Friday 26 August 2011

உறியடி உற்சவம்.. வட நாட்டுப்பாணியில்.(தஹி ஹண்டி)

இங்கே மும்பையில் கண்ணனின் பிறந்த நாள் அன்னிக்கு 'தஹி ஹண்டி'ன்னு ஒரு உற்சவம் தெருவுக்குத் தெரு நடக்கும். நம்மூர் உறியடித் திருவிழாதான் அது. உயரத்தில் தொங்கவிடப் பட்டிருக்கும் ஒரு அலங்கரிக்கப்பட்ட பானையில், பாலும் தயிரும், சில்லறைக் காசுகளும் இருக்கும். சில இடங்களில் சாயம் கலக்கப்பட்ட தண்ணீரையும் நிரப்புவதுண்டு.

பானையின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இரண்டு பக்கமும் ரொம்ப உயரமான மாடிகள்ல இழுத்துக் கட்டியிருப்பாங்க. இந்த தயிர்ப் பானை கட்டப்படும் உசரம் முன்னெல்லாம் இரண்டு மாடிகள் அளவுல இருந்தது,.. இப்பல்லாம், ஏழெட்டு மாடிகள் உசரத்துக்கும், சில இடங்கள்ல அதுக்கும் மேல, க்ரேன் கொண்டும் உசரத்தை கூட்டிக்கிறாங்க. இந்த உசரம் சர்வ சாதாரணமா முப்பது நாற்பது அடி உசரம் வரைக்கும் போகும்.

உறியடிக்கிறவங்களை இங்கே கோவிந்தாக்கள்ன்னு சொல்லுவோம். கண்ணனோடு சேர்ந்து வெண்ணெய் திருடித் தின்ன, அவனது நண்பர்கள் குழாமும் போகுமாம்.அவங்களைத்தான் கோவிந்தாக்கள் ஞாபகப்படுத்தறாங்க. உறியடிக்கிறதுக்கு ஒவ்வொரு குழுக்களா சேர்ந்துதான் கோவிந்தாக்கள் போவாங்க.

ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 அல்லது 150 கோவிந்தாக்களோ, அதுக்கு மேலயோ இருப்பாங்க. உறியடிக்க வந்ததும், ஒவ்வொரு குழுவா தங்களோட புஜபல பராக்கிரமத்தோடு, தங்களால பானை கட்டப்பட்டிருக்கும் உசரத்தை எட்ட முடியுமான்னும் காட்டறதுக்காக ஒருத்தர் தோள்ல ஒருத்தர் ஏறி நின்னு பிரமிட் செஞ்சு காமிச்சு, ஒரு சின்ன டெமோ கொடுப்பாங்க. ஒவ்வொரு குழுவா, பானையை உடைக்க முயற்சி செய்வாங்க.

இதுல எந்த குழு, பானையோட உசரத்தை எட்டற அளவுக்கு, பிரமிட் செஞ்சு காமிக்குதோ அவங்கதான் அனேகமா ஜெயிப்பாங்க. அந்த உசரத்தை எட்ட முடியாதவங்க, அங்கிருந்து பின்வாங்கி வேற இடங்கள்ல, உறியடி உற்சவத்துக்கு போயிடுவாங்க. சிலசமயங்கள்ல ரெண்டு சம பலமுள்ள குழுக்களுக்கிடையில போட்டி நடக்கும். அதுல ஜெயிக்கிறவங்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கும். ஜெயிக்கலைன்னா.. அதான் ஜெயிக்கலையே.. ஒண்ணும் கிடைக்காது.

இதில், தானாவருகே மஸ்காவ் என்ற இடத்தில்தான் உலகிலேயே மிக உயரமான பிரமிட்ன்னு கின்னஸ் சாதனை அந்தஸ்து பெற்ற ஒன்பது நிலை பிரமிட் அமைச்சிருக்காங்க. போன வருசத்துல நடத்துன தங்களோட சாதனையை தாங்களே முறியடிக்கணும்ன்னு இந்த வருசம் பத்து நிலைகள்ல பிரமிட் அமைக்க முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனா, முயற்சி வெற்றி பெறலை.
ல்அ
எல்லா கோவிந்தாக்களும் பிரமிட் மாதிரி ஒருத்தர் தோள்ல இன்னொருத்தர் ஏறி நின்னுக்க, கடைசியா, ஒரு சின்னப்பையன் எல்லாத்துக்கும் மேல ஏறி, பானையில் வைக்கப்பட்டிருக்கும் தேங்காயை எடுத்து, பானையை 'டமார்....'ன்னு உடைக்க, பானையிலிருக்கும் தயிர் அத்தனை பேர் மேலயும் சிந்தும். உறியடிக்கறப்ப, அவங்களை உற்சாகப்படுத்த, "ஆலா ரே.. ஆலா. கோவிந்தா ஆலா.."ன்னு பாடுவாங்க. 'கோவிந்தன் வந்து விட்டான்' என்பதே இதன் பொருள்.

இதுல, கோவிந்தாக்கள் மேல தண்ணீர் ஊத்தணும்ங்கற சம்பிரதாயத்துக்காக, சுத்தியிருக்கற கட்டிடங்கள்ல இருந்து வாளி வாளியா தண்ணீரை ஊத்திக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் சமாளிச்சு ஜெயிக்கறதுதான் சாகசம். (சில இடங்கள்ல பசங்க,கேட்டு வாங்கி தண்ணீரை தங்களோட மேல ஊத்திக்கிறதுண்டு). சில சமயங்கள்ல, பிரமிட்ல மேல இருக்கறவங்க வழுக்கி விழுந்து மொத்த அமைப்பும் 'டமடம' ன்னு சரியும். சில சமயங்கள்ல காயமும் படுமாம். இந்த வருசம் குறைஞ்ச பட்சம் 250 பேருக்கும் மேலே,இப்படி காயம் பட்டதால மருத்துவ மனைகள்ல அனுமதிக்கப் பட்டிருப்பதா புள்ளி விவரம் சொல்லுது.

இப்பல்லாம் அவங்களுக்கு மட்டுமல்ல, சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கறவங்களுக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கு. இது எதுக்குன்னா, மனித பிரமிடு கீழே விழும்போது, அதை உருவாக்கினவங்களுக்கு மட்டுமல்ல, சுத்தி நிக்கிறவங்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அந்தளவுக்கு கலந்துக்கறவங்களும், உறியடிக்கிற கூட்டமும் வருசா வருசம் பெருகிட்டே இருக்கு.

இப்பல்லாம், பெண்களும் இப்படியோர் கோவிந்தா குழுவமைச்சு, உறியடி உற்சவத்துல கலந்துக்கறாங்க. இங்க நவி மும்பையிலிருக்கும் ஐரோலியில் (Airoli) அப்படியொரு பெண் கோவிந்தாக்கள் குழுதான் இந்த வருசம் உறியடிக்கப்போறாங்களாம்.. ரொம்பவே கட்டுப்பெட்டி நகரம்ன்னு பேரெடுத்த பூனாவிலும் கூட, மும்பையைப் பார்த்து, பெண் கோவிந்தாக்கள் குழு அமைக்கப்பட்டிருக்கு.

பெண் கோவிந்தாக்கள் குழுவில் அறுபது வயசு பேரிளம் பெண்ணிலிருந்து ஆறு வயசு சிறுமி வரைக்கும் பங்கெடுத்துக்கறாங்க. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு எந்த வித்தியாசமும் இங்கே கிடையாது. அத்தனை கோவிந்தாக்களும் ஒரே மாதிரி சீருடை போட்டுக்கிட்டு உறியடிக்கிறதைப் பார்க்கவே அத்தனை அம்சமா இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் நிறையப் பேர் இருக்கறதால,  எல்லோருக்கும் சீருடை, சாப்பாட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவுன்னு ஒரு நாளைக்கு ஒரு பெரிய தொகை செலவாகுமாம்.

ஆண்,பெண் கோவிந்தாக்களின் ஒவ்வொரு குழுவும், கோகுலாஷ்டமி அன்னிக்கு குறைஞ்ச பட்சம் ஏழெட்டு இடங்கள்லயாவது உறியடிப்பாங்க. ஒவ்வொரு இடத்துலயும் மேள தாளத்தோட ஒரு பெரிய ட்ரக் நிறைய அவங்க வர்றதும், போறதும் பார்க்கவே அத்தனை உற்சாகமா இருக்கும்.

இத்தனையும் இவ்ளோ நாளா சாகசத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பல்லாம் பரிசுத் தொகையையும் கணக்கிலெடுக்கறாங்க. பரிசு எவ்ளோன்னு சொன்னா, மயக்கம் போட்டு விழுந்துடாதீங்க.  ச்சும்மா.... ரெண்டு, மூணு லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.

மொதல்லயே, இந்த இடத்துல இவ்ளோ பரிசுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாங்க. அன்னிக்கு, அப்படியொரு போஸ்டரைப் பார்த்தேன்... 2,555,55/-ன்னு அறிவிச்சிருந்தாங்க. இன்னொரு இடத்தில 11,00000/- தானாம். இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே, தானா என்னும் பகுதியில் அறிவிக்கப் பட்டதுதான் கூடுதல். தொகை ஒண்ணும் அதிகமில்லை.. வெறும் இருபத்தைந்து லட்சம் மட்டுமே.



Monday 22 August 2011

ஆயர்பாடி மாளிகையில்..

எங்க வீட்டுக்கு இவன் வந்து சுமார் மூணு வருசம் இருக்குமா!!!.. இல்லையாம், ரெண்டரை வருசம்தான் ஆச்சாம்.. திருத்திக்கச்சொல்றான். அவனுக்குன்னு தேடித்தேடி தொட்டில், நகைகள், உடைகள்ன்னு எத்தனைதான் வாங்கிக்குவிச்சாலும், ஒரேயொரு துளசிதளத்தைப் பார்த்ததும் சட்ன்னு பரமதிருப்தியாயிடறான். சாப்பாட்டுலயும், அவனுக்காக வெச்சிருக்கற தண்ணீர்லயும்கூட ஒரு தளத்தை போடச்சொல்றான்னா பார்த்துக்கோங்க. அதென்னவோ அதுமேல அப்படியொரு பிரியம் அவனுக்கு :-)))

தினம் குளிச்சுமுடிச்சு, ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு, ஊஞ்சல்ல ஒரு ஆட்டம் ஆடணும் அவனுக்கு. அப்றம்தான் சாப்பாடெல்லாம் சாப்பிடுவான். பிடிவாதக்காரன் :-))
க்ருஷ்ஷுக்கே அல்வா... அதுவும் மஸ்கோத்து அல்வா :-))
அவனுக்கு பிறந்தநாளாச்சேன்னு, நேத்திக்கி புது ட்ரெஸ்ஸு வாங்கிட்டு வந்தேன். 'இப்பவே போட்டுவிடு'ன்னு ஒர்ரே அடம்.. 'அதெல்ல்லாம் முடியாது. நாளைக்கு குளிச்சப்புறம்தான் போட்டுவிடுவேன். நாளைக்கு பிறந்த நாளில்லையா.. காலைல சீக்கிரம் எழுந்துக்கணுமில்லையா. அதனால, இப்போ சீக்கிரம் தூங்கு'ன்னு வலுக்கட்டாயமா தூங்கவெச்சேன்.

காலைல குளிச்சு முடிச்சு, அலங்காரமெல்லாம் செஞ்சுக்கிட்டு, புது ட்ரெஸ்ஸு போட்டுக்கிட்ட திருப்தியில என்னவொரு ஆனந்தமா சிரிக்கிறான். உப்புச்சீடையும், வெல்லச்சீடையும் ரொம்ப பிடிச்சிருக்காம்.பால்பேடாவும் நல்லாத்தான் இருக்காம்.கடையில் வாங்கினதுதான்னு சொன்னேன். கோச்சுக்கலை. அவல்,சர்க்கரை,வெண்ணெய் எல்லாத்தையும் பார்த்ததும் படுகுஷியாயிட்டார் :-)
ஆனந்தமாய் ஊஞ்சலாடும் க்ருஷ் :-)
நேத்து முழுக்க செம மழை,.. அவன் பிறந்த சமயம் அப்படித்தான் இருந்ததாம். கொட்டற மழையில் வசுதேவர் அவனை, ஆயர்பாடிக்கு கொண்டுபோயி, யசோதாவிடம் ஒப்படைத்தாராம். ஆயர்பாடின்னதும், அவனுக்கு தான் ஆயர்பாடியில் வெண்ணெய் திருடித்தின்ன நிகழ்வுகளெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு..


இப்பவும் அந்த ஞாபகமாத்தான், இங்கே மும்பையில் 'தஹிஹண்டி' கொண்டாடறோம்ன்னு சொன்னேன். அப்டீன்னா என்னதுன்னு கேக்கறான். அவனுக்கா தெரியாது!!!.. குறும்புக்காரன் :-)))



Wednesday 17 August 2011

மழைக்காலத்தில்..

வெய்யில் காலத்துல, ஒரு மழைத்துளியாவது விழாதா?..கொஞ்சமாவது வெக்கை குறையுமேன்னு ஏங்குன காலம் போய், மும்பையில் இப்போ செம மழை. என்னதான்,.. குடை, ரெயின் கோட்ன்னு கொண்டுபோனாலும், மழையில நனையுற சுகமே தனி.. 

ஆரம்ப ஜோர்ல எல்லாமே நல்லாத்தான் இருக்கும். அப்புறம், என்னதான் துணிதுவைக்கும் இயந்திரத்தின் உலர்த்தியில்(ட்ரையர்ன்னு இங்கிலீசுலயும் சொல்லலாம் :-)) காயவைத்தாலும், சட்ன்னு காயாத துவைத்த துணிகள், மழைக்காலத்துக்கே உரிய இன்னபிற சங்கடங்கள்ன்னு வரிசையா வந்து படுத்தியெடுக்கும். மழை ஆரம்பிச்ச ரெண்டுமாசத்துக்குள்ளாறயே எப்போதான் மழைக்காலம் முடியப்போவுதோன்னு ஒவ்வொருவரையும் முணுமுணுக்க வெச்சிடுது..

இதுக்கெல்லாம் தேவையேயில்லாம, நம்மை இந்தக்காலத்துகேற்ப கொஞ்சம் மாத்திக்கிட்டா, சொர்க்கம்தான்.. கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்துக்கிட்டா, மழைக்காலத்துல வர்ற வியாதிகள்லேர்ந்தும் நம்மை காப்பாத்திக்கலாம்.

இந்த லிஸ்டுல மொதல்ல வர்றவங்க குழந்தைகள்தான்.. தண்ணீரில் விளையாடப்பிடிக்காதுன்னு சொல்ற குழந்தைங்க உண்டா என்ன?!!.. அதுவும் பள்ளிவிட்டு வீடு திரும்பும்போதுதான் செமையா நனைஞ்சுக்கிட்டு வருவாங்க. வந்ததும், அப்டியே அலாக்கா குளியலறைக்கு தூக்கிட்டு போயி, ஈர உடைகளை மாற்றி, கை,கால்களை நல்லா சோப்போ, இல்லை தரமான கிருமி நாசினியோ போட்டு கழுவச்சொல்லணும். தேங்கி நிக்கிற அழுக்குத்தண்ணீர்ல எவ்ளோ கிருமிகள் இருக்கும்ன்னு சொல்லியா தெரியணும் :-) 

முடிஞ்சா, இதமான சூடுள்ள வென்னீர்ல கொஞ்சம் டெட்டால், சாவ்லான் எதையாவது கலந்து ஒரு பக்கெட்ல எடுத்துக்கிட்டு, கால்களை அதில் கொஞ்ச நேரம் வெச்சிருந்தா, நக இடுக்குகளில் இருக்கற பாக்டீரியாக்களும் அழிஞ்சு, கால் சுத்தமாயிடும். இதனால், அரிப்பு போன்ற சருமப்பிரச்சினைகள் தவிர்க்கப்படுது.. இது பெரியவங்களுக்கும் பொருந்தும். 

மழைக்காலத்துல ஷூக்களைதவிர்த்து அதுக்கென இருக்கற சப்பல்கள், சாண்டல்களை உபயோகப்படுத்தும்போது, அது தரமானதுதானான்னு சரிபார்த்து வாங்கினா நல்லது. இல்லைன்னா, நாலு நாள் துவைக்காத சாக்ஸுக்கும் அதுக்கும் மணத்தில் எந்தவித வித்தியாசமும் இருக்காது. காலுக்கும் அலர்ஜியாகிடும். ஷூக்களை, அதுக்குள்ளே செய்தித்தாளை திணிச்சுவெச்சு பார்சல் செஞ்சு மழைக்காலம் முடியறவரை பரண்ல பத்திரப்படுத்துங்க.

மழைக்காலத்துல தண்ணீரை காய்ச்சியோ அல்லது வாட்டர் ஃபில்டர்களில் ஊற்றி சுத்தம் செய்தோ பயன்படுத்தணும்ன்னு நமக்கு தெரியும்தான்,.. ஆனாலும், ஃபில்டர்களை சரியா சுத்தம் செய்யலைன்னா, அதுவே பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகற ஒரு இடமா மாற வாய்ப்பிருக்கு. அப்றம் நோய்களை வெத்தலைபாக்கு வெச்சு அழைச்ச கதைதான் :-)))

மழை மற்றும், அதை தொடர்ந்து வர்ற குளிர்காலங்கள்ல சூடா சாப்பிடறது நலம். அதுவும் குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டா, உறவு வளரும், கேஸ்செலவு குறையும். (சாப்பாட்டைஅடிக்கடி சூடாக்கவேண்டிய தேவையிருக்காதே:-). கூடுமானவரைக்கும் அந்தந்த நேரத்துக்கு போதுமான அளவு உணவை சமைச்சு வெச்சுக்கலாம். சாப்பாட்டுலயும் மிளகு, சுக்கு, இஞ்சிவகைகளை நிறைய சேர்த்துக்கிட்டா, நாக்குக்கும் ருசி.. உடம்புக்கும் நல்லது.

மழை பெஞ்சா தோட்டம் வெச்சிருக்கறவங்களுக்கு கொண்டாட்டம்தான்,.. மழைத்தண்ணீரே செடிகளுக்கு போதுமானது. அப்றம், மழைக்காலங்கள்லதான், மண்புழுக்கள் வெளியே வரும். அதுல நாலஞ்சை பிடிச்சுட்டு வந்து தொட்டிக்கு ஒன்னு ரெண்டா போட்டுவெச்சுட்டா, செடிகளுக்கு நல்லது. இயற்கையுரம் தயாரிக்க வெச்சிருக்கற டப்பாவுல கழிவுகளோட,மண்புழுக்களை போட்டுவெச்சா, இயற்கையுரத்தை இன்னும் சத்தாக்கிடும். 
இயற்கையுரத்துல வளர்ற எங்கூட்டு பூக்களை நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சி..
மழைக்காலத்துல இன்னொரு தவிர்க்கமுடியாத பிரச்சினை,.. பிரச்சினைன்னு சொல்றதைவிட ஆபத்துன்னே சொல்லலாம். அதான் ஒழுகும் கூரைகள்.. இதுக்கு அடுக்குமாடி கட்டிடங்களும் விதிவிலக்கல்ல. இதனாலயே இங்கெல்லாம் தரைத்தளத்துலயும், மேல்தளத்துலயும் இருக்கற வீடுகள் சட்ன்னு விக்கிறதில்லை. வித்தாலும் 'ஏதோ.. வீடுன்னு ஒன்னு இருந்தாப்போதும்'ன்னு நினைக்கிறவங்கதான் வாங்குவாங்க.
அந்தா............ சுவத்துல கோலம் போட்டிருக்காங்களே.. அதான் கெமிக்கல்பூச்சு..
கூரைகள் மட்டும்தான் ஒழுகும்ன்னு இல்லை. சிலசமயங்கள்ல விரிசல் விட்டுருக்கும் சுவர்கள் வழியாவும் நீர் கசியும். அந்த மாதிரி கசிவு இருக்கற இடங்கள்ல மின்சார இணைப்புகளோ, சுவிட்சுகளோ இருந்தா,.. வேற வினையே வேண்டாம். எப்போ ஷாக் அடிக்கும்ன்னே தெரியாது. பயந்துக்கிட்டே இருக்கணும். அதனால, மழைக்கு முன்னாடியே இங்கெல்லாம் கட்டிடங்கள்லயும் வெளிச்சுவர்கள்ல ரசாயனப்பூச்சுவேலை நடக்கும். ஏன்னா, பால்கனியில தண்ணீர் தேங்கினாக்கூட, அது நமக்கு கீழ்த்தளத்துல இருக்கற வீட்ல கசிய வாய்ப்பிருக்கு.

எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல, வீட்டோட இணைஞ்ச மொட்டைமாடியில செங்கல் வெச்சு தொட்டி கட்டி, அதுல மண் நிரப்பி, தோட்டம்போட்டிருந்தாங்க. தினமும் அதுக்கு ஊத்துற தண்ணீர் சுவர் வழியா கசிஞ்சு, கீழ்த்தளத்துல இருந்த வீட்டோட சமயலறையின் டைல்களெல்லாம் அப்படியே உதிர்ந்து 'சொத்.. சொத்'ன்னு விழற நிலைமைக்கு போயிடுச்சு. மொத்தமா விழுந்தா பரவால்லை.. ஒவ்வொரு நாளும் ஒன்னு ரெண்டா விழுந்தா, எப்படி?.. தினமும் பயந்துக்கிட்டே சமைக்கமுடியுமா?.. கடைசியில சொஸைட்டில புகார்கொடுத்து, தொட்டியை இடிக்கவெச்சதுமில்லாம, தங்களோட அடுக்களையையும் சரிசெஞ்சு கொடுத்தப்புறம்தான் சமாதானமானாங்க :-)

இப்படியெல்லாம் இருந்தாலும் பாதுகாப்பு கருதி நாமும் எச்சரிக்கையா சில முன்னேற்ப்பாடுகளை செஞ்சுக்கணும். ஷாக் அடிப்பதை தவிர்க்க சுவிட்சுகள், மற்றும் ப்ளக் பாயிண்டுகள்ல எர்த் கனெக்ஷன் இருக்கான்னு பார்த்து சரிசெஞ்சுக்கணும். முடிஞ்சவரைக்கும் த்ரீ பின் பாயிண்டுகளை உபயோகப்படுத்துவது நல்லது. 

அதுவும் மிக்ஸி, டிவி, சிஸ்டம் போன்ற மின்சார மற்றும் மின்னணுச்சாதனங்களை உபயோகப்படுத்தியபிறகு, சுவிட்சுலேர்ந்து ஒயரைப்பிடுங்கிடுறது நல்லது. அதிகம் இடிமின்னல் இருக்கும் சமயங்கள்ல டிவியையும், ஃப்ரிஜ்ஜையும் ஆஃப் செஞ்சுடுறது அதுக்கும், உங்க பர்சுக்கும் பாதுகாப்பு. 

தரைத்தளத்துல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம்தான். மழைல நனைஞ்சுட்டு சகதிக்காலோட வீட்டுக்குள்ள நடமாடினா, ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை வீட்டை துடைச்சு, சுத்தம் செய்யவேண்டிய அவசியத்துக்கு வீட்டுப்பெண்களை உள்ளாக்கினா, அப்றம், சமைக்க நேரமெங்கே இருக்குன்னு அதிரடி பதில் கண்டிப்பா வரும்.  'அதிகப்படியான சுத்தம் சோறுபோடாது :-))

ஈரமான குடைகளை வீட்டுக்குள்ள கொண்டுவராதீங்க. வெளியவே ஒரு பக்கெட்டை வெச்சு குடைகளை அதில் வெச்சுடுங்க. அதிகப்படியான தண்ணீரெல்லாம் வடிஞ்சப்புறம், வேணும்ன்னா, எல்லோரும் தூங்கப்போறச்சே ஹால்ல குடைகளை விரிச்சு வெச்சுட்டா, பத்து நிமிஷத்துல காய்ஞ்சுடும். மடக்கி வெச்சுடலாம். மழைக்கோட்டுகளை உலர்த்தறதுக்குன்னு தனியா ஒரு கொடி கட்டி, அதுல காயவெச்சுட்டா, ஈரவாசனை தவிர்க்கப்படும்.

அலுவலகம் போறவங்க,.. முக்கியமா பெண்கள், இந்த மழை நேரத்துக்குன்னே தனியா, சீக்கிரம் காயறவகையிலான செயற்கை இழையாலான ஆடைகளை உபயோகப்படுத்தறது நல்லது. முடிஞ்சா, ஆபீசில் உங்களுக்குன்னு டேபிள் இருந்தா, ஒரு செட் உலர்வான உடைகளை எப்பவும் அதுல வெச்சிக்கிறது ரொம்ப பயனானது. ரொம்பவே தொப்பலா நனைஞ்சு, அத்தனை பேர் நடுவுல கூனிக்குறுகி, குளிர்ல நடுங்கிட்டே வேலைசெய்யற அவஸ்தையை இதனால தடுக்கலாம். இது இங்கே தொலைத்தொடர்பு துறையில் பணிபுரியும் என்னோட தோழி சொன்ன டிப்ஸ்.. பெண்களுக்குன்னு தனியா ஓய்வறை வசதி இருக்கற அலுவலங்கள்லயாவது இதை கடைப்பிடிக்கலாமே..
மழைக்காலத்துல குஞ்சுகளுக்கு கதகதப்பா படுக்கை தயாரிக்க எங்கூட்டு செடிகள்தான் போகுதாக்கும் :-)). டப்பாவே தெரியாத அளவுக்கு வளர்ந்து பூத்துக்கிடந்த செடி, ஒர்ரே நாள்ல பணாலான கதியைப்பாரீர் :-))
அதிமுக்கியமானது,.. வியாதிகள்லேர்ந்து காப்பாத்திக்க தடுப்பூசிகளை போட்டுக்கிடறது நல்லது. கொசுக்கள் பெருகாம இருக்க, வீட்டுப்பக்கங்கள்ல தண்ணீர் தேங்கி நிக்கிற இடங்கள்ல வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், மற்றும் கழிவு ஆயில்களையும் (நன்றி-உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா) ஊத்திவெச்சா,.. கொசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால பரவற காய்ச்சல் வகைகள் கொஞ்சமாவது தடுக்கப்படும். 

அமெரிக்காவின் டாக்சஸ், விஸ்கோன்சின், அலபாமா ஆகிய பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைஞ்சு, சிக்கன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசியை கண்டுபிடிச்சிருக்காங்க. பன்றிக்காய்ச்சலுக்கும் தடுப்பூசி இருக்காம். வருமுன் காப்பது நல்லதுதானே..

மும்பையில் ஒவ்வொரு இடங்கள்லயும், புகைபோட்டு கொசுவை அழிச்சுக்கிட்டிருக்காங்க. ஒவ்வொரு கட்டிடமா போயி, கீழ்த்தளத்துல, மழை நீர்வடிகால்கள், அப்றம் வாகனங்கள் நிறுத்தற இடங்கள்ன்னு எல்லா இடங்கள்லயும் புகையடிப்பு நடக்குது.
எங்க பில்டிங்கில் மருந்தடிக்கிறாங்க... கொசுவுக்கு :-)

முக்கியமானது,.. மழை பெஞ்சாத்தான் நாடுசெழிக்கும்,.. காடும் செழிக்கும். குடிதண்ணீர், காய்கறிகள்ன்னு எல்லாமும் தட்டுப்பாடில்லாம கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியா சுத்துப்புறமும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் அருவிகளெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால, மழை பிடிக்கலைன்னாலும் தயவு செய்து,' சனியன் பிடிச்ச மழை.. விடாம பெய்ஞ்சு கெடுக்குதே'ன்னு அலுத்துக்காதீங்க. மழை நல்லது :-)))


Monday 15 August 2011

சுதந்திரத்தைக்கொண்டாடுவோம்..

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.










டிஸ்கி: நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு இடுகையும் நள்ளிரவிலேயே வெளியிடப்படுகிறது :-)



Thursday 11 August 2011

பூந்தோட்டம்.. (11-8-11 அன்று பூத்தவை)

(படம் கொடுத்து உதவிய இணையத்துக்கு நன்றி).
மல்லிகை:
மழைக்காலத்துல தேங்கி நிக்கிற தண்ணீர்ல கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யறதால, மழைக்காலம் முடிஞ்சதுமே கொசுக்காலம் தொடங்கிடும்ன்னு தெரியும்தானே.. இப்படி தண்ணீரை தேங்கவிடாம நம்மால முடிஞ்சவரைக்கும் எச்சரிக்கையா இருந்தாலும், அதையும் மீறி குண்டு குழிகள்ல, சாக்கடைகள்லன்னு தேங்கி நிக்கிற தண்ணியில மண்ணெண்ணெய், பெட்ரோல்ன்னு ஊத்தி லார்வாக்களை அழிச்சுட்டு இருந்தோம். அரிதாகிட்டு வர்ற இயற்கை வளங்களை இப்படி வீணாக்குறதும் நியாயமில்லைதானே..

