Monday 21 January 2019

சாரல் துளிகள்

.அகங்காரத்தினுள் தைத்த சொல், வஞ்சம் தீர்ப்பதற்காக பூநாகமெனக் காத்திருக்க ஆரம்பிக்கிறது.

அனைத்தையும் விட மிகக்கொடிய ஆயுதம் எண்ணத்தில் உருவாகிறது. சொல்லும், செயலும், எண்ணத்தொடருமென ஒவ்வொரு நிலையாகப் பெருகிச் செல்வதும் அதுவே.

உள்ளத்தில் சென்று தைக்காத எந்தச்சொல்லும் அலைவுறச்செய்வதில்லை.

ஒரு சொல் அது மதிப்புறும் இடத்தில் மட்டுமே நல்மணியெனக் கொள்ளப்படுகிறது. மதிப்பறியா இடங்களிலோ, அது வெறும் ஒலி மட்டுமே.

கிழிந்த மேகத்தினூடே வழுக்கி விழுந்த சூரியக்கற்றையைக் கொத்திக்கொண்டு போகும் பறவையின் பின் பறக்கிறது சொற்கூட்டம்.

நானாவித சொற்களால் மாசுபட்ட மனதை, மெல்ல கழுவிச் சுத்தப்படுத்துகிறது நற்சொல்மழை.

குவிந்த பூவில் வண்டென, ரீங்காரித்துக்கொண்டிருக்கிறது சொல்லொன்று, வெளியேறும் திசையறியாது.

முதற்பறவையிலிருந்து கிளம்பிய சொல்லுடன், பிற பறவைகளில் ஆரோகணித்திருந்த சொற்களும் இணைந்து உருவான தொடரில் ஒட்டிப்பறந்து கொண்டிருந்தான் ஆதவன்.

அதற்கு மேல் அதைப்பற்றி அறிந்து கொள்ள ஏதுமில்லை எனும்போது அவ்விஷயத்தின் மேல் சலிப்பு கொள்ள ஆரம்பிக்கிறோம்.

சுடரிலிருந்து மெல்ல முனகியபடி பொறியாய்த் தெறித்ததொரு சொல். ஆமாமென்று அதை ஆமோதித்தன சில சொற்கள், இல்லையென ஆட்சேபித்தன வேறு சில. ஆமோதிப்பும் ஆட்சேபிப்புமாய் களத்தில் எரியெழுந்தபோது கள்ளச்சிரிப்புடன் நழுவிச்சென்றது முதற்சொல்.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆழமான சிந்தனையில் விளைந்த கவித்துவமான வரிகள். வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை.., இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails