Friday 9 April 2010

வெட்ட வெட்ட துளிர்க்கும்.



இப்போ கொஞ்ச காலமா, உலகை உலுக்கிவரும் பிரச்சினைகளில் ஒன்று..சுற்றுப்புற சூழல் மாசடைதல், அதன் காரணமாக பூமி வெப்பமடைதல். இதற்கு நிரந்தரத்தீர்வாக மக்களுடைய விழிப்புணர்வோடு, நெடுங்காலத்தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை, அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம் என்றே தோன்றுகிறது. இருக்கும் மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக,, வெட்டிச்சாய்த்து வருகிறோம்..ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு பதிலாக இரண்டு மரங்களையாவது நட்டு வைக்கவேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எவ்வளவு முயற்சி எடுத்திருக்கும்!!!

ஒரு வீட்டின் முன்..ஒன்றிரண்டு மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், ஏர்கண்டிஷன் பயன்பாடு குறையும்.மின்கட்டணம் மிச்சமாகும்.குளுமையான வேப்பமரத்துக்காத்து யாருக்குத்தான் பிடிக்காது!!. மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும்,கரியமில காத்தை உறிஞ்சிக்கொள்வதன் மூலமும் , சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும்,நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

நாகர்கோவிலில் இருந்து திரு நெல்வேலி செல்லும் பாதையில், முப்பந்தல் என்று ஒரு இடம் வரும். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று உண்டு அங்கே. அந்த இடத்தில்,காவல்கிணறுவிலக்கு வரை ரோட்டின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருக்கும் மரங்கள், ரோட்டில் வெய்யில் விழாதவாறு அடர்த்தியாக வளர்ந்திருக்கும்.வாகனங்கள் செல்லும்போது, பசுமைக்குகை ஒன்றில் செல்லும் உணர்வு ஏற்படும். குளுமையாக இருக்கும். இருசக்கரவாகனங்கள் செல்வதற்கே தடுமாறும் அளவு காற்று வீசும்.இப்போது அந்த இடம் தன்னுடைய முகத்தை தொலைத்துவிட்டது.. சின்ன செடிகள் கூட இல்லை. என்னுடைய அந்த பிரியமான சினேகிதியை, என்னால் மறக்கமுடியவில்லை.

இளைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு வருகிறது என்றே சொல்லவேண்டும். செடிகொடி வளர்ப்பதிலும், மரம் நட்டு பராமரிக்கவேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஏற்கனவே இருக்கும்
மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இவர்களே துடிப்புடன் இருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களில், மரங்களை வெட்டிச்சாய்த்து குடியிருப்புகள்,ரிசார்ட்ஸ் போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது.சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான பிரதேசங்கள் இப்போது வெப்பமடைந்து வருகின்றன.ஊருக்கே ஏசி போட்டமாதிரி இருந்த இடங்களில் இப்போது ஏசி வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவை, குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் ஒருவித வாயு, சுற்றுப்புற சூழலை வெப்பமடையச்செய்வதில் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழல் வெப்பமடைவதால், பருவ நிலை மாற்றங்கள், காலம்தப்பிய மழை,துருவப்பிரதேசங்களில் பனி உருகுவதால், கடற்கரையோர நகரங்களுக்கு ஆபத்து ஆகியவை ஏற்படுகின்றன. எங்க ஊரில்,. மழைக்காலத்துக்கு அப்புறம் ஒரு துளி கூட பெய்யாது. குளிரை முடித்து வைக்க சிறுதூறல், அப்புறம் அடுத்த சீசனுக்குதான் வருணபகவான் எட்டிப்பார்ப்பார். நேற்று, இடி,மின்னல், அப்புறம் லேசாக பூமி நனைதல் என்று விசிட் அடித்தார்.இன்னும் மேகமூட்டம் இருக்கிறது .வெக்கை கொஞ்சம் குறைந்தாலும், நேரங்கெட்ட நேரத்தில் வந்துவிட்டு,வரவேண்டியசமயத்தில் வராமல் ஏமாற்றிவிடுவாரோ என்று ஐயப்பாடு எழத்தான் செய்கிறது. நேற்றைய மழை இங்கே இருக்கிறது.

மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். விளை நிலங்களெல்லாம் ப்ளாட் போடப்பட்டு,வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திடீர் நகர்கள் பல இரவோடிரவாக முளைத்து வருகின்றன. நீர்வளம் மிகுந்த நாஞ்சில் நாட்டிலும் இது பரவிவருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால்,உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் பயிரிடவேண்டிய நிலை ஏற்படும். நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச்செல்லப்போகிறோம்?..எல்லாச்செல்வங்களையும் சுரண்டியபின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப்போகிறோம்?..

மக்கள்தொகை பெருக்கத்தின் ஒரு தேவையாகவும், நகரமயமாக்கலின் விளைவாகவும் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. காற்று, நிலம், நீர் என்று எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் மாசுபடுத்த இந்த அரக்கனால் மட்டுமே முடியும். மும்பையில் அங்கங்கே தொழிற்பேட்டைகள்(இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுகள்)உண்டு. அதில் ஒன்று தலோஜா. தொழிற்பேட்டையை தாண்டியவுடன், சும்மா பச்சைப்பசேலென்று வயல்வெளிகளும் மரங்களுமாய் இருக்கும். பயிர்பச்சைகளின் மணம் முகத்தில் காற்றுடன் வந்து மோதும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் உணர்வு வரும்.இப்போது அந்தப்பகுதியில் முக்கால் பாகத்தை தொழிற்பேட்டை தன்னுடைய கரங்களால் அணைத்துக்கொண்டு விட்டது. இனி அங்கேயும் அமிலக்காற்றுதான் வீசும்.


விளை நிலம் சமப்படுத்தப்படுகிறது.

பக்கத்திலுள்ள நிலங்களில் மரங்களை எரித்து காலி செய்யும் வேலை நடக்கிறது.
இன்னும் சில மாதங்களில் அங்கே ஒரு தொழிற்சாலை, ware house,ஏதாவது கட்டப்படலாம்.

பாதி எரிந்த நிலையில் நிற்கும் இந்த மரத்தைப்பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?..

எனக்கு இதுதான் தோன்றியது......

விருட்சங்களாய்
நிமிர்ந்து நின்றவை;
விறகுகளாய் நிற்கின்றன.

இந்த இடத்தில்தானே இருந்தது?
எனக்கு நிழல் கொடுத்த,
அந்த
பெயர் தெரியா மரம்.

உபயோகமற்றுப் போய்விடவில்லையே?!!
உயிர் நீப்பதற்கு;

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்,
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை;
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.

உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பில்,
எங்கோ ஓரிடத்தில்..


மரங்களின் முக்கியத்துவத்தை நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு மீட்டெடுத்துச்செல்வோம். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள், இப்போது கோடையும் வந்து விட்டது. இந்த சமயத்தில், நம்முடைய பதிவுகளில் இது பற்றிய இடுகை இட்டு, விழிப்புணர்வை பரவச்செய்வோம்.

இதை தொடர நான் அழைப்பது,







இன்னும் விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்.

40 comments:

எல் கே said...

தேவைக்காக மரங்களை வெட்டி சாய்த்தோம். பின் தேவை என்றவுடன் மரங்களை நட முனைகிறோம் . இரண்டுமே சுய நலம்தான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பி//

அருமையான புகைப்படத்துக்கு எழுந்த அருமையான கருத்துரை..

நிச்சயம் தொடர்கிறேன். நன்றிப்பா..(தாமதமாகவானாலும்)

ராமலக்ஷ்மி said...

இதைவிட அருமையாய் வேறென்ன சொல்லிட இயலும்? முடிவாய் வந்திருக்கும் கவிதையில் வெளிப்படுக்கிறது அழுத்தமாய் உங்கள் ஆதங்கம்.

இதிலுள்ள பலகருத்துக்களையே பின்னி எழுதிய சிறுகதையொன்று இதழ் ஒன்றுக்கு அனுப்பியிருக்கிறேன். வெளிவந்தபின் பதிகிறேன். தாமதமானால் வேறுபதிவு இடுகிறேன். எத்தனைமுறை வேண்டுமானாலும் கூறலாம்தானே இத்தகு கருத்துக்களை! அழைத்த அன்புக்கு நன்றி அமைதிச்சாரல்.

pudugaithendral said...

ரொம்ப அழகா தெளிவா நீங்க சொன்னதுக்கப்புறம் நான் என்னத்த சொல்லிடப்போறேன். ஸ்டடி செய்யணும். ட்ரை செய்யறேன்.

இரசிகை said...

payanulla thodar pathivu.........

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

தவறு செய்வது மனித இயல்பு. வெட்டிச்சாய்த்ததில் வேண்டுமானால் சுய நலம் இருக்கலாம். ஆனால் தன் பிழை உணர்ந்து,தவறை திருத்த முயற்சி செய்கையில், சுயநலத்தை விட பொது நலம்தான் மிஞ்சி நிற்கிறது.

வரவுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிங்க.விருப்பம் போல் தொடருங்கள்.

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா எழ்ழுதியிருக்கீங்க...உங்க அனுபவங்களையும் நினைவுகளையும் கலந்து! கவிதை மனசுலே கனத்தை உண்டு பண்ணிடுச்சு..அமைதிச்சாரல்!

பா.ராஜாராம் said...

நல்லா எழுதி இருக்கீங்க அமைதிச்சாரல்!

அழைப்பிற்கு நன்றி.கண்டிப்பா தொடர்வேன்.தாமதமானாலும்...

வெங்கட் நாகராஜ் said...

ஒரு நல்ல பதிவினை படித்த திருப்தி. வெட்ட வெட்ட துளிர்விடும் மரத்தை பூண்டோடு அழிக்கிறார்கள் நம் மனிதர்கள். விளைநிலங்கள் அழிந்து கொண்டே வருகிறது. எங்கே சென்று கொண்டு இருக்கிறோம்?

”அசோகர் சாலை ஓரங்களில் மரம் நட்டார்” என்று படித்தவர்களே மரங்களை வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வருத்தமே மிஞ்சுகிறது.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

அம்பிகா said...

அவசியமான இடுகை.

படமும், கவிதையும் அருமை.

Vidhya Chandrasekaran said...

அருமையான பதிவு.

Radhakrishnan said...

மிகவும் அருமையான இடுகை. மரம் வளர்ப்போம், மனிதம் காப்போம்.

எல் கே said...

//தவறை திருத்த முயற்சி செய்கையில், சுயநலத்தை விட பொது நலம்தான் மிஞ்சி நிற்கிறது.//

இல்லை. இப்பொழுதும் பொது நலம் இல்லை. தனக்கும் பிரச்சனை வரும் என்ற பின்னால்தான் இந்த மரம் நடுவதும் மற்றவையும் ,

இப்பொழுது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் salem- Erode தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதன் விளைவு சேலத்தில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது

நசரேயன் said...

உங்க கடையிலே விழுற மழையை ஊரு பக்கம் திருப்பி விட முடியுமா?

பனித்துளி சங்கர் said...

சிறப்பு . பகிர்வுக்கு நன்றி ! மீண்டும்

மாதவராஜ் said...

அவசியமான பதிவு. கவிதை அலைக்கழிக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி மேடம்,

//வெளிவந்தபின் பதிகிறேன். தாமதமானால் வேறுபதிவு இடுகிறேன். எத்தனைமுறை வேண்டுமானாலும் கூறலாம்தானே இத்தகு கருத்துக்களை!//

காத்திருக்கிறோம்.

வருகைக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரசிகை,

நன்றிப்பா..

ரோஸ்விக் said...

விழிப்புணர்வு வேண்டும்.

இதனோடு தொடர்புடைய இடுகை - http://thisaikaati.blogspot.com/2010/03/globalwarming.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பா.ராஜாராம்,

தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருத்தமாகத்தான் இருக்கிறது.

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துபாய் ராஜா said...

விளைநிலங்கள் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்ட பயன்படுத்தப்படுவது மிகவும் கொடுமை. கவிதையும்,பதிவும் அருமை.

sathishsangkavi.blogspot.com said...

அழகா எழுதி இருக்கறீங்க அமைதிச்சாரல்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராதாகிருஷ்ணன்,

நம்மால் முடிந்ததை கண்டிப்பா செய்யணும்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே.

பொதுப்பிரச்சினைன்னு வரும்போது அது நமக்கும் சேர்த்துத்தான் இல்லையா?.

சாலை விரிவாக்கம் குறித்து நீங்கள் சொன்னது ரொம்பசரி.

வரவுக்கு நன்றி.

வின்சென்ட். said...

தேவையான நேரத்தில் எழுதப்பட்ட புகைபடத்துடன் கூடிய நேர்த்தியான பதிவு. உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி. எனது பதிவு http://maravalam.blogspot.com/2010/04/blog-post.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

ஆஹா.. அருமையான ஐடியாவா இருக்கே.ஊர்ல இதே மாதிரி நிறைய மரங்கள் வளர்ந்தா அதுவே திரும்பிக்கும்..பேச்சுத்துணைக்கு ஆல் வேணுமில்லையா :-))
(ஸ்பெல்லிங் மிஸ்டேக் கிடையாது)

வந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

ஊக்கம் கொடுத்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதவராஜ் அண்ணா,

கருத்துக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரோஸ்விக்,

படங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்.படித்து பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய்ராஜா,

எதிர்காலத்தைப்பற்றிய உணர்வே இல்லாமல் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

நீங்களும்கூட இதைப்பற்றி எழுதி, தொடர்பதிவாக்கினால் இன்னும் நிறையபேரை இது சென்றடையும். நல்ல காரியத்துக்கு தாமதம் வேண்டாம் இல்லையா?!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வின்சென்ட்,

படித்தேன், என் கருத்தையும் சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்களையும் தொடரச்சொல்லலாம்.

வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு மறுபடியும் நன்றி.

Chitra said...

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்,
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை;
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.


...... பின்னீட்டீங்க. அசத்தலான பதிவு. பாராட்டுக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

முதல் வரவுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails