Wednesday 18 December 2019

சாரல் துளிகள்

துரத்தும் இரவிடம் புறமுதுகிட்டு, தவ்வித்தவ்விச் சென்று கொண்டிருக்கிறது வெயில்
கண்ணாடித்துண்டுகள் சூடிய மதிற்சுவரைச் சற்றும் அஞ்சாது பரவிக்கிடக்கும் பூங்கொடியை எச்சரிக்கிறது சுடுவெய்யில், ஆற்றுப்படுத்துகிறது இளங்காற்று, அது பாட்டுக்கு அதுவென்று பூத்துக்கிடக்கின்றன இள நீலப்பூக்கள்.
ஒரு வெள்ளைப்பந்தாய்ப் பூத்திருக்கும் நந்தியாவட்டைச் செடியை வாஞ்சையுடன் தடவி இறங்குகிறது வெய்யில்.
ஒரு திருடனைப்போல் மெல்ல ஏறி வந்து முற்றத்தில் காத்திருக்கும் வெய்யில், முதற்பார்வையில் திடுக்கிடச்செய்கிறது.

தடாகத்தினுள் வழுக்கி விழுந்த வெயில், தங்கமீனாய் நீந்திக்கொண்டிருக்கிறது.

முற்றத்தில் வந்து நின்று கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஓட்டைப்பிரித்து உள்ளிறங்குகிறது வெயில்.

வானத்துடன் பிணங்கிவிட்டு, பூக்களினுள் ஔிந்திருக்கும் வெயிலைத் தேடியலைகிறது வண்ணத்துப்பூச்சி.

ஆங்கோர் மலைக்குவையில், வரையாட்டைப் போல் தொற்றி ஏறிக்கொண்டிருக்கிறது வெயில்.

மலையிடை வைரமாய் மின்னிய வெயிலை நோக்கிக் கண் சிமிட்டுகிறது, வானில் முளைத்த வெள்ளி.

ஆழ்கடலில் முத்தென அமிழ்ந்து கிடக்கும் வெயிலைக் கரை சேர்க்கின்றன அலைக்கரங்கள்.

Tuesday 19 November 2019

புட்டமது மகாத்மியம்.

புட்டமது, புட்டமுது, புட்டாமிர்தம் என குமரி மண்ணில் அழைக்கப்படும் இந்த இனிப்பை தமிழகத்தின் பிற பகுதிகளில், வெல்லப்புட்டு என்று அழைப்பர்.

ஒரு காலத்தில் குமரி மண்ணின் கோவில்களில், குறிப்பாக அம்மன் கோவில்களில் புட்டமதுதான் முக்கியமான பிரசாதமாக விளம்பப்படும். இன்றும் குமரி மண்ணில், வீடுகளில் யாருக்காவது அம்மை கண்டு குணமாகி தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றியபின் முதன் முதலாகக் கோவிலுக்கு அழைத்துச்சென்று அம்மனைத் தரிசித்து புட்டமது விளம்பி விட்டு வந்தபின்தான், மறு வேலை.

சாயந்திரம் கோவிலுக்குப் போவதென்றால் காலையிலேயே புட்டமது தயார் செய்யும் வேலை ஆரம்பித்து விடும். பச்சரிசியைக் களைந்து, அரை மணி நேரம் கொவரப்போட்டு, நீரை வடித்தெடுத்தபின் ஈரம் போக நிழலில் உலர்த்தியெடுத்து, கை வலு உள்ள பெண் ஒருத்தி அரிசியை உரலிலிட்டு இடியாப்ப மாவு பக்குவத்தில் இடித்துக் கொடுத்து விடுவாள்.

அதன் பின் அந்த மாவை துணியில் பொட்டலம் போல் கட்டி, ஆவியில் வேக வைத்தெடுத்து ஆறியபின் உதிர்த்து கட்டிகளில்லாமல் ஆக்கிக்கொண்டபின் வெல்லப்பாகும் ஏலஞ்சுக்கும் தேங்காய்ப்பூவும் இட்டு விரவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினால், "ஏ... புட்டமது வெளம்பப்போறாங்க" எனக்கூவிக்கொண்டு நண்டு சிண்டு படை பட்டாளம் எல்லாம் திரண்டு வந்து விடும். அப்புறம் வீட்டுக்கு வெறுஞ்சட்டிதான் வந்து சேரும்.
பச்சரிசி புட்டமது
நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு புட்டமது செய்தேன். மகனார் "இதை சிறுதானிய மாவில் செய்ய முடியுமா?" என வழக்கம்போல கோரிக்கை வைத்தார். சிறுதானியங்களின் மகிமை மிகுந்து வரும் இந்நாட்களில், அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை உபயோகித்து அதே உணவு வகைகளைப் பரீட்சார்த்தமாகவேனும் செய்து பார்த்து விடும் மனப்பாங்கு வந்து விட்டது. அதுவும் வீட்டில் சோதனை எலி இருந்தால் தைரியமாக விஷப்பரீட்சையில் இறங்கலாம். அந்தப்படியே முதலில் கேழ்வரகில் புட்டமது செய்து பார்த்தேன். நன்றாகவே அமைந்தது.
ஒரு கப் மாவை விரவி
 
 ஆவியில் வேக விட்டு
  நன்கு ஆற விட்டு
 வெல்லப்பாகு தயார் செய்து

 ஏலஞ்சுக்கும் தேங்காயும் சேர்த்தால்
கேழ்வரகு புட்டமது தயார்
அரிசி மாவைப்போல் கேழ்வரகு மாவு அதிகத்தண்ணீரை இழுத்துக்கொள்ளாது. ஆகவே, ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, பின் உதிர்த்துக்கொண்ட கேழ்வரகு மாவில் கொஞ்சங்கொஞ்சமாக வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளற வேண்டும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் வந்ததும் நிறுத்தி விட வேண்டும். நேரம் ஆக ஆக பொலபொலவென உதிர்ந்து வந்து விடும். ஆகவே தேவைப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் கூட்டியே புட்டமுதைத் தயாரித்துக் கொள்க.

தவிரவும், தமிழ்க்கடவுளாம் முருகவேள் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இது முக்கியமான பிரசாதமாமே. ஆகவே உண்மையான தமிழனாக இருந்தால் கேழ்வரகு புட்டமது செய்யவும்.

Saturday 9 November 2019

மெழுகுப்பாகற்காய் துவரன்

பாகற்காயின் தூரத்துச் சொந்தமான மெழுகுப்பாகல், Kantola என இந்தியிலும் Kartoli என மராட்டியிலும், spine gourd என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகமும் சந்தையில் காணக்கிடைக்கும் இக்காய் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்யக்கூடியது, குறிப்பாகக் கண்ணுக்கும் மூளைக்கும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் கொண்டவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.
கடினமான முட்கள் படர்ந்திருப்பது போல் தோற்றமளித்தாலும், கைகளை உறுத்தாமல் மென்மையாகவே இருக்கின்றன. குட்டிக்குட்டியாக நெல்லிக்காய் அளவில் இருக்கும் இவற்றை நீள வாக்கில் நாலாக நறுக்கிப்பிளந்து, கல் போன்ற கடினமான விதைகளை நீக்கி, அதன் பின் பொடியாக நறுக்கி.. என அரை கிலோ காய் எக்கச்சக்கமாக வேலை வாங்கி விட்டது. கொஞ்சம் பிஞ்சாக இருந்தால் விதைகளை நீக்க வேண்டாம். அப்படியே நறுக்கி விடலாம். ஒன்றிரண்டு காய்களிலிருந்து கிடைத்த முற்றிய விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். இது வளர வெப்பம் அதிகம் தேவையாம். கோடை ஆரம்பத்தில் நட்டுப்பார்த்தால் ஆயிற்று.
விதையில்லாப்பிஞ்சு

முற்றிய விதை கொண்டவை
பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்ததானாலும் கொஞ்சங்கூட கசக்காது எனக்கேள்வி. 

மெழுகுப்பாகற்காயின் பயன்கள் அனேகம். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை சில.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதை விடச்சிறந்த பலன் உண்டா என்ன? புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக்குறைக்கிறது. இளமையைத்தக்க வைக்கிறது. பார்வைக்கூர்மையை மேம்படுத்துகிறது, ஆகவே கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது. சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்துக்கொட்டி தெப்பமாய் நனைந்து விடுவார்கள். இந்த அதிகப்படியான வியர்வைப்பிரச்சினையைச் சரி செய்கிறது நார்ச்சத்தும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸும் நிறைந்திருப்பதால் செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிறுநீரகக்கற்களைக் கரைக்கிறது, மூல நோயைக் குணப்படுத்துகிறது. சுவாசப்பிரச்சினைகள் மற்றும் இருமலைக் குறைக்கிறது. 

கொடி வகையைச்சேர்ந்த இத்தாவரம் நன்கு செழித்து வளர வெப்பம் தேவை. ஆகவே, கோடை காலத்திலும், மழைக்காலத்துக்குப் பின் வரும் வெப்பக்காலத்திலும் பயிரிடப்படுகிறது. கோடை காலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து மழைக்காலத்தில் சந்தைக்கு வருகிறது. சந்தையில் சிறு வியாபாரிகளும் வயதான பெண்மணிகளும் தத்தம் தோட்டத்தில் விளைந்தவற்றை தலைச்சுமையாகக் கூடைகளில் கொண்டு வந்து விற்பனைக்காகப் பரப்பியிருப்பர். முன்பெல்லாம் அதிகம் காணக்கிடைத்தாலும், கசப்பாக இருக்குமோ என்றெண்ணி இதை வாங்கியதேயில்லை. கிலோ கணக்கில் வாங்கிச் சமைத்து விட்டு, யாரும் சீந்தாமல் போய் விட்டால் என்ன செய்வது? வாரக்கணக்கில் வைத்து தனியாளாகத் தின்ன முடியுமா என்ன? ஆனால், ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமே என்று கொஞ்சமாக அரை கிலோ வாங்கி வந்தேன். முதலில் துவரன் செய்து , வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடித்துப்போய் விட்டால் மற்ற அயிட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்யலாமென எண்ணம். துவரன் எப்படிச்செய்தாலும் ருசியாக அமைந்து விடும். அதுவே புளிக்குழம்பு, அரைத்து விட்ட குழம்பு, ரோஸ்ட் என ஏதாவது செய்து, ருசி பிடிக்கவில்லை எனில் ஜென்மத்துக்கும் மெழுகுப்பாகலை வீட்டுக்குள் சேர்க்க இயலாது.

பாகற்காய் துவரன் செய்வது போல்தான் இதையும் சமைக்க வேண்டும். கழுவி தண்ணீர் வடிய விட்டு, துடைத்தெடுத்து நாலாக வகுந்து, பின் கடினமான விதைகளை வழித்து நீக்கிய பின், பொடியாக நறுக்கிக்கொண்டாயிற்று. கொஞ்சம் இளசான காய்களில் விதை இருப்பதில்லை. அவற்றை அப்படியே பொடியான நறுக்கிப்போடலாம். சிலர் வட்ட வட்டமாக அரிந்து போடுவதுண்டு. ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொண்டால் தாளிக்கும்போது போடலாம். ஒரு கப் தேங்காய்த்துருவலுடன்  கால் ஸ்பூன் சீரகம், ஒரு பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய்கள், கால் ஸ்பூன் மஞ்சட்பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொண்டால் துவரன் மசாலாவும் தயார். பச்சை மிளகாய்க்குப்பதில் மிளகாய்த்தூள் சேர்த்தாலும் பாதகமில்லை.
இப்போது அடுப்பில் சீனிச்சட்டியை ஏற்றி அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச்சூடாக்கி, கடுகை இட்டு அது வெடித்ததும், உளுத்தம்பருப்பைப்போட்டு அது சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு வதக்கிக்கொண்டு, வெங்காயம் சிவந்ததும் காய்த்துண்டுகளைப்போடவும். அரை ஸ்பூன் உப்பிட்டு லேசாகப்பிரட்டி, ஒரு கை தண்ணீர் தெளித்து மூடியிட்டு வேக விடவும். முக்கால் வேக்காடு வரை வேகட்டும். இடையிடையே காயை நன்கு பிரட்டிக்கொடுக்கவும். இல்லையெனில் ஒன்று போல் வேகாது. சரியான பதம் வந்ததும், துவரன் மசாலாவைப்போட்டு சிட்டிகை உப்பிட்டு, கிளறி ஒரு நிமிடம் வரை, குறைந்த தணலில் மூடியிட்டு வேக விடவும். 
துவரன் தயார்
வெந்ததை அதன் மணமே அறிவித்து விடும். இப்போது மூடியைத்திறந்து துவரனை ஈரப்பசை ஏதுமின்றி பொலபொலவென ஆகும் வரை கிளறி இறக்கலாம். கொஞ்சங்கூட கசப்பேயில்லை. லேசாக பாகற்காய் வாசனையுடன் கோவைக்காய்த் துவரனின் ருசியுடன் இருந்தது மெழுகுப்பாகற்காய் துவரன். சாம்பார், பருப்புக்குழம்புகளுக்கு நன்கு பொருத்தமாக இருக்குமெனத்தோன்றுகிறது.

Sunday 22 September 2019

கணபதி - 2019

மஹாராஷ்ட்ராவில் பிள்ளையார் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக நடைபெறும் ஒரு விழா. விதவிதமான வடிவங்களில், விதவிதமான கருத்துகளை வலியுறுத்தி அமைக்கப்படும் பிள்ளையார் திருவுருவங்களைக்காண கண் கோடி வேண்டும். மாலை வேளைகளில் தத்தம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் திருவுருவங்களைக்காணவென்றே கூட்டங்கூட்டமாக மக்கள் கிளம்பிச்செல்வது வழக்கம். அதற்கெல்லாம் நேரம் கிடைக்காத மக்கள் விசர்ஜன் நடக்கும் பகுதிகளுக்குச்சென்று அங்கு வரும் பிள்ளையார்களைக் கண்டு கொள்வர். அதற்கும் நேரமில்லையா?.. விழா தொடங்கு முன் விற்பனைக்கென பிள்ளையார் சிலைகள் இருத்தப்பட்டிருக்கும் பண்டல்களுக்குச்சென்றால் ஆயிற்று. அம்மையப்பன்தான் உலகம் என இருக்குமிடத்திலேயே தாயையும் தந்தையையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக்கொண்டவர் காட்டிய வழிதான் நமக்கும் :)

இந்த வருட பிள்ளையார் உலாவில் காணக்கிடைத்தவர்கள் இங்கே..

















இவ்வருடம் எங்கள் வீட்டுக்கு வந்த பிள்ளையார்.

கண்பதி பப்பா மோரியா.. மங்கள் மூர்த்தி மோர்யா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா.

எங்கள் வீட்டு கணபதி ஆரத்தியும் அதைத்தொடர்ந்த விசர்ஜனும் சிறு வீடியோவாக.
முந்தைய கணபதிகளைக்காண இங்கே சொடுக்குங்கள்.

Wednesday 18 September 2019

பச்சை ஆப்பிள்(க்ரானி ஸ்மித்) பச்சடி

சந்தையிலோ மால்களிலோ சிவப்பின் பல்வேறு வண்ணக்கலவைகளில் குவிந்து கிடக்கும் ஆப்பிள்களைப் பார்த்திருப்போம். இந்தியாவின் புகழ்பெற்ற சிம்லா ஆப்பிள் முதல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பல்வேறு வெளிநாடுகள் வரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்காகக் காத்திருப்பவை அவை. அவற்றினூடே வித்தியாசமாய் பச்சை நிறத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஆப்பிள்களையும் கண்டிருக்க வாய்ப்புண்டு. காய் போல் தோற்றமளித்தாலும் அவையும் கனிகள்தாம். இவை, மற்ற ஆப்பிள்கள் அளவுக்கு இனிக்காது. ஆனால் சாறு நிரம்பியிருக்கும். இவ்வகை ஆப்பிள்கள் க்ரானி ஸ்மித் என அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த மரியா ஆன் ஸ்மித் என்பவரால் 1868ல் உருவாக்கப்பட்ட ஒட்டு வகையான இது அவரைக்கௌரவிக்கும் பொருட்டு அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது.
முழுக்க முழுக்கப்புளிப்பும் எங்கோ ஒரு மூலையில் லேசாக அசட்டு இனிப்பும் கொண்ட இந்த ஆப்பிள் சமைத்து உண்ண ஏற்றது. வெளிநாடுகளில் இதை உபயோகித்து "Pie" எனப்படும் பதார்த்தம் சமைக்கப்படுகிறது. காரட், பீட்ரூட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உபயோகித்து காய்கறி ஜூஸ் தயாரிக்கும்போது அரை ஆப்பிளையும் அதில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கிறது, உடம்புக்கும் நல்லது. நன்கு முற்றிய காய்ப்பருவத்தில், மாங்காயைப்போன்றே கடும் புளிப்புச்சுவை கொண்ட இந்த ஆப்பிளை மாங்காய்க்கு மாற்றாக உபயோகிக்கலாம். மாங்காய் கிடைக்காத மழைக்காலங்களில் கூட மாங்காய் சேர்த்த அயிட்டங்களை ருசித்த திருப்தி கிடைக்கும். 'மாங்காய் வைக்கும் இடத்தில் ஆப்பிளை வைத்தாற்போல' என்று அடுக்களைச்சித்தரே ஒரு முறை நெகிழ்ந்து அருளுரை அளித்தமை இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒன்று. அவியலில் சேர்த்தால் சற்று அதிகமாகவே குழைந்து விடுகிறது. ஆனால் கூட்டாஞ்சோற்றில் சேர்த்தால் ருசி அள்ளும். அந்தப்படியே க்ரானி ஸ்மித்தை உபயோகித்து கேரளத்தின் புகழ்பெற்ற உப்பிலிடு எனும் பச்சடி அயிட்டத்தைச் செய்தேன். நன்றாகவே வந்தது.
ஒரு பச்சை ஆப்பிளை நன்கு கழுவித்துடைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம் பளபளப்பாக இருப்பதற்காக ஆப்பிளின் மேல் ரசாயனங்கள் பூசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி நம் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன. ஆகவே கவனம் தேவை. துடைத்து எடுத்துக்கொண்ட ஆப்பிளை தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சட்பொடி, முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் ஆம்ச்சூர் பவுடர் அதாவது உலர்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். ஆம்ச்சூர் பவுடர் சேர்ப்பதால் முழுக்க முழுக்க மாங்காயின் ருசி வந்து விடும். ஆம்ச்சூர் பவுடர் இப்பொழுதெல்லாம் கடைகளில் சுலபமாகக் கிடைக்கிறது.

இரண்டு கரண்டி சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போன்றவற்றைத் துளி போலச் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவிப்போட்டு அதுவும் பொரிந்ததும், பச்சடியின் தலையில் கொட்டவும். பின்பு நன்கு கலந்து இரண்டு மணி நேரமாவது ஊற விட்டு பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இது மாங்காய்ப்பச்சடி இல்லை என்று நாம் சொன்னாலொழிய யாராலும் கண்டு பிடிக்க இயலாது. வெளியில் வைத்திருந்தால் மறுநாளே தீர்த்து விட வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் ஒரு வாரம் வரை வைக்கலாம். அதற்கு மேல் தாங்காது, கெட்டுப்போய் விடும். மாங்காய் உப்பிலிடின் ஆயுட்காலமும் இதேபோல் குறைவானதுதான் எனினும் ஆப்பிளின் ஆயுள் அதை விடக்குறைவாக இருக்கிறது.

மாங்காய் உப்பிலிடு, கேரளாவிலும் அதையொட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் விருந்துகளின்போது தவறாமல் இலையில் பரிமாறப்படும் ஒரு அயிட்டமாகும். தயிர்சாதம், கூட்டாஞ்சோறு, எலுமிச்சஞ்சாதம் போன்றவற்றுக்கு வெகு அமர்க்களமாகப் பொருந்திப்போகும் ஒரு தொடுகறி. வேனிற்காலத்தில் மட்டுமே மாங்காய் கிடைப்பதால் உப்பிலிடு ருசி கண்ட நாக்கு மற்ற காலங்களில் அதை நினைத்து ஏங்கி, அடுத்த வேனிற்காலம் எப்போ வருமோ? என்றெண்ணிக் காத்திருக்கும். இனிமேல் அப்படிக் காத்திருக்கத்தேவையில்லை. அதுதான் வருடம் முழுவதும் பச்சை ஆப்பிள் கிடைக்கிறதே. உப்பிலிடு செய்தால் ஆயிற்று. 

Thursday 11 July 2019

முப்பொழுதும் க்ரீன் டீ..

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், மிதமான மற்றும் கடுமையான உடற்பயிற்சி முறைகள் என ஒரு சாரார் தீவிரமான முனைப்பிலிருக்க, இன்னொரு பக்கம் நோகாமல் நோம்பு கும்பிடும் மக்களும் உள்ளனர். இரண்டாம் வகை மக்களுக்கு க்ரீன் டீ ஓரளவு உதவுகிறது. ஒரு நாளைக்கு மூன்று கப் க்ரீன் டீயுடன் மிதமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடற்பருமன் மற்றும் எடை குறைந்து கட்டுக்குள் வருகிறது. 

க்ரீன் டீக்கும் சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் தேயிலைத்தூளுக்கும் என்ன வித்தியாசம்?. பறிக்கப்பட்ட தேயிலைக்கொழுந்துகளை முறைப்படிப் பதப்படுத்தாமல் அதன் பசுமை அதிகம் மாறிவிடாமல் வைத்தால் அதுவே பசுந்தேயிலை எனப்படும் க்ரீன் டீ. பதப்படுத்தப்பட்ட தேயிலை கறுப்பு வண்ணத்தில் இருக்கும். பசுந்தேயிலை தூளாகவும் காய்ந்து சுருங்கிய இலைகளாகவும் கடைகளில் கிடைக்கிறது. இதில் தூளை விட இலைகள் மிகவும் சிறப்பான பலன்களைத்தருகின்றன. சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று கப் க்ரீன் டீ குடிப்பதே போதுமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

க்ரீன் டீயிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் நமக்கு பல வகையிலும் பலன் கொடுக்கின்றன. இவை நம் உடலின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி கலோரிகளை எரிக்கின்றன. இதனால் உடலின் அதிகப்படி கொழுப்புகள் கரைந்து உடல் மெலிந்து, எடை குறைந்து, வயதான தோற்றம் மாறி இளமைத்தோற்றம் கிடைக்கிறது. உடல் எடை மற்றும் கொழுப்பு காரணமாக சீர் கெட்டிருந்த ஆரோக்கியம் சீர் படுகிறது. இரத்தத்திலிருக்கும் கொழுப்பு கரைவதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.  க்ரீன் டீயில் குறைந்த அளவிலிருக்கும் காஃபின் நமது மூளை நரம்புகளைத்தூண்டி, அதன் செயல்திறனை அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. ஞாபகசக்தியும் மேம்படுகிறது. அல்ஸீமர் எனும் மறதி நோயிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. கட்டிகளைக் கரைத்து புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அது சம்பந்தமாக ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
நிறைய சாதகங்கள் இருப்பது போல் ஒரு சில பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாணயத்துக்கு இருபக்கங்கள் இருப்பது போல் என்றும் சொல்லிக்கொள்ளலாம். கொழுப்பைக்கரைக்கும் தன்மை காரணமாக ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்தாலும் அதே தன்மையின் காரணமாக ரத்தத்தைச் சட்டென்று உறைய விடாமலும் தடுக்கிறது. ஆகவே ரத்தத்தை நீர்க்கச்செய்யும் மருந்துகள், ஆஸ்ப்ரின், விட்டமின் கே போன்றவற்றை  எடுத்துக்கொள்பவர்கள், Anxiety எனும் மனப்பதற்றப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின் க்ரீன் டீயை எடுத்துக்கொள்வது நன்று. ஏனெனில் ரத்தம் ஏற்கனவே நீர்த்து இருக்கும்பொழுது அதை இன்னும் நீர்க்கச்செய்யும் விதமாக க்ரீன் டீயை அருந்தினால் இரத்த அழுத்தம் அதிகமாகக்கூடும். படபடப்பு, லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். க்ரீன் டீயிலிருக்கும் காஃபின் மனப்பதற்றத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும். பொதுவாகவே காஃபின் ஒவ்வாமை உள்ளவர்கள் காஃபி, டீ வகைகளைத் தவிர்ப்பது சிறந்தது.

க்ரீன் டீயை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அசிடிட்டி, அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது எனவும் கூறப்படுகிறது. வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால் வயிற்று உபாதைகள் வரும் என்று கேள்விப்பட்டாலும் அவ்வாறு வரவில்லை என்று சொந்த அனுபவத்தில் கண்டு கொண்டேன். கொதிக்கக்கொதிக்கவும் இல்லாமல் ஆறிக் குளிர்ந்தும் இல்லாமல் பொறுக்கும் சூட்டில் குடித்தால் துவர்ப்பு தெரியாது. 

க்ரீன் டீயைத் தயாரிப்பது மிகவும் சுலபம். இதற்கு பால் தேவையில்லை. கொதி நிலையிலிருக்கும் ஒரு கப் வெந்நீரில் சிறிது தேயிலைத்தூளையோ அல்லது க்ரீன் டீ பாக்கெட்டையோ போட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்து விட வேண்டும். பின் வடிகட்டிக் குடிக்கலாம். சுவைக்கேற்ப சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியில்லாமல் அடுப்பில் வைத்தும் தயாரிக்கலாம்.
இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். அதிலேயே சிறிதளவு இஞ்சியைத் துருவிப்போட்டுக்கொள்ளவும். விரும்பினால் இஞ்சிக்குப் பதிலாக அரை ஸ்பூன் சுக்குப்பொடியையும் போட்டுக்கொள்ளலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் சுக்கு தொண்டைக்கு எவ்வளவு இதம் தரும் என்பதைக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லைதானே? கால் ஸ்பூன் டீ மசாலாவையும் சேர்த்துக் கொதிக்க வைத்தால் ருசியும் மணமும் அதிகரிக்கும், புதிதாக அருந்த ஆரம்பித்திருப்பவர்களுக்கு துவர்ப்புச்சுவை உறுத்தாது. கொஞ்சம் நாக்குக்குப் பழகியபின் டீ மசாலா போடுவதை நிறுத்திக்கொள்ளலாம். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும், இரண்டு டீ சாஷேக்களையோ அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீன் டீத்தூளையோ போட்டு, அடுப்பை குறைந்த தணலில் ஒரு நிமிடம் வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக டீத்தூளின் சாரம் தண்ணீரில் இறங்கட்டும். லேசான பொன்னிறத்திற்கு தண்ணீர் மாறுவதைக் கண்கூடாகக் காணலாம். சட்டென்று வேலை ஆக வேண்டுமென்று அதிகத்தணலில் வைத்தால் டீ கடுத்து ருசி கெட்டு விடும். குடிக்கவே இயலாது.

ஒரு நிமிடத்திற்குப் பின் இறக்கி வடிகட்டி, ஒரு கப் தேநீருக்கு அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து பயன்படுத்தலாம். மீதமிருக்கும் ஒரு கப் தேனீரை ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்தால் அடுத்த முறைக்கு ஆகும். என்னிடமிருக்கும் மில்டன் ஃப்ளாஸ்க் 22 மணி நேரம் வரை சூடு தாங்குகிறது. ஆகவே கொஞ்சம் மொத்தமாக தேனீர் தயாரித்து அதில் ஊற்றி வைத்துக்கொள்வது வழக்கம். வேண்டும்போது சட்டென கோப்பையில் ஊற்றி சுடச்சுட அருந்தலாம். கேஸ் செலவும் மிச்சம்.  ஆஃபீசுக்கு டப்பாவுடன் வழக்கமாக வெந்நீர் எடுத்துச்செல்லும் என் மகள் தற்பொழுதெல்லாம் தானே க்ரீன் டீ தயாரித்து, எடுத்துச்செல்ல ஆரம்பித்திருக்கிறாள். அப்படியொரு பொழுதில் அதை வீடியோவாக எடுத்து  என்னுடைய யூ டியூப் சேனலில் வலையேற்றியதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு க்ரீன் டீ தயாரித்து பலனடையுங்கள்.

பால் மற்றும் பால் பொருட்கள், நமது உடல் எடையைக் கூட்டுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறதென்று சொல்லப்படுகிறது. பால் சேர்க்காமல் தயாரிக்கப்படுகிறது ஆகவே, க்ரீன் டீயால் எடை கூடுதலாகாது. கொழுப்பைக் கரைப்பதனால் எடை குறையவே செய்யும். தயாரித்த பின் எஞ்சும் சக்கையை நன்கு ஆறவிட்டு, அதன் பின் செடிகளுக்குப் போட்டால் நல்ல உரமாகிறது. ஏனோதானோவென பூத்துக்கொண்டிருந்த எங்கள் வீட்டு ரோஜா, டீத்தூள் உரத்தைப்போட ஆரம்பித்தபின் கப்பும் கவறுமாகக் கிளை விட்டு, முன்பை விட அதிகமாகவும் பெரிதாகவும் பூக்க ஆரம்பித்திருக்கிறது. வடிகட்டிய டிக்காக்ஷனில் ஃபேஸ் பேக்கைக் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற விட்டுக் கழுவிக்கொண்டால் சுருக்கங்கள் குறைந்து தோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகிறது.

Sunday 2 June 2019

சாரல் துளிகள்

காலியாயிருக்கும் பள்ளி மைதானத்தின் நிசப்தம் காதை அறைகிறது. தலை தூக்கிப் பார்த்து விட்டு மறுபடியும் துயிலத்தொடங்கும் நாயின் கனவில் உருள்கின்றன பந்துகள்.

குழந்தையின் கிறுக்கல்களாய் மேகச்சிதறல், காற்றே கலைத்து விடாதிரு.

புன்னகையைப் பொதிந்திருக்கும் மனப்பேழையை கண்ணீர்த்துளிகளால் அறைந்து இறுக மூடுகிறது வாழ்வு.

பலவீனமானவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பதுண்டு. அப்பலவீனத்திலிருந்தே தங்களுக்கான பலத்தைத் திரட்டிக் கொள்கிறார்கள். மெலிந்த கிளையை இறுகப்பற்றியிருக்கும் தேன்சிட்டைப்போல்.

நோக்கு விலக்கி தம்முள் அமிழ்ந்து ஆழ மௌனித்திருக்கும் நீர்க்காகங்கள் சிறகுயர்த்தி ஆசீர்வதிக்கின்றன, இன்று பிறந்த மீன் குஞ்சுகளை.

அறையின் உள்ளும் புறமும் நோக்கியபடி வலைத்தடுப்பின் ஓர் இழையில் திரும்பித்திரும்பி அமர்ந்து வட்டமடிக்கிறது ஒரு குருவி. சட்டென ஒரு முடிவெடு மனமே..

தாகித்த மரம் அனுப்பிய வேர் விடு தூதிற்கிணங்கி, தன்னையே சமர்ப்பிக்கிறது மறைந்திருக்கும் ஈரம்.

பேசிப்பேசி சொற்கள் தீர்ந்து போன ஒரு கனத்த பொழுதின் தருணங்களில் சண்பக மலர்ப்பொடிகள் வந்தமைந்தபோது மறுபடி பொங்கி வழிந்தன சொற்கள்.

மூச்சை நிறுத்திவிடுமுன் இறுதிக்கணங்களில் நினைவிற்கு வாராதொழியட்டும் வாழ்விலடைந்த லாப நட்டங்கள்.

காற்றில் சரசரக்கின்றன காய்ந்த புற்கள். எச்சரிக்கை கொண்டு பதுங்கும் ஓணானின் நினைவுகளில் நெளிகிறது பசித்த பாம்பு.

Monday 13 May 2019

தால் ப்ரோக்கோலி.

முட்டைக்கோஸ் குடும்பத்தைச்சேர்ந்த ப்ரோக்கோலி, அமைப்பில் கொஞ்சம் காலிஃப்ளவரை ஒத்திருக்கும். நடுத்தண்டிலிருந்து கிளைகள் போன்ற அமைப்புகள் கிளம்பி பரவியிருக்கும். அவற்றில் சிறு இலைகளுடன் பூக்கள் அமைந்திருக்கும். இப்பூக்கள் அடர்ந்த பச்சை நிறத்திலும், நடுத்தண்டு இளம் பச்சை நிறத்திலும் காணப்படும். அடர்ந்த பச்சை நிறத்திலிருக்கும் பூக்களின் மேல் லேசான மஞ்சள் நிறம் தோன்றுமுன் அதைச் சமைத்து விட வேண்டும். காலிஃப்ளவரைப்போன்றே இதன் தண்டு, பூக்கள் என எல்லாப்பாகங்களும் உண்ணத்தகுந்ததே. சமைத்து உண்பதை விட, ப்ரோக்கோலியைப் பச்சையாக சாலட்டில் சேர்த்து உண்பதால் பல நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன. 

ஆனால், நமக்கோ வேக வைத்து கறியாகவோ , பொரித்து பகோடா, பஜ்ஜி, மற்றும் மஞ்சூரியன் போன்ற வகைகளாகவோ உண்டால்தான் நாக்கு ஜென்ம சாபல்யமடையும். அடிக்கடி சூப் செய்து சாப்பிட்டு வந்தாலும் ஜென்மம் கடைத்தேறும். எனினும் சப்பாத்தி தேசத்து குடிமகளாக இருப்பதால் முன்பொரு முறை காலிஃப்ளவரில் செய்த அதே கறியை இப்போது ப்ரோக்கோலியிலும் செய்து பரிமாறியிருக்கிறேன். 

ஒரு ப்ரோக்கோலி, ரெண்டு உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் சீரகம், மூணு பச்சைமிளகாய், அரை கிண்ணம் நறுக்கிய கொத்தமல்லி இலை, அரை கப் ஊறவைத்த கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள், 1 டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் கரம்மசாலா, தேவைக்கேற்ப உப்பு இருந்தா இதை ஈஸியா செஞ்சுடலாம்.

பருப்பு ஊறவைக்க நேரமாகுமேன்னு நினைக்க வேண்டாம்.  கொதிக்க  வைத்த தண்ணீரை ஃப்ளாஸ்க், அல்லது ஹாட்பேக்கில் விட்டு அதுல பருப்பைப்போட்டு மூடிவெச்சுடுங்க. ஜஸ்ட்... பதினஞ்சு நிமிஷத்துல ஊறிடும். அதுக்குள்ள, நீங்க காய் நறுக்கி, மசாலா அரைச்சு வெச்சுட்டு, சப்பாத்தியை ரெடிபண்ணுங்க.. இல்லைன்னா வேற வேலை ஏதாவது இருந்தா பாத்துட்டு வாங்க.

ப்ரோக்கோலியை சின்னச்சின்ன பூக்களாக உதிர்த்து வெச்சுக்கோங்க, உருளைக்கிழங்கை ஒரு இஞ்ச் அளவுக்கு துண்டுபோட்டுக்கோங்க.

சீரகம், கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், மஞ்சள், கரம்மசாலா இதையெல்லாம் நல்லா மசிய அரைச்சு வெச்சுக்கோங்க.

இப்ப, அடுப்பில் சூடாகிக்கிட்டிருக்கிற கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்களையும், கடலைப்பருப்பையும் லேசா வதக்குங்க. அப்புறம் அரைச்சு வெச்ச மசாலாவைப் போட்டு நல்லா கிளறிவுடுங்க. பச்சைவாசனை போனதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரை கப் தண்ணீரும் ஊத்தி, தேவையான அளவு உப்பும் போடுங்க. இப்ப, இதை குக்கரில் ரெண்டு விசில் வரும்வரை வேக விடுங்க. ப்ரஷர் பேனில் செய்யறதாயிருந்தா அப்படியே மூடி போட்டு வெயிட்டைப் போட்டுடலாம்.

அவ்வளவுதான்... வெந்ததும் அதை மறுபடி ஒரு நிமிஷம் கொதிக்க வெச்சா இன்னும் ருசியாயிருக்கும். விரும்பினால் பச்சைப்பட்டாணியும் கூடுதலா சேர்த்துக்கலாம். 

டிஸ்கி: செய்முறையை ஒரு சின்ன வீடியோவாகவும் பதிவிட்டிருக்கிறேன். யூ டியூபிலும் கண்டு தெளியலாம்.

Friday 10 May 2019

இளநீர் பாயசம்..

கோடைக்காலம் தொடங்கி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் வெயிலும் வெம்மையும் வாட்டியெடுக்கத் துவங்கி விட்டன. தாகத்தைத் தணிக்க ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இளநீர், குளிர் நீர் என இப்போதே குளிர்பதனப்பெட்டியை நிரப்பி வைக்கவும் ஆரம்பித்து விட்டோம். வெயில் இப்போதே இந்த போடு போடுகிறதே.. இன்னும் ஏப்ரல், மே வந்தால் என்னாவோமோ!!

கோடைக்காலத்தில் உடற்சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி, கண் எரிச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவற்றுக்கு இயற்கை இதே கோடை காலத்தில் மருந்தும் வைத்திருக்கிறது. இளநீர், நுங்கு போன்றவைதான் அவை. உள்ளுக்குச் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவது மட்டுமல்ல, நுங்கினுள்ளிருக்கும் நீரையோ அல்லது இளநீரையோ கொஞ்சம் எடுத்து முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொண்டால் கோடையில் ஏற்படும் வியர்க்குரு, கொப்புளங்கள் போன்றவை மறையும். கொஞ்சம் சந்தனப்பவுடர் அல்லது கடலை மாவுடன் கலந்து பேக்காவும் போடலாம்.

வீரியம் அதிகமுள்ள மருந்துகளை உட்கொள்ளும் சமயத்தில் வயிற்று வலி ஏற்படுவது சகஜம். என்னதான் மருத்துவர்கள் ஆன்ட்டி-அசிடிட்டி வகை மாத்திரைகளைப் பரிந்துரைத்தாலும் ‘அவ்வப்போது’ இளநீர் குடிப்பது வயிற்றைப் புண்ணாகாமல் பாதுகாக்கும். இதில் சோடியம் அதிகமிருப்பதால் இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்களும், டயபடீஸ் உள்ளவர்களும் அளவுடன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

மஹாராஷ்ட்ராவில் “பானி வாலா, மலாய் வாலா” என இரு வித இளநீர்கள் கிடைக்கும். தண்ணீர் மட்டும் போதும், உள்ளே இருக்கும் வழுக்கை வேண்டாமென்றால் ‘பானி வாலா’ எனக் கேட்டு வாங்குவோம். அதுவே மதிய உணவு நேரங்களில் வெளியே செல்ல நேரிட்டால், ‘மலாய் வாலா’ உகந்தது. தண்ணீரைக் குடித்து விட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையையும் சாப்பிட்டால் வயிறு திம்மென்று ஆகிவிடும். அதிலும் ‘பத்லா மலாய்’ எனக் கேட்டு வாங்க வேண்டும். அதுதான் இளசாக சாப்பிட நன்றாக இருக்கும். ‘கடக் மலாய்’ வாங்கி விட்டாலோ வீட்டிற்கு எடுத்து வந்து கறி சமைக்க வேண்டியதுதான். லேசாக முற்ற ஆரம்பித்ததை வேறென்ன செய்வது. வாய் வலிக்க வலிக்க சாப்பிட்டுத் தீர்க்க வேண்டியதுதான்.

