Friday 18 December 2015

தொலைத்த பொக்கிஷங்கள்

 நன்றி- தி இந்து
2005 ஆம் வருடம் ஜூலை மாதம் மும்பையை ஒரு மழை உருட்டி விளையாடியது. வருடாவருடம் வந்து செல்லமாய் மெல்லக்கிள்ளிப்போகும் மழை அவ்வருடம் பேயறை அறைந்ததில் நாங்களெல்லாம் நிலை குலைந்துதான் போனோம். சில இடங்களில் தரைத்தளத்தை மூழ்கடித்ததோடு நில்லாமல் முதல் தளத்தையும் அசுர வேகத்தில் விழுங்கியிருந்தது வெள்ளம். அவற்றில் என் குழந்தைகள் படித்த பள்ளியும் ஒன்று.

அப்போது யூனிட் டெஸ்டுகள் நடந்து கொண்டிருந்ததால் அதற்கு முன்பே வகுப்பு நோட்டுப்புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு தரைத்தளத்திலிருந்த ஸ்டாஃப் ரூமில் வைக்கப்பட்டிருந்தன. எதிர்பாரா விதமாய் பெருமழை வெள்ளம் இரவே ஸ்டாஃப் ரூமில் புகுந்து அத்தனையையும் மூழ்கடித்தது. வெள்ளம் வேறு இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் புத்தகங்கள் அனைத்தும் மழை+சாக்கடை நீரில் ஊறிக்கிடந்தன. மழைநீர் வடிந்து பள்ளியும் திறந்தபின் நோட்டுப்புத்தகங்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இங்க் பேனாவை உபயோகித்து எழுதப்பட்டவை தண்ணீரில் கந்தரகோலமாயிருக்க பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்த குறிப்பேடுகள் தப்பிப் பிழைத்திருந்தன.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு துணி காய வைக்கும் கொடிக்கயிற்றில் தொங்க விட்டு நீரெல்லாம் வடிந்தபின் அப்படியே உலர விட்டு தாள்கள் கிழியாது என்று நம்பும் பக்குவத்திற்கு உலர்ந்தபின் இஸ்திரிப்பெட்டியால் தேய்த்து மீதமிருந்த ஈரத்தையும் உலர்த்தினோம். இங்க் பேனாவால் எழுதப்பட்ட குறிப்பேடுகளை குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சங்கொஞ்சமாக எழுதிக்கொடுத்தோம்.

சமீபத்திய சென்னை மழையின்போது ஏராளமான புத்தகங்கள் பாழான செய்திகளைப் பார்க்கும்போதும் கேட்கும் போதும் இப்படி ஏதாவது செய்து அந்தப்புத்தகங்களைக் காப்பாற்ற முயற்சிக்கலாமே என்று மனது அடித்துக் கொள்கிறது. வாக்யும் க்ளீனர் ஹேர் ட்ரையர் போன்ற உபகரணங்களின் ஃப்ளோயர் கொண்டும் வெப்பக்காற்றால் உலர வைக்கலாம். இயன்றவர்கள் தெரிந்தவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

அச்சுப்பிரதிகளை ஏதாவது செய்து நிச்சயமாக மீட்டெடுக்கலாம். குப்பை மலையில் இன்னொரு குவியலாக அவை கிடப்பதைக் காணும்போது மனது வலிக்கிறது. //புத்தகங்கள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பல்ல. அவை நேற்றின் வரலாற்றை, இன்றைய நிகழ்வை நாளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொக்கிஷங்கள்’ என்பார்கள்.// ரொம்பவும் சரி. விதி வசத்தால் பெரும்பாலான சமயங்களில் அப்பொக்கிஷம் நம் கண்ணெதிரிலேயே நம் கையை விட்டுப்போவதை ஒரு விதக் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டே இருக்க நேர்ந்து விடுகிறது.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" எனும் ஆன்றோர் வாக்கு, ஒருவன் கற்ற கல்விக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர கல்வி கற்க உதவும் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் முதல் மடிக்கணினி, மேசைக்கணினி வரையிலான சாதனங்களுக்குப் பொருந்தாது என்பது இது வரை எத்தனையோ முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு புத்தகம் வெளியாகிறதெனில் எழுத்தாளரிலிருந்து அச்சிடுபவர் வரை அதன் பின் எத்தனையோ பேரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறைந்திருக்கிறது. அத்தனையையும் இப்போதைய மழை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. இப்போதும் தனி நபர்களின் சேமிப்பிலிருந்த புத்தகங்கள் முதல் வரும் ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகத்திருவிழாவிற்காக பதிப்பகத்தார் அச்சிட்டு தயார் செய்து வைத்திருந்த புத்தகங்கள் வரையில் அத்தனையும் வெள்ளநீரில் மூழ்கி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இவற்றில், பதிவர்களாகிய நாம் வெளியிட்டிருந்த நூல்களும் அடங்கும் என்பது ஆற்றவியலாத சோகமே. நீரில் மூழ்கியதால் ஒரு சில இடங்களில் அச்சு இயந்திரங்களும் பழுதாகியிருப்பதும் பெரும் குலைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியாகும் தி இந்து இது தொடர்பாக சிறப்புக்கட்டுரையொன்று வெளியிட்டிருக்கிறது.

மும்பை வெள்ளம் வடிந்த போது, அதிகம் சேதமாகாத, குறைந்த சேதமுள்ள பொருட்களை கடைக்காரர்கள் மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்தார்கள். தள்ளி விட்டார்கள் என்றே சொல்லலாம். மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். அம்மாதிரியே அதிகம் சேதப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி குப்பையில் எறிவதை விட, தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கலாம். வீணாக குப்பையில் மக்கி அழிவதை விட வாசிப்பில் விருப்பமுள்ள ஒருவர் கையில் சென்று சேர்வது கலைமகளுக்கும் விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.

Thursday 19 November 2015

ஃபுட்டோக்ராபி..

உணவைத்தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை பார்வைக்கு அழகாக அலங்கரித்து வைப்பது இன்னொரு கலை. பார்க்க அழகாக இருந்தாலே அது சாப்பிடவும் தோன்றும். அப்படி சாப்பிடத்தூண்டும் அழகுடன் இருக்கும் உணவை படம் பிடிப்பதுவும் ஒரு கலையே. ஃபுட் ஃபோட்டோகிராஃபி எனப்படும் அவ்வகைப் படங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு. ஏற்கனவே பகிரப்பட்டிருந்த முதல் பாகம் காண சாட்டையைச்சொடுக்குங்கள்.



பால்யம் திரும்புகிறதே..

அம்ச்சி மும்பையின் வடாபாவ்.

 ஸ்வீட் ஹார்ட்ஸ்.

 நொறுக்ஸ்..

பழம் நல்லது.

கிச்சாவின் ஸ்னாக்ஸ் :-)

பல்லை உடைக்காத மைசூர்பாக்
 அடேங்"கப்பா" (தாளித்த கப்பைக்கிழங்கு)
 ஜலேபி.

கோத்தம்பிர் வடி.

தில் குட் க்யா.. கோட் கோட் போலா.

Thursday 12 November 2015

சாரல் துளிகள்

1. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பசிமுகம் பார்க்கப் பொறாத தாய் ஒருத்தி இருக்கிறாள். அவள் வீட்டில் எந்நேரத்திலும் நிரம்பி வழிகிறது அட்சய பாத்திரம், அவள் அன்பைப்போல்.

2. உலகில் அதிகமாகக் கவி பாடப்படுபவர்களில் குழந்தை, நிலா, அன்னை இம்மூவரும் முக்கியமான இடங்களை வகிக்கிறார்கள்.

3. ஒரு செயலை, "ஏன் செய்தாய்?" என்று கேட்பதற்குப் பத்து பேர் இருப்பதைப் போலவே "ஏன் செய்யவில்லை?" என்று கேட்டுத் திட்டுவதற்கும் பத்து பேர் இருப்பார்கள் என்பது உலக நியதி.

4. தவழ்ந்தபடி தரையை ஆராய்ந்து கொண்டிருந்த குழந்தையின் பார்வையில் பட்டிருக்க வேண்டாமென்று, அப்புறமாய் வருத்தப்பட்டுக் கொண்டது கட்டெறும்பு.

5. யாரோ தன் குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டே செல்கிறார்கள்.
தன்னைத்தான் கொஞ்சுவதாக
மகிழ்ந்து மிழற்றுகிறது
பிச்சைக்காரியின் இடுப்பிலிருக்கும்
சிறு மழலை.

6. இன்னொரு வீட்டில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவனின் ஆடையில் தீ எப்பொழுதோ பற்றிப்பரவ ஆரம்பித்திருந்தது.

7. அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை
என்கிறது உன் தரப்பு
வாழ்வென்பது திருப்பங்களாலும் ஆனது
என்பது என் கட்சி
இரண்டையும் கேட்டுக்கொண்டு
மௌனமாய்த் தீர்ப்பெழுதிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை
இரண்டும் ஒன்றுதானென்று.

8. அடுத்தடுத்த விவாதங்களின்போது மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பி விட்டாலும் முதன்முறை கேட்கும்போது பெரும்பாலும் மிகச்சரியாகவே பதிலளித்து விடுகிறது மனது.

9. அடமாய் ஒளித்து வைத்திருக்கிறது ஆழ்குளம்,
வெளிவர வேண்டிய ஏற்பாடுகளை அந்தத் தாமரை மொட்டு ரகசியமாய் செய்து கொண்டிருப்பதை அறியாமல்.

10. மிகப்பத்திரமாக வைத்து விட்ட திருப்தியிலேயே வைத்த இடமும் பொருளும் நினைவிலிருந்து அகன்று விடுகின்றன.

Tuesday 10 November 2015

தீப ஒளியில்..

புற இருளை அகற்ற அகல் ஏற்றுதல் போல் அக இருளகற்ற ஞானதீபம் ஏற்றுவோம். 








அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Saturday 3 October 2015

உலர்பழ ஷீரா சாப்பிடலாம்..

ஷீராவுக்குத் துணையாக கொழுக்கட்டையும் மோதகமும்.
‘சற்றே ரவையை எடும் பிள்ளாய்.. பாந்தமாய் அதனை நெய்யில் வறுத்து, பாலும் சீனியும் சேர்த்துக்கிளறி, இன்னபிறவும்  கலந்தால் கிடைப்பது ட்ரைஃப்ரூட் ஷீரா தாமே’ என்று அடுக்களைச்சித்தர் அருளிச்செய்தபடி ஆக்கப்பட்டதே இந்த உலர்பழ ஷீரா. நம்மூர் சர்க்கரைப்பொங்கலைப்போல் வடக்கில் நல்ல நாட்களிலும் பண்டிகை சமயங்களிலும் "ஷீரா பூரி" இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி தொடங்கி தீபாவளி வரைக்கும் கடைகளில் உலர்பழங்கள் அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பதால் இங்கெல்லாம் அடிக்கடி செய்யப்படும் இந்த அயிட்டம், திருமண நாள் மற்றும் பிறந்தநாட்களில் நடக்கும் சிறப்பு விருந்துச் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. அசப்பில் நம்மூர் கேசரியை நினைவுபடுத்தினாலும் செய்யும் முறை மற்றும் சேர்க்கப்படும் பொருட்களால் இதற்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள், வாழை போன்ற புத்தம்புதுப் பழங்களை சேர்த்தும் ஷீரா செய்யப்படுகிறது எனினும் உலர்பழ ஷீராவின் சுவை அட்டகாசமானது. 

தேவையானவை:

ரவை – 1 பங்கு

நெய் – முக்கால் பங்கு

உலர்பழங்கள் (முந்திரி, கிஸ்மிஸ், பாதாம், சாரப்பருப்பு, பூசணி அல்லது வெள்ளரி விதை, அக்ரோட் எல்லாம் கலந்த கலவை) – 1 பங்கு. இவற்றில் பிஸ்தா அதன் மெலிதான கசப்புச்சுவை காரணமாக கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

பால் – 1 பங்கு

சர்க்கரை – 1 பங்கு (இனிப்புப்பிரியர்கள் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது)

ஏலக்காய் – 4. தோலை உரித்து உள்ளிருக்கும் விதைகளைப் பொடித்து வைத்த பின் தோலை தேயிலைத்தூள் டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் விரும்பும்போது வாசனையான ஏலக்காய் தேநீர் தயாரிக்கலாம். அப்படியில்லாமல் தோலுடன் பொடித்துக்கொள்ள விரும்பினால் அப்படியே செய்யலாம்.

இவற்றுடன் அடி கனமான வாணலியையும் பொறுமையையும் சேகரித்துக்கொள்ளவும்.

ஷீரா செய்யவிருக்கும் வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி கிஸ்மிஸ் நீங்கலான உலர்பழங்களை மிதமான தீயில் வறுத்து, நெய்யிலிருந்து வடித்து எடுத்துத் தனியாக வைத்து ஆற விடவும். ஆறியபின் அவற்றைக் கத்தியால் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மிக்ஸியின் உதவியை இதற்கு நாடக்கூடாது. 

ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அதே நேரத்தில் நாம் ஷீரா செய்யும் நற்பணியை இன்னொரு அடுப்பில் தொடரலாம். உலர்பழங்கள் வறுக்கப்பட்ட வாணலியில் இருக்கும் நெய்யுடன் மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்துச் சூடாக்கவும். இதனால் நெய்யில் இறங்கியிருக்கும் உலர்பழங்களின் சாரம் வீணாகாமல் ஷீராவுடன் இரண்டறக்கலந்து மேலும் சுவை கூட்டும். 

இதில் ரவையை இட்டு மெல்லிய தீயில் கருகாமலும் சிவக்காமலும் வறுக்கவும். ரவை வறுபட்ட வாசனை வந்ததும் உடைத்து வைத்திருக்கும் உலர்பழக்கலவையையும் ஏலக்காய்ப்பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும். சுமார் இருபது நிமிடங்களுக்கு கிளறப்பட்ட ரவைக்கலவையில் நெய் மேலாக மிதந்து வர ஆரம்பிக்கும். சப்பாஷ்.. இதுவே சரியான சந்தர்ப்பம். அதை வீணாக்காமல் கொதித்துக்கொண்டிருக்கும் பாலை கால் கப் அளவில் எடுத்து ரவைக்கலவையில் சேர்த்து கை விடாமல் கிளறவும். 

பிள்ளையார் மட்டுந்தான் பால் குடிப்பாரா என்ன?. நம் ஷீராவும் அத்தனை பாலையும் உறிஞ்சி விட்டு உதிரி உதிரியாகும். மறுபடியும் கால் கப் பாலை அதன் தலையில் ஊற்றிக்கிளறவும். இப்படியே எல்லாப்பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கிளறவும். ஒவ்வொரு தடவை உதிரியாகும்போதும் ரவைக்கலவையில் நெய் பிரிந்து வரும். அதுவே பாலைச் சேர்க்க வேண்டிய பதமான நேரம் எனக்கொள்க. இத்தனை பணிவிடைகளுக்கிடையிலும் சர்க்கரை முறுகி விடாமல் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் அடுப்பையும் இறுதி வரை மெல்லிய தீயிலேயே எரிய விட வேண்டும். வறுக்கும்போது வெளுப்பாகவே இருக்கும் ரவையானது பாலைச் சேர்க்கச்சேர்க்க நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி லேசான பொன்னிறத்துக்கு வர ஆரம்பிக்கும்.

எல்லாப்பாலையும் சேர்த்தபின் இறுதியாக நெய் மேலாக மிதந்து வரும் பொழுதில் அடுப்பை அணைத்து விட்டு கிஸ்மிஸை மேலாகத்தூவி மூடி விடவும். இச்சமயத்தில் பார்ப்பதற்கு ஷீரா “ரவை பாயசம்” போல் மாயத்தோற்றம் காட்டும். ஆனால், ஆறி அறை வெப்பநிலைக்கு வந்தபின் இறுகி உப்புமாவுக்கும் கேசரிக்கும் இடைப்பட்ட பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது அடிமேலாகக் கிளறி வைத்து பகவானுக்குக் கை காண்பித்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம், கெட்டுப்போகாது. விரும்பினால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.

தீபாவளிக்கு பரிசாகக்கொடுக்கப்படும் உலர்பழங்களைத் தீர்த்துக்கட்ட இது சிறந்த வழி. எல்லாவற்றுக்கும் மேலாக உலர்பழங்களை விரும்பாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உடம்பில் சேர்க்க ஏற்றதொரு அருமையான வித்தை :-). ஆதலினால் ஷீரா செய்வீர்.

வால்: சமீபத்திய பிள்ளையார் சதுர்த்தியின்போது மகள் தன் கையால் நைவேத்தியத்திற்காக தயார் செய்தது இந்த ஷீரா. மோதகமும் அம்மணியின் கைவண்ணமே :-)

Monday 21 September 2015

கணபதி பப்பா.... மோர்யா.


“கண்பதி பப்பா மோர்யா - மங்கள் மூர்த்தி மோர்யா
கண்பதி பப்பா மோர்யா - புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா”

என்ற முழக்கங்கள் மஹாராஷ்ட்ரா முழுவதும் கேட்கத்தொடங்கி விட்டன. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆரம்பித்து பதினான்காம் நாளான அனந்த சதுர்த்தசி வரையிலும் மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்தே பிள்ளையார் சதுர்த்தி  அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், வெகு காலத்திற்குப் பின் அது பொது மக்களும் கொண்டாடும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இவ்விதம் பொது மக்கள் கூடிக்கொண்டாடிய இவ்விழாவை, அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்ட பால கங்காதர திலகர் பயன்படுத்திக்கொண்டார். அதன் பின்னரே இது வெகுஜன அளவில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும், மராட்டிய மாநிலத்தில் தனிச்சிறப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது.

மராட்டிய மக்கள் “ஷ்ராவண்” மாதம் ஆரம்பித்ததுமே விரதமிருக்க ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் முறைப்படி அப்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கும். அம்மாதம் முழுவதும் புலால் ஒதுக்கி, விரதம் இருந்து, வசிப்பிடங்களைத்தூய்மை செய்து, பிள்ளையாரை வரவேற்கத்தயாராவார்கள்.  பிள்ளையார்கள் அரையடியிலிருந்து எழுபது அடி உயரம் வரை வெவ்வேறு அளவிலும், வண்ணங்களிலும், விதங்களிலுமாக  கலைஞர்களின் கைவண்ணத்தில் தயாராக ஆரம்பிப்பார்கள். புதிது புதிதாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் கைவினைக் கலைஞர்களின் கற்பனை வானளாவும். இந்த வருடம் கணபதி “பாகுபலி” வேஷம் போட்டிருந்தார். கடைத்தெருவில் பிள்ளையாருக்கான ஆடை அணிகலன்களிலிருந்து மண்டப அலங்காரங்களுக்கான ஜிகினாக்கள், விளக்குகள், மற்றும் பூஜைப்பாத்திரங்கள் என எல்லாமும் விற்பனைக்கு வரும். போன வருடம் மூஞ்சூறும் தனியாகச்செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருந்தது. பிள்ளையார் அளித்த மோதகத்தைக் கையில் ஏந்தியபடி பவ்யமாக, பொன்னிறத்தில் பளபளவென்று நின்றிருந்த அதைக் கண்டவுடன் வாங்கி வந்தாயிற்று. வருடா வருடம் புதுப்புது அவதாரங்களில் வரப்போகும் பிள்ளையார்களை வரவேற்க எப்போதும் இதே இளமையுடன் காத்திருக்க வரமும் வாங்கி விட்டார் "உந்தீர் மாமா". மூஞ்சூறு உந்தீர் மாமா என்று மராட்டிய மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது.


