Monday 26 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 6 (பண்டிகைகள்)

பண்டிகைகளும் விழாக்களும், அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளில் சோர்வுற்று நொய்ந்திருக்கும் மனிதனுக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றன. அல்லது,.. தலைகீழாகவும் இருக்கலாமோ!!.. புத்துணர்வூட்டவென்றே மனிதன் இவற்றை உருவாக்கினானோ!! எது எப்படியோ, பண்டிகைகளும் விழாக்களும் மனிதனுக்கு, அவ்வப்போது சமுதாயத்தில் தான் தனியில்லை என்ற பிரக்ஞையைத் தக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

பல்வேறு கலாச்சாரங்களின் கதம்பமே இந்தியா. ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு தடவையும் மக்களின் உணவுமுறை, பழக்க வழக்கங்கள், கொண்டாட்டங்கள் எல்லாமும் மாறுவதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் ஒரு சிலவற்றைப் பதிவு செய்தவை இங்கே வரிசை கட்டுகின்றன. 

வட இந்தியாவில் மார்ச் முதல் வாரத்துக்கப்புறம் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்தாலும், ஹோலியே வேனல்காலத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இதோ இன்னும் மூன்று தினங்களில் ஹோலி வரவிருக்கிறது. வண்ணங்களில் குளிக்கக் காத்திருக்கின்றனர் மக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைப் பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். 

வானவில்லின் அத்தனை வண்ணங்களும்..

ஹோலிகா தகனம் மற்றும் கலர்பூசு விளையாட்டுக்கான பொருட்கள் விற்பனைக்கு.
எரியக்காத்திருக்கும் சொக்கப்பனை
ஹோலிகா தகனம்
வண்ணங்கலந்த தண்ணீரைப் பீய்ச்சி விளையாட உபயோகிக்கும் பிச்காரி எனப்படும் பீச்சாங்குழல்கள்.
ஹோலியைத்தொடர்ந்து மஹாராஷ்ட்ராவில் புத்தாண்டு தினமான "குடி பாட்வா" கொண்டாடப்படுகிறது. //தமிழ்நாட்ல விஷூன்னும், ஆந்திராவில் யுகாதின்னும் கொண்டாடற மாதிரி மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா”ங்கற பேர்ல புது வருஷம் கொண்டாடப்படுது. இங்கே உள்ள மக்களுக்கு இன்னிக்குத்தான் சித்திரை முதல் தேதியாக்கும். சித்திரையை இங்கேயுள்ளவங்க “சைத்ர”ன்னு சொல்லுவாங்க.// என ஆரம்பித்து இப்பண்டிகையைப் பற்றி முன்னொரு முறை எழுதியது இங்கே பத்திரமாக இருக்கிறது. 

வீடுகளில் ஏற்றப்படுவது போலவே வியாபார நிறுவனங்களிலும் "குடி" ஏற்றப்படுவதுண்டு. ஒரு கரும்புச்சாறு விற்பனையகத்தில் அவரது தொழிலுக்குப் பொருத்தமாக கருப்பங்கழியில் ஏற்றப்பட்டிருந்த "குடி" அனைவரையும் கவர்ந்தது. வித்தியாசமான சிந்தனைதான் இல்லையா?
மஹாராஷ்ட்ர மக்களின் விருப்ப தெய்வமான பிள்ளையார். இவரை மஹாராஷ்ட்ரா மக்கள் கொண்டாடும் விதத்தை எத்தனை எழுதினாலும் தீராது. இவரை மொபைலில் எடுத்த படங்கள் தனிப்பதிவாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் இப்பண்டிகை, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆரம்பித்து பதினான்காம் நாளான அனந்த சதுர்த்தசி வரையிலும் மாநிலம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்தே பிள்ளையார் சதுர்த்தி  அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், வெகு காலத்திற்குப் பின் அது பொது மக்களும் கொண்டாடும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. 
ஹோலிப்பண்டிகையை அடுத்து இங்குள்ள மக்கள் நவராத்திரியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். பத்து நாளும் கர்பா, தாண்டியா என ஆட்டம் பாட்டத்தோடு அதிர வைப்பார்கள். நம்மூர் மாதிரி படி கட்டுவதில்லையே தவிர, முளைப்பாரி போன்ற எல்லாச் சடங்குகளும் இங்கே உண்டு. அஷ்டமியன்று ஒன்பது கன்யாப்பெண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு சகலவிதமான உபசாரங்களும் செய்து பூஜித்தல் நல்லது என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. 

மகிஷாசுரமர்த்தினி.
எங்கள் வீட்டுக்கொலுவில் என் கைப்படச்செய்த அம்பாள் அலங்காரம். அவளுக்குக் குஞ்சலமும் செய்து அணிவித்தேன்.
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். 

சென்னை-கோடம்பாக்கம் மேம்பாலத்தினருகில் ஒரு சிறிய கோவிலின் முகப்பில் அமைந்திருக்கும் திருவுருவம். 
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர்-25ம் தேதி கொண்டாடப்படும் "கிறிஸ்துமஸ்" பண்டிகையைப் பற்றி அறியாதவருண்டோ?!. தீபாவளிக்கடுத்தபடியாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு இங்குள்ள மால்கள் வண்ண விளக்குகளால் விதவிதமாக அலங்கரிக்கப்படும். தவிரவும், சாண்டாக்ளாஸ் அலங்காரங்களும் அமைக்கப்படுவதுண்டு. அவற்றைக்காண்பதற்கென்றே மக்கள் கூட்டம் குவியும். பாட்டு, ஓவியம் போன்ற வழக்கமான போட்டிகளைத்தவிர திடீர் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். 

இங்குள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் அலங்காரம்.




தொடரும்..

Friday 23 February 2018

பாகற்காய் பிட்ளை

ஒரு காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்து மக்களின், குறிப்பாக நாகர்கோவிலில் பெரும்பாலான மக்களின் நா பிட்ளையை ருசித்துப் பழக்கப்படவில்லை. இப்போதெல்லாம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏகப்பட்ட சமையல் நிகழ்ச்சிகளின் புண்ணியத்தால் எல்லாம் நிரந்து வந்துவிட்டது. அப்பொழுதெல்லாம் நாகர்கோவில் பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தெரியாது. வீட்டில் டி.வியும் கிடையாது. அப்படியிருக்க எண்பதுகளின் கடைசியில் எனக்கு மட்டும் இந்தப்பதார்த்தத்தைப் பற்றி எப்படித் தெரிய நியாயமுண்டு? நானும், திருமணம் முடிந்து மும்பை செல்லும்வரையில் இதை அறிந்திருக்கவில்லை. ஒரு ரகளையான சம்பவத்தில்தான் எனக்கு அறிமுகமானது.

மும்பையில் ஒரு நாள் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த ரங்க்ஸ், அங்கேயே டின்னர் முடித்து விட்டு வந்தார். வந்தவர் சும்மா இருக்காமல், “உனக்கு பாகற்காய் சாம்பார் வைக்கத்தெரியுமா?” என்று கேட்டார். சாதாரண முருங்கைக்காய் சாம்பார், ரசம், மற்றும் ஒன்றிரண்டு துவரன் வகைகளை மட்டுமே சமைக்கத்தெரிந்த எனக்கு இது புது அயிட்டமாகப் பட்டது. என்ன பெரிய்ய்ய பாகற்காய் சாம்பார்? முருங்கைக்காய்க்குப் பதிலா பாகற்காய் போட்டால் போச்சு” என நானே சிந்தித்து, ஒரு நாள் செய்தேன். 

சாப்பிட்டவர், “பரவாயில்லை, ஆனா அந்த சாம்பார் கொஞ்சங்கூட கசக்கவேயில்லை” என்றார். சரிதான்… எந்தக் கணவர்தான் தன் மனைவியின் சமையலைப் புகழ்ந்திருக்கிறார்?!. குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால்தான் மனைவி நன்றாகச் சமைக்க முயன்று கொண்டே இருப்பார் என்ற சித்தாந்தம் போலிருக்கிறது என்றெண்ணி அப்புறம் அதைச் சமைப்பதையே விட்டு விட்டேன். ஊருக்குப் போயிருந்த போது அம்மாவிடமும், மாமியாரிடமும் கேட்டபோது அவர்களுக்கும் தெரியாது போகவே கொஞ்சம் நிம்மதியாயிற்று. “அப்பாடா!!.. நான் தனியாள் இல்லை”

பின் பல வருடங்களுக்குப் பிறகு, சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம் அவர்களின் ஒரு சமையல் குறிப்பை ஒரு பெண்கள் பத்திரிகையில் கண்டேன். “பாகற்காய் பிட்ளை” எனத் தலைப்பிடப்பட்ட அந்தக்குறிப்பை வாசிக்கும்போது, மிகவும் எளிதாக செய்து பார்த்துவிடலாம் போலிருந்தது. செய்து பரிமாறினேன். ரங்க்ஸின் முகத்தில் நாற்பது வாட்ஸ் LED பல்பின் வெளிச்ச்சம். இதுதான் அந்த பாகற்காய் சாம்பாராம். அடக்கடவுளே!! பருப்பு போட்டிருந்தால் அதெல்லாம் சாம்பார் ஆகிவிடுமா என்ன? ஆனாலும், பிட்ளையின் ருசி கொஞ்சம் தேங்காய் அரைத்து விட்ட சாம்பாரின் ரெண்டு விட்ட உறவு போல்தான் இருக்கிறது. பிட்ளையை கத்தரிக்காய், மற்றும் பூசணிக்காய்களிலும் செய்யலாம். கத்தரிக்காயில் செய்யும்போது ஒரு கைப்பிடி வேகவைத்த நிலக்கடலையைச் சேர்த்தால் ருசி அள்ளும்.

பாகற்காய் உடலுக்கும் நல்லதென்பதால் பிட்ளையை அடிக்கடி செய்வது வழக்கம். தீயல் செய்தால் அதன் கசப்பு காரணமாக பாத்திரத்தில் அப்படியே இருக்கும். பிட்ளை கொஞ்சம் வரவேற்பு பெற்றிருப்பதால் வாரத்துக்கொருமுறை செய்வேன். பொரியலுக்காக வாங்கும் காயில் ஒன்றைத் தனியாக எடுத்து வைத்தால் ஆயிற்று. இப்போது என் வீட்டு ஜன்னலில் படர்ந்திருக்கும் பாகற்கொடி வாரத்துக்கொரு காய் தருவதால், அதை வீணாக்காமல் பிட்ளை செய்து விடுகிறேன். வீட்டில் காய்த்தது என்பதால் பிள்ளைகளும் ஆசையாகச் சாப்பிடுகிறார்கள். இதைச்செய்வது ஒன்றும் பெரிய சிக்கலான செய்முறையில்லை. வீட்டின் அஞ்சறைப் பெட்டியிலிருக்கும் பொருட்களைக்கொண்டே சுலபமாகச்செய்து விடலாம். 

தேவையானவை
பாகற்காய் – 1 பெரியது. (பாகற்காய்ப் பிரியரானால் கொஞ்சம் கூடுதலாகவும் சேர்த்துக்கொள்ளலாம்)
துவரம்பருப்பு – அரை கப்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2 நடுத்தர அளவு
புளி – எலுமிச்சையளவு
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப(1 மேசைக்கரண்டியில் ஆரம்பிக்கவும்)
தேங்காய் – கால்கப்.
உப்பு – ருசிக்கேற்ப
கறிவேப்பிலை,- 1 இணுக்கு.
கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி(பிய்த்துப்போடவும்)
எண்ணெய் – 3 தேக்கரண்டி.
கடுகு,உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

எப்படிச்செய்யலாம்.
முதலில் புளியை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே ஊறப்போட்டு வைக்கவும். நன்கு ஊறினால் புளிக்கரைசல் அதிகம் கிடைக்கும். புளி ஊறிக்கொண்டிருக்கும்போதே நாம் மற்ற வேலைகளைக் கவனிக்கலாம். பருப்பை குழைய வேக வைக்கவும். அப்படியும் குழையாமல் விழித்துக்கொண்டிருந்தால், லேசான சூட்டுடன் இருக்கும்போதே, மத்து அல்லது உருளைக்கிழங்கு மசிப்பானை உபயோகித்து மசித்து வைக்கவும். வெங்காயத்தை நீளநீளமாக அரிந்து கொள்ளுங்கள். அதெல்லாம் முடியாது, பொடியாக நறுக்கினால்தான் எங்கள் வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடிக்கும் என்பவர்கள் அப்படியே செய்யுங்கள். ஒரு வெங்காயமா நம்மை பிட்ளை சாப்பிட விடாமல் தடுப்பது? தக்காளியையும் அந்தப்படியே அரிந்தோ அல்லது கொஞ்சம் பெரிய துண்டுகளாகவோ அரிந்துகொள்ளுங்கள்.  பாகற்காயை நெடுகக்கீறிப் பிளந்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, அரை வட்ட வில்லைகளாக அரிந்து வைக்கவும். தேங்காய்த்துருவலைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சின்ன கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடலைப்பருப்பு, சீரகம் போட்டு சீரகம் பொரிந்ததும் தேங்காயை இட்டு, லேசான பொன்னிறம் வரும் வரை வதக்குங்கள். அதன் பின் அதில் தனியாத்தூளை இட்டு கருகாமல் வதக்கவும். கடைசியாக மிளகாய்த்தூளை அதிலிட்டு ஒரு கிளறு கிளறியதும் இறக்கி ஆற வைத்து மையாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கசக்கிப்பிழிந்து புளிக்கரைசல் எடுத்து வைக்கவும். சுமார் இரண்டு கப் இருக்கட்டும்

