Monday 28 March 2016

நாஞ்சில் நாட்டு சமையல் - சக்கைப்புளிக்கறி

முக்கனிகளில் ஒன்றான பலா, கேரளத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் “சக்கை” என அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் தக்கலை எனும் ஊரை நெருங்கும்போதே வீட்டு முற்றங்களிலும் புழக்கடைகளிலும் பலா மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணக்கிடைக்க ஆரம்பித்து விடுகின்றன. சிறிய சாத்துக்குடி அளவிலான காய்களிலிருந்து பெரிய கால்பந்து அளவிலான பழங்கள் வரைக்கும் சுமந்து நிற்கும் பலாமரங்கள் நிற்கிறதெனில் அவ்வீட்டில் சாப்பாட்டுக்கஷ்டம் ஏற்படுவதேயில்லை. பலாவிலேயே விதவிதமான உணவுப்பண்டங்களை ஆக்கி உண்பர் மக்கள். பலா இலையை கிண்ணம் போல் செய்து அதில் மாவை ஊற்றி அவிக்கப்படும் இட்லிக்குத் தனிச்சுவையுண்டு. இலையைக் கரண்டி போல் குழித்துக்கொண்டு சூடான கஞ்சியை அள்ளி அருந்தப் பயன்படுத்துவதுமுண்டு. மூத்த பலாமரத்தின் தடியை அறுத்துப் பலகைகளாக்கி, வீட்டுக்கான கட்டில், தொட்டில் போன்ற மரச்சாமான்களைச் செய்து கொள்வது இம்மக்களின் வழக்கம். பிஞ்சுகள் முதல் பழங்கள் வரை வாரி வாரி வழங்கி அவ்வீட்டின் பசியைத் தணிக்கும் பலாமரங்கள் பிள்ளைக்கு ஒப்பாகவே கருதப்படுகின்றன. சக்கையின் அருமை பெருமைகளையும், அது சமைக்கப்படும் வகைமுறைகளையும் எம் மண்ணின் எழுத்தாளர் எழுதியிருப்பதை இங்கேயும் வாசிக்கலாம்.

காய் முதல் பழம் வரை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாகச் சமைக்கப்பட்டும், பக்குவப்படுத்தப்பட்டும் பயன்படுத்தப்பட்டாலும் முற்றிய காயின் சுளைகளையும் பலாக்கொட்டைகளையும் பயன்படுத்திச் செய்யப்படும் “சக்கைப்புளிக்கறி” பலாப்பருவம் முழுவதும் வாரத்துக்கொரு முறையாவது வீடுகளில் செய்யப்படுகிறது. “இண்ணைக்கு என்ன கொளம்பு வைக்கதுக்கு” என்ற தீராத குழப்பத்திலிருக்கும் தாய்மார்களின் சிக்கலைத்தீர்க்கும் பொருட்டுத் தேங்காய் மலிந்த தேசத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் புளிக்கறி. ஏகப்பட்ட தேங்காய் அரைத்த மசாலாவில் புளிக்கரைசலை ஊற்றி, காய்கறிகளைப்போட்டு நீர்க்க நீரூற்றிச் செய்தால் தீர்ந்தது சோலி. 
படைப்பாளிகள், சீனியவரைக்காய், மாங்காய், முருங்கைக்காய், வெள்ளரிக்காய், வெண்பூசணிக்காய் போன்றவற்றை தனியாகவோ அல்லது கூட்டணி சேர்த்தோ விதவிதமாக ஆக்கிப்படைத்துக்கொண்டே இருக்கலாம். தினமுமே புளிக்கறி வைத்தாலும் ஏனென்று கேட்பார் கிடையாது. “காயி ஒண்ணும் வசமா அமையல.. இதாங் கெடச்சுது” என்று முடித்து விடுவாள் பெண்ணரசி. புளிக்கறி வைத்தால் தொட்டுக்கொள்ளவென எதற்கும் மெனக்கெட வேண்டியதில்லை என்பதும் முக்கியக்காரணம். வறுத்த பப்படம், காணம் அல்லது சிறுபயிறுத்துவையல், அல்லது மிஞ்சிப்போனால் ஏதாவதொரு தொவரனுடன் பொருந்தியும் போய் விடும். வீட்டிலிருப்பவர்கள் ரொம்பவும் முணுமுணுத்தால் புளிக்கறியிலேயே அவித்த முட்டையை இரண்டாகக் கீறிப்போட்டுவிட்டு, “இண்ணைக்கு முட்டக்கொளம்பு வச்சிருக்கேன் மக்கா” என்று கூசாமல் சொல்லி விடுவார்கள்.

அப்படிப்பட்ட தேசத்தில் புளிக்கறிக்கு வாகாய் ஒரு காய் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வருடத்தில் இந்த இரண்டு மாதங்களில் மட்டும், வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் சக்கைப்புளிக்கறிதான் கிடைக்கும். பலா கொஞ்சம் மந்தத்தை ஏற்படுத்தும் என்பார்கள் எங்களூரில். சீசனில் அதிகம் சாப்பிட்டு விட்டு மலைப்பாம்பு மாதிரி நெளிந்து கொண்டு கிடப்போரை “கெடச்சுப்போச்சுண்ணு அள்ளித்திணிச்சா வேற எப்படியிருக்குமாம்?” என்று நக்கலடிப்பது வழக்கம். பொதுவாகவே, எந்தவொரு சொல்லுக்கும் செயலுக்கும் எதிர்வினை எதுவும் ஆற்றாமல் அசமஞ்சமாய் சித்தம் போக்கில் இருப்போருக்கு, “சக்கப்புளிக்கறி” என்று பட்டப்பெயரிட்டு, அதைச்சொல்லி அடிக்கடி அழைத்து, இயற்பெயரை மறக்கடித்து மூன்று தலைமுறைக்கும் அக்குடும்பத்திற்கேயுரியதாய் அப்பட்டத்தைத் துலங்கச்செய்வது எம்மக்களின் இயல்பு. கேட்ட கேள்விக்குப்பதிலளிக்காமல் நெடுமரம் போல் நிற்கும் மாணாக்கர்களை, “இந்த சக்கப்புளிக்கறிக்க கிட்ட போயி கேட்டேனே” என நொந்து கொள்வது ஆசிரியர்களின் பிறப்புரிமை.
புளிக்கறி செய்ய, அரை விளைச்சலுக்கு மேல் ஆனால் பழுக்காத பருவத்திலிருக்கும் காய் தேவை. நான்கு பேருக்கு செய்ய அரைக்கிலோ பலாக்காய், அரை ஸ்பூன் சீரகம், நாலைந்து நல்லமிளகு, இரண்டு சின்ன வெங்காயம், கொஞ்சம் மஞ்சட்பொடி, காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள் தேவை. இத்துடன் மிக முக்கியமாக முழுத்தேங்காய் ஒன்றை உடைத்து, அரை மூடியை முழுதாகவும், இன்னொரு அரை மூடியை பாதியும் துருவிக்கொள்ளவும். அம்மியில் மஞ்சட்துண்டும், சீரகமும் மணக்க நுணுக்கி, அத்துடன் தேங்காய் கூட்டி வெண்ணெயும் தோற்றிடும் வண்ணம் மையாய் அரைத்து, இறுதியில் சின்ன வெங்காயத்தைச் சிதைத்தரைத்து, அம்மியும் குழவியும் வழித்தெடுத்து, சற்றே தண்ணீர் தெளித்து அம்மிப்பால் திரட்டி அதில் மசாலாவை உருட்டி வைத்தல் நகர வாழ்வில் இயலாதென்பதால் அத்தனையையும் வரிசைக்கிரமமாய் சட்னி ஜாரிலிட்டு அரைத்து, இறுதியில் கொஞ்சம்போல் ஊற்றி ஜாரைக்கழுவிய தண்ணீரில் மசாலாவைக் கலந்து வைக்கலாம். நெல்லிக்காயளவு புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைத்து, அதன் ஆன்மா வரை நன்கு கசக்கிப்பிழிந்து சாறெடுத்துக்கொள்ளவும்.
பலாக்காயை சின்னத்துண்டுகளாக நறுக்கிக்கொண்டு இளம் பலாக்கொட்டைகளையும் அத்துடன் அரிந்து போட்டு கொஞ்சம் தண்ணீருடன் உப்பிட்டு வேக வைக்கவும். விரும்பினால் ஒரு முருங்கைக்காயையும் துண்டுகளாக நறுக்கிச்சேர்க்கலாம். முக்கால் வேக்காடு வந்ததும் புளிக்கரைசலை அதனுடன் ஊற்றி மேலும் வேக வைக்கவும். புளி வாசனை போனதும், அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து, தேவைக்கேற்ற நீர் வளத்துடன் ருசிக்கேற்ப உப்பிட்டு குழம்பு கூட்டி வைக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால், சாப்பிடுபவர்கள்  "மடைத்தண்ணி மாரி இருக்கு" என திருவாய் மொழிந்தருளும் வாய்ப்பிருக்கிறது. அருகிலேயே இன்னொரு அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய்யைக் காய வைத்து, தலா கால் ஸ்பூனளவு கடுகும் வெந்தயமும் போட்டுப்பொரிந்ததும், தாராளமாகக் கறிவேப்பிலையும் இரண்டு நறுக்கிய சின்ன வெங்காயமும் சேர்த்துப் பொன்னிறமானதும் அந்தத் தாளிதத்தைக் குழம்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு நுரைத்துப் பொங்கி வந்ததும் கிண்டி விட்டு, அடுப்பில் அனலைத்தணித்து மெல்லிய தீயில் கால் மணி நேரம் வைக்கவும். சற்றுக்கவனக்குறைவாக இருந்தாலும் நுரைத்த குழம்பு பொங்கி பாத்திரத்தை விட்டு வெளிநடப்புச் செய்து விடும். பொங்குவதற்கான ஏகபோக உரிமை நமக்கு மட்டுந்தான் இருக்கிறதா என்ன? 
அடுப்பை விட்டு அந்தண்டை இந்தண்டை அகலாமல் ஒருமித்த சிந்தனையுடன் ஆக்கப்படும் சக்கைப்புளிக்கறி ருசி மிகுந்து, “கை மணமோ!!.. காய் மணமோ!!” எனும்படி படைப்பாளிக்கு நற்பெயரைச் சம்பாதித்துக்கொடுக்கப்போவது உறுதி.

Thursday 24 March 2016

வண்ணங்களின் திருவிழா - ஹோலி

மார்ச் மாதத்தின் மறுபாதியிலிருந்தே குளிர் குறைந்து வெய்யில் வர ஆரம்பித்து விட்டாலும், வடக்கில் ஹோலி தினம்தான் வேனிற்காலத்தின் முதல்தினமாக மக்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. 

இந்தப்பண்டிகையைப்பற்றி அமைதிச்சாரல் என்ற பூர்வாசிரமப்பெயரில் உலவிய போது அருளிச்செய்தவை மறு உபன்யாசம் செய்யப்படுகிறது.
ஹோலி வடநாட்டுப்பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறதே என்று நினைக்கிறீர்களா!!!.. சமீப காலமா கொண்டாடப்படறதைச் சொல்லலைங்க.. நாம காமன்பண்டிகைன்னு கொண்டாடுகிறோமே.. அதுதான் நம்மூரு ஹோலி. ஹோலின்னா எரித்தல்ன்னு அர்த்தம்... இப்ப தெளிவாயிட்டுதா!!!

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப்பற்றித் தெரியும்தானே!!!. அவர் மன்மதனை எரித்ததும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி உயிர்ப்பித்ததும்ன்னு எல்லாம் கதைகள். இந்தச் சம்பவத்தின் நினைவா நம்மூரிலும் மன்மதனின் உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.
வட இந்தியாவுல ஹோலி பிரகலாதனோட சம்பந்தப்பட்டது. பிரகலாதன் தன்னை விட்டுட்டு, ஹரி நாமத்தை ஜபித்ததால் அவங்கப்பா ஹிரண்யகஷ்புக்கு கோபம் வந்துட்டுது. பின்னே.. வராதா!!!. 'அது எப்படி நீ இன்னொருத்தரை பெஸ்ட்'ன்னு சொல்லலாம்ன்னு அவருக்கு கோபம்.. பக்கத்துல உக்காரவெச்சி அட்வைஸ் கொடுத்துப்பாத்தார், பயமுறுத்திப்பாத்தார், ஒன்னும் வேலைக்காவலை!! :-((

கவுன்சிலிங் கொடுக்க வேற யாரு இருக்கான்னு பார்த்து ஒவ்வொருத்தரையா அழைச்சார். வந்தவங்களும் 'தம்பி, உங்கப்பா, நல்லவரு... நாலும் தெரிஞ்ச வல்லவரு, அவரை பகைச்சுக்காதே'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணாங்க.. ம்ஹூம்.. பிரகலாதன் மசியலை..

பெத்த மகன்னு கூட பாக்காம, பிரகலாதனோட உயிருக்கே ஆபத்து விளைவிச்சும் பாத்தார்.. பயத்துலயாவது புள்ளை.. "ஹிரண்யகஷ்பாய நமஹ" ன்னு சொல்லிட மாட்டானான்னு ஒரு நப்பாசை. புள்ளை என்னான்னா அந்த ஆசையில ஒரு லோடு மண்ணைக்கொட்டிட்டு ' நாராயணாய நமஹ' ன்னு சொல்லுது!!! இது சரிப்படாது.. தங்கையுடையான் எதற்கும் அஞ்சான்னு நினைச்ச ஹிரண்யகஷ்பு ஓலை அனுப்பினார் தங்கை ஹோலிகாவுக்கு..

'ஹோலிகா'வும் 'அண்ணே.. கூப்பிட்டு விட்டியாமே? ஆள் வந்து சொல்லுச்சு' என்றபடி வந்து சேந்தா.. .அப்பாடா!!!..பண்டிகைக்கு பெயர்க்காரணம் வந்தாச்சு.. விபரத்தைச்சொல்லி 'நீயாவது புத்தி சொல்லும்மா' ன்னு அண்ணன் வேண்டுகோள் வைக்க, அவளுக்கும் தோல்விதான். கடைசி சந்தர்ப்பத்திலயும் தோல்வின்னதும் ரெண்டு பேருக்கும் கோபம் தாங்கல. போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி 'தங்கச்சி, ஒன்னோட வரம் இன்னும் active ஆகத்தானே இருக்கு' ன்னு உறுதி செஞ்சுக்கிட்டு ஏற்பாடுகளெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு ஹிரண்யகஷ்பு.

ஹோலிகாவை தீ தீண்டலாகாது என்பது அவளுக்குக் கிடைச்ச வரங்களில் ஒன்னு. இதைப்பயன்படுத்தி, பிரகலாதனை எரிச்சு, ஒழிச்சுடணும்ன்னு திட்டம். பாவம்.. சின்னப்பையன்னு கூடப்பாக்கலை.. தயாரா இருந்த சிதையில், அவனை மடியில் வெச்சிக்கிட்டு, ஹோலிகா உக்காந்துக்கிட, நெருப்பு மூட்டப்பட்டது. 'ஐயோ.. அம்மா' ன்னு ஒரு அலறல் குரல்.... அலறல் வளர்ந்து, எதிரொலிச்சு, பின் தேய்ந்து மறையுது. நெருப்பும், புகைமண்டலமும் மெல்லமெல்ல குறைஞ்சபின்னே பாத்தா!! இதென்ன!!!... பிரகலாதன் நெருப்பால் எந்தவித சேதாரமுமில்லாம, நிக்கிறான்.. ஹோலிகா சாம்பலாகிக் கிடக்கிறாள். பிரகலாதன் வாய் மட்டும் 'நாராயணாய நமஹ'ன்னு உச்சரிச்சுக்கிட்டிருக்கு. ஹிரண்யகஷ்புக்கு ஒன்னும் புரியலை.. அப்புறமாத்தான் தெரிய வருது.. ஹோலிகா தனியா நின்னா நெருப்பு அவளை ஒன்னும் செய்யாது. அப்படித்தான் வரம் கிடைச்சிருக்கு. அவளும் பிரகலாதனுமா ரெண்டு பேரா நின்னதால வரம் back fire ஆகிடுச்சு. வாங்கும்போதே terms and conditions ஐ பாத்து வாங்கியிருக்க வேண்டாமோ!!! கியாரண்டி, வாரண்டி பீரியட் ஒன்னும் பாக்காம வாங்கிட்டாங்க. இப்போ ஹோலிகாவே எக்ஸ்பயர் ஆயாச்சு.

இதுதான் ஹோலியும்,பெயரும் வந்த கதை. ஹோலி இங்கே இரண்டு நாள் பண்டிகை. முதல் நாள் ச்சோட்டி ஹோலி, ரெண்டாம் நாள் ப(b)டீ ஹோலின்னு கொண்டாடப்படுது. ச்சோட்டி ஹோலி அன்னிக்குக் காலையிலேயே பண்டிகைக்கான ஏற்பாடு ஆரம்பிச்சுடும். பில்டிங் முன்னாடி காலி இடத்திலும், தெருக்களிலுமா சின்னதா குழி தோண்டி வெச்சிடுவாங்க. அப்புறமா, தோகையுடனுள்ள கரும்பு ஒன்னும், இலைகளோட கூடிய சின்ன மரக்கிளை ஒன்னும் முதல்ல நடுவாங்க. பச்சை மரம் ஹோலிகா உயிரோட எரிஞ்சதை குறிக்குமாம். அப்புறம், அதைச் சுத்தி, பெரிய பெரிய மரத்துண்டுகள், விறகுகள், வரட்டி, எல்லாம் அடுக்குவாங்க. கடைசியா பூமாலை ஒன்னும், ஹோலிக்குன்னே கிடைக்கிற சர்க்கரை மாலை ஒன்னும் போடுவாங்க.
ஹோலிக்கு நைவேத்தியமா பூரண்போளி, பாப்டி, குஜியா(சோமாஸ் அல்லது கரஞ்சி) மற்றும் அவரவர்க்கு வசதிப்பட்டதைச் செய்து, ஆரத்தித் தட்டில் அடுக்கி கொண்டு சென்று பூஜை செய்வார்கள். சில இடங்களில் சத்ய நாராயண பூஜை செய்வதுமுண்டு. பின் கலசத்திலிருக்கும் நீரை bonfire ஐ சுற்றி வலம் வந்து கொண்டே, தரையில் ஊற்றிக்கொண்டு வருவார்கள். கடைசியா, தட்டிலிருக்கும் தேங்காயை, bonfire ல் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் வயதில் பெரியவரை அழைச்சு, அவர் கையாலே நெருப்பிடச்செய்வார்கள். bonfire எரியும் நிகழ்ச்சிக்கு 'ஹோலிகா தகன்' என்றே பெயர். நெருப்பு எரியும் போது, எல்லோரும் ஒருவரை ஒருவர், 'ஹோலி ஹை'ன்னு சொல்லி வாழ்த்திக்குவாங்க. ஆரத்தி தட்டிலிருக்கிற, மஞ்சள்,குங்குமம், குலாலை ஒருவருக்கொருவர் இட்டுக்குவாங்க. இன்னிக்கு கலர்ப்பொடியை சின்னப் பசங்க மட்டும் பூசிக்குவாங்க. நெருப்பிலிடப்பட்ட தேங்காய்கள் சில சமயம் வெடித்துச்சீறிக்கொண்டு தீக்கு வெளியே வந்து விழும். சுட்ட தேங்காயை துண்டுகளாக்கி எல்லோருக்கும் பிரசாதமா கொடுப்பாங்க.



மறுநாள் எப்போ விடியும்ன்னே காத்திட்டிருப்பாங்க. காலை நாஷ்டா ஆனதும்,கிளம்பிடுவாங்க. முகம், கை கால்களில் தேங்கா எண்ணெய் தேய்ச்சுக்குவோம். அப்படித்தேய்ச்சுக்கிட்டா கலர்ப்பொடிகள் ஒரு அளவுக்கு மேல் ஒட்டாதில்ல. அதுக்குத்தான். ஒருவர் வீட்டிலிருந்து புறப்ப்பட்டு, இன்னொருவர் வீட்டுக்குப்போய் அவரை அழைச்சிக்கிட்டு அடுத்தவரை அழைக்கப் போறதைப் பாத்தா நம்ம ஆண்டாளம்மா மார்கழி நீராட கிளம்பினமாதிரிதான் தோணும். வீட்டுக்கு வர்றவங்களுக்காக ஏதாவது பலகாரமும் செஞ்சு வெச்சிருப்பாங்க. பில்டிங்குகளில் எல்லோருக்கும் பொதுவா, கலர்ப்பொடிகள், ஸ்நாக்செல்லாம் அரேஞ்ச் பண்ணியிருப்பாங்க. கலர்ப்பொடி பூசாத முதல் நாள் கணக்கையெல்லாம் இன்னிக்கி நேர் பண்ணிடுவாங்க. கையில் யார் அகப்பட்டாலும் அவங்களுக்கு வேஷங்கட்டிட்டுதான் விடுவாங்க. நம்ம பிள்ளைங்களையே குரலை வெச்சித்தான் அடையாளம் காணணும். மிகையா இருந்தாலும் இதுதான் உண்மை.. சில இடங்களில் ஹோலி ஸ்பெஷலா பாங் என்று சொல்லப்படற ஒருவகை பானமும் இருக்கும். அதைக்குடிச்சிட்டு சிலபேர் பண்ற அலப்பறை இருக்கே...

இவையனைத்தும் சென்ற வருடத்தைய படங்கள்
ஹோலி வந்தாச்சுன்னா சம்மர் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அடிக்கிற வெயிலுக்கு தண்ணியில ஊறினா நல்லாத்தான் இருக்கும். Eco friendly holi ன்னு இப்ப புதுசா பிரச்சாரம் பரவிக்கிட்டிருக்கு. ஹோலிகா தகனுக்காக நிறைய மரங்கள் வெட்டப்படுறதால மரங்களோட எண்ணிக்கை குறையுதில்லையா?? இப்ப இருக்கிற மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைஞ்சா எப்படி!!! அதனால ஒரு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.. எல்லோருக்கும் பொதுவா, ஒரு இடத்தில கொண்டாடினா bonfires எண்ணிக்கை குறையுமே..அதுவும், நல்லா இருக்கிற மரங்களை வெட்டாம, காய்ஞ்சு விழுந்துபோன மரம், மற்ற வேஸ்ட்டுகள் இதெல்லாம் உபயோகப்படுத்தலாமாம். அதுக்காக டயர், ப்ளாஸ்டிக்கெல்லாம் போடணும்ன்னு அர்த்தமில்லை. அது இன்னும் மோசமாச்சே!!

நவி மும்பையில் இப்போதெல்லாம் ஹோலிக்காக மரத்துண்டுகள் கூட அதிகம் உபயோகிக்கப்படுவதில்லை. குழி வெட்டி சாலையையும் சேதப்படுத்துவதில்லை. தரையிலேயே பெயருக்கு நாலைந்து மரக்குச்சிகளையும் நடுவில் கரும்பையும் வைத்துக் கட்டி விட்டு வைக்கோல் பொதிகளால் பொதிந்து ஆளுயரத்திற்கும் மேல் சொக்கப்பனை தயார் செய்து விடுவார்கள். கணகணவென எரிய ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் அத்தனை வைக்கோலும் குச்சிகளும் எரிந்து சாம்பலாகி விடும். சாஸ்திரத்திற்காகப் போடப்பட்டிருக்கும் ஒரே ஒரு சிறிய மரத்துண்டும் மறுநாள் கனிந்து சாம்பலானதும் அதில் தண்ணீரை ஊற்றிக்குழைத்து வரும் கருஞ்சாந்தை நெற்றியில் இட்டுக்கொள்வார்கள். அதன் பிறகே வண்ணப்பொடிகளைக்கொண்டு விளையாட ஆரம்பிப்பார்கள். இந்த வருடம் ஹோலிகா எரிந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒருவர் தான் அணிந்திருந்த பழைய பனியனைக் கழற்றித் தீயிலிட்டார். திருஷ்டி கழிவதற்காகவோ, சனிப்பரிகாரமாகவோ ஏதோ ஒரு காரணமும் சொன்னார். எங்கள் குடியிருப்பிலிருக்கும் ஒரு பெண்மணிக்கு வந்ததே கோபம். "பூஜை செய்து வளர்த்த தீயில் இப்படியெல்லாம் கண்டதையும் போடக்கூடாது. முதலில் அதை வெளியில் தூக்கிப்போடு" என கோபாவேசமாகக் கத்த ஆரம்பித்து விடவே, நடுங்கிப்போன மனிதர், பாதி எரிந்த நிலையிலிருந்த பனியனை ஒரு குச்சியின் உதவியால் தூக்கிப்போட்டு விட்டு மாயமாய் மறைந்து விட்டார். 
இது இன்று காலையில் சுடச்சுட எடுக்கப்பட்ட புதுப்படம் 
சென்ற வருடம் மஹாராஷ்ட்ரத்தில் மழை பொய்த்துப்போனதால் கடும் தண்ணீர்ப்பஞ்சம் நிலவுகிறது. ஒரு நாளைக்கு மிகக்குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்படுவதால் இம்முறை தண்ணீர் தவிர்த்த ஹோலி கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்காக மட்டும் ஒரே ஒரு பக்கெட் தண்ணீர் கொடுக்கப்பட்டது. தண்ணீரில்லாமல் என்ன ஹோலி என்று அட்டகாசம் செய்த இளசுகளை முதல் மாடியிலிருந்து அவர்கள் மேல் இரண்டு மூன்று பக்கெட் தண்ணீர் ஊற்றிக் குளிர வைத்தார்கள் குடியிருப்பின் நிர்வாகிகள். 

வண்ணங்களின் திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்வின் வண்ணத்தைப் பூசட்டும்..

Thursday 17 March 2016

நாஞ்சில் நாட்டு சமையல் - ரசம்

“இந்தியன் சூப்” என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் ரசத்துக்கு தென்னிந்தியச் சமையல் வகைகளில் மிக முக்கிய இடமுண்டு. விசேஷ வைபவங்களில் வாழையிலை போட்டுப்பரிமாறப்படும் அறுசுவை விருந்தாகட்டும், வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கெனத் தயார் செய்யப்படும் விருந்தாகட்டும், அல்லது அன்றாடச் சமையலாகட்டும். ரசம் கண்டிப்பாகத் தயாரிக்கப்படும். என்னதான் ரசத்தை ஒரு கை சாதத்தில் விட்டுப் பிசைந்து சாப்பிட்டாலும், சிலருக்குக் குழித்த உள்ளங்கையில் விட்டுக்குடிக்க வேண்டும். சிலருக்குக் கப்பில் அருந்த வேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட திருப்தி ஏற்படும் அவர்களுக்கு. ரசம் செரிமானத்துக்கும் நல்லது. என்னதான் வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டாலும் ரசத்தில் அடங்கியிருக்கும் மிளகு, சீரகம் போன்றவை மருந்தாகச்செயல்பட்டு, விரைவில் செரிக்க வைத்து விடும். ரசத்தைச் சாற்றமுது என்றும் குறிப்பிடுவர். ரசத்திற்கு சாறு என்று அர்த்தமுண்டு. திராட்சைச்சாற்றை திராட்சை ரசம் என்றுதானே குறிப்பிடுகிறோம். சிறப்பான ருசியிலமைந்த உணவுகளை அமுதம் போன்று இருக்கிறது என்பது உலக வழக்கு. அத்தகைய அடைமொழி ஒரு உணவு வகைக்குக் கொடுக்கப்பட வேண்டுமாயின் அது எத்தகைய சிறப்பும் ருசியும் மிக்கதாக இருக்க வேண்டும். 

நவரசம் எதுவெனக் கேட்பீராயின் உணர்ச்சி வெளிப்பாடுகளான 
நகை – சிரிப்பு
அழுகை – அவலம்
இழிவரல் - இழிவு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை –மகிழ்ச்சி
யோகம் 
என ஒன்பது வகைகளில் அடங்கி விடும்.  ஆனால், சாப்பிடும் ரசவகைகளின் பட்டியலோ தக்காளி, மைசூர், பருப்பு, பாகற்காய், வேப்பம்பூ, எலுமிச்சை, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், இஞ்சி, மூலிகை வகை, வெற்றிலை, மற்றும் அசைவ வகை ரசங்கள் என. நீண்டு கொண்டே செல்லும். காய்ச்சல் வந்து குணமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலில் கொடுக்கப்படும் எளிய ஆகாரமாக இதன் மருத்துவக்குணம் காரணமாக இதுவே பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நேரத்திலிருக்கும் வாய்க்கசப்பிற்கு ரசம் சாதம் மிக ருசிக்கவும் செய்யும். சாப்பாடு ருசியாயில்லை என்ற உண்மைக்காரணத்தைச் சொல்லாமல் வயிறு சரியில்லை, பசியில்லை என்று தப்பித்து ஓட நினைப்பவர்களைக்கூட அம்மாக்கள் கொடுக்கும் ஒரு பிடி ரசம் சாதம் கட்டுப்படுத்தி விடும். 

இத்தகைய சிறப்பு மிக்க ரசம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகச்செய்யப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஒவ்வொரு வகை ரசத்துக்கேற்றவாறு விதவிதமாக ரசப்பொடி தயாரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. ஆனால், நாஞ்சில் பகுதியில் சற்று வித்தியாசமாகத் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் ரசப்பொடியை உபயோகப்படுத்துவதில்லை. அவ்வப்போது அரைத்த மசாலாவையே உபயோகப்படுத்துகிறோம். பக்கத்து வீடான நெல்லைச்சீமையின் தென்பகுதியிலும் இந்த மசாலாவே உபயோகத்திலுள்ளது. வீட்டில் மொளவாட்டியில்(அஞ்சறைப்பெட்டியில்) இருக்கும் பொருட்களே இதற்குப் போதுமானது.

தமிழகச் சமையல் செய்ய முடிவெடுத்து விட்டால் பெண்கள் செய்யும் முதல் காரியம் புளியை நீரில் ஊறப்போடுவது. ஆகவே குலவழக்கம் மாறாமல் காலையிலேயே வெதுவெதுப்பான வெந்நீரில் நெல்லிக்காயளவு புளியை ஊறப்போடவும். ஒரு டப்பாவில் ஒரு நாள் குழம்புக்கான புளியை மூழ்குமளவு தண்ணீர் விட்டுப் ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும். வைத்ததை உபயோகித்தபின் மறக்காமல் இன்னொரு செட் தயார் செய்து வைத்து விட வேண்டியது அவசியம். என்னதான் சந்தையில் புளி பேஸ்ட்கள் வந்தாலும் இயற்கையான ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் வீட்டில் செய்தவையே உகந்தது.

இப்பொழுது பதினைந்து நல்லமிளகை எடுத்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு கூடுதலாக இருந்தால் தப்பில்லை. இது கிட்டத்தட்ட அரைத்தேக்கரண்டி அளவு வரும். அதேயளவு சீரகம், கொத்தமல்லி விதை, ஒரு சிட்டிகை மஞ்சட்பொடி மற்றும் ஒரே ஒரு மிளகாய் வற்றலை எடுத்துக்கொண்டு மிக்சியில் ஒன்றிரண்டாகத் தட்டிக்கொள்ளவும். அம்மியிலும் நுணுக்கிக்கொள்ளலாம். எங்கள் வீட்டில் கால் தேக்கரண்டி அளவு கடுகும் அம்மா போடுவார்கள். “மேலு வலிக்கி நல்லதாம்” பின் இத்துடன் இரண்டு ஆர்க்கு இணுங்கிய கறிவேப்பிலையும் பத்துப்பல் பூண்டும் சேர்த்து மேலாகக் கொஞ்சம் போல தண்ணீர் தெளித்து ஒரே ஒரு சுற்று. அரைந்தும் அரையாமலும் சிதைத்தாற்போல் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.. மசாலா ரெடி.
அரைத்த மசாலா
பூண்டில் தோலை உரிக்க வேண்டிய அவசியமில்லை. தலையும் வாலும் வெட்டி விட்டாலும் போதும். பூண்டுத்தோல் வதங்கும்போது இன்னும் அதிக மணம் வரும். மொத்த மசாலாவும் நெல்லிக்காய் அளவு உருண்டைதான் இருக்கும். இது எப்படிப்போதும் என்று குழம்பிக்கொண்டிருக்காமல் ஊற வைத்த புளியை நன்கு கரைத்து புளிக்கரைசலை மூன்று கப் அளவில் எடுத்துக்கொண்டு அத்துடன் இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்து மொத்தம் ஐந்து கப்பாக தயார் செய்து கொள்ளவும். இதிலேயே இரண்டு ஸ்பூன் உப்பையும் போட்டுக் கரைத்து வைக்கவும். கல்லுப்பு புழங்கிய காலத்தில் புளியை ஊறப்போடும்போதே உப்பையும் அதனுடன் போட்டு வைத்து விடுவது வழக்கம். இரண்டும் ஒன்றாக ஊறிக்கரைந்து விடும்.

நடுத்தர அளவிலான இரண்டு தக்காளிகளைச் சற்றுப் பெரிய துண்டங்களாக நறுக்கிக்கொண்டு, பிடியளவு கொத்தமல்லி இலைகளையும் ஆய்ந்து கழுவி வைக்கவும். இத்துடன் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையையும் உருவி வைக்கவும். “கொத்துமல்லி மணக்க தக்காளி மிதக்க இருந்தால்தான் அது ரசம்.. இல்லையேல் அது விரசம்” என்பது சுவையறிந்த ஒரு நாக்கின் வாக்கு. ஆகவே சற்றுத்தாராளமாகவே சேர்க்கலாம். ரசம் செய்ய அடுப்பில் பாத்திரத்தை ஏற்றியபின் ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருக்க இயலாது. ஆகவே போருக்குப் புறப்படும் அரசனைப்போல் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து கொண்ட பின்னரே களம் புகுதல் வேண்டும்.

சற்றுப் பெரிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு கடுகைப் போட்டு வெடிக்க விடவும். (வெடித்த கடுகு முகத்தில் படாதிருக்கவே இந்த ஏற்பாடு) கடுகு வெடித்ததும், அரைத்த ரசமசாலாவைப் போட்டு லேசாகக் கிளறவும். சட்டென மணம் வந்த கணத்தில் தக்காளித்துண்டங்களைப்போட்டு வதக்கி, மேல்தோல் லேசாகப் பிரியும் கணத்தில் புளிக்கரைசலை ஊற்றி அடிமேலாகக் கலக்கி விடவும். ஐந்து நிமிடத்தில் ரசம் ஓரங்களில் நுரைத்து ஆங்காங்கே குமிழ் விடத்தொடங்கும்.  ரசத்தை எக்காரணம் கொண்டும் கொதிக்க விடக்கூடாது. அப்படிக்கொதித்தால் ருசி மாறிப்போகும். தெளியவும் செய்யாமல் கலங்கிய வண்டல் நீர் போலாகிவிடும். சாப்பிடும்போது மசாலாத்துகள்கள் தொந்தரவு கொடுக்கும்.
இப்பொழுது கொஞ்சம் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை என எல்லாவற்றையும் சேர்த்தபின் அடுப்பை அணைத்து ரசமிருக்கும் பாத்திரத்தை நன்கு மூடி விடவும். ஐந்து நிமிடம் அப்படியே விட்டபின் லேசாகக் கலக்கி இனும் கொஞ்ச நேரம் அப்படியே விடவும். ரசமண்டி அடியில் படிந்து கொத்துமல்லி மணக்க தக்காளி மிதக்க ரசம் மணமணக்கும். கரண்டியால் கலக்கி, யானை புகுந்த குளம் சேறாவது போல் ஆக்கி வைக்காமல் மேலாகத் தெளிந்திருக்கும் ரசத்தை மொண்டு உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு செய்முறை, இது எங்கள் முறை. வேறு குழம்பு எதுவும் செய்யாமல் வெறும் ரசம் மட்டும் வைக்கும் தினத்தன்று கட்டிப்பருப்பு, அல்லது பருப்புச்சேர்த்த கூட்டுக்கறி செய்வது வழக்கம். பெரும்பாலோனோர் எரிசேரியும் செய்வார்கள்.

எங்களூர் ரசத்தில் பருப்புத்தண்ணீர் வழக்கமாகச் சேர்க்கப்படுவதில்லை. கட்டிப்பருப்பு அல்லது கூட்டுக்கறி செய்யும் தினத்தன்று, வேகும் பருப்பிலிருந்து கொஞ்சம் இங்கேயும் ஈயப்படும்.

தெளிந்த ரசத்தை இன்னொரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் பருப்புவடைகளைப்போட்டுக் கொதிக்க வைத்தால் ரசவடை ரெடி.

Wednesday 16 March 2016

நாஞ்சில் நாட்டு சமையல் - ரசவடை

கன்னியாகுமரி மாவட்டத்தில்.. அதிலும் நாஞ்சில் நாட்டுப் பகுதிகளுக்கென்று இருக்கும் சிறப்பு உணவுகளில் ரசவடையும் ஒன்று. சுமார் பத்திருபது வருடங்களுக்கு முன்பு.. அதாவது, மூன்று வேளையும் கிடைக்கும் இப்போதைய காலகட்டம் போல் இல்லாமல் புரோட்டாக்கள் இரவில் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த காலத்தில், சிறிய பெரிய ரெஸ்டாரண்டுகள் முதற்கொண்டு ரோட்டோர டீக்கடைகள் வரையிலும் காலை நேர டிபனான இட்லி தோசை, ஆப்பம், புட்டு, இடியாப்பம் இவைகளுடன் ரசவடையும் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் காலையில் டிபன், மதியம் அரிசிச்சாப்பாடு, இரவுக்கு மதியம் மீந்த சோற்றில் வடிகஞ்சியை ஊற்றி வைத்த பழையதுடன், மீந்த குழம்பு கறிகளைப்போட்டுச் சுண்ட வைத்த பழங்கறியும் தயிரும் என்று மக்கள் கழித்த காலம். தயிரூற்றி நொறுங்கப்பிசைந்த பழையதுடன் ரசவடையைத்தொட்டுக்கொண்டு சாப்பிடுவது ஒரு சுகானுபவம். 

ஒரு சில வீடுகளில் மட்டுமே இரவில் புளியாத்தோசை, அல்லது சப்பாத்தி செய்யப்படும். புளியாத்தோசை என்பது வேறொன்றுமில்லை. மறுநாள் காலை இட்லி தோசைக்காக சாயங்காலம் அரைத்து வைத்த மாவில், அன்றிரவு சுடப்படும் தோசையே. தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்னியோ பொரிகடலைத்துவையலோ உடனிருக்கும். அப்பொழுதுதான் அரைத்ததென்பதால் மாவு புளித்திருக்காது. இரவில் வீட்டுக்குத் திடீர் விருந்தாளிகள் வந்துவிட்டால் இதுதான் உடனே கை கொடுக்கும். தோசையும் சட்னியும் தயாராகும்போதே வீட்டுப்பையன் கையில் தூக்கு வாளியுடன் ரசவடை வாங்கி வர கடைக்கு விரட்டப்படுவான். ரசவடைக்கும் தேங்காய்ச்சட்னிக்கும் என்ன பொருத்தமென்பது சாப்பிட்டு ருசித்தவர்களின் நாக்கு மட்டுமே அறிந்த ரகசியம். வட்ட வடிவிலான டிபன் பாக்சில் அடைக்கப்பட்ட தயிர்சாதத்தின் மேல் ரசவடையை வைத்து, சில குழந்தைகள் லஞ்சுக்கும் எடுத்துச்செல்வதுண்டு.

நாகர்கோவிலில் வடசேரி இறக்கத்தில் ஒரு காலத்தில் இருந்த குண்டுப்போத்தி ஹோட்டலின் ரசவடையை பாட்டையா பாரதிமணி அவர்கள் அடிக்கடி மிகவும் சிலாகித்துச் சொல்வது வழக்கம். எனக்கு நினைவு தெரிந்து அந்தக்கடையைப் பார்த்ததில்லை ஆகையால் அம்மையிடம் கேட்டேன். “அது நீ சின்னப்பிள்ளையா இருக்கச்சலயே மூடியாச்சி. கல்யாணத்துக்கு முன்னால ஒங்க அப்பா அங்கதாம் பதிவா காலைல சாப்புடுவாளாம். தெரிஞ்ச பையங்கறதால அவோளுக்குன்னு தனியா ரெசவடல்லாம் எடுத்து வெச்சிருப்பாளாம். போடுசா இருந்த கடை.. என்னவோ மூடிட்டா” என்றார்.

“ரசவடை செய்யறது என்ன பெரிய காரியமா? வீட்ல செய்யப்பட்ட வடைய ரெசத்துல போட்டுக்கொதிக்க வெச்சா தீர்ந்தது சோலி” என்று முடித்து விடுவதல்ல. முதலில் ரசவடை என்பது மீந்த வடைகளைப்போட்டு செய்யப்படுவதல்ல. அதற்கென்று தனிப்பக்குவத்தில் பருப்பு அரைக்கப்பட்டு வடைகள் தயாரிக்கப்பட்டு உடனேயே ரசத்திலும் போட்டுக் கொதிக்கவும் வைக்கப்படுகின்றன. அதேபோல் பருப்பு வடை மற்றும் ரசவடை செய்ய பட்டாணிப்பருப்பு எனப்படும் முக்குப்பருப்பு மட்டுமே உபயோகிக்கப்படும். இதை மூக்குப்பருப்பு என்றும் சொல்வோம். முக்குப்பருப்பு பார்க்கக் கடலைப்பருப்பு மாதிரியே இருக்கும். ஆனால் அதைவிட அளவில் சற்றே பெரிதாக கொஞ்சம் குழிந்திருக்கும். ஆங்கிலத்தில் yellow split peas என அழைக்கப்படும் இப்பருப்பு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.
முக்குப்பருப்பு - படக்கொடை - இணையம்
தென்மாவட்டங்களில் அதிகமும் கிடைக்கும் இந்தப்பருப்புக்கென்று தனி மணமுண்டு. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே ரசவடை செய்ய கடலைப்பருப்பை உபயோகிப்போம். ஆனால், எக்காரணம் கொண்டும் உளுத்தம்பருப்பு உபயோகிப்பதில்லை. உளுந்தவடைகளைப்போட்டுச் செய்வதை நாங்கள் ரசவடை என்றே ஒப்புக்கொள்வதுமில்லை. மும்பையின் புறநகர்ப்பகுதியான தானாவில் ஒரு ஹோட்டலில் தென்னிந்தியச் சாப்பாட்டில் ரசவடையின் பெயருமிருக்கவே ஜொள்ளு விட்டுக்கொண்டு ஆர்டர் கொடுத்து, ரசத்தில் மிதந்து வந்த உளுந்தவடைகளைக்கண்டு ஏமாந்த அனுபவம் மறக்க முடியாதது. ஊருக்குப்போய்விட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் ஒரு கிலோ முக்குப்பருப்பும் எங்களுடன் பயணிக்கும். வடைக்காக முக்குப்பருப்பை அரைக்கும்போதே மிதக்கும் வடை வாசனையில் நாக்கு ஜொள்ளில் மிதக்க ஆரம்பித்து விடும். அதே போல் நாஞ்சில் பக்குவத்தில் செய்யப்பட்ட ரசத்தில் ஊறிய வடைக்கென்று தனி ருசியும் வந்து விடுகிறது. 

வடை செய்ய:

ஒரு கப் பட்டாணி அல்லது கடலைப்பருப்புடன் பன்னிரண்டு காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்கு வடிகட்டிக்கொண்டபின் இரண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைக்க அம்மி, ஆட்டுரல், மிக்சி என எதை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். எனக்கு அஞ்சலி கை கொடுத்தாள். இதில் அரைக்கும்போது வடைக்கு சரியான பக்குவத்தில் மாவு கிடைத்து விடுகிறது.
சாதாரணமாகப் பருப்பு வடைக்கு அரைப்பது போலில்லாமல் இன்னும் சற்று மசிய அரைய வேண்டும். ரவை பதம் சரியாக இருக்கும். அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்துப்பிசைந்து சிறிய குலாப்ஜாமூன் அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.


அவற்றைச் சூடான எண்ணெய்யில் போட்டுப்பொரித்தெடுத்து எண்ணெய்யை வடிய வைக்கவும். பாரம்பரியமான ரசவடைக்கு மாவைத்தட்டிப்போடாமல் உருண்டையாகவே போடுவது வழக்கம். 

ஆறியதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் ரசத்தில் இவற்றைப்போட்டு ஐந்து நிமிடத்திற்குக் கொதிக்க விடவும். நன்கு கொதித்தால்தான் ரசத்தின் சாரம் வடையின் உள்ளும் புறமும் நன்றாக ஊடுருவிச் செல்லும். வடையும் நன்கு ஊறி உப்பி வரும். பின் அடுப்பை அணைத்து விட்டு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். வடைகள் ரசத்தில் ஊறி சாப்பிடத்தயாராகி விடும். 

கமகமக்கும் ரசத்துடன் ஒரு கிண்ணத்திலோ அல்லது ரசம் இல்லாமல் இலையில் பிட்டுச் சாப்பிடும் வகையிலோ பரிமாறப்படும் வடைகளைச் சாப்பிட ஆரம்பித்தால் ஏழெட்டு லட்சியம் ஐந்து நிச்சயம் என்பது உறுதி.

Wednesday 9 March 2016

குருவியும் துடைப்பமும் பின்னே ஞானும்..

அடுக்களையையொட்டிய சிறிய பால்கனியில்தான் எப்பொழுதும் பூந்துடைப்பம் ஓய்வெடுப்பது வழக்கம். ஒரு நாள் அதிகாலையில் வாசலைப்பெருக்குவதற்காக வழக்கம்போல் துடைப்பத்தை எடுக்கப்போனால் சிறு சிறு துரும்புகள் துடைப்பத்தைச்சுற்றிலும் இரைந்து கிடந்தன. அவையெல்லாம் பூந்துடைப்பத்திலிருந்து பிய்த்துப்போடப்பட்டவைதான் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. 

ஏதோ சிறுகுழந்தைகள் விளையாடிப் பிய்த்துப் போட்டிருப்பது போல் இருக்கிறதே,.. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிட்டுக்குருவி வந்து பால்கனிச்சுவரில் உட்கார்ந்தது. வழக்கம்போல் அதற்கு அரிசி மணிகள் எடுத்து வருவதற்காக உள்ளே திரும்பவும், சட்டென்று துடைப்பத்தினருகில் வந்து ஒரு புல்கற்றையைக் கொத்திக்கொண்டு பறந்தது. ஆஹா!!.. இதானா சங்கதி. கோடை நெருங்குவதால் காக்கை, குருவி என்று எல்லாப்பறவைகளும் தாங்கள் சொந்த வீடு கட்டுவதற்காக குச்சிகள், சிறு சுள்ளிகள் என்று அலகுக்குக் கிடைப்பதையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய சுள்ளிகளை கூடுகளுக்கும் சிறிய புற்கள் மற்றும் இலைகளின் நார்களை கூடுகளில் நிரப்பி மெத்தை போல் மென்மையாக வைத்துக்கொள்ளும் வித்தையை இயற்கை இவற்றுக்குப் பிறவியிலேயே வழங்கியிருப்பது அதிசயம்தான். சாதாரணமாகவே எக்கச்சக்க சுறுசுறுப்பாய் இருக்கும். இப்போது, வீட்டுக்குரியவர் வருமுன் முடிந்தளவு துடைப்பத்துரும்புகளை கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தாலோ என்னவோ பயங்கர சுறுசுறுப்பு. சின்ன அலகால் புற்கற்றைகளை ஒவ்வொன்றாக அசைத்து அசைத்தே ஒடித்தெடுத்து விடுகின்றன. எடுத்த வேகத்தில் அவை விர்ர்ர்ரென்று பறப்பதும் தனியழகுதான்.
குருவிகள் அக்கம்பக்கத்து வீடுகளில் வளரும் செடிகளையும் விட்டு வைப்பதில்லை. தங்களுக்கு வேண்டிய புரதச்சத்திற்காக இலைகளையெல்லாம் கூட கொத்தித்தின்றுவிட்டுப் போய் விடுகின்றன. டப்பாக்களில் முளைத்து அப்போதுதான் வளர ஆரம்பித்திருந்த வெந்தயச்செடிகளை ஒரே நாளில் கபளீகரம் செய்து விட்டன. செடிகளைச் ‘சாப்பிட்டு விட்டுப்போ’ என்று விட்டு விட்டேன். ஆனால், மறக்காமல் துடைப்பத்தை வீட்டுக்குள் எடுத்து வந்து பத்திரப்படுத்தி விட்டேன். அதே கையோடு இதையும் எழுதினேன்.

(ஒரு விகற்பக் குறள் வெண்பா)

உடைத்தே துரும்பினை ஊர்க்குருவி கொள்ளும்
துடைப்பத்தை வீட்டுள்ளே வை


சில நாட்களுக்கப்புறம் வழக்கம்போல் துடைப்பம் பால்கனிக்கே ஓய்வெடுக்கப்போக ஆரம்பித்தது தனி விஷயம் :-))

Tuesday 8 March 2016

பெண்..

படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி

பொய்மையை நம்பிடும் பொம்மையன்று சீர்தூக்கி
மெய்மையை ஆய்வாள் இவள்

விளக்கம்: யார் என்ன பொய் சொன்னாலும் நம்பிக்கொண்டு பொம்மை போல் இல்லாமல், ஆராய்ந்து அதிலுள்ள உண்மையை  அறிவாள்

மரணத்தின் கண்களில் மண்தூவி மன்னும்  
தரணியை ஆள்கிறாள் பெண்

விளக்கம்: பிறக்கு முன்னும் பின்னும் அவளை அழிக்க மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் முறியடித்து, மரணத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இவ்வுலகை ஆள்கிறாள்.

விலைகொடாமற் பெண்ணுக்கு வாழ்வது கிட்ட
தலையெடுக்க வேண்டும் சுயம்

விளக்கம்: வரதட்சணை எனும் விலை கொடுக்காமல் பெண்ணுக்கு மணவாழ்வு கிடைக்க மனவுறுதியுடன் சுயமாய் சிந்திப்பவளாய், தன் காலில் நிற்பவளாய் தன்மானத்துடன் இருப்பவளாய் இருத்தல் வேண்டும்.

கல்விதனைப் பற்றிடக் கெட்டியாய் பெண்ணுக்கு
நல்வினைகள் ஓங்கும் தினம்

விளக்கம்: கல்வி எனும் பிடியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டால் பெண்ணுக்கு நல்லவை நடக்கும்.

கருவறுத்த தீயோரும் தான்மறந்தார் தம்மைக்
கருக்கொண்ட தாயுமோர் பெண்

விளக்கம்: பெண்ணைக் கருவிலேயே அழிக்கும் தீயவர், தம்மைச்சுமந்தவளும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடுகின்றனர்.

தளைப்பட்ட பெண்பாவாய் கட்டனைத்தும் மாயை
களைந்தே எழுக விரைந்து

விளக்கம்: தன்னைக் கட்டிப்போட்டிருப்பதாக நினைக்கும் தளைகள் அனைத்தும் மாயையே.. அவற்றை விரைந்து களைந்து எழுவாய் பெண்ணே.

செதுக்கியும் ஆக்கியும் செய்திடுவாள் செம்மை
ஒதுக்கிடாளோர் குப்பை அறி

விளக்கம்: வேண்டாத குப்பை என்று ஒதுக்காமல் என எதையும் செதுக்கிச் செம்மை செய்திடுவாள். (எதற்கும் லாயக்கில்லாதவர் என ஒதுக்கப்பட்ட மனிதர்களையும் செம்மையாக்குபவள் பெண்)

வால்: மகளிர்தினத்தின் சிறப்புக்கொண்டாட்டமாய் எனது குறள் வெண்பாக்கள் அரங்கேறுகின்றன.

Monday 7 March 2016

மஹா சிவராத்திரி

சிவனுக்கு உரிய இரவு எனப் பொருள்படும் சிவராத்திரியானது ஐந்து வகைப்படும். அவை,

நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி

இதில் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று வரும் மஹா சிவராத்திரி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று முழு உபவாசம் இருப்பர். மஹாராஷ்டிராவில் விரதமிருக்கும் தினத்தன்று "சாபுதானா கிச்சடி" எனப்படும் ஜவ்வரிசி உப்புமாவையோ அல்லது ஜவ்வரிசி வடையையோ மட்டும் ஒரு பொழுது சாப்பிடுவார்கள். காலையில் குளித்தபின், கோவிலுக்குச் சென்று வந்து, அன்றிரவு முழுவதும் சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள் கோவிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்வார்கள். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிலர் அன்று அந்தியில் வெள்ளி முளைத்து அதைக் கண்டபின் விரதம் நிறைவு செய்வார்கள். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அன்றும் பகல் பொழுதை உறங்கிக்கழிக்கக்கூடாது. 

சிவாய நம என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கேற்படாது. 

ஓம் நமச்சிவாய..

LinkWithin

Related Posts with Thumbnails