பிச்சி: கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்ன்னு சொல்லுவாங்க. ஏதோ முழுக்க கெடுறதுக்கு முன்னாடியே முழிச்சுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். எங்கும் எதிலும் ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக்ன்னு இருந்த மோகத்திலேர்ந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைய ஆரம்பிச்சிருக்காங்களே அதைத்தான் சொல்றேன். மும்பையைப் பொறுத்தவரை 'அந்த' மழைக்கப்றம் ப்ளாஸ்டிக் பைகளைப் பத்தின ஒரு விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பிச்சிருக்குது. மால்கள்ல கூட பை வேணும்ன்னா காசு கொடுத்துத்தான் வாங்கிக்கணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சின்னச் சின்னக் கடைகள்ல பேப்பர் பைகள் புழக்கத்துக்கு வந்தாச்சு. செய்யறதுக்குச் சுலபமான இந்தப் பைகள் இங்கே சில குடும்பங்களையும் வாழ வெச்சுக்கிட்டிருக்குது.
மும்பையின் காந்திவிலி பகுதியைச் சேர்ந்த பத்துப் பெண்கள் ஒண்ணாக் கூடி இதை ஒரு குடிசைத் தொழிலாவே செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அக்கம்பக்கத்துக் கட்டிடங்கள்ல சொல்லி வெச்சு, நாளிதழ்களைத் தினமும் சேகரிச்சு பைகள் செய்யறாங்க. இதை அக்கம் பக்கத்துல இருக்கற இனிப்பகங்கள், மருந்துக் கடைகள், அப்றம் சின்னச் சின்ன கடைகள்ல வாங்கிக்கறாங்க. நாமளும் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியா பலமா இருக்கோம்ங்கறதுல இந்தப் பெண்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.
இருவாட்சி: உலகப் புகழ் பெற்ற அஜந்தா எல்லோராக் குகைகளுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்குதாம். இதை நம்ம இந்தியத் தொல்பொருட்துறை ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சு, அறிவிச்சுருக்குது. வெளி மாநிலங்கள்லேர்ந்தோ, இல்லை உள்ளூர்க் காரங்களோ ஷிர்டி, சனிஷிங்கனாப்பூர்க்கு தரிசனம் செய்ய வந்தா அங்கேருந்து பக்கத்துல அவுரங்காபாத்ங்கற நகர்லேர்ந்து அஞ்சே கி.மீ தொலைவுல இருக்கற அஜந்தா எல்லோராக் குகைகளுக்குப் போயி சிற்பங்களை ரசிக்காம வர மாட்டாங்க. இப்படி தினமும் கூடுற டூரிஸ்ட்டுக் கூட்டத்தாலதான் அந்தக் குகைகளுக்கு ஆபத்தாம்.
கூட்டம் அதிகமா இருக்கறதால அங்கே கரியமில வாயுவோட அளவு காத்துல கூடுதலாகிடுச்சு. இப்படி கூடுதலான வாயு குகையோட கற்கள்ல இருக்கற கால்ஷியம் கார்பனேட்டோட வினை புரிஞ்சு பயோகார்பனேட் ஆகுது. இது பாறைத்துணுக்குகளுக்கு இடையேயான பிணைப்பைத் தகர்க்குதாம். இதனால என்ன ஆகும்ன்னு கேக்கறவங்களுக்கு அங்கே ரெண்டாம் குகையின் கூரைப்பகுதியிலேர்ந்து பொடிப்பொடியா உதிர்ந்து வர ஆரம்பிச்சுருக்கும் மணற்துகள்களே பதில் சொல்லும். இந்தியாவின் பொக்கிஷங்கள்ல ஒண்ணான அஜந்தா, எல்லோராக் குகைகளை இனிமேல் புகைப்படங்கள்ல மட்டுந்தான் பார்க்க முடியும்ங்கற நிலைமை வந்துடும் போலிருக்கு.
கனகாம்பரம்: “வொய் திஸ் கொலவெறி” மும்பை இளசுகளின் உதட்டில் சமீப காலமா வந்து உக்காந்துக்கிட்டு இருக்குது. காலேஜ் காண்டீன்கள்ல இந்தப் பாட்டு எத்தனை தடவை ஒலிக்குதுன்னு கணக்கே வெச்சுக்க முடியலை. எங்கூர் மராட்டி மொழியில் ஆரம்பிச்சு குழந்தைகளின் விருப்பமான சிப்மங்க்ஸ் வரைக்கும் பாடற மாதிரியான எக்கச்சக்கமான ரீமிக்ஸுகளும் வந்தாச்சு. ஏற்கனவே நம்மூரு டாக்குட்டர் விஜய் ஆடிப் பாடுன “அப்டிப் போடு.. போடு” இன்னி வரைக்கும் வடக்கே நடக்கற கல்யாணங்கள்லயும் கொண்டாட்டங்கள்லயும் டிவிக்கள்லயும் போடுபோடுன்னு போட்டுக்கிட்டிருக்கு. பத்தாததுக்கு “நாக்கமுக்க” பாடல் ஒரு இந்திப் படத்துல பின்னணி இசையாவும் பயன் படுத்தப் பட்டிருக்கு. இப்போ “கொலவெறி”யையும் பாலிவுட் படங்கள்ல உபயோகப்படுத்தலாமான்னு மக்கள் கிட்ட கருத்துக் கணிப்பும் நடத்திக்கிட்டுருக்காங்க. தமிழேண்டா :-)
மந்தாரை: நம்ம கவுண்டர் ஒரு படத்துல சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டிருப்பார். ஒரு நாள் சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கறப்ப திடீர்ன்னு டமால்ன்னு சைக்கிளைப் போட்டுட்டு அவரும் கீழே விழுவார். அக்கம் பக்கத்துல நின்னுட்டிருந்தவங்க ஓடி வந்து அவரைத் தூக்கி விட்டுட்டு, அடிபட்டிருச்சான்னு கேக்கவும், நான் இப்படித்தான் சைக்கிள்லேர்ந்து இறங்குவேன்ன்னு கூலா சொல்லிட்டு போயிட்டேருப்பார். இந்தக் காட்சியை ஞாபகப் படுத்தறமாதிரி சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துது.
நவிமும்பையின் வாஷிக்கு போயிட்டு திரும்பி வந்துட்டிருந்தேன். ட்ரெயின் ஜஸ்ட் புறப்பட்டு வேகமெடுக்க ஆரம்பிக்கையில் எங்க பொட்டியிலிருந்து ஒரு பொண்ணு தடார்ன்னு வண்டிக்கு வெளியே பப்பரப்பேன்னு மல்லாக்க விழுந்துட்டா, கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரமா வண்டி இன்னும் ஸ்டேஷனுக்கு வெளியே வரலை. அதனால ப்ளாட்பாரத்துல விழுந்ததும் பக்கத்துல இருந்தவங்க சட்ன்னு அவளைத் தாங்கிப் பிடிச்சுட்டாங்க. எழுந்தவ சிரிச்சுட்டே தன்னோட பையைக் குனிஞ்சு எடுத்துக்கிட்டா. தள்ளுமுள்ளுல விழுந்துருப்பாளோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு பொட்டிக்குள்ள கூட்டமுமில்லை. ஒருவேளை அவளைக் கேட்டிருந்தா, “நான் எறங்கற இஸ்டைலே இப்படித்தான்”ன்னு சொல்லியிருந்துருப்பாளோ என்னவோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
செவ்வந்தி: மும்பையில் சமூக அமைதியைக் குலைக்கிற விதமா அடிக்கடி நடக்கும் சம்பவங்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுக்கணும்ன்னா பொதுமக்களோட கை கோர்த்துக்கிட்டுச் செயல்படறது அவசியம்ங்கறதை எங்கூர் காவல்துறை உணர்ந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு ஏரியாவோட மூலை முடுக்கையும் அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நல்லாத் தெரியும்ங்கறதால திருட்டு, போதைப்பொருள் நடமாட்டம், வன்முறையாளர்களோட நடமாட்டம்ன்னு எல்லாத்தையும் ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சுடலாம் இல்லியா. இது கிட்டத்தட்ட நம்மூர் ஊர்க்காவல் படையோட மாறுபட்ட வடிவம்தான். அதேமாதிரி கடலுக்குள்ள கண்காணிக்கறதுக்காக மீனவர்களோட உதவியையும் கேட்டிருக்காங்க. தரைவழியாவோ கடல்வழியாவோ இந்தியாவுக்குள்ள தீவிரவாதிகள் நுழையறதைத் தடுக்கறதுக்கான முயற்சிதான் இது. மும்பை முழுக்க ஆங்காங்கே கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கவும் யோசனை நடக்குது. கடந்த வருஷங்கள்ல மும்பை மேல் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களாலதான் இப்படியொரு யோசனை எழுந்துருக்குது. அதே சமயம் பொது மக்களோட பங்களிப்போட நகரத்துல நடக்கற கிரிமினல் சம்பவங்களையும் கட்டுக்குள்ள கொண்டாந்துடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-)
ஆர்க்கிட்: நான் எழுதிய பவளமல்லி சிறுகதை நம்ம லேடீஸ் ஸ்பெஷலோட தீபாவளி மலர்ல வெளியாகியிருக்குது. வெளியிட்ட நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.