தயாரான பிள்ளையார்கள் காட்சிக்கு வந்ததும், சதுர்த்திக்கு இருபது நாட்கள் முன்பிருந்தே மக்கள் தங்களுக்குப் பிடித்த பிள்ளையாரைத் தேர்ந்தெடுத்து முன்பணம் கொடுத்து பதிவு செய்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். தெரிவு செய்யப்பட்ட பிள்ளையார் செய்தித்தாள் மற்றும் பாலிதீன் உறையால் பொதிந்து பத்திரமாக தனியாக வைக்கப்படுவார். இவரை சதுர்த்தியன்று காலையில் சென்று முறைப்படி அழைத்து வந்து ஆவாஹனம் செய்வார்கள். சில சமயம் நெரிசலைத்தவிர்க்கும் பொருட்டோ, அல்லது பெரிய அளவிலான பிள்ளையார்களாக இருந்தாலோ முன்னிரவிலேயே அழைத்து வந்து விடுவார்கள். மிகவும் பெரிய வினாயகர்களாக இருந்தால் இரண்டு நாட்கள் முன்பே அழைத்து வந்து விடுவார்கள்.

அழைக்கச்செல்லும்போது அவரை அமர வைக்கும் தோதிலான மணைப்பலகை, பலகையில் விரிக்க சிவப்புத்துணி, துணியின் மேல் பரப்ப ஒரு பிடி அரிசி, வெற்றிலை பாக்கு, ஊதுவத்தி, மஞ்சள் குங்குமம், வாழைப்பழம், அட்சதை, மற்றும் மாலையுடன் செல்வார்கள். சிலர் பேண்ட் பாஜா எனப்படும் மேளதாளங்களுடனும் செல்வதுண்டு. முன்பதிவு செய்தபோது கொடுக்கப்பட்ட ரசீதைக் காண்பித்ததும் நம் பிள்ளையார் கொண்டு வரப்பட்டு மணையின் மேல் விரிக்கப்பட்ட சிவப்புத்துணியில் பரப்பப்பட்ட அரிசியில் அமர வைக்கப்படுவார். அவர் முன் வெற்றிலை பாக்கு பழம் முதலியவற்றைப் படைத்து, ஊதுவத்தி ஏற்றி வைத்து, நெற்றியில் குங்குமமிட்டு, அட்சதை தூவி, மாலையை அணிவித்த பின், இன்னொரு சரிகை ஆடை ஒன்றால் அவரது முகம் மூடப்படும். அதன்பின் ஆவாஹன் செய்யப்படும் இடத்திற்கு வந்து சேரும்வரை எக்காரணம் கொண்டும் அந்தத்திரை விலகக்கூடாது. குடும்பத்தலைவரோ அல்லது முக்கியமான நபரோ மணையுடன் சேர்த்துப்பிடித்துத் தூக்கிக்கொள்ள, நடந்தோ வாகனத்திலோ ஊர்வலமாகக் கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கொண்டு வந்து அமரச்செய்வார்கள்.
அதன்பின் முறைப்படி கலசம் வைத்து, பிள்ளையாரை  பிரதிஷ்டை செய்து, அகண்ட தீபமும் ஏற்றி வைக்கப்பட்ட பின் பூஜைகள் ஆரம்பமாகும். இந்த அகண்ட தீபமானது பிள்ளையார் கரைக்கப்பட்ட மறு தினம் வரைக்கும் அணையாமல் அவ்வப்போது நெய்யூற்றி கவனித்துக்கொள்ளப்படும். கணபதியை  21 விதமான பூக்கள், 21 விதமான இலைகளால் அர்ச்சிப்பது விசேஷம். பூஜையில் ஆரத்திப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் “Sukhakarta Dukhaharta” என்று தொடங்கும் மிகவும் முக்கியமான பாடல் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமர்த் ராம்தாஸ் என்ற துறவியால் இயற்றப்பட்டது. பிள்ளையாருக்கு தேங்காய்ப்பூரணம் வைத்த மோதகம் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது. மஹாபோக் எனப்படும் நைவேத்தியத்தில் பூரி, பருப்பு, சாதம், கறி வகைகள், இனிப்பு என அனைத்தும் அடங்கும். பிள்ளையார் சதுர்த்தி முடியும் வரை இனிப்பகங்களில் மோதக வடிவிலான பேடாக்கள் கிடைக்கும். அவற்றையும் பிரசாதமாகக் கொடுப்பதுண்டு. பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வீடுகளிலும், குடியிருப்புகளிலும் குடும்ப மற்றும் மக்கள் நலனுக்காக சத்யநாராயண பூஜையும் செய்யப்படுவதுண்டு. சத்யநாராயண பூஜைக்கு நைவேத்தியமாக செய்யப்படும் ஷீரா இங்குள்ள மக்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று.
ஆவாஹன் செய்யப்பட்ட தினத்திலிருந்து தினமும் இரண்டு வேளையும் ஆரத்தி எனப்படும் தீபாராதனை பூஜை நடக்கும். ஆரத்தியின்போது பிள்ளையாருக்கு தீபாராதனை காட்ட அனைவருக்குமே வாய்ப்பு வழங்கப்படும். பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலிருந்து ஆரம்பித்து மூன்றாம், ஐந்தாம், ஏழாம் என ஒற்றைப்படை எண் வரும் தினங்களில் பிள்ளையார் விசர்ஜன் செய்யப்படுவார். சில வீடுகளில் ஒன்றரை நாள் மட்டும் இருந்து விட்டு ‘போய் வருகிறேன்’ என்று கிளம்பி விடுவார். அவரை புனர்பூஜை செய்தபின் பத்திரமாக வழியனுப்பி வைக்க வேண்டும்.
வழக்கம்போல் ஆரத்தி எடுத்து, தூப தீபாராதனைகள் முடிந்ததும் வீடு தேடி வந்தமைக்கு நன்றி தெரிவித்து, பூஜையில் ஏதேனும் குறைகள் இருந்திருந்தால் பொறுத்தருளும்படி வேண்டியபின், பிள்ளையாரை லேசாக நகர்த்தி வைத்து விட்டு கலசத்திலிருக்கும் தேங்காயைத் தனியாக எடுத்து வைப்பார்கள். பின், பிள்ளையாரின் கையில் சிறிது தயிரும், அதன் மேல் சிறிதளவு அரிசி மணிகளும் வைப்பார்கள். இப்படிச்செய்தால் பிள்ளையார் அடுத்த வருடமும் வீட்டுக்கு வருவார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. செல்லும் வழியில் பசியெடுத்தால் சாப்பிட வேண்டுமே.. பத்து நாளும் விதவிதமாகச் சாப்பிடக்கொடுத்து விட்டு இப்போது வெறும் கையோடு அனுப்ப முடியுமா? பிள்ளையார் பாவமல்லவா?! அதனால் ஒரு கொப்பரைத்தேங்காயில் சிறிது அரிசியை இட்டு அதன் மேல் ஒரு துண்டு வெல்லத்தையும் வைத்து, ஒரு துணியில் கட்டுச்சோற்று மூட்டையாகக் கட்டி பிள்ளையாரின் கையில் கட்டித்தொங்க விடுவார்கள். 

அதன்பின் குடும்பத்தலைவர் பிள்ளையாரை கவனமாகக்கையில் எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாகச் சுற்றி வந்த பின், பிள்ளையாரின் திருமுகம் வீட்டை நோக்குமாறு மிகக் கவனமாக பின்னோக்கி அடியெடுத்து வைத்து வெளியேறி நிற்பார். அவர் பின்னாடியே இன்னொரு நபர் கலசத்திலிருக்கும் தீர்த்தத்தை வீடு முழுவதும் மாவிலையால் தெளித்துச்செல்வார். பிள்ளையாருக்கு தேங்காயால் திருஷ்டி கழித்து, அதைச் சிதறுகாயாய் உடைத்தபின் அருகிலிருக்கும் நீர்நிலையை நோக்கி ஊர்வலம் தொடங்கும். திருஷ்டி கழித்து உடைக்கப்பட்டது ஆகையால் இந்த சிதறுகாய்த் துண்டுகளை யாரும் எடுக்க மாட்டார்கள். நீர் நிலையை அடைந்ததும் மறுபடியும் பிள்ளையாருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, அவருக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள், மாலைகள், மற்றும் வஸ்திரங்கள் களையப்படும். இப்பொழுதெல்லாம் மாவிலை, பூ மாலைகள் போன்றவை நிர்மால்ய கலசத்தில் சேகரிக்கப்படுவதால் நீர் மாசு படுவது ஓரளவு குறைக்கப்படுகிறது. 

விசர்ஜன் செய்யுமிடத்தில் அதற்கென்று இருக்கும் ஆட்கள் பிள்ளையார்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட ஆழம் வரை சென்ற பின் இரண்டு தடவை நீருக்கு மேலே கொண்டு வந்து திருமுக தரிசனம் காட்டியபின் மூன்றாவது முறை முழுவதுமாக மூழ்க விட்டுக் கரைப்பார்கள். இதை ஒரு சேவையாகச் செய்பவர்களைத் தவிர வருமானத்துக்காகச் செய்பவர்களும் உண்டு. குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகக் கொடுத்து விட வேண்டும். கலச நீரை குளத்திலேயே விட்டு விட்டு குளத்து நீரை சிறிதளவு கலசத்தில் நிரப்பித்தருவார்கள். அதை வீட்டிற்குக் கொண்டு வந்து செடிகளுக்கோ துளசிக்கோ ஊற்றி விட வேண்டும் என்பது சம்பிரதாயம். ஒரு பிடி குளத்து மண்ணையும் மணைப்பலகையின் மேல் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் வைத்துத் தருவார்கள். அவற்றையெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வந்தபின் மணைப்பலகையும் பிடி மண்ணும் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டு ஆரத்தி எடுக்கப்படும். பின் கலசத்திலிருக்கும் தேங்காயை அந்தத்துணியில் வைத்து முடிந்து வீட்டின் முகப்பில் தொங்க விடுவார்கள். இதனால், அவ்வீட்டிற்கு வரும் இன்னல்கள் நீங்கி விடும், நலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை. 

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! 

கணபதி பப்பா.. மோர்யா...

Thursday 17 September 2015

துன்பம் நீக்கும் தும்பிக்கையான்

வழக்கமான வழக்கப்படி இந்த வருடமும் மேளதாளங்கள், பேண்ட் பாஜா முழங்க பிள்ளையார் மும்பைக்கு வந்து விட்டார். சென்ற வருடத்திலிருந்து எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

இந்த வருடம் வந்த சதுர்புஜன்.


இவர் போன வருடம் எங்கள் வீட்டிற்கு மஹாராஷ்ட்ராவின் குறு நில மன்னர்களான பேஷ்வாக்களின் ஆடையலங்காரத்தில் வந்த பிள்ளையார்.



மூஞ்சூறை மஹாராஷ்ட்ர மக்கள் செல்லமாக "உந்தீர் மாமா" என்று அழைப்பார்கள் :-))



வேழ முகத்தான் அனைவரின் வாழ்விலும் இன்னல்களை நீக்கி வாழ்வினை கன்னல் போல் இனிதாக்கட்டும். அலங்கரிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு சிரத்தையோடு தெர்மோகூல் மண்டபத்தை அலங்கரித்து, பிரசாதமாக உலர்பழ ஷீராவையும், மோதகத்தையும் தயார் செய்து என் வேலையை எளிதாக்கிய மகளுக்கு என் நன்றிகள் :-).

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

Saturday 15 August 2015

ச்சலோ ஷிர்டி, ஷிங்கணாப்பூர்..

லட்டு தின்னக் கசக்குமா என்ன? அதுவும் ஷிர்டி சாயிபாபா கொடுக்கும் லட்டு. கூடவே ஷிங்ணாப்பூரிலிருக்கும் சனீஸ்வரர் தன் பங்குக்கு தேங்காய் பர்பியும் தரப்போவதாகச் சொன்னார். சென்று தரிசனம் செய்து விட்டு அப்படியே நலம் விசாரித்து வரலாம் என்று அவர்கள் மேல் பாரத்தைப் போட்டு விட்டுக் கிளம்பிப்போய் வந்தாயிற்று.

முந்தைய பயணவிவரங்கள்

http://amaithicchaaral.blogspot.com/2011/01/blog-post_27.html

http://amaithicchaaral.blogspot.com/2011/02/blog-post.html

http://amaithicchaaral.blogspot.com/2011/02/blog-post_03.html
லட்டுடன் தேங்காய்பர்பியும்..
சென்ற முறை அவதியவதியாக ஓடிப்போய் வந்ததைப்போலில்லாமல் இந்த முறை பயணத்தை சற்று நிதானமாக அமைத்துக்கொண்டோம். ஷிங்கணாப்பூரிலிருக்கும் சனீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, ஷிர்டி சென்று அங்கே இரவு தங்கி மறுநாள் சாயிபாபாவைத் தரிசித்து விட்டு, மதியம் கிளம்பினால் இரவுப்பொழுதுக்குள் மும்பை வந்தடைந்து விடலாமென்று திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?

ஒரு நாள் பயணத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டதால் சற்று நிதானமாக காலை எட்டரை மணியளவில் கிளம்பலாம் என்று நினைத்திருந்தாலும் கடைசி நிமிட வேலைகள், சமீபத்தில் லேசிக் சிகிச்சை முடித்திருக்கும் மகளுக்கு கண்ணில் மருந்து ஊற்றுதல் போன்ற லௌகீகங்களை முடித்து விட்டு, வண்டிக்கும் எங்களுக்கும் பெட்ரோல் போட்டுக்கொண்டு கிளம்ப பத்து மணியாகி விட்டது. சென்ற முறை ஒவ்வொரு இடமாக நின்று ஒவ்வொருத்தரிடமாக வழி விசாரித்துச் சென்றதைப்போல் இம்முறையும் ஆகி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக ரங்க்ஸ் வழியை காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்திருந்தார். அதை எழுதியிருந்த நேரத்திற்கு மேப்பை ப்ரிண்ட் எடுத்திருக்கலாம். ஹூம்.. :-) 



மும்பை-பூனா எக்ஸ்ப்ரஸ் வழியில் படான் குகை உட்பட ஒவ்வொரு குகைப்பாதைக்குள்ளும் மலை வளைவுகளிலும் லேசான மழையினூடே எங்கள் எக்ஸ்ப்ரசும் புகுந்து பயணப்பட்டது.  மழைக்காலமாதலால் மலைமுகடுகளும் சிகரங்களும் மேகத்தொப்பி அணிந்து கொண்டிருந்தன. வழியில் பழுதடைந்து விடும் வாகனங்களுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாற்ற ஸ்பானர், ஸ்க்ரூ ட்ரைவர் சகிதம் ஆங்காங்கே மொபைல் டாக்டர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் கனரக வாகனங்களுக்கு மட்டுமே சாலைச்சுங்க வரி வசூலிக்கப்படும் என்று புதியதொரு சட்டம் வந்திருப்பதால் எல்லா டோல் கேட்டுகளிலும் சிறிய வாகனங்களுக்கு டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கிறார்கள்.
இங்கிருந்து ஷிங்கணாப்பூர் வரையிலுமான மொத்தப்பாதையிலும் இரண்டு இடங்களில் மட்டுமே வரி கட்டினோம். கூகிளாரிடம் வழி விசாரித்து ரங்க்ஸ் ரகசிய பாஷையில் எழுதிக்கொண்டு வந்திருந்த விவரங்கள் புரிபடாமல் ஒரு கட்டத்தில் அதைக்கடாசி விட்டு “நேவிகேஷனாய வித்மஹே ஜிபியெஸ்ஸாய தீமஹி தன்னோ கூகிள் ப்ரசோதயாத்” என்று கூகிளாரிடம் நேரடியாகச் சரண்டரானோம். அவர் அனுப்பிய அம்மணி அசரீரியாய் “நேராப்போய் லெப்டில் திரும்பு.. அக்கம்பக்கம் பார்க்காம இந்த ரோட்டிலேயே நேராப்போ” என்றெல்லாம் திருவாய் மொழிந்து எங்களை சூஷ்ம உருவில் கைப்பிடித்து வழி நடத்திச்சென்றார். பயணங்களின்போது வழக்கமாய் நாங்கள் சொல்லும் யோசனைகளை இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விடும் ரங்க்ஸ் இப்பொழுது கூகிளார் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு ஸ்டியரிங்கால் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். என்னவொரு மந்தஹாசம்!! “ஆஹா.. ஆஹா.. சயின்ஸ் என்னமா முன்னேறியிருக்கு” என்று பாராட்டுப்பத்திரம் வேறு. கிர்ர்ர்ர்ர்ர்ர்..

மும்பை-ஷிங்கணாப்பூர் பாதையில் செல்லும்போது சாப்பாட்டைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. சீரான இடைவெளிகளில் “விட்டல் காமத்”தின் ரெஸ்டாரண்டுகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கின்றன. மோரில் சிலபல வஸ்துகளுடன் புளிக்கரைசலையும் கலந்து தயாரிக்கப்படும் “சோல் கடி” என்றொரு அற்புத ருசி கொண்ட பானம் இங்கெல்லாம் கிடைக்கிறது. அஹமத் நகரை நெருங்கும்போது “smiling stones”ல் சற்று இளைப்பாறினோம். முந்தைய தடவை சென்றபோது இருந்த ஈமுக்கோழிகளைத் தேடினேன். கண்ணில் தட்டுப்படவில்லை. வாத்துக்கூட்டம் மட்டும் கொட்டகைக்குள் ஓய்வில் இருந்தன. 
ஷிங்கணாப்பூர் செல்லும் வழியெங்கும் கம்பங்காடுகளும், சோளக்கொல்லைகளும், கரும்புத்தோட்டங்களும், மக்காச்சோளக்கொல்லைகளுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பசுமை நிறைந்திருக்கிறது. ஒன்றிரண்டு வயல்களில் முட்டைக்கோஸும் விளைந்திருக்கக்கண்டோம். போட்டோ எடுக்கக்கூட நிற்காமல் என்னதான் அடித்துப்பிடித்து விரைந்தாலும் ஷிங்கணாப்பூரை அடையும்போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. 

முன்னைக்கு இப்பொழுது கோயில் நிறையவே மாறியிருக்கிறது. அழுக்கும் சாக்கடையுமாக இருந்த இடத்தில் கோயிலைப்போலவே தோற்றம் கொண்ட வாகன நிறுத்துமிடம் ஒன்று கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்டு வருகிறது. முன்பு போல் அதிக நேரம் வரிசையில் நின்று சனீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்ய அனுமதியில்லை. ஈரத்துணியுடன் ஆண்கள் மட்டும் வரிசையில் நின்று நல்லண்ணெய் அபிஷேகம் செய்து வந்த சம்பிரதாயம் கடாசப்பட்டு விட்டது. ஆகவே வளாகத்தில் நிலவி வந்த எண்ணெய் வாசனையும் மறைந்து விட்டது. இப்பொழுதெல்லாம் மூர்த்தியின் அருகே செல்லவும் யாருக்கும் அனுமதியில்லை. மொத்த பீடமும் இப்பொழுது கம்பிச்சிறைக்குள் இருக்கிறது. செல்லும் மக்கள் தாங்கள் கொண்டு செல்லும் தேங்காய், பூக்களை பீடத்தின் படிக்கட்டில் வைத்து வணங்கிச்செல்கிறார்கள். உணர்ச்சி மேலிட்டு சில பக்தர்கள் மலர்மாலைகளை சனீஸ்வரரின் மூர்த்தியின் மேல் எறிகிறார்கள். அவற்றையெல்லாம் அவ்வப்போது ஒரு கோவில் ஊழியர் அகற்றி, மூர்த்தியைப்போர்த்தியிருக்கும் சால்வையை மற்றும் சூட்டியிருக்கும் மாலையை மாற்றி புதிது சூட்டுகிறார்.

கொண்டு செல்லும் எண்ணெய்யை அங்கிருக்கும் ஒரு தொட்டியில் கொட்டி விட்டால் மோட்டார் மற்றும் குழாய்கள் மூலம் அது எடுத்துச்செல்லப்பட்டு மூர்த்திக்கு அபிஷேகம் (ஷவர் பாத்) செய்யப்படுகிறது என்று தேங்காய்ப்பழக்கடையில் தகவல் கிடைத்தது. ஆனால், பக்தர்களின் எண்ணிக்கையையும், அபிஷேகம் ஆகிக்கொண்டிருக்கும் எண்ணெய்யின் அளவையும் ஒப்பு நோக்கினால் கணக்கு சற்று இடிப்பதைக் கண் கூடாகக்காணலாம். எனக்கென்னவோ தொட்டியில் ஊற்றப்படும் எண்ணெய் அபிஷேகம் ஆவதாகத்தோன்றவில்லை. வேறு ஏதோ சுழற்சி முறை இருப்பதாகத் தோன்றுகிறது.  தேங்காயை முன்னெல்லாம் தனியாகச்சேகரித்து வந்தார்கள். இப்பொழுது நாம் விரும்பினால் அதை உடைத்து பாதியை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். மேளம், மணி முதலியவற்றுக்கு மட்டுமல்லாமல் இப்பொழுது தேங்காய் உடைக்கவும் கோவில்களில் இயந்திரம் வந்து விட்டது.

ஏகப்பட்ட மாற்றங்கள் வந்த இக்கோவிலில் ஒன்று மட்டும் மாறவில்லை. அதுதான்.. பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட தேங்காய் பர்பியின் ருசி. மூன்று பர்பிகள் கொண்ட பாக்கெட் பத்து ரூபாய்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு லேசான இருட்டினூடே ஷிர்டியை நோக்கிப்பயணப்பட்டோம்.வீடுகளுக்கு கதவு, ஜன்னல்கள் பொருத்த ஆரம்பித்திருக்கிறார்கள். லாக்கர் வசதியுடன் கூடிய இந்தியன் வங்கிக் கிளையும் போதுமான பாதுகாப்புகளுடன் இருப்பது வெளியிலிருந்து பார்த்தாலே தெரிகிறது. வழியெங்கும் கரும்புத்தோட்டங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக கரும்புச்சாறு பிழியும் செக்குகள். இவை மாடுகளால் இழுக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பைக்குள் இப்பொழுது இவை இயந்திரங்களாலும் இழுக்கப்படுகின்றன. கரும்புச்சாறு அருந்த வரும் குழந்தைகளைக் குஷிப்படுத்த பலூன்கள் கட்டப்பட்ட ஊஞ்சல்களும் நிறைய ஆடுகின்றன. நன்கு இருட்டி விட்டதால் வண்டியில் இருந்தவாறு கூட படமெடுக்க முடியவில்லை. ஆகவே, மும்பையில் கண்ட இயந்திரச்செக்கு உங்கள் பார்வைக்கு :-)
கோயிலுக்கு அருகே நிறைய ஹோட்டல்கள் இருந்தாலும் பார்க்கிங் வசதி எப்படியிருக்குமோ என்ற தயக்கத்தால் சற்றுத்தொலைவிலேயே தங்கிக்கொண்டு, மறுநாள் ஷேர் ஆட்டோவில் சாயிபாபாவைத் தரிசிக்கப் புறப்பட்டோம். பயந்தது போல் இல்லாமல் நல்ல ஹோட்டல்கள் கோவிலுக்கு முன்னேயே இருக்கக்கண்டது நிம்மதி. இந்தக்கோவில் அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியே இருக்கிறது. விதிமுறைகளிலும் ஒன்றும் மாற்றமில்லை. வழக்கம்போல் மொபைல், காமிராக்களை சுருக்குப்பையில் போட்டு ஒப்படைத்து விட்டு தடவல் சோதனைக்குப்பின் நாலாவது நுழைவாயில் வழியாக தரிசனத்துக்குச் செல்லும் வரிசையில் இணைந்து கொண்டோம். 

நகர்ந்து கொண்டே இருந்த வரிசை பதினொன்னரை மணியளவில் ஒரு மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. ஆரத்திக்கான நேரமாம். நேரில் பார்க்க முடியவில்லையே என்று வருந்தும் பக்தர்களின் குறையைத் தீர்க்கும் பொருட்டு ஆங்காங்கே தொலைக்காட்சிப்பெட்டிகள் வைக்கப்பட்டு ஆரத்தி நேரடியாக ஒளிபரப்பப் படுகிறது. பாபாவின் திருச்சிலையின் மேலும் சமாதியின் மேலும் போர்த்தப்பட்டிருந்த குங்கும வண்ண சரிகைச்சால்வைகளும் மாலைகளும் அகற்றப்பட்டு பச்சை வண்ணச்சால்வைகளும் மாலைகளும் சாற்றப்பட்டு, தூப தீபங்களுடன் ஆரத்தி நடப்பதை விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் கண்ணாரக்கண்டோம். கருவறையில் ஆரத்தி நடைபெறும் அதே சமயம் வரிசையில் நிற்கும் பக்தர்களும் ஆரத்திப்பாடல்களைப்பாடி பரவசமடைகின்றனர். நெரிசல் தாங்காத சிறு குழந்தைகளின் அழுகை, சிணுங்கல், விளையாட்டு போன்றவை போனஸாகக் கிடைக்கின்றன.

நகர்ந்து நகர்ந்து சாயிபாபா வீற்றிருந்த பொன்னம்பலத்தை வந்தடைந்தோம். இழுத்து வீசப்படுவதில்லையே தவிர இங்கும் பக்தர்களை “லௌக்கர் ஜா” என்று விரட்ட ஆரம்பித்து வெகு காலமாயிற்று. என்றாலும் திருப்தியாக தரிசனம் செய்ய முடிந்தது. முன்பு போல் நாம் கொடுக்கும் மாலைகள் பாபாவிற்குச் சாற்றப்படுவதில்லை. வாங்கி ஓரமாக வைத்து விட்டு அங்கே குவிந்திருக்கும் மாலைகளிலிருந்து ஒன்றை உருவி பிரசாதமாகத் தருகிறார்கள். மற்றபடி நாம் வாங்கிச்செல்லும் சால்வை, தேங்காய், கடிஷக்கர் பாக்கெட்டுகளை பொருட்படுத்துவதேயில்லை. ஆகவே அதையெல்லாம் வாங்காதிருப்பது நலம். நாங்களும் அவ்வாறே சபதமெடுத்துக்கொண்டோம். தரிசனம் முடித்து நான் மட்டும் லேண்டி பாகைப் பார்வையிடச்சென்றேன். பாபா கையால் வெட்டப்பட்ட எண்கோணக்கிணறு கம்பிவலையால் மூடியிடப்பட்டு யாரும் அருகில் செல்லவியலாதவாறு வேலியுமிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் அரச/வேப்ப மரங்களின் அருகே அவர் கையால் ஏற்றப்பட்ட நந்தாதீபத்தைத் தேடினேன். என்ன மூர்த்தியென்றே தெரியாத ஒரு சிலையருகில் கல்விளக்கொன்றின் மேல் ஒரு சிறிய அகல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அகல் புத்தம்புதிதாய் இருப்பதைப்பார்க்கும்போது அது நந்தாதீபமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை அந்த கல்விளக்குதான் நந்தாதீபமாக இருந்ததோ என்னவோ?!!.

மியூசியத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், உடுத்தியிருந்த உடை, மாவு திரிக்கப் பயன்படுத்திய திரிகை, மற்றும் அவர் சமாதியடைந்தபின் கடைசியாக அவரைக்கிடத்திக் குளிப்பாட்டிய கட்டில் எல்லாவற்றையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கூடவே பல்லக்கு, சக்கர நாற்காலியும் இருக்கிறது. அன்பளிப்பாகக்கொடுக்கப்பட்ட இந்த நாற்காலியை கடைசி வரை அவர் உபயோகப்படுத்தவே இல்லையாம். இதே மியூசியத்தில், இக்கோவிலில் வைக்கப்படுவதாக இருந்த முரளீதரன் சிலை உட்பட்ட ஐந்து சிலைகளும் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவை நன்கு பராமரிக்கப்படுகின்றன என்பதை அவை புதுக்கருக்குடன் காட்சியளிப்பதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

தரிசனத்திற்காக மக்கள் வரிசையில் நிற்கும் மண்டபங்களில் ஆங்காங்கே, :பூக்கள், மாலைகள் மற்றும் தேங்காய்களை பாபாவின் சிலை மேல் வீசாதீர்கள்” என்றொரு அறிவிப்பைக்காண நேர்ந்தது. பூக்கள், அட்சதை மற்றும் மாலைகளை எறிவதையாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேங்காய் போன்ற எடையுள்ள பொருட்களை சிலை மேல் எறிவது என்ன மாதிரியான பக்தி டிசைன்? என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதேபோல் கோயில்களில் நடக்கும் தள்ளுமுள்ளும் அப்படித்தான்.

மாதக்கணக்கில்,.. சில சமயம் வருடக்கணக்கில் திட்டமிட்டு, தூரதேசங்களிலிருந்து தொலைவைப்பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் பயணப்பட்டு, உடல் நலம் சரியில்லையென்றால் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்து கொண்டு பணத்தைச்செலவழித்து, பொறுமையுடனோ பொறுமையிழந்தோ.. சில சமயம் பிறரின் பொறுமையைச் சோதித்தோ, வரிசையில் நகர்ந்து வந்து விட்டு, இறைவனின் முன் நிற்கும் கடைசி நிமிடத்தில், முன்னால் நிற்பவர்களை இடித்துத்தள்ளி முட்டி மோதி மூர்த்தியைப் பார்த்தும் பாராமலும் கன்னத்தில் போட்டுக்கொண்டு காலில் தேள் கொட்டினாற்போல் ஓடுவார்கள் சிலர். அவ்வளவு நாள் காத்த பொறுமை கடைசி நிமிடத்தில் இவர்களுக்கு எப்படி காணாமற்போகிறது?.. அந்த பகவானுக்கே வெளிச்சம். கொஞ்சம் ஒழுங்கைக்கடைப்பிடித்தால் அத்தனை மக்களும் நல்லபடியாக தரிசனம் செய்யலாமே. என்னவோ போங்க.

திட்டமிட்டபடி மதியம் கிளம்ப முடியாமல் மாலை நான்கு மணியளவில் கிளம்பினோம். திரும்பும்போது நாசிக் நெடுஞ்சாலை வழியாக வரவேண்டும் என்பது திட்டம். கூகிள் வழிகாட்ட சரியான வழியில் பயணப்பட்டோம். நாசிக் வெங்காயத்துக்கும் பெயர் போனது. கோடை காலங்களில் சாலையின் இருபுறங்களிலும் வெங்காய வயல்களைக் காணலாம். அறுவடை நடந்து முடிந்த சமயமாயிருந்தால் வயல்களிலேயே வெங்காயங்களை மூட்டை கட்டத்தோதாகக் கொட்டி வைத்திருப்பதைக் காணலாம். மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் வானம் பார்த்த கரிசல் மண் பூமியில், சோளமும், கரும்பும் பயிரிட்டு காற்று வீசும்போதெல்லாம் வயல்வெளியெங்கும் பசும் அலை படர்ந்து செல்கிறது.  குச்சிகள் நட்டு வைத்து, அதில் படர்ந்திருக்கும் தக்காளிச்செடிகள் காய்த்துப் பழுத்துக்குலுங்குகின்றன. இருபுறமும் மாதுளைத்தோட்டங்களில் கெம்புப்பொட்டலங்களாய் மாதுளம்பழங்களுக்கும் குறைவில்லை. முற்றிய சரக்குகளெல்லாம் சாலையோரக்கடைகளில் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூட்டை வெங்காயத்தை வாங்கிப்போட்டிருக்கலாமோ என்று நேற்று ஒரு கிலோ வெங்காயத்தை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கும்போது எண்ணிக்கொண்டேன். 
எங்க ஊரு மாட்டுக்காரர்.
மும்பை பூனா நெடுஞ்சாலையைப்போல் இந்த வழியில் நல்ல ரெஸ்டாரண்டுகள் ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் சாய் என்ற பெயரில் சுடுதண்ணீர்தான் கிடைக்கும். சாப்பிடவும் ஆறிக் காய்ந்து போன வடாபாவையும் ப்ரெட் கட்லெட்டையும் தவிர ஒன்றும் கிடைக்காதென்பதால் மும்பையிலிருந்து கிளம்பும்போதே பிஸ்கட், சாக்லெட், ஜூஸ், முறுக்கு என்று ஏகப்பட்ட தீனிகளை மூட்டை கட்டி வைத்திருந்தோம். ஆனாலும், களைத்திருந்த ரங்க்ஸுக்காக ஒன்றிரண்டு இடங்களில் அந்த சுடுதண்ணீரைக் குடித்து வைத்தோம். 

கிராமங்கள் வழியாக சென்ற முறை வந்தபோது அத்தனையும் மண்சாலையாக இருந்தன. இப்பொழுது அதில் பெயருக்கு தார் பூசி சாலையாக்கியிருந்தார்கள். மழை தன் கைங்கர்யமாக ஆங்காங்கே குழி பறித்து வைத்திருந்ததால் ஜானவாச ஊர்வலம் போல் ஊர்ந்து வந்து ஒரு வழியாக நெடுஞ்சாலையை எட்டியபோது நன்கு இருட்டி விட்டது. “அப்பாடா.. கஸாரா காட் பகுதியைத் தாண்டியிருப்போம் என்று நினைத்த ரங்க்ஸின் மனப்பால் “கஸாரா காட்” பகுதி ஆரம்பிக்கிறது என்று பல்லைக்காட்டிய போர்டைப்பார்த்ததும்.திரிந்து பனீரானது. 

சொய்ங்க்.. சொய்ங்க்.. என்று வளைந்து நெளியும் மலைப்பாதையில் இருட்டுக்குப் பழகாத கண்களை சாலையில் பதித்து எங்களை சர்ர்ரென்று தாண்டிப்போன மோட்டார் சைக்கிளுக்கெல்லாம் டாட்டா காட்டிக்கொண்டு வந்தோம். போதாக்குறைக்கு சாம்பிராணிப்புகை மூட்டம் போல் திடீரென்று வெளேரென்று மேகக்கூட்டம் வந்து வழி மறித்து, கொட்டும் மழையோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு கும்மியடித்தது. மேகத்துக்கு அந்தப்பக்கம் ரோடு இருக்கிறதா பள்ளத்தாக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் ரங்க்ஸ் கிட்டத்தட்ட ஸ்டியரிங் மேல் அமர்ந்து வண்டியை ஓட்டி வந்தார். துணைக்கு நானும், சாலை ஓரங்களில் பதித்திருந்த பளீரிடும் மஞ்சள் ஸ்டிக்கர்களைப்பார்த்து சாலையில்தான் செல்கிறோமா என்று கவனித்துக்கொண்டே வந்தேன்.  இனிமேல் தொலைதூர பயணங்களுக்கு கால்டாக்ஸிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். பகல் நேரத்திலென்றால் அந்த அழகை ரசித்திருக்கலாம். இரவு நேரத்தில் அது அச்சுறுத்தியது. அதிக அழகே ஆபத்தானதுதானே. என்றாலும் இந்தப்பயணம் நெடுநாள் நினைவில் நிற்கும். செக்குமாடாய்ச் சுற்றி வரும் வாழ்க்கையில் பயணங்கள் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டத்தான் செய்கின்றன.. செய்தது.

Monday 3 August 2015

நாஞ்சில் நாட்டு சமையல் - தக்காளிக்காய் அவியல்/கூட்டவியல்

அவித்துச் செய்யப்படுவதாலேயே இப்பதார்த்தம் அவியல் எனப்பெயர் பெற்றது. சிறிதளவு நீர் மற்றும் தேங்காயெண்ணெய்யின் ஆவியிலேயே இந்தக்கறி முழுக்க முழுக்கத் தயார் செய்யப்படுகிறது. கூட்டவியலைப்போலவே எங்களூரில் தக்காளிக்காயில் செய்யப்படும் அவியலும் பிரசித்தி பெற்றதே. இந்தப்பதார்த்தம், வீட்டிலிருப்பவர்கள் அவியல் சாப்பிட திடீரென்று ஆசைப்படும் தினங்களில் 'எல்லாக்காய்கறிகளும் இல்லையே, எப்படி அவியல் செய்வது ?' என்று கடைசி நிமிடத்தில் கவலைப்பட்டுக் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்காராமல், வீட்டிலிருக்கும் தக்காளிக்காய், புடலங்காய், கோவைக்காய் போன்ற காய்களை வைத்தும் அவியல் செய்து வீட்டிலிருப்பவர்களின் மனதைக்குளிர வைத்த ஒரு புத்திசாலிப்பெண் கண்டுபிடித்ததாகத்தான் இருக்க வேண்டும்.
தேவையானவை:
தக்காளிக்காய் - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - 2
தயிர் - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காயெண்ணெய் - எவ்வளவு சேர்க்கிறோமோ அவ்வளவு மணக்கும். ஆகவே சற்றுத்தாராளமாகவே.
உப்பு - ருசிக்கேற்ப

மசாலாவுக்கு:
தேங்காய் - 1 மூடி.
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.
சின்ன வெங்காயம்- 2

எப்படிச் செய்ய வேண்டும்?..

தக்காளிக்காய் மற்றும் வெங்காயத்தை நீளத்துண்டுகளாக அரிந்து, தனித்தனிக் கிண்ணங்களில் போட்டு வைக்கவும்.

மசாலாவை, ஒன்றிரண்டாகச் சிதைத்து வைக்கவும். கரகரவென்று அரைப்பதை சிதைத்தல் என்பது நாஞ்சில் வழக்கு. அம்மியில் சிதைத்தால் ருசி கூடும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

முதலில், ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு அதில், வெங்காயத்தைப்போட்டு லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். அதனுடன் தக்காளிக்காய்த்துண்டங்களைப் போட வேண்டும்.

இத்துடன் அரை டீஸ்பூன் உப்பும், சிறிதளவு தேங்காயெண்ணெய்யும் சேர்த்து வேக வைக்கவும். அவியலில் அதிகமும் நீர்ச்சத்துள்ள காய்களே சேர்க்கப்படுவதால் தண்ணீரைச் சற்றுக்குறைவாக, கால் கப் அளவுக்கு மட்டுமே சேர்த்து வேக விடவும். தண்ணீரை அதிகம் சேர்த்தால் குழம்பைப்போல் நீர்த்து விடும். அள்ளி இலையில் வைக்கும்போது சொன்ன பேச்சு கேட்கும் குழந்தையைப்போல் அவியல் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். இதுவே எங்கள் நாஞ்சில் அவியலின் சாமுத்ரிகா லட்சணம். அவியல் செய்து முடிக்கும் வரை, அடுப்பு மிதமாகவே எரியட்டும். காய் வேகும்போது ரெண்டு ஸ்பூன் தயிரைச்சேர்க்கவும். சிலர் ஒரு ஸ்பூன் அளவில் புளிக்கரைசலையும் சேர்ப்பார்கள்.

முக்கால் வேக்காடு வந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை காய்களோடு சேர்த்து, இன்னொரு அரைஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், உருவிய கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசாகக் கிளறி, மூடி போட்டு வைத்து விடவும். அவியலில் இருக்கும் காய் நன்றாக வெந்தபின், இறக்கி ஆறின பிற்பாடு ரெண்டு ஸ்பூன் தயிரைச் சேர்த்து லேசாகக் கலக்கவும். அவியல் சூடாக இருக்கும்போது தயிரைச் சேர்க்கக்கூடாது. நீர்த்துப் போய்விடும். அவியல் ருசியும் நன்றாக இருக்காது. லேசாகக் குழைந்தாற்போல் கெட்டியாக இருக்கும் அவியலின் மணமும் ருசியும் இன்னும் ஒரு பிடி சாதத்தை வயிற்றுக்குள் தள்ளச்செய்வது உறுதி.

எல்லாக்காய்களையும் போட்டுச்செய்யும் அவியலை நாஞ்சில் பகுதி மக்கள் கூட்டவியல் என்பார்கள். இதன் செய்முறையை பூர்வாசிரமத்தில் அமைதிச்சாரல் என்ற பெயரில் உலவிக்கொண்டிருந்தபோது காலட்சேபம் செய்திருந்தேன். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உணவு வகை இல்லாமல் நாஞ்சில் நாட்டில் விருந்துகள் நடப்பதில்லை. ஓணம், பொங்கல், புத்தரிசி பொங்குதல், திருமணம் மற்றும் குடும்ப விழாக்கள் போன்ற வைபவங்களின்போது மட்டுமல்லாமல் யாராவது விருந்தினர் வந்தாலும் விசேஷமாகச் சமைக்கப்படும். இந்த அவியலைச் சமைப்பதை வைத்தே ஒருவர் சமையலில் தேர்ச்சி பெற்றவரா இல்லையா என்பதையும் நாஞ்சில் நாட்டு மக்கள் சொல்லி விடுவார்கள். முக்கியமாக தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில்(ஒடுக்கத்து வெள்ளி) வீடுகளில் சாம்பாரும் அவியலும்தான் அன்றைய மெனு. 
கூட்டவியல்
மற்றபடி அவரவர் விருப்பத்திற்கேற்ப தனித்தனிக்காய்களை உபயோகப்படுத்தியும் அவியல் செய்யலாம். உதாரணமாக புடலங்காய் மட்டுமே போட்டும் அவியல் செய்யலாம். காய்கறிகள் வெவ்வேறானாலும் மசாலாவும் செய்முறையும் ஒன்றே. இதுபோக முட்டை, முருங்கைக்காய், பருப்புவடை இம்மூன்றையும் சேர்த்துச் செய்யப்படும் அவியல் வகை ஒன்றுண்டு. தவிர சில வகை மீன்களைப்போட்டும் அவியல் செய்யப்படும். முட்டை, முருங்கைக்காய், பருப்புவடை அவியல் செய்யப்படும் தினங்களில் சுடச்சுட ரசம் செய்வது வழக்கம். அந்த மாதிரியான தினங்களில் சிறப்பைக்கூட்டுவதற்காக வெளியே சிலுசிலுவென்ற சாரல் இருப்பது மேன்மை. பள்ளியிலிருந்து நனைந்து கொண்டே மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்து சுடச்சுட ரசம்சாதம் சாப்பிடுவது அமிர்தம் உண்பதற்குச் சற்றும் குறைந்ததல்ல. ஆனால் அத்தருணங்கள் எப்போதும் வாய்க்காது. ஆகவே, `ஆனியாடிச்சாரல் பெய்யும் தினங்களில் வீடுகளில் அடிக்கடி முருங்கை பருப்புவடை அவியலும் அசைவ அவியலும் செய்யப்படுவது தற்செயலானதே எனக்கொள்க.

Friday 31 July 2015

நாஞ்சில் நாட்டு சமையல் - பெரும்பயறு, பூசணி எரிசேரி

குமரி மாவட்டத்தில் முன்பெல்லாம் கோவில்களில் விழாக்கள் நடைபெறும்போது பிரசாதமாக மதிய வேளைகளில் சம்பா அரிசிக்கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். முக்கியமாக முருகன் கோவில்களில் ஒடுக்கத்து வெள்ளிக்கிழமைகளில் (தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளி) கட்டாயமாக வழங்கப்படும். ஒரு வகையில் இன்றைய தினங்களில் கோவில்களில் நடக்கும் அன்னதானத்துக்கு முன்னோடி என்றே இதைச்சொல்லலாம். கூடவே தொட்டுக்கொள்ள எப்பொழுதாவது வழங்கப்படும் கறியின் சுவையோ சொல்லி முடியாது. பெரும்பயறும் பூசணியும் மணக்க தேங்காய் ருசிக்க வைக்கப்படும் அந்தக்கறியின் சுவை இன்னும் நாவிலேயே இருக்கிறது. இது கேரளாவில் மத்தன் எரிசேரி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. 

கொஞ்சம் வேலை வாங்குவதோடு, செரிப்பதற்கும் சற்றுக் கடினமாக இருப்பதால் வீடுகளில் எப்போதாவதுதான் செய்யப்படுகிறது. பொதுவாக எங்களூரில் எரிசேரி செய்யும் தினத்தன்று ரசமும் செய்வது கட்டாயமான ஒன்று.

தேவையானவை:
மஞ்சள் பூசணி - அரைக்கிலோ
சேனை - அரைக்கிலோ
வாழைக்காய் -1 (நேந்திரங்காய் கிடைத்தால் உசிதம்)
பெரும்பயறு - 1/2 கப் (காராமணியை எங்களூரில் பெரும்பயறு என்போம்)
துருவிய தேங்காய் - இரண்டு கப். (அதிகம் சேர்த்தாலும் பாதகமில்லை. "நாஞ்சில் கறிகளுக்கு தேங்காயை அள்ளிப்போட வேண்டும்" என்ற பொன்விதியை நினைவு கூர்க)
தேங்காயெண்ணெய் - எண்ணெய்ப்பாட்டிலை கைக்கெட்டும் தூரத்திலேயே வைத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை - அதிகம் சேர்த்தால் முடி நன்றாக வளருமாம். ஆகவே அதையும் விருப்பத்திற்கேற்ற அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிளகாய்த்தூள்- காரத்துக்கேற்ப
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
நல்ல மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - மிளகின் சம அளவு
கடுகு,உளுந்தம்பருப்பு - சிறிதளவு
உப்பு - ருசிக்கேற்ப
மற்றபடி நீளமான கரண்டிக்காம்பு கொண்ட அகப்பை ஒன்றும் தேடிப்பிடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு எரிசேரி தயாராகிறது:

வறுப்பதால் மணம் கூடும் ஆகவே, பெரும்பயிறை லேசாக வறுத்து ஐந்தாறு மணி நேரம் ஊற வைக்கவும். சிலர் வறுக்காமலும் சேர்ப்பார்கள். எரிசேரி செய்ய வேண்டுமென்று காலையில்தான் தீர்மானிக்கப்பட்டதென்றால் வீட்டிலிருக்கும் ஹாட்பாக்கில் கொதிக்கக்கொதிக்க நீரை ஊற்றி அதில் பயிறை இட்டு இறுக மூடி விடவும். அரை மணி நேரத்தில் நன்றாக ஊறி விடும்.

நல்லமிளகு, சீரகம் இரண்டையும் பொடித்து ஒரு பக்கமாக வைத்துக்கொள்ளவும். தேங்காய்த்துருவலில் சரிபாதியை மிளகாய்த்தூளுடன் சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். 

இந்த எரிசேரிக்கு காய்களை சதுரங்களாக நறுக்கிப்போடுவார்கள். ஆகவே, சேனையை தோல் நீக்கி நடுத்தர அளவில்  (2செ.மீ) சதுரங்களாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். வாழைக்காயையும் மஞ்சள்பூசணியையும் இன்னொரு பாத்திரத்தில் போடவும். பூசணியை மட்டும் தோலோடு போடலாம். விழாக்களுக்காகப் பெரிய அளவில் செய்யும்போது வாழைக்காயையும் தோலோடு போட்டு விடுகிறார்கள். சேனையை நன்கு அலசி தண்ணீரை வடித்து விட்டு, மூழ்கும் வரை மறுபடியும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். லேசாகக்கொதித்ததும் தண்ணீரை வடித்து விடவும். இதனால் காரல் குறையும்.

எரிசேரி செய்யவிருக்கும் பாத்திரத்தில் சேனையையும் பயிறையும் போட்டுச் சற்றே வேக வைக்கவும். பின் பூசணியையும் வாழைக்காயையும் போட்டு சிறிதளவு உப்பிட்டு, பொடித்த மிளகுசீரகக் கலவையையும் மஞ்சள்தூளையும் இட்டு வேக வைக்க வேண்டும். அரை வேக்காடு ஆனதும் அரைத்து வைத்த தேங்காயை இட்டு தேங்காயெண்ணெய் சேர்த்து, அகப்பைக்கணையால் லேசாகக் கிளறி கொஞ்சம் கறிவேப்பிலையும் தூவவும். முக்கால் வேக்காடு ஆனதும் தாளிதம் தயார் செய்ய வேண்டும்.

ஒரு வாணலியில் தேங்காயெண்ணெய்யை சற்று தாராளமாகவே விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பை இட்டு வெடித்ததும், ஒரு கையளவு உருவிய கறிவேப்பிலையை இட்டுப் பொரிய விடவும். பின் மீதமிருக்கும் தேங்காய்த்துருவலை இட்டு பொன்னிறமாகும் வரை கைவிடாமல் வறுக்கவும். இல்லையென்றால் தேங்காய் கரிந்து மொத்த உழைப்பும் வீணாகும். இந்தத்தாளிதத்தை தயாராகிக்கொண்டிருக்கும் எரிசேரியில் ஊற்றவும். கூட்டு பதத்தில் வரவேண்டும் ஆகவே, தேவைப்பட்டால் சிறிது நீரும் ஊற்றிக்கொதிக்க வைக்கவும். 

காய் வெந்து லேசாகக் குழைந்து அதே சமயம் அவற்றின் உருவம் மாறாமல் இருக்க வேண்டும். ஆகவே இந்த ப்ரொஜெக்ட்போது, காய்களைக்கிளற வேண்டிய சந்தர்ப்பங்களில் கரண்டிக்காம்பை மட்டுமே உபயோகிப்பது  நனி நன்று.

எரிசேரி வெந்து மணம் வந்ததும் இறக்கி மேலும் ஒரு கரண்டி தேங்காயெண்ணெய்யை ஊற்றி மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பின் அகப்பையால் அள்ளியெடுத்து சோற்றில் ஊற்றி குழச்சடிப்பதோ, அல்லது ரசம் விட்டுக் குழையப்பிசைந்த சாதத்தின் அருகே வைத்துக்கொண்டு தொட்டுக்கொள்வதோ அவரவர் ரசனை.. அவரவர் சுவை நரம்புகளின் அமைப்பு. சற்று மாறுதலாக இருக்கட்டுமென்று ஒரு நாள் வெண்பொங்கலுக்குத் துணையாய் இதைச்செய்தேன். "ஒன்ஸ்மோர்" என்று ஆர்டர் வந்திருக்கிறது.

Monday 27 July 2015

சாரல் துளிகள்


இப்பொழுதோ அப்பொழுதோ என்றிருக்கும் கருமேகம் போல் தொக்கி நிற்கிறது கண்ணீர், வாகனத்திற்காய் காத்து நிற்கும் பள்ளிக்குழந்தையின் தூக்கம் சொட்டும் கண்களில்..

தனக்குச் சாதகமான சொற்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, தனக்குப் பலன் தருபவற்றை மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் சிலரது அறிவுத்திறன் அமையப்பெற்றிருப்பதுவும் கூட இறைவனின் திருவிளையாடலே.

கடமையைச் செய்தபின், கிடைத்த அனுபவம் மட்டுமே சில சமயங்களில் பலனாக எஞ்சுகிறது.

முயல்பவன் முன்னேறுவான், முயலாதவன் தலைவிதி மேல் பழி போட்டு முடங்கிக்கொள்வான்.

"புரிந்ததா?" என்று அழுத்திக்கேட்கப்படும்  கேள்வியில் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கட்டளையும் தொக்கி நிற்கிறது.

ஆகச்சிறந்த நாவல்கள் சில எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் அதற்குச் சற்றும் சுவாரஸ்யம் குன்றாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தன்னைச்சுடாத வரையில் நெருப்பானது, ஒளியாகவும் தீபமாகவும் வணங்கப்படுவதைப்போல், அவரவரைப் பாதிக்காத வரையில் எத்துன்பமும் மிகச்சாதாரணமானதாகவே எண்ணப்படுகிறது.

தான் விரும்பியவற்றை மட்டுமே தன் காதுகள் கேட்க வேண்டும், தனக்குப் பிடித்த சொற்களை மட்டுமே பிறர் பேச வேண்டும் என்றிருந்தால் இறுதியில் தனிமையின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க வாய்க்கும்.

வளர்ப்பவனை நம்பாமல் வெட்டுபனை நம்பிய ஆடுகளின் கடைசிக்கணத்தில் கொலைவாளில் பிரதிபலித்தன அவை இழந்த அத்தனையும்.

தின்னும் தனிமைக்கு எண்ணங்களை இறைத்தவன் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பிக்கிறான் இன்னொரு முறை.

Wednesday 22 July 2015

நாஞ்சில் நாட்டு சமையல் - தொவரம்/துவரன்

விருந்துகளில் மட்டுமல்ல தினப்படி சமையலிலும் தொவரம் இடம் பிடிக்கிறது. கேரளாவில் "தோரன்" என்றும் நாஞ்சில் பகுதிகளில் துவரன், தொவரம் என்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுவதைப்போலவே செய்முறையிலும் சற்று வித்தியாசப்படுகிறது.

காய்கறிகளைத் தினமும் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது உடல் நலனுக்கு, முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு எவ்வளவு நல்லதென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அந்தப்படியே, முட்டைக்கோஸ், அவரைக்காய், பாகற்காய், கேரட், பீன்ஸ், வெண்டைக்காய், சேனை, சிறுகிழங்கு, பலாக்கொட்டை, பலாக்காய், புடலங்காய், பீட்ரூட், வாழைத்தண்டு, வாழைக்காய், கொத்தவரங்காய் எனப் பல்வேறு தொவரன்களும், பருப்புக்குழம்பு, சாம்பார், தீயல், புளிக்கறி என்று தினப்படி செய்யப்படும் எல்லாக்குழம்புகளுடனும் இசைந்து போகும். காய்கறி சாப்பிட மறுத்து சிணுங்கும் குழந்தைகளுக்கு சாதத்தில் ஊற்றிய பருப்பு அல்லது புளிக்கறியோடு கொஞ்சம் தொவரத்தையும் இட்டு நொறுங்கப்பிசைந்து, "இன்னா பாத்துக்கோ மக்களே,.. தொட்டுக்கறி வைக்கவேயில்ல" என்று எங்களூர் தாய்மார்கள் ஏமாற்றி காய்களை ஊட்டி விடுவார்கள்.

காய்களை நறுக்கத்தான் நேரம் பிடிக்குமேயன்றி மசாலா அரைப்பதற்கோ, துவரன் செய்வதற்கோ அதிக நேரம் பிடிக்காது. "நாஞ்சில் நாட்டுக்கறிகளுக்கு தேங்காயைக் கிள்ளிப்போடக்கூடாது... அள்ளிப்போட வேண்டும்" என்ற பொது விதியின்படி இதற்கும் தேங்காயை அதிகம் சேர்க்க வேண்டும். அரைக்கிலோ நறுக்கிய காய்க்கு ஒரு கப் தேங்காய்த்துருவல் தேவை. அரைக்கப் அதிகம் சேர்த்தாலும் பாதகமில்லை :-))

மிக்ஸி புழக்கத்தில் வராத, அம்மியில் வைத்து மசாலா அரைத்த அந்தக்காலத்தில் முதலில் ஒரு சின்னத்துண்டு மஞ்சளை அம்மியில் வைத்து குழவியால் நைத்து, பொடிப்பொடியாக்கியபின் அரை ஸ்பூன் சீரகத்தையும் இரண்டு மிளகாய் வற்றல்களையும் வைத்து மையாக அரைத்தபின் தேங்காயையும் ஒரு பல் பூண்டையும் வைத்து தண்ணீர் சேர்க்காமல் மசாலாவைக் கரகரவென்று குழவியை நீட்டியரைத்து அம்மிக்குழவியை நட்டக்குத்தற நிறுத்தி மசாலாவை மேலிருந்து கீழாக வழித்தெடுத்து, அம்மியிலிருக்கும் மசாலாவுடன் சேர்த்து அள்ளியெடுத்து வைப்பார்கள். சீரகமும் மஞ்சளும் பூண்டும், தேங்காயுமாக அடுக்களையே கமகமக்கும்.

இப்போது அதற்கெல்லாம் வழியுமில்லை, மனமுமில்லை, அரைத்தெடுக்க கைகளில் சக்தியுமில்லை. மயிலாடியிலிருந்து ஆசைப்பட்டு வாங்கி வந்த அம்மியில் ஐந்தாவது மாடியில் மசாலா அரைத்தால், இரண்டாம் மாடியிலிருந்து "ஹே பக்வான்!!.. கித்னா அவாஜ் ஆரஹா ஹை!!"என்று ஆட்சேபக்குரல் எழுகிறது. ஆகவே மஞ்சள், சீரகம், பூண்டு இவைகளை சட்னி ஜாரில் இட்டு ஒரு சுற்று சுற்ற விடவும். பின் தேங்காயையும் மிளகாய்த்தூளையும் இட்டு கரகரப்பாக அரைத்தெடுத்து வைக்கவும். விரும்பினால் பச்சை மிளகாயையும் காரத்துக்கேற்ப சேர்த்து அரைக்கலாம். மசாலா தயார்.

வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுந்தப்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இவற்றை ஒவ்வொன்றாக இட்டுத்தாளித்துக்கொண்டு, பொடியாக நறுக்கிய ஏதேனும் காயைப்போட வேண்டும். சிட்டிகை உப்புச்சேர்த்துக் கிளறி விட்டு மூடியிட்டபின் மெல்லிய தணலில் வேகவிட வேண்டும். இடையிடையே மூடியைத்திறந்து லேசாக அடிமேலாகக் கிளறிக்கொடுப்பது அவசியம். தீ தகதகவென்று எரியுமானால் காய் தீய்ந்து விடும் என்று உங்களுக்குத்தெரியாதா என்ன? காய் முக்கால் வேக்காடு வந்தபின் அகப்பையால் அதில் சிறியதாகக் குழித்து மசாலாவை அதிலிட்டு காயாலேயே மூடிப்பொதிந்து வாணலியை மூட வேண்டும். சிலர் காயின் மேலேயே மசாலாவை வைத்து மூடுவார்கள். இரண்டுக்கும் சுவையில் ஒரு சதவீதம் வித்தியாசமிருப்பதை நடைமுறையில் காணலாம். சில நிமிடங்களுக்குப் பின் தணலைக்கூட்டியபின் மூடியைத்திறந்து காயுடன் மசாலா நன்கு சேர்ந்து மணம் வரும் வரை காய் உடையாமல் கரண்டிக்காம்பால் கிளறியபின் இறக்கி வைக்க வேண்டும். கரண்டிக்காம்பை எங்களூரில் "அகப்பைக்கணை" என்று சொல்வோம். பேச்சு வழக்கில் "ஆப்பக்கண" :-)
இதில் சில காய்களுக்கு மட்டும் செய்முறையில் சிற்சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

வெண்டை, பாகல் போன்ற காய்வகைகளுக்கு தாளிதத்தில் இரண்டு பெரிய வெங்காயங்களை நறுக்கிச் சேர்க்க வேண்டும். காயுடன் ஒரு ஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வேக விடவேண்டும். இது பாகற்காயில் கசப்பையும் வெண்டைக்காயில் வழுவழுப்பையும் குறைக்கும். அப்படியில்லையெனில் அரை மூடி எலுமிச்சையையும் பிழிந்து சேர்க்கலாம். சிலரது வழி தனீ வழி.. அவர்கள் மேற்குறிப்பிட்ட எதையும் செய்யாமல் மசாலாவில் புளியங்கொட்டையளவு புளியைச்சேர்த்து அரைத்து விடுவார்கள்.

சேனையை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது, குழைந்து விடும். புளியங்கொட்டையளவு பெரிதாக நறுக்கி அலசி, ஒரு கொதி வரும் வரை வேக விட்டு, தண்ணீரை வடித்து விட வேண்டும். அதன் பின் வழக்கம்போல் துவரன் செய்யலாம். இதனால் சாப்பிட்டபின் தொண்டைக்கரகரப்பு ஏற்படாது. பலாக்கொட்டை மற்றும் சிறுகிழங்கிற்கும் இதே முறைதான். உருளைக்கிழங்கையும் இதேமுறையில் வேகவைத்து, தண்ணீரை இறுத்து தொவரம் வைக்கலாம். ஆனால், அதற்கு எங்களூரில் "பொடிமாஸ்" என்று பெயர் :-)). தீயலுக்கு அட்டகாசமான தொடுகறியும் கூட. சேனை மற்றும் வாழைக்காய்த்தொவரனுக்கு மசாலாவில் ஐந்தாறு நல்லமிளகையும் சேர்த்தரைக்க வேண்டும். இல்லையெனில் வாயு பகவானின் கொண்டாட்டக்களமாக நம் வயிறு ஆகி விடும்.

"இந்தத்துவரனில் என்ன வித்தியாசம் இருக்கிறது?. எல்லா ஊரிலும் உள்ள சமையல்தானே, நீங்க துவரன்னு சொல்றதை நாங்க பொரியல்ன்னு சொல்லுவோம்" என்பவர்களுக்கு.... "இந்தத் தொவரம் அச்சு அசலாட்டு பாரம்பரியமா எங்க நாஞ்சில் நாட்டுல உள்ளதுபோல செய்யப்படுகதாக்கும்"

LinkWithin

Related Posts with Thumbnails