Tuesday, 7 May 2019

ஃப்ரெஷ் பட்டாணி குருமா செய்முறை

தினமும் இட்லி, தோசை, உப்புமா வகைகள் சாப்பிட்டுச்சாப்பிட்டு போரடித்துப்போய் குடும்பத்தினர் கொலைவெறியில் இருப்பார்கள். அவர்கள் சாதாரணமாகப் பார்க்கும் பார்வையில் கூட, "உனக்கு வேற டிபனே செய்யத்தெரியாதா?" என்ற கேள்வி சொட்டும். அப்படியொரு பொழுதில் 'நாளை என்ன டிஃபன் செய்யலாம்?' என முந்தின தினமே மதியத்தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு சைடு வாக்கில் படுத்து சிந்திக்கவும்.

"ஆ!!!! சப்பாத்தியும் பட்டாணி குருமாவும் செய்யலாம்' என்று பளிச்சென ஐடியா உதித்ததும், உடனே அடுக்களைக்குச் சென்று ஒரு கிண்ணத்தில் தேவையான காய்ந்த பட்டாணியைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின் அன்றாட வேலைகளைத் தொடரவும்.

'முளை விட்ட பட்டாணியில் குருமா செய்தால் குடும்பத்தினருக்குத் தேவையான ப்ரோட்டீன் சத்து கிடைக்குமே' என்றொரு எண்ணம் தோன்றினால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப இஸ்திரி என அறிக. இரவு பத்தரை மணி வாக்கில், ஊற வைத்த பட்டாணியை நீரை வடித்து விட்டு முளை கட்ட எத்தனிக்கும்போதுதான், கோதுமை மாவு தீர்ந்து விட்ட விவரமும், அந்நேரத்துக்கு கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டிருக்கும் என்ற விவரமும் மூளையின் டேட்டாபேஸிலிருந்து சப்ளை ஆகும். "ச்சே... எடுத்து வெச்சிருந்தாலும் கொடுத்து வெச்சிருக்கணும். சப்பாத்தி குருமாவை நாளாக்கழிச்சு பார்த்துக்கலாம்" என அலுத்துக்கொண்டு பட்டாணி போட்டு வைத்த டப்பாவை மூடி, ஃப்ரிஜ்ஜில் உள்ள்ள்ளே தள்ள்ளி வைத்து விடவும். மறுநாள் காலை வழக்கம்போல் உப்புமா செய்து வீட்டினரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளவும். அன்றாட வேலைகள் மற்றும் பிக்கல் பிடுங்கல்களிடையே பட்டாணி டப்பா நினைவின் அடுக்குகளில் அமிழ்ந்து மறைந்தே போகும்.

ஒரு சுபயோக சுபதினத்தில், புதைபொருள் ஆராய்ச்சியின்போது.. அதாவது, வேறு ஒரு பொருளைத் தேடும்போது, அந்த டப்பா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அதில் என்ன வைத்தோமென்ற ஆவல் மீதூற டப்பாவைத் திறந்து நோக்குங்கால் பட்டாணிகள் முளை கட்டி, முளைத்து, வேர் விட்டு, பசிய சிறு இலைகளுடன், கூட்டில் சின்னஞ்சிறு குஞ்சுகளென அண்ணாந்து நம் முகம் நோக்கும்.

கசிந்து, கண்ணீர் மல்கி, 'ஒரு மாசத்துக்கு மேலாகியும் இது எப்படி பொழைச்சுக் கிடக்குது பாரேன்!!' என ஆனந்தித்து, "வா.. என் ஷெல்வமே" என தோட்டத்திற்குக் கூட்டிச் சென்று குழியில் தள்ளி மூடி விட வேண்டும். போனால் போகிறதென்று ஒன்றிரண்டு செடிகள் வளர்ந்து பூத்துக் காய்க்கும்.

அப்புறமென்ன??.. ஃப்ரெஷ்ஷாகப் பறித்த பட்டாணியில் நீங்கள் புலாவ்தான் செய்வீர்களோ இல்லை மட்டர் பனீர், ஆலு மட்டர் என வகைவகையாய் செய்வீர்களோ... உங்கள் பாடு.

குருமா செய்முறையா??.. குருமா தவிர்த்த குழம்புகளாலும் ஆனது இவ்வுலகம்.

Tuesday, 19 March 2019

பாலக் பனீர்.

சந்தையில் கொஞ்சம் மலிவாகக்கிடைத்ததென்று இரண்டு பாலக் கீரைக்கட்டுகள் வாங்கி வந்தேன். ஆய்ந்து, உப்பு போட்ட தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து தண்ணீரை வடிய விட்டு, இப்பொழுதெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கும் டிஷ்யூ பைகள் ஒன்றில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்தாயிற்று. கடைந்த கீரை போரடித்து விட்டதென்றதால் பாலக் பனீர் செய்யலாமென எண்ணம். குளிர் இன்னும் விலகாத இப்பொழுதில் சப்பாத்தியுடனோ அல்லது ஃபுல்காவுடனோ சாப்பிட உகந்தது.
தேவையானவை
ஒரு கட்டுக் கீரையை கொஞ்சம் அகன்ற ஒரு பாத்திரத்தில் பரத்தி, அதன் மேல்  ஐந்து பூண்டுப்பற்கள், ஒரு அங்குல அளவில் இஞ்சி, மூன்று பச்சை மிளகாய்கள், இரண்டு தக்காளிகள், எல்லாவற்றையும் வைத்து கூடவே ஒரு வெங்காயத்தை நறுக்கித்தூவி, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுத்துக்கொண்டு நன்கு ஆற விடவும். ஆறிய பின் எஞ்சிய தண்ணீரை வடித்தெடுத்துக்கொண்டு கீரையை மிக்ஸியிலிட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரைக் கொட்டி விட வேண்டாம், தேவைப்படும்.


ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய்யைச்சூடாக்கி, அரை ஸ்பூன் ஜீரகத்தைப்போட்டுப் பொரிய விடவும். பொதுவாக பஞ்சாபி சமையலுக்கு கடுகும், ஜீரகமும்தான் தாளித்துக்கொட்டுவார்கள். சில அயிட்டங்களில் மட்டுமே கடுகு மைனஸாகும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தபின் அத்துடன் அரைத்து வைத்த கீரையைச் சேர்த்து, கால் டீஸ்பூன் மஞ்சட்பொடியும், அரை ஸ்பூன் கரம் மஸாலாவும் சேர்க்கவும். எவெரெஸ்ட் கரம் மசாலா சேர்த்தால் நன்றாக இருக்கிறது என்ற டிப்ஸ் இங்கே கவனிக்கத்தக்கது. 

பச்சை வாடை போக அது வேகட்டும். அதற்குள் பனீரை ஆயத்தப்படுத்துவோம்.
ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய்யைச் சூடாக்கி, பனீர் துண்டங்களை அதில் போட்டு லேசாகச் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுக்காமலும் போடலாம், பாதகமில்லை. வறுத்த பனீர் துண்டங்களை கொதிக்கும் பாலக் க்ரேவியில் போட்டு சில நொடிகள் வேக விடவும்.

எடுத்து வைத்த கீரைத்தண்ணீரை வேண்டிய அளவுக்கு கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம். க்ரேவி கெட்டியாகவும் இருக்கக்கூடாது, குழம்பு போல் ஓடவும் கூடாது, அரைப்பதம் நன்று. ஒரு சொட்டு எண்ணெய்யைக்கூட வீணாக்க விரும்பாத புத்திசாலிகள், இரண்டு அயிட்டங்களையும் பக்கத்துப்பக்கத்து அடுப்புகளில் வைத்துக்கொண்டு, வறுத்த பனீர் துண்டங்களை நேரடியாக பாலக் க்ரேவியில் போட்டு விடுவார்கள். சில நொடிகள் கொதித்ததும் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு, டைனிங் டேபிளுக்கு கொண்டு செல்லவும். 
விரும்பினால் க்ரேவியின் மேலாக கொஞ்சம் க்ரீம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி என எதையும் சேர்த்து ருசியைக் கெடுத்து விடாமல், சாதம், சப்பாத்தி, ரோட்டி, மற்றும் ஜீரா ஃப்ரைட் ரைஸ் அல்லது சிம்பிள் புலாவுடன் பரிமாறலாம்.

இது "எங்கள் ப்ளாக்" தளத்திலும் வெளியாகியுள்ளது.

Saturday, 9 March 2019

வெள்ளை சாம்பாரும் ஆச்சியும் பின்னே ஞானும்.

நெல்லை, மற்றும் குமரி மாவட்டங்கள்ல சாம்பார் பொடி போட்டு, பொடி போடாம தேங்கா அரைச்சு ஊத்தின்னு ரெண்டு விதமான சாம்பார் பண்ணுவாங்க. இதுல பொடி போட்டதை "இடி சாம்பார்"ன்னு நெல்லை மக்கள் இன்னும் பிரத்தியேகமா குறிப்பிடுவாங்க. கொத்தமல்லி, மொளவாத்தல், வெந்தயம், சீரகம்ன்னு எல்லாத்தையும் வறுத்து மசாலாவை உரல்ல போட்டு உலக்கையால் இடிச்சு, சலிச்சு பண்றதால அந்த காரணப்பெயர். இதை நாரோயில் மக்கள் "கறுத்த சாம்பார்"ன்னு சொல்வாங்க. தேங்கா அரைச்ச மசாலா சேர்த்ததை "வெள்ளை சாம்பார்"ன்னு சொல்வாங்க. ரெண்டு சாம்பார்களையும் வேறுபடுத்திப் புரிஞ்சுக்கறதுக்காக இந்தப்பெயர்கள்.
எங்க அம்மாச்சி "வெள்ளைசாம்பார்" வெச்சா கூடுதலா ரெண்டு உருண்டை சோறு உள்ளே போகும். வேக வெச்ச பருப்போட தோட்டத்துல வெளைஞ்ச நாலு கத்தரிக்காயை பறிச்சுட்டு வந்து நாலா வகுந்து போட்டு ஒரு உருளைக்கிழங்கு, நாலு துண்டு மாங்கா, ரெண்டு தக்காளின்னு அதுகளையும் பெரிசு பெரிசா வெட்டிப்போட்டு ஒரு பக்கம் கொதிச்சுட்டுக் கிடக்கும். அந்த நேரத்துல அங்கனக்குள்ளயே கெடக்குற அம்மில, சீரகமும் மஞ்சத்துண்டையும் வெச்சு நுணுக்கி, மொளவாத்தல வெச்சு மையா அரச்சு அது கூட ஒரு தேங்காச்சில்லை வெச்சு சதைச்சு நல்லா அரைச்சு உருட்டி எடுத்துக்கிடுவாங்க. புளியையும் நல்லா கரைச்சு கொழம்புல ஊத்திட்டு தோட்டத்துக்குப் போவாங்க. அங்க இருக்கற முருங்க மரத்துலேர்ந்து கையளவு கீரையும் ரெண்டு காயுமா பறிச்சுட்டு வந்து, பொடுபொடுன்னு கீரையை ஆய்ஞ்சு காயை நறுக்கி, அரைச்ச மசாலாவையும் இதுகளோட சேர்த்து குழம்புல போடுவாங்க. அப்பதான் பறிச்ச காய்ங்கறதால கொதிக்கற கொழம்புல போட்ட அடுத்த நிமிஷமே வெண்ணெயா வெந்துரும். கூடவே போட்ட முருங்கைக்கீரை வெந்து கொழம்பு எட்டூருக்கு மணக்கும்.

வழக்கமா தாளிக்கற மாதிரி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை எல்லாம் தாளிச்சுச் சேர்த்தா, மணமே "சோத்தைக் கொண்டா கொண்டா"ன்னு கூப்பாடு போட வைக்கும். தாளிக்கும்போது ரெண்டு வெண்டைக்காயை அரிஞ்சு போட்டு நல்லா வசக்கி சேர்த்தா அது தனி ருசி. எங்க அம்மை இது எல்லாத்துக்கும் மேல கூடுதலா ஒரு பக்குவம் செய்வா. என்னன்னா... கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை சூடா இருக்கற குழம்புல பிச்சுப்போட்டு மூடி வைப்பா. அதெல்லாம் நாரோயில் சந்தைல கொத்தமல்லி இலை வரத்துக்கு அப்புறம் ஏற்பட்ட பண்டுவம். ஆனாலும் அது என்னதான் மாயமோ!!! எங்க ஆச்சியோட அந்தப்பக்குவம் எங்க குடும்பத்துப் பெண்கள் யாருக்குமே வாய்க்கலை.

வயல்லேர்ந்து பறிச்சுட்டு வந்த வாழையிலைல சோத்தைப் போட்டு, இம்புடுபோல நெய்யூத்தி கொழம்பையும் ஊத்தி மலையாள பப்படத்தையும் பொரிச்சு ஒரு ஓரமா வைப்பாங்க. சாப்ட்டு முடிச்சு ரொம்ப நேரமானப்றமும் கை மணத்துக் கிடக்கும். எங்க வீட்டுக்கு வந்தாக்கூட அவங்க வெச்ச சாம்பார்ன்னா தனியா தெரியும். வாசனையை வெச்சே கணடுபிடிச்சுருவோம்.

ஆச்சிகளைப்போலவே ஆச்சி சமையலும் தனித்துவம் வாய்ந்தவைதான். பல்லாண்டு ஆனாலும் நினைவில் நின்று ருசி்ப்பவையன்றோ அவை.

Thursday, 7 March 2019

ஸ்பானிஷ் பிங்க் ரைஸ்..

ஆதள கீர்த்தனாரம்பத்திலே... அதாகப்பட்டது, நாங்கள் 1993லிருந்து அலிபாகில்  வசித்து வந்த காலத்தே எனக்கு ஸ்வெட்டர் பின்ன கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுண்டாயிற்று. அந்நோக்கில் விசாரித்து எனது நெருங்கிய சினேகிதியிடமே கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஒரு சில உருப்படிகளையும் பின்னி முடித்திருந்தேன். அக்காலத்தே "Women's era" என்ற பெண்கள் பத்திரிகை 1994ம் வருடம் நிட்டிங் சிறப்பிதழ் வெளியிடுவதாகக் கேள்விப்பட்டு அதை வாங்கி வரும் பொருட்டு சென்றக்கால் அவ்விதழ் இருப்பு தீர்ந்ததென அறிந்து யாதும் செய்யக்கூடாமல், 'சிறப்பிதழ்' என்ற சொல்லொன்றை மட்டுமே நினைவில் நிறுத்தியிருந்த என் கணவர், அதற்கடுத்தாற்போல் வெளிவந்திருந்த சமையல் சிறப்பிதழை வாங்கி வந்து கொடுத்தார்.

கொடுத்த சிறப்பிதழைக் கடுப்புடன் நோக்கினாலும், அடுப்பு எரிய.. ஐ மீன், சமைக்க.. ஐ மீன், விதவிதமான அயிட்டங்களைக் கற்றுக்கொண்டு சமைக்க ஏதுவாக இருக்குமென்று கருதி, தினமும் பொழுது போகாத நேரங்களில் அப்பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டலானேன். வாசித்த வரைக்கும் வயிற்றுக்கு கெடுதல் விளைவிக்காத பதார்த்தக்குறிப்புகளே அப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை அறிந்து, சுப தினமொன்றில் சமைத்ததே "ஸ்பானிஷ் பிங்க் ரைஸ்". வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு இதமாகவும் அமைந்த இப்பண்டம் எங்கள் வீட்டு மெனுவில் 25 வருடங்களாக இடம் பெற்றிருக்கிறது. செய்வதற்கும் மிகவும் சுலபமானது.
இரண்டரை கப் அரிசியை கல், நெல் பார்த்து சுத்தம் செய்து, கழுவி, பின் அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அது ஊறும் நேரத்தில் மளமளவென பூர்வாங்க வேலைகளைச் செய்து விடலாம். 

ஒரு பெரிய வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கிக்கொண்டு, அதே போல் ஒரு பெரிய குடைமிளகாயையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை சதுரத்துண்டுகளாகவும் போட்டுக்கொள்ளலாம், அது கோபித்துக்கொள்ளாது. மூன்று பூண்டுப்பற்களை சின்னச்சின்னதாக துண்டு போட்டுக்கொள்ளவும். இரண்டு கப் அளவுக்கு ஜூஸ் வருமாறு தக்காளிகளை அரைத்து எடுத்துக்கொள்ளவும். வடிகட்ட வேண்டாம், அப்படியே இருக்கட்டும். ஒரு டீஸ்பூன் மிளகை கொரகொரப்பாக தட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஆறு கிராம்புகளை முழுதாக எடுத்துக்கொள்ளுங்கள். 

