நல்லதா ரெண்டு கட்டு பசலைக்கீரை வாங்கிக்கோங்க. இதை , 'பாலக்'ன்னும் சொல்லுவாங்க .ஒரு சின்னகட்டு வெந்தயக்கீரை வாங்கிக்கோங்க. (வீட்டுல ஒரு தொட்டியில வெந்தயத்தை கொஞ்சூண்டு தூவிவிட்டுட்டா முளைச்சுடும். தேவையானப்ப பறிச்சுக்கலாம்), அப்புறம் வீட்டுல வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி இலையெல்லாம் இருக்குதுதானே.. இல்லைன்னா அதையும் வாங்கிடுங்க. அப்புறம் உருளைக்கிழங்கும் வேணும். எல்லாம் வாங்கியாச்சா..
ரைட்டு.. இப்ப.. ஒரு வெங்காயத்தை பொடியா நறுக்கிக்கோங்க. ஒரு தக்காளியும் பொடியா நறுக்கிக்கோங்க. ஒரு ஸ்பூன் நறுக்குன இஞ்சியும் ரெடியா இருக்கட்டும். அப்புறம் பசலைக்கீரை, வெந்தயக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணெல்லாம் போக கழுவி, தண்ணீரை வடியவிடுங்க. அப்புறம் பசலைக்கீரையை ஒரு பாத்திரத்திலும், ரெண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கி, இன்னொரு பாத்திரத்திலும் போட்டு, குக்கரில் வெச்சு வேகவிடுங்க. கிழங்குகளை கழுவியதே போதும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கவேண்டாம். நல்லா மசியறவரை வெந்ததும் எடுத்து ஆறவையுங்க. அப்புறம் கீரையை நல்லா மசிச்சு வையுங்க. மிக்ஸியில் போட்டும் அரைச்சுக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் போட்டு வெடிக்கவிடுங்க. இப்ப, வெங்காயம், இஞ்சியை போட்டு லேசா வதக்குங்க. கொஞ்சம் வாசனை வந்ததும், தக்காளியைப்போட்டு நல்லா கரையுறவரை வதக்குங்க. ஆச்சா!!.. இப்ப மசிச்ச கீரையை அதுல ஊத்துங்க. கீரை ரொம்ப கட்டியா இருந்தா அரைகப் தண்ணியும் சேத்துக்கலாம். இப்ப, அரைஸ்பூன் மிளகாய்த்தூளும், சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு கிளறிவுடுங்க. அரைஸ்பூன் கரம்மசாலாவும் போட்டு கொதிக்கவிடுங்க. கொதிவந்ததும், அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வெச்சாப்போதும். அவ்ளோதான்..
இப்ப, பேட்டீஸ் செய்யலாம்... பொடியாக நறுக்கப்பட்ட ஒரு வெங்காயம்(விக்கிற விலைக்கு ஒண்ணுபோதும் :-)), கால்கப் கொத்தமல்லி இலை, நறுக்கிய வெந்தயக்கீரை,வெந்த உருளைக்கிழங்கு,அரை ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, அப்புறம் சிட்டிகை மஞ்சள்பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அதே அளவு உப்பு எல்லாத்தையும் கலந்து எலுமிச்சையளவு உருண்டைகளா பிடிச்சு, லேசா வடை மாதிரி தட்டிக்கோங்க. இந்த பேட்டீஸ்களை ரவையில் புரட்டி அடுக்கிவெச்சுக்கோங்க.
பேட்டீஸுக்கு தேவையானவை.
தயாரான பேட்டீஸ்.
அடுப்பில் லேசா குழிவான தோசைக்கல்லை(இதை அடைக்கல்லுன்னும் சொல்லுவாங்க)சூடாக்கி, ரெண்டுமூணா பேட்டீஸ்களை அடுக்கி சுத்திலும் எண்ணெய்விட்டு, ரெண்டுபக்கமும் பொன்னிறமாகுறவரைக்கும் பொரிச்செடுங்க. டீப் ஃப்ரை செய்யவேணாம். பேட்டீஸ் உதிர்ந்து எண்ணெய் வேஸ்டாயிடும். shallow fryதான் இதுக்கு லாயக்கு.பரிமாறும்வரைக்கும் ரெண்டும் தனித்தனியாத்தான் இருக்கணும். இல்லைன்னா, ரெண்டும் சேர்ந்து குழம்பிடும். சாப்பிடப்போகும்போது பேட்டீஸ்களை க்ரேவியில் போட்டாப்போதும். தனியா கிண்ணத்தில் பரிமாறுறதா இருந்தா பேட்டீஸைப்போட்டு, அது தலைல க்ரேவியை ஊத்திடுங்க.. சப்பாத்திக்கு அருமையான ஜோடி..
சப்ஜி ரெடி.
லிஸ்டை ஒருக்கா சரிபார்த்துக்கலாமா..க்ரேவிக்கு: :
பாலக்கீரை - ரெண்டு கட்டு
ஒரு வெங்காயம்- நறுக்கியதுதக்காளி - 1 பொடியா நறுக்கியது.
இஞ்சி - நறுக்கியது அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரைடீஸ்பூன்,
மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
கரம்மசாலா- அரைடீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப.
பேட்டீஸுக்கு:
வெந்தயக்கீரை- ஒரு சிறுகட்டு
ஒரு வெங்காயம்- பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை - கால்கப்
நறுக்கிய இஞ்சி - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2.
ரவை- கொஞ்சூண்டு..
உப்பு- ருசிக்கேற்ப.
வெறுமனே பேட்டீஸ் மட்டும் செஞ்சுக்கிட்டு, அதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஸ்டார்ட்டராவும் வெச்சுக்கலாம்.


