Tuesday 18 February 2014

"சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது" - மதிப்புரைக்கு நன்றி தேனக்கா :-))

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு 'தேனக்கா' என்று நான் அன்புடன் அழைக்கும் நம் தேனம்மை லக்ஷ்மணன்  அளித்த மதிப்புரை.

குழந்தைகளைக் கொஞ்சியபின்னும் நம்மேல் ஒரு குழந்தை வாசம் அடித்துக் கொண்டேயிருக்கும். அது நம் வீட்டுக் குழந்தையாயினும் சரி. பக்கத்து வீட்டுக் குழந்தையாயினும் சரி. ஒரு குட்டிப் பயலின் குட்டிப் பெண்ணின் குழந்தமை வாசம் பட்டு நம் முந்தானையும் கழுத்தும் தோள்பட்டையும் திரும்பும்போதும் அசையும்போது காற்றில் ஒரு குழந்தைமை வாசத்தைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கும். அதே உணர்வுதான் ஏற்பட்டது சாந்தி மாரியப்பனின் சிறது விரிந்ததைப் படித்ததும்.

மழலைத் தூதுவர்களை ரசிப்பதா. தென்றல் தீட்டும் வானவில்லில் வண்ணங்களை பட்டாம்பூச்சி இறகுகளில் தொட்டுப் பார்ப்பதா, தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் பறவையைப் பிடிப்பதா, குழந்தைகள் பறவைகளாகி இங்குமங்கும் நம் எண்ணம் கொறிப்பதும், பறவைகள் குழந்தைகளைப் போன்று தத்தித் தத்திச் சிறகடிப்பதும் நிகழ்கிறது கவிதைத் தொகுதி வாசிக்கும்போது.
”அந்த இரவில்’  மிகவும் நெகிழ வைத்த கவிதை. 

உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த் தருகிறார்
வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை
என் தகப்பன்.

’’பரஸ்பரம் கடவுளும் குடிகாரனும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து விடமாட்டார்களா என எண்ணத் தூண்டிய வித்யாசமான கவிதைப் பார்வை. 

வென்றுவிட்டதாய்ப் 
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான  யுத்தங்கள்.

ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுக்குப் போகும்போது நினைக்கக்கூடியதுதான் ”வீடென்பது.”

அன்னியோன்யமாய் இருந்து வந்து
அடுத்த தலைமுறையின் முடிசூட்டலுக்குப் பின்
உரித்தெரியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப்பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு. 

இந்தத் தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்த கவிதை ’எவரேனும்’

தலைசாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின் கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும் 
யாரேனும் இருக்கக் கூடுமோ..

குடும்பம், குழந்தைகள் இவற்றைச் சுற்றிவரும் சந்திரனாயும் சூரியனாயும் இருக்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குக் கிடைத்த சொற்ப வெளியில் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை வெற்றியைப் பிரகடனப் படுத்துகின்றன. 

வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன சாந்தி மாரியப்பனின் கவிதைகளில். சில சமயம் நம்மைக் கையகப்படுத்த மாட்டாரா என்ற ஏக்கத்தோடு சில காத்தும் கிடக்கின்றன. பொருத்தமான வார்த்தைகளில் பொருந்த வசீகரமாகச் சொல்லிச் செல்லும்போது அடுத்து நமக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என மிச்சமும் பின் தொடர்கின்றன. மொத்ததில் மிகவும் பாந்தமான சொற்களில் மென்மையான ஒரு கவிதைத் தொகுதியைப் படித்த சந்தோஷம் ஏற்பட்டது. 

கவிதை வாசிப்பது என்பதும் தானே உணரவேண்டிய ஒரு அனுபவம். உணர்ந்து பாருங்கள்.

 கிடைக்குமிடம்.:-
அகநாழிகை பதிப்பகம். சென்னை.

விலை ரூ.  80. 

இணையத்தில் வாங்க. 


வாசித்தமைக்கும் அருமையான வார்த்தைகளுக்கும் நன்றி தேனக்கா..

Saturday 15 February 2014

கடப்போம்.. நடப்போம்..

வெறுமனே கடந்து சென்றதாய் நினைத்துக்கொள்ளும் அந்த நாளின் ஏதோவொரு நொடித்துளியில் ஒளிந்திருக்கக்கூடும் மிக இனிய நினைவொன்று.

பொறுப்புகளையும் முயற்சியையும் தட்டிக்கழிப்பவர்களை வெற்றி தேவதையும் தட்டிக்கழித்து விடுகிறாள்.

