Tuesday 29 March 2011

ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...

பாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.

"வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் இதமா இருக்கும்.."ன்னு பரிதாபமா கேட்டதும் சரின்னு ஒப்புக்கிட்டார்.(ஒட்டகம் எங்கியாவது பேசுமான்னு ஆராவது கேட்டீங்க ஒட்டகத்து கிட்டயே பிடிச்சுக்கொடுத்துடுவேன் :-)) இன்னும் கொஞ்சம் நேரமானதும் பாதி உடம்பை கூடாரத்துக்குள்ள வெச்சிக்க அனுமதி கேட்டது. கூடாரத்துக்குள்ள கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்குமேன்னு யோசிச்சாலும் ஒட்டகத்து மேல பரிதாபப்பட்டு சரின்னுட்டு ஒரு ஓரமா ஒதுங்கி படுத்துக்கிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரமானதும், 'ரொம்ப குளிருது.. கூடாரத்துக்குள்ளயே வந்துடறேனே'ன்னு சொல்லிச்சு.

'வேண்டாம்.. கூடாரத்துக்குள்ள ரெண்டுபேரு தங்கற அளவுக்கு இடமெல்லாம் கிடையாது'ன்னு அவர் சொல்லிக்கிட்டிருக்கையிலேயே ஒட்டகம் கூடாரத்துக்குள்ள வந்து நின்னுது. சுத்தும் முத்தும் பாத்துட்டு, 'நீ சொன்னது சரிதான், இந்த கூடாரத்துக்குள்ள ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு.. அதனால, நா இங்கே தூங்கறேன். நீ வெளியே படுத்துக்கோ'ன்னு சொல்லி பயணியை வெளியே தள்ளிட்டுது. பாவம் அவர்.. பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததுக்கு தனக்கு இப்படி ஒரு கதியான்னு குளிர்ல வெறைச்சிப்போயி நின்னாரு.

கிட்டத்தட்ட இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. ஒரு காலத்துல, வீட்டுக்கு ஏதாவது பொருட்கள் வாங்குனா, அதை காகிதப்பைகள்ல போட்டுக்கொடுப்பாங்க. சிலசமயங்களல நம்ம அஜாக்கிரதையால பேப்பர் கிழிஞ்சுட்டா, பொருட்கள் எல்லாம் சிந்திடும். முக்கியமா.. மழைக்காலங்கள்ல பேப்பர்லாம் தண்ணியில ஊறிப்போயி பொருட்களும் கெட்டுப்போயிடும். அந்த சமயத்துல, ப்ளாஸ்டிக் பைகள் பேப்பரின் உபயோகத்தை குறைச்சு, மரங்களை காப்பாத்த வந்த ஆபத் பாந்தவன், அனாத ரட்சகனா தெரிஞ்சதுல வியப்பேதும் கிடையாது. பல்பொருள் அங்காடிகளில் மட்டுமல்ல, இப்பல்லாம் சின்னக்கடைகளில் கூட சின்ன அளவுகளான அம்பதுகிராம், நூறுகிராம்லயும் பொருட்களை எடைபோட்டு, பாக்கெட் போட்டு வெச்சிடறாங்க. நாம கேட்டதும் சட்ன்னு எடுத்துக்கொடுத்துடறாங்க.

அதுவுமில்லாம அப்பல்லாம் ஏதாச்சும் வாங்கணும்ன்னா, கையில் பை கொண்டு போகணும். திரவப்பொருட்களான பால்,தயிர், எண்ணெய் இதெல்லாம் வாங்கணும்ன்னா பாத்திரம் கொண்டு போகணும்.இதையெல்லாம் நொச்சுப்பிடிச்ச வேலையா நினைச்ச மக்களுக்கு, மார்க்கெட் போகணும்ன்னா கையை வீசிக்கிட்டுப்போலாம்,  எதுவானாலும், அவங்களே பையில் போட்டுக்கொடுத்துடுவாங்க.. என்ற நினைப்பே தேவாமிர்தமா இனிச்சிருக்கும். பலன்.. கிராமங்கள், பெருநகரங்கள்ன்னு பாகுபாடு இல்லாம ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பைன்னு வாங்கி குப்பையை குவிச்சிக்கிட்டிருந்தாங்க.. ஆனா இந்த விஷயத்துல, கிராமங்களால நகரங்கள விட கூடுதல் குப்பை சேர்க்கமுடியலை.. என்ன இருந்தாலும் நகரத்துக்காரங்க கொஞ்சம் ஃபாஸ்டு இல்லியா :-))

முக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு. இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ?... சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.

நாம வேணாம்ன்னு தூக்கிப்போடற பிளாஸ்டிக்குகள்தான் கொஞ்சம் கொஞ்சமா நம்மோட சுற்றுப்புற சூழ்நிலையை கெடுக்குது. அங்கங்கே உண்டாகும் குப்பை மலைகள், அப்புறம் காத்துல பறந்து ஆபத்தை விளைவிக்கும் பாலிதீன் பைகளைப்பத்தி சொல்லவே வேணாம். இந்தப்பைகளெல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் இதிலெல்லாம் போய் அடைச்சிக்கிட்டா அங்கங்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு அதிலெல்லாம் கொசுக்கள் வாடகை கொடுக்காமலேயே குடியும் குடித்தனமுமா இருக்கும். மழை சமயங்கள்ல வெள்ளம் தேங்கி ஏகப்பட்ட சேதத்தையும் உண்டுபண்ணும். மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருந்ததால்தான் அதுக்கப்புறம் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடைசெஞ்சாங்க. மீறி உபயோகப்படுத்தினா அபராதம்ன்னும் எச்சரிக்கை விடுத்தாங்க.

 நீர், நிலம், ஆகாயம், பூமின்னு இயற்கையின் நாலு பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம் இது. ஒரு பிளாஸ்டிக் துண்டு சிதைவடைய சுமார் ஆயிரம் வருஷங்களாகும். வெயில்ல காய்ஞ்சாலும் நுண்ணிய துண்டுகளாகுமே தவிர முழுசும் அழியாது. இந்த மாதிரி நுண்ணிய துண்டுகள்ல தண்ணீரில் அடிச்சிட்டுப்போறதெல்லாம் ஆத்துலயும் கடல்லயும் ஒதுங்கும், இல்லைன்னா மூழ்கிப்போயிடும். இப்படி மூழ்கற சின்னச்சின்ன துண்டுகளை சாப்பாடுன்னு நினைச்சு கடல்வாழ் உயிரினங்கள் முழுங்கிவெச்சுடும். வயித்துக்குள்ள போன பிளாஸ்டிக் செரிக்காம உணவுமண்டலக்குழாயை அடைச்சிக்கிடும். அதனாலயே பட்டினிகிடந்து மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கறதும் உண்டு.

கடலில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அறுந்ததால் தூக்கிவீசப்பட்ட மீன்பிடி வலைகளில் மாட்டிக்கிட்டும் உசிரைவிடும் கடல்வாழ் உயிர்கள் ஏராளம். சுமாரா நூறுமில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுல கடல்ல ப்ளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கலாமாம். இதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைக்கவே பயமாருக்கு. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் தண்ணீர்ல கரைஞ்சு, மீன்களின் உடலில் கலக்குது. அதே மீனை மனுஷன் சாப்பிட்டா அந்த விஷம் மனுஷனோட உடம்பில் கலந்தா என்னெல்லாம் விளைவுகளை உண்டாக்கும் :-(

அளவுக்கு மேல சேருதேன்னு இதுகளை அழிக்கவும் முடியாது. தானாவே அழியறதுக்கு சுமார் ஆயிரம் வருஷங்களாவுதேன்னு தீக்கு தின்னக்கொடுத்தா அது சுற்றுச்சூழலை இன்னும் மாசுபடுத்துது. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும்போது வெளியேறும் நச்சுவாயுக்கள் கான்சரைக்கூட வரவழைச்சுடும். இதெல்லாம் தண்ணீரில் கரைஞ்சும், காத்துல கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதெல்லாம் சுவாசிப்பதால் நம்ம நரம்புமண்டலமும் பாதிக்கப்படற அபாயம் இருக்கு.

பழைய பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, மெஷின் மூலம் நுணுக்கப்பட்டோ, அல்லது நார்களா உரிக்கப்பட்டோ மறுசுழற்சிக்கு தயாராகுது. மறுசுழற்சி செய்யறதுமூலம் பூமியிலிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்ன்னாலும் அது நிரந்தரத்தீர்வாகாது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தரம் நிச்சயமா குறைஞ்சதாகவே இருக்குது. அதுல காரீயத்தின் அளவு கூடுதலா இருப்பதாகவும், அதை உபயோகப்படுத்தி செய்யப்படும் பொருட்கள், முக்கியமா விளையாட்டுப்பொருட்கள் குழந்தைகள் உபயோகப்படுத்த ஏத்தவை இல்லைன்னும் சொல்லப்படுது. அதுவுமில்லாம உற்பத்தி செய்யப்படும்போது எப்படி நச்சு வாயுக்கள் வெளிப்படுதோ.. அதேமாதிரி மறுசுழற்சி செய்யப்படும்போதும் வெளிப்படுது. இது காத்துல கலக்கறதுனால, தோல் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் எல்லாம் உருவாகுது.

எல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.

1 -  பெட் பாட்டில்கள்,

2 - HDPE ( High Density Polyethylene) லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது.

3 - PVC (Poly Vinyl Chloride)சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது.

4 - LDPE (Low Density Polyethylene) உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது.

5 - PP (Poly propylene) சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது.

6 - P (PolyStyrene) சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.

7 - இதர வகைகள். இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.

இதுல 3,6,7 ஆம் வகைகளை மறுசுழற்சி செஞ்சா சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும். மேலும் கெடுதலை தவிர்க்கணும்ன்னா உற்பத்தி குறைக்கப்படணும். இதனால இதுகளை உற்பத்திசெய்ய ஆகும் பெட்ரோல் செலவும் மறைமுகமா குறைக்கப்படுது. ஆனா, தண்ணியில விட்டதை தண்ணியிலேயே பிடிக்கிறமாதிரி, நாக்பூரில் ராய்சோனி எஞ்சினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா இருக்கும் அல்கா உமேஷ் சட்காவ்ங்கர் என்பவர் மார்ச் 3, 2003 அன்று, ஒருகிலோ ப்ளாஸ்டிக் கழிவிலிருந்து 800கிராம் பெட்ரோலை பிரிச்செடுத்து சாதனை செஞ்சுருக்கார்.

எல்லோருக்குமே சவாலா இருக்கறது பாலிதீன் பைகள்தான். மழைத்தண்ணி பூமிக்குள்ள போகாம இது பெரும்பாலும் தடுத்துடறதால நிலத்தடி நீர் குறையற அபாயமும் இருக்கு. வெய்யில்ல காய்ஞ்சு பொடிப்பொடியாகும் இந்தப்பைகள்ல இருக்கற காரீயம் போன்ற நச்சுக்கள் தேங்கற ஓரளவு நிலத்தடி நீர்ல கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குது. காத்துல பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குது. ஆடுமாடுகளும் அதை இரைன்னு நினைச்சு தின்னுட்டு உணவுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு உசிரை விடுது.

இந்தப்பைகளை குப்பை சேகரிக்கறவங்க கிட்டேயிருந்து சேகரிச்சு அதை bitumen என்ற வேதிப்பொருளுடன் கலந்து ரோடு போடறதுக்கு பயன்படுத்தலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. மதுரை தியாகராஜர் இஞ்சினியரிங் காலேஜ் ப்ரொஃபசரான ஆர். வாசுதேவன்தான் அந்த பெருமைக்குரியவர். நவம்பர் 2002ல் பரிசோதனை முயற்சியா ரோடும் போட்டிருக்காங்க. பைகளையும் அழிச்சாச்சு.. ஆயுசு கெட்டியான ரோடும் போட்டாச்சு.. குப்பைகளை சேகரிச்சு அதுல வரும் காசில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் எளிய மக்களுக்கு வேலையும் கொடுத்தாச்சுன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா :-)

சோதனை முயற்சியின் அடுத்த கட்டமா நம்ம பெங்களூர்ல இருக்கற k.k. plastic waste management கம்பெனி 3500 டன் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி 1200கிலோமீட்டர் தூரத்துக்கான ரோட்டை அமைச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அதேசமயத்துல ஸ்ட்ராங்கான ரோடும் கிடைச்சிருக்கு.
(உபயம்: கூகிளாத்தா)

இருக்கற ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வழி கண்டுபிடிச்சாச்சு.. இனிமேலும் குப்பை சேராம இருக்க என்ன செய்யலாம் !!!

1. கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))

2.தவிர்க்கமுடியாம பைகள்ல பொருட்கள் வாங்க நேரிட்டா.. அதான் நிறைய கிடைக்குதேன்னு பொசுக்குன்னு தூக்கி வீசிடாதீங்க. நம்ம வீட்லயே அதுக்கு நிறைய உபயோகங்கள் இருக்குது. அடுத்ததடவை கடைக்கு போறப்ப அந்த பையை உபயோகப்படுத்தலாம். வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..

3. உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.

4.பாலிதீன் பைகள் நிறைய மிஞ்சிப்போனா, காய்கறி, பூ, மீன் விற்கிறவங்ககிட்ட அவங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்டு, பட்டா தயங்காம கொடுங்க.அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.

5. பார்க், பீச்சுக்கு போனீங்கன்னா, குப்பைகளை மறக்காம குப்பைத்தொட்டியில் போடுங்க. மறந்தும் சாக்கடைகள்ல போட்டுடாதீங்க. அப்புறம் வாசனையால் அந்தப்பக்கமே போகமுடியாது..

6. சிலபேர் கார், பஸ், ட்ரெயின்ல பயணம் செய்யும்போது குப்பைகளை அப்படியே வெளியே வீசுவாங்க. இல்லைன்னா நடைபாதையில் நைசா போட்டுட்டு போயிடுவாங்க. மும்பையில் நகருக்குள் இப்படி குப்பைபோட்டு யாராவது பிடிபட்டா அபராதமும் உண்டு. தெரிஞ்சவங்க வந்தா 'சாக்லெட் தின்னுட்டு கவரை வெளியே வீசாதீங்க'ன்னு முதல் எச்சரிக்கையே அதுதான் :-)

 கடைக்காரங்களும் கொஞ்சம் கவனிக்கணும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை பொறுத்தவரைக்கும் ஒவ்வொண்ணையும் பாக்கெட் போட்டிருக்கறது பத்தாதுன்னு, பில் போடுற இடத்துலயும் பைகளை அள்ளி வழங்குவாங்க. நாலே பைகள் ஆகற இடத்துல ஏழெட்டுப்பைகள். சொன்னாலும் சிலசமயங்கள்ல கேக்கறதில்லை. ட்ரெஸ் எடுக்கப்போனாலும் பேண்ட் ஒரு பையிலும், ஷர்ட் ஒரு பையிலுமா போட்டுக்கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆவுறதில்லைன்னு சொன்னாலும் 'காம்ப்ளிமெண்ட்தானே.. இருக்கட்டும்'ன்னு ஒரு பதில் கிடைக்குது.
( நானே சுட்டது)
இப்ப, 'டி மார்ட்'டில் புதுச்சா ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. அவங்க கொடுக்கற பைகளை திருப்பி அவங்ககிட்டயே கொடுத்துடலாமாம். நுழைவாசல்ல ரெண்டு பெரிய டப்பாக்களை வெச்சு பை சேகரிப்பு நடக்குது. மறுபடியும் உபயோகப்படுத்துவீங்களான்னு கேட்டா, மறுசுழற்சி செய்யறதுக்காம். சரி... நடக்கட்டும்.. நல்ல விஷயங்களெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கணும் :-))




74 comments:

ஹேமா said...

சாரல்...இந்தப் பிளாஸ்டிக் ச்சாத்தான் உலகளாவிய ரீதியில் பிரச்சனைதான்.ஆனாலும் நம் நாடுகளைவிட வெளிநாட்டவர்கள் சொல்பேச்சுக் கேட்பார்கள்.குப்பைக்குள் போத்தலையோ பிளாஸ்டிக்கையோ போட்டுக் கட்டமாட்டர்கள்.இந்த ஒழுங்குமுறை இருந்தாலே ஓரளவு போதும்.ஒட்டகக் கதை பிரமாதம் !

நசரேயன் said...

//k.k. plastic waste management//

கம்பெனி முதலாளி நீங்கதானே ?

நசரேயன் said...

//k.k. plastic waste management//

கம்பெனி முதலாளி நீங்கதானே ?

Unknown said...

நகைச்சுவை கலந்த தெளிவான பயனுள்ள பதிவு.

Chitra said...

சமூதாய அக்கறையுடன் எழுதப்பட்ட நல்ல விழிப்புணர்வு பதிவு. வோட்டு போட்டாச்சு.... பலரையும் சென்றடைய வேண்டும்.

உணவு உலகம் said...

இங்க மதுரையில் பேராசிரியர் வாசுதேவன் சார் பிளாஸ்டிக் ரோடு சம்பந்தமா நிறைய செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல விழிப்புணர்வு பதிவு.பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

இலங்கையில் வடபகுதியில் (2002ல்) இந்த பிளாஸ்டிக்குப் பொருட்களை புலிகள் காசு கொடுத்தே வாங்கி, ரோட்டு போடறதுக்கு கொடுத்திருந்தார்கள். எப்படி வேறு வேறு இடத்தில் ஒரே மாதிரி கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை

Anonymous said...

எங்கள் வீட்டில், கண்ணாடிப் பொருட்களை ஒரு பெட்டியிலும், தகரப் பொருட்களை ஒரு பெட்டியிலும், பிளாஸ்டிக்கை ஒரு பெட்டியிலும் சேர்ப்பார்கள். அந்த பெரிய பெட்டி நிறைந்த பின்னர், சில கடைகளுக்கு அனுப்பிவிடுவார் அம்மா. ரியூஸ் செய்ய / அவர்களு மூலம் ரீசைக்கிள் செய்யும் இடத்திற்கு அனுப்புவதற்கு. பாவித்த பின்னர், கொஞ்சம் கழுவி, காய வைத்து பெட்டியில் போடுவதால் வாடை வராமல் இருக்கும். தினமும் சேரும் கழிவுகளால, காய்கறி கழிவுகள் போன்றவற்றை முறையாக புதைப்பார்கள். நியூஸ் பேப்பர் சேர்ந்த பின்னர், அதை பேப்பர் அச்சடிப்பவர்களிடமே திருப்ப அனுப்புவார். நாமாக உணர்ந்து நடக்கவேண்டும். அது தான் நம்ம தமிழ்ர்களிடம் இல்லையே.

Anonymous said...

இங்கே ஆஸ்ரேலியாவில் வீட்டிற்கு வீடு நாலைந்து பின் இருக்கிறது. பிளாஸ்டிக்குக்த் தனியா, கண்ணாடிப்பொருட்களுக்கு தனியா,அன்றாட கழிவுகளுக்குத் தனியா என்று இருக்கின்றது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டீ மார்ட் ஐடியாவும் நல்லா இருக்கு சாரல்..

குட் போஸ்ட்.. அடிக்கடி நினைவுப்படுத்திகிட்டே இருக்கவேண்டிய விசயம்.

சி.பி.செந்தில்குமார் said...

கும்மி அடிக்கலாம்னு வந்தேன்.. நல்ல பதிவு... ஓக்கே சார்...

சி.பி.செந்தில்குமார் said...

சார்.. இந்த போஸ்ட்டை பசுமை விகடனுக்கு அனுப்புங்க.. செலக்ட் ஆகும்... அட்ரஸ் பசுமை விகடன், 757. அண்ணா சாலை, சென்னை 2

Vidhya Chandrasekaran said...

சுவாரஸ்யமாய் எழுதப்பட்ட சமூக அக்கறையுள்ள பதிவு. பகிற்விற்கு நன்றி சாரல்:)

Paleo God said...

தேவையான இடுகை!


ப்ளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் - சுவாரஸ்யம்!

@அனாமிகா - 90களிலேயே மதுரையில் ப்ளாஸ்டிக் கழிவு கொண்டு ரோடு போட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்!

rkm said...

இடததை கொடுத்தால் மடத்தை பிடிப்பான் என்பதுதான் ஒடகத்தின் கதை... நல்ல உவமை. பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி.

சசிகுமார் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நம் சுற்று சூழலை பாதுகாக்க கண்டிப்பாக பிளாஸ்டிக் தடை செய்யப்பட வேண்டும்.

Asiya Omar said...

மிக அருமையான போஸ்ட் சாரல்,நல்ல தொகுப்பு.பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

விளக்கமாய் அதே நேரம் சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கீங்க. அவசியமான பதிவு சாரல்.

raji said...

ஒட்டகக் கதை உவமை ரொம்ப சரியானது.
நீங்க சொன்ன அந்த ப்ளஸ்டிக் மறு சுழற்சி
பத்தி மாணவர்கள் தெரிஞ்சுக்கணும்கறதுக்காக
எட்டாம் வகுப்பு அறிவியல் பாட திட்டத்தில் வச்சுருக்காங்க.

ஆனா இது எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.
கடைப்பிடிக்கவும் செய்யணும்.பகிர்விற்கு நன்றி

kavisiva said...

சமூக நோக்குள்ள நல்ல பதிவு! எங்க மாவட்டத்தில் (குமரி மாவட்டம்) பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கு. மக்களும் சணல் பை அல்லது துணி பைகள் கொண்டு போய் சாமான் வாங்கறாங்க. கொஞ்சம் கண்டிப்பு காட்டினால் மக்கள் நிச்சயம் ஒத்துழைக்கறாங்க. ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பைகளில் பேக் பண்ணிவரும் பொருட்களைத்தான் ஒண்ணும் செய்ய முடியலை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வெளிநாட்டுக்காரங்க செய்யற நல்ல விஷயங்களை பின்பற்றுவதில்லைன்னு நாம சபதமே எடுத்திருக்கோமே :-)))

இங்கே வீட்டுக்கு குப்பை சேகரிக்க வர்றவங்க, அதுலே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தனியா பிரிச்சு ஒரு பையில் சேகரிச்சு வெச்சுப்பாங்க. மாசம் முழுசும் சேர்த்தா ஒரு தொகை கிடைக்குமில்லே. அதிகப்படி வருமானம் :-))

மும்பையில முந்தியெல்லாம் பழைய பால்கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எடைக்கு எடை பூண்டு கிடைக்கும். அதனால பிளாஸ்டிக்கை தனியா சேகரிப்போம். இப்பல்லாம் அவங்களை காணமுடியறதேயில்ல..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

ரெண்டு தடவை கேட்டதால உங்களுக்கு மட்டும் சொல்றேன்..

நான் ஆக்டிங் முதலாளியாக்கும். அதாவது முதலாளிமாதிரி ஆக்டிங் கொடுக்கறேன் :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கலாநேசன்,

கசப்பு மருந்துன்னாலும் தேன் கலந்தாத்தானே குடிக்கவைக்கமுடியும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

ரொம்ப நன்றிங்க.. ஊதற சங்கை ஊதுவோம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உணவு,

சில வருஷங்களுக்கு முன்னால, ஆவியிலயோ, குமுதத்துலயோ படிச்ச நினைப்பு.. இப்ப தேடுனப்ப மாட்டுச்சு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுனாமி,

க்ரேட் மென் திங்க் அலைக்ன்னு சொல்லுவாங்கல்ல.. அதுமாதிரிதான்
:-)))

எங்கூட்லயும் கூடுமானவரை இதெல்லாத்தையும் சேர்த்துவெச்சு, ரத்திவாலாக்கள் கிட்ட போட்டுடுவோம். ரத்தின்னா பழைய பொருட்கள்ன்னு அர்த்தம். இங்கெல்லாம் பழைய இரும்புச்சாமானுக்கு பேரீச்சம்பழம்ம்ம்ம்ம்ன்னு கூவிக்கிட்டு வரமாட்டாங்க. ஜம்ன்னு ஒரு கடைய போட்டு உக்காந்துடுவாங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

ஆமாம்ப்பா.. இந்த ஏற்பாடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வீட்ல அனாவசியமா பைகள் சேர்ற சீண்ட்ரம் இனிமே இல்லை :-))

kavisiva said...

ஹி ஹீ ஊருக்குப் போயிட்டு வந்ததுல இருந்து ஊர் மோல பாசம் ஜாஸ்தியாயிடுச்சு. அதான் "எங்க" மாவட்டம்னு சொல்லிட்டேன். "நம்ம" மாவட்டம்னு மாத்திப் படிச்சிடுங்க :))

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா விளக்கி இருக்கீங்க மக்கா...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிபி,

அட்ரஸ் கொடுத்ததுக்கு நன்றி.. அப்றம் இந்த சார்.. வெயிலுக்கு இதமா மோர் எல்லாம் வேணாமே.. ப்ரொஃபைலை பாத்துட்டு எப்படி கூப்பிடலாம்ன்னு நீங்களே முடிவெடுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

இப்ப விடுமுறைக்காலமில்லையா.. மக்கள்ஸெல்லாம் சுற்றுலா கிளம்பற நேரம்.. அங்கங்கே பிளாஸ்டிக் குப்பைகளை சேர்த்துட்டு வராம, சுத்தமா விட்டுவெச்சுட்டு வரணுமேன்னும் ஒரு நினைப்புதான் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

ரோடுபோடுறது, பெட்ரோலியத்தை பிரிச்செடுக்கறதுன்னு செய்யப்படற பரிசோதனைமுயற்சிகள் முழுமையா செயல்வடிவம் அடைஞ்சா மிச்சமீதி கழிவுகளையும் தொலைச்சுக்கட்டிடலாம்.. ரெட்டிப்பு பலனும் கிடைக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RKM,

அப்படித்தான் ஆகிப்போச்சு நிலைமை.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, சுதாரிச்சுக்கிட்டா முழிச்சுக்கிடலாம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

முழுக்க தடை செய்யாட்டாலும் ஓரளவு அதன் உபயோகத்தை குறைக்கலாமே..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

பாராட்டுகளுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ரொம்ப நன்றிங்க.

சொல்றதை சொல்லிவைப்போம்... நமக்கும் சேர்த்து :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

//கடைப்பிடிக்கவும் செய்யணும்//

அதைச்சொல்லுங்க..

Menaga Sathia said...

மிகவும் பயனுள்ள தொகுப்பு..நன்றி அக்கா!! பாராட்டுக்களும்..

ராஜ நடராஜன் said...

நானும் கடை கடையா சுத்திகிட்டுத்தான் இருக்கேன்.இந்த இடுகை கண்ணிலேயே படவில்லையே!

//இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ?... சாட்சாத் பெட்ரோலியமேதான்//

பெட்ரோலியமில்லாமல் பொருட்களே இல்லைங்கிற நிலைக்கு உலகம் வந்துடுச்சு இப்ப.

IKEA என்று ஒரு சுவிஸ் நிறுவனம் வீட்டுக்கு வேண்டிய அத்தனை மரப்பொருட்களும் தயாரிப்பதால் மிச்சமிருக்கும் துகள்களை குழம்பாக்கி காகிதப் பை செய்துடுறாங்க போல் இருக்குது.நல்ல தரமான பைகள்.

இந்தியாவில் நகர சுத்திகரிப்பு விசயத்தில் நாம் ரொம்ப ரொம்ப மோசம்.இல்லைன்னா பிளாஸ்டிக் ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை என நினைக்கின்றேன்.

jothi said...

ஒட்ட‌க‌ க‌தையும் எழுத்து ந‌டையும் அட்ட‌காச‌ம். சமூக‌ அக்க‌ரையுள்ள‌ உங்க‌ளின் இந்த‌ ப‌திவிற்கு என் ராய‌ல் ச‌ல்யூட்.

ஆச்சி ஸ்ரீதர் said...

இந்த பதிவு எல்லோரையும் சென்றடையனும்.பல தகவல்கள் சொல்லியிருக்கீங்க.

shanuk2305 said...

rajasthan kota, bundi la only cloth bag thaan kodukkuraanga . adhubola tamilnadulayum seyyalam.

ஹுஸைனம்மா said...

படிச்சு முடிச்சதும், உங்களோட இந்தக் கட்டுரை எந்த பத்திரிகையில் வெளிவந்ததுங்கிற அடிக்குறிப்பைத் தேடினேன். ஆனா, இல்லை!

அவ்வளவு சுவாரஸ்யமும், விவரமும் ஒருசேர்ந்த சமூகப் பதிவு. வாழ்த்துகள் அமைதிக்கா.

ப்ரியமுடன் வசந்த் said...

good post madem..!

ஒரேதா சமூக அக்கறைன்ற பேர்ல பிளேட் போடறவங்களுக்கு மத்தியில அந்த சமூக அக்கறையையும் சுவாரஸ்யமா சொன்ன விதம் (ஓட்டகத்தை பேசவச்சது கிகிகி )பிடிச்சது..!

என்கிட்ட இதுபோல பிளாஸ்டிக் கழிவு கிடைச்சா அதை வச்சு எப்படி கவிதை எழுதலாம்ன்னு யோசிச்சிருப்பேன்..அந்த குப்பை மாதிரியே!! :))

மூளைக்காரன் மூளைக்காரன்தான் வேலைக்காரன் வேலைக்காரன்தான்..!

ப்ரியமுடன் வசந்த் said...

//கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))//

ஹ ஹ ஹா :)) ரைட்டு

ப்ரியமுடன் வசந்த் said...

// வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..//

சாக்ஸ் காலாடைதானே :-))))

ப்ரியமுடன் வசந்த் said...

//உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.//

முடியல :-)))))))) நம்மாளுங்கலப்பத்தி உங்களுக்கு தெரியாததா என்ன? கல்வெட்டுல ஏன் எம்பேரை முதல்ல போடலை ஏன் பின்னாடி போட்டன்னு அடிச்சுக்குவானுங்களே !!!

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.//

Noted I can use this idea after one year :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அவசியமான தகவல்களுடன் நல்ல பகிர்வுங்க..

...நானும் இப்போ எல்லாம் ரீயூஸ் பண்ற மாதிரி பைகள் தான் உபயோகிக்கிறேன்..

...ஏதோ நல்லது பண்றோம்னு ஒரு திருப்தி இருக்கத் தாங்க செய்யுது.

குறையொன்றுமில்லை. said...

அமைதி, இங்க அம்பர்னாத்திலும் சாமான்களைப்ப்ளாஸ்டிக் கவர்ல தர
மாட்டாங்க. நாம வீட்லேந்தே துணிப்பையோ பேப்பர் பையோ கொண்டு போகனும். இங்கு ப்ளாஸ்டிக்குக்கு தடாதான்.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான கட்டுரை.. தனியாகச் சேமிக்கவேண்டிய பதிவு

Anisha Yunus said...

//( நானே சுட்டது)//
சுடறதையும் சுட்டுட்டு இது வேறயா!!

சில வருடங்களுக்கு முன் விகடனில் இது மாதிரி ஒன்றை சென்னையில் ஒரு காலனி மக்கள் செய்ததாக படித்த ஞாபகம். இந்திய அரசு இந்த மாதிரி செஞ்சாலாவது கப்பல் ஏறி இந்தியாவிற்கு அவ்ருகை தரும் வெளிநாட்டு குப்பைகளுக்கு வழி செய்யலாம்!! கோவையில் காம்பவுண்டு சுவர் எழுப்பி வெளிநாட்டு குப்பைகளை காப்பாற்றி வருகிறார்கள். எங்கே போயி முடியும்னே தெரியலை!!!!!!!!!!!!!!

ADHI VENKAT said...

எல்லோருக்கும் பயன்படும் பகிர்வு. நன்றி.

மாதேவி said...

விழிப்புணர்வுப் பதிவு.அனைவரும் கடைபிடிக்க வேண்டியதே.

கோமதி அரசு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு அமைதிச்சாரல்.

”டி மார்ட்டில்” ஏற்படுத்திய திட்டம் நல்லா இருக்கிறது.

இந்த திட்டத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நடராஜன்,

IKEA தகவல் எனக்கு புதுசு..

அடுத்ததடவை கடைக்கு சரியான அட்ரஸைப்பிடிச்சு வாங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜோதி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க திருமதி ஸ்ரீதர்,

ரொம்ப நன்றிங்க உங்க அன்புக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷானுக்2305,

நம்மூர்லயும் ஒருகாலத்துல மஞ்சக்கலர்ல துணிப்பைகளெல்லாம் கொடுத்திருக்காங்க.. சில கடைக்காரங்க அவங்க கடையை விளம்பரம் செய்யறதுக்காக கடைபேர் போட்ட துணிப்பைகளை அன்பளிப்பா கொடுத்ததுண்டு. இப்ப ஜவுளிக்கடைகள்ல பிக் ஷாப்பர் பைகள் கொடுக்கறாங்கல்ல அதுமாதிரி.. ஆனா, அதுக்குள்ள நாலஞ்சு பாலிதீன் பைகளும் இருக்கறதுதான்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அப்ப.. துணிஞ்சு பத்திரிகைகளுக்கு அனுப்பலாங்கறீங்க :-))

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பதிவு.//கடைப்பிடிக்கவும் செய்யணும்//

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

//கடைப்பிடிக்கவும் செய்யணும்//

அதச்சொல்லுங்க.. கொஞ்சம் கஷ்டம்தான், ஆனாலும் நம்ம மக்கள் கடைப்பிடிப்பாங்கன்னு நம்புவோம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்து,

கவிதை எழுதியிருந்தா அதுவும் வித்தியாசமா, ரசிக்கக்கூடியதாத்தான் இருந்திருக்கும். ஆனாலும், உங்களுக்கு தன்னடக்கம் கூடுதல்தான்.

சாக்ஸுக்கு புதுப்பேர் கண்டுபிடிச்சிட்டாங்களா!!.. சொல்லவே இல்ல :-)))

அதாவதுங்க,,, நெறைய நன்கொடை கொடுத்தா அவங்க பேரை கடைசியில போடணும்.. மேட்டர் ஏன்,என்னன்னு புரிஞ்சதா :-)))))))

வசந்தா கிட்ட நல்லபேரு வாங்குறதுக்கு வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

அந்த ஆத்மதிருப்தி அலைபோல் பரவட்டும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா..

கண்டுக்காம விட்ட சவலைக்குழந்தை மாதிரிதான் ஏற்கனவே அம்பர்னாத்தும், உல்ஹாஸ் நகரும் இருக்கு. இந்த நிலைமையில் ப்ளாஸ்டிக்குக்கு தடை போட்டது ரொம்ப நல்ல விஷயம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

டிமார்ட்டுக்கு நானே போயி சுட்டுட்டு வந்தேன் :-))

வெளிநாட்டுக்குப்பைகள் இந்தியாவில் ரொம்பவே பெருகுவது உண்மையிலேயே கவலை தரக்கூடிய விஷயம்தான்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

கடைப்பிடிச்சால் நல்லது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதி அரசு,

திட்டம் தொடர்ந்து நடக்குது கோமதிம்மா.. டப்பாக்கள்தான் நிரம்ப நாள்பிடிக்குது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

என்னை ஊரைவிட்டு தள்ளிவெச்சுட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்:-)))))

ஊர்ல எல்லோரும் நல்லாருக்காங்களா??

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

நன்றி சகோ..

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

ஷர்புதீன் said...

:)

LinkWithin

Related Posts with Thumbnails