இப்ப அதுக்கு ஒரு மாத்து வழி கண்டுபிடிச்சிருக்காங்க. நம்மூர்ல விளக்கெரிக்கவும், உள்ளுக்கு குடிக்கவெச்சு வயித்துப்பூச்சிகளை ஒழிக்கவும் நம்ம பாட்டிகள் பயன்படுத்திவந்த ஆமணக்கெண்ணெய்யையும் இதுக்கு பயன்படுத்திக்கலாமாம். கொசுக்கள் பெருக வாய்ப்பா பெருகி நிக்கிற தண்ணீர்ல இதை ஊத்தினா கிட்டத்தட்ட 50% வரைக்கும் கொசுவோட லார்வாக்கள் அழியுதாம். இதனால பூச்சிக்கொல்லிகளோட உபயோகமும் மறைமுகமா தவிர்க்கப்படுது.

இப்போ பரிசோதனை முறையில் இருக்கும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றியடைஞ்சா,..அதுக்கான காப்புரிமையையும் நிச்சயமா வாங்கிடுவோம்ன்னு மும்பையில் பரேல் என்னுமிடத்திலிருக்கும் Haffkin Institute for Training, Research and Testing-ன் டைரக்டரான டாக்டர். அபய் சௌத்ரி வாக்கு கொடுத்திருக்கார். இந்தியாவின் மத்த வளங்களின் காப்புரிமையை கோட்டைவிட்டமாதிரி இதையும் விடாம இருக்காங்களான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும். விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய்யில் விளக்கெரிச்சா பூச்சிகள் கொசுக்கள் நம்ம கிட்டயே அண்டாதுன்னு, நம்மூர் பாட்டிகள் அந்தக்காலத்துலயே கண்டுபிடிச்ச பெருமைக்குரிய விஷயத்தை, இவங்க இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க..

ரோஜா:
ஒரு ஊர்ல ஒரு ஆட்டுக்குட்டியும், நாய்க்குட்டியும் ரொம்ப நெருக்கமான நண்பர்களா இருந்தாங்க.. அந்தச்சமயம் 'நண்பர்கள் தினம்' வந்தது. தன்னோட நண்பனுக்கு விருந்தளிக்க ஆசைப்பட்ட நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டியை விருந்துக்கழைச்சது. விருந்துக்கு வரும், நண்பனுக்காக, அசைவ வகை உணவுகளா சமைச்சுவெச்சுருந்தது. விருந்துக்கு வந்த ஆட்டுக்குட்டி பாவம், எதையும் சாப்பிடப்பிடிக்காம வெறும் ஜூஸைமட்டும் குடிச்சுட்டு கிளம்பிடுச்சு. அதை ரசிச்சுக்கிட்டே நாய்க்குட்டி விருந்தை ஒரு பிடி பிடிச்சுட்டிருந்தது.

விருந்துக்கு கூப்பிட்டுட்டு, பட்டினி போட்ட நாய்க்குட்டிக்கு பாடம் புகட்ட நினைச்ச ஆட்டுக்குட்டி, அதுக்கடுத்தாப்ல வந்த ராக்கி பண்டிகைக்கு தன்னோட வீட்டுக்கு நாய்க்குட்டியை விருந்துக்கு அழைச்சது. நாய்க்குட்டியும் ஜம்பமா போய் இறங்கியது. அங்கே அருமையான கல்யாணவிருந்தே காத்திட்டிருந்தது.  நாய்க்குட்டியோட வலது கையில ஒரு அழகான பட்டுக்கயிறைக்கட்டிய ஆட்டுக்குட்டி, 'இன்னிலேர்ந்து நீ என்னோட சகோதரனும்கூட'ன்னு சொல்லி இனிப்பை ஊட்டிவிட்டு, நாய்க்குட்டிக்கும் பிரியமான காய்கறிவிருந்தை அளித்தது.  தான் முதலில் நடந்துக்கிட்டதை நினைச்சு வெக்கப்பட்ட நாய்க்குட்டி மனசு திருந்தி அதுக்கப்புறம் உண்மையான மனசோட நட்பு பாராட்ட ஆரம்பிச்சது.
(நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டி ரெண்டும் வர்றதால இது குட்டிக்கதை என்று கொள்க :-))

பவளமல்லி:
சமீபத்துல பன்னிரண்டாம் வகுப்புல 90%க்கும் மேல எடுத்து சாதனை செஞ்ச சில மாணவர்களுக்கு CET-ன்னு சொல்லப்படும் நுழைவுத்தேர்வு முடிவுகள்ல அதிர்ச்சி காத்திருந்தது.  நிறையப்பேரு 70% சதவீதம் மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்திருக்காங்க. வெறும் 50% மட்டுமே எடுத்த மாணவர்களும் உண்டு. தொழில்நுட்பப்படிப்புகள்ல சேரணும்ன்னா குறைஞ்சது 95%  மதிப்பெண்ணாவது வேணுங்கற நிலையில இது நிஜமாவே அதிர்ச்சியூட்டக்கூடியதா இருந்திருக்கு. பொதுத்தேர்வு மாணவர்களுடைய நினைவாற்றலை மட்டுமே அடிப்படையா கொண்டிருப்பதும் நுழைவுத்தேர்வு அவங்களோட உண்மையான அறிவாற்றலை சோதனை செய்வதாகவும் அமைஞ்சிருப்பதே இதுக்கு காரணம்ன்னு வல்லுனர்கள் சொல்றாங்க.

சாமந்தி:
தீவிர உணவுக்கட்டுப்பாடும், உடல் எடையை கூட்ட ஒரு காரணியா அமையலாம்ன்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. ஓரளவுக்கு மேல் பட்டினி கிடந்தா, மூளையிலிருக்கும் பசியைத்தூண்டும் நரம்புகள் தங்களைத்தாங்களே தின்று தனக்கு வேண்டிய சத்தை எடுத்துக்கொள்ளுமாம். அதனால தீவிரப்பசி தூண்டப்பட்டு, நாம நிறைய சாப்பிட ஆரம்பிச்சுடுவோமாம். அவ்வ்வ்வ்வ்..... ஒல்லிக்குச்சி உடம்புக்கு ஆசைப்படுபவர்கள் கவனிக்க...

சம்பங்கி:
'அய்யய்யோ!!!... என் கெணத்தைக்காணலைங்க..' இப்படி கூப்பாடு போட்டு காவல்துறையையே ஆட்டம் காணவைத்த வடிவேலுவின் நகைச்சுவை மும்பைக்கருகே உண்மையாவே நடந்துருக்கு.  பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்துல, ஒரு இளைஞர் கிராம பஞ்சாயத்தை அணுகி, கெணறு வெட்டியிருக்கறதா, ரிக்கார்டுகளெல்லாம் பக்காவா இருக்கே.. எங்கே கிணறுன்னு நியாயம் கேக்க,  'அங்க எங்கியாச்சும் இருக்கும்.. இல்லைன்னா திருட்டுப்போயிருக்கும்'ன்னு அலட்சியமா பதில் வந்துருக்கு. வெறுப்பான மனுஷர் சத்தம்போடாம காவல் துறைக்கு மனு அனுப்பிட்டு உக்காந்துட்டார்.

காவல்துறை வந்து விசாரிச்சப்பதான், பஞ்சாயத்துல உள்ள அத்தனை பேரும் சேர்ந்து, வெட்டாத கிணறை வெட்டியதா காமிச்சு அதுக்கென ஒதுக்கப்பட்டிருந்த 70000 ரூபாயை முழுங்கினது தெரியவந்திருக்கு. தன்னோட அதிகாரத்தை உபயோகப்படுத்தி, தன் அம்மாவோட பேர்ல இந்த கடனுதவியை வாங்கின பஞ்சாயத்து தலைவர் உட்பட எட்டுபேர் இப்போ 'மாமியார்வீட்டுல விருந்தாடிட்டிருக்காங்க'

கொசுறு:
 நாங்க பள்ளிக்கூடத்துல படிக்கறச்சே, தினமும் பள்ளி முடிஞ்சதும் சாயந்திரம் வகுப்பறையை முறைவெச்சு சுத்தம் செய்வோம். ஒவ்வொரு பெஞ்சிலும் கிட்டத்தட்ட அஞ்சு பேராவது இருப்போம்.. இன்னிக்கு முதல்பெஞ்சுல இருக்கறவங்க சுத்தம் செஞ்சாங்கன்னா, நாளைக்கு அடுத்தபெஞ்ச்ல இருக்கறவங்க செய்வாங்க. இதுல பசங்க வகுப்புல தொலைச்சுட்டுப்போற பொருட்களை பொறுப்பா எடுத்துவெச்சு, மறுநாள் உரியவங்ககிட்ட சேர்க்கற கடமையும் உண்டு.

இந்த கொசுவத்திய ஏத்திவெச்ச புண்ணியத்தை இங்கே மாதுங்காவிலிருக்கும் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கிட்டது. அங்கியும் வகுப்பறையை சுத்தம் செய்ய தொழிலாளி வேணாம். நாங்களே செஞ்சுக்கிறோம்ன்னு துடைப்பத்தை பசங்க கையில் எடுத்துட்டாங்க. இவங்களைப்பார்த்து இன்னும் சில வகுப்புகள்லயும் இதை கடைப்பிடிக்கிறாங்க. 'நம்ம நண்பர்கள் சுத்தம் செய்யறாங்க' என்ற நினைப்பே மாணவமாணவிகளை வகுப்பில் குப்பை போடுவதை தடுக்குதாம். வகுப்பறைகள் முன்னெப்போதையும் விட இப்ப ரொம்பவே சுத்தமா இருக்குதாம்.. பாராட்டப்படவேண்டிய விஷயம்.


டிஸ்கி: பார்த்த, படித்த, கேட்ட விஷயங்களில் மனசில் இடம்பிடிச்சவை இனிமே இந்த பூந்தோட்டத்தொகுப்பில் வரும் :-)))



Sunday 7 August 2011

பாவ்பா.....ஜி வைபோகமே...

'பாவ்பாஜி' மும்பையின் பிரபலமான உணவுவகைகளில் ஒண்ணு. வட நாட்டுல எல்லோரையும் மரியாதையா அவங்க பேரோடயோ உறவைக்குறிக்கும் சொல்லோடயோ 'ஜி' என்ற விகுதியைச்சேர்த்தே கூப்பிடுவாங்க. 'இந்த' 'ஜி'..  அந்த 'ஜி' இல்லை :-)). பாஜின்னா கறின்னு அர்த்தம்.  'பாவ்'ன்னு சொல்லப்படும் பன்னை,..  காய்கறிகளைக்கொண்டு செஞ்ச கறியைத்தொட்டுக்கொண்டு சாப்பிடுவாங்க. கறியோட மேல, நறுக்கிய கொத்துமல்லியிலை,நறுக்கிய வெங்காயம், சுட்ட அல்லது வறுத்த அப்பளம் (நொறுக்கியது) போட்டுச்சாப்பிட்டா.... ஸ்ஸ்ஸ்!!!! அதுவும் இந்த மழைக்காலத்துல இதான் இப்ப ஹாட் ஸேல்.

வீடுகள்ல நைட் இதான் டிபன்னா,.. மத்தியானத்துலேர்ந்தே வயித்தைக்காலியா வெச்சுக்கற ஆட்களும் உண்டு :-) செய்யறதும் ஈஸிதான். என்ன.. வட நாட்டுல கிடைக்கிற 'பாவ்' மத்த இடங்கள்ல கிடைக்கறதில்லை. அதனாலென்ன.. ப்ரெட்டைத்தொட்டுக்கிட்டும், அந்தந்த இடங்கள்ல கிடைக்கற பன்னை துணைக்கு வெச்சுக்கிட்டும் சாப்டலாமே. நல்லாவே பொருந்தும்.

சுமாரான அளவுல ஒரு காலிஃப்ளவர்.. மழைக்காலத்துல எதுவுமே சுமாரா கிடைக்கலை,.. எல்லா காலிஃப்ளவருமே ஃப்ரெஷ்ஷா, ஜூப்பராதான் இருக்குது ன்னாலும் பரவால்லை. அளவு நடுத்தரமா இருந்தாக்கூட போதும் :-))

ஒரு கப் உரிச்ச பட்டாணி,.. உரிக்காததுதான் மார்க்கெட்டுல கிடைக்கும். கால்கிலோ வாங்கிட்டு வந்து உரிச்சு ஃப்ரிஜ்ஜுல வெச்சுக்கிட்டா, அடுத்ததடவை செய்யறதுக்கோ,.. இல்லைன்னா வேற க்ரேவிகள் செய்யறதுக்கோ உபயோகப்படுத்தலாமில்ல..

 நடுத்தர அளவுல ஒரு கேரட்டும் ஒருஉருளைக்கிழங்கும் ,.. தோலுரிச்சு வட்டவட்டமா வெட்டி வெச்சுக்கோங்க. அதெல்லாம் முடியாது!!.. என்னிஷ்டப்படி சின்னதாதான் வெட்டுவேன்னாலும்.... சரி. ஓ.கே; உங்க இஷ்டம்.

ஒரு மழையில நனையாத காய்.. அதான்,.. 'குடை'மிளகாயையும் நீள்வாக்குல நறுக்கி வெச்சுக்கோங்க. இப்ப,.. நறுக்கப்பட்ட எல்லாக்காய்களையும் ஒரு பாத்திரத்துல போட்டு அது மூழ்கறவரைக்கும் தண்ணி ஊத்தி தேவையான அளவு உப்புப்போட்டுக்கோங்க. அந்தப்பாத்திரத்தை குக்கர்ல வெச்சு, குழையறவரைக்கும் வேகவெச்சு எடுங்க. (உங்க வீட்டு குக்கர் எத்தனை விசிலடிக்கும்ன்னு எனக்கு தெரியாதே. எங்கூட்டு குக்கர்ல நாலுவிசில் அளவுக்கு வெச்செடுப்பேன் :-))

அப்படியே மூணு தக்காளிகள், மூணு வெங்காயங்கள், மூணு இஞ்ச் அளவுல இஞ்சித்துண்டுகள், மூணு+மூணு ஆறுபல் பூண்டுகள் எல்லாத்தையும் பொடியா நறுக்கி, நல்ல விழுதா அரைச்சு தனியா ஒரு கிண்ணத்துல வெச்சுக்கோங்க.

குக்கருக்கு இருக்கற ஹைப்ரஷர், லோ ப்ரஷரானதும் பாத்திரத்தை வெளியில் எடுத்து, காய்கறிகளை மத்துகொண்டு மசிச்செடுங்க.இல்லைன்னா, இப்பல்லாம் உருளைக்கிழங்கை மசிக்கறதுக்குன்னே ஒரு கருவி கிடைக்குது. அதாலயும் மசிச்சுக்கலாம். மொத்தத்துல நல்லா மசியணும்.. அவ்ளோதான். மிக்ஸில போடறதெல்லாம் வேணாம். போட்டா, காய்கறிகளெல்லாம் காணாமப்போயிடும். மசிச்செடுத்தா ஒன்னு ரெண்டு காய்கள் நான் இங்க இருக்கேன்னு காட்டிக்கொடுக்கும்.அதான் பாவ்பாஜிக்கே ருசி :-))

இப்ப அடுப்புல ஒரு வாணலியோ, அல்லது அடிபிடிக்காத பெரிய பாத்திரமோ வெச்சு, அதுல பத்துகிராம் வெண்ணெயும், ரெண்டு பெரிய ஸ்பூனளவு எண்ணெயுமா விட்டு சூடாக்குங்க. நல்லா சூடானதும், அதுல அரைச்செடுத்த தக்காளி+வெங்காயக்கலவையை விட்டு பச்சை வாசனை போறவரைக்கும் வதக்குங்க. அப்றம், ரெண்டு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்ப்பொடி, நாலு கரண்டி பாவ்பாஜி மசாலாப்பொடி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்க. காஷ்மீரி மிளகாய்ப்பொடி நல்ல நிறத்தை மட்டுமே கொடுக்கும்.. காரத்தைக்கொடுக்காது. காஷ்மீரி மிளகாய்ப்பொடி கிடைக்கலைன்னா நம்மூரு மிளகாய்ப்பொடியை ஒரு டீஸ்பூன் மட்டும் போட்டு வதக்குங்க. இல்லைன்னா காரம் நாக்கை உரிச்செடுத்துடும் :-)

நல்ல வாசனை வந்ததும், மசிச்ச காய்கறிக்கலவையை அதுல ஊத்துங்க. கொஞ்சம் நீர்க்க,.. அதாவது பாயாசம் அளவுக்கு இருக்கணும். அதனால தேவைப்படற அளவுக்கு தண்ணீரை ஊத்தி, உப்பு சரிபார்த்துட்டு நல்லா கொதிக்கவையுங்க. கொதிக்கறவரைக்கும் சும்மா இருக்காம, ரெண்டு வெங்காயம், அரைகட்டு கொத்தமல்லி இதுகளை பொடியா நறுக்கி வெச்சுக்கிட்டா நலம்.. விருப்பமிருந்தா அப்பளம் சுட்டோ, பொரிச்சோ வெச்சுக்கலாம். முந்தியெல்லாம் ஹோட்டல்கள்ல அப்பளம் கண்டிப்பா பரிமாறப்படும். இப்பல்லாம் சில ஹோட்டல்கள்ல மட்டும்தான்...

பன்,பாவ், ப்ரெட் இதுல ஏதாவதொண்ணை வெண்ணெய் தடவி தோசைக்கல்லுல வாட்டி வெச்சுக்கிட்டா இன்னும் ருசியாயிருக்கும். உடல் நலத்துல கவனம் செலுத்தறவங்க வெண்ணை சாத்தாமலும் சாப்பிடலாம்..

எல்லைக்கோடுகள் பிரிக்கப்பட்ட ஒரு தட்டில்,(ஹோட்டல்கள்ல இட்லி பரிமாறுவாங்களே.. அதே ரகம்)பெரியபாகத்தில் பாஜியை ஊத்தி, பக்கத்துல இருக்கற சின்னச்சின்ன இடங்கள்ல பாவ், வெங்காயமல்லி கலவை, அப்பளம், சின்னத்துண்டு எலுமிச்சைன்னு பரிமாறணும்ங்கறது மரபு. அப்றம் சாப்பிடுறவங்க பாஜியின் தலையில் வெங்காயமல்லி அட்சதையை தூவி, அப்பளம் நொறுக்கி நலங்கிட்டு, எலுமிச்சைச்சாறு அபிஷேகம் செய்து பின் அதெல்லாத்தையும் கலந்து பின்நவீனத்துவ உணவாக்கி சாப்பிடணும்கறது சம்பிரதாயம்.. ஒரு ஸ்பூனையும் பக்கத்துல வெச்சுட்டா, பாஜியை மட்டும் வயித்துக்குள்ள ஏற்றுமதி செய்யவும் சுலபமாயிருக்கும் :-))
(படங்கள் உபயம் -  இணையம்)

டிஸ்கி: இந்த நட்சத்திர வாரம் முழுக்க பொறுமையா என்னோட இடுகைகளை படிச்சு, பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தின உள்ளங்களுக்கு ஒரு சிறு விருந்தளிச்சு நன்றி சொல்லிக்கிறேன்.



Saturday 6 August 2011

இளைய தலைமுறைக்கொரு சல்யூட்!!!...

( நன்றி- இணையம்).
1. 'டிர்ர்ர்ர்ரிங்....' வழக்கம்போல பள்ளிக்கூடம் முடிஞ்சதுக்கான கடைசி மணியடிச்சதும்,'ஹே...' என்ற கூப்பாடோடு வகுப்பறைக்கூண்டிலிருந்து விடுபட்ட சீருடைப்பட்டாம்பூச்சிகள் பறந்து வந்தன. சிலபேரைக்கூட்டிச்செல்ல அம்மாக்கள், தாத்தாக்கள், பாட்டிகள் வந்திருந்தாங்க. இன்னும் சிலபேர் இரண்டு,மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்காக காத்திருந்தாங்க.

பெரிய சைஸ் நான்கு சக்கரவாகனம்.. அதாங்க ஸ்கூல் பஸ்ஸில் ஏறி உக்காந்த குழந்தைகள், வகுப்பறையில் பாடம் நடத்தும்போது குடிக்க அனுமதிக்கப்படாமல் மீந்துபோன தண்ணீரை தாகமெடுத்த தொண்டையில் சரித்துக்கொண்டனர். அப்படியும் தண்ணீர் மீதமிருந்தது அவங்களுக்கு விளையாட்டுப்பொருளாவதற்காக.

'ச்சளப்....' ஒருத்தனின் உடையை நனைத்த புண்ணியத்தை கொட்டிக்கொண்டுவிட்டு சரேல்ன்னு புத்தகமூட்டையை சரணடைஞ்சது  ஒருத்தனின் தண்ணீர் பாட்டில். கோபப்படுறதுக்கு பதிலா, சிரிச்சுக்கிட்டே அவனுக்கு அபிசேகம் செய்தான் ஏற்கனவே நனைஞ்சவன்.

'பஸ்ஸுக்குள்ள தண்ணீரை சிந்தாதீங்கடா..' பசங்களுக்கும்,டிரைவருக்கும் துணையாக வரும் பெரியண்ணனின் குரல்,.. கிளம்புவதற்கு அடையாளமாக டிரைவர் கொடுத்த ஹாரனின் ஒலியோடு தேய்ஞ்சு மறைஞ்சது. பஸ்ஸின் ஜன்னலுக்கு வெளியே தலைகீழாக கவிழ்க்கப்பட்ட பாட்டிலிலிருந்து அருவியெனக்கிளம்பிய தண்ணீர், எதிர்காத்தால சிதறி,... பக்கத்துல வாகனங்கள்ல வந்துக்கிட்டிருந்தவங்க மேல பூஞ்சாரலைப்பொழிஞ்சதை ரசிச்சான் பாட்டிலுக்கு சொந்தக்காரன்... அவங்க திட்டுறதையும் பொருட்படுத்தாம..

கொளுத்துற கோடையில மக்களும்,மாக்களும்,மரஞ்செடி கொடிகளும் தண்ணீர் கிடைக்காம அவஸ்தைப்படறப்ப இப்படி தன் கண் முன்னால் தண்ணீர் வீணாவதை சகிக்காத,.. அதே பள்ளியைச்சேர்ந்த 'கிமயா' என்ற சிறுமிக்கு மட்டும்.. 'ஏதாவது செய்யணும் பாஸ்..'ன்னு தோணியது. பள்ளிக்கூட நிர்வாகத்தோட ஒத்துழைப்போட, வாசல்லயே ஒரு பிளாஸ்டிக் தொட்டிய வெச்சு, பசங்களை மிச்சம்மீதி இருக்கற தண்ணீரை அதுல கொட்டும்படி கேட்டுக்கிட்டா.. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் பள்ளிக்கூட வளாகத்துல இருக்கற தாவரங்களுக்கு ஊற்றப்பட்டது. இதனால், பள்ளிக்கூடத்துல இருக்கற தண்ணீர்த்தொட்டியில் நிறைய தண்ணீர் மிச்சப்பட்டது... சிறுதுளி பெருவெள்ளமென....

2. பாய்ந்தோடி வந்த லோக்கல் ரயில் நிக்கறதுக்கு முன்னாடியே, அடிச்சுப்பிடிச்சு ஏறின இரண்டு கல்லூரி மாணவிகளை எரிப்பது போல் பார்த்தார், ஏற்கனவே அங்கே நின்னுக்கிட்டிருந்த பெண்மணி ஒருவர். ஏறும்போது அவங்க காலை லேசா மிதிச்சுட்டாங்களாம். அதான் அம்மணிக்கு கோவம்.. 'அதான் மாத்திமாத்தி ஸாரி சொல்லிட்டோமில்ல.. இன்னும் எத்தன தடவைதான் ஸாரி கேக்குறது. லோக்கல்ல இப்படித்தான் கூட்டமிருக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா?.. இடிபடாம வரணும்ன்னா,. உங்களுக்குன்னு ஸ்பெஷல் ரயில் விடச்சொல்லுங்க.." மாணவியொருத்தி பொரிஞ்சதும்தான் அம்மணியின் பார்வைக்கனல் குறைஞ்சது... ஆனா குறையலை.

பக்கத்துல இருந்தவங்களோட பார்வைகளெல்லாம், 'இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுமையே இல்லை.. மரியாதை தெரியலை'ன்னு சொல்றமாதிரியே இருந்தது. அப்பப்பார்த்து,...'டமுக்கு.. டம்.. டமுக்கு.. டம்..'ன்னு ஒரு ஏனோதானோங்கற ஒரு மேளச்சத்தம். அஞ்சாறு வயசிருக்கும் ரெண்டு குழந்தைங்க... பையனும் பொண்ணுமா. ரெண்டுத்துக்கும் ஒண்ணு இல்லைன்னா.. ஒண்ணரை வயசு வித்தியாசமிருந்தாலே அதிகம்.

ரயில்ல வாசக்கதவுக்கு நேரா இருக்கற அகலமான இடத்துல, பயணிகள் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்னுக்கிட்டிருந்த அந்த குறுகலான இடத்துல, பையன் வாகா குத்தவெச்சு உக்காந்துக்கிட்டு, மேளமடிக்க ஆரம்பிச்சான். பொண்ணு, ஒரு இரும்புக்கம்பி வளையத்தை வெச்சுக்கிட்டு, வித்தை காமிக்க ஆரம்பிச்சா.. சட்னு வளையத்தை பக்கத்துல வெச்சுட்டு, அப்படியே குட்டிக்கரணமடிச்சா பாருங்க.. எங்கே ரயிலுக்கு வெளியே விழுந்துடுவாளோன்னு ஒரு கணம் பதட்டமாயிடுச்சு.

எழுந்துவந்த சிறுமி தட்டேந்தி வசூலுக்கு வர, ரெண்டும், அஞ்சுமா காசுகள் கலகலத்துச்சு அந்தத்தட்டுல. டக்ன்னு அந்த கல்லூரி மாணவிகள், அந்தப்பசங்களை கிட்டே கூப்பிட்டு இருபது ரூபாய்களை எடுத்து நீட்டினாங்க. வாங்கிக்கிட்டு, மறுபடியும் அந்தப்பெண் குட்டிக்கரணமடிக்க தயாராக, அவ கையைப்பிடிச்சு,.. 'இங்கே பாரு.. இங்க இருக்கற எல்லோருடைய சார்பாவும்தான் அந்தக்காசைக்கொடுத்தேன். இந்தமாதிரி விபரீதமான வித்தையெல்லாம் செய்யாதே.. ஓடு..'ன்னாங்க. அடுத்த ஸ்டேஷன் வரவும் இறக்கியும் விட்டுட்டாங்க. இப்ப அவங்களை மத்த சக பயணிகள் பார்த்த பார்வையில் நிச்சயமா பெருமிதம் இருந்திச்சு. மனிதம் இன்னும் சாகலைப்பா..

'இந்தக்காலத்துப்பசங்கல்லாம் பெரியவங்களை எங்கேங்க மதிக்கறாங்க, மரியாதை கொடுக்கறாங்க ?..' அப்படீன்னு கேக்கறது எந்தக்காலத்துலயுமே வழக்கமாத்தான் இருக்குது. என்ன ஒண்ணு.. அந்தக்காலத்துல குழந்தைகளாயிருந்து இந்தக்காலத்து பெரியவங்களானவங்க கூட இதைச்சொல்லி புலம்பறதுதான் வேடிக்கை.

இந்தக்காலத்து குழந்தைகளுக்கு இன்னும் என்னென்ன தெரியாதுன்னு கேட்டா, ஒரு பெரிய லிஸ்டே வெச்சிருப்பாங்க. சமூக விழிப்புணர்வு குறைஞ்சுக்கிட்டு வருது, சுற்றுப்புறத்தை சுத்தமா வெச்சுக்கத்தெரியலை, மனிதாபிமான உணர்வும் குறைஞ்சுக்கிட்டே வருது, விருந்தோம்பல் போன்ற நல்ல பழக்கங்களும் தெரியலை. கத்துக்கொடுத்தாலும் கத்துக்கற பொறுமை இல்லை, அப்படி இப்படின்னு அடுக்கிடுவாங்க.

இந்தக்குற்றச்சாட்டுகளெல்லாம் ஓரளவு மட்டுமே உண்மையாயிருந்தாலும், அதுல பெத்தவங்களோட பங்களிப்பும் இல்லாமலில்லை. சின்ன வயசுலயே அவங்களுக்கு நல்ல பழக்கங்களை கத்துக்கொடுக்காம வளர்ந்தப்புறம் அதையெல்லாம் அவங்ககிட்ட எதிர்பார்க்குறோம். குழந்தைகளை குழந்தைகளா வளரவிடாம, நம்மோட கல்விச்சூழலும் அவங்களை அழுத்தி, குழந்தைப்பருவத்தை இனிமையா கழிக்கவிடாம செய்யுது. ஆனா, நம்ம தலைமுறையிலாவது இதையெல்லாம் உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கிறோம். அதன் பலனா வருங்காலத்தலைமுறையும் கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவருதுன்னே சொல்லலாம்.

இங்கே சொன்னது ஒருசில உதாரணங்கள்தான்.. இதேமாதிரி வெளிச்சத்துக்கு வராத இன்னும் எத்தனையோ வாலிப,வாலிபிகள் இருக்கக்கூடும். அந்த இளைய தலைமுறைக்கெல்லாம் ஒரு ராயல் சல்யூட்...

லொள்ளுடன் ஒரு அட்வைஸ் :-))).

அந்தக்காட்டுல சிங்கம்,புலி, சிறுத்தை முதலான மாமிச பட்சிணிகளும் மான் முயல், எலி, யானை போன்ற தாவரபட்சிணிகளும், ரெண்டையும் கலந்தடிச்சு சாப்டுற,.. வயித்துக்கு வஞ்சகம் செய்யாத பிராணிகளும், எக்கச்சக்கமா வசிச்சு வந்தன. மனிதர்களோட பார்வை இன்னும் படாத காடு.. ஆகவே எக்கச்சக்கமான மரங்கள் ரொம்பவே அடர்ந்து படர்ந்து சூரியக்கதிர்களே தரையில் விழாதபடிக்கு எக்கச்சக்க நிழல் கொடுத்து வந்தன. மிருகங்களும் வேட்டையாடப்படற பயமில்லாம சுதந்திரமா சுத்திக்கிட்டு வந்தன..

அங்க இருக்கற மிருகங்களோட ஒர்ரே கெட்ட பழக்கம் போதைப்பழக்கம்தான் திட திரவ வாயு நிலைகள்ல இருக்கற எல்லா பொருட்களையும் டேஸ்ட் செய்யாம விடறதில்லை. சாயங்காலமானா,..  பகலெல்லாம் வேட்டையாடின அலுப்புதீர, "வென்னீர் போட்டு வைய்யி.. இன்னிக்கி பிடிச்சுட்டு வந்ததை நெறைய வெண்ணெய் போட்டு பொன்முறுவலா வறுத்து வைய்யி"ன்னு மனைவியை நோக்கி உத்தரவு போட்டுட்டு,.. கடையை நோக்கி நடையைக்கட்டிடுவாங்க.. மனைவிகளெல்லாம் அவங்களைத்திருத்தறதுக்காக அறிவுரை சொல்லிச்சொல்லி அலுத்துப்போயிட்டாங்க.

(பய புள்ளைகளை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டாந்திருக்கேன்.. நீங்களாவது நல்லபுத்தி சொல்லுங்க :-))

ஒரு சாயங்காலம் நேரத்துல,.. கடைக்கு போயிட்டு தம்மடிச்சுட்டு வந்தது பத்தாதுன்னு பார்சல் வாங்கியாந்து, 'உற்சாகபானம்' அருந்திக்கிட்டிருந்த கரடிகிட்ட ஒரு எலி ஓடிவந்தது..

"அண்ணே.. அண்ணே.. வேணாம்ன்னே இந்தப்பழக்கம்.. இந்த போதைப்பழக்கத்தால உங்க குடும்பத்தை கவனிக்க மறந்துடறீங்களே.. இதெல்லாம் நல்லால்லை. இந்தக்காட்டைப்பாருங்க.. இயற்கை எவ்வளவு அழகா தாண்டவமாடுது.. இதையெல்லாம் பார்த்து ரசிக்காம குடியே கடி.. ச்சே!!.. கதின்னு கிடக்கறீங்களே. உங்களுக்கு ஏதாவதொண்ணுன்னா உங்க புள்ளைகுட்டிகளெல்லாம் நடு ரோட்டில் நிக்குமே.. அதுங்க பாவமில்லையா. அதுங்க முகத்துக்காகவாவது இந்தப்பழக்கத்தை விட்டுடுங்க"ன்னு கெஞ்சிக்கூத்தாடுச்சு.

எலியைக்கண்டதும், மொதல்ல எளக்காரமா நினைச்ச கரடிக்கு தன்னோட குட்டிகளைப்பத்தி எலி சொன்னதும், அதுங்க எதிர்காலத்தை நினைச்சு பயம் வந்துடுச்சு.. "ஆத்தாடீ.. எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா,.. என் குடும்பம் நடுக்காட்லேயில்ல நிக்கும்.. பரவால்லை.. பய மூளைக்காரந்தான்.. இந்த சின்னவயசுலயே இவ்ளோ ஞானமா!!!!.. இப்படி தன்மையா மென்மையா புரியவைச்சிருந்தா மனைவிங்க பேச்சை எப்பவோ கேட்டிருந்துருப்பேனே." ன்னு ஒரேயடியா ஆச்சரியப்பட்டுது.
(சத்தியம் பண்ற நேரத்துல இந்த எலித்தம்பி எங்க போனான்னு தெரியலியே.. )
"சரி எலித்தம்பி, நீ சொல்றதும் சரிதான்.." என்ற கரடி,.. 'நாளை முதல் குடிக்கமாட்டேன்.. சத்தியமடி தங்கம்..'என்று எலியின் தலையிலடிச்சு சத்தியம் செய்ய ஓரடி முன்னே வைக்க, தன் உயிரை காப்பாத்திக்க எலி ஈரடி பின்னே வைச்சது.. எலி மட்டும் அப்படியே நின்னுட்டிருந்துருந்தா இந்தக்கதை கிடைச்சுருக்குமா :-)))

"சரி வா.. யாம் பெற்ற அறுவையுரை பெறுக இவ்வனம்.. அப்படியே காலாற நடந்து இந்தக்காட்டையே போதையின் பிடியிலிருந்து விடுவிக்கலாம்" அப்டீன்னுட்டு எலியும் கரடியும் காட்டை சுத்திப்பார்க்க புறப்பட்டுதுங்க..

போற வழியில ஒரு குதிரை, ஏதோ ஒரு போதைப்பொருளை உறிஞ்ச படாதபாடு பட்டுட்டிருந்தது.. அதுகிட்டயும் இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து மூளைச்சலவை செய்ய, அதுவும் மனசு மாறி அவங்க கூட புறப்பட்டுச்சு. மூணுபேருமா காட்டுவலம் வர்றாங்க.. போறவழியில பார்க்க கிடைக்கிற மிருகங்களையெல்லாம் இப்படி ஒவ்வொண்ணா கூட்டு சேர்த்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்காங்க.
பாதையில ஒரு புலி, கையில் மதுக்கிண்ணத்தை ஏந்திக்கொண்டு பாட்டுப்பாடி ஆடிக்கிட்டிருந்தது. நெறைய பேரு தன்னோட வீட்டை நோக்கி வர்றதைப்பார்த்தது,.." என்ன என்ன..பிரச்சினை?.. எதுவானாலும் இப்ப தீர்ப்பு சொல்லமுடியாது"ன்னுது.

"ஏண்ணே.."ன்னு பரிதாபமா கேட்டன மிருகங்களெல்லாம். காட்டுராஜா சிங்கம்,.. காட்டு மந்திரியா புலியை நியமிச்சுட்டு வெளி நாட்டுக்கு சுற்றுப்பயணம் போனதுலேர்ந்து பதினெட்டுப்பட்டிக்கும் தீர்ப்பு சொல்ற உரிமை புலிகிட்டதான் இருந்துவந்தது. அதனாலயே அதுக்கு பவுசும் ஏறிப்போச்சு :-)


'ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கிட்ட,.. அரைக்காப்படி சொம்பும் நெளிஞ்சிருச்சே.. சொம்பு வாங்கியாரப்போயிருக்கற ஆளு வந்தப்புறம்தான் தீர்ப்பெல்லாம் சொல்லமுடியும். அதனால இப்ப வழக்கு என்னான்னு மட்டும் சொல்லிட்டுப்போங்க"ன்னுது புலி..

"வழக்கெல்லாம் ஒண்ணுமில்ல மதி மந்திரியாரே. எங்களையெல்லாம ஆளற பொறுப்புல இருக்கற அரசாங்கமே.. அதாவது மதி மந்திரியாரே மதுவருந்தலாமா..  அதுவும் எங்களை விட்டுட்டு தனியா அருந்தலாமா??!!.... போதைப்பொருட்களை உபயோகிக்கிறது தப்பில்லையா.. இதெல்லாம் எலித்தம்பி சொன்னதும்தான் எங்களுக்கு நல்லா புரிஞ்சது..  நீங்களும் புரிஞ்சுக்கோங்க. வேண்டாம்ண்ணே!!.. நாளைமுதல் மட்டுமல்ல இன்று முதலே அதை தூக்கியெறிங்க.. இந்தபிரச்சாரத்தைத்தான் நாங்க எல்லோரும் காடுமுழுக்க பரப்பிட்டு ஜமா சேர்த்துட்டு வரோம்"ன்னு யானை சொல்லிமுடிக்க.......'பளார்'ன்னு ஒரு அறைவிழுந்த சத்தம்.


யாரு அடிவாங்கினாங்கன்னு சுத்துமுத்தும் பார்த்தா,.. எலி கன்னத்தை தடவிவிட்டுக்கிட்டு நிக்குது.

"அட ஏண்ணே!!.. நல்ல விஷயத்தைத்தானே சொல்லிருக்கான். ஒரு சின்னப்பையனைப்போயி அடிச்சிட்டீங்களே"ன்னு அங்கலாய்த்தது கரடி.
புலி பதிலளிச்சது,.. "யாரு சின்னப்பையன்?.... இவனா!!!!.. நேத்தும் இப்படித்தான் எக்கச்சக்கமான போதையில.. இதே டயலாக்கை பேசிக்கிட்டு,... என்னைய பக்கத்து ஊரு காடுமுழுக்க மூணுமணி நேரம் அவங்கூட சுத்த விட்டுட்டான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" 

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)


டிஸ்கி: இதை நாலுவரி குறுந்தகவலா அனுப்பிவெச்ச என் பெண்ணின் தோழிக்கு நன்றி :-)))))))))))





Friday 5 August 2011

புதிதாய்ப்பிறந்தேன்...(வல்லமையில் வெளியானது)

வணக்கங்க.. எல்லாரும் நல்லாருக்கீங்களா??.. உங்களுக்கென்ன!! நல்லாத்தான் இருப்பீங்க.  நான் இப்ப இருக்கிற நிலையில, யாரைப்பாத்தாலும் என்னைவிட சந்தோஷமா இருக்காங்கன்னே தோணுதுங்க.

இவ்வளவு நேரம் எம்பேரைச்சொல்லலைல்லே.. பேருக்கென்னங்க. உங்களுக்கு எந்தப்பேரு புடிச்சிருக்கோ அந்தப்பேருல கூப்பிட்டுக்கோங்க. ஆனா, தயவு செய்து எம்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முடிவு சொல்லிடுங்க..

தைப்பூசம்.. முருகனுக்கு உகந்த நாள். காவடியெடுத்தும், அலகு குத்தியும், இதெல்லாம் செய்யாம பிரார்த்தனை மட்டுமே செய்யும் பக்தர்களுக்கும், இது எதுவுமே செய்யாம சும்மா..'முருகா..' அப்படீன்னு ஒரு தடவை மனசால் மட்டும் நினைச்சுக்கிறவங்களுக்கும், அருள் செய்யற கடவுளுக்கான திருநாள். ஆனா, அன்னிக்கு எல்லோருக்கும் அருள் பாலிச்சுட்டு, கடைசில என்னை மட்டும் மறந்துட்டாரே. அன்னிக்கி நான் கோயிலுக்கு போகாம இருந்திருக்க கூடாதா..  இதெல்லாம் நடந்திருந்தா.. இன்னிக்கி இப்படி புலம்பிட்டிருக்க மாட்டேன்.

இப்படி உக்காருங்க.. வெவரமா சொல்லுறேன். அன்னிக்கி, அம்மா.. தங்கை, அப்புறம் மத்த சொந்தக்காரங்க, பக்கத்துவீட்டுக்காரங்கன்னு ஒரு கூட்டமா கோயிலுக்கு போயிருந்தோம். தேங்காபழமெல்லாம் உடைச்சு சாமி கும்பிட்டுட்டு, வேப்பமர நெழல்ல உக்காந்து கட்டுச்சோத்தை சாப்பிட்டுட்டு, அம்மாவும், மத்தவங்களும் அக்கடான்னு அங்கியே உக்காந்துட்டாங்க. எங்கூருக்கு சாயந்திரம்தான் வண்டி.. அதுவரைக்கும் என்ன செய்யறது??.. உண்ட களைப்புலயும், வேப்பமர நெழல் தந்த சொகுசுலயும், அங்கியே ஆளாளுக்கு கட்டைய சாச்சுட்டாங்க.

எவ்வளவு நேரம்தான் அங்கியே உக்காந்து, போறவர்ற ஆளுகள பாத்துட்டு இருக்கிறது.. சும்மா.. காலாற நடந்துட்டு வரலாமேன்னு எந்திரிச்சிப்போனேன். திருவிழான்னா, சந்தையும் கூடணும்கறது வழக்கம். வளையலு, பாத்திரங்கள், முட்டாயி, அப்புறம் திடீர் புடவைக்கடைகள்ன்னு ஒவ்வொண்ணா பாத்துட்டே நடந்தவன், ஒரு பொரிகடலை பாக்கெட்டை வாங்கி கொறிச்சிக்கிட்டே.. அப்படியே தெப்பக்குளத்துப்பக்கம் வந்தேன். திருவிழா நடக்கறதால குளம் நெறய தண்ணி திமுதிமுன்னு கெடக்குது.. செலபேரு துவைச்சுக்குளிச்சிட்டு இருக்காங்க. வெயிலா இருந்தாலும், தண்ணி நெறஞ்சு கெடக்கிறதால குளுந்து கெடக்குது. அப்படியே படிக்கட்டுல உக்காந்துக்கிட்டு, பொரிகடலையை ஒருவாய் தின்னுக்கிட்டும், ஒருகை.. மீன்களுக்கு போட்டுக்கிட்டும், வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான், எனக்கு பக்கத்துல படிக்கட்டுல சுருட்டி வெச்சிருந்த துணிகளும், அதுக்கு மேல அலட்சியமா வெச்சிருந்த மணிபர்சும் கண்ணுல பட்டது. என்னது!!.. இப்படி பொறுப்பில்லாம வெச்சுட்டு போயிருக்காரேன்னு நெனச்சிக்கிட்டேன். அழகான மெரூன் கலர்ல, உப்பிப்போய் இருந்த பர்சை விட்டு கண்ணை எடுக்கமுடியலை. யாரும் பார்க்கலைன்னு நோட்டம் விட்டுட்டு, சட்ன்னு அதை எடுத்து என்னோட பாக்கெட்ல வெச்சுக்கிட்டு அங்கேருந்து வேகமா வந்துட்டேன்.

தேர்மூட்டுக்கு கிட்ட வரவும், எதிர்க்க அம்மாவும் மத்தவங்களும் வந்துக்கிட்டிருந்தாங்க.. 'உன்னை எங்கேல்லாம் தேடுறது.. சொல்லாம கொள்ளாம எங்க போன??..'ன்னு அம்மா சத்தம்போட ஆரம்பிச்சாங்க. 'ஷ்..சத்தம் போடாத.. இங்க பாரு'ன்னு பர்சை காமிச்சேன். 'அடியாத்தே... எல்லாம் நூறு ரூவா தாளால்லே இருக்கு.. ஏதுடா இது?'ன்னாங்க அம்மா. 'கீழ கெடந்துச்சு கண்டெடுத்தேன்'னு ஒரு பொய்யை சொல்லிட்டேன். எனக்கு புத்திசொல்றதவிட்டுட்டு.. கொடுக்கிற தெய்வம் பர்சோட கொடுத்திருச்சுன்னு சந்தோஷப்படறாங்க அம்மா.

பகல்ல பக்கம் பார்த்து பேசுன்னு சொல்லுவாங்க. நான் பார்த்துப்பேசியிருக்கணும்..  ஆனா, பார்க்கலை..  அதனால, பக்கத்துல நின்னுட்டு பேசிட்டிருந்த ஆட்கள்ல ஒரு ஜோடி கண்கள் எங்களை பாத்திட்டுது. அதையும் நான் கவனிக்கல. ரூவா கெடைச்ச சந்தோஷத்துல, உண்டியல்ல காணிக்கையா பத்து ரூபா போட்டுட்டு, திருவிழாக்கடைக்கு போயி, தங்கச்சி ரொம்ப நாளா ஆசைப்பட்ட செருப்பை வாங்கிக்கொடுத்தேன். பாவம்.. எத்தனை நாள்தான் வெறுங்காலோட அது பள்ளிக்கொடத்துக்கு போவும்?.. கடைக்காரருக்கு ரூவாயை கொடுக்கவும், டக்குன்னு ஒரு கை இரும்பு மாதிரி எங்கையை பிடிச்சிக்கிடுச்சு. திரும்பி பாத்தேன்.. நடுங்கிட்டேன். நாலஞ்சுபேரு, ஒரு போலீசோட நிக்கிறாங்க.

'இந்தப்பயலத்தான் நீ சொன்னியா..'ன்னு ஒரு ஆளு கேக்கவும், 'ஆமா..'ங்குது ஒரு சின்னப்பொண்ணு. அட..!! இத நான் தேர்மூட்டுக்கு கிட்ட ஆளுககூட பாத்தேனே.

'இது உங்க பர்சுதானான்னு பாருங்க..'

'மெரூன் கலர்!!...என்னோடதுதான்..'ன்னு சொல்லிக்கிட்டே வெள்ளையும் சொள்ளையுமாட்டு ஒரு ஆளு முன்னால வந்தாரு. ' உங்க பர்சுதான்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்??' ன்னு போலீசு கேக்கவும், 'உள்ளே ட்ரெயினுக்கான மந்த்லி பாஸும்,அடையாள அட்டையும் இருக்கும். அதுல என்னோட போட்டோவும் இருக்கும். பாத்துக்கிடுங்க..'ன்னு வெறைப்பா பதிலு வந்தது. சரி பாத்துட்டு, போலீசு என்னைத்திரும்பி பாத்தாரு. எனக்கா.. கண்ணீரு முட்டிக்கிட்டு விழ தயாரா இருக்குது. 'நடலே.. ஸ்டேஷனுக்கு..' ன்னு கையைப்பிடிச்சி இழுக்கவும், இதெல்லாம் பாத்து ஒண்ணும் புரியாம முழிச்சிட்டிருந்த அம்மா அலற ஆரம்பிச்சிட்டாங்க.

'ஐயா.. எம்புள்ள திருடனில்லைய்யா.. கீழ கெடந்தததான் எடுத்தாந்தான்.. ஒரு சின்னப்புள்ள சொல்லைக்கேட்டு, எம்புள்ளய ஒண்ணும் செஞ்சிடாதீங்க' ன்னு கெஞ்சுறாங்க.

'எம்மா.. கீழ கெடந்தத கண்டெடுத்தாலும், உரியவங்ககிட்ட சேர்க்கணும்கற புத்தி இல்லையா உங்களுக்கு?.. கொளத்தங்கரையில துணிகளுக்கு மேல வெச்சிருந்துருக்காரு. குளிச்சிட்டு வந்தவரு பர்சை காணோம்ன்னு வழி நெடுக புலம்பிக்கிட்டே தேடியிருக்காரு. இவரு கூட வந்த ஆட்கள்கிட்ட சொல்லும்போதுதான், அவங்க கூட இருந்த இந்தப்பொண்ணுக்கு,  தேர்மூட்டுக்கிட்ட உங்கமகன் உங்ககிட்ட காமிச்ச பர்சு, அவங்க சொல்ற அடையாளத்துல இருந்தது ஞாபகம் வந்திருக்கு. கீழ கெடந்துச்சுன்னு உங்க மகன் சொன்னதையும் அந்த பொண்ணு கவனிச்சிருக்கு. அதான், ஒரு சந்தேகத்துல வந்து பார்த்தா.., அவனே அம்புட்டுக்கிட்டான். துணிகளுக்கு மேல வெச்சிருந்தது கால்முளைச்சா வீதிக்கு வந்திருக்கும்?.. ரெண்டு தட்டு தட்டினாத்தான் இனிமே இப்படி செய்யமாட்டான்' னு சொல்ல, அம்மா அழுதுக்கிட்டே கெஞ்ச.. அதுக்கு மேல அம்மாவ பாக்கமுடியாம கண்ணீரோட தலைய திருப்பிக்கிட்டேன்.

பர்சை பறிகொடுத்தவர் என்ன நெனச்சாரோ..' பரவால்ல சார்.. சின்னப்பையந்தானே!! விட்டுடுங்க. நான் கேசை வாபஸ் வாங்கிக்கிறேன்'னு பெரிய மனசோட சொல்லவும் ஒரு சின்ன வாக்குவாதத்துக்கு அப்புறம் எல்லோரும் போயிட்டாங்க. அந்தப்பொண்ணு என்ன திரும்பி பாத்துக்கிட்டே போச்சு. அம்மாவுக்குத்தான் ஆறவேயில்லை.. எம்மேல வீண்பழி போட்டதுக்கு, வழி நெடுக அந்தப்புள்ளைய கரிச்சுக்கொட்டிட்டே வந்தாங்க. கொஞ்ச நாளைக்கு எனக்கு உறுத்திக்கிட்டே இருந்திச்சு.. அப்புறம் மெல்லமெல்ல மறந்தே போச்சு.

நான் மறந்தாலும், முருகன் மறக்கலை பாருங்க. இப்ப நான் பத்தாங்கிளாஸ் போகப்போறேன். நல்லா மேல்படிப்பெல்லாம் படிச்சு பாஸாகி, நல்ல வேலைக்குபோயி அப்பா,அம்மாவை ஒக்காரவெச்சு சாப்பாடு போடணும்ன்னு மனசுல ஒரு வெறி. வயக்காட்டு வேலை, கூலிவேலைன்னு அவங்களும் எவ்வளவுதான் கஷ்டப்படுவாங்க. மொதல் நாள் பள்ளிக்கோடத்துக்கு போனவனுக்கு, நாலாவது வரிசையில ஒக்காந்திருந்த அந்தப்பொண்ணை, எங்கியோ பார்த்தமாதிரி தோணிக்கிட்டே இருந்திச்சு. மறுபடி பார்க்க பயமா இருந்திச்சி.. இது கிராமம்..பொண்ணுங்க கிட்ட பேசறதெங்கே.. பார்த்தாலே தோலை உரிச்சுடுவாங்க.

பள்ளிக்கோடம் விட்டு வெளியே வந்தப்ப, அந்தப்பொண்ணே எங்கிட்ட வந்து, ' உன்னை எங்கியோ பார்த்திருக்கேனே..'ன்னு ஆரம்பிச்சு என் முகத்தை கூர்ந்து பார்த்தவ,..' அன்னிக்கி, நீதானே கோயில்ல அந்த பர்சை...'ன்னு இழுத்தா பாருங்க,  எனக்கு 'குப்'புன்னு வேர்த்துடுச்சு. பதில் சொல்லாம விறுவிறுன்னு ஓடியாந்துட்டேன். இவ எப்படி இங்கே வந்தா??.. ராத்திரி முழுக்க ஒரே சிந்தனை. விடிஞ்சு, பள்ளிக்கோடத்துக்கு போயி, 'திருடன்'ன்னு ஒரு முத்திரையோட அந்தப்பொண்ணோட மொகத்துல முழிக்க வெக்கமாயிருக்கு. மத்த பசங்ககிட்ட சொல்லிட்டா??.. அவ்வளவுதான். இந்த ராத்திரி விடியாமலேயே இருந்துட்டா எவ்வளவு நல்லது..

 படிக்கலைன்னா, நான் ஆசைப்பட்டமாதிரி எங்க வீட்டு வறுமையை விரட்டவும்முடியாது. கல்லோடயும், முள்ளோடயும் எங்க அப்பா கஷ்டப்படறத பார்க்கப்பார்க்க எனக்கு ரத்தக்கண்ணீரே வருது. இந்த பள்ளிக்கோடத்த விட்டு வேற ஊரு பள்ளிக்கொடம், இல்லைன்னா வேலைக்கின்னு எங்கியாச்சும் போயி சேரலாம்ன்னா, என்னைய ரொம்ப நம்பிக்கிட்டிருக்கற அப்பாட்ட என்னன்னு சாக்கு சொல்றது!!. அவரு மனசொடிஞ்சு போகமாட்டாரா??..  எனக்கு ஒண்ணுமே தோணமாட்டேங்குது.

மறுநாள் பள்ளிக்கொடத்துக்கு போக மனசில்லாம, வீட்ல சுருண்டு கெடந்தேன். யாரோ கூப்பிடுற சத்தம்... வெளியெ வந்து எட்டிப்பார்த்தா,... 'ஆத்தீ!!.. அந்தப்பொண்ணு'. விருட்ன்னு வீட்டுக்குள்ள திரும்புன என்னை ஓடிவந்து வழிமறிச்சா..

"எதுக்கு என்னிய கண்டு பயப்படறே?.. நான் என்ன சிங்கமா?.. புலியா?.."ன்னு கேட்டா.

"அதுக்கும் மேல.. "ன்னு தலையக்குனிஞ்சுக்கிட்டு முணுமுணுத்தேன்.

"ஏதோ அறியாத வயசுல தெரியாம செஞ்ச தப்பை, இன்னும் ஞாபகம் வெச்சுக்கிட்டு 'நீதானே அது'ன்னு என்னியப்பார்த்து கேட்டா அவமானத்துக்கு பயப்படமாட்டாங்களா"ன்னேன்.

"உன் கூட்டாளிகள் கிட்ட சொல்லிடுவேன்னு பயமா"ன்னு கேட்டா குறும்போட..

ஆமான்னு சொல்லவும் தயக்கமாருக்கு.. இல்லைன்னு சொல்லவும் மனசில்லை.. ரெண்டும் கலந்தமாதிரி தலையை ஆட்டிவெச்சேன்.

"பயப்படாத.. நேத்து என்னிய பார்த்ததுலேர்ந்து, இந்தப்பயம்தான் உன்னைய ஆட்டிவெச்சிருக்கும்ன்னு நல்லாவே புரியுது.. நேத்துமுழுக்க நீ பட்ட மனவேதனையையே உனக்கான தண்டனையா நெனைச்சிக்கோ. படிப்பையும் எதிர்காலத்தையும் நாசமாக்கிக்காம, எல்லாத்தையும் மறந்துட்டு இப்ப பள்ளிக்கொடம் பொறப்படு.. நான் யாருகிட்டயும் ஒருவார்த்தையும் சொல்லவே மாட்டேன்.. இது சத்தியம். போதுமா?.."

வெய்யக்காலத்துல குளுமையா எளநி குடிச்சமாதிரி, புதுசாப்பிறந்தமாதிரி.. மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கி அப்பாடான்னு இருந்தது எனக்கு, அந்த பதிலைக்கேட்டதும் .. ஒடனே வீட்டுக்குள்ள ஓடினேன்.. பள்ளிக்கொடப்பையை எடுத்துட்டு வர்றதுக்கு..

டிஸ்கி: இந்தக்கதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி..




Thursday 4 August 2011

நமக்கே நமக்காக..

உடம்போட எடையைக்குறைச்சு ஒரு ஸ்லிம்ரனா ஆகணும்கறதும், ஹீரோக்கள் மாதிரி சிக்ஸ்பேக் வைக்கணும்கறதும் இந்தக்கால இளவட்டங்களோட ஆயுட்கால கனவு. அதனால, கோடை காலத்துல காலை நேரங்கள்ல பார்த்தாப்போதும்.. வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் போறதும் பக்கத்துல இருக்கற பூங்காக்கள்ல போயி, செட்டு சேர்த்துக்கிட்டு யோகா செய்யறதும்.. வீட்ல, ஜிம்முலன்னு உடற்பயிற்சி செய்யறதும்ன்னு அடடா!!!!!... திமிலோகப்படும்.

 கடந்துபோன மழை மற்றும் குளிர்காலத்துல, வெளியே போகப்பயந்துக்கிட்டு போர்வையை இன்னும் நல்லா இழுத்து மூடிக்கிட்டு உறங்கியும், ஒரே இடத்துல உக்காந்து சாப்பிட்டும் சேர்த்த உடல்பருமனை, வெய்யில்காலத்துல கரைக்கிறேன் பேர்வழின்னு சிலபேர் உடம்பைப்போட்டு படாதபாடு படுத்திட்டிருப்பாங்க.

‘எப்படியாவது குறைஞ்சது பத்து கிலோவாவது குறைச்சே ஆகணும்’கறது அவங்களோட கனவு லட்சியமா இருக்கும். லட்சியத்தை கைப்பிடிக்கப்போற வேளையில கோடை முடிஞ்சு மழைக்காலம் வந்து தொலைச்சுடும். ‘இந்த மழையில் வாக்கிங் போவாங்களா?.. சூடா பஜ்ஜி சாப்பிட்டா நல்லாருக்குமே.. பக்கோடா சாப்பிட்டா நல்லாருக்குமே’ன்னு முழ நீள லிஸ்டில் இருக்கற பலகாரங்களை வயித்துக்குள் ஏற்றுமதிசெய்வாங்க

விளைவு!!.. இன்னும் உடம்பு பூரிச்சுப்போகும். 'அதெல்லாம் எங்க குடும்ப வாகே அப்படித்தான்' அப்படீன்னு ஒரு முத்தாய்ப்போட எடைகுறைக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு,.. அளவு சின்னதாய்ப்போன அழகான ஆடைகள், ஒரு பெருமூச்சோடு தானமளிக்கப்பட்டுவிடும்.

இன்னும் சிலபேர், வீட்ல கல்யாணம், அல்லது இன்னபிற விசேஷங்கள் வருதுன்னா, அன்னிக்கு அழகா தெரியணும்கறதுக்காக அதுக்கு முன்னாடியே எடையைக்குறைக்கறேன் பேர்வழின்னு பரண்ல கிடக்கற ஷூக்கள், ட்ராக் சூட்டுகளை கரப்பான்கள்கூட்டத்து நடுவுலேர்ந்து தேடிக்கண்டுபிடிச்சு முறையா பயிற்சி செய்ய ஆரம்பிப்பாங்க. என் தோழி இரண்டாவது குழந்தைக்கு தாயாராகுமுன், பத்துகிலோ எடையைக்குறைச்சு தயாராகிவிட்டிருந்தாங்க. அதன்பலனா, பிரசவத்துக்கப்புறம் பெண்களுக்கு வழக்கமா கூடிப்போகும் எடைப்பிரச்சினையிலேர்ந்து தப்பிச்சாங்க..

ஆனா, இப்படியெல்லாம் குறைக்கப்படற எடை நிரந்தரமா ஒரே நிலையில் இருக்குதான்னு கேட்டா,.. அதான் கிடையாது. குறிக்கோள்கள் நிறைவேறினதும் எடைகுறைப்பு லட்சியமும் காத்துல பறந்துடும்..“எங்க பரம்பரையிலேயே எல்லோருக்கும் பூசினமாதிரி உடம்புங்க.. அப்படியே அவங்க தாத்தாவாட்டம்,.. பாட்டியாட்டம்..” என்ற சால்ஜாப்புகள் சொல்லப்படும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்காக குறைக்கப்பட்ட எடை அதே வேகத்துல மறுபடியும் கூடுதலாயிடும்ன்னு பயமுறுத்தறாங்க J

இதுக்கெல்லாம் நாற்காலியிலேயே குடியிருக்கற நம்முடைய வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணம். அசையாம ஒரே இடத்துல உக்காந்திக்கிட்டிருந்தா சாப்பாடு சரியா செரிக்காது.. செரிச்சதும் கொழுப்பு செல்களா மாத்தப்பட்டு உடம்புல சேமிக்கப்படும். விளைவை தன்னைத்தானே ஆளுயுயர கண்ணாடியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க J

சாதாரண மக்களுக்கே இம்புட்டு பாடு இருந்தா, நம்மமேல வீசப்படற அர்ச்சனைப்பூக்களையெல்லாம் தாங்கிக்கிட்டு, நாற்காலிய எப்பவுமே விட்டுக்கொடுக்காம, தமிழுக்கு சேவைசெய்யறதுக்காக கணினி முன்னாடி உக்காந்துக்கிட்டு, பொட்டி தட்டுற நமக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்.அதையெல்லாம் தாண்டி நம்ம உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் கட்டுப்பாட்டுல வெச்சிக்க,.. நம்ம டாக்குட்டர் ’கெட்வெல்’ சொல்ற அறிவுரையையும் கவனிக்கலாம். 

1. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள்:
இடுகை எழுதறதுக்கு முன்னாடி, என்ன விஷயத்தைப்பத்தி எழுத’லாம்’. என்னென்ன பாயிண்டுகள் சேர்க்க’லாம்’. மத்தவங்க கவனத்தை ஈர்க்கறமாதிரி என்ன தலைப்பு வைக்க’லாம்’ இப்படி எல்லா ‘லாம்’களையும் எப்படி பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுக்கறோமோ… அதேமாதிரிதான் சாப்பாட்டையும் தேர்ந்தெடுக்கணும்,..  பொரிச்செடுத்த பஜ்ஜி, வடை, போண்டாக்களை மத்தவங்க இடுகைகள்ல போயி எடுக்கறதோட நிறுத்திக்கணும்.. நெஜத்துல அவிச்ச, சுட்ட, வாட்டிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கறது உடம்புக்கு நல்லது.

2. சாப்பாட்டை நிதானமா மென்னு சாப்பிடணும்.
மின்சாரம் கட்டாகுறதுக்குள்ளாற இடுகையை எழுதிமுடிக்கணுமே… மத்த பதிவுகளையும் படிச்சு பின்னூட்டமிடணுமே.. அதுக்குள்ள சாப்பிட்டுடலாம்ன்னு அவசர அவசரமா சாப்பிடக்கூடாது. பொதுவா நாம சாப்பிட ஆரம்பிச்ச பதினஞ்சாவது நிமிஷத்துலதான் ‘வயிறு நிறைஞ்சுடுச்சு’ன்னு நம்ம மூளை தகவல் அனுப்புமாம். அதனால அவசர அவசரமா சாப்பிடுறப்ப, எப்போதும் சாப்டுறதைவிட கொஞ்சம் கூடுதலாவே சாப்பிட்டுட வாய்ப்பிருக்குதாம். சாப்பாட்டுல பழங்கள் பச்சைக்காய்கறிகள் சேர்க்கப்பட்ட,.. நார்ச்சத்து நிரம்பிய ஆரோக்கியமான உணவை சாப்பிடறது நல்லது.
3 .தண்ணி குடிக்க மறந்துடாதீங்க
இது ரொம்ப முக்கியமானது.. சிலவிஷயங்களைப்பத்தி படிக்கிறப்ப (உதாரணமா என்னோட இந்த இடுகை J) ‘சரி.. சரி.. தண்ணியக்குடி’ன்னு நம்மை நாமே தேத்திக்கிறதுக்காக சொல்லிக்கிறதுண்டு. அந்தமாதிரி சமயங்களில் ஒருகப் தண்ணீரைக்குடியுங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் எட்டிலிருந்து பத்துகப் தண்ணியாவது குடிக்கிறது ரொம்ப நல்லது. இது உடம்பிலிருக்கிற நச்சுப்பொருட்களை வெளியேத்தவும், சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, சாப்பாட்டுல இருக்கற சத்துக்களை உடம்புமுழுக்க எடுத்துச்செல்லவும் உதவியாயிருக்கு. ஜூஸ்,இளநீர் இதுகளெல்லாம்கூட எடுத்துக்கலாம்..
4.காலையுணவை மறக்காதீங்க.
என்னிக்குமே காலைச்சாப்பாட்டை மறந்துடாம எடுத்துக்கறது நல்லது. இடுகையை காலைல பப்ளிஷ் கொடுத்துட்டு, பின்னூட்டம் வருதா.. வருதான்னு F5 பட்டனை தேய்ஞ்சுபோறவரைக்கும் அழுத்தி அழுத்தி, கண்ணு பூத்துப்போறவரைக்கும் கணினித்திரையை பார்த்துட்டே இருந்தா நிச்சயமா சாப்பிடமறந்துதான் போகும். அதைவிட புரோட்டீன் சத்துகள் நிரம்பிய சாப்பாடா எடுத்துக்கிட்டு அப்புறமா கணினிப்பக்கம் வந்தா, இன்னும் தெம்பா பின்னூட்டத்துக்கு காத்திருக்கலாம். அன்னிக்குப்பூரா எதிர்பார்த்த அளவுக்கு பின்னூட்டம் வரலைன்னாலும், சோர்வே வராது 
:-) இன்னும் தெம்பா பின்னூட்டங்களுக்காக காத்திருக்கலாம். ரெண்டு இட்லி.. ஒரு பக்கெட் சாம்பாரும் ஓகேதான். அதுக்கு மாறா பூரி,பராத்தா,பொங்கல்ன்னு சாப்பிட்டா கண்ணைச்சொக்கிட்டு வரும்.. அப்றம், லேப்டாப்பையே தலையணையாக்கி தூங்கிடுவீங்க… கவனமா இருங்க J

5.உணவை பகிர்ந்து உண்ணுங்க..
சிஸ்டத்துல வாசிச்சுட்டிருந்தத அப்படியே பாதியில விட்டுட்டு சாப்பிடவந்துட்டு, சாப்பிட சோம்பல்பட்டு நம்ம தட்டுல இருக்கறதை, வாழ்க்கைத்துணையோட தட்டுலயோ… இல்ல பசங்களோட தட்டுலயோ, அவங்க பார்க்காத நேரத்துல நைசா வெச்சுடறதுதான் பகிர்ந்துண்ணுதல்ன்னு,.. இதுக்கு அர்த்தம் சொல்லமாட்டேன் J

ஒரே நேரத்துல பெரிய பாத்திகட்டி வளைச்சுக்கட்டாம அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சின்ன்ன்ன பாத்தி கட்டுனாப்போதும்.. இந்த வழிமுறை அடிக்கடி பசிஎடுப்பதை தடுக்குது.. அதுக்காக ஒவ்வொரு வேளையும் ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டுட்டு வெயிட்டே குறையமாட்டேங்குதேன்னு புலம்புனா, கம்பேனி பொறுப்பாகாது J
6.நொறுக்குத்தீனியை தவிருங்க..
சிலபேருக்கு சினிமா பார்க்கறச்சே, டிவி பார்க்கறப்ப, இப்ப லேட்டஸ்டா பொட்டிதட்டுறப்ப நொறுக்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கும். மொதல்ல அந்தப்பழக்கத்தை டிலீட் செய்யுங்க. இல்லைன்னா, விஷயத்தோட சுவாரஸ்யத்துல எவ்ளோ சாப்பிட்டோம்ன்னே தெரியாது J. அதுவுமில்லாம அதோட துணுக்குகள் கீபோர்டுல விழுந்து வைச்சா எறும்புத்தொல்லையும் வரும்.. அதோட, ‘நாராயணா.. இந்த எறும்புத்தொல்லை தாங்கலைடா’ன்னு டயலாக்கை மாத்தி சொல்லிக்கலாம்.

7.ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை சமாளியுங்க.
மன அழுத்தம் கூடுதலா இருக்கச்சேதான், ஒண்ணு எக்கச்சக்கமா சாப்ட்டு குண்டாயிருவாங்க. இல்லைன்னா சாப்பிடாம இருந்து நரம்பாட்டம் ஒல்லியாகிடுவாங்க. ரெண்டுமே தப்பு.. அதனால மன அழுத்தத்தை அண்டவிடாதீங்க. யோகா, ஏரோபிக்ஸ் மாதிரியான பயிற்சிகளால மன அழுத்தத்தை விரட்டிடலாம். இந்த மன அழுத்தங்களுக்கான காரணங்கள் ஆளுக்காள் வித்தியாசப்படும். உதாரணமா சொல்லணும்ன்னா,.. ஒரு இடுகை ஃப்ளாப் ஆனா என்ன!!.. ‘இதுவும் கடந்துபோகும்’ன்னுட்டு அடுத்த இடுகையை இன்னும் நல்லா எழுதி, பாப்புலராக்குற வழியைப்பார்க்கலாமே :-)))
8.உடற்பயிற்சி செய்யுங்க..
உடற்பயிற்சிங்கறதையே மறந்து, கணினி முன்னாடியே தவம் கிடக்கறதால என்னாகும்ன்னு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை J. அதனால, காமணி நேரத்துக்கொருக்கா எழுந்துபோயி நடந்துட்டு வருவது நலம். இந்த வாய்ப்பை ‘சரி..சரி.. தண்ணியக்குடி..’ திட்டத்துக்கு பயன்படுத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறவங்க ‘சிக்கனம் சின்னச்சாமி’ என்ற பட்டத்தை தமக்குத்தாமே வழங்கிக்கொள்ளலாம் J. அதேசமயத்தில் காற்றடைத்த குளிர்பானங்கள் டீ காபி இவற்றை தவிர்க்கவும். ‘ஐயோ.. டீ காபி இல்லைன்னா எனக்கு வேலையே ஓடாதே’ங்கறவங்க.. அதோட அளவைக்குறைச்சுக்கோங்க. அதுக்குப்பதிலா, எவ்ளோ வேண்ணாலும் நீர்மோர் குடிக்கலாமே..

இதுபோக ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்களுக்காவது வெளியே வாக்கிங் போயிட்டு வர்றது நல்லது. இந்த வாக்கிங் நேரம் விடியற்காலையா இருந்தா, ஃப்ரெஷ்ஷா காய்கறி வாங்கிட்டு வரது, வீட்டிலிருக்கும் செல்லப்பிராணியையும் வாக்கிங் கூட்டிட்டுப்போறதுன்னு செஞ்சா வீட்லயும் நல்லபேரு எடுக்கலாம்.

9.காலம் கழிந்து சாப்பிடவேண்டாம்
இது, நடுராத்திரியில.. டின்னரெல்லாம் முடிச்சு,.. எல்லோரும் தூங்கினப்புறமும் சிஸ்டத்துக்குள்ள தலையை விட்டுக்கிட்டு, எழுதவோ வாசிக்கவோ செய்யும் சாமக்கோழிகளுக்கானது...(நான் உட்பட :-)) ராத்திரி ரொம்ப நேரத்துக்கப்புறம் மறுபடியும் பசி எடுக்குதுன்னுட்டு பிஸ்கட்ஸ், டோஸ்ட்ன்னு வளைச்சா அது நல்லதில்லை. நேரம் கழிச்சு சாப்பிடற சாப்பாடு சீரணமாகாது.. உடம்புல வெயிட்டைத்தான் கூட்டும்.
10. சுவரோ, டிராயிங் போர்டோ இல்லை காகிதமோ.. ஏதாவது ஒண்ணு அடிப்படையா இருந்தாத்தான் சித்திரம் எழுதமுடியும். அதேமாதிரி, உடல் எடையை கட்டுக்குள்ள வைக்காட்டி இதயசம்பந்தமான நோய்களும் வர வாய்ப்பிருக்கு. ஒருத்தரோட எடை எவ்ளோ இருந்தா ஆரோக்கியமான நிலைன்னு நாமே கண்டுபிடிச்சிக்கலாம். 

உங்க உயரத்தை செ.மீட்டரில் அளந்துக்கோங்க. அதுலேர்ந்து 100-ஐக்கழிங்க. மீதி வருவதுதான் உங்க சரியான எடை. உதாரணத்துக்கு உங்க உயரம் 158 செ.மீ இருக்குதுன்னு வெச்சுப்போம். அப்படீன்னா உங்க எடை 58கிலோவா இருக்கணும். ஆனா, உங்க எடை அதுக்கும்மேல கூடுதலாயிருந்தா.. நீங்க உடற்பயிற்சி செய்யவேண்டிய நேரம் வந்துட்டுதுன்னு அர்த்தம். நல்லா பயிற்சி செஞ்சு தெம்பா இருந்தாத்தானே பதிவுகள்ல போயி கும்மியடிக்கமுடியும்.. :-)).. சரியா!!..


ரெடி.. ஸ்டார்ட் மூஜிக் :-)))
 


அவ்வ்வ்வ்..... அவன் ஏன் ஓடிப்போனான்???!!!...

வரவர இவனுங்க சாப்டுறதுக்கு கொடுக்கற இம்சை இருக்கே… சாப்பாட்டை வெச்சா சாப்பிடாம… சிந்தறதும் செதர்றதும், வாரியிறைக்கிறதும்ன்னு ஒரே அட்டகாசம். ஒருத்தனை ஒருத்தன் தொரத்தரதும், விரட்டிப்பிடிக்கிறதுமா சாப்பிடற பொழுதுகள்லதான் விளையாட்டும். இவனுங்களை நாம ஏதாச்சும் சொன்னா,.. அவ்ளோதான். ’குய்யோ..முறையோ..’ன்னு ஒரே கூப்பாடு. வடிவேலு சொன்னாப்ல, ‘ஒரே சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு’ன்னு தோணினாலும் அதானே உண்மையும் கூட J

‘இந்த அவனுங்க அவனுங்கன்னு அடிக்கடி சொல்றீங்களே!!… அவனுங்கல்லாம் யாருங்க!!..’ன்னு நீங்க கேக்குறது புரியுதுங்க.(டாக்டர் இஸ்டைலில் படிக்கவும். டாக்டர் யாருன்னு வலையுலத்துக்கு சொல்லத்தேவையில்லைன்னு நினைக்கிறேன்). சொல்றேன்…

எங்க வீட்டுக்கு மூணுபேர் எப்பவும் மத்தியானம் சாப்பிட வருவானுங்க.. மூணுபேர்ன்னா சொன்னேன்??.. மூணு வெரைட்டின்னு சொன்னா ரொம்ப பொருத்தமாருக்கும். ‘சாப்பாடு தா.. தா..’ங்கற பெரிய வாக்கியத்தை அவனுங்க பாஷையில சிம்பிளா ஒத்தைச்சொல்லுல, ’கா.. கா..’ன்னு சொல்லுவாங்க. இதத்தான், சுருங்கச்சொல்லி விளங்கவைக்கிறதுன்னு பெரியவங்க சொல்லுவாங்களோன்னு நானா விளங்கிக்கிட்டேன் :-)

அவனுங்க கேக்குறாங்களேன்னு நாம சட்னு சாப்பாட்டை கொண்டுபோயி வெச்சிடமுடியாது. ஒருத்தனுக்கு வெறுஞ்சாப்பாடு வேணும். ஒருத்தனுக்கு குழம்பு ஊத்திவேணும், இன்னொருத்தன் ரொம்ப விசேஷம்…. தண்ணியில போட்டு கழுவிட்டுத்தான் சாப்பிடுவான்.. சுத்த்த்தம்!!!!!!! (குழம்பு உட்பட கழுவிட்டுத்தான் சாப்டுவான்) ஆங்!.. மூணு வெரைட்டி வந்துடுச்சுல்லே J


அதுவும் நேரத்தோட வரமாட்டானுங்க.. மத்தியானம் மூணுலேர்ந்து மூணரைக்குள்ளதான் வருவானுங்க.. பங்க்சுவாலிட்டியாம்!!!.. சொல்றானுங்க J இதுனாலயே ஆரம்பத்துல இதுங்க வந்துடுச்சுன்னா, ‘அம்மா.. மூணரைக்காக்காங்க வந்துடுச்சூ’ன்னு பசங்க கொரல் குடுப்பாங்க. நானும் போயி சாப்பாட்டை வெச்சுட்டு வந்துடுவேன். ஒருத்தன் ஒழுங்கா சாப்டுட்டு போயிடுவான்.
ஒருத்தன் அதுக்கப்புறமும் சாப்பிடாம கத்திக்கிட்டிருக்கறதை அப்புறமாத்தான் கவனிச்சேன்.. ‘ஏன்?.. நல்லாத்தானே போயிட்டிருந்தது.. என்ன இப்ப..”ன்னு கேட்டதும்,.. அதுல ஒருத்தன் மட்டும், டபக்ன்னு எந்திரிச்சி, அதுங்க குடிக்கிறதுக்காக தண்ணி ஊத்திவெச்சிருந்த தட்டுல சாதத்தைப்போட்டுட்டு அப்றமா சாப்டறதை.. ‘சரி.. காரம் ஒத்துக்கலை போலிருக்குன்னு, மறுநாள் கொஞ்சமா குழம்பு ஊத்திவெச்சா அப்றமும் இதே கதைதான். ‘போடா..’ன்னுட்டு வெறுஞ்சோத்தை வெச்சேனா, இன்னொருத்தன் கபால்ன்னு பாய்ஞ்சுவந்து சோத்தை முழுங்க ஆரம்பிச்சுட்டான்.. ஆஹா!!.. இதுங்க என்னிய வெச்சு காமெடி பண்ணுதுங்களே…

அதுலேர்ந்து வெறுஞ்சோத்தைப்போட்டு, அதோட ஒருஓரத்துல குழம்பு ஊத்திவெச்சுட்டு... வேணுங்கறமாதிரி தின்னுக்கோன்னுட்டு வந்துடுவேன். அதுலேர்ந்து இவனுங்களுக்கு சோத்துக்காக்கா, தண்ணிக்காக்கா, கொழம்புக்காக்கான்னு அடையாள நாமகரணம் சூட்டப்பட்டது மறைக்கப்படாத வரலாற்று உண்மை :-) . இவனுங்க போனதும், மிச்சமீதியை எங்கூரு அதிகாரபூர்வமற்ற மாநிலப்பறவையான புறா, அப்றம் குருவியெல்லாம் வந்து காலிபண்ணும். தண்ணி குடிக்கிறதுல புறாம்மாவும்,அய்யாவும்தான் சமர்த்து.. தட்டுல இருக்கறதை மூச்சுக்கூட விடாம ‘சர்ர்ர்ர்ர்’ன்னு ஓரேயடியில குடிச்சுட்டுத்தான் நிமிருவாங்க.

இன்னிக்கி காலைல வழக்கம்போல, அஞ்சரைமணிக்கு கையில காப்பியோட பால்கனியில நின்னு, எதிர்ல தெரியிற மலைலேர்ந்து கொட்டிக்கிட்டிருக்கற அருவியை வேடிக்கை பார்த்துக்கிட்டே காப்பியை குடிச்சுமுடிச்சுட்டு,(நல்ல மழைபெஞ்சதுல திற்பரப்பு ரேஞ்சுக்கு அருவி கொட்டுது) வழக்கம்போல மை ஃபேவரிட், ‘ கணேஷாய தீமஹி..’யை கேக்கலாம்ன்னு சிஸ்டத்தை இயக்கிட்டு, காலைல டிபனுக்கு சாமையரிசி உப்புமா செய்யலாமா.. இல்லைன்னா, சேமியா உப்புமா செய்யலாமான்னு உலகமகா முடிவெடுக்கமுடியாம ஆழ்ந்த சிந்தனையில ஆழ்ந்திருந்ததை.., அரைஉறக்கம்ன்னு உலகவழக்குல சொல்றதையெல்லாம் நான் ஏத்துக்கமாட்டேம்ப்பா J (ஹை.. ஒர்ர்ர்ர்ரே வாக்கியமா எழுதிட்டேனே!!!.. வெரிகுட்)

அப்ப, பால்கனிலேர்ந்து ஒரே கூப்பாடு கேக்குது .. ‘இன்னும் சாப்பாடாகலை. பொறவு வா..’ன்னா கேக்க மாட்டேங்கான். நேத்திக்கு மிஞ்சிய சாதத்தை, ஆப்பத்துக்கு இன்னிக்கு அரைக்கிறப்ப சேர்த்து அரைக்க ஆகுமேன்னு ராத்திரியே தண்ணி ஊத்திவெச்சுட்டேன்.. பழையதைப்போயி போடமுடியுமா.. இவனுங்க சூடாவே சாப்டு பழகினவங்க... இப்ப என்ன செய்ய?.. 


பசிக்கு பாவமில்லைன்னுட்டு அந்த பழையதை கொஞ்சூண்டு பிழிஞ்சு வந்து போட்டேன்..”கா..கா..கா..’ ஒரே கத்தல். பழையது சாப்பிடமாட்டார் போலிருக்குன்னுட்டு ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டை பிச்சுப்போட்டேன்.. காலைல நீராகாரமோ, தயிர்விட்ட பழையதோ சாப்பிட்டா அல்சருக்கு நல்லதுன்னு தெரியாது போலிருக்கு. கண்டதையும் சாப்டறதால அல்சர் வராமயா இருக்கும்?.. ‘கா..கா..கா…’ இன்னும் சுருதி கூட்டி கத்துது. இது வழக்கமில்லியே… ஒருவேளை இவன் புதுசோ!!…

“காலைல அஞ்சரை மணிக்கு வந்து நின்னா,. இதான் கிடைக்கும். வேணும்ன்னா மத்தியானம் வா.. 'பிரியாணி' போடறேன்…’ன்னு சொன்னேன். அவ்ளோதான் ஓடியே போயிட்டான்…. என்னாச்சுன்னு தெரியலை. அப்றம் அந்த சாப்பாட்டையெல்லாம், வழக்கமான வாடிக்கையாளர்களான புறாவும்,குருவியும் வந்து காலிசெஞ்சாங்க.. ஆமா??... அந்தக்காக்கா ஏன் ஓடிப்போச்சு ??!!!!!!!......




Wednesday 3 August 2011

அறிதுயில்..(திண்ணையில் வெளியானது)



                                             

குழந்தைகளுக்கு அழகே குறும்புதானே.. முழிச்சுட்டு இருக்கற நேரங்கள்ல அதுங்க பண்ற அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா:-)) ஒவ்வொண்ணும் அந்த விஷயத்துல கோகுலத்து கிருஷ்ணர்கள்தான். அதுவே, தூங்கறச்ச, அடடா!!.. கொள்ளையழகு!!. 


இந்தக்குழந்தைதான் அவ்ளோ விஷமம் செய்யுதுன்னு சத்தியம் செஞ்சாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியொரு தேவதைமாதிரியான சாந்தமானதொரு முகதரிசனத்தோட இருக்கும். பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கும். தூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.


அதுங்க சேட்டைய தாங்கமுடியாம 'ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டியா'ன்னு அதுங்க கிட்ட பரிதாபமா மன்றாடுறதும் நாமதான். எப்பவாவது நம்ம மேல இரக்கப்பட்டு அதுங்க அமைதியா இருந்தா,  'இன்னிக்கு என்னாச்சு?.. புள்ள சுரத்தே இல்லாம இருக்குதே!!.. ஒடம்புக்கு ஏதாச்சும் இருக்குமோ' ன்னு பதறுவதும் நாமதான். 


நமக்கெல்லாம் பல்பு கொடுக்கறதுலயும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாய் நம்மை ஆடவைக்கிறதுலயும் கில்லாடிங்க இந்த வாண்டுகள். சாப்பிட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப வயசுகள்ல, ' இது வேணாம்,.. அது இருந்தாத்தான் சாப்பிடுவேன்.."ன்னு அடம் பிடிக்கும். அது கேக்குறதை செஞ்சு கொடுத்தா மூணாவதா இன்னொண்ணை கேட்டு பிடிவாதம் பிடிக்கும். நாமளும் புள்ளை சாப்பிட்டா சரின்னு அதுங்க எதைக்கேட்டாலும் மறுக்காம கொடுக்கறோம். 


ஒரு விதத்துல இது தப்புதான். கேட்டதையெல்லாம் கொடுத்து பழக்கிட்டு, அப்புறம் நாம கொடுக்கமுடியாத ஏதாவதொண்ணை அதுங்க கேக்கும்போது நம்மால தரமுடியலைன்னா அந்த ஏமாத்தத்தையும் அதுங்களால தாங்கிக்க முடியறதில்லை.. நாமளும் அதுக்கு பழக்கறதில்லை. அப்படி கேட்டு கிடைக்கலைன்னா அவ்ளோதான். பெரிய மனுஷர்கள் மாதிரி 'உம்'ன்னு உக்காந்திருப்பாங்க. எது கேட்டாலும் அவங்ககிட்டயிருந்து பதில்வராது.. கோவமா இருக்காங்களாம் :-)))))))) ரொம்ப அரும்பாடுபட்டுதான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். 


இதுல கோவிச்சுட்டு தூங்கறமாதிரி ஆக்டிங் கொடுக்கற அறுந்தவாலுகளும் உண்டு.. இங்கேயும் அப்படி ஒரு வாலோட ஆட்டத்தை வாசிச்சு ரசியுங்க :-)


ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்
இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலசையுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.




LinkWithin

Related Posts with Thumbnails