இப்பொழுது அடுப்பில் சற்றே கனமான பாத்திரத்தையோ அல்லது குக்கரையோ வைத்து, அதில் அரை கப் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி, அதில் பூண்டுத்துண்டுகளையும் கிராம்பையுமிட்டு நன்கு சிவக்க வறுக்கவும். கிராம்பு வெடித்து முகத்தில் படலாம், கவனம். எண்ணெய்யில் போடுமுன் கிராம்பின் காம்புப்பகுதியை மட்டும் இடுக்கியால் சற்றே நசுக்கிப்போட்டால் வெடிக்காது என்ற டிப்ஸ் இங்கே கவனிக்கத்தக்கது. அதன் பின் வெங்காயம் மற்றும் குடை மிளகாய்த்துண்டுகளையுமிட்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கருகி விடக்கூடாது. பொன்னிறத்துக்கு முந்தைய பருவத்தில் பிங்க் கலரில் சிவந்து வரும்போது, அத்துடன் இரண்டரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும், ஊற வைத்திருந்த அரிசியை இத்துடன் சேர்த்து நான்கு நிமிடங்களுக்குச் சமைக்கவும். பின், எடுத்து வைத்திருந்த தக்காளிச்சாற்றையும் இத்துடன் சேர்த்து, கனமான மூடியால் மூடி, மிகக்குறைந்த தீயில் வேக விடவும். குக்கரில் வெயிட் போட வேண்டாம். நிபுணர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பக்குவம் தெரிந்த நளன்களும், நளிகளும் அரிசி வேக எத்தனை விசில் வேண்டுமென்று ஊகித்து அதன் படி செய்ய அனுமதியுண்டு. சாதம் குழைந்து விடக்கூடாது, அவ்வளவே. அரிசி வெந்து பொலபொலவென ஆனதும் இறக்கி ஐந்து நிமிடம் அப்படியே விடவும். அதன் பின், ராய்த்தா, மாங்காய் இனிப்பு ஊறுகாய், தம் ஆலு போன்ற பக்க வாத்தியங்களுடன் சாப்பாட்டுக்கச்சேரியை ஆரம்பித்து விடலாம்.
அரிசிக்குப் பதிலாக கோதுமை ரவையைப் பயன்படுத்தியும் செய்யலாம். ரவையை வெறும் வாணலியில் லேசாக மணம் வரும் வரை வறுத்துக்கொண்டால் சாதம் உதிரியாகவும் சுவையாகவும் அமையும்.

விருந்துகளுக்கு மிகவும் ஏற்றது. பிள்ளைகளுக்கு மதிய டப்பாவுக்குக் கொடுத்து விடலாம். காரம் போதாதெனத் தோன்றினால் அரைத்தேக்கரண்டி மிளகை அதிகப்படுத்திக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மிளகாய்த்தூளை சேர்க்கக்கூடாது. இதன் பிரத்தியேகமான ருசி கெட்டு விடுகிறது.

Monday, 11 February 2019

சாரல் துளிகள்

வருத்தப்பட்டு வண்டியோட்டும்போதும் அலைபேசியில் பேசுவோரை மன்னியாதிரும் ஆண்டவரே. அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்.

குறும்புக்கார பகலை அத்தனை விழிகளாலும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது இரவு.

பச்சோந்தியைப்போல் நிறம் மாறிக்கொண்டேயிருந்த பகல், கனத்த இரவுக்குள் தன்னை ஔித்துக்கொண்டது.

ஏதும் எஞ்சாது எல்லாம் கொடுத்து விட்ட நிறைவில் நடையிட்டுச்செல்லும் பகல் அறியவில்லை, நாளை வரப்போகும் அதனிடம் கேட்கப்படவிருப்பவை.

விரலிடுக்கில் நீரென, ஏதுமெஞ்சாது மெள்ளக் கசிந்தொழியும் பகலிடம் மன்றாட ஏதுமில்லை. எத்தனை நிறைந்திருந்தென்ன? கையளவுதானே அள்ள முடியும்.

தாலாட்டித் தூங்க வைக்கும் இரவின் மடியில் சாய்ந்து கனவுப்புற்களை மேய்கிறது களைத்துப்போன பகல்.

ஒரு சிற்றலை போல் எழுந்தமர்ந்த வெண்பறவைகளின் இறகுகளிலிருந்து பருவெளிக்கு இடம்பெயர்ந்தது பகல்.

துளித்துளியாய் தன்னைச் செதுக்கி பட்டை தீட்டிய இருள், பகலென்று பேர் சூடிக்கொண்டது.

இரவைக் குழைத்து, தோன்றியும் மறைந்தும் வித்தை காட்டும் பல்வண்ண மாயக்கம்பளமாய் நெளிய விடுகிறது பகல்.

ஒரு மொட்டு மலர்வதைப்போல் இரவின் இதழ்கள் ஒவ்வொன்றாய் விரிய, விடுபட்டுப் பறக்கிறது அனற்பூச்சி.

Monday, 28 January 2019

சிறுகிழங்கு துவரன்.

பெயருக்கேற்றார்போல் சின்னதாக இருந்தாலும் சிறுகிழங்கின் சுவை மற்ற எந்தக்கிழங்கு வகைகளுக்கும் குறைந்ததில்லை. ச்சைனீஸ் பொட்டேட்டோ என அழைக்கப்படும் இக்கிழங்கு ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டாலும், தமிழகத்தைப்பொறுத்தவரை அதன் தென் மாவட்டங்களான நெல்லை, மதுரை மற்றும் கன்யாகுமரிப்பகுதிகளில் விளைந்து அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. தவிர, கேரளா வரைக்கும் கூட இதன் புகழ் எல்லை கடந்து பரவியிருக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே அதைப்போல் சுவை விஞ்சி நிற்கும் இந்தக்கிழங்கு கோலிக்குண்டு அளவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு வரையே இருக்கும். உருளை, சேனை, சேம்பு என மற்ற கிழங்கு வகைகளைப்போல் இது வருடம் முழுவதும் கிடைக்காது. பொங்கலையொட்டி சந்தைக்கு விற்பனைக்கு வரும் இக்கிழங்கு இரண்டொரு மாதங்களுக்கு மட்டுமே கண்ணில் தட்டுப்படும். அச்சமயத்தில் வாங்கி சமைத்து ஆசை தீர உண்ண வேண்டியதுதான். அதற்குப்பின் "எப்போ வருவாரோ!!!" என அடுத்த ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.
சமைப்பதற்கும், உண்பதற்கும் எத்தனை எளிதானதோ அத்தனை கடினமானது இதைச் சுத்தம் செய்வது. புதுக்கிழங்கு முழுவதும் மண் அப்பிக்கொண்டிருக்கும். அதையாவது தண்ணீரில் ஊறப்போட்டு கரைத்து ஊற்றி விடலாம். ஆனால், தோல் இருக்கிறதே... எக்கச்சக்கமாக வேலை வாங்கும். லேசாக நகத்தால் சுரண்டினாலே வந்துவிடுமளவிற்கு மெல்லிய தோல் கொண்டதாயிருப்பினும், அத்தனையையும் தோலுரித்துச் சுத்தம் செய்வதற்குள் நகத்தோடு விரலும் மணிக்கட்டு வரை தேய்ந்து விடும். இண்டு இடுக்குகளிலிருக்கும் தோலைச்சுரண்டியெடுக்கும் வகையில், கத்தி அவ்வப்போது கை கொடுக்குமே தவிர முழுவதும் அதை நம்பி வேலையில் இறங்க முடியாது. கிலோ கணக்கில் துவரன் செய்ய வேண்டியிருந்தாலோ அவ்வளவுதான்.. முதுகு ஒடிந்து விடும். அதிகம் மண் ஒட்டாத கிழங்காயிருந்தால் நேரடியாகக் களத்திற்கு கிழங்கைக் கொண்டு சென்று தோலுரித்து விடலாம்.

சின்ன வயதில், லீவு நாட்களில் சிறுகிழங்கு தொவரன் செய்வதாயிருந்தால், அதன் தோலை உரிக்கும் வேலையை என்னிடம் தள்ளி விடுவார்கள். 'கொல்ல கொண்டு போவது மாதிரி' இருக்கும் அத்தருணம். பின்னே?... கிழங்குக்கூடை லேசில் காலியாகாமல் அமுதசுரபி மாதிரி கிழங்கு வந்து கொண்டேயிருந்தால் வெப்ராளம் வராதா என்ன? :). முதன் முதலில் அப்படி மாட்டிக்கொண்ட போது, ஆச்சி ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக்கொடுத்தார். எப்படியென்றால் சொரசொரப்பான ஒரு துணிப்பை அல்லது சணல் பையை எடுத்துக்கொண்டு அதனுள் அரை கிலோ அளவில் கிழங்குகளைப் போட்டு அதன் வாய்ப்பகுதியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, கிழங்குகள் கிடக்கும் அடிப்பகுதியை 'பொத்துனாப்ல' தரையில் துணி துவைப்பது போல் துவைக்க வேண்டும். ஒன்றரை டன் வெயிட் அளவுக்கு ஓங்கியடிக்கக்கூடாது. ஒரு பத்து நிமிடத்துக்கு இப்படித் துவைத்தபின் கிழங்குகளை சொளவிலோ, தரையிலோ, அல்லது விரித்து வைத்திருக்கும் செய்தித்தாளிலோ தட்டினால், ஆஹா!! ஆஹாஹா!! முக்கால் பாகம் தோல் தானாகவே உரிந்திருக்கும். மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் தோலை சணல் பையால் அழுத்தித்துடைத்தால் அதுவும் உரிந்து வந்து விடும்.

இப்படியாகத்தானே எல்லாக்கிழங்குகளின் தோலையும் உரித்தபின், தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வடிய விடவும். டிஸ்கி: இதற்கு மேல் நான் சொல்லப்போவதெல்லாம் எங்கள் குமரி மற்றும் நெல்லைச்சீமைக்கே உரிய சமையல் முறை, அதைத்தவிர வேறில்லை. பிற பகுதி முறைகளோடு ஒத்துப்போனால் அது தற்செயலானதே. தண்ணீர் வடிந்தபின் துடைத்து, கிழங்குகளை புளியங்கொட்டை அளவிற்கு சதுரத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொதி நிலை வரும் வரை சூடானபின், கிழங்குத்துண்டுகளை அதிலிட்டு முக்கால் வேக்காடு வரும் வரை வைக்கவும். பின்னர் நீரை வடிய விடவும். தப்பித்தவறி மண் துகள்கள் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அவையும் நீங்கி விடும், பல்லில் கடிபட்டு கூச வைக்காது. தவிரவும் நறுக்கியதால் வெளியான பால் நீங்கி, கிழங்குத்துவரன் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் குழையாமல் அமையும். 

தண்ணீர் முழுவதும் வடிவதற்குள் துவரனுக்கான மசாலாவைத் தயார் செய்து கொள்ளலாம். நாஞ்சில் மற்றும் கேரள மக்களைப்பொறுத்தவரை தேங்காயில்தான் காய்கறிகளைச்சேர்த்து தொடுகறி வைப்போம் ;) கறிகளில் தேங்காய்தான் பிரதானமே தவிர காய்கறிகளை கொஞ்சம் தேடித்தான் தின்ன வேண்டியிருக்கும். அந்தப்படியே, ஒரு கிலோ கிழங்கு என்றால் குறைந்தது அரை மூடி தேங்காய் தேவை. அதற்கு மேல் இரண்டு பிடியளவு சேர்த்தாலும் சுவையாகத்தானிருக்கும். முதலில் அரைத்தேக்கரண்டி சீரகத்தையும் அதேயளவு மிளகையும் நுணுக்கிக்கொண்டு அதனுடன் ரெண்டு பல் பூண்டைச் சேர்த்து அதையும் நுணுக்கியபின் தேங்காயைச் சேர்த்து காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சட்பொடியையுமிட்டு பிருபிருவென.. அதாவது, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மையாக அரையக்கூடாது.

வாணலியில் இரண்டு தேக்கரண்டி தேங்காயெண்ணெய் அல்லது ஏதாவது சமையல் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடுகும் உளுந்துமிட்டுப் பொரிந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு அதுவும் பொரிந்ததும் துவரன் மசாலாவை இடவும். அதிலேயே தேவைக்கேற்ப உப்பிட்டு லேசாகப் பிரட்டி ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் தெளித்து குறைந்த தணலில் மூடி வைக்கவும். மசாலா வேக வேண்டுமல்லவா, அதற்காகத்தான் அந்த சிறுதுளி நீர். இரண்டு நிமிடத்தில் மசாலா வெந்துவிடும். அதோடு, வெந்த கிழங்குத்துண்டுகளைச்சேர்த்துப் பிரட்டி உப்பு காரம் சரி பார்த்து, சேர்க்க வேண்டியிருந்தால் சேர்த்து மறுபடி மூடி விட்டு நன்கு வேகும் வரை சமைக்கவும். மசாலாவும் கிழங்கும் ஒன்றி மணம் வந்ததும் இறக்கி கரண்டிக்காம்பால் ஒரு முறை கிளறி வைத்தால் முடிந்தது. எல்லா வித குழம்புகளுக்கும் அருமையான தொடுகறியாக அமையும். தவிரவும் சும்மாவே சாப்பிடலாம். 

சிறுகிழங்கில் ஏராளமான சத்துகள் இருப்பதும், அது மூல நோய்க்காரர்களுக்கு நல்லதொரு மருந்து என்பதும் போக, சமைத்த பின்னும் நீங்காத அதன் மண் மணமே நம்மை இன்னும் இன்னுமென உண்ணத்தூண்டும். இத்தனை காரணங்கள் இல்லாவிட்டாலும் அதன் ருசிக்கெனவே சாப்பிடலாம்.

குமரிப்பகுதிகளில் சாயந்திரம் காப்பிக்கு இதை ஒரு கிண்ணத்திலிட்டு எடுத்துக்கொண்டு கடியும் குடியுமாகக் களிக்கும் ஆட்களைப் பார்க்க நேர்ந்தால், "என்ன? பாட்டா.. காப்பிகுடியா? நடக்கட்டு.. நடக்கட்டு" என்பதும் "வா மக்ளே... நீயும் ஒரு மடக்கு குடிச்சிற்றுப்போ" னப் பதில் பெறுவதும் ஒரு காலத்தில் சகஜமான காட்சி.

Monday, 21 January 2019

சாரல் துளிகள்

.அகங்காரத்தினுள் தைத்த சொல், வஞ்சம் தீர்ப்பதற்காக பூநாகமெனக் காத்திருக்க ஆரம்பிக்கிறது.

அனைத்தையும் விட மிகக்கொடிய ஆயுதம் எண்ணத்தில் உருவாகிறது. சொல்லும், செயலும், எண்ணத்தொடருமென ஒவ்வொரு நிலையாகப் பெருகிச் செல்வதும் அதுவே.

உள்ளத்தில் சென்று தைக்காத எந்தச்சொல்லும் அலைவுறச்செய்வதில்லை.

ஒரு சொல் அது மதிப்புறும் இடத்தில் மட்டுமே நல்மணியெனக் கொள்ளப்படுகிறது. மதிப்பறியா இடங்களிலோ, அது வெறும் ஒலி மட்டுமே.

கிழிந்த மேகத்தினூடே வழுக்கி விழுந்த சூரியக்கற்றையைக் கொத்திக்கொண்டு போகும் பறவையின் பின் பறக்கிறது சொற்கூட்டம்.

நானாவித சொற்களால் மாசுபட்ட மனதை, மெல்ல கழுவிச் சுத்தப்படுத்துகிறது நற்சொல்மழை.

குவிந்த பூவில் வண்டென, ரீங்காரித்துக்கொண்டிருக்கிறது சொல்லொன்று, வெளியேறும் திசையறியாது.

முதற்பறவையிலிருந்து கிளம்பிய சொல்லுடன், பிற பறவைகளில் ஆரோகணித்திருந்த சொற்களும் இணைந்து உருவான தொடரில் ஒட்டிப்பறந்து கொண்டிருந்தான் ஆதவன்.

அதற்கு மேல் அதைப்பற்றி அறிந்து கொள்ள ஏதுமில்லை எனும்போது அவ்விஷயத்தின் மேல் சலிப்பு கொள்ள ஆரம்பிக்கிறோம்.

சுடரிலிருந்து மெல்ல முனகியபடி பொறியாய்த் தெறித்ததொரு சொல். ஆமாமென்று அதை ஆமோதித்தன சில சொற்கள், இல்லையென ஆட்சேபித்தன வேறு சில. ஆமோதிப்பும் ஆட்சேபிப்புமாய் களத்தில் எரியெழுந்தபோது கள்ளச்சிரிப்புடன் நழுவிச்சென்றது முதற்சொல்.

LinkWithin

Related Posts with Thumbnails