Monday 29 July 2013

மழைப்பேச்சு கேட்க வாங்க..

எதிரே வரும் வாகனத்திற்காக ஒதுங்குவதை விட, அது தெறிக்க வைத்துச்செல்லும் மழைத்தண்ணீரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கும் மனிதர்களே அதிகம்.. ஸ்ஸ்ஸப்பா.. 

வருணரிடம் ஒப்படைத்துச்சென்ற மும்பை கரைந்திருக்கிறதா? அல்லது அப்படியே இருக்கிறதா? என்பதைப் பார்ப்பதற்காக ஒரு நாள் விசிட் வந்திருக்கிறார் சூரியர். காலையிலிருந்து வெய்யிலடிக்கிறது.

மழைக்காலத்தில் தண்ணீரைத்தான் வெந்நீராய்த்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள், 'தேவையில்லை அப்படியே அருந்துங்கள்' என்கிறார்கள் மினரல் வாட்டர் கம்பெனியினர்.. ஒரே கொயப்பமப்பா.
நாலு சக்கர வாகனத்தில் செல்லும்போது தேரில் அசைந்தாடிச்செல்லும் உணர்வையும், இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஒட்டகத்தில் பயணிக்கும் உணர்வையும் தருகின்றன மழை நீர் நிரம்பிய குண்டுகுழிகள். ஸ்ஸ்ஸப்பா..

மழைக்கோட்டின் தொப்பியிலிருந்து வழியும் தண்ணீரை உள்ளங்கையில் பிடித்துத் தெறித்து, குடைக்குள் தலை நனையாமல் வரும் அம்மாவின் முகத்தை நனைக்கிறது குறும்புக்குழந்தையொன்று.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர் குடை பிடிப்பதால் இருவருமே நனையாமல் செல்லலாம் என்பதைக் கண்டு கொண்டதால், மும்பையில் மழைக்கோட்டுகள் வியாபாரம் டல்லடிக்கும் அபாயம் இருக்கிறதென்று பட்சி சொல்கிறது.
மழைக்கு இதமாக எத்தனையிருந்தாலும் அத்தனையிலும் விஞ்சி நிற்பது இஞ்சி,ஏலக்காய் போட்ட தேநீர்தான், என்பதைக் கண்டறிந்தவன் மிகவும் ரசனைக்காரனாக இருந்திருக்க வேண்டும்.

ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப்பெண்கள் பழைய, தாத்தா காலத்து வாக்கிங் ஸ்டிக் குடைகளுக்கு மாறி வருகிறார்கள். புதியன கழிதலும் பழையன புகுதலுமாய் உருளுகிறது ஃபேஷன் சக்கரம்.

நடந்து போவதற்குப் பதிலாக நாட்டியமாடியபடிச் செல்கிறார்கள்.. மழைநீர் தேங்கிய பள்ளங்களில் பதிக்கப்பட்டிருக்கும் சிறு கற்களின் மேல்..

தேங்கிய மழைநீரில் ஆட்டம் போடுகிறார்கள் சிறியவர்கள்,.. வீட்டினுள் வந்த நீரை ப்ளாஸ்டிக் முறமெடுத்து விரட்டுகிறார்கள் பெரியவர்கள்.. சம்பவம் நடந்தது, நடந்து கொண்டிருப்பது நடக்கப்போவது மும்பையில்..
நான்கடிக்கு ஒருமுறை முளைத்து உதிரும் நீர்ச்சிறகுகளை விரித்துப் பறந்து வருகின்றன வாகனப்பறவைகள்.

அலுவலகமோ கல்விச்சாலையோ விட்டு வெளியே வரும்போது நனையவா, குடைபிடிக்கவா என்று மனதில் நடக்கும் பட்டிமன்றத்திற்கு தலையில் நீர் தெளித்துத் தீர்ப்பளிக்கிறது மழை.

வரிசையில் செல்லும் எறும்புகளைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களினூடே குறும்புக்கார எறும்பாய், கிடைக்கும் இடைவெளிகளில் நுழைந்து செல்கிறது இருசக்கர வாகனமொன்று.

டிஸ்கி: மழைக்கால அவதானிப்புகள்.

26 comments:

ஜோதிஜி said...

அனுபவமும் அவதானிப்பும் நன்றாக உள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

சுகமான அவஸ்தை தான்...

மழை நேரத்தில் தேநீர் என்றும் சுவை...

கீதமஞ்சரி said...

அழகான அவதானிப்பு! வரிக்கு வரி ரசனைமிகுந்த எழுத்து! கனமழையையும், மழைக்குப்பின்னரான மும்பையையும் கவித்துவமாய் வர்ணிக்கும் அழகு வரிகள்.ரசித்தேன்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!! சூப்பர் படங்கள்.

ஆமாம்....என்ன டீ இலை வாங்கறீங்க? கலர் அப்படியே அள்ளுதே!

ராமலக்ஷ்மி said...

சாரலில் நனைந்த உணர்வு. படங்களும் துளிகளும் மிக அருமை.

வெங்கட் நாகராஜ் said...

மழைக்கால நினைவுகள்..... படங்கள்.....

இரண்டையுமே ரசித்தேன்!

த.ம. 3

வல்லிசிம்ஹன் said...

பம்மல் நேற்றுதான் கணினியில் பார்த்தேன்.
நட்ந்தது நடக்கப் போவுது நினைவு வந்தது:)நின்ங்களும் வெயிலாரோடு வலம் வந்தீர்களோ..
அருமையான கருத்துகள்.
நல்ல கவனங்கள். இன்சொல்லைவரவழைக்கும் அமுதுத் தேநீர்.
கலக்குறே சந்துரு:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்கள் + நகைச்சுவையான நல்ல விளக்கங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஹேமா said...

இப்போதுதான் ரசித்தபடி மழையில் நனைந்து வந்திருக்கேன் சாரல்.அதே ரசனையோட நீங்களும்.சூடா ஒரு கருப்புத் தேநீர் ப்ளீஸ் !

மனோ சாமிநாதன் said...

மழைச்சாரல் பதிவு மனதுக்கு இதமாய்க் குளிர்விக்கிறது! குளிருக்கு இதமாய் ஏலக்காய் இஞ்சி தேனீர்! அருமை!

'பரிவை' சே.குமார் said...

அக்கா...
அவதானிப்பு சில்லிப்பாய்...

கரந்தை ஜெயக்குமார் said...

மழை நேரத்தில் தேநீர் என்றுமே சுவைதான்

கோமதி அரசு said...

ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப்பெண்கள் பழைய, தாத்தா காலத்து வாக்கிங் ஸ்டிக் குடைகளுக்கு மாறி வருகிறார்கள். புதியன கழிதலும் பழையன புகுதலுமாய் உருளுகிறது ஃபேஷன் சக்கரம்.//

பெரியமழைக்கு சின்னகுடை தாங்காது என்று தெரிந்து கொண்டார்களோ!

படங்கள் எல்லாம் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜோதிஜி,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க டிடி,

அதுவும் தேனீருடன் சுடச்சுட வடையோ, பஜ்ஜியோ, பக்கோடாவோ இருந்தால் சொர்க்கம் :-))

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதமஞ்சரி,

இந்த மழைக்கு என்னவோ ஒரு சக்தி.. ஆளை அப்படியே இழுக்குதுங்க :-)

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

அரைக்கிலோ சொஸைட்டி டீயுடன் 100 கிராம் சொஸைட்டி மசாலா டீத்தூளைக் கலந்து வைப்பேன். தனியா இதுக்குன்னு மசாலா சேர்க்க வேண்டாம் பாருங்க :-))

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேம்ஸ்,

நல்லா நனைஞ்சீங்களா!! உக்காருங்க இதோ டீ வரும். :-))

ஹேம்ஸுக்கு ஒரு தேநீர் பார்சேல்ல்ல்ல்..

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயக்குமார்,

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

தாத்தாக்குடைன்னாலும் பட்டன் குடையின் மெட்டீரியல்லதான் செஞ்சுருக்காங்க. அதனால் தாங்கும் சக்தியில் பெரிய வித்தியாசமில்லை. வளைவான கைப்பிடி இப்பத்திய பசங்களுக்குப் பிடிச்சுப்போச்சு.. அதான் :-))

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails