Thursday 12 November 2015

சாரல் துளிகள்

1. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பசிமுகம் பார்க்கப் பொறாத தாய் ஒருத்தி இருக்கிறாள். அவள் வீட்டில் எந்நேரத்திலும் நிரம்பி வழிகிறது அட்சய பாத்திரம், அவள் அன்பைப்போல்.

2. உலகில் அதிகமாகக் கவி பாடப்படுபவர்களில் குழந்தை, நிலா, அன்னை இம்மூவரும் முக்கியமான இடங்களை வகிக்கிறார்கள்.

3. ஒரு செயலை, "ஏன் செய்தாய்?" என்று கேட்பதற்குப் பத்து பேர் இருப்பதைப் போலவே "ஏன் செய்யவில்லை?" என்று கேட்டுத் திட்டுவதற்கும் பத்து பேர் இருப்பார்கள் என்பது உலக நியதி.

4. தவழ்ந்தபடி தரையை ஆராய்ந்து கொண்டிருந்த குழந்தையின் பார்வையில் பட்டிருக்க வேண்டாமென்று, அப்புறமாய் வருத்தப்பட்டுக் கொண்டது கட்டெறும்பு.

5. யாரோ தன் குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டே செல்கிறார்கள்.
தன்னைத்தான் கொஞ்சுவதாக
மகிழ்ந்து மிழற்றுகிறது
பிச்சைக்காரியின் இடுப்பிலிருக்கும்
சிறு மழலை.

6. இன்னொரு வீட்டில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவனின் ஆடையில் தீ எப்பொழுதோ பற்றிப்பரவ ஆரம்பித்திருந்தது.

7. அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை
என்கிறது உன் தரப்பு
வாழ்வென்பது திருப்பங்களாலும் ஆனது
என்பது என் கட்சி
இரண்டையும் கேட்டுக்கொண்டு
மௌனமாய்த் தீர்ப்பெழுதிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை
இரண்டும் ஒன்றுதானென்று.

8. அடுத்தடுத்த விவாதங்களின்போது மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பி விட்டாலும் முதன்முறை கேட்கும்போது பெரும்பாலும் மிகச்சரியாகவே பதிலளித்து விடுகிறது மனது.

9. அடமாய் ஒளித்து வைத்திருக்கிறது ஆழ்குளம்,
வெளிவர வேண்டிய ஏற்பாடுகளை அந்தத் தாமரை மொட்டு ரகசியமாய் செய்து கொண்டிருப்பதை அறியாமல்.

10. மிகப்பத்திரமாக வைத்து விட்ட திருப்தியிலேயே வைத்த இடமும் பொருளும் நினைவிலிருந்து அகன்று விடுகின்றன.

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அற்புதமான கருத்துக்கள் படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

சில சிந்திக்க வைக்கின்றன. சில கவிதையாய் நெகிழ்த்துகின்றன.

இந்த பத்தாவது இருக்கிறதே..:), எத்தனை முறை பட்டாலும் திரும்பத் திரும்ப நிகழும் ஒன்று:( !

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் நன்று. பகிர்வுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails