Friday 10 May 2019

இளநீர் பாயசம்..

கோடைக்காலம் தொடங்கி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் வெயிலும் வெம்மையும் வாட்டியெடுக்கத் துவங்கி விட்டன. தாகத்தைத் தணிக்க ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இளநீர், குளிர் நீர் என இப்போதே குளிர்பதனப்பெட்டியை நிரப்பி வைக்கவும் ஆரம்பித்து விட்டோம். வெயில் இப்போதே இந்த போடு போடுகிறதே.. இன்னும் ஏப்ரல், மே வந்தால் என்னாவோமோ!!

கோடைக்காலத்தில் உடற்சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி, கண் எரிச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவற்றுக்கு இயற்கை இதே கோடை காலத்தில் மருந்தும் வைத்திருக்கிறது. இளநீர், நுங்கு போன்றவைதான் அவை. உள்ளுக்குச் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவது மட்டுமல்ல, நுங்கினுள்ளிருக்கும் நீரையோ அல்லது இளநீரையோ கொஞ்சம் எடுத்து முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொண்டால் கோடையில் ஏற்படும் வியர்க்குரு, கொப்புளங்கள் போன்றவை மறையும். கொஞ்சம் சந்தனப்பவுடர் அல்லது கடலை மாவுடன் கலந்து பேக்காவும் போடலாம்.

வீரியம் அதிகமுள்ள மருந்துகளை உட்கொள்ளும் சமயத்தில் வயிற்று வலி ஏற்படுவது சகஜம். என்னதான் மருத்துவர்கள் ஆன்ட்டி-அசிடிட்டி வகை மாத்திரைகளைப் பரிந்துரைத்தாலும் ‘அவ்வப்போது’ இளநீர் குடிப்பது வயிற்றைப் புண்ணாகாமல் பாதுகாக்கும். இதில் சோடியம் அதிகமிருப்பதால் இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்களும், டயபடீஸ் உள்ளவர்களும் அளவுடன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

மஹாராஷ்ட்ராவில் “பானி வாலா, மலாய் வாலா” என இரு வித இளநீர்கள் கிடைக்கும். தண்ணீர் மட்டும் போதும், உள்ளே இருக்கும் வழுக்கை வேண்டாமென்றால் ‘பானி வாலா’ எனக் கேட்டு வாங்குவோம். அதுவே மதிய உணவு நேரங்களில் வெளியே செல்ல நேரிட்டால், ‘மலாய் வாலா’ உகந்தது. தண்ணீரைக் குடித்து விட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையையும் சாப்பிட்டால் வயிறு திம்மென்று ஆகிவிடும். அதிலும் ‘பத்லா மலாய்’ எனக் கேட்டு வாங்க வேண்டும். அதுதான் இளசாக சாப்பிட நன்றாக இருக்கும். ‘கடக் மலாய்’ வாங்கி விட்டாலோ வீட்டிற்கு எடுத்து வந்து கறி சமைக்க வேண்டியதுதான். லேசாக முற்ற ஆரம்பித்ததை வேறென்ன செய்வது. வாய் வலிக்க வலிக்க சாப்பிட்டுத் தீர்க்க வேண்டியதுதான்.

இளநீரை அப்படியே சாப்பிடுவது ஒரு ருசி என்றால் அதையே பாயசமாக்கிச் சாப்பிடுவது வேற லெவல் ருசி. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஏகப்பட்ட செய்முறைகளை ஆராய்ந்ததில், பெரும்பான்மையானவை பிற பால்பாயசங்களின் முறையையே ஒத்திருந்தன. அப்படியிருந்தால் இதற்கும் மற்றவைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? வித்தியாசம் தேடி அலைந்தபோது கிடைத்தது இந்த செய்முறை. அதிகம் சமைக்கவே தேவையில்லாத, நெய், முந்திரிப்பருப்பு என எதுவும் போடாத இந்தப் பாயசம் அட்டகாசமான ருசியில் அமைந்தது.

தேவையானவை அதிகமில்லை ஜெண்டில் மென் அண்ட் விமென்.

இரண்டு கப் கெட்டியான பசும்பாலை லேசாகச் சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அகர் அகரைக் கரைத்து விடவும். பின், காய்ச்சிக்கொதிக்க வைத்து பால் ஒரு கப் அளவுக்குக் குறுகும் வரை வற்ற விட்டு இறக்கி அறை வெப்ப நிலைக்கு வரும் வரை குளிர வைக்கவும். அடுப்பின் பங்கு இத்தோடு முடிந்தது. இனியெல்லாம் அடுப்பில்லாச் சமையலே..

ஒரு கப் இளநீர் வழுக்கையை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் அளவு எடுத்து தனியே வைக்கவும். பின், மீதமிருக்கும் வழுக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இளநீரைச் சேர்த்து மைய அரைக்கவும். இதற்கு, ஒரு கப் இளநீர் போதும். மீதமிருந்தால் கடகடவென குடித்து விடுங்கள். தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான் தெரியுமோ!!!!!

அரைத்த விழுதை, ஏற்கனவே சுண்டக்காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலில் சேர்த்துக் கலக்கவும். 

அரை மூடி தேங்காயைத் துருவி நன்கு அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பாலெடுத்து இரண்டையும் கலந்து ஒரு கப் எடுத்துக்கொண்டு அதையும் இத்துடன் சேர்க்கவும்.

எடுத்து வைத்த வழுக்கைத் தேங்காயைப் பொடிப்பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கலக்கி, கொஞ்சமாக ஏலக்காய்ப் பொடியையும் தூவிக்கொள்ளவும். அவ்வப்போது கடிபடும் தேங்காய்த்துண்டங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். கொஞ்சம் இளசான துண்டங்கள் கிடைத்தால், “டிவைன்” என கண்மூடிச் சொக்கலாம்.

பாயசம் என்றால் இனிப்பு இல்லாமலா? அரை கப் சர்க்கரையைப் பொடி செய்து சேர்க்கலாம். ஆனால், ஒரு கப் கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்தால் ருசியும் நிறமும் மணமும் நன்றாக இருக்கிறது.

அவ்வளவுதான், பாயசப்பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் வைத்து மூன்று மணி நேரத்திற்குக் குளிர விடுங்கள். காலைச் சமையல் முடிந்த கையோடு பாயசத்தைத் தயார் செய்து வைத்து விட்டால், லஞ்சுக்கு டெஸர்ட் ரெடி கண்ணாடிக்கிண்ணங்களிலோ அல்லது பழரசக்கோப்பைகளிலோ பரிமாற வேண்டியதுதான்.

கொஞ்சம் ரிச்சாக பரிமாற நினைத்தால், கொஞ்சம் பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி சின்னச்சின்னதாக ஸ்லைஸ் செய்து, அதை பாயசத்தின் மேலாகத் தூவிப் பரிமாறலாம். நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையெல்லாம் உங்கள் ச்சாய்ஸ். இளநீர்ப் பாயசத்தின் தனிச்சுவையை அனுபவிக்க விரும்பியதால் நான் அதெல்லாம் சேர்க்கவில்லை. செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால் டின்னருக்கோ, வார இறுதி விருந்துகளுக்கோ பரிமாறி அசத்தி விடலாம். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, சூட்டு வலி என எல்லாவற்றையும் சரி செய்யும். தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய் வழுக்கை வயிற்றுப்புண்ணை ஆற்றும், உடலுக்குக் குளுமை தரக்கூடியது. என நன்மைகள் அனேகம். எல்லாவற்றையும் விட வெயில் காலத்தில் ஜில்லென்று சாப்பிட உகந்த ஒரு உணவு என்பதற்கு மேல் வேறென்ன வேண்டும்?

படங்களை ஒரு சின்ன வீடியோத்தொகுப்பாக யூ டியூபில் வலையேற்றியிருக்கிறேன். பிற்கால சேமிப்பிற்காக :)


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails