Tuesday 29 November 2011

பூந்தோட்டம்..(29-11-11 அன்று பூத்தவை)

பிச்சி: கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்ன்னு சொல்லுவாங்க. ஏதோ முழுக்க கெடுறதுக்கு முன்னாடியே முழிச்சுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். எங்கும் எதிலும் ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக்ன்னு இருந்த மோகத்திலேர்ந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைய ஆரம்பிச்சிருக்காங்களே அதைத்தான் சொல்றேன். மும்பையைப் பொறுத்தவரை 'அந்த' மழைக்கப்றம் ப்ளாஸ்டிக் பைகளைப் பத்தின ஒரு விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பிச்சிருக்குது. மால்கள்ல கூட பை வேணும்ன்னா காசு கொடுத்துத்தான் வாங்கிக்கணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சின்னச் சின்னக் கடைகள்ல பேப்பர் பைகள் புழக்கத்துக்கு வந்தாச்சு. செய்யறதுக்குச் சுலபமான இந்தப் பைகள் இங்கே சில குடும்பங்களையும் வாழ வெச்சுக்கிட்டிருக்குது.

மும்பையின் காந்திவிலி பகுதியைச் சேர்ந்த பத்துப் பெண்கள் ஒண்ணாக் கூடி இதை ஒரு குடிசைத் தொழிலாவே செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அக்கம்பக்கத்துக் கட்டிடங்கள்ல சொல்லி வெச்சு, நாளிதழ்களைத் தினமும் சேகரிச்சு பைகள் செய்யறாங்க. இதை அக்கம் பக்கத்துல இருக்கற இனிப்பகங்கள், மருந்துக் கடைகள், அப்றம் சின்னச் சின்ன கடைகள்ல வாங்கிக்கறாங்க. நாமளும் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியா பலமா இருக்கோம்ங்கறதுல இந்தப் பெண்களுக்கு ரொம்பவே சந்தோஷம்.

இருவாட்சி: உலகப் புகழ் பெற்ற அஜந்தா எல்லோராக் குகைகளுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்குதாம். இதை நம்ம இந்தியத் தொல்பொருட்துறை ஆராய்ச்சி செஞ்சு கண்டு பிடிச்சு, அறிவிச்சுருக்குது. வெளி மாநிலங்கள்லேர்ந்தோ, இல்லை உள்ளூர்க் காரங்களோ ஷிர்டி, சனிஷிங்கனாப்பூர்க்கு தரிசனம் செய்ய வந்தா அங்கேருந்து பக்கத்துல அவுரங்காபாத்ங்கற நகர்லேர்ந்து அஞ்சே கி.மீ தொலைவுல இருக்கற அஜந்தா எல்லோராக் குகைகளுக்குப் போயி சிற்பங்களை ரசிக்காம வர மாட்டாங்க. இப்படி தினமும் கூடுற டூரிஸ்ட்டுக் கூட்டத்தாலதான் அந்தக் குகைகளுக்கு ஆபத்தாம்.

கூட்டம் அதிகமா இருக்கறதால அங்கே கரியமில வாயுவோட அளவு காத்துல கூடுதலாகிடுச்சு. இப்படி கூடுதலான வாயு குகையோட கற்கள்ல இருக்கற கால்ஷியம் கார்பனேட்டோட வினை புரிஞ்சு பயோகார்பனேட் ஆகுது. இது பாறைத்துணுக்குகளுக்கு இடையேயான பிணைப்பைத் தகர்க்குதாம். இதனால என்ன ஆகும்ன்னு கேக்கறவங்களுக்கு அங்கே ரெண்டாம் குகையின் கூரைப்பகுதியிலேர்ந்து பொடிப்பொடியா உதிர்ந்து வர ஆரம்பிச்சுருக்கும் மணற்துகள்களே பதில் சொல்லும். இந்தியாவின் பொக்கிஷங்கள்ல ஒண்ணான அஜந்தா, எல்லோராக் குகைகளை இனிமேல் புகைப்படங்கள்ல மட்டுந்தான் பார்க்க முடியும்ங்கற நிலைமை வந்துடும் போலிருக்கு.

கனகாம்பரம்: “வொய் திஸ் கொலவெறிமும்பை இளசுகளின் உதட்டில் சமீப காலமா வந்து உக்காந்துக்கிட்டு இருக்குது. காலேஜ் காண்டீன்கள்ல இந்தப் பாட்டு எத்தனை தடவை ஒலிக்குதுன்னு கணக்கே வெச்சுக்க முடியலை. எங்கூர் மராட்டி மொழியில் ஆரம்பிச்சு குழந்தைகளின் விருப்பமான சிப்மங்க்ஸ் வரைக்கும் பாடற மாதிரியான எக்கச்சக்கமான ரீமிக்ஸுகளும் வந்தாச்சு. ஏற்கனவே நம்மூரு டாக்குட்டர் விஜய் ஆடிப் பாடுனஅப்டிப் போடு.. போடுஇன்னி வரைக்கும் வடக்கே நடக்கற கல்யாணங்கள்லயும் கொண்டாட்டங்கள்லயும் டிவிக்கள்லயும் போடுபோடுன்னு போட்டுக்கிட்டிருக்கு. பத்தாததுக்குநாக்கமுக்கபாடல் ஒரு இந்திப் படத்துல பின்னணி இசையாவும் பயன் படுத்தப் பட்டிருக்கு. இப்போகொலவெறியையும் பாலிவுட் படங்கள்ல உபயோகப்படுத்தலாமான்னு மக்கள் கிட்ட கருத்துக் கணிப்பும் நடத்திக்கிட்டுருக்காங்க. தமிழேண்டா :-)

மந்தாரை: நம்ம கவுண்டர் ஒரு படத்துல சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டிருப்பார். ஒரு நாள் சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கறப்ப திடீர்ன்னு டமால்ன்னு சைக்கிளைப் போட்டுட்டு அவரும் கீழே விழுவார். அக்கம் பக்கத்துல நின்னுட்டிருந்தவங்க ஓடி வந்து அவரைத் தூக்கி விட்டுட்டு, அடிபட்டிருச்சான்னு கேக்கவும், நான் இப்படித்தான் சைக்கிள்லேர்ந்து இறங்குவேன்ன்னு கூலா சொல்லிட்டு போயிட்டேருப்பார். இந்தக் காட்சியை ஞாபகப் படுத்தறமாதிரி சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துது.

நவிமும்பையின் வாஷிக்கு போயிட்டு திரும்பி வந்துட்டிருந்தேன். ட்ரெயின் ஜஸ்ட் புறப்பட்டு வேகமெடுக்க ஆரம்பிக்கையில் எங்க பொட்டியிலிருந்து ஒரு பொண்ணு தடார்ன்னு வண்டிக்கு வெளியே பப்பரப்பேன்னு மல்லாக்க விழுந்துட்டா, கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரமா வண்டி இன்னும் ஸ்டேஷனுக்கு வெளியே வரலை. அதனால ப்ளாட்பாரத்துல விழுந்ததும் பக்கத்துல இருந்தவங்க சட்ன்னு அவளைத் தாங்கிப் பிடிச்சுட்டாங்க. எழுந்தவ சிரிச்சுட்டே தன்னோட பையைக் குனிஞ்சு எடுத்துக்கிட்டா. தள்ளுமுள்ளுல விழுந்துருப்பாளோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு பொட்டிக்குள்ள கூட்டமுமில்லை. ஒருவேளை அவளைக் கேட்டிருந்தா, “நான் எறங்கற இஸ்டைலே இப்படித்தான்”ன்னு சொல்லியிருந்துருப்பாளோ என்னவோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செவ்வந்தி: மும்பையில் சமூக அமைதியைக் குலைக்கிற விதமா அடிக்கடி நடக்கும் சம்பவங்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுக்கணும்ன்னா பொதுமக்களோட கை கோர்த்துக்கிட்டுச் செயல்படறது அவசியம்ங்கறதை எங்கூர் காவல்துறை உணர்ந்துக்கிட்டிருக்கு. ஒவ்வொரு ஏரியாவோட மூலை முடுக்கையும் அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நல்லாத் தெரியும்ங்கறதால திருட்டு, போதைப்பொருள் நடமாட்டம், வன்முறையாளர்களோட நடமாட்டம்ன்னு எல்லாத்தையும் ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சுடலாம் இல்லியா. இது கிட்டத்தட்ட நம்மூர் ஊர்க்காவல் படையோட மாறுபட்ட வடிவம்தான். அதேமாதிரி கடலுக்குள்ள கண்காணிக்கறதுக்காக மீனவர்களோட உதவியையும் கேட்டிருக்காங்க. தரைவழியாவோ கடல்வழியாவோ இந்தியாவுக்குள்ள தீவிரவாதிகள் நுழையறதைத் தடுக்கறதுக்கான முயற்சிதான் இது. மும்பை முழுக்க ஆங்காங்கே கண்காணிப்புக் காமிராக்கள் வைக்கவும் யோசனை நடக்குது. கடந்த வருஷங்கள்ல மும்பை மேல் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களாலதான் இப்படியொரு யோசனை எழுந்துருக்குது. அதே சமயம் பொது மக்களோட பங்களிப்போட நகரத்துல நடக்கற கிரிமினல் சம்பவங்களையும் கட்டுக்குள்ள கொண்டாந்துடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-)

ஆர்க்கிட்: நான் எழுதிய பவளமல்லி சிறுகதை நம்ம லேடீஸ் ஸ்பெஷலோட தீபாவளி மலர்ல வெளியாகியிருக்குது. வெளியிட்ட நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
                                   


Monday 14 November 2011

மழலை உலகம் மகத்தானது...(தொடர்பதிவு)


எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்..
ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப்பு இருக்குது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தோட சிறப்பு.

நவம்பர் 20-ஐ அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும் யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலுலேர்ந்து கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் பிரகடனப் படுத்தப்பட்டிருக்குது. அத்தோட ஜூன் ஒண்ணாம் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுது.
முள்ளில்லா ரோஜாக்களும் அவங்க ராஜாவும்..
அப்படியிருந்தும் நாம மட்டும் ஏன் நவம்பர் 14-ஐ குழந்தைகள் தினமாகக் கொண்டாடுறோம்ன்னா அதுக்கு முழுக்க முழுக்க நம்ம நேருமாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேருன்னும் தெற்கில் நேருமாமான்னும் அழைக்கப்படற நம்ம சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 1889ஆம் வருஷம் பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் ரொம்பவும் பாசம் கொண்டவர். அதனாலதான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுது.

குழந்தைகள்ன்னதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வர்றது அவங்களோட வெள்ளை மனசுதான்.எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரிஞ்ச நம்ம குழந்தைப் பருவத்தை நினைக்கிறச்சே,..”ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம்”ன்னு ஒரு ஏக்கப்பெருமூச்சு வர்றதையும், கூடவே இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் எப்படிக் கழியுதுன்னு ஒப்பிட்டுப் பார்க்கறதையும் நம்மால நிச்சயமா தவிர்க்க முடியலை. ஏன்னா, இப்பத்திய குழந்தைகள் வாழும் சூழல் அப்படி. அதை நாமே உருவாக்கி வெச்சிட்டோம்ங்கறதும் வேதனைக்குரிய உண்மையே.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40% இருக்கும் குழந்தைங்க சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் இன்னும் இருக்கு. இதுல முக்கியமானது ஆண்குழந்தை மோகத்தால் பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காம இருக்கறது, பிறந்த குழந்தைங்களும் தாக்குப் பிடிக்க முடியாம சின்ன வயசுலயே இறந்துடுறது, குழந்தைங்க மீது நடத்தப் படற வன்முறைகள்ன்னு எவ்வளவோ இருக்கு.

இந்தக் காலத்துக் குழந்தைகள் எதிர் நோக்க வேண்டியிருக்கற வாழ்க்கை சவால்கள் நிறைஞ்சதாவே இருக்குது. இன்றைய குழந்தைகள் வளர்ந்து பெரியவங்களாகும்போது தனக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கணும்ன்னு குறிக்கோளோட இருக்கறாங்க. அப்டி நினைக்கிறது தப்பேயில்லை. ஆனா, அப்படி இருந்தாத்தான் வாழ்க்கையில் ஜெயிச்சதாவும், அப்படியில்லைன்னா தான் எதுக்கும் லாயக்கில்லைன்னும் நினைக்கிறாங்க. சின்னத் தோல்விகளைக்கூட தாங்கிக்கற மனப்பக்குவம் அவங்களுக்கில்லை. எது சரி?.. எது தப்பு?ன்னு சரியான முடிவெடுக்கத் தெரியாம சட்ன்னு குழம்பிடறாங்க.

இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிஞ்சுட்டு வர்றதும் பள்ளிகள்லயும் மாரல் வகுப்புகள் நடக்கறதில்லைங்கறதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும் மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. “ஓடி விளையாடு பாப்பா”ன்னு பாரதி பாடி வெச்சுட்டுப் போயிட்டார். ஆனா, இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடி இல்லைன்னா வீட்ல தொலைக்காட்சி, அல்லது கணினி முன்னாடி மட்டுமே கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடறது?..

குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாச்சாரப் பண்புகள், அப்றம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித் தரும் அனுபவப் பெட்டகங்களா தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. வீட்ல இருக்கற தாத்தா பாட்டிகள்லயும் சிலபேர் போட்டி போட்டுக்கிட்டு சீரியல் பாக்கறதும், ரிமோட்டுக்காக பேரப்பிள்ளைகள் கிட்ட மல்லுக்கு நிக்கிறதும்தான் சில வீடுகள்ல நடக்குது.

கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தை இப்ப தொலைக்காட்சியும் கணினியும் பிடிச்சுக்கிட்டது. அதிலும் முக்கியமா தொலைக்காட்சி குழந்தைகள் மனசுல ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே அதிகம். இப்பல்லாம் குழந்தைகளுக்கான நல்ல சினிமாவோ, இல்லை கார்ட்டூங்களோ கூட வர்றதில்லை. நிதர்சனத்தைக் காட்டுறதா சொல்லிக்கிட்டு காண்பிக்கப்படற அடிதடி, ரத்தம், முறையற்ற உறவுகள் மற்றும் வன்முறைகள் நிரம்பி வழியும் அந்தக் காட்சிகள் குழந்தைகளோட பிஞ்சு மனசுல நிச்சயமா விஷ விதைகளைத் தூவுது. சமுதாயத்தைப் பத்தின அவங்களோட சிந்திக்கும் கோணத்தையே நிச்சயமா மாத்துது.

இப்பத்திய கல்வியமைப்பும் குழந்தைகளுக்கு ரொம்பவே மன அழுத்தம் கொடுக்கக் கூடியதா அமைஞ்சுருக்கு. அவங்களுக்கு பிடிச்சதையோ அல்லது அவங்க எதுல திறமைசாலியோ அதைப் படிக்க அனுமதிக்கப்படாம, பெற்றோர்களோட விருப்பத்தை நிறைவேத்த நிர்ப்பந்திக்கப் படறாங்க. எல்லாத்துலயும் முதலிடம் வந்தேயாகணும்ன்னு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமுதாயத்துலேர்ந்து வர்ற எதிர்பார்ப்புகளை நிறைவேத்த முடியாம திணறிப் போற குழந்தைகள் எக்கச்சக்கம்.
பாவம்.. குழந்தைகள். எத்தனைதான் பாரம் சுமப்பாங்க??
குழந்தைத் தொழிலாளர்கள் கூடாதுன்னு எத்தனை முறை எச்சரிக்கை செஞ்சாலும், சட்டம்,அபராதம், தண்டனைன்னு அரசாங்கம் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் அந்தக் கொடுமை ரகசியமாத் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. ஏன்னா, அவங்களுக்குக் குறைவான கூலி கொடுத்தாப் போதுமில்லே.. ஆனா, அதுக்குப் பதிலா விலையுயர்ந்த அவங்களோட குழந்தைப் பருவத்தை பறிச்சுக்கிறோம்ன்னு யாருக்குமே தோணறதில்லை.

வீட்டோட நிலை காரணமா குழந்தைங்க பள்ளிக்கு அனுப்பப் படாம வேலைக்கு அனுப்பப்படுறதா காரணம் சொல்லப்படுது. பள்ளியில் சேர்க்கப்படற பத்துக் குழந்தைங்கள்ல நாலுபேர் ஆரம்பப் பள்ளியோட நின்னுடறாங்க, பத்துல அஞ்சு பேர் அஞ்சாம் வகுப்பைக் கூடத் தாண்டறதில்லை. பத்துல ஏழு பேர் மேல் நிலை வகுப்போட நின்னுடறதா புள்ளி விவரம் சொல்லுது. இப்படி பள்ளிப் படிப்பை நிறுத்தும் குழந்தைகளில் மூன்றில் ரெண்டு பங்கு அளவு பெண்குழந்தைளாக இருப்பது இன்னொரு கொடுமை. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழிச்சு அவங்களைப் பள்ளிக்கு அனுப்பினா நிச்சயமா அடுத்து வர்ற தலைமுறைகளும் பயனடையும். இதுக்கு பெற்றோர், ஆசிரியர், சமுதாயம்ன்னு எல்லோரோட ஒருங்கிணைஞ்ச முயற்சியும்  நிச்சயமாத் தேவை.

இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியதும், அவங்க எதிர் கொள்ள வேண்டியிருக்கற பாதையை இடைஞ்சல்கள் இல்லாமச் சீர்திருத்திச் செப்பனிட்டுக் கொடுக்கறதும் நம்ம கடமைதானே?. இதைச் செஞ்சாத்தானே குழந்தைகள் தினம் கொண்டாடுறதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இப்படியொரு நல்ல சூழல்ல வளர்ற குழந்தைகளுக்கு வருஷம் முழுக்கக் குழந்தைகள் தினக் குதூகலமும் கிடைக்கும்.
வர்ஷா வடிவமைச்ச லோகோ..
ஊக்குவிக்கப்படற குழந்தைகள் நிச்சயம் சாதிப்பாங்கங்கறதுக்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த   வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். இந்தியாவின் இசைக் கருவிகளை நினைவூட்டும் விதமா கூகிளின் லோகோவை வடிவமைக்கிறதுக்காக நடந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்காங்க மூணாம் வகுப்பு படிக்கும் இந்த ஏழே வயசான குட்டிப்பெண். பரிசா ஒரு மடிக்கணினியும், அவங்க படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் மதிப்புல தொழில் நுட்ப வசதிகளும் கிடைச்சிருக்குது.அவங்க வடிவமைச்ச லோகோதான் இன்னிக்கு கூகிளின் முகப்பை அலங்கரிச்சுட்டிருக்குது.

நல்ல வாய்ப்புகளும் உற்சாகமும் கிடைச்சா எந்தக் குழந்தையும் சாதிக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம். அவங்களை வாழ்த்துவோம். அவங்களுக்காக ஒரு நாலஞ்சு வரிகளை எழுதியிருக்கேன். 


எங்களுக்கே என்றதோர் உலகம்
அதில்
ஆட்சியாளர்கள் மட்டும்
நாங்களில்லை..

கிட்டிப்புள்ளென்றும் பம்பரமென்றும்
கிராமமென்றும் கிணறென்றும்
டோரிமானென்றும் நிக்ளோடியனென்றும்
விளங்கவியலா விசித்திரச் சொற்களால்
குழம்புவதும் குழப்புவதுமே
எங்களது வாடிக்கையாகிப் போய்விட்டது..

துரத்தித் திரிந்த தும்பிகளையும்
பூவரச இலை பீப்பீயையும்
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து
விவரிக்கும்போது
பனையோலைக் காற்றாடிகளுடன்
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள்
சென்ற தலைமுறையின்
மனதெங்கும் அப்பிக் கிடக்கும்
செம்மண் புழுதியில்..

கணினி ஜன்னலில் முகம் புதைத்து
ஆசுவாசமுறும்
கூண்டுக்கிளிகளை
நோக்கி நகைக்கின்றன
அந்தக் காலச் சுதந்திரக்கிளிகள்..

டிஸ்கி: ஷைலஜா மேடம் அழைச்ச தொடர்பதிவுக்குப் பொருத்தமா அமைஞ்சுட்டதால, வல்லமையின் குழந்தைகள் தினச் சிறப்பிதழுக்காக எழுதியதையே இங்கே தொடர்ந்துட்டேன். இந்தத் தொடர்பதிவைத் தொடர.. 

பெண் பதிவிகளில்,

ஆண் பதிவர்களில்,
ஆகிய நால்வரையும் அழைக்கிறேன். 

பெண்களில் இருவர், ஆண்களில் இருவர்ன்னு அழைக்கணும், முடிஞ்சா இடுகையுடன் ஒரு கவிதையும், ஒரு புதிரும் இணைச்சா நலம். 

குழந்தைங்க அப்றம் குழந்தையுள்ளம் கொண்டவங்க அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Saturday 12 November 2011

கெளம்பிட்டாங்கய்யா.. கெளம்பிட்டாங்கய்ய்யா...

படம் கொடுத்ததுக்கு நன்றி கூகிள் அண்ணாத்தை
'இந்திய நண்டுகள்' கதை கேள்விப் பட்டிருக்கீங்களா?..  நிச்சயமா கேள்விப் பட்டிருப்பீங்க. கேள்விப் படாதவங்களுக்காக இன்னொருக்கா சொல்றேன்.

வெளிநாடுகளுக்கு ரகசியமா விலங்குகளைக் கடத்தல் செஞ்சுட்டிருந்த ஒரு கூட்டம் தனக்குச் சொந்தமான ஒரு கப்பல்ல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்ப வேண்டிய விலங்குகளைப் பத்திரமா காற்று நுழையும் வசதி கொண்ட கண்டெய்னர்கள்லயும், சிலதை சின்னச்சின்ன கூடைகள்லயும் அடைச்சு வெச்சு தயார் செஞ்சுட்டிருந்தாங்க. (இது கதை, அதனால லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. சொல்லிட்டேன் :-))) அதுல நண்டுகள் இருந்த ஒரு கூடையை மட்டும் மூடாம அப்படியே விட்டு வெச்சிருந்தாங்க. இதை அந்தக் கம்பெனியில புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு ஊழியர் கவனிச்சுட்டார். ஐயய்யோ.. அதெல்லாம் வெளிய ஓடிடுமே.. அப்றம் சட்ன்னு பிடிக்கவும் முடியாதே'ன்னு அவருக்கு கவலையாப் போச்சு. உடனே கூடையை மூடி வைக்கிறதுக்காக தன்னோட மேலதிகாரி கிட்ட போய் உதவி கேக்கப் போனார். 

மேலதிகாரி அவரை லட்சியமே செய்யலை. 'ஒண்ணும் சிரமப்பட வேணாம். அப்படியே விட்டுடு'ன்னார். தொழிலாளிக்கு ஒண்ணும் புரியலை, 'அப்படியே விட்டுட்டா அது ஓடிப் போயிடாதா?'ன்னு அவரோட அடிமனசுலேர்ந்து கேள்விகள்  தண்ணி பட்ட ஈனோ உப்பு மாதிரி குபீர்ன்னு பொங்குது.'உனக்கு சந்தேகமாருந்தா அந்தக் கூடையை நல்லா கவனிச்சுப்பாரு'ன்னுட்டு மேலதிகாரி போயே போயிட்டார். குழம்பிய தொழிலாளி கூடைக்குள்ள பார்த்தா நல்லா கொழுகொழுன்னு பத்துப்பதினஞ்சு நண்டுகள் உள்ள கிடக்குது. அதுல ஒண்ணு மெதுவா மேல ஏறி வெளியே வரப் பாக்குது. பாதி வழி ஏறிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு நண்டு கபால்ன்னு முதல் நண்டோட காலைப் புடிச்சு கூடைக்குள்ள இழுத்துப் போடுது. இப்படியே விளையாட்டு தொடருது. மொத்தத்துல ஒரு நண்டு கூட கூடையை விட்டு வெளியே வரலை. இதைக் கொஞ்ச நேரம் கவனிச்சுட்டிருந்த நம்மாளு, மேலதிகாரி கிட்டப் போயி, 'மொதலாளி.. கூடைய மூட வேணாம்ன்னு நீங்க ஏன் சொன்னீங்கன்னு இப்பத்தான் புரியுது. ஆனா, இவ்ளோ நண்டுக் கூடைகள் இருக்கறப்ப அந்த நண்டுகள் மட்டும் ஏன் அப்படி வித்தியாசமா நடந்துக்குது. எனக்கு ஒண்ணும் புரியலை"ன்னார்.

"புரியாததாலதான் நீ இன்னும் தொழிலாளியா இருக்கே. புரிஞ்சுக்கிட்டதாலதான் நான் மேலதிகாரியா ப்ரமோஷன் வாங்கி வந்துருக்கேன். சரி. சொல்றேன் கேட்டுக்க. அதெல்லாம் இந்தியாவுலயும் அதைச் சுத்தியிருக்கற கடற்பகுதிகள்லயும் பிடிச்ச நண்டுகள். ஏதாவது ஒரு நண்டு முன்னேற முயற்சி செஞ்சாலும், பக்கத்துல இருக்கற நண்டுகள் காலைப் பிடிச்சு இழுத்து அதை முன்னேற.. அதாவது கூடையை விட்டு வெளியேற முடியாம செஞ்சுடும். இது அதுங்களோட இயற்கைக் குணம். புரிஞ்சதா?"ன்னுட்டுப் போயிட்டார்.

'இந்தியர்களான நமக்கு நம்மில் ஒருத்தர் முன்னேறுனா பொறுக்காது'ங்கறதை சொல்றதுக்காக கட்டி விடப்பட்ட கதை இது. இத மொதமொதல்ல உருவாக்குன ஆளு மட்டும் கையில கிடைச்சார்... அந்த நண்டுக் கூடையிலயே போட்டு அடைச்சு, கூடுதலா நாலஞ்சு நட்டுவாக்காலிகளையும் விடணும். கிர்ர்ர்ர்... ஆனா, கொஞ்சம் உங்க சொந்தச் செலவுல ரூம் போட்டு யோசிச்சுப் பாருங்க. இலைமறை காய் மறையா கொஞ்சம் உண்மையும் எட்டிப் பாக்குதுன்னுதான் சொல்லணும். தனக்குத் தெரிஞ்சவங்களோட,.. முக்கியமா சொந்தக்காரங்களோட, வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து எத்தனை பேர் உண்மையிலேயே மனசார சந்தோஷப்படறோம்? இது ஒரு கேள்விக்குறியாவே ஏன் எப்பவும் இருக்குது?.

ஆனா, எப்பவுமே எதுவுமே அப்படி இருக்கறதில்லை. முன்னே பின்னே தெரிஞ்சவங்க முன்னேறுனா வேண்ணா பொறாமைப்படுவோமா இருக்கலாம். ஆனா, முன்னே பின்னே தெரியாதவங்களை முன்னேத்தியே தீருவோம்ன்னு வைராக்கியமாஒரு கூட்டமே அலையுது தெரியுமோ?.  நம்ம ஈமெயிலுக்கு ஒரு லெட்டர் அனுப்பி, 'உங்க மெயிலுக்கு பெரிய தொகையொண்ணு பரிசு விழுந்துருக்குது.. ஃப்ரம் டுடே நீங்க ஒரு கோடீஸ்வரர்'ன்னு சொல்ற நல்ல மனசோ,..  இல்லைன்னா, தன்னோட சொத்துல ஒரு பகுதியை நம்ம பேருக்கு எழுதி வெச்சுட்டு செத்துப் போற பெரிய மனசோ வெளிநாட்டுக் காரங்களுக்கு மட்டுந்தான் இருக்குது. நம்மள்ல எத்தனை பேருக்குங்க இருக்குது?... :-)

அட.. மெயிலை விடுங்க.. அது ஓல்டு யுகம். டெக்னாலஜி முன்னேறும்போது கொளுகையை பரப்பற வழியையும் முன்னேத்தணுமா இல்லியா?.. அதனால அடுத்தாப்ல மொபைல்ல மெஸேஜ் அனுப்ப ஆரம்பிச்சாங்க. காசு பணம் மட்டும் கொடுத்தாப் போதுமா?.. அதனால முத்துமாலை, தங்க நெக்லஸ்ன்னு அவங்க நமக்குக் கொடுக்கற அன்புப்பரிசு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. பாசக்காரங்களா இருக்காங்களேப்பா :-))))

இப்ப லேட்டானாலும் லேட்டஸ்டா இன்னொரு ஹைடெக்கான வழியைக் கண்டுபிடிச்சுருக்காங்க. இப்பல்லாம் நம்ம நம்பருக்கே போன் செஞ்சு நேரடியா அட்டாக்தான். எப்படியாவது நம்மை கோடீஸ்வரங்களாக்கியே தீரணும்ன்னு விடாமுயற்சி செய்யற அந்த அன்பை நினைக்கிறப்ப கண்கள் பனிக்கின்றன.. காதுகளும் இனிக்கின்றன :-)

அப்படியொரு உடன்பிறவா உடன்பிறப்பு கிட்டயிருந்து சமீபத்துல எனக்கும் ஒரு போன் கால் வந்தது. கைவேலையா இருந்ததால ரங்க்ஸே அட்டெண்ட் செஞ்சார். இது எங்களுக்குள்ள ஜகஜம்தான்.

"ஹலோ.."

"......"

"நெஜமாவா.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்லலியே.."

"...................."

"ஹைய்யோ... என்னால நம்பவே முடியலை. ஆச்சரியமா இருக்குது."

".................."

"ஆனாலும், உங்களுக்குப் பெரிய மனசுங்க. இவ்ளோ பெரிய தொகை.... எப்டீங்க? எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போலிருக்கே"

"..................." 

இதுவரைக்கும் ரங்க்ஸ் கொடுத்த ஓவர் ஆக்டிங்லயே என்னவோ வில்லங்கம்ன்னு புரிஞ்சு போச்சு. இந்தச் சமயத்துல மொபைலைப் பிடுங்கி லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு, மறுபடியும் ரங்க்ஸ் கைல கொடுத்தேன்.

"உங்கூர்ல இருக்கற '****' பாங்க்ல பணத்தைப் போட்டுடுவோம். அதை வெளிநாட்டு பேங்க்லேர்ந்து கொண்டு வர வேண்டியிருக்கு இல்லியா.. அதுக்கான சார்ஜை மட்டும் நீங்க கொடுத்தாப் போதும். உங்களுக்கு இருபத்தஞ்சு லட்சம் கிடைச்சுடும்"ன்னு பேசிக்கிட்டிருக்கச்சயே லைன் கட்டாகிடுச்சு. க்ளைமாக்ஸ் சீன்ல மலை விளிம்புல நின்னுட்டிருக்கற ஹீரோயினை வில்லன் காப்பாத்துவாரா?.. இல்லை ஹீரோ காப்பாத்துவாரா?.. ன்னு நகத்தைக் கடிச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கறப்ப கரண்ட் கட்டானது மாதிரி இருந்தது.

யாரு என்ன?.. ன்னு ரங்க்ஸ் கிட்ட விவரம் கேட்டேன். விஷயம் ரொம்ப சிம்பிள்தான். ஈமெயில்ல அடிக்கடி நடக்கறதுதான். என்னோட மொபைல் நம்பருக்கு குலுக்கல் முறையில் பரிசு கிடைச்சுருக்கு. ஜஸ்ட் இருபத்தஞ்சு லட்சம் ரூபாய்கள். ஒரு வெளிநாட்டுக் கம்பெனி பரிசு கொடுக்குது. வெளிநாட்ல உள்ள பாங்கிலிருந்து இங்கிருக்கும் பாங்குக்கு பணத்தைக் கொண்டாந்து நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவாங்களாம். அதுக்கு ச்சார்ஜா குறிப்பிட்ட அமவுண்டை அவங்க கொடுக்கற அட்ரசுக்கு அனுப்பிட்டா, நமக்கு இந்தியாவுலயே ஒரு அட்ரஸ் கொடுப்பாங்க. அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்த்தா நம்மூரு பாங்குக்கான ஏஜண்ட் இருப்பார். அவர் கிட்ட நமக்கான பரிசுப் பணம் இருக்கும். அவர் கூடப் போனா நம்ம பாங்குல நம்ம அக்கவுண்டுல நம்ம கண்ணு முன்னாடியே பரிசுப் பணத்தை டெப்பாசிட் செஞ்சுடுவாங்க. இந்த மாதிரியெல்லாம் தில்லுமுல்லு நடக்குதுன்னு ரங்க்ஸுக்கும் தெரியும். அதனாலத்தான் முதல்லே எதிர்முனையில் இருந்த பார்ட்டி அடிச்ச கூத்துக்கெல்லாம் பதில் கொடுத்துட்டிருந்தார் :-))

ஆஹா!!.. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு நம்ம வித்யாசாகர் ஒரு கதை எழுதியிருந்தாரேன்னு ஞாபகம் வந்தது. அதுல ஹீரோ ஏமாந்துடுறதா கதை முடியும். அந்தக் கதையை ரங்க்ஸ் கிட்ட சொன்னேன்.  கொஞ்சம் யோசிச்ச ரங்க்ஸ் அந்த நம்பரைக் கூப்பிட்டார். 

"சார்.. நீங்க சொன்ன அமவுண்டை அனுப்பிடறேன். எங்கே அனுப்பணும்ன்னு சொல்லுங்க.."

"நீங்க மொதல்ல காசை அனுப்பிடுங்க.. அப்றம் நானே அட்ரசை மெஸெஜ் அனுப்பிடறேன்"

"சார்.. " அப்டீன்னு ஆரம்பிச்சு ரங்க்ஸ் பாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டே போறார். போனையே முன்னே பின்னே பார்க்காத ஒருத்தர், கத்திப் பேசுனாத்தான் எதிர் முனையில் இருக்கற ஆளுக்கு கேக்கும்ங்கறமாதிரி நினைச்சுக்கிட்டு ஊரையே கூட்டுவாரே.. அந்த மாதிரி ஹை டெஸிபல்ல பேசுறதையும், மீட்டர் கணக்குல ரீல் உட்டதையும் கேட்டுக்கிட்டிருந்த நாங்க ஒரு கட்டத்துல வாயை இறுக்கப் பொத்திக்கிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சுட்டிருந்தோம். சிரிப்புச் சத்தம் கேட்டு எதிராளி உஷாராயிடக் கூடாதே. 

பசங்க வேற 'அப்பா.. போதும்'ன்னு சைகை காட்டுதுங்க. இவரானா மணிக்கு இத்தனை கி.மீங்கற வேகத்துல ரீல் விட்டுக்கிட்டிருக்கார். 'ஆஹா.. ஒரு அடிமை சிக்கிட்டார்டா..'ன்னு இவருக்கு ஒர்ரே பூரிப்பு. ஒரு வேளை எதிராளியும் அப்படித்தான் நினைச்சுருப்பானோ??.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பேச்சு வாக்குல, 'சரீங்க.. உங்க அட்ரசைச் சொல்லுங்களேன்"ன்னு நைசா ஒரு பிட்டைப் போட்டார்.

".............."

"ஹலோ..ஹல்லோ.."

அவ்ளோதான்.. லைன் கட். இவர் மறுபடி மறுபடி அந்த நம்பருக்கு போன் செஞ்சுட்டே இருக்கார். லைன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுன்னு ஒரு பொண்ணு கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்குது. பாவம்.. தொண்டை கட்டிக்கப் போவுதுன்னுட்டு பரிதாபப்பட்டு போன் செய்யறதை விட்டுட்டார்.

அப்றம் ஆற அமர உக்காந்து இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதுதான் அந்த நம்பரை நமக்குத் தெரிஞ்ச போலீஸ் நண்பர் மூலமா ட்ரேஸ் செஞ்சு ஆளைப் பிடிக்கலாமேன்னு ஒரு நினைப்பு. பிடிச்சு மரியாதை செலுத்த வேணாமா?.. ஏன்னா, நமக்கு தொலைபேசுன ஆளு ஒரு இந்தியன். இந்தியன் முன்னேறணும்ன்னு துடியாத் துடிக்கிற ஒரு இந்தியனுக்கு மாலை மரியாதை கூட செய்யலைன்னா அப்றம் எப்படி?.

மொபைலை எடுத்துப் பார்க்கறச்சே.. 'ஆஹா!!,... வட போச்சே..'ன்னு நொந்துட்டேன். கால் ஹிஸ்டரி ரொம்பி வழிஞ்சதால பேச்சு வாக்குல என்னையறியாமலேயே அத்தனையையும் க்ளியர் செஞ்சுருக்கேன்.. அடப்பாவி மக்கா!!! மறுபடியும் எங்க கிட்ட இல்லைன்னாலும் வேற யார் கிட்டயாவது மாட்டாமயா இருப்பே :-))

ஆகவே மக்களே.. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்கறதா சொல்லிக்கிட்டு எந்த ரூபத்துல வேண்ணாலும் பொறி வைக்கப்படலாம். மாட்டிக்காம எச்சரிக்கையா இருந்து தப்பிச்சுக்கோங்க.. ஆனா, அறியாமையாலும், பேராசையாலும் இப்படிப் பட்ட ஆட்கள் கிட்ட மாட்டிக்கிடற பாமரர்கள் கதிதான் பரிதாபத்துக்குரியது. 

Tuesday 8 November 2011

இந்த மும்பை மாநகரத்திலே ....


மும்பை மாநகராட்சிக்கு சேனைக் கட்சியின் சார்புல போட்டியிட்டு ஜெயிச்சு வந்து, இப்ப மும்பையின் மேயரா இருக்காங்க 'ஷ்ரத்தா ஜாதவ்'. இவங்க மும்பையின் அஞ்சாவது பெண் மேயர். இவங்க ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், பூங்காக்கள், மும்பையின் மார்க்கெட்டுகள் இப்படி மும்பை மாநகராட்சியின் சில துறைகளை நல்லா நிர்வகிச்சு, நல்ல பேரு வாங்கியிருக்காங்க. 'உலக மேயர் விருது'க்காகவும் பரிந்துரைக்கப்பட்ட பெருமை இவங்களுக்கு உண்டு.


பெயருக்கேத்த மாதிரி, புதுசா வந்துருக்கற மேயரம்மா 'ஷ்ரத்தா ஜாதவ்' மும்பையை முன்னேத்தணும்கற ஷ்ரத்தாவோட வேலை செய்யறாங்க. ச்சும்மா ரெண்டு தூறல் விழுந்தாலே போதும், நம்ம நாட்டுல ரோடுகளோட நிலைமை பல்லாங்குழி மாதிரியாகிடுதுன்னு சொல்லவே வேணாம். அதுவே பெருமழையானா அவ்ளோதான். இதுக்கு நடுவுல ஒவ்வொரு துறையினரும் ஒவ்வொரு இடத்துல பள்ளம் பறிச்சு வெச்சுட்டுப் போயிருப்பாங்க. இதெல்லாம் சரி செஞ்சு முடிக்கிறதுக்குள்ள அடுத்த மழைக்காலம் வந்துடும். அப்புறமென்ன?..  மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். இதுல ரோட்டுல பயணம் செய்யறவங்க நிலைதான் பரிதாபமானது. விழுந்து எந்திரிச்சுப் போனவங்க, உயிருக்கோ உடலுக்கோ ஆபத்து ஏற்பட்டவங்கன்னு அந்த லிஸ்ட் ரொம்பப் பெரிசு. இந்தப் பரிதாப நிலையைப் பத்தி ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒரு கவிதை கூட எழுதியிருந்தேன். (ஹி..ஹி..ஹி.. எல்லாம் ஒரு வெளம்பரந்தேன் :-))
                                         
எங்க மேயரம்மா இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கிறதுக்காக ஒரு திட்டம் கொண்டாந்துருக்காங்க. விஷயம் சிம்பிள்தான். ரோடு எஞ்சினீயர்களை நியமிச்சாப் போச்சு. சிவில், கிரிமினல் ச்சே!!.. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ன்னு எஞ்சினீயர்கள் இருப்பாங்கன்னு தெரியும். அதென்ன ரோடு எஞ்சினீயர்கள்?.. ரோட்டைக் கவனிச்சுக்கற எஞ்சினீயர்கள்தான் ரோடு எஞ்சினீயர்களாம். அவங்களுக்குன்னு ஏரியாக்கள் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகள்ல இருக்கற அத்தனை ரோடுகளையும் அவங்க பொறுப்பில் விட்டுடுவாங்க. அப்றம் அந்த ரோட்டுல உடைக்கிறது, குழி பறிச்சுட்டு காணாமப் போறது, மழை நீர் வடிகால்களைச் சுத்தம் செய்யறதுன்னு எல்லாத்துக்கும் அனுமதி கொடுக்கற உரிமை அந்த எஞ்சினீயர்களுக்கு ம்ட்டுமே உண்டு. ரோட்டுல இருக்கற விளக்குகளைப் பராமரிக்கிறது, மக்கள் ரோட்டைக் கடக்கறதுக்கான ஜீப்ரா க்ராஸிங் எங்கே வரணும்ன்னு முடிவெடுக்கறதுன்னு எல்லாத்துக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுத்தாகணும். மொத்தத்துல இந்த எஞ்சினீயர்கள்தான் அந்த ஏரியாக்களோட குறுநில மன்னர்கள்.

ரோடு போடறப்ப சரியான திட்டமிடல், செயற்படுத்துதல், அப்றம் மேற்பார்வை இல்லாததால்தான் மும்பை மழைக்காலத்துல மிதக்குது, ரோட்டுலயும் ஆங்காங்கே குண்டும் குழியுமா ஆகுதுன்னு ரூம் போட்டு யோசிச்சு கண்டு பிடிச்சுருக்காங்க எங்கூரு அதிகாரிகள். இந்தக் குறைபாடுகளெல்லாம் இனிமேலாவது தவிர்க்கப்படும்(ன்னு நம்புவோமாக). இதெல்லாத்தையும் கணக்கெடுத்து, எத்தனை குண்டு குழிகளைச் சரி செஞ்சுருக்காங்க, எந்தெந்த இடங்கள்ல ரிப்பேர் வேலை நடந்துருக்குதுன்னு கணக்கு வெச்சுக்கறதுக்காகவே RMMS(Road Maintanance And Management System)ன்னு ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்காங்க. கடமையிலிருந்து யாராவது தவறினா இது காட்டிக் கொடுத்துடும்.

மும்பையின் இன்னொரு பெரிய தலைவலி, அங்கங்க கிடக்கிற குப்பைக் கூளங்கள். என்னதான் நகரின் முக்கியமான பகுதிகள்ல ரோட்டுல குப்பை போட்டா அபராதம்ன்னு எல்லாம் பயமுறுத்தி வெச்சாலும் மக்களும் அதைக் காதுல போட்டுக்கணுமில்லையா?.. மும்பை மாதிரியான காஸ்மோபொலிட்டன் நகரத்துல சுத்தத்தைப் பராமரிக்கிறதுங்கறது ரொம்பவே சிரமமான விஷயமா இருக்குது.

குப்பைத்தொட்டின்னு எழுதி வெச்சாலும், அந்த டப்பாவுல கொட்டாம அது பக்கத்துல குப்பைகளைக் கொட்டி மத்தவங்களையும் டப்பாவுல கொட்ட விடாதபடிக்கு வழி நெடுகக் குப்பையாக்கி வைக்கிறதுன்னா நம்ம மக்களுக்கெல்லாம் வடா பாவ் சாப்டற மாதிரி. அதெல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் நகருக்கு வெளியே அதுக்குன்னு நிர்மாணிச்சுருக்கற இடத்துல கொட்றதுன்னா லேசுப்பட்ட காரியமா?.. சரியான இடம் அமையறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும். அப்டி அமைஞ்சதும் நகருக்குள்ள இருக்கற குப்பைகளை வாரிக்கிட்டுப் போய் நகரைச் சுத்தமா வெச்சுக்கலாமில்லையா. இது சில இடங்கள்ல மட்டுமே ஒழுங்கா நடக்குது.
இயற்கையுரம் தயாராகுது..
இந்தக் குப்பைகளை வெச்சு இயற்கையுரம் தயாரிக்கலாம்ன்னும் எங்கூரு மாநகராட்சிக்கு ஐடியா இருக்குது. பொதுவா நம்ம வீடுகள்ல சாமிக்குப் போட்ட பூச்சரங்களைச் சேர்த்து வெச்சு எங்கியாச்சும் தண்ணியில விட்டுடறது வழக்கம். இப்படிப் போடறதுனால அந்தக் குப்பைகள் காலப் போக்குல தண்ணீரை மாசுபடுத்துதுன்னும், தண்ணீர்ல இருக்கற மீன்கள் போன்ற உசுருகளுக்கு இதனால ஆபத்து வருதுன்னும் இப்ப சமீப காலமாத்தான் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. இதனால இங்கே நீர் நிலைகள், முக்கியமா கோவில்களுக்குப் பக்கத்துல குளங்கள் இருந்தா, அங்கெல்லாம் ரெண்டாள் உசரத்துக்கு கலசம் மாதிரி ஒரு பெரிய பானையை வெச்சு அதுல இதெல்லாத்தையும் சேமிக்கிறாங்க. "நிர்மால்ய கலசம்"ன்னே அதுக்குப் பேரும் இருக்கு. இப்ப சமீபத்துல புள்ளையார் சதுர்த்தி சமயத்துல கடற்கரைகள்ல ஆங்காங்கே நிறையக் கலசங்கள் வெச்சு மக்கள் தினப்படி பூஜை முடிச்சு சேர்த்து வெச்சிருந்த பூச்சருகுகளைக் கொண்டாந்து அதுல போடும்படிக் கேட்டுக்கிட்டாங்க. அப்படியும் சில ஆட்கள் ரோட்டுலயும் கடற்கரையிலும் ஆங்காங்கே வீசிட்டுப் போகத்தான் செஞ்சாங்க. ஜூஹூ கடற்கரையில் இப்படி சேர்ந்த குப்பைகள் டன் கணக்குல இருந்ததாம். அதைச் சுத்தம் செய்யும் பொறுப்பை சில அமைப்புகள் ஏத்துக்கிட்டுப் புண்ணியம் கட்டிக்கிட்டன.
படங்கள் கொடுத்துதவியதுக்கு நன்றி இணைய தேவதையே..
இதுக்காகவே இந்த அக்டோபர் ஒன்னாம் தேதியிலிருந்து 'Zero Garbage'ன்னு ஒரு திட்டத்தைக் கொண்டாந்திருக்காங்க. குப்பையில்லா நகரம்கறது கேக்கவே எவ்ளோ நல்லாருக்குது. இந்த திட்டத்தை நல்ல முறையில் நிறைவேத்தணும்ன்னா, நல்ல முறையில் செயல் படுத்தவும் செய்யணும். அதுக்காகவே இதோட நிர்வாக வசதிக்காக மும்பையை ஏழு பகுதிகளாப் பிரிச்சு அஞ்சு ஒப்பந்தக்காரர்களை நியமிச்சிருக்காங்க(ஏழுக்கு அஞ்சா?.. கணக்கு எங்கியோ இடிக்குதில்லெ :-)). வண்டிகளை வெச்சு குப்பையை அள்ளுறதுலேர்ந்து அதை நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட அதுக்கான இடங்களுக்குக் கொண்டு போயிக் கொட்டற வரைக்கும் இவங்கதான் பொறுப்பேத்துக்கணும்.

அதேமாதிரி மும்பையில் ஒரு நாளைக்கு எவ்ளோ குப்பை சேருதுன்னு சரியா கணக்கெடுக்கறதுலேர்ந்து , விடிகாலைல தெருவைக் கூட்டும் துப்புரவுத் தொழிலாளிகள் சரியா வேலை செய்யறாங்களான்னு கண்காணிக்கிறது வரைக்கும் இவங்க செஞ்சாகணும். இதுல ஏதாவது குறை தென்பட்டா அடுத்தாப்ல ச்சான்ஸ் கிடைக்காது. ஆப்புதான் கிடைக்கும். எங்கம்மா அதுல ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு. ஏற்கனவே கோல்மால் செஞ்சவங்களை அவங்க கட்டம் கட்டிட்டதால அதிகாரிகளும் கொஞ்சம் பயந்துதான் இருக்காங்க. மக்களுக்குச் சேவை செய்யறதுக்குக் கூட அதிகாரிகள் கிட்ட சில சமயங்கள்ல அன்பையும், சில சமயங்கள்ல அதிகாரத்தையும் காட்ட வேண்டிதான் இருக்குது போல. எப்படியோ நல்லது நடந்தாச் சரி.

மும்பையை ஷாங்காய் மாதிரி ஆக்குவோம்ன்னு சொல்லித்தான் எங்கூரு அரசியல் வாதிகள் பதவிக்கு வர்றாங்க. அதென்னவோ அவங்க எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே ஒவ்வொரு மழைக்காலத்துலயும் மும்பை பார்க்கறதுக்கு அப்படித்தான் இருக்குது. இதுக்கு முக்கியமான காரணங்களான ரோடுகளையும், குப்பையையும் சரி செஞ்சுட்டாலே மும்பைக்கு விமோசனம் கிடைச்சுடும்.  பொருளாதாரத்துல மட்டுமில்லாம சுத்தத்துலயும் இந்தியாவோட தலைநகர்ன்னு மும்பை சொல்லப்படற அந்த நாள் எந்த நாளோ!!!

LinkWithin

Related Posts with Thumbnails