கரைந்து விட்ட சூரியனுக்காக வருத்தப்படுபவர்களை ஆறுதல் படுத்தவென்று உருக்கொண்டெழுகிறது நிலா.

ஒருமுறை கூட விழாமலிருப்பதிலல்ல, விழும் ஒவ்வொரு முறையும் மேலும் உறுதியாக எழுவதில்தான் இருக்கிறது பெருஞ்சிறப்பு.

பூவின் வாசனைக்கு எளிதில் மயங்கிவிடும் மெல்லிய மனமே முட்களாலும் எளிதில் காயப்பட்டு விடுகிறது, ஆகவே உறுதியை வளர்த்துக்கொள்வோம்.

எல்லாவற்றையும் கடந்து நடப்போம் மென்மேலும் உறுதியாக அடியெடுத்து வைத்தபடி.

தகுந்த காலம், வாய்ப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் விட முக்கியமானது, எப்படியாவது செய்து முடிக்க வேண்டுமென்ற தன்னார்வமே.

பின்விளைவுகளையும் தீர அலசி ஆராய்ந்தபின் ஆரம்பிக்கும் செயல்கள் பெரும்பாலும் தோற்றுப்போவதில்லை.

சலனமுற்ற மனதில் தீர்வுகளும் நிலைபெறாமல் தளும்பிக்கொண்டேதான் இருக்கும்.

மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டுமாயின், முதலில் அதை மற்றவர்க்குக் கொடுக்கப் பழக வேண்டும்.

Tuesday 11 February 2014

"நிழற்படக் கவிதைகள்".. நன்றி முனைவர் அண்ணாகண்ணன் :-)

இலக்கிய உலகில் திரு. அண்ணா கண்ணனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருப்பினும் பூக்கடைக்கு ஒரு அறிமுகம் :-))

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

இனி,
நிழற்படக் கவிதைகள் - முனைவர் அண்ணாகண்ணன்

கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது, கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.

மாநகரம், எத்தனையோ பழிகளையும் வசைகளையும் சுமந்துகொண்டு நிற்கிறது. இங்குள்ள நெருக்கடிகள், துரத்தல்கள், பற்றாக்குறைகள், சிக்கல்கள், ஏமாற்றங்கள்.... அனைத்தும் பல்வேறு கோணங்களில் பல்லோரால் பல்லாண்டுக் காலமாகப் பதிவாகி வருகின்றன. இந்தப் பதிவுகளின் விளைவுகள் என்ன என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். மாநகரச் சூழல் எவ்வளவு வறட்சிகரமாக இருப்பினும் இதனால், இங்கு வாழும் படைப்பாளர்களின் படைப்பூக்கமும் படைப்பாக்கமும் வறண்டுவிடவில்லை. இது, எதிர்மறைக்குள்ளும் ஒரு நேர்மறை அம்சம்.

மும்பை மாநகரில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், மாநகரின் அழுத்தங்களுக்கு இடையிலும் தன்னை ஒரு படைப்பாளியாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். இவர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம்... எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருகிறார். வல்லமை மின்னிதழின் ஃபிளிக்கர் படக் குழுமத்தையும் இவரே நிர்வகித்து வருகிறார். இவருடைய நிழற்படங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  அவை, தனித்துவம் வாய்ந்தவை. புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடுகள்... எனப் பலவும் இவரின் நிழற்படங்களில் மிளிருகின்றன.

நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் சூரியச் சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளை, கொத்துக் கொத்தாய்ப் பூத்த பறவைகளின் வாசத்தில் கிறுகிறுத்து நின்ற மாமரம், ஏகாந்த வெளியில் ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்கள், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பறவை.... எனப் பலவும் நேரடியாகக் காணும் உணர்வை நம்முள் ஏற்படுத்துகின்றன. தேய்பிறைப் புன்னகை என்ற சொல்லாடல், நேர்த்தியான காட்சிப் பதிவு.

குழந்தைகள், மன அழுத்தத்திலிருந்து நம்மைக் காத்து வருகிறார்கள். எவ்வளவு சிக்கல்கள் இருப்பினும் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, மனம் லேசாகிவிடுகிறது. குழந்தைகளைக் கருவாகக் கொண்ட இவரது கவிதைகளை நான் பெரிதும் ரசித்தேன். அறிதுயில் என்ற கவிதை, மிக அழகு. ரயிலோடும் வீதிகள், வாசனையாய் ஒரு வானவில், மழலை நிலா... உள்ளிட்ட பல கவிதைகளில் குழந்தைமையை இவர் கொண்டாடியிருக்கிறார்.

சிறைப்படும் 
ஒவ்வொரு தருணத்திலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்

என்ற வரிகளில்தான் எவ்வளவு உற்சாகம்!

கதைக் கவிதைகளும் இவருக்கு இயல்பாக வருகின்றன. தாத்தா இறந்த பிறகு திண்ணைக்கு இடம்பெயரும் பாட்டியும் பொறந்த வீட்டுச் சொத்தில் பங்கு கேட்டு மனைவியை விரட்டுகையில் நிகழும் திருப்பமும் நிகழ்காலச் சிக்கல்களின் சூடான பதிவுகள். 

வென்றுவிட்டதாய்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்

என அவர் குறிப்பிடுவது, வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடங்களில் ஒன்றாகும்.

இந்தக் கவிதைத் தொகுப்பு, கலவையான உணர்வுகளுடன், கதம்பமாக மணம் வீசுகிறது. சாந்தி மாரியப்பன், ஏதோ பெயருக்கும் எண்ணிக்கைக்கும் எழுதாமல், உள் உணர்வுக்கும் சமூகப் பயனுக்குமாக எழுதி வருகிறார். எதிர்காலத்தில் இவரது மொழி,  இன்னும் கூர்மை பெறும். இவரால் இன்னும் சிறப்பான படைப்புகளை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது கவிதைப் பயணம் சிறப்புடன் தொடர, எனது நல்வாழ்த்துகள். இவரது வல்லமையால் இந்த மாநிலம் பயனுறட்டும்.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிக் கௌரவித்த முனைவர் அண்ணா கண்ணனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்..

கவிதைத்தொகுப்பைத் தபாலில் வாங்க..

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110

aganazhigai@gmail.com

Thursday 6 February 2014

சாரல் துளிகள்

அனுமார் வாலில் கட்டிய மணியாய் சப்தித்துக்கொண்டிருக்கிறது, வாலின் நுனியில் நின்று கொண்டிருக்கும் வாகனமொன்று..

ஊம்.. ஊம் என்று மிரட்டுகிறது காற்று, ஆம்.. ஆம்.. என்று ஆமோதிக்கிறது கடல். பயப்படாத ஆட்டுக்குட்டியாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறது சிறுபடகு.

இப்பக்கமும் அப்பக்கமும் தாவாமல், நெடுக நடந்து சென்றது பூனை.. மதில் நுனியில் பூனைக்குட்டி.

அத்தனை விதமான மருந்துகளாலும் ஆயுதங்களாலும் துரத்தப்பட்ட கொசு சொன்னது.. "நாராயணா.. இந்த மனுசங்க தொல்லை தாங்கலைடா. அவ்வ்வ்வ்வ்வ்.."

வரப்போகும் வெயில் காலத்திற்குப் பூத்துக்குலுங்கிக் கட்டியம் கூறுகின்றன மாமரங்கள்.

ஸ்வெட்டரைப் போட்டுக்கொள்ளவா? அல்லது மழைக்கோட்டைப் போட்டுக்கொள்ளவா? என்று சற்று நேரம் மும்பை மக்களைக் குழப்பி விட்டுச் சென்று விட்டது பருவம் தப்பி வந்த மழை..

குழந்தைகளாக இருக்கும்போது சீக்கிரம் வளர்ந்து விட மாட்டோமா என்று ஆசைப்படுவதும், வளர்ந்தபின் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா!! என்று ஏங்குவதும் என்ன மாதிரியான மனநிலையைச்சாரும்??..

தவளையை விழுங்க வரும் பாம்பாய் சிவப்பு விளக்கு மின்னும் நாற்சந்தியில் மெதுமெதுவே ஊர்ந்து பாதுகாப்பான தொலைவைக்கடந்தபின், சிறுத்தையாய்த் தலைதெறிக்க ஓடுகிறது வாகனமொன்று..

புகைத்துகள்களில் கரி குளித்து, மேலும் கருமையழகுடன் மினுமினுக்கின்றன நகரத்துக்காக்கைகள்..

மங்கி குல்லா போட்ட குட்டிப்பாப்பாக்களுக்கென்று தனியழகு வந்து விடுகிறது.

டிஸ்கி: சாரல் துளிகள் மட்டுமன்றி அவ்வப்போது ஃபேஸ்புக்கில் மொழிந்தவையும் இனிமேல் இவ்வாறு பகிரப்படும் என்று பகிரங்க மிரட்டல் விடுக்கப்படுகிறது :-)))))

LinkWithin

Related Posts with Thumbnails