Thursday 1 April 2010

கதை கதையாம்....

சிறுவயதில் இரவு மணி எட்டுக்குள்ளாக, ட்யூஷன்,வீட்டுப்பாடம் முடித்துவிட்டு,ஒன்பதுமணி வரை விளையாடினேன் என்ற பெயரில் தெருவில் ஆட்டம் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து அப்பாவுக்காக காத்திருப்போம், பன்மை விகுதி,என்னையும், மூன்று சகோதரர்களையும் குறிக்கும். இரவு சாப்பாட்டை எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டால்தான், எங்களுக்கு சோறு தொண்டையில் இறங்கும். சாப்பிடும்போதே, அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் நடந்ததை எல்லாம் ஒப்பிப்போம். அப்படியே, அன்று இரவு, என்ன கதை சொல்ல வேண்டும் என்பதை கோடிட்டு காட்டிவிடுவோம்.

அப்பா பெரும்பாலும் சொல்வது, பஞ்சதந்திரக்கதைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். ஒரு நாளில், ஒரே ஒரு கதையை கேட்டு விட்டு தூங்கி எங்களுக்கு பழக்கமில்லை. குறைந்தது நாலைந்து கதைகளாவது சொல்ல வேண்டும். அப்பாவும், பொறுமையாக சொல்வார்கள்.பெரும்பாலும் அவர் சொல்லும் கதைகளில், நரியும், காகமும் வந்துவிடும். எப்படியெல்லாம் உலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை கதைகளிலேயே உணர்த்தி விடுவார்.கதை எப்போது முடிந்தது என்பது தெரியாமலேயே நாங்கள் ஆளுக்கொரு பக்கமாய் சாய்ந்து தூங்கியிருப்போம். என் கடைசி தம்பிக்கு ,இரண்டரை வயது இருக்கும்வரை எங்கள் கதை நேரம் தடங்கலில்லாமல் நடந்தது.அதன்பிறகு, தனக்கு கதை சொல்ல ஒருவர் வேண்டும் என்பதற்காக கடவுள், அப்பாவை அழைத்துக்கொண்டு விட்டார். அதன் பிறகும், முன்பும் நான் வேறுயாரிடமும் கதை கேட்டதில்லை.. கேட்டதில்லை என்பதைவிட ரசிக்கவில்லை என்பது பொருந்தும்.

வாசிப்பது என்பது, எப்பொழுதும் என்னை, என் உலகத்துக்கு இட்டுச்செல்வதாகவே இருந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது, குமுதம், விகடனை எழுத்துக்கூட்டி படிப்பதில் ஆரம்பித்தது, நாளடைவில் கதைப்பைத்தியமாகவே ஆகிவிட்டேன். அம்மா திட்டியதோ,டியூஷன் டீச்சரிடம் வத்தி வைத்து கண்டிக்க செய்வதோ, எதுவும், கதைப்புத்தகத்தை, பாடப்புத்தகத்தில் மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த நிமிடத்தில் மறந்துவிடுவேன், இந்த உலகத்தையும் சேர்த்து.

நாளடைவில் பூந்தளிர் படிக்க கிடைத்தது. என் வாசிப்புத்தோழன் என் கடைசி தம்பிதான். கடையில் இருந்து வாங்கி வந்ததும், என் மடியில் அமர்ந்து கொண்டு,... வாசிப்போம். அப்போது அது மாதமிரண்டு முறை வந்து கொண்டிருந்தது, எட்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.காக்கை காளி,சமந்தகன், வேட்டைக்கார வேம்பு எல்லோரும் எங்கள் தோழர்கள். அதன்பின் champak,அம்புலிமாமா,என்று வளர்ந்து, சுஜாதா கதைகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் தீவிரமடைந்தது. எனது மாமா ஒருவர், அப்போது லைப்ரரி ஒன்றில் உறுப்பினராகியிருந்தபோது பாக்கெட் நாவல் அப்போதுதான் அறிமுகமான சமயம். ராஜேஷ்குமார் மட்டும்தான் அதில் எழுதிக்கொண்டிருந்தார். த்ரில்லர் கதைகளுக்காக விரும்பி படிப்பேன். வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் நாவல்கள், ஒவ்வொன்றாக படிக்க கிடைத்தது. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது, வாசிக்கும் பழக்கம் வந்தது. பாடப்புத்தகங்கள் ஏற்றும் சுமையை, கொஞ்சம் இறக்கி வைக்க முடிந்தது.இப்போதும், சாப்பிடும்போது படிக்க ஏதாவது இருக்க வேண்டும். தவறென்று தெரிந்தும் விட முடியவில்லை.

பள்ளியில் படிக்கும்போது, தமிழாசிரியர் கல்கியை அறிமுகப்படுத்தினார். சாண்டில்யனையாவது, சிலவார இதழ்களில் வாசிக்க கிடைத்தது. கல்கியை வாசிக்க கல்லூரி வரை காத்திருக்க வேண்டி வந்தது. எங்கள் கல்லூரியில், ஒவ்வொருவருக்கும் இரண்டு டோக்கன்கள் கொடுப்பார்கள். அதாவது ஒரே நேரத்தில், இரண்டு புத்தகங்கள் எடுக்க அனுமதி.படித்து விட்டு திருப்பிக்கொடுக்கும்போதுதான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.கோ-எஜூகேஷன் ஆதலால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மட்டும்தான் பெண்கள் லைப்ரரிக்கு செல்ல அனுமதி உண்டு.பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்று நினைவில்லை. இப்போதும் அடிக்கடி சென்னை லைப்ரரி. கொம் சென்று வாசிப்பேன். தமிழாசிரியர் மெர்க்குரிப்பூக்களைப்பற்றி சொன்னதிலிருந்து, பாலகுமாரன் அறிமுகமானார்.ஜெயகாந்தனின் எழுத்துக்களை தேடித்தேடி படித்ததுண்டு.சிவசங்கரி எழுதியதில், நண்டு எனக்கு பிடிக்கும், இன்னொரு நாவலான 'குட்டி' திரைப்படமாகக்கூட வந்தது. சுஜாதாவின்,' கரையெல்லாம் செண்பகப்பூ' எங்கள் லைப்ரரியில் ஒரு நாளும் இருந்ததில்லை. எப்போது கேட்டாலும் யாராவது எடுத்துப்போயிருப்பதாகத்தான் பதில் வரும். காத்திருந்தே மூன்று வருட படிப்பும் முடிந்துவிட்டது. கடைசியில்,திரைப்படமாக பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டேன்.

வாசிப்பை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு தோழியர் வட்டம் இருந்ததில்லை.சின்னத்திரையில் வரும் ஹீரோக்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் டி.வியும் பார்ப்பதில்லை.எனவே, என்வழி எப்போதும் தனிவழியாகவே இருந்து வந்தது.தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் துணைப்பாடம் என்று ஒன்று உண்டு. கதைகள்,கட்டுரைகள் என்று சுவாரஸ்யமாக இருக்கும். அதையெல்லாம் ஒன்று விடாமல் சேர்த்து வைத்திருக்கிறேன். என்பையருக்கும் அதெல்லாம் மிகப்பிடித்தமானவை. அதில்.Around the world in 80 days அவருக்கு ரொம்ப பிடிக்கும். அன்னை தெரசாவின் வாழ்க்கைக்குறிப்பை அவருக்கு வாசித்துக்காட்டியிருக்கிறேன்.

என் குழந்தைகளுக்கும், சிறுவயதிலிருந்தே கதைகள் சொல்வேன். "யாம்பெற்ற இன்பம் பெறுக என்மக்களும்". பையர், எனக்கு மேல் கதைப்பைத்தியம்.தூங்கும்போது, குளிப்பாட்டும்போது, ஸ்கூலில் கொண்டு விடச்செல்லும்போது, என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.சாப்பிடும்போது இருவருக்கும் ஒரே தட்டில், பிசைந்து ஊட்டிக்கொண்டே கதை சொல்வேன். கதையின் சுவாரஸ்யமோ, சமையலின் அருமையோ ஏதோ ஒரு காரணம்.. சாப்பிட ஒன்றரை மணி நேரமாவது ஆகும் :-D.

பசங்கள் அவர்கள் ஸ்கூல் லைப்ரரியிலிருந்து, எனக்காக ஏதாவது புத்தகங்கள் கொண்டு வருவார்கள். சில சமயம், அவர்களுக்கு கதை சொல்ல உதவியாகவும், அது இருந்ததுண்டு. ஹாரிபாட்டர் எனக்கும் விருப்பமுண்டு. ஒவ்வொரு பாகத்தையும் கொண்டு வந்த அன்றே ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு, பையர் படித்து முடிக்கும் வரை நகம் கடித்துக்கொண்டிருப்பேன். அவர் படித்துவிட்டு திருப்பிக்கொடுத்தால்தான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.அப்போதெல்லாம் லைப்ரரி டீச்சர்.. அவரைபார்த்தாலே,'அந்த பெரிய,பெரிய புக்கெல்லாம் கொண்டு போவானே.. அந்தப்பையன்' என்ற ரீதியில்தான் ஞாபகம் வைத்திருந்தார்.

இப்போதைய குழந்தைகளுக்கு,கதை சொல்ல தாத்தா, பாட்டிகள் இல்லை,.. இருந்தாலும் அவர்களுக்கு நேரமில்லை. சீரியல்களில் அவர்களும் மூழ்கி விட்டார்கள்.குழந்தைகளுக்கு வாசிக்க நல்ல தளங்கள் இருக்கின்றன. இணையம் மட்டுமின்றி,அச்சில் வரும் எழுத்துக்களையும் அவர்கள் வாசிக்க, ஊக்குவிக்க வேண்டும்.புத்தகத்தின் வாசனை கணினித்திரையில் வருவதில்லை.எங்கள் குழந்தைகளின் பள்ளியில் ஒரு நல்ல விஷயம், வருடா வருடம் ஏதாவது ஒரு புத்தகக்கடை, அங்கே புத்தக கண்காட்சி நடத்தும். பசங்கள் விரும்பிய புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். டிஸ்கவுண்ட் இருப்பதால் பெற்றோர்களும் சந்தோஷ்மாக வாங்கிக்கொடுப்பார்கள்.

இங்கே, crosswords-ல் அருமையான புத்தகங்கள் கிடைக்கும். The da-vinci code-ன் தாக்கத்தால் அதன் அடுத்த பாகமான, Angels and demons ம் வாசித்தாயிற்று. அடுத்த பாகங்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றன.பெண்ணுக்கு வாசிக்க பொறுமை கிடையாது.ஆனாலும் எனக்காக ஒரு புத்தகம் கொண்டு வந்தாள். ஹிட்லரின் நாஜிப்படைகளின் அட்டகாசத்திலிருந்து தப்பிப்பிழைத்த ஒரு பெண் எழுதிய,The diary of Anne Frank என்ற புகழ்பெற்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை 'Holocaust' என்ற தலைப்பில் இன்னொரு சிறுபுத்தகமாக வெளியிட்டிருந்தார்கள்.அவர், தான் கண்ட, கேட்ட கொடுமைகளைப்பற்றி எழுதியிருந்தார். ஒருவீட்டின் மேல்மாடியில், இருவருடம் தங்கியிருந்த குடும்பத்தினரைப்பற்றிய பகிர்வு, கல்மனதையும் கரையச்செய்யும்.
படித்துவிட்டு சத்தியமாக, நிம்மதியாக இருக்க முடியாது.

பெண்ணுக்கு இப்போதுதான் வாசிக்க, கொஞ்சம் ஆர்வம் வந்திருக்கிறது. Jeffry Archer எழுதிய The eleventh commandment ஐ இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். எப்படியும் இரண்டு வருடங்களில் வாசித்து முடித்து விடுவேன் என்றிருக்கிறார்... :D

கதைகள் கேட்ட, வாசித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தொடர் பதிவுக்கு அழைத்த அம்பிகாவுக்கு நன்றி.

மன்னிக்கவும். அவசரத்தில் நானும், மற்றவர்களை மாட்டிவிட விட்டுப்போய்விட்டது. வாங்க சந்தனமுல்லை, புதுகைத்தென்றல், L.K.

27 comments:

சந்தனமுல்லை said...

நல்லாருந்துதுங்க உங்க கதை அனுபவம்! பப்புவ உங்ககிட்டே அனுப்பி வைக்கலாமான்னு யோசிக்கறேன்! :-)

எல் கே said...

armayana anubavam. neengalum poonthalir padichathu unda? enakkum athuthan starting. appuram en appa arimuga padutiathu the hindu paper padikka, pinbu en paati(ammavoda amma) moolama ponnyin selvan appuram methuva, sandilyanlam padichen, ippa maximum online magazines and books than printed edition pakkam porathuilla

மாதேவி said...

புத்தகங்களுடனான உங்கள் அனுபவம் நன்று.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு அமைதிச்சாரல்.

கரையெல்லாம் செண்பகப்பூ தொடராக வந்த போது அதிகாலை விகடன் வரக் காத்திருந்து வாசித்து விட்டு பள்ளிக்கு சென்று பகிர்ந்திட்ட காலம் நினைவுக்கு வந்தது. திரைப்படம் கதையளவுக்கு இல்லை.

துணைப்பாடல் நூல் எனக்கும் பிடித்தமானது:)!

சந்தனமுல்லை said...

அழைப்புக்கு நன்றி அமைதிச்சாரல்! :-) ஏற்கெனவே எழுதிவிட்டதாக நினைக்கிறேன்...ஆனால் தொடர்பதிவாக மாற்றவில்லை...ஆனால், அனுபவங்கள் கிட்டதட்ட அதேதான் :-)

http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_20.html

அன்புடன் அருணா said...

non-detail periods எனக்கும் மிகவும் பிடித்தமானது...அருமையான பதிவும் பகிர்வும்!

துபாய் ராஜா said...

படிக்கும்போது ஏற்படும் பலவிதமான உணர்சிகளை எழுத்திலே எங்களுக்கு தந்துவிட்டீர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

ஆஹா... கரும்பு தின்னக்கூலியா!!!

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

கட்டுக்கட்டாக அம்புலிமாமா,பாலமித்ரா இருந்தாலும் பூந்தளிரைக்கண்டால் எல்லாவற்றையும் ஓரம் கட்டி விடுவேன்.இப்போது அதன் ஆங்கிலப்பதிப்பான டிங்கிள் எனக்கும், பையருக்கும் ஃபேவரிட்.ஆனா, இப்பல்லாம் மறுபதிவுதான் அதில் நிறைய வருகிறது.

நீங்களும் உங்கள் அனுபவத்தை எழுதலாமே.. வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க. உங்க கிச்சன்ஜோக்ஸ் பிரமாதம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆமாங்க.. பொதுவா திரைப்படத்துக்கு டைம் லிமிட் இருப்பதால் நிறைய சுருக்கி, மாற்றி விடுகிறார்கள்.சுவாரஸ்யம் கொஞ்சம் கம்மியாதான் இருக்கும்.துணைப்பாடம் உங்களுக்கும் பிடிக்குமா!!

விரும்பினால் உங்கள் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

சந்தனமுல்லை,

பதிவை படித்திருக்கிறேன். கோள்மூட்டி கோமளாதானே.. அருமையா இருந்ததுப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்புடன் அருணா மேடம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய்ராஜா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரஸ்யமான அனுபவப்பகிர்வு...

மெர்க்குரிப்பூக்கள் தலைவரோடது என்னோட ஃபேவரிட்.....

pudugaithendral said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், கதை சொல்லாமல் போய்விட்ட அப்பா மேல் எனக்கு வருத்தம். இத்தனை அருமையான மகளைவிட்டுப் போனதும் அம்மாவால் கதை சொல்ல முடிந்திருக்காது.
இருந்தும் நல்லதொரு விதையை உங்களில் விதைத்திருக்கிறார்.
உங்கள் தம்பிகளும் படிக்கிறார்களா.

சாப்பிடும்போது புத்தகம் இல்லாவிடில் என்னால் சாப்பிட முடியாது. மாமியார்,மாமனார்,கணவர் எல்லாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகும் ,இது தொடர்கிறது. இப்போது பிள்ளைகள் வந்தால் மட்டும் படிப்பதில்லை:)
அழகாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

அப்படியெல்லாம் தப்பிச்சுட முடியாது :-))).

வரவுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உடம்பு ஏதாவது அசௌகரியமோ!!ரொம்ப நாளா காணோமே,பதிவும் போடலையேன்னு இன்னிக்கு காலைலேர்ந்து நினைச்சுக்கிட்டேர்ந்தேன்.மெயில் போடலாம்ன்னா கரண்ட் கட். இப்ப வந்தா, கரெக்டா நீங்க வந்திருக்கீங்க.

தம்பிகள் அவரவர் வழியில் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள். இப்ப,பசங்களுக்கு வாசிச்சுக்காட்ட,சிடி போட்டுக்காட்டன்னு பிஸி. கடைசித்தம்பி என்னிலிருந்து பத்துவயது இளையவர், கிட்டத்தட்ட என்னுடைய வளர்ப்பு.அவருக்கு மட்டும் கொஞ்சம், வாசிக்கிற பழக்கம் மிச்சமிருக்கு.

சாப்பிடும்போது நீங்களும் புத்தகம் படிப்பதுண்டா.. ஹை!!!..

வரவுக்கு நன்றி வல்லிம்மா.

எல் கே said...

sapidarappa book padichu niraya tittu vangi irukken. ippavum undu (akkakitta irunthu)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

திட்டெல்லாம் சாப்பாட்டோட சேர்த்து ஜீரணமாகியிருக்குமே :-)))).அப்பாவும் கூட்டா... அப்போ யாரும் எதுவும் பண்ண முடியாது. :-)).

வந்ததுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

தமிழ் துணைப்பாடநூலில் “நான் வந்துவிட்டேன் - கஸ்தூரி” கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எல்லாருக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

இந்த தொடர்பதிவின் மூலம் பல புத்தங்களின் அறிமுகம் கிடைக்கிறது. மகிழ்ச்சி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

லேட்டான பதிலுக்கு மன்னிக்கவும்.கப்போர்டை ஒழிக்கும்போது தொலைச்சு ரொம்ப நாள் ஆன பொருள் திரும்பக்கிடைக்குமே அப்படி இருக்கு இப்போ.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

இந்த தொடர்பதிவின் நோக்கமே அதுதானே.

நன்றிங்க வரவுக்கு.

Ahamed irshad said...

அருமையான இடுகை... சூப்பர்.

LinkWithin

Related Posts with Thumbnails