Monday 4 July 2011

இதுக்கு மேல வாங்கறதுக்கு மதிப்பெண்கள் இருக்கா!!!..



கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.

இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி,  போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.

படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.

3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.  ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.

வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.

முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.

 'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.

 "வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.

இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."

"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.

 'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம்,  அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,...  'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.

 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...




43 comments:

ராமலக்ஷ்மி said...

//படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது//

அப்படியான படிப்பு கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து போகிறது. இந்நிலை என்று மாறுமோ:(?

சாந்தி மாரியப்பன் said...

கடைக்கண் பாராயோ... தமிழ்மணமே :-))

அமுதா கிருஷ்ணா said...

அருமையான அலசல்.எனக்கு அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் அறிவாளி என்பதில் துளியும் நம்பிக்கை கிடையாது.எல்லோரும் மாற வேண்டுமே.அட்லீஸ்ட் நம் பரம்பரையினை இந்த எண்ணத்தில் இருந்து மாற்றுவோம்.

இராஜராஜேஸ்வரி said...

எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.//

பகிர்வு அருமை.

Anonymous said...

You need to get 100% in order to get into a college? Holly Cow =((

This Hindi movie should be a copy of this. http://en.wikipedia.org/wiki/Accepted

எல் கே said...

தில்லி பல்கலைகழகத்திலும் இதே நிலைதான்

வெங்கட் நாகராஜ் said...

தில்லியிலும் இதே நிலைதான். சில கல்லூரிகளில் 100% எடுத்தால் தான் முதல் லிஸ்டில் பெயர் வந்தது இந்த வருடம்.... எங்கு சென்று முடியும் இது என்று புரியவில்லை. 95% எடுத்து இரண்டாம், மூன்றாம் லிஸ்டில் கூட தான் விரும்பும் கல்லூரியில் பெயர் இல்லை என்று பார்த்த எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா....

நல்லதோர் அலசல்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இது மிகப் பெரிய பிரச்சனைதான். எத்தனை படங்கள் வந்தாலும் இந்த பிரச்சனை தீராது. மாணவர்கள் ஒரு சில மேல்படிப்புகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவதால்தான் இந்த நிலையா?

ஹேமா said...

சமகாலப் பிரச்சனையை அலசியிருக்கிறீர்கள் சாரல் நல்லது !

ஸ்ரீராம். said...

இந்தப் பிரச்னைக்கு இந்த நூற்றாண்டில் தீர்வு இல்லை...!

அமைதி அப்பா said...

நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.

'பரிவை' சே.குமார் said...

இது மிகப் பெரிய பிரச்சனைதான்.
அருமையான அலசல்.

ஹுஸைனம்மா said...

என்னது, நூத்துக்கு நுறு வாங்கினாத்தான் இப்பல்லாம் நல்ல காலேஜ்ல இடமா? அப்ப என் பசங்க காலம் வரும்போது நூத்துக்கு நூத்தம்பது கேப்பாய்ங்களோ??!! அவ்வ்வ்வ்....

ஹும்ம். அந்தக் கால பெரியவங்க எஸ்ஸெல்ஸி படிச்சதையே பெருமையாச் சொல்வாங்க. நம்ம காலத்துல 80-85% வாங்கினாப் பெருமை.. இப்பத்திய பசங்கதான் பாவம். பழைய கால சிலபஸையே மறுபடியும் கொண்டுவந்தாத்தான் சரிவரும்போல!! ;-))))))

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. இன்றைய சூழலில் அலச வேண்டிய விஷயங்கள் தான்.

Menaga Sathia said...

அருமையான அலசல்!!

Yaathoramani.blogspot.com said...

தற்போது அனைவரையும் ஆட்டிப்படைக்கும் பொருள் குறித்து
மிக ஆழமாக சிந்தித்து பதிவிட்டிருக்கிறீர்கள்
பயனுள்ள தரமான பதிவு.வாழ்த்துக்கள்

என் நடை பாதையில்(ராம்) said...

wow! great! கல்வி சம்பந்தமா நான் படிச்சதுலையே மிகவும் அற்ப்புதமான பதிவு இதுதான்!

priya.r said...

சமூக சிந்தனை உள்ள பதிவு

நிறைய யோசிக்க வைக்கிறது

என்னோட பசங்க average தான்

பக்கத்து வீட்டு குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்கும் பொது

நம் குழந்தைகளும் எடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணம் ,ஆதங்கம் எழ தான் செய்கிறது

அப்புறம் மனதை சமாதான படுத்தி கொள்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி மேடம்

priya.r said...

இவ்வளோ நல்ல, பிரபல மான பதிவர் இருக்காங்கன்னு இத்தனை நாள் தெரியாம போச்சே !

அந்த அப்பாவி சொல்லி இருக்கலாம் ;இல்லே இந்த சுனாமி (அனாமிகா ) யாவது சொல்லி இருக்கலாம் !

எனக்கு தெரியாம இருந்ததுக்கு இந்த ரெண்டு பேர் தான் முக்கிய காரணம் யுவர் ஹானர்

இந்த ஒரு தடவை அவர்களுக்கு தக்க அறிவுரை சொல்லுமாறு தங்களை கேட்டு கொள்கிறேன் :)

goma said...

எத்தனை சொன்னாலும் நம்ம ஊர் மாறாதுங்க...
எல்லோர் கண்ணிலும் அமெரிக்காவும் டாலரும் டாலடிக்கும் போது .....கல்விக் கூடங்கள் வியாபாரத் தலமாகத்தான் நடைபோடும்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

மாறணும்ங்கறதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

மனப்பாடம் செஞ்சு அதிக மதிப்பெண்கள் எடுத்தவங்களைவிட,அந்தப்பாடத்தைப்பத்தின புரிதல் சிலசமயங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவங்க கிட்ட இருக்கறதுண்டுதானே..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுனாமி,

அந்த லிங்கைப்பார்த்தேன்ப்பா.. நாலு பேருக்கு நல்லது நடக்கும்ன்னா, ரீமேக் பண்றதுல தப்பேயில்ல :-))

'சில' காலேஜ்கள்ன்னு குறிப்பிட்டிருக்கேன்ப்பா.. ஆனா இது எத்தனை நாளைக்குன்னுதான் தெரியலை :-(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

மாணவர்களின் நிலையையும் கொஞ்சம் யாராவது யோசிச்சா தேவலை..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினதே தில்லியில்தான்னு கேள்விப்பட்டேன். தகவல் சரிதானான்னு கொஞ்சம் உறுதிப்படுத்துங்களேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா சுப்ரமணியம்,

இது நாள் வரைக்கும் அப்படித்தான் இருந்தது.. ஆனா, இப்போ மற்ற படிப்புகளிலும் ஆர்வம் காட்டறாங்க.

மும்பையில் மாஸ்மீடியா,ஜர்னலிசம் போன்ற படிப்புகளுக்கு, இந்த வருஷத்திய கடைசி மெரிட்லிஸ்ட் 76%த்தில் முடிஞ்சிருக்குது

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

பிழிஞ்சு காயப்போட்டாலாவது ஏதாவது நடக்குதான்னு பார்க்கலாம்ன்னு ஒரு நினைப்புதான் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

தீர்வு எடுக்க மக்கள் இப்போ தயாரா இல்லையோன்னு நினைக்கிறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

//நூத்துக்கு நூத்தம்பது கேப்பாய்ங்களோ??!!//

ஹா..ஹா..ஹா.. இதையேதான் என் பையரும் சொன்னார் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

சொந்தமா எழுதுனா மார்க் இல்லை, புத்தகத்துல இருக்கறதை அப்படியே வாந்தியெடுத்தாத்தான் மதிப்பெண்கள் கிடைக்கும்கற நிலை, பசங்களை நிச்சயமா எந்திரங்களாக்கத்தானே செய்யுது..

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ப்ரியா,

நாம பசங்களை ஒப்பிட ஆரம்பிச்சா, அவங்க நம்மளை ஒப்பிட ஆரம்பிச்சுடுவாங்க.. எப்படி வசதி :-)))))))))))

'புத்தகத்துல இருக்கறதை ஜெராக்ஸ் எடுத்தமாதிரி எழுதுனாத்தான் முழுமதிப்பெண்கள் கிடைக்கும்ன்னா, மாணவர்களுக்கு பதிலா ஜெராக்ஸ் மெஷிங்களை வெச்சு வகுப்புல பாடம் நடத்தவேண்டியதுதான்' இது என் பையர் சொன்ன பொன்மொழி :-))

சாந்தி மாரியப்பன் said...

ப்ரியா,

அப்பாவி,சுனாமி இந்த ரெண்டு பெயர்களைத்தவிர அந்த பின்னூட்டத்துல நீங்க என்ன எழுதியிருந்தீங்கன்னு என் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குதுப்பா :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமாக்கா,

நூத்துல ஒரு வார்த்தை.. நீங்க சொன்னது :-)

உலக சினிமா ரசிகன் said...

பால்டு பற்றிய பதிவு அற்ப்புதம்.
ஏனுங்க... நானும் கோவைதானுங்கோ...

குழந்தைகளுக்கான உலக சினிமா,பெண்களுக்கான உலகசினிமா
குடும்பத்தோடு பார்க்க முடிகின்ற உலக சினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.
தற்ப்போதைய பதிவு நாயகன்,தேவர்மகன் படங்களின் தாய்...காட்பாதர்.

Unknown said...

அருமையான பதிவு
ஆய்வான பதிவு
அறியவேண்டும் பெற்றோர்
ஆயவேண்டும் கற்றோர்

தேவையான பதிவு
தெளிவுமிக்க பதிவு
சேவையான பதிவு
செய்யும்நன்மை பதிவு

புலவர் சா இராமாநுசம்

பாச மலர் / Paasa Malar said...

திருவனந்தபுரம் புதையல் யாருக்குச் சொந்தமானது?
சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா?
அரசியல்வாதிகள் எபோது நல்லவர்கள் ஆவார்கள்?
மாமியார் மருமகள் உறவு எப்போது இயல்பானதாக இருக்கும்?
பெற்றோர் எப்போது மருத்துவர்களையும், பொறியாளர்களையும் வளர்ப்பதை விடுத்துப் பிள்ளைகளை வளர்ப்பார்கள்?

இதோடு சேர்த்து இந்தப்பதிவின் மூலம் எழும் கேள்விகளுக்கும் எப்போது பதில் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது..

pudugaithendral said...

படின்னு சொல்லணுமா, படிக்க வேணாம்னு சொல்லணுமான்னு புரியாத பெற்றோர்களின் மன நிலையை வெச்சு யாரும் படம் எடுத்தா நல்லா இருக்கும்.

பெற்றோர்களையும்,பிள்ளைகளையும்
இந்த நிலைக்கு தள்ளின நம்ம கல்வியாளர்களை என்ன செஞ்சாலும் தகும்!!

LinkWithin

Related Posts with Thumbnails