இளநீரை அப்படியே சாப்பிடுவது ஒரு ருசி என்றால் அதையே பாயசமாக்கிச் சாப்பிடுவது வேற லெவல் ருசி. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஏகப்பட்ட செய்முறைகளை ஆராய்ந்ததில், பெரும்பான்மையானவை பிற பால்பாயசங்களின் முறையையே ஒத்திருந்தன. அப்படியிருந்தால் இதற்கும் மற்றவைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? வித்தியாசம் தேடி அலைந்தபோது கிடைத்தது இந்த செய்முறை. அதிகம் சமைக்கவே தேவையில்லாத, நெய், முந்திரிப்பருப்பு என எதுவும் போடாத இந்தப் பாயசம் அட்டகாசமான ருசியில் அமைந்தது.

தேவையானவை அதிகமில்லை ஜெண்டில் மென் அண்ட் விமென்.

இரண்டு கப் கெட்டியான பசும்பாலை லேசாகச் சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அகர் அகரைக் கரைத்து விடவும். பின், காய்ச்சிக்கொதிக்க வைத்து பால் ஒரு கப் அளவுக்குக் குறுகும் வரை வற்ற விட்டு இறக்கி அறை வெப்ப நிலைக்கு வரும் வரை குளிர வைக்கவும். அடுப்பின் பங்கு இத்தோடு முடிந்தது. இனியெல்லாம் அடுப்பில்லாச் சமையலே..

ஒரு கப் இளநீர் வழுக்கையை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் அளவு எடுத்து தனியே வைக்கவும். பின், மீதமிருக்கும் வழுக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இளநீரைச் சேர்த்து மைய அரைக்கவும். இதற்கு, ஒரு கப் இளநீர் போதும். மீதமிருந்தால் கடகடவென குடித்து விடுங்கள். தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான் தெரியுமோ!!!!!

அரைத்த விழுதை, ஏற்கனவே சுண்டக்காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலில் சேர்த்துக் கலக்கவும். 

அரை மூடி தேங்காயைத் துருவி நன்கு அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பாலெடுத்து இரண்டையும் கலந்து ஒரு கப் எடுத்துக்கொண்டு அதையும் இத்துடன் சேர்க்கவும்.

எடுத்து வைத்த வழுக்கைத் தேங்காயைப் பொடிப்பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கலக்கி, கொஞ்சமாக ஏலக்காய்ப் பொடியையும் தூவிக்கொள்ளவும். அவ்வப்போது கடிபடும் தேங்காய்த்துண்டங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். கொஞ்சம் இளசான துண்டங்கள் கிடைத்தால், “டிவைன்” என கண்மூடிச் சொக்கலாம்.

பாயசம் என்றால் இனிப்பு இல்லாமலா? அரை கப் சர்க்கரையைப் பொடி செய்து சேர்க்கலாம். ஆனால், ஒரு கப் கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்தால் ருசியும் நிறமும் மணமும் நன்றாக இருக்கிறது.

அவ்வளவுதான், பாயசப்பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் வைத்து மூன்று மணி நேரத்திற்குக் குளிர விடுங்கள். காலைச் சமையல் முடிந்த கையோடு பாயசத்தைத் தயார் செய்து வைத்து விட்டால், லஞ்சுக்கு டெஸர்ட் ரெடி கண்ணாடிக்கிண்ணங்களிலோ அல்லது பழரசக்கோப்பைகளிலோ பரிமாற வேண்டியதுதான்.

கொஞ்சம் ரிச்சாக பரிமாற நினைத்தால், கொஞ்சம் பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி சின்னச்சின்னதாக ஸ்லைஸ் செய்து, அதை பாயசத்தின் மேலாகத் தூவிப் பரிமாறலாம். நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையெல்லாம் உங்கள் ச்சாய்ஸ். இளநீர்ப் பாயசத்தின் தனிச்சுவையை அனுபவிக்க விரும்பியதால் நான் அதெல்லாம் சேர்க்கவில்லை. செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால் டின்னருக்கோ, வார இறுதி விருந்துகளுக்கோ பரிமாறி அசத்தி விடலாம். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, சூட்டு வலி என எல்லாவற்றையும் சரி செய்யும். தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய் வழுக்கை வயிற்றுப்புண்ணை ஆற்றும், உடலுக்குக் குளுமை தரக்கூடியது. என நன்மைகள் அனேகம். எல்லாவற்றையும் விட வெயில் காலத்தில் ஜில்லென்று சாப்பிட உகந்த ஒரு உணவு என்பதற்கு மேல் வேறென்ன வேண்டும்?

படங்களை ஒரு சின்ன வீடியோத்தொகுப்பாக யூ டியூபில் வலையேற்றியிருக்கிறேன். பிற்கால சேமிப்பிற்காக :)


LinkWithin

Related Posts with Thumbnails