Monday 31 October 2011

எது சரி?.. (வல்லமையில் வெளியானது)

படம் கொடுத்த கூகிளாத்தாவுக்கு நன்றி
சிவகாமிக்குக் கோபம் கோபமாக வந்தது.. “என்ன மனுஷர் இவர்?.. ஊர்ல உலகத்துல இல்லாததையா நான் கேட்டுப்பிட்டேன். வாங்கித் தரத் துப்பில்லைன்னாலும்  ஆ..ஊ..ன்னா ஒண்ணொண்ணுக்கும் லெக்சர் கொடுக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லை. போயும் போயும் இப்படி ஒரு கசத்துல தள்ளினாளே எங்கப்பாம்மா.. அவங்களைச் சொல்லணும்…”. இப்ப புரிந்திருக்குமே யார் மேல் கோபமென்று. கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்துவிட்டாள் போலிருக்கிறது. கூடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த சியாமளி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தது.

“அம்மா.. குளிச்சி சாமி கும்பிட்டாச்சு. டிபன் ரெடியா?.. ஸ்கூலுக்கு நேரமாகுது..” என்றபடி வந்த பாபுவின் கண்களில் சியாமளி மாட்டினாள்.

“நீ ஏண்டி காலங்காத்தால லூசு மாதிரி சிரிச்சுட்டிருக்கே..”

“ஐயோ.. அண்ணா, கத்தாதே. அப்பாவுக்கு அர்ச்சனை நடந்துட்டிருக்கு. நீ அம்மாட்ட மாட்டினா உனக்கும் நடக்கும்.. உஷ்..” உதடுகளை ஆட்காட்டி விரலால் சிறை வைத்து, குறும்பாய் எச்சரித்தாள்.

“அர்ச்சனை எதுக்காம்?..”

“இன்னிக்கு அட்சய திருதியையாமில்ல.. அதுக்குத்தான் அப்பாக்கு சாவி கொடுத்தாறது”

“இந்த அம்மாவுக்கும்… “ என்று என்னவோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டான். அம்மா மேல் பயமெல்லாம் ஒன்றுமில்லை. குளிக்கப் போன அப்பா திரும்பி வந்து செருப்பை வாசல் நடையில் கழட்டி விடும் சத்தம் கேட்டதுதான் காரணம்.

வீட்டில் சகல வசதிகள் இருந்தபோதிலும் பெருமாளுக்கு ஆற்றில் போய்க் குளிப்பதுதான் பிடிக்கும். காலையில் எழுந்ததும், கரகரவென்று தலையில் ஒரு கை, உடம்பில் ஒரு கை எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, பல் துலக்கும் ப்ரஷ், பற்பசை, உடம்புக்கும் துணிக்கும் தனித்தனி சோப்புகள், நாகர்கோவிலுக்குப் போயிருந்தபோது தலை துவட்டவென்று  வாங்கி வந்த ஈரிழைத் துண்டு என்று சகலமும் அடக்கிய ஒரு சின்ன பிளாஸ்டிக் வாளி சகிதம் சைக்கிளில் ஆற்றுக்குக் கிளம்பி விடுவார்.

அவரைப் பொறுத்தவரை அந்தப் பயணம் குளிக்கப் போவதற்கு மட்டுமானதல்ல. வழியெங்கும் எதிர்ப்படும் அறிமுகமான மனிதர்களிடம் ரெண்டொரு வார்த்தைகள் பேசியபடி, ஆற்றுக்குப் போய் ஏற்கனவே வந்திருக்கும் நண்பர்களுடன் நாட்டு நடப்புகளையும் அணிந்திருக்கும் துணிகளையும் துவைத்து அலசிப் போட்டு விட்டு, கரையிலிருக்கும் ஆலயத்துக்குப் போவார். அமைதியான, கல் பாவிய, சில்லென்ற பிரகாரத்தில் கால் வைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோவொரு உணர்வு அவரைச் சூழ்ந்து கொள்ளும். பழகி விட்டால் சிலருக்குப் பக்தியும் போதையூட்டத்தான் செய்கிறது.

கால் மணி போல் அந்தச் சூழ் நிலையில் லயித்து விட்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, பூவையோ துளசியையோ வலது காதில் செருகிக் கொண்டு விட்டு வீடு திரும்புவார். இது நல்லபடியாக நடந்து விட்டால் அன்றைய நாளுக்கான எனர்ஜி அவருக்கு உத்தரவாதம்.

வீட்டுக்கு வந்து ஈரத்துணிகளைக் கொடியில் காயப் போட்டு விட்டு, ‘அப்பாடா’ என்று பேப்பரும் கையுமாக வந்தமர்ந்தார். ‘ணங்’கென்று தம்ளர் வைக்கப்பட்ட விதத்திலேயே வைத்தவள் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்து போனது. தம்ளர் வைக்கப்பட்ட வேகம் தாங்காமல் அப்படியும் இப்படியும் ஆடி, காப்பி அலையடித்துக் கொண்டிருந்தது.

“அலை வர்ற வேகத்தைப் பார்த்தா அடுத்தது சுனாமி வரும் போலிருக்கே” காப்பியைக் கையிலெடுத்துக் கொண்டவர் செய்த கேலி அவளது கோபத்தை விசிறி விட்டது.

“சுனாமி அழிக்கிறதுக்கு மட்டுமில்லை.. சிலசமயம் ஆக்கறதுக்கும் புறப்படறதுண்டு.. உங்களுக்குத் தெரியாததா என்ன”

“ஏம்மா.. நான் நேரிடையாவே கேக்கறேன். இன்னிக்குத் தங்கம் வாங்கியே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு ரெண்டு நாளா கண்ணைக் கசக்கறது எதை ஆக்கறதுக்காம்”.. காப்பியை ஒரு வாய் உறிஞ்சிக் விட்டு கேட்டார்.

“ஏங்க,.. நான் என்ன எனக்காகவா நகை நட்டு சேர்க்கிறேன். நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்குங்கறதையே நீங்க அடிக்கடி மறந்துடுறீங்க. இப்படியாப்பட்ட சந்தர்ப்பங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சாத்தானே அவ வளர்ந்து நின்னு நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு வரும் போது நாமளும் கௌரவமா செய்ய முடியும்.”

“சிவகாமி,.. அவளை அவளுக்காகவே கொத்திக்கிட்டுப் போக எந்த ராஜகுமாரனாவது வராமலா போயிடுவான்..?”

“நீங்க இப்படியே விதண்டாவாதம் செஞ்சுக்கிட்டே இருங்க.”

“அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லதுன்னுதான் இது நாள் வரைக்கும் சொல்லிட்டிருந்தே. இப்ப திடீர்ன்னு ப்ளாட்டினத்துல வாங்கினாத்தான் ஆச்சுன்னா எப்டிம்மா?...”

“இன்னிக்கு வெண்மையான கலர்ல வாங்கினா இன்னும் விசேஷமாம். சொல்லிக்கிட்டாங்க. கோடி வீட்டு பூர்ணாவுலேர்ந்து பக்கத்து வீட்டுக் கீதா வரைக்கும் முன்னாடியே போய் நகைக்கடையில டிசைன் செலக்ட் செஞ்சு ஆர்டரும் கொடுத்துட்டாங்க. இன்னிக்குப் போய் வாங்கியாரப் போறாங்க. நான் ஒரு சின்ன மோதிரமாச்சும் வாங்கலைன்னா, அப்றம் உங்களுக்கு என்ன பெருமை?.. பாங்க் மானேஜர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் என்ன கௌரவம் இருக்கும்?.. நான் என்ன எனக்காகவா கேக்கறேன்?..”

“இப்ப என்னதான் செய்யணும்ங்கறே?..”

“எங்கூட கடைக்கு வாங்க.. அது போதும்…” என்றபடி காலி டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“இட்லிக்கு என்ன தொட்டுக்கறீங்க?.. தக்காளிச்சட்னியா?.. முட்டைக்கோஸ் சட்னியா?..” என்று கேட்டபடி மறுபடியும் வெளியே வந்தவள், கூடத்தில் அவரைக் காணாமல் திகைத்தாள்.

“எங்கேடா உங்கப்பா?...”

“இப்பத்தான் சட்டையைப் போட்டுக்கிட்டு வெளியே கிளம்பினார்”

‘சாப்பிடக் கூட செய்யாம எங்க போயிட்டார்?.. ‘ என்று புருபுருத்தபடியே அடுக்களை வேலைகளில் மூழ்கிப் போனாள். டிபன் தயார் செய்து பிள்ளைகளைச் சாப்பிட வைத்து விட்டு, அடுப்பிலிருந்த பொரியலைக் கிளறி விட்டாள்.

“செவாமி.. இந்தா… இந்தப் பைகளைக் கொஞ்சம் பிடி..” என்ற கணவரின் குரல் கேட்டு வாசலுக்கு விரைந்த சிவகாமி அந்தப் பொருட்களைப் பார்த்ததும் திகைத்து நின்றாள்.

“ஏங்க,.. இதெல்லாம் எதுக்கு. அதான் வீட்ல ஏற்கனவே இருக்கே. வேலை மெனக்கெட்டு இத வாங்கறதுக்காகவா காலைல வெளிய கெளம்புனீங்க..”

“செவாமி,.. அட்சய திருதியைக்கு வெண்மையான பொருட்களை வாங்கணும்ன்னு நீதானே சொன்னே..”

“ஆமா சொன்னேன்..”

“அப்படி வாங்கினா வீட்ல வாழ் நாள் முழுக்க அந்தப் பொருட்களுக்கான பஞ்சம் ஏற்படாதுன்னும் சொன்னே.. இல்லியா?..”

“அதுக்கென்ன இப்ப..?”

“அதுக்காகத்தான் இதுகளை வாங்கியாந்தேன். இதுகளும் நல்ல வெள்ளை நிறத்துலதானே இருக்கு. எதுக்குத் தட்டுப்பாடு வந்தாலும் இந்த ரெண்டுக்கும் தட்டுப்பாடு வராம இருந்தாலே நமக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமா இருக்குன்னு அர்த்தம். அந்தக் காலத்துல அட்சய திருதியை கொண்டாடுன நோக்கமே வேற செவாமி. பக்தி, அன்னதானம்ன்னு இருந்தது இப்ப வியாபார நோக்கத்தால திசை திரும்பி தடுமாறிக்கிட்டு இருக்கு. மத்தவங்கல்லாம் செய்யறாங்கன்னு சொல்லிச் சொல்லியே ஒவ்வொண்ணிலயும் உண்மையான நோக்கத்தை  நாம நம்ம வசதிக்காக மறந்துடறோம். இருக்கப்பட்டவன் நிலை பரவாயில்லை. ஆனா, வசதி குறைஞ்சவங்களும் கந்து வட்டி அது இதுன்னு கடன் பட்டாவது இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு அடிமையாகறதைப் பார்க்கறச்சே கஷ்டமாருக்கு செவாமி..”

“கடன் பட்டாலும் அதைக் கொண்டு தங்கம் தானே வாங்குறாங்க?.. இல்லைன்னா, ஏழைகள் கண்ணுல தங்கத்தைப் பார்க்க முடியுமா..?”

“வாங்குறதை மட்டும்தான் நீ பார்க்கறே.. அப்டி வாங்கினப்புறம் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாம மறுபடி அதே தங்கத்தை அடகு வெச்சு கடனைக் கட்டறாங்க. இதுல எத்தனை பேரோட பொருட்கள் மூழ்கிப் போயிடுதுன்னு உனக்குத் தெரியுமா?.. அவங்க இன்னும் கடனாளியா ஆகறதுதான் மிச்சம். பாங்க்ல தினம்தினம் எத்தனை பாக்கறேன். சரி.. சரி,.. இந்த உப்பைக் கொண்டு போய் சமையலறையில் வை. இந்தப் பாலைக் காய்ச்சிப் பால் பாயசம் பண்ணி சுவாமிக்கு நைவேத்தியம் செய். என்ன பார்க்கறே?..இதுகளும் வெண்மை நிறத்துலதானே இருக்குது. நீ சொன்னபடி அட்சய திருதியைக்கு வெண்மை நிறப் பொருட்களை வாங்கியாச்சு.”

கையில் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு தலை சுற்றி வாசற்படியிலேயே அமர்ந்திருந்தாள் சிவகாமி. 


டிஸ்கி: வல்லமையில் எழுதிய இந்தச் சிறுகதையை இங்கியும் பகிர்ந்துக்கறேன் :-)



48 comments:

RAMA RAVI (RAMVI) said...

அருமையான கருத்துள்ள கதை.

நீங்க சொல்லியிருப்பது மாதிரி எல்லாமே வியாபார நோக்கம் தான்.

நம்மால் என்றைக்கு கடன் படாமல் தங்கமோ வேறு பொருட்களோ வாங்க முடியுமோ அன்றைய தினமே அக்‌ஷ்ய திருதியை.

அருமையான விழிப்புணர்வு கதை.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை... அட்சய திரிதியை என்பதை ஏதோ தங்கம் வாங்க சிறந்த நாள் என்பது போல ஆக்கிவிட்டார்கள் என்பதே உண்மை.
வல்லமையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா.

rajamelaiyur said...

நல்ல கதை நண்பா

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,கதையில் டயலாக் எல்லாம் சூப்பர்.நல்ல கருத்து..

ஸ்வர்ணரேக்கா said...

சேமிப்புன்னு நினைத்து வாங்கினால் கூட பரவாயில்லை.. ஆனால் அக்கம் பக்கம் வாங்குகிறார்கள் என்று நாமும் (அதுவும் பிளாட்டினம்) வாங்குவது தவறே!!!

அதற்கு உப்பும் பாலும் எவ்வளவோ மேல்... நடையும் கருத்தும் அருமை...

சேக்காளி said...

// பாங்க் மானேஜர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் என்ன கௌரவம் இருக்கும்//
கௌரவமில்லேன்னா விவாகரத்து பண்ணிர வேண்டியதுதானே.

ரசிகன் said...

நல்ல நடை. நல்ல கருத்து. நல்ல கதை. வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான விழிப்புணர்வுக் கதை. வியாபாரிகள் இதுபோல ஏதாவது தவறான விளம்பரங்கள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை.

அட்சயதிருதீயை அன்று நாம் அன்னதானம் போன்ற எவ்வளவு புண்ணியம் செய்கிறோமோ அவை பல மடங்கு பலனைத் தரும் என்பது தான் உண்மை.

நல்ல பதிவை பகிர்ந்ததற்கும், வல்லமையில் வெளியானதற்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். vgk

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைக் கொண்டு வரும் நல்ல கதை சாந்தி. அவசியமானதும்.

ஷைலஜா said...

நல்ல கருத்து கதைல வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

உண்மைதான். அட்சயத் திருதியையின் அர்த்தத்தையே மாற்றி விட்டார்கள். இதுவும் சமீப காலத்தில்தானே...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அரிசியும் வெண்மைதானே...அது கூட வாங்கியிருப்பாரோ என்று பார்த்தேன்.!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை. வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்...

குறையொன்றுமில்லை. said...

சாந்தி கதை நல்லா இருக்கு வல்லமையில் வந்ததுக்கும் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

காலத்துக்கேற்ற கதை.சாமியைச் சொல்லி வீட்ல எல்லாரையும் சாமியாட வைக்கிறாங்கப்பா !

வல்லிசிம்ஹன் said...

அருமையான நடையில் நல்ல கருத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
தயிரும் வாங்கி வந்திருந்தாரானால் நீர்மோர் வந்தவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். வாழ்த்துகள் சாந்தி.

கோமதி அரசு said...

அருமையான கதை.

வல்லைமையில் வெளி வந்ததுக்கு வாழ்த்துக்கள் சாந்தி.

சென்னை பித்தன் said...

நல்ல கருத்துள்ள கதை!

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல கருத்து நல்ல கதை! வாழ்த்துக்கள்

pudugaithendral said...

அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்வி,

இங்கேயும் தந்தேரஸ்க்கு அப்படித்தான் ஆக்கிட்டாங்கப்பா..

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

தங்கம் போய் இப்ப ப்ளாட்டினத்துல வந்து நிக்குது :-))

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ஆஹா.. ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்வர்ணரேக்கா,

சேமிப்புன்னாலும் சில பேர் அளவுக்கதிகமா கடன் வாங்கியாவது தங்கம் வாங்கணும்ன்னு இறங்கறது நல்லதில்லை இல்லியா ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சேக்காளி,

அடடா!!.. ஒய் திஸ் கொலைவெறி :-))))

அந்தம்மா சொன்னாப் புரிஞ்சுப்பாங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரசிகன்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

சரியாச் சொன்னீங்க.. நம்மூர்ல அட்சய திருதியை மாதிரி இங்கே தந்தேரஸ் கொண்டாடுவாங்க. ஏதாவது புதுசு வாங்குனாப் போறும்ன்னு இருந்த மக்களோட மனநிலை இப்ப தங்கம் வாங்கினாத்தான் ஆச்சுன்னு வந்து நிக்குது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷைலஜா மேடம்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

அரிசிதானே.. தங்க மோகம் தெளிஞ்சு மாமி எந்திருச்சு வந்து, பையைக் கொடுத்து அனுப்பினதும் போய் வாங்கிட்டு வந்துடுவார் :-))

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ரொம்ப நன்றி வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா..

Yaathoramani.blogspot.com said...

நல்ல கருத்து
வியாபாரிகளின் அதீத விளம்பரச் சத்தத்தில்
இது நம் மக்கள் காதில் ஏறுமா?
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

RVS said...

இது கதைதானே?

ரொம்ப நல்லாயிக்கு மேடம்.

அட்சய திரிதியை பிடிக்காத பொண்டாட்டியும் நகை வாங்கிக் கொடுக்காத புருஷனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை...

அப்டீன்னு ஒரு டயலாக் இருக்கு.. ஓ.கேவா? :-)))

ஸாதிகா said...

எழுத்து நடை அருமை.

இராஜராஜேஸ்வரி said...

உப்பைக் கொண்டு போய் சமையலறையில் வை. இந்தப் பாலைக் காய்ச்சிப் பால் பாயசம் பண்ணி சுவாமிக்கு நைவேத்தியம் செய். /

உண்மையில் அட்சய திருதியை அன்று கல் உப்பு வாங்கி பூஜையில் வைத்தல் சிற்ப்பு.

மகாலட்சுமி உதிதத்து பாற் கடலில்.

உப்பும் கடலில் தானே உதிக்கிறது!

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

உணவு உலகம் said...

அழகிய வாழ்வியல் பகிர்வு. ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்த பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நீர்மோர் கொடுக்கலாம்தான்.. நல்ல யோசனை வல்லிம்மா. வர்றவங்க நாங்க "****"தான் குடிப்போம்ன்னு சொல்லாம இருந்தாச் சரி :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சென்னை பித்தன்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நம்பிக்கை பாண்டியன்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

தொல்லைக்காட்சி, ஃப்ளக்ஸ் பேனர்கள்ன்னு இருக்கும் தடைச்சுவர்களைத் தாண்டிப் போக முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். மக்களைச் சிந்திக்க முடியாதபடி செண்டியால் கட்டிப்போட்டு வெச்சிருக்காங்களே..

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

சுத்தமான உண்மைக் கலப்படமில்லாத அக்மார்க் கற்பனைக் கதையேதான் :-))

டயலாக் வெளுத்து வாங்கறீங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

இங்கும் தந்தேரஸ் இல்லைன்னா லஷ்மி பூஜை அன்னிக்கு உப்பு வாங்கி பூஜையில் வைப்பாங்க. இந்த தந்தேரஸுக்கும் நம்மூர் அட்சய திருதியைக்கும் பெரிய வித்தியாசமில்லாம இங்கியும் தங்க, வெள்ளி மோகம் சமீபத்துல ஆரம்பிச்சுருக்கு. முன்னெல்லாம் சின்ன எவர்சில்வர், ப்ளாஸ்டிக்கோட திருப்திப் பட்டுக்குவாங்க. இப்பல்லாம் அது வெள்ளிக் கிண்ணமா இருந்தாத்தான் ஆச்சு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றி :-)

LinkWithin

Related Posts with Thumbnails