Tuesday, 20 June 2017

அயினிச்சக்கை என்ற அயினிப்பலா.

அயினிப்பலா அல்லது அயினிச்சக்கை என அழைக்கப்படும் இந்தப்பழத்தின் தாவரவியல் பெயர் Artocarpus hirsutus ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது. முப்பத்தைந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற snake boats அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டார், திற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது. தொட்டிப்பாலத்தைக் காணச்செல்லும்போது வழி நெடுக இருக்கும் ரப்பர் தோட்டங்களினூடே அயினி மரங்களும் அதிகம் வளர்ந்திருப்பதைக்காணலாம். 

அயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் மினியேச்சர் போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது சகஜமான காட்சி. நான் தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு பழம் பத்துப்பைசாவிற்கு விற்கும். அப்போதெல்லாம் அது பெரிய தொகை. ஆகவே இரண்டு மூன்று பேர் சேர்ந்து காசு போட்டு பழம் வாங்கி பங்கு பிரித்துக் கொள்வோம்.
பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம். இவ்விதையின் பொடி, ஆஸ்துமாவிற்கு அருமருந்து எனச்சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நாகர்கோவிலுக்குப் போயிருந்த சமயம், டதி ஸ்கூலை ஆட்டோ கடந்தபோது அயினி கண்ணில் பட்டது. சிறுவயது நினைவுகள் மேலெழ, சுவைத்தே ஆக வேண்டுமென கொதியுண்டாயிற்று. மறுநாள் போய் வாங்கி வந்து விட்டேன். ஆஹா.. ஆஹா.. இதைக் கையிலெடுத்து எத்தனை வருடங்களாயிற்று. பழத்தை மெல்லக்கையிலெடுத்து சுளை பிரித்து வாயிலிட்டேன். அபாரம்!! அப்படியே நினைவுத்தேரிலேறி பள்ளி நாட்களுக்கே போய் விட்டாற்போலொரு ஆனந்தம். யாம் பெற்ற இன்பம் என் மக்களும் பெறட்டுமென்று பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். பழத்தைச் சுவைத்த மகள் சில விதைகளை மும்பைக்குக் கொண்டு வந்து மண்ணில் ஊன்றி அவையும் முளைத்திருக்கின்றன. கன்றுகளானதும் வெளியே கொண்டு போய் மண்ணில் நட வேண்டுமாம். நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
நாகர்கோவிலில் பள்ளிகளின் வெளியே மட்டுமன்றி, வடசேரியிலிருக்கும் கனகமூலம் சந்தையிலும் கிடைக்கும். மேலும், நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையிலும், சுங்கான்கடை எனும் இடத்தினருகே குவியல் குவியலாக விற்பனைக்கு வைத்திருப்பதைக் காணலாம்.

Friday, 16 June 2017

திரு. நாறும்பூநாதனின் பார்வையில் - "சிறகு விரிந்தது"

நெல்லை மண்ணுக்கேயுரிய மண்வாசனையுடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு. நாறும்பூநாதன் அவர்களுக்கு கோவில்பட்டியின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையிலும் மிக முக்கிய இடமுண்டு.  "கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல" போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும், "கண் முன்னே விரியும் கடல், யானைச்சொப்பனம்" என்ற கட்டுரைத்தொகுப்புகளையும், வெளியிட்டுள்ளார். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவருமாவார். எனது கவிதைத்தொகுப்பான  "சிறகு விரிந்தது" பற்றி அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 
 
சாந்தி மாரியப்பனின்"சிறகு விரிந்தது"(கவிதைத் தொகுப்பு )
---------------------------------------------------------
கடந்த ஜனவரி மாதமே சென்னை புத்தகக்கண்காட்சியில் வாங்கிப் படித்து விட்டேன் என்றபோதிலும், உடனடியாக அபிப்பிராயம் சொல்லாமல் காலம் தாழ்த்தி விட்டேன். 

இவரது நிழற்படங்களை ரசித்த எனக்கு, தற்போது தான் கவிதைகளை வாசிக்க நேரம் கிடைத்தது. திருநெல்வேலியில் பிறந்து (சரிதானா..?) தற்போது மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், அவ்வப்போது நெல்லை பாஷையில் பின்னூட்டங்கள் இடுவார். அவரது முதல் கவிதை தொகுப்பு இது.
"கால் தடம் பதியாப்பாதையெனவும் 
எழுதப்படாத வெற்றுக் காகிதமெனவும் 
முன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம்"
என்றொரு கவிதை துவங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை தெளித்து விட்டு, இறுதியில் 
"அற்புதமானதாகவோ 
சாதாரணமாகவோ 
ஏதேனும் ஒரு கிறுக்கலையாவது 
பரிசளிப்பது மிக நன்று 
அதை வெறுமையாகவே விட்டு செல்வதை விட.."
என்று அற்புதமாக முடித்திருக்கிறார். 

கள்ளிப்பால் குடித்த சிசுவொன்றின் சன்னமான குரல் இன்னொரு கவிதையில் ..
"உணவென்று நம்பி அருந்திய பால் 
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே 
உறக்கம் கொண்டு விட்டோம் 
கள்ளித்தாய் மடியிலேயே 
பெற்றவள் முகம் கண்ட திருப்தியினூடே 
அறுக்கிறதொரு கேள்வி 
என் முகம் அவள் பார்த்த 
தருணமென்றொன்று இருந்திருக்குமா"
என்று கேள்வி பெற்றவளுக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் தான்.

இவரது கவிதைக்குள் சஞ்சரிக்கும்போது, சில வரிகளில் கடக்க முடியாமல் மனம் நங்கூரமிட்டு அங்கேயே நின்று விடுகிறது. 
உதாரணத்திற்கு...
"சட்டைப் பையைத்துழாவும் கைகள் 
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும் 
கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெல்லாம் .."
என்ற வரிகள் நம்மை வேறொரு நினைவுக்கு திசை திருப்பி விடுவது தற்செயலானதா அல்லது இவரது கவிதையின் இயல்பா என்று தெரியவில்லை. 

"துரத்தித்திரிந்த தும்பிகளையும் 
பூவரச இல்லை பீப்பியையும் 
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து 
விவரிக்கும்போது 
பனையோலைக் காற்றாடிகளுடன் 
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள் 
சென்ற தலைமுறையின் 
மனதெங்கும் அப்பிக்கிடக்கும் 
செம்மண் புழுதியில்.."
என்று பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, கணினியில் உழலும் கூண்டுக்கிளிகளை பார்த்து நகைக்கிறார்.

"பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து 
மெல்லக் கண்பொத்தி 
கன்னம் கடித்த தருணங்களில் 
சீறிச்சினந்ததை பொருட்படுத்தாமல் 
சில்லறையாய் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை"
என அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கவிதை உச்சம்..!

ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தைகள் உண்டா என்ன ?
கி.ரா.வின் கதவு கதையை நினைவுபடுத்தும் கவிதை இவரது"ரயிலோடும் வீதிகள்".
"அலுத்துப்போன கடைசிப்பெட்டி 
சட்டென்று திருப்பிக்கொண்டு இஞ்சினாகியதில் 
வேகம் பிடித்த ரயிலில் 
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது 
முன்னாள் இன்ஜின் 
வலியில் அலறிக்கொண்டு"
என்று வாழ்வின் அவலங்களை சற்றே மறந்து சிரிக்க வைக்கிறார்.

இவரது நிழற்படங்களை போலவே, நுட்பமான வாழ்வின் பதிவுகளை கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். இவர்"வல்லமை"என்ற மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர்."அமைதிச்சாரல்"மற்றும்,"கவிதை நேரம்"போன்ற வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வரும் சாந்தி மாரியப்பன் தொடர்ந்து அடுத்தடுத்து தொகுப்புக்கள் கொண்டு வர வாழ்த்துகிறேன்!


மதிப்புரைக்கு நன்றி திரு. நாறும்பூநாதன் அண்ணாச்சி.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

Sunday, 14 May 2017

சக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.

பலாப்பழ சீசன் வந்ததும், பழமாகவே செழிக்கத்தின்று அலுத்த நாக்கு வேறு சுவையை நாடும் சமயம், வீடுகளில் சக்கையப்பம் அவிக்கப்படும். பொதுவாகவே பழச்சாறு அருந்துவதை விட பழமாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட விடாமல் வெவ்வேறு வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட வைக்கிறது மனிதனின் நாலு இஞ்ச் நாக்கு. அதைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் மனிதன் வெற்றியடைந்தானா எனக்கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

பலாப்பழத்தை கீற்றுகளாக அரிந்தும் விற்பனைக்கு வைப்பார்கள். அந்தக்கீற்றுகளை கன்யாகுமரி மாவட்டத்தில் "முறி" என்று அழைப்பதுண்டு. சில வீடுகளில் தேவைக்குத்தக்கபடி ஒன்றிரண்டு கீற்றுகள் வாங்கி வருவர். சில வீடுகளிலோ முழுப்பழமும் வாங்கினால்தான் கட்டுபடியாகும். அப்படி வாங்கி வந்தாலும், அத்தனையும் கொடுக்காமல் "நெறயத்திண்ணா செமிக்காது மக்ளே" எனக்கூறி விட்டு கொஞ்சத்தைப் பதுக்கி விடுவாள் அம்மை. எதற்கா?.. எல்லாம் பலாப்பழ பணியாரம் செய்வதற்குத்தான்.

ஊறப்போட்ட சம்பா பச்சரிசியை நன்கு கழுவி, கல் இல்லாமல் வடிகட்டி ஆட்டுரலிலோ கிரைண்டரிலோ இட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, முக்கால் பக்குவம் அரைந்ததும் பலாச்சுளைகளைச்சேர்த்து அதையும் அரைத்து, இட்லி மாவு பக்குவத்தில் அரைந்ததும் பொடித்து வைத்த வெல்லம் மற்றும் துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கை அள்ளிப்போட்டு கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும். அரைக்கும்போதே மணம் நாவூறச்செய்யும். 

இரண்டு உள்ளங்கையளவு அகலமாக அரிந்து வைத்த வாழையிலைத்துண்டில், ஒரு பக்கமாக மாவைப்பரத்தி புத்தகத்தை மூடுவதுபோல் மீதமிருக்கும் இலைப்பகுதியால் மூடி, இலேசாக அழுத்தித் தடவினால் மாவு நன்கு படர்ந்து கொள்ளும். இதை இட்லித்தட்டில் அடுக்கி ஆவியில் வேக வைத்தால், பத்து நிமிடத்தில் சக்கையப்பம் சாப்பிட ரெடியாகி விடும். இது பாரம்பரிய முறை.

ஆனால், இப்போதிருக்கும் அவசர யுகத்தில், இப்படியெல்லாம் ரொம்பவும் மெனக்கெடத்தேவையில்லை. உங்கள் வீட்டில் சம்பா புட்டு மாவு இருந்தால், சட்டென்று செய்து பட்டென்று பரிமாறி விடலாம். நான் அப்படித்தான் பரிமாறினேன். வாங்கி வந்ததில் பதுக்கி வைத்த பத்து பலாச்சுளைகளை விதை நீக்கி வைக்கவும். மிக்ஸியின் சட்னி ஜாரில் மூன்று அச்சு வெல்லத்தை உடைத்துப்போட்டு, whip பட்டனை லேசாகத் திருகித்திருகி அரைக்கவும். நன்கு அரைபட்டவுடன் வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின், அதே ஜாரில் பலாச்சுளைகளைப்போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அதிகம் அரைந்தால் பரமாத்மாவுடன் ஒன்றிய ஜீவாத்மாபோல் மாவில் கரைந்து காணாமற்போய் விடும். சாப்பிடும்போது ஓரிரு இழைகள் பழமும் பல்லில் பட வேண்டும். அப்போதுதான் சக்கையப்பம் சாப்பிட்டதாக அர்த்தம். 

இப்படியாக அரைக்கப்பட்ட பழத்தை, வெல்லத்துடன் சேர்க்கவும். பின் ஒரு கப் சம்பா புட்டு மாவு, அல்லது சாதா புட்டு மாவு, அதுவுமில்லையெனில் இடியாப்ப மாவு என எது கைவசமிருக்கிறதோ அதைச் சேர்க்கவும். அரிசி சேர்க்க விருப்பப் படாதவர்கள் சோளமாவு, ராகி, கேழ்வரகு என சிறுதானிய மாவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் புட்டு மாவுடன் சோள மாவு சேர்த்தேன். இதோடு துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கையளவு சேர்க்கவும். நாஞ்சில் நாட்டில் வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளுக்கு சுக்கு பொடித்து சேர்ப்பது வழக்கம். அந்தப்படியே மிளகளவு சுக்குப்பொடியும் சேர்த்தாயிற்று. இத்தனையையும் சேர்த்து, தேவைப்பட்டதால் சிறிது தண்ணீரும் சேர்த்துப்பிசைந்து, வீட்டில் வளர்க்கும் வாழைமரத்திலிருந்து நறுக்கி வந்த இலையில் பரத்தி வேக வைத்து எடுத்தாயிற்று. அவித்த முதல் நாளே காலி செய்து விட வேண்டும். இல்லையெனில், ஊசிப்போய் நூல் கோர்த்துக்கொள்ளும். ஆனால், அப்படி ஆக விட மாட்டார்கள் நம் வீட்டுக் குழந்தைகளும், பெரிய குழந்தைகளும். தெவிட்டாமலிருக்க மாங்காய்ப்பச்சடி, ஊறுகாய் போன்றவற்றையும் துளி எடுத்து நாக்கில் தடவிக்கொள்வது சுவை கூட்டும். அதை விட, மொறுமொறுவென சுடப்பட்ட பருப்பு வடை உத்தமச்சுவை.

எப்போது பலாப்பழம் வாங்கி வந்தாலும், சக்கையப்பம் செய்யவென எடுத்து வைக்கப்படும் சுளைகள், "அப்புறம் செய்து கொள்ளலாம்" என திட்டம் தள்ளிப்போடப்பட்டு அப்படியே சாப்பிடப்பட்ட காலம் போய், சக்கையப்பம் செய்து பிள்ளைகளும் சாப்பிட்டது இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறை. இனி இது தொடரும்..

Monday, 24 April 2017

ஒரு சிறு இசை(வண்ணதாசன்) - புத்தக விமர்சனம்

கவிழ்ந்து படுத்துக்கொண்டு அடம்பிடிக்கும் குழந்தையாய் இதழ்களைப் பரப்பிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் பாதிரிப்பூவை மென்கரங்களால் வருடி ஆற்றுப்படுத்தும் மென்காற்றைப்போன்றது வண்ணதாசனின் எழுத்து.. நம் மனம்தான் அந்தப்பாதிரிப்பூ. அம்மென்காற்றிலிருந்து பிறந்த “ஒரு சிறு இசை” நம்மை எந்தெந்த உயரங்களுக்கோ கொண்டு சென்று, லயிக்கவும் வாழ்வின் வண்ணங்களைத் தரிசிக்கவும் வைக்கிறது.

நித்திய வாழ்வின் வலிகளைச் சுமந்தலைகிற மனிதர்கள் சற்றே அன்பின் நிழலில் இளைப்பாறுவதும் அந்நிழல் அவர்களுக்குக் கிடைப்பதும் எத்தகைய கொடுப்பினை. பிரதிபலன் எதிர்பாராமல் அமிர்த ஊற்றாய் அன்பைச்சொரியும் மனிதர்கள் வாய்ப்பது எத்தகைய வரம். முரட்டு மனிதர்கள் என நாம் எண்ணுபவரிடத்தும் அத்தகைய அடைபட்ட ஊற்றுக்கண் திறக்கப்படக் காத்திருக்கக்கூடும். அத்தகைய அன்பை மையமாய்க்கொண்டவையே வண்ணதாசனின் கதைகள். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே முகிழ்த்த அன்பாய் இருந்தால்தான் என்ன? எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் அன்பு அன்புதானே?. சற்றே நூல் பிசகினாலும் வேறு வண்ணங்கொள்ள சாத்தியமுள்ள அந்த அன்பை விகல்பமில்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லிச்செல்வதுதான் வண்ணதாசனின் வெற்றி.

பதினைந்து சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத்தொகுப்பிற்கு, 2016-ம் ஆண்டுக்கான "சாகித்ய அகாடமி" கிடைத்துள்ளது. இத்தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையிலுமே ஒரு சிறு இசை ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது. அன்பின், நேசத்தின் இசை நம்மைச்சூழ்ந்து கொள்வதை உணர முடிகிறது. ஒவ்வொரு மனித மனமும் ஒரு பெட்டியே. எத்தனையோ ரகசியங்களை அது ஒளித்து வைத்துக்கொண்டு பொருத்தமான சாவிக்காகக் காத்திருக்கிறது. சரியான நேரத்தில் அது திறக்கப்படும்போது வெளிப்படும் சிறு இசை, அதற்குரிய அங்கீகாரத்தை அடைகிறது. மணமானவுடனே விதவையாகி விட்ட மூக்கம்மா ஆச்சியின் அடிமன ஆசையை அவள் அக்காள் புரிந்து கொண்டு, தன் கணவரின் சட்டையோடு மூக்கம்மா ஆச்சியின் புகைப்படத்தைச் சேர்த்து வைத்து அதற்குரிய அங்கீகாரத்தை வழங்கியதைப்போல், பிரமநாயகத்தை கல்பனா ஸ்டுடியோவில் தம்பதியாகப் போட்டோ எடுத்துக்கொள்ளச்சொல்ல வேண்டுமென்று கைலாசம் விழைவதைப்போல், இக்கதைகளில் ஆங்காங்கே ஒலிக்கும் சிறு இசை ஓர் இசைக்கோர்வையாய் நம் மனதை நிறைக்கிறது.

நிரப்புவதும் நிரம்புவதும் அத்தனை எளிதா? எத்தனை மார்ட்டின் மல்லிகள் பூத்தாலென்ன? எத்தனை குருவிகள் வந்து தண்ணீர் அருந்தினாலென்ன? மரமல்லிகள் உதிர்ந்து பாய் விரித்தாற்போல் பரந்து கிடந்தால்தான் என்ன? பிறந்த பெண்குழந்தையைப் பறி கொடுத்து விட்டு வெறுமையாய்க்கிடக்கும் குருசாமி-பார்வதி தம்பதியரின் முற்றம், “நம்ம வீட்டுக்குப் போலாமா?” என அவ்வீட்டின் தகப்பன் கூட்டி வரப்போகும் நாய்க்குட்டியால் நிச்சயம் நிரம்பி விடும். ஒரு தாமரைப்பூ போதும் ஒரு குளத்தை நிரப்ப. ஒரு பூ உதிர்ந்தாலும் இன்னொரு பூ இட்டு நிரப்பும்.. சுப்புவைப்போல். ஒரே ஒருத்தர் அத்தனை பேர் இடத்தையும் நிரப்புவதுதானே விசேஷம்.

காந்தி டீச்சருக்கும் நமசுவின் அப்பாவுக்கும் இருக்கும் உறவுக்கும் தண்டவாளங்களுக்கிடையே இருக்கும் உறவுக்கும் வித்தியாசமொன்றுமில்லை. அருகருகே இருந்தாலும் நெருங்கிச்சென்று இணைவது போல் தோற்றம் காட்டினாலும் இணைவதேயில்லை. அப்படி இணைந்து விட்டாலோ அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆகவே அதை அப்படியே தாண்டிப்போய் விட வேண்டியதுதான். சிந்திய தண்ணீரைத் தாண்டுவதைப்போல் நமசுவின் அப்பா அவ்வுறவைத் தாண்டிச்செல்வதும், காந்தி டீச்சர் தண்டவாளத்தைத் தாண்டிச்செல்வதும் ஒன்றுதான். 

பொழுது போகாமல் ஒவ்வொருவர் வாழ்விலும் விளையாடும் சதுரங்கம்தான் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் அது ஏற்படுத்தும் பாதிப்பும். வெற்றி தோல்வி மனப்பான்மை ஏதுமின்றி, வாழ்வதை ஒரு கடமையாக மட்டும் எடுத்துக்கொண்டு வெறுமையான மனங்களுடன் இருப்பது வேறென்னவாக இருக்க முடியும்? இத்தனை சிறு களத்தில் எத்தனை போட்டி, பொறாமை, சந்தேகம், சக உயிரின் மீது அன்பின்மை, சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் வெட்டி வீழ்த்தத்துடிக்கும் வஞ்சகம், புரிந்து கொள்ளாத சித்திரவதை என எத்தனை விதமான நகர்வுகள்!! அத்தனைக்கும் ஈடு கொடுத்து விளையாடி முடித்தபின் இறுதியில் கணக்குப்பார்த்தால் நம் கையில் மிஞ்சுவதென்ன? வாழ்நாள் முழுவதும் ஒருவரோடொருவர் இணக்கமின்றி இருக்கும் அம்மச்சி டீச்சருக்கும் அவள் கணவனான சூரிக்குமிடையே நடக்கும் போராட்டத்தில் தனுக்கோடிக்கும் நிச்சயம் ஒரு பங்கிருக்கிறது. அறிந்தோ அறியாமலோ அச்சதுரங்கத்தில் அவரும் ஒரு காயாக இடம் பெற்று, அலைக்கழிந்து பின் தானாகவே விலகிச்சென்று விடுகிறார். அதன்பின்னும் அவர்கள் மனம் ஒட்டாமல் வாழும் வாழ்வே “பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்” 

நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்து புழுங்கும் வாழ்வின் இடுக்குகளில் அன்பின் தென்றல் வீசுவது எத்தனை சுகம்!! அப்படி அன்பு வெளிப்படும் அரிய தருணங்களை வெளிப்படுத்தி காட்சிப்படுத்துபவை வண்ணதாசனின் கதைகள். உரைநடை வரிகளினூடே இழையோடிச்செல்லும் கவிநயம் வாசிப்பை ஆனந்தமானதாக்குகிறது. படிமங்கள் நிரம்பிய சிறுகதைகள் எளிமையான வரிகளால் பின்னப்பட்டிருந்தாலும் சற்றே ஆழ்ந்து வாசிக்குங்கால், அத்தனை கனமான உட்பொருளையும் கொண்டுள்ளது. சிந்திக்குந்தோறும் அதன் பொருள் விரிந்து வாசகனின் சிந்தனையை விரிவாக்குகிறது. வாசக மனதை அங்கிங்கு அலைய விடாமல் கட்டிப்போடும் சீரான ஒழுக்குப்போன்ற மொழிநடை இன்னொரு பலம். ‘குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய நூலாம்படையின் நிழல் எதிர்ச்சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து விலகியது’ போல் நம் மனதில் இச்சிறுகதைத்தொகுப்பின் மாந்தர் வரையும் சித்திரங்களும் அத்தகைய அரூபமானதே.

ஆசிரியர்: வண்ணதாசன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்.
இணையத்தில் வாங்க: 





Wednesday, 19 April 2017

செம்பருத்தி(தி.ஜானகிராமன்) - புத்தக விமர்சனம்

தி.ஜாவின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற்ற நாவல்களை விட இதில் மன விசாரங்களும், தத்துவ விசாரங்களும் சற்று அதிகமாகவே இடம்பெற்று அலசப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் அவரது நாவல்களில் “செம்பருத்தி” தனியிடத்தைப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

விருப்பத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலிருக்கும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் அது கிடைப்பதற்கும் இடையிலேற்படும் ஊசலாட்டம், உறவுகளைப் பேணிக்காக்கும் இச்சைக்கும் அது பலிப்பதற்கும் இடையிலுள்ள போராட்டம் என இவற்றை வெவ்வேறு காலப்பின்னணியில் வைத்து அலசும் புனைவை சட்டநாதன் உட்பட்ட கதை மாந்தர்கள் வழியாக நம்முன் வைக்கிறார் தி.ஜா. பணத்தை விட மனிதர்களைச் சம்பாதித்து அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியமாகி, காலங்கள் கடந்தபோதும் அவை நிலைத்திருக்கச்செய்வதே மனிதனின் உண்மையான வெற்றி. 

“செம்பருத்தி”யின் சட்டநாதனும் இவ்வகைதான். பெண்கள் நிரம்பிய அவனது உலகத்தில் அவர்களூடே பயணித்து அவர்களைப் புரிந்து கொள்ள, அவர்களைத்தக்க வைத்துக்கொள்ள முயலும் அவனது வாழ்வும், அவன் கடந்து வரும் மூன்று பெண்கள் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இந்நாவல். இவற்றைக்கூறுவதன் மூலம் குடும்பம், சமுதாயம் இவற்றைக்கட்டமைப்பதில் பெண்களின் பங்கு எத்தகையது என்பது புரிய வருகிறது. அப்பெண்களின் இயல்புகளையும் அவர்களது துக்கம், கண்ணீர், மென்னகை போன்றவற்றையும் கூறி வரும்போதே அவர்களிடையே சிக்கித்தவிக்கும் ஆணின் கதையும் கூறப்பட்டிருப்பது சிறப்பு. பெண் மட்டுமல்ல ஆணும் பல சமயங்களில் பரிதாபத்துக்குரியவனே. 

பால்யத்தில் பிரியம் வைத்த பெண் சந்தர்ப்ப வசத்தால் தனக்கு அண்ணியாகி, எதிர்பாரா விதமாக விதவையுமானபின், ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியபின்னும் அந்நெருப்பில் பற்றிக்கொள்ளாமல் அதே சமயம் அதன் அருகே வாழ்ந்து வரும் நனைந்த பஞ்சான சட்டநாதன் தன்னறத்தை இயல்பாகக்கொண்டு வாழ்வின் ஓட்டத்தில் அதைத்தொலைத்து விடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இயல்பான மனிதன். சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து நொடித்த பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது. இறக்குந்தருவாயில் சின்ன அண்ணன் பார்த்து வைத்து விட்டுப்போன புவனாவை மணந்து கொள்வதன் மூலம் சட்டநாதனுக்கெனவும் ஓர் குடும்பம் அமைகிறது. பெரியண்ணனின் சொற்படிக்கூறுவதானால் கருடாழ்வார் போல் அனைவரையும் தாங்கும் சட்டநாதன், தேள் கொடுக்காய்க் கொட்டும் பெரிய அண்ணியையும், “பார்த்துக்கிட்டே இருந்தாப்போதும்” என தன் உள்ளக்கிடக்கையை காலங்கடந்து வெளிப்படுத்தும் சின்ன அண்ணியையும் சேர்த்து தங்களுக்கிடையேயான கண்ணியமான உறவு கெட்டு விடாமல் தாங்குகிறான். முற்றிலும் வேறுபட்ட இம்மூவரின் குணாதிசயங்களும் அக்குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் தி.ஜாவின் தனித்தன்மை. தஞ்சை மண்ணின் ஒரு சிறு கிராமத்தில் நிகழும் கதைக்களத்தின் துணை மாந்தர்களும் தன்னிருப்பை நம்முள்ளத்தில் ஆழப்பதிக்கிறார்கள் கிட்னம்மாவையும் ஆண்டாளையும் போல்.

தி.ஜாவின் செம்பருத்தியில் பெண்களின் துர்க்குணங்கள் சற்று அதிகமாகவே விவரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது ஆணின் மேல் ஏற்படும் பரிதாபத்தை சற்று அதிகப்படுத்துவதற்காகவும் இருக்கலாம். அதிலும் சட்டநாதனின் பெரிய அண்ணியின் பாத்திரப்படைப்பு சிக்கலான ஒன்று. அவளது துர்க்குணங்கள் காரணமாக அவளை, “புளியமரம்” என்றே அனைவரும் ஜாடையாகக்குறிப்பிடுகின்றனர். தன் சுபாவத்தால் பிறரை நிம்மதியிழக்கச்செய்யும் அவள் மேல் நமக்கு ஆத்திரமும் அசூயையும் ஏற்படும் அதே சமயம் தன் குணத்தை எண்ணி வருந்தி, தன்னையே வெறுத்து பட்டினி கிடந்து தன்னையே வருத்திக்கொண்டு இறக்கும் அவள் மேல் ஒரு துளி அனுதாபமும் ஏற்படுகிறது. 

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கப்பட வேண்டுமென்றான் பாரதி. கணவன் பிற மகளிரை விழைவதை எந்தப்பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டாள். பொறுத்துக்கொண்டு அன்பு செலுத்த மாட்டாள். அவள் அவனுக்கு உண்மையாக இருப்பதைப்போலவே அவனும் அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று அவள் எதிர்பார்ப்பது இயற்கைதானே. அது பிறழும்போது அவள் வருந்துவதும் சினம் கொள்வதும் இயல்புதானே.. இதிலென்ன தவறு இருக்கிறது? ஆனால், அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இன்முகத்துடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண், அவள் தன் மனப்புழுக்கத்திற்கு வடிகாலாக யாரோடோ வெறுமனே பேசிச்சிரித்தால் அவளைச் சந்தேகப்படுவது எவ்விதத்தில் நியாயம்?. பெரியண்ணியின் பாத்திரப்படைப்பைப் பொறுத்தவரை அவள் தன் கணவனின் மேலுள்ள கசப்பைத்தான் பிறர் மேலும் துப்புகிறாள். அவள் மனதில் ஊறிக்கசியும் அக்கசப்பே அவளை அனைவரும் வெறுக்கக்காரணமாக அமைந்து விடுகிறது. அவளைச் சற்றேனும் புரிந்தவள் புவனா மட்டுமே.

விரும்பியவனுக்கு அண்ணியாக சந்தர்ப்ப வசத்தால் ஆக நேர்ந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்த குஞ்சம்மா, விதவையானபின், சட்டநாதனைப் பார்த்துக்கொண்டேயாவது வாழ்ந்து விடுவது என முடிவெடுத்து அந்நேசத்தை ஆராதித்து அவ்வீட்டில் வாழும்போது அவள் மேல் ஏற்படும் பச்சாதாபம், தனக்கும் அவனுக்குமான உறவை அவன் மனைவியிடமும் ஒன்று விடாமல் கூறியிருக்கிறான் என அறிந்து அவனை வெறுத்து தன் பெண்ணோடு நிரந்தரமாக இருக்கப் புறப்படும்போது கலைந்து விடுகிறது. அவ்வளவுதானா மனிதர்கள்! எனத்தோன்றுகிறது. எனினும், தன்னுடைய அந்தரங்கம் வெளிப்பட்டு விட்ட இடத்தில் ஒரு மனுஷியால் மீதமுள்ள காலத்தை எவ்வித உறுத்தலுமில்லாமல் கடந்து விட இயலுமா? என்ற கேள்வியையும் விதைக்கிறது.

ஒரு ஆதர்ச மனைவியாக, அவ்வீடு எந்தச்சிக்கலுமில்லாமல் ஓட அடிப்படையான அச்சாணியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் புவனாவின் படைப்பு இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா என வியக்க வைக்கிறது. அதுவும் தன் கணவன் கல்யாணத்திற்கு முன் பிரியம் வைத்த பெண்ணே தனது ஓர்ப்படியாக ஒரே வீட்டில் வாழும்போது, அதை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன! தினந்தோறும் நடக்கும் நல்லது கெட்டதுகளை கணவன் தன்னோடு பகிரும்போது அதைக்கேட்டு, தேவைப்படும்போது நல்ல வழியும் காட்டி அவனுக்கு ஒரு நல்ல துணையாக இருந்தவள் மெனோபாஸ் சமயத்தில் அதே சின்ன அண்ணியோடு கணவனைத்தொடர்பு படுத்தி அவன் மேல் சந்தேகப்பட்டு தங்கள் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளும்போது, அத்தனை நாள் அவன் அவள்மேல் இறக்கி வைத்த பாரத்தைச் சுமந்த துன்பம்தான் இப்படி வெளிப்படுகிறதோ எனத்தோன்றுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவும் வேண்டுமோ என ஐயத்தை ஏற்படுத்துகிறது. அர்த்தநாரீசுவரான சிவனாலேயே தன் மனைவியுடன் இரண்டறக்கலக்க இயலவில்லை எனும்போது நாம் யார்?

சரளமான நடை, பெரும்பாலும் உரையாடல் மூலமாகவே கதையை நகர்த்தும் உத்தி, கதையின் முடிச்சை சொற்களில் பொதிந்து தரும் லாகவம் என தி.ஜாவின் முத்திரை இந்நாவலிலும் அழுந்தப்பதிந்துள்ளது. சாவி ஆசிரியராக இருந்த சமயம் தினமணி கதிரில் 1968-ம் வருடம் தொடராக வந்தது இந்த நாவல்,

ஆசிரியர்: தி.ஜானகிராமன்.
வெளியீடு: ஐந்திணைப்பதிப்பகம்(2003-செம்பதிப்பு)
இணையத்தில் வாங்க: 

Monday, 17 April 2017

நெடுமரம்..

நாம் சொல்லும் எந்தச்சொல்லுக்கும் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் சும்மா அமைதியாக நிற்பவரை "மரம் மாதிரி நிக்கறியே"எனத் திட்டுகிறோம். உண்மையில் மரம் எதற்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் சும்மாவா நிற்கிறது? ஒவ்வொரு பருவகாலத்துக்குமேற்ப தன்னுடலில் அது வெளிப்படுத்தும் மாற்றங்கள் எத்தனையெத்தனை!!

வசந்த காலம் வந்ததும் மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, வெள்ளை என பலப்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறதே.. இத்தனை வண்ணமலர்களை அதுகாறும் எங்கே ஔித்து வைத்திருந்தது அது? உதிர்ந்து வழியெங்கும் பூம்பாய் விரித்த மலர்கள் போக சிலவற்றை தனது வம்சவிருத்திக்கென விதையுற்பத்திச்சாலை சுமக்கும் கனிகளாக உருமாற்றும் இரசவித்தையை ஒவ்வொரு நாளும் பிறரறியாமல் நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறது. இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு உடலெங்கும் செம்பூக்களை மட்டும் அணிந்து நிற்கிறதே இந்த மரம்.. எந்தப் பருவகாலத்திலிருந்து இதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்ததோ!! யாருக்குத் தெரியும்?

வாழும் ஒவ்வொரு நொடியும் தனக்காகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உயிர்ப்புடன் பேரமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்ச்சாலையல்லவா அது!! புரட்டிப்போடும் புயலுக்கிசைந்து தன்னுடலில் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலும், மறு நொடியிலிருந்தே அவ்விழப்பைச் சரிக்கட்டும் முயற்சியில் அதன் வேர்களும் திசுக்களும் ஒன்றிணைந்து சத்தமில்லாமல் பாடுபடத் தொடங்கி விடுவதை யாரறிவார்.

அசைவற்று அது நிற்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதற்குள் ஒரு பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிந்தோமில்லை. அதைப்போய் சும்மா நிற்கிறது என மனிதனோடு எப்படி ஒப்பிடவியலும்? வேண்டுமானால், காய்ந்து பட்டுப்போன மரத்தைப் பார்த்து, "மனிதனைப்போல் சும்மா நிற்கிறாயே" என்று ஒப்பிட்டுச் சொல்லிக்கொள்ளலாம்.

Wednesday, 12 April 2017

"கம்பாநதி" - வண்ணநிலவன். (புத்தக விமர்சனம்)

ஓடினால்தான் நதி, தேங்கினால் கசம். வாழ்வும் அப்படித்தான்.. அதன்போக்கிலேயே நீந்திச் செல்பவன் மட்டுந்தான் கரையேறுகிறான். அப்படியில்லாமல் சற்றே தேங்குபவனை சுழியில் தள்ளி தத்தளிக்க விடுகிறது வாழ்வு. அப்படி நீந்தியும் தேங்கியும் வாழ்வோடு எதிர்நீச்சல் போடும் மனிதர்களைப் பற்றியதே வண்ணநிலவனின் "கம்பாநதி".

"அந்தக்காலத்துல.. பாண்டியராசா காலத்துல இந்த வழியாத்தான் கம்பாநதின்னு ஓர் ஆறு போச்சாம். பின்னால எப்படியோ அந்த ஆறு நின்னு போச்சு. அந்த ஞாபகத்துக்குத்தான் அந்தக் குட்டி மைய மண்டபம் இருக்குது... அந்த மண்டபத்துக்கு கீழ பாத்தியன்னா கசங் கணக்கா தண்ணி கெடக்கும்." திருநெல்வேலியில் ஒரு காலத்தில் ஓடிய கம்பாநதி இன்று காணாமல் போய் கசம் எனப்படும் சிறு குட்டை மட்டும் மீந்ததைப்போல் இக்கதையில் வரும் ஒவ்வொரு மாந்தருக்குள்ளும் ஓடிய ஆறும் சிறு மீதத்தை வைத்திருக்கிறது. ஆராம்புளியிலிருந்து தன் கணவனை விட்டு சங்கரன் பிள்ளையோடு வந்து குடும்பம் நடத்தத்தொடங்கி வெகு காலமான பின்னும் அவள் மனதில், "அதிகாரியாவே போயிட்டாஹ" என்று அவள் கணவன் நினைக்கப்படுவது கசமாக மீந்திருக்கும் அவர்கள் வாழ்வுதான்.

திருநெல்வேலியைக் கதைக்களமாகக் கொண்டு அம்மக்களின் மொழியைப் புழங்கும் இந்நாவலை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைக் கவனித்தால், வேறு ஊரைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் இந்நாவல் இதே உணர்வுகளையே எழுப்பியிருக்கும் என்றே தோன்றுகிறது. வண்ணதாசன் மற்றும் சுகாவின் திருநெல்வேலியும் வண்ணநிலவனின் திருநெல்வேலியும் ஒன்றல்ல என்ற உணர்வு தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

வண்ணநிவலனின் மனிதர்கள் யாருக்கும் யார் மேலும் ஆவலாதி இல்லை. 'அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்?' என்ற கேள்வியோடு அவர்களைக் கடந்து செல்கின்றனர். யாரும் யாருக்காகவும் தேங்கி நின்று கம்பாநதியைப் போல் காணாமல் போய் விடுவதுமில்லை. நதிக்கரை மனிதர்களைப்போல் இந்நாவலின் மனிதர்களும் அவரவர்களுக்கான தனித்தனி வாழ்க்கையின் விவரிப்போடும் அதன் முக்கியத்துவத்தோடும் உலா வருகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்வும் பிறரின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பிணைந்தேயிருக்கிறது, பாலத்தை லாரி கடந்தால் தான் இண்டர்வியூவில் தேர்ச்சி பெற்று விடுவோம் என நம்பும் பாப்பையாவின் நம்பிக்கையைப்போல. வாசிப்பவருக்கு அது மூடநம்பிக்கையாய்த் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை வேலை கிடைத்து விட்டால் கோமதியைக் கல்யாணம் செய்து கொள்ளும் கனவுக்கான முதற்படியல்லவா..

நதியின் போக்கையும் வாழ்வின் போக்கையும் தீர்மானிப்பது யார் கையிலும் இல்லை. தன் போக்கில் செல்லும் நதியை மறித்து அதன் நீரை தேவைக்கு உபயோகப்படுத்துவதைப் போலவே கோமதியின் வாழ்வோட்டமும் பாப்பையாவை நோக்கிச் செல்லாமல் மறிக்கப்பட்டு கதிரேசனுடன் இணைக்கப்பட்டு விடுகிறது. இரண்டிலும் சம்பந்தப்பட்டவர் அனுமதி கேட்கப்படவேயில்லை. என்றாலும் அவை சுணங்காமல் புதுப்பாதையில் ஓடத்தான் செய்கின்றன. அதற்கான காரணகாரியங்கள் பிறர்க்குப் புரிவதில்லை. "என்னமோ போலத் தோணிச்சி. அதான், அழுதேன்" என்று கலுங்கில் அமர்ந்து அழுத கோமதி பாப்பையாவுக்குச் சொல்லும் காரணம் போலத்தான் அவையும்.

சங்கரன் பிள்ளை, அவரது மனைவிகளான மரகதம் மற்றும் சௌந்திரம் மற்றும் பிள்ளைகளின் பாத்திரப்படைப்பும் அப்படியே. ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புரியாத காரணகாரியங்களால் நிகழ்ந்தவையும் நிகழ்பவையுமே அவ்வாழ்க்கையின் மர்ம முடிச்சு. "எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும், அதையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன". அப்படித்தான் ஒரேயடியாக கம்பாநதியைப் போல் வறண்டு போகாமல், தாமிரபரணியைப்போல் ஈரம் வற்றாத மனசைக் கொண்டிருக்கின்றனர் இம்மனிதர்கள். அந்த ஈரம் பட்டு வரும் காற்று வாசகரின் மனதையும் சற்றே ஆற்றுகிறது.

"நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது." ஆற்றின் போக்குப்போல் நகரும் கதையின் மாந்தர்கள் அவர்களுக்கான தனிப்பட்ட விசேஷமான குணங்களுடன் வலம் வரும்போது, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது நாமும் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகிறோம். தன்னில் வந்து சேரும் எதையும் வாரியணைத்துச் செல்வதுதானே நதியின் இயல்பு? அப்படி நம்மைப் பயணப்பட வைப்பதே மனிதர்களின் அகஉணர்வுகளை அலசும் வண்ணநிலவனின் எளிமையான எழுத்தின் பலம்.

ஆன்லைனில் வாங்க.



LinkWithin

Related Posts with Thumbnails