உண்ண ஆப்பம், இடியாப்பம் போன்றவை இருப்பதால் யாம் புட்டை அதன் இயல்பான ருசியோடு உண்பேம்.

சாரல் துளிகள்

எல்லாவற்றையும் பின்தங்கவிட்டு முன்னேறிப் பறந்து இறங்கும்போதுதான் இறங்கியது வெற்றுக்கூடெனப்புரிபடுகிறது. மனமா?.. அது எங்கே லயித்து விழுந்து கிடக்கிறதோ.. யாருக்குத்தெரியும்!.

சட்டெனப் பறக்க நினைத்தெம்பிப் பின் பட்டெனத் திரும்பியமரும் பறவையின் இறகுகளில் ஒளிர்ந்தணைகிறது அது பறக்க நினைத்த வானம்.

சிறுமழையில் சூரியன் கரைந்த அப்புல்வெளியெங்கும் முளைத்திருக்கின்றன ஓராயிரம் சூரியன்கள்.

சொட்டித் தீராத வெயில், பொழிந்து தீராத நிலவு
சிறுகண் திறக்கும் மலர்களொடு என்றும் அலுக்காத அப்புன்னகையும்.

நடைபாதையில் தூங்கும் குழந்தையைப் போர்த்தி பாதுகாப்பு கொடுத்திருக்கிறது L.I.C விளம்பர சுவரொட்டி, ப்ரீமியம் எதுவும் கட்டாமலே.

தேடித்தேடி நம்மைக் கண்டுகொள்ளும் இறுதிக்கணத்தில் மறுபடியும் தொலைந்து போகிறோம்.

பேராசை அரக்கனின் பசி, குடும்பங்களின் மகிழ்வையும் நிம்மதியையும் காவு கொண்டபின்னும் அடங்குவதில்லை. எத்தனைதான் இட்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென கபளீகரம் செய்து செல்லும்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல் காற்றில் சுழன்று செல்லும் பூஞ்சருகைத் துரத்துகிறதொரு வண்ணத்துப்பூச்சி. யாருமற்ற அவ்வனாந்திரமெங்கும் நிறைகிறது அத்தனை வண்ணங்களாலும்.

சொற்கள் இறைபடும் தளத்தைச் சற்றே கவனத்துடன் கடப்போம். ஏனெனில் நம்மைக் காயப்படுத்தும் சொல்லொன்று நம்மால் வீசப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.

அமிலமும் வெந்நீருமாய் ஊற்றி அத்தனை அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட பின்னும், ஏனோ துளிர்க்கவில்லை அம்மரம்.

LinkWithin

Related Posts with Thumbnails