பூர்வாங்க வேலைகள் முடிந்ததும், பிட்ளை செய்ய கொஞ்சம் அடிகனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாக்கவும். மீதமுள்ள எண்ணெய்யைப் பாத்திரத்தில் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பின் அதில் வெங்காயத்தை இட்டு லேசான பிங்க் வண்ணம் வரும்வரை வதக்கவும். (கோல்டன் ப்ரவுன் எல்லாம் வேண்டாம். குழம்பு கொஞ்சம் கசக்கிறது). அதன் பின், நறுக்கிய பாகற்காய்த்துண்டங்களை அதிலிட்டு, ஒரு சிட்டிகை உப்பிட்டு லேசான மொறுமொறுப்பு வரும்வரை வதக்கவும். கசப்பு தெரியாமலிருக்க இது சிறந்த வழி. உப்பு சேர்த்து வதக்கும்போது காய்கள் சீக்கிரம் வதங்கி விடும். பாகற்காயின் சிறப்பே அதன் கசப்புதான். ஆகவே கசப்பை நீக்குகிறேன் பேர்வழி என்று உப்பில் பிசிறி வைத்து பிழிவது, வென்னீரில் கொதிக்க விட்டு வடிகட்டுவது என்ற அபத்தமான வேலைகளைச்செய்து சத்தை வீணடிக்க வேண்டாம்.

கரைத்தெடுத்த புளித்தண்ணீரில் தக்காளித்துண்டங்களையும், கறிவேப்பிலையில் பாதியளவையும் போட்டு தயாராக வைத்திருக்கவும். பாகற்காய் வதங்கியதும் அதில் புளித்தண்ணீரை ஊற்றி பாகற்காய் வெந்து மென்மையாகும் வரை கொதிக்கவிட்டு, பின் பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வரும் வரைக்கும் குழம்பில் ஒரு கண் வைத்துக் காத்திருங்கள். சமைக்கும்போது, மொபைலில் ஃபேஸ்புக்கில் மேய்வது, மற்ற வலைத்தளங்களுக்குச்செல்வது என கவனம் சிதறாமலிருத்தல் அவசியம். இல்லையெனில் குழம்பு அடிப்பிடித்து, பக்கத்து வீட்டுக்காரர் வந்து சொல்லும்வரைக்கும் தன்னை மறந்து விடுவோம்.

கொதி வந்ததும், அரைத்து வைத்த மசாலாவைச்சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து குழம்பு கூட்டி, ருசிக்கேற்ப உப்பிட்டு நன்கு கொதிக்க வையுங்கள். குழம்புதான் என்பதற்காக அளவில்லாமல் தண்ணீரை ஊற்றிவிட வேண்டாம். கொஞ்சம் கொழுகொழுவென்று இருந்தால் ருசி மேம்படுகிறது. கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, காரம் சரிபார்க்கவும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் அப்படியே விடவும். மணம் வந்ததும், அடுப்பை நிறுத்தி குழம்பை இறக்கி விடலாம். மேலாக கொத்தமல்லி இலைகளைத்தூவி தட்டு போட்டு மூடிவிடுங்கள். இலையின் மணமும் சாரமும் குழம்பில் இறங்கட்டும். சுடச்சுட சாதத்தைப் பாத்தி கட்டி, பிட்ளையை ஊற்றி, அதில் ஒரு சொட்டு நெய் தெளித்து ஆசீர்வதித்து, அப்பளத்தின் துணையோடு குழச்சடிக்கும்போது…. ஆஹா!!.. ஆஹாஹா!!.

Tuesday 20 February 2018

வாங்க, பொக்கே(Bokeh) எடுக்கலாம்..

பொக்கே அல்லது பொக்கா என்ற ஜப்பானியச்சொல்லுக்கு "மங்கிய" என்று அர்த்தம். புகைப்படக்கலையில் இச்சொல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஒளிப்படத்தில் சம்பந்தப்பட்ட சப்ஜெக்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது, அதை மட்டும் மையப்படுத்தி அதைச்சுற்றியுள்ள பகுதிகள் சற்றே மங்கலாக தெளிவில்லாமல் வரும்படி செட்டிங்க்ஸ் அமைத்து படம் எடுக்கப்படுவதுண்டு. அவ்வாறு தெளிவில்லாமல் வரும் பிற பகுதிகள், அதாவது out of focus areaதான் பொக்கா அல்லது பொக்கேயை உருவாக்குகிறது. உதாரணத்திற்கு இடுகையின் ஆங்காங்கே ஒரு சில படங்களை இணைத்திருக்கிறேன்.

ஹாலிவுட் பொக்கா (Bokah)


இந்த பொக்காவையும், depth of field எனப்படும் படத்தின் ஆழத்தையும் பெரும்பாலானோர் குழப்பிக்கொள்வதுண்டு. பின்புலத்திலிருந்து வேறுபட்டு கருப்பொருள் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதைசுட்டுவது depth of field. தெளிவற்ற பின்புலத்திலின் மங்கிய தோற்றம், அது ஒளியை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பவற்றை (visual quality of the out of focus area)Bokah அடிப்படையாகக் கொண்டது. கருப்பொருளிலிருந்து பின்புலம் எவ்வளவு மென்மையாக அதே சமயம் அழகுடன் மங்கலாகியிருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே பொக்காவின் தரம் அளக்கப்படுகிறது. அவ்வாறு மங்கலாகும் பகுதிகளில் பிரதிபலிக்கும் ஒளியை காமிராவின் லென்ஸ் உள்வாங்கி, வட்ட வடிவங்களில் பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பு சம்பந்தமாக, உலகெங்குமுள்ள ஒளிப்படக்கலைஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. சிலருக்கு அது தெளிவான பிசிறில்லாத வட்டமாக இருக்க வேண்டும். சிலரோ, அதன் வடிவம் எப்படியிருந்தாலும் சரி, பின்புலத்தின் மங்கிய தரம் மேம்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வர். ஏனெனில், லென்ஸின் சுருங்கி விரியும் பகுதியான diaphragm நேரான ப்ளேடுகளால் ஆனதாக இருந்தால் எண்கோண வடிவ பொக்கேயும், வளைவான ப்ளேடுகளால் ஆனதாக இருந்தால் தெளிவான வட்ட வடிவ பொக்கேயும் உருவாகும். லென்ஸ் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதில் அடிப்படையே தவிர பிற காரணிகள் ஏதும் கிடையாது. ஆகவே வடிவத்தை சிலர் கணக்கில் கொள்வதில்லை.

ஒளிப்படங்களில் பொக்கே என்பது கருப்பொருளின் மீதான கவனத்தை இன்னும் குவியச்செய்வதாக, மென்மையான ஒளிவட்டங்களைக் கொண்டதாக அமைந்தால் அவை சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு அமைபவை க்ரீம் ச்சீஸ் பொக்கே என அழைக்கப்படுகின்றன. அன்றி கவனத்தைச் சிதறச்செய்யும் விதமாக ஒழுங்கற்ற வடிவங்களும், கீறல்களும் கோடுகளுமாக ஒளிச்சிதறல்களோடு அமைபவை அவ்வளவு ரசிக்கப்படுவதில்லை. ஒரு லென்ஸ் எத்தனை பிளேடுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அதிகபட்ச அபர்சர் அளவு என்ன என்பதைப்பொறுத்து பொக்கேயின் தரம் லென்ஸுகளுக்குத் தக்கவாறு வித்தியாசப்படும். F1.4 அல்லது 2.8 அபர்ச்சர் அளவு கொண்ட லென்ஸை உபயோகித்து எடுக்கப்படும் ஒளிப்படம் நல்ல தரமான பொக்கேயைக்கொண்டிருக்கும்.

க்ரீமி ச்சீஸ் பொக்கே..
நமது கண்ணின் கருவிழியின் நடுவிலிருக்கும் பாப்பாவோடு (pupil) காமிராவின் அபர்ச்சரை ஒப்பிட்டால், அது எப்படி இயங்குகிறது? ஒளியை எவ்வாறு உள்வாங்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதிக வெளிச்சம் உட்புகும்போது pupil சுருங்கி தேவையான ஒளியை மட்டும் கண்ணுக்குள் அனுப்புகிறது. குறைவான வெளிச்சத்தில் நன்கு விரிந்து முடிந்த மட்டும் ஒளியை உள்வாங்குகிறது. இதேதான் காமிராவிலும் நடக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் தெளிவான பொக்கா வடிவங்களை உருவாக்க காமிராவில் என்ன அளவுகளை(settings) அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை எளிதாக முடிவெடுக்கலாம். 

கருப்பொருளுக்கும் பின்புலத்துக்குமான தூர இடைவெளியும் பொக்கேயின் தரத்தை நிர்ணயிக்கிறது. இடைவெளி அதிகமாக இருந்தால், பின்புலம் முழுவதுமாக மங்கலாகி பொக்கே சீராக noise எனப்படும் இரைச்சல்கள் இல்லாமல் ஒரே நிறத்தில் உருவாகும். இதை cream cheese bokeh என அழைப்பார்கள். இவ்வாறான பொக்கே பொதுவாக portrait மோடில் எடுக்கப்படும் படங்களிலும், குறைந்த f number அபர்ச்சரிலும் உபயோகிக்கப்படுகிறது.

F number அதிகரிக்கும்போதோ, பின்புலத்துக்கும் கருப்பொருளுக்குமுள்ள தூர இடைவெளி அதிகமாக இல்லாதபோதோ, பின்புலம் ஓரளவு மங்கலாகி, வெளிச்சப்புள்ளிகள் மென்மையான ஒளிவட்டங்களைத்தோற்றுவிக்கும். இதை ஹாலிவுட் பொக்கே எனக் குறிப்பிடுவர். இதில்தான் நாம், ஒளியுடன் விளையாடி விரும்பிய வடிவங்களையும் வண்ணங்களையும் உருவாக்கலாம். இது மிகவும் எளிது. லென்ஸின் முன் விரும்பிய வடிவங்கள் வெட்டப்பட்ட அட்டைத்துண்டுகளைப் பொருத்தினால் போதும். அதன் பின் வழக்கம்போல் படமெடுக்க வேண்டியதுதான். சுலபமாக இருப்பது போல் தோன்றுகிறது அல்லவா?.. சந்தையில் கிடைக்கும் Bokeh Masters Kitஐ வாங்கிப்பயன்படுத்தினால் மிகவும் எளிதுதான். அமேசானில் மூவாயிரத்துச்சொச்சம் விலைக்கு கிடைக்கிறது. 

ஆனால், எல்லோராலும் அப்படி முதலீடு செய்ய இயலாதே. என்ன செய்வது?.. தன் கையே தனக்குதவி. ச்சார்ட் பேப்பர், காகிதம் வெட்டும் கத்தி, கத்தரிக்கோல், ஸ்கேல், காம்பஸ் சகிதமாக அரைமணி நேரம் செலவிட்டால் போதும். வீட்டில் நாமே எளிய முறையில் செய்து கொள்ளலாம். 

லென்ஸை ச்சார்ட் பேப்பரில் நெட்டுக்குத்தாக நிறுத்தி அதன் வட்ட வடிவத்தை பென்ஸிலால் அடையாளமிட்டுக்கொள்ளவும். அதன்பின் அதிலிருந்து சற்றே பெரிய வட்டமாக வெட்டிக்கொள்ளவும். சுமார் 3mm அதிக சுற்றளவு இருந்தால் போதும். இப்போது, அந்த வட்டத்தின் நடுப்புள்ளியைக் கண்டறிந்து, 3cm விட்டத்திற்கு ஒரு துளையை வெட்டிக்கொள்ளவும். உள்வட்டத்திற்கும் வெளி வட்டத்திற்கும் நடுவே உள்ள பகுதியில், அதே 3 செ.மி உயரம் வருமாறு, உள்வட்டத்தின் இருபுறமும், அதன் அளவுக்கு இணையாக நெடுக்கோடு ஒன்றை காகிதம் வெட்டும் கத்தியால் கீறிக்கொள்ளவும். இதன் வழியாகத்தான் நாம் வடிவங்கள் வெட்டப்பட்ட காகிதத்துண்டை செருகி லென்ஸின் முன் அனுப்பப்போகிறோம். ஆகவே கவனமாக வெட்டவும். பின் அதே 3 செ.மீ உயரமும், 10 செ.மீ நீளமும் கொண்ட இன்னொரு நீள்செவ்வகத்துண்டையும் வெட்டிக்கொள்ளவும். இந்த நீள் செவ்வகத்துண்டை இழுப்பதற்கு வசதியாக, இருபுறமும் ஒரு செ.மீ விட்டுவிட்டு மீதியுள்ள இடத்தில் இதயம், பூ, விளக்கு, ஸ்மைலி, என விரும்பிய வடிவங்களை வரைந்து மிகக்கவனமாக ஒரு சிற்பிக்கே உரிய லாவகத்துடன் கோடுகளின் மேல் கத்தியைச்செலுத்தி வெட்டவும். லென்ஸின் நன்கு விரியத்திறந்த diaphragm அளவுக்கே இந்த வடிவங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் வடிவங்களின் வெளியில் ஒளி சிதறாமல், நாம் வெட்டிய வடிவங்களின் ஊடே மட்டும் ஒளி வந்து வடிவத்தை உருவாக்கும். சொந்த அனுபவத்தில், 3 அல்லது 5 மி.மீ அளவில் வெட்டப்பட்டவை சிறப்பான ரிசல்ட்டைக்கொடுத்தன. பொதுவாக, வெட்டப்படும் அளவுக்கேற்ப ஹாலிவுட் பொக்கே வடிவங்களும் சிறிதாகவோ பெரிதாகவோ கிடைக்கும். 
இப்போது, லென்ஸை காமிராவில் மாட்டிக்கொண்டு, லென்ஸின் நுனியிலிருந்து அது காமிராவின் AF/MF பட்டனைத்தொடும் வரையிலான தூரத்தை அளந்து கொள்ளவும். அதேபோல் லென்ஸின் சுற்றளவையும் அளந்து கொள்ளவும். இந்த அளவுகளை சார்ட் பேப்பரில் குறித்துக்கொண்டு வெட்டினால் ஒரு செவ்வக வடிவத்துண்டு கிடைக்கும். இப்போது வெட்டிக்கொண்ட செவ்வகத்துண்டையும், வட்டத்துண்டையும் ஒன்றுடன் ஒன்று பொருத்தினால் உருளை வடிவத்தில் லென்ஸின் உறை போன்று கிடைக்கும். ஒட்டுவதற்கு cello tape அல்லது கறுப்பு இன்சுலேஷன் டேப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான். இப்போது நம் bokeh maekers kit உபயோகிக்கத்தயாராகி விட்டது.
விழாக்காலங்களில் கடைகளில் rice lights விற்பனைக்கு வரும், மல்ட்டி கலர், சிங்கிள் கலர்களில் ஒன்றிரண்டு என வாங்கி வைத்துக்கொண்டால் விரும்பும்போது கை கொடுக்கும். வீட்டு வார்ட்ரோபிலிருந்து சட்டை மாட்ட உபயோகிக்கும் ஒரு ஹேங்கரை அபேஸ் செய்து கொண்டு அதில் இந்த சீரியல் லைட்டை சற்று நீள நீளமாகவும் பரத்தினாற்போலவும் தொங்க விட்டுக்கொள்ளவும். வீட்டு சுவற்றில் ஆணி, ஹூக் ஏதேனுமிருப்பின் அதில் தொங்க விட்டுக்கொள்ளவும். வாசல் அல்லது ஜன்னல் பக்கம் போன்ற அதிக வெளிச்சம் வரும் பகுதிகளைத்தவிர்த்து, எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொங்க விட்டுக்கொள்ளலாம். பின் அதிலிருந்து குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் தூரத்தில் உயரமான ஸ்டூல் அல்லது சிறிய மேசையைப் போட்டுக்கொள்ளவும். வீட்டில் கொஞ்சம் தடிமனாக ஏதேனும் புத்தகமிருப்பின் அதை தூய வெள்ளைக்காகிதம் கொண்டு சுற்றி அதை மேசையின் மேல் வைக்கவும். இதன் மேல்தான் நாம் சப்ஜெக்டை வைத்து படமெடுக்கப்போகிறோம். 
இப்போது நாம் வடிவங்களை உருவாக்கி வைத்திருக்கும் நீள்காகிதத்துண்டை, காகித உருளையில் பொருத்தி, வேண்டிய வடிவம் மட்டும் முன்புறமுள்ள துளையில் தெரியுமாறு செய்யவும். பின் இதை காமிராவில் பொருத்திக்கொள்ளவும். காகித உருளையானது லென்ஸின் மேல் எளிதில் நகருமாறு, அதே சமயம் தளர்ந்து விழாவண்ணம் இருக்க வேண்டும். படமெடுக்கும்போது, ஷேக் ஆவதைத்தவிர்க்க காமிராவை ட்ரைபாடில் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திடமான மேற்பரப்பிலும் வைத்துக்கொள்ளலாம். சப்ஜெக்டும் காமிராவும் ஒரே நேர்கோட்டில் வருமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். சப்ஜெக்டை தனிப்படுத்திக்காட்ட விரும்பினால் அதன் மேல் ஃபோகஸ் லைட்டின் வெளிச்சம் விழுமாறு அமைத்துக்கொள்ளவும். இதற்கு, வீட்டிலிருக்கும் LED விளக்குகள் எதுவாயினும்..உதாரணமாக, மேசை விளக்கு, எமர்ஜென்ஸி விளக்கு, அவ்வளவு ஏன்?.. ஒரு சமயம் மொபைலின் Flash lightம் ஃபோகஸ் கொடுக்க உபயோகித்தேன்.
காமிராவில் AF/MF என இருக்கும் செட்டிங்கில் முதலில் ஆட்டோ ஃபோகஸில் வைத்துக்கொண்டு சப்ஜெக்டை  நோக்கி, காமிராவின் க்ளிக் பட்டனை half press செய்தால் சப்ஜெக்ட் தானாகவே ஃபோகஸ் ஆகி, பின்புலம் மங்கத்தொடங்கும். இதில் பின்புறமிருக்கும் rice lightsன் ஒளியும் மங்கி மென்மையான வடிவங்களாக மாறத்தொடங்குவதைக்காணலாம். சரியான வடிவம் அமைந்து விட்டால் க்ளிக் செய்து அதைப் பத்திரப்படுத்தவும். சில சமயங்களில் ஃபோகஸ் கலைந்து விடாமல் காகித உருளையை லேசாக பட்டும் படாமல் நகர்த்தியோ, திருப்பியோ வடிவத்தை உருவாக்க வேண்டியிருக்கும். சரியாக வெட்டப்படாத வடிவம் சிறப்பாக பொக்கேயை உருவாக்காது. தேவைப்பட்டால் paper stripஐ சேதப்படாமல் உருவி படத்தை சீரமைக்கவும். 
இந்த வகை போட்டோகிராபிக்கு aperture mode பரிந்துரைக்கப்படுகிறது. வெறுமனே விளக்குகளின் வடிவங்களை மட்டும் உருவாக்குவதானால் இது சிறந்ததுதான். ஆனால், subjects with bokeh உருவாக்க, manual mode மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதிலுமே மிகவும் குறைந்த எண்ணில் ஷட்டர் ஸ்பீட், மற்றும் f6 அபர்ச்சர் செட் செய்து எடுத்தேன். 50mm F1.4 அல்லது 1.7 lens அல்லது 70-200mm F2.8 lens சிறப்பான பொக்கேயை உருவாக்குகிறது. Zoom lensஐ உபயோகித்து அதன் அதிக பட்ச focal lenthல் படம் பிடித்தபோது அட்டகாசமாக அமைந்தது. பொதுவாக லென்ஸின் அதிக பட்ச lengthல் எடுக்கும்போது கொஞ்சம் பெரிதாகவும், மொத்தையாகக் கிடைக்கும்.
மிகவும் குறைந்த பட்ச நீளத்தில் எடுக்கும்போது உருவங்கள் சுமாராக வந்தன. தேவைக்கேற்ப ஒளிவட்டங்களின் இடைவெளியை அமைத்துக்கொண்டு படங்களை எடுத்துத்தள்ளலாம். காஃபிக்கோப்பையிலிருந்து சிந்துவது, ஸ்மைலிகள் பறப்பது போன்ற சிறப்புக்காட்சிகளை எடுக்க ட்ரைபாடின் உயரத்தை சற்று கூட்டியோ குறைத்தோ அல்லது நகர்த்தியோ விரும்பியவாறு அமைத்துக்கொண்டு எடுக்கலாம்.

Monday 19 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 5 (கலைப்பொருட்கள்)

வசிக்குமிடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதன் அடுத்தபடி, அதை அழகுற அலங்கரிப்பதுவுமாகும். கிராமங்களில் மண்குடிசையில் வசித்தாலும் தினமும் இருமுறை, வாசலையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்து, கோலமிட்டு, சாயங்காலங்களில் வாசற்புறத்திலிருக்கும் துளசி மாடப்பிறையிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி, ஊதிவத்தியும் ஏற்றி வைப்பர். கோவிலுக்குள் நுழைந்த தெய்வீக உணர்வை அது தரும். தவிர,  வாரத்துக்கொருமுறை சாணமிட்டு மெழுகி தரையைப் பளிங்கு போல் வழுவழுவென ஆக்கி வைப்பர். மார்போனைட் டைல்ஸோ, மண்தரையோ.. எதுவாக இருப்பினும், தினமும் பெருக்கித்துடைத்து, ஒட்டடையின்றி சுவர்கள் மிளிர, பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டால் அழகுதான். "சுத்தம் சோறுபோடும்.. சுகாதாரம் குழம்பு ஊற்றும்"

இந்தப்பிள்ளையார் எங்கள் வீட்டின் முகப்பில் இருப்பவர். தினம் தூபதீபமும் வெள்ளிக்கிழமைதோறும் கூடுதலாக மலர்மாலையும் பெற்றுக்கொள்பவர்.

இந்த கருடர் மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் இருக்கிறார். மூக்கழகர் :-)

இவரை ஒரு பயணத்தின்போது மதுரையில் பிடித்தேன். ஹோட்டல் அறையை அலங்கரித்தவர் இப்போது இந்த வலைப்பூவையும்..


ஆடம்பரமான பங்களாக்களில் மட்டுமல்ல, சாதாரண வீடுகளிலும் ஒரு ஓவியம், ஒரு சிறிய சிற்பம் அல்லது பொம்மை, வாடாமலர்கள் அல்லது வாசம் வீசும் மலர்களை ஏதாவதொரு இடத்தில் அலங்காரமாக வைத்துப்பாருங்கள். அந்த அறையின் முகமே மாறியிருக்கும். ஒரே மாதிரியான வீட்டு அலங்காரத்தைப் பார்த்துப்பார்த்து போரடித்தால், அறையின் சோபா, மேசை அலங்காரம் போன்றவற்றை இடம் மாற்றி வைத்துப்பாருங்கள். அது மனதுக்கு ஓர் புத்துணர்வு தரும் என மனவள வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு கலைப்பொருட்களை வாங்குவதும் அவற்றைக்கொண்டு வீட்டை அலங்கரிப்பதும் பிடித்தமான பொழுதுபோக்கு. வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லுந்தோறும் அந்தந்த இடங்களின் சிறப்பான பொருட்களை வாங்கி வருவர். வெளிநாட்டுப்பொருட்களை நாம் விரும்புவது போல், நம் தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டிப்பொம்மை, போன்றவற்றை வெளிநாட்டவர் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். கன்னியாகுமரியில் அலங்கார மணிமாலைகளையும், சங்கு, சிப்பி மற்றும் தென்னை நெட்டியால் செய்த கைவினைப்  பொருட்களையும் அவர்கள்தான் அதிக விலை கொடுத்தாவது வாங்கிச்செல்கின்றனர்.

மதுரைப் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் ரிசப்ஷன் பகுதியில் அருள் பாலித்துக்கொண்டிருந்தவர். பணங்காசு நடமாடும் பகுதிகளில் விரும்பி வாசம் செய்வார்.
சென்னைப்பயணத்தின்போது மண்பாத்திரம் தேடியலைந்தபோது கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் பகுதியில் கிடைத்தது. அங்கிருந்த கலைப்பொருட்களைக் கண்டு அகமகிழ்ந்து, டெரகோட்டாவில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிக்கொள்ளலாமா என யோசித்தபோது, "ஆசையே துன்பத்திற்குக் காரணம், என்னதான் பொதிந்து கொண்டுசென்றாலும் மும்பை செல்வதற்குள் உடைந்துவிடக்கூடும்" என என் அறிவுக்கண்ணை படாலெனத் திறந்தவர். 

அதிக விலை கொடுத்து சுவரோவியம், அலங்காரப்பொருட்கள் போன்றவற்றை வாங்கித்தான் வீட்டை அலங்கரிக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் குழந்தைகள் வரைந்த அழகிய ஓவியம், மற்றும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்தால் ஏற்படும் திருப்தியும் பெருமையும் விலைமதிப்பில்லாதது. அவ்வாறு சுவரோவியங்களை மாட்டும்போது நல்ல நிழல்விழாத, நல்ல ஒளியமைப்புள்ள இடத்தில் மாட்டினால் அந்த அறைக்கே ஒரு தனியழகு வந்து விடும். சிலர், ஓவியங்களின் மீது வெளிச்சம் விழுமாறு சிறப்பான சுவர்விளக்குகளையும் மாட்டி வைப்பர். சரியான கோணத்திலும் அளவிலும் ஒளி விழும்போது மிளிரும் வண்ணத்துடன் பொலியும்.

ஒரு சென்னைப்பயணத்தின்போது, ஹோட்டலின் சுவர்களில் வால்பேப்பராக ஒட்டப்பட்டிருந்த இந்தியக்கலாச்சாரம் சம்பந்தப்பட்ட படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று.
ஆசையை ஒழி என எனக்கு புத்தர் அறிவுறுத்தியபோது அருகிலிருந்த இரட்டையர். அடுத்த பயணத்தில் கூட்டிக்கொண்டு செல்வதாக வாக்களித்ததும் முகங்களில் புன்சிரி. மண்குதிரையானாலும் டெரகோட்டா குதிரையை நம்பலாம் என குளம்பால் அடித்து சத்தியம் செய்தனர். "ஊர் உலகமெல்லாம் சுற்றித்திரிந்து காவல்புரியும் அய்யனாரின் வாகனமாக்கும் நாங்கள். உங்களைப்போன்ற மனிதர்கள்தான் எங்களை தோட்டத்தில் அலங்காரமாக நிற்க வைத்து விடுகிறீர்கள்" என ஒரே அங்கலாய்ப்பு.

என் வீட்டு வாசலில் ஷூரேக்கின் மேல் வைக்கப்பட்டிருக்கும் மலர் அலங்காரம். காலணிகள் கொண்டு வரும் எதிரெண்ணெங்களை இம்மாதிரியான அலங்காரம் வீட்டினுள் நுழைய விடாமல் அழித்து விடுவதாக நம்பப்படுகிறது.

தற்காலங்களில், வீட்டின் முன்னறையில் அல்லது வீட்டு முன்வாசல் முற்றத்தில் ஒரு வெண்கல உருளி அல்லது மண்பாண்டத்தில் நீர் நிரப்பி, அதில் பூக்களையும் ஏற்றி வைத்த மெழுகு அல்லது அகல் விளக்குகளையும் மிதக்க விடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அக்காலங்களில் வீட்டின் முன் அல்லிக்குளம் அமைக்கப்பட்டதன் மரூஉ எனவும் இதைக்கொள்ளலாம். இன்னும் சிலர் அந்த நீரில் காசுகளையும் போட்டு வைப்பர். தீபத்தில் அக்னி, நீரில் வருணன், பாண்டத்தில் ப்ருத்வி, காற்றில் வாயு, சுற்றுப்புறத்தில் ஆகாயம் என பஞ்சபூதங்களும் இதில் வழிபடப்படுவதாகவும், அவை வீட்டினுள் எதிரெண்ணெங்கள் புகுவதைத் தடுத்து, நல்லெண்ணங்களைப் பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது. ஆன்மீக நோக்கில் இல்லையெனினும் அழகு நோக்கில் கொண்டால், வாசலில் மணம் வீசும் மலர்களைக் காணுந்தோறும், அவற்றின் சுகந்தத்தை நுகருந்தோறும் மனம் கொள்ளும் களியுணர்வைச் சொல்ல வார்த்தைகள்தான் உண்டா!!

சென்னைப்பயணத்தின்போது கிடைத்த தேசப்பிதா..
குத்துவிளக்குகளின் கொண்டை எனச்சொல்லப்படும் தலைப்பகுதியில் தெய்வத்திருவுருவங்கள், மதச்சின்னங்கள், அன்னம், தாமரை போன்றவை அமைக்கப்படுவது ஒரு தனியலங்காரமாக இருக்கும். இந்த விநாயகர் விளக்கு மதுரையில் காணக்கிடைத்தது.

பொருளீட்டும்பொருட்டு வெளியுலகிற்குச் சென்று அன்றாடம் பல்வேறு போராட்டங்களைச்  சந்தித்து விட்டு வந்து , அக்கடா என நிம்மதியாய்க் கால் நீட்டி உட்கார நாம் நாளின் இறுதியில் வீட்டுக்குத்தான்  வருகிறோம். அப்படி நிம்மதியைத் தரும் வீட்டைக் கொஞ்சம் அலங்கரித்து வைத்தால் கண்ணுக்கும் மனதுக்கும் சுகம்.

தொடரும்..

Tuesday 13 February 2018

அன்புடன் வாழ்த்துகள்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-14ம் தேதி வந்து விட்டால் போதும். உலகத்துக்கே பரபரவென ஜூரம் வந்து விடும்.. அது வேறொன்றுமில்லை, அதுதான் காதல் ஜூரம். ஜூரம் முற்றி ஜன்னி வந்தாற்போல் பிதற்றவும் ஆரம்பித்து விடுவார்கள். வருடம் முழுவதும் தேக்கி வைத்திருந்த அன்பை பிரியமானவரின் மீது ஒரே நாளில் பொழிந்து விடும் நோக்கில், வாழ்த்து அட்டைகள், மலர்கள், நகைகள் இன்னபிற பரிசுப்பொருட்கள் என்று அவரவர் சக்திக்கேற்றபடி பரிசளிப்பதுண்டு. எத்தனை கொடுத்தாலும் ஒற்றை ரோஜாவுக்கீடாகுமா என சிலர் முடித்துக்கொள்வதுமுண்டு. கொடுக்கப்படும் பொருளை வைத்தா அன்பை அளப்பது? அன்பின் பிரம்மாண்டம் கொடுக்கும் மனதிலல்லவா இருக்கிறது. எத்தனை சுரந்தாலும் வற்றாத அமுதமடியல்லவா அது. 





வேலண்டைன் எனும் துறவியின் உண்மையான தியாகத்தை மதிக்கும் முகமாக, அன்பைப்பரப்பும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, தன் பாதையிலிருந்து விலகி, வியாபார மயமாகிக்கொண்டிருக்கிறது. மேற்கு நாடுகளின் நாகரிகத்தாக்கத்தால் இந்தியாவில் தற்சமயம் கடைப்பிடிக்கப்படும், அன்னையர், தந்தையர், மகள், மகன், தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட சித்தி, கொண்டான் கொடுத்தான் போன்ற தினங்களின் வரிசையில் காதலர் தினமும் ஒன்று. பெரும்பாலும் தனிக்குடித்தனமாகவோ, அல்லது வீட்டிலிருந்து வெளியேறி தனியாகவோ வசிக்கும் மக்கள் வருடத்திற்கொரு முறை குடும்பத்தினரைச் சந்தித்து அளவளாவுவதற்கு ஒரு தினத்தை நிர்ணயித்துக்கொண்டதை, கார்ப்பரேட் உலகம் வியாபாரமயமாக்கியது. அதன் பொருட்டே பரிசுப்பொருட்களின் சந்தை ஆன்லைனிலும் விரிவடைந்து தன் ஆக்டோபஸ் கரங்களால் உலகெங்குமிருந்து காசை வாங்கி தன் கல்லாவை நிறைத்துக்கொண்டிருக்கிறது.



ஆனால், கூட்டுக்குடும்பத்தின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள, குடும்பத்திலிருந்து பொருள்வயிற் பிரிந்து தனிக்குடித்தனமாக வாழ்ந்தாலும் தன் வேரை மறக்காத, தன் குடும்பத்தின் மூத்த குடிகளை மதித்து வணங்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மோகத்தில் ஆழ்ந்துள்ளது வேதனையே. 



வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டம் பிப்ரவரி-14 தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தினமும், ரோஜா தினம், சாக்லெட் தினம், டெடி பியர் தினம், என ஒவ்வொரு தினமாகக் கொண்டாடப்பட்டு, 14-ம் தினத்தன்று காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தினத்துக்கும் அந்தந்த தினத்துக்கான பரிசுப்பொருட்களை மக்கள் தமக்குள் பரிமாறிக்கொண்டு  இருப்பதைக் கண்டு, பெருமூச்சு விடும் பக்கத்து வீட்டுத்தாத்தாவுக்கு, "கொள்ளுத்தாத்தா தினம்" என ஒரு தினம் அனுசரிக்கப்படாமை குறித்து பெரும் விசாரமுண்டு. "எங்களுக்குண்ணு ஒரு நாள ஒதுக்கிட்டா எங்களுக்குத் தக்கன, ஒரு பாக்கு இடிக்கப்பட்ட உரலோ,.. ஒரு பல்செட்டோ கிஃப்ட் குடுத்துக்கிடுவோம். எங்க சிறுப்பக்காலத்துல இதெல்லாம் ஒண்ணும் இல்லாமப் போச்சு. இதொண்ணையும் நம்ம ஊருக்குக் கொண்டுட்டு வரணும்ன்னு ஒரு மனுசனுக்காது தோணலியே?. நாடு சீரளிஞ்சு போச்சுடே. ஹூம்.. இதொண்ணையும் அனுபவிக்காமயே போய்ருவேன் போலருக்கு" என அங்கலாய்க்கிறார். "இன்னுமொரு நூற்றாண்டிருந்து அத்தனைக்கும் ஆசைப்பட்டு அனுபவியும்" என்று மனசார வாழ்த்துவதன்றி நாம் செய்யக்கூடுவதுதான் யாது?



ஒத்த வயதுள்ள எதிரெதிர் பாலினரிடத்தில் மட்டுமன்றி, சக மனிதர் அனைவரிடமும் சுரக்கும் மனித நேயத்திற்கு வெறுமனே காதல் என ஒற்றை வார்த்தையில் முத்திரை குத்தி அதை, சிமிழுக்குள் கடலென அடைத்து விட முடியுமோ!!  தாயிடத்தில், தந்தையிடத்தில், உடன் பிறந்தாரிடம், ரத்த உறவுகளிடம், மற்றும் ஊழின் துயரில் அழுந்திப் பரிதவிக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏற்படுவதை அன்பு, பாசம் என பல்வேறு பொதுப் பெயர்களால் அடையாளமிட்டாலும் இரு நெஞ்சங்களினிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் "காதல்" என வார்த்தை மகுடம் சூடிக்கொள்கிறது. 

கைத்தலம் பற்றிக் கடிமணம் கொள்ளும் நாள்வரையில் அவர்கள் நெஞ்சில் பரிசுத்தமான அன்பைப் பெய்து வளர்க்கும் அப்பயிர், ராக்கி, மஞ்சள் கயிறு போன்றவற்றை வலுக்கட்டாயமாகக் கட்ட நிர்ப்பந்திக்கும் சில கலாச்சாரக் காவலர்களால் இத்தினத்தில் சிதைக்கப்படுவது வேதனை. வெறும் இனக்கவர்ச்சியைக் காதல் என தப்பர்த்தம் செய்து கொள்ளும் சிலராலும், படிக்க வேண்டிய வயதில் தவறான நபர்களிடம் காதலில் விழும் சிலராலும் உண்மையான நேசம் கொண்டவர்களும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். அதனாலேயே, இத்தகு இன்னல்களுக்கும், சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள். 



எந்த நிகழ்வாயினும், ஒளிப்படக்கலைஞர்கள் தத்தம் பங்களிப்பையும் நல்காதிருக்க மாட்டார்கள். தீட்டத்தீட்டத்தானே வைரம் ஒளி பெறுகிறது. நிகழ்வுகளுக்காக ஒளிப்படம் பிடிக்க மூளையைக் கசக்கி யோசிக்கும்போது, க்ரியேட்டிவான கருத்துகள் கிட்டி, அதைப் படமாக்குவது சவாலான ஒன்று. பெரும்பாலும் ஒருவர் எடுக்கும் படம் மற்றவரது படத்திற்குத் தூண்டுகோலாக அமைவது ஒளிப்பட உலகில் சகஜமே. அவ்வாறாக அன்பின் சின்னமான இதயத்தை அடிப்படையாகக்கொண்டு வேலண்டைன்ஸ் நாளில் ஒளிப்படக்கலைஞர்களால் பகிரப்படும் பெரும்பாலான படங்களோடு எனது பங்களிப்பாக ஒரு சில படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. 








எந்த ராஜா எந்தப்பட்டணம் போனாலும், ஃப்ளிக்கரில் முடிந்தளவு படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். 1080 படங்களைத் தொட்டுள்ள இத்தருணத்தில் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.

LinkWithin

Related Posts with Thumbnails