Friday 23 September 2011

அதிகாலைப் பொழுதில்..

நம்மில் எத்தனை பேருக்கு அதிகாலையில் எழுந்திருக்கப் பிடிக்கும்?.அதுவும் பிரம்ம முகூர்த்தத்தின், அந்த, இருள் பிரிந்தும் பிரியாத அமைதியான நேரத்து அழகே தனிதான். ‘எழுந்திருக்கவா வேண்டாமா?’ என்று நம்மைப்போலவே யோசித்துக் கொண்டு உலகத்தில் யாராவது அவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொண்டிருந்தால் நாமும் விழித்துக் கொள்ளலாம் என்று சூரியன் மெதுவாக தன் கதிர்களை நீட்டி, ஓட்டைக்கண் வழியாக சோம்பலுடன் பார்க்க, “இப்போ, எழுந்திருக்கப் போறியா இல்லியா?” என்று எங்கிருந்தோ ஒரு சேவல் குரல் கொடுக்கும். 

அந்த எச்சரிக்கைக் குரலை கேட்டதும் அவன் சுறுசுறுப்பாகி, அடித்துப் பிடித்து தயாராகி, தன்னுடைய கடமையாற்றப் புறப்பட்டு விடுவான். என்ன கடமை என்றா கேட்கிறீர்கள்!!.. எவ்வளவோ இருக்கிறதே. முக்கியமாக தலை வரைக்கும் மூடிக் கொண்டு உறங்குபவர்களை முதுகில் சுள்ளென்று வெய்யிலை உறைக்கச் செய்தாவது எழுப்ப வேண்டுமே J
விடிகாலை செக்கர் வானம்
விடிகாலையில் எழுந்திருந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு அதிகம் மாசுபடாத, சுத்தமான காற்று சுவாசிக்கக் கிடைக்கிறதே. அதுவும் பக்கத்தில் பூங்காக்கள், கடற்கரை இருந்தால் இன்னமும் நல்லது. நாலைந்து தடவை குறுக்கும் நெடுக்குமாக நடந்து விட்டு, அப்படியே தாகமெடுக்கும்போது அங்கே விற்கப்படும், அருகம்புல் சாறு, இளநீர், வேப்பிலைச் சாறு போன்றவற்றை குடித்துக் கொள்ளலாம். நடந்த களைப்பில் பசியெடுத்தால் அங்கேயே விற்கப்படும், வடை சமோசா வகைகளை வயிற்றுக்குள் தள்ளி விடலாம். பயிற்சியினாலான பலன் என்று பார்த்தால் குறைந்த எடை மேலும் கூடியிருக்கும். அதனாலென்ன?..மறுநாள் வந்து இன்னும் இரண்டு சுற்று நடந்தால் போகிறது J
உதயமாகத் தொடங்கும் சூரியன்..
அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால், கிடைக்கும் நன்மைகள் பல. எதுவும் செய்ய நேரமில்லாதவர்கள் குறைந்த பட்சம் பத்து முறை சூரிய வணக்கமாவது செய்யலாம். இப்போதெல்லாம் மும்பை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள், அன்றைய உடற்பயிற்சிக்கு நேரமில்லாது போய் விட்டால், குறைந்த பட்சமாக அலுவலகத்திலிருந்தோ, வீட்டிலிருந்தோ ரயில் நிலையத்திற்கு நடந்து செல்வதையாவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கிராமங்களின் அதிகாலைக்கென்றே ஒரு தனியழகு இருக்கிறது. மேய்ச்சலுக்கோ, வயலுக்கோ ஓட்டிக் கொண்டு போகும் மாடுகளின் கழுத்து மணிச் சத்தமும், ‘ச்ளப்… ச்ளப்..’ என்று பெண்கள் வாசல் தெளிக்கும் ஓசையும், இரவு முழுவதும் மரங்களில் அடைந்திருந்த பறவைகள், அன்றைய உணவைத் தேடிப் புறப்படும் ‘களபுள’வென்ற கூச்சலுமாகக் கலந்து ஓவியமொன்று கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறுவதைப் போல, கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக துயிலெழும். விடியலிலிருந்தே கூவிக்கூவி எல்லோரையும் எழுப்பி கடமையாற்றிய சேவல்களும், சேய்களுடன் தாய்க்கோழிகளும் குப்பையைக் கிளறி இரை தேடக் கிளம்பி விடும்.
காகமே.. சூரிய லட்டு தின்ன ஆசையா!!..
விடியலில் சாணம் தெளித்து கோலம் போடுவதால் ஒரு மருத்துவ நன்மையும் இருக்கிறது. சூரியனின் இளங்கதிர்கள் சாணத்துடன் வினைபுரிவதால் ‘மீத்தேன்’ எனும் ஒரு வாயு உற்பத்தியாகிறது. இதை சுவாசிப்பது உடலுக்கு நல்லது. அதுவுமில்லாமல், இந்த வாயு விஷப்பூச்சிகள் வீட்டை அண்டாமலும் காக்கிறதாம். இப்போதெல்லாம் சாணம் தெளிப்பதை விடுங்கள்.. விடிகாலையில் வாசல் தெளித்து கோலம் போடுவதே அருகி விட்டது.

சில இடங்களில் இரவே இதையெல்லாம் செய்து வைத்து விடுகிறார்களாம். விடிகாலையில் குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு நல்ல உடற்பயிற்சி. அரிசி மாவினால் கோலமிடும்போது அது எறும்புகளுக்கும் உணவாகிறது. அன்னதானம் செய்தால் புண்ணியமாச்சே!! அதுவுமில்லாமல், அந்த நேரத்து சுத்தமான காற்றை சுவாசிப்பதென்பது ஆரோக்கியத்துக்கும் நல்லதென்றுதான் நம் முன்னோர்கள் இந்தப் பாரம்பரியத்தையெல்லாம் கொண்டு வந்தார்கள். நாம் நோக்கத்தை விட்டுவிட்டோம். வெறும் பாரம்பரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம் J
கடமையாற்ற கிளம்பிட்டார்யா கிளம்பிட்டாருய்யா
விடிகாலையில் எழுந்திருப்பதால் பல நன்மைகளும் இருக்கின்றன. ஒரு நாளில் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது நமக்குக் கூடுதலாக கிடைக்கிறது. உடற்பயிற்சி செய்ய, விரும்பிய புத்தகத்தைப் படிக்க, நல்ல இசையைக் கேட்க, அன்றைய முக்கியமான வேலைகளை அவசரப் படாமல் நிதானமாக செய்து முடிக்க, அவசர அவசரமாக விழுங்காமல் நிதானமாக ரசித்து உண்ண, முக்கியமாக கையில் தேநீர்க் கோப்பையுடன் காலை நேரச் சூரியனின் அழகை ரசிக்க எல்லாவற்றுக்குமாக,.. அத்துடன், இந்த இடுகையைப் படிக்கவும் நேரம் கிடைக்கிறது J


டிஸ்கி: வல்லமைக்காக எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் z



59 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான்..

அதிகாலை வரம்
அதை பலரும் பெறுவதில்லை!!

குறையொன்றுமில்லை. said...

படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. நான் தாணா வந்தால் பக்கத்திலேயே இருக்கும் ஜாக்கர்ஸ் பார்க் போயி ஒருமணி நேரம் காலை வாக் பண்ணிட்டு வந்துடுவேன். ஜில்லுனு காலை வேளை வாக்கிங்க் நால் பூராவும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். எல்லாருக்கும் நேரம் இருக்காதே. நேரம் கிடைத்தால் காலை வாக் மிஸ் பண்ணவே கூடாது.

Yaathoramani.blogspot.com said...

நான் அந்த சுகத்தை அறிந்து
அனுபவித்து வருகிறவன் என்கிறபடியால்
நானும் உங்கள் கட்சி
படங்களும் பதிவும் அருமை
த.ம 1

RAMA RAVI (RAMVI) said...

விடியல் காலையில் எழுந்தாலும் வீட்டு வேலைகளை முடித்து கணவர் குழந்தைகளை கவனித்து அனுப்பவே நேரம் போறதில்லை.நடை பயலுவதேல்லாம் 8 மணிக்கு மேல்தான்.அதனால் இந்த அருமையான விடியல் பொழுது எனக்கு கிடைப்பதில்லை.
உங்க பதிவில் அந்த விடியல் பொழுது வர்ணனையை படிக்கும் போதே சுகமாக இருக்கு
நன்றி பகிர்வுக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான பதிவு. அருமையான பயனுள்ள விஷயங்கள். கிராம சூழல் பற்றிச் சொல்லியுள்ளது மனதை மகிழ்விக்கிறது.

நான் விடியற்காலம் பிரும்ம முஹூர்த்தத்தில் எழுந்து பல வேலைகள் பார்ப்பதாக கனவு காண்பதுண்டு.

ஏனெனில் இரவெல்லாம் தூங்காமல் பிளாக்கிலேயே இருந்துவிட்டு, பெரும்பாலும் தூங்கப்போவதே பிரும்ம முஹூர்த்தத்தில் தான். vgk

Anonymous said...

முன்னோர்கள் இந்தப் பாரம்பரியத்தையெல்லாம் கொண்டு வந்தார்கள். நாம் நோக்கத்தை விட்டுவிட்டோம். வெறும் பாரம்பரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்....

சரியா சொன்னிங்க பாராட்டுக்கள்

natchiar kothai said...

ஒரு காலை பொழுதை நகரத்தையும் கிராமத்தையும் இணைத்தே பறை சாற்றிவிட்டீர்கள். இரண்டிற்கும் பொதுவான அந்த பிரம்மா முகூர்த்த வேளையில் பக்தி பாடல் ஒன்றில் மெய் மறந்து ..முதல் தேநீரை உதட்டில் வைத்தபடி.....அந்த மெலிதான லயிப்பு ..விட்டு விட்டீர்களா, மறந்து விட்டீர்களா,? வணக்கங்கள்.

ராமலக்ஷ்மி said...

அதிகாலை நேரமே... என அழகு காட்டும் படங்கள் யாவும் அற்புதம் சாந்தி. இதுபோல நான் சூரியனாரைப் பிடித்ததெல்லாம் மாலைப் பொழுதின் மயக்கத்திலே..தான்:)! ஏனெனில் பால்கனிகள் மேற்கு பார்த்தவை.

பதிவும் அருமை.

நாஞ்சில் பிரதாப் said...

உறங்கும் மானிடனே வெளியே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா...

நான் கூட ஒரு பதிவு போட்டிருந்தனே... அதோட இன்ஜீப்ரேஷனா:))))

இமா க்றிஸ் said...

நல்ல இடுகை. படங்கள் அனைத்தும் அழகு. //காகமே.. சூரிய லட்டு தின்ன ஆசையா!!..// ரசனையான தலைப்பு.

ஸாதிகா said...

ரம்யமான படங்கள்.இதமான பகிர்வு .வாழ்த்துக்கள்@

MANO நாஞ்சில் மனோ said...

அதிகாலை உங்கள் பதிவு போல அழகுதான்....!!!

ADHI VENKAT said...

அதிகாலை வேளையில் வரும் தூய்மையான காற்றும் அமைதியும் மனதுக்கு இதமளிக்கும்.

காலை வாக்கிங் எனக்கு ஒத்து வராது. வீட்டு வேலைகளும், பரபரப்புமாக இருக்கும்.

படங்களும், பகிர்வும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

அதிகாலை வரம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...

காலை நேரச் சூரியனின் அழகை ரசிக்க எல்லாவற்றுக்குமாக,.. அத்துடன், இந்த இடுகையைப் படிக்கவும் நேரம் கிடைக்கிறது J//

அருமையான பகிர்வு.
அற்புதமான சூரிய உதய படங்கள். பாராட்டுக்கள்..

raji said...

கரெக்டா சொன்னீங்க சாந்தி!நான் வாசல் தெளிச்சு கோலம் போட்டப்பறம் யோகாவும் சூரிய நமஸ்காரமும் பண்ணிட்டு கையில பால்
வச்சுண்டு பதிவுகளைப் படிக்கறதுண்டு.
(ஞாயிறு சோம்பேறித்தனம் தவிர)

கடைப்பிடிக்க வேண்டிய பதிவு

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.... படங்களும் அருமை..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முக்கியமாக தலை வரைக்கும் மூடிக் கொண்டு உறங்குபவர்களை முதுகில் சுள்ளென்று வெய்யிலை உறைக்கச் செய்தாவது எழுப்ப வேண்டுமே//

தூங்கறவங்கள எழுப்பறது பெரிய பாவம் தெரியுமா? ஹ்ம்ம்... சொன்னா யாருக்கும் புரியறதில்ல..
இப்படிக்கு,
அதிகாலை எட்டு மணி வரை தூங்க விரும்புவோர் சங்கம்... :)

நன்மைகள் எல்லாம் புரியுதுங்க'க்கா... கேக்கும் போது நாளைக்கு அஞ்சு மணிக்கு எந்திரிக்கனும்னு உத்வேகம் எல்லாம் வருது...ஆனா பாருங்க, உடல் சொன்ன பேச்சு கேட்பதில்லை... But I envy early risers and I know I miss a lot by waking up late... hmmm... பாப்போம் எப்ப திருந்தறேன்னு...

ஜெய்லானி said...

அருமையான பதிவு ...!! முஸ்லீம்களில் இப்படி எழுந்திருப்பது கட்டாய கடமை .ஏனென்றால் அதிகாலை தொழுகை நீங்கள் சொன்ன நேரத்தில்தான் வருகிறது . :-)

ஸ்ரீராம். said...

உண்மை...உண்மை....அதிகாலை எழுந்திருப்பதன் சுகம் தனிதான். நிறைய நேரம் கிடைக்கிறது. அந்த அமைதி, அந்த சுத்தம்...

கோலம் போடுவது சாணி தெளிப்பதன் அர்த்தத்தை எல்லாம் இந்தக் பகுத்தறிவுக் காலத்தில் மற்றும் அபார்ட்மென்ட் வாசங்களில் (மறைந்து) மறந்து விட்டனர் மக்கள்! வல்லமைக்கு வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

படங்கள் அழகு.

Unknown said...

அதிகாலை எழுவது
ஆயுளை நீட்டிக்கும்
என்பது ஆன்றோர் வாக்கு
ஆனால்..?

அனைவரும் உணர வேண்டிய
பதிவு நன்றி!

புலவர் சா இராமாநுசம்

ஹுஸைனம்மா said...

படங்களின் அழகில் மயங்கியதில், என்ன எழுதிருந்தீங்கன்னே மனசுல சரியா பதியலக்கா!! அற்புதமான படங்கள். (ராமலக்‌ஷ்மிக்கா, கவனம்!! :-)))) )

மாய உலகம் said...

புத்தம்புது காலை பொன்னிர வேளை

ராமலக்ஷ்மி said...

@ ஹுஸைனம்மா,

சாந்தியின் எழுத்துக்கு மட்டுமல்ல, படங்களுக்கும் முதன்மையான ரசிகை நான்:)! அவர் படங்களில் மிகப் பிடித்தது நம்ம ஊர் காந்திமதி அம்மன் கோபுரம். (நான் படமெடுக்கையில், பிடித்துப் போன அந்தக் கோணத்தை மனதில் கொண்டு வந்தே எடுத்தேன்). சமீபமாக அவர் ஃப்ளிக்கரில் பகிர்ந்திருந்த பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் படம் அற்புதம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குணசீலன்,

உண்மைதான்... ரொம்ப அற்புதமான வரம்ங்க அது :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

என்னதான் மாங்கு மாங்குன்னு ட்ரெட் மில்லுல நடந்தாலும், தோட்டங்கள்ல இயற்கையான காத்தையும், பருவ நிலைகளையும் அனுபவிச்சுக்கிட்டு நடக்கிற சுகமே தனிதான் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமா,

நீங்க சொன்னாப்ல விடியல்ல எழுந்தாலும், நம்மைச் சுத்தி நடக்கற அற்புதமான விஷயங்களை கவனிக்க நேரமிருக்கறதில்லைதான். எல்லாக் கடமைகளையும் முடிச்சுட்டு நிமிர்றப்ப, சூரியனும் நிமிர்ந்து பார்க்கற உசரத்துக்கு வந்துடறானே.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வைகோ ஐயா,

இரவு முழுக்க ப்ளாகா???

உங்க வீட்டு மாமியோட இமெயில் ஐடி கிடைக்குமா.. கொஞ்சம் பேசணுமே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்னதூரல்,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோதை,

மறக்கலைங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்குமே. சிலபேருக்கு தேனீரோட அந்த நேரத்து அமைதி பிடிக்கும், சிலருக்கு இசை பிடிக்கும். எதுவானாலும் அவரவர் மனசில் தீர்மானிக்கப்படுவதா இருக்கட்டுமே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அட்மின்,

ரொம்ப நன்றிங்க வரவுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நீங்க எடுத்த படங்களை மறக்க முடியுமா?? உங்க காமிராக்கண் பிடிச்சுட்டு வந்த ஒவ்வொண்ணும் பொக்கிஷம்ங்க :-) சூரியனே வந்து பார்த்திருந்தாக்கூட,"நாம இவ்ளோ அழகா இருக்கோமா"ன்னு ஆச்சரியப்பட்டிருப்பான்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

"நாரோயிலின் நம்பிக்கை நட்சத்திரமே வருக".. இதிலெல்லாம் உங்களுக்கு சந்தேகம் வரலாமா. நாரோயில் ஊரே உங்களைத்தான் ரோல் மாடலா நினைச்சுக்கிட்டு கன்னா பின்னான்னு ஃபாலோ செய்யுதாமே(நீங்க ஊருக்கு போயிட்டு வந்த எஃபெக்டோ :-)

சொல்லிக்கொடுத்த மாதிரியே கமெண்டிட்டேன். அக்கவுண்டுக்கு அமவுண்டை அனுப்பிடுங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இமா,

வேணும்னா சொல்லுங்க.. ஒரு விள்ளல் லட்டு தரச்சொல்றேன். உங்க பதிவில் நியூசிப்படங்கள் ஜூப்பருப்பா..

ரொம்ப நேரமா காமெராவுல கோணம் பார்த்துக்கிட்டிருக்கீங்களே.. போட்டோ புடிச்சதும் பகிர்ந்துக்கோங்க ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

இமா க்றிஸ் said...

;)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

உண்மைதான். பெருநகரங்களின் வாழ்க்கை முறை அனுமதிக்கிறதில்லைதான்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

வாசிச்சதுக்கு நன்றிங்க

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

ஒரு காலத்துல கையில் காபியோட செய்தித்தாள் இருந்தாத்தான் காபி ருசிக்கும். இப்போ அந்த இடத்தை ப்ளாக் பிடிச்சுட்டிருக்குதா.. அசத்தல் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

நன்றி சகோ :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

இதே டயலாக்கை மை ரங்க்ஸ் சொல்லி தெனமும் கேட்டுக்கிட்டு இருக்கேன் ;-)))

அலாரத்தை ஆஃப் செஞ்சுட்டு திரும்பவும் உறங்கற சொகுசே தனி இல்லியா புவனா ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

'சுபஹு' தொழுகையைப் பத்திதானே சொல்றீங்க. அலிபாகில் இருந்தப்ப எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மசூதி இருந்தது. அங்கே பாங்கு அழைக்கும் ஒலியை வெச்சே அப்போ மணி என்னவாயிருக்கும்ன்னு ஊகிப்போம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

விடிகாலை வாக்கிங்கை எங்களிலும் வாசிச்சேன். அற்புதமா விவரிச்சிருந்தீங்க ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புலவர் ஐயா,

ரொம்பவும் சரியா சொன்னீங்க.. கடைசில அந்த ஆனாலில் தொக்கி நிற்கும் கேள்விகள் எக்கச்சக்கம் :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

சரி.. சரி.. நீங்க காலையில் எழுந்திருக்க விரும்பறதில்லைங்கறதை நாசூக்கா சொல்லியிருக்கீங்க, இதை பப்ளிக்ல சொல்லவே மாட்டேன் சரியா ;-)

படங்களைப் பொறுத்தவரை மயிலைப் பார்த்து சிறகை விரிக்கிற வான்கோழி நான் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

பலே... பாட்டாவே பாடிட்டீங்களா :-))))

raji said...

செய்தித்தாளுக்கு ரங்கமணி,மாமனார்,பொண்ணுனு போட்டி வந்துடுது.அதனால நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் ஹி ஹி ஹி......

இராஜராஜேஸ்வரி said...

அதிகாலை இனிமை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

@ராமலஷ்மி,

'பிட்' டீச்சருக்கே என்னோட படங்கள் பிடிச்சுருக்குதா?!!! ஹைய்யா.. நான் பாசாயிட்டேன் :-))

உங்க பரந்த மனசுக்கு நன்றிங்க.. :-))

சாந்தி மாரியப்பன் said...

@இமா,

:-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

காலையில செய்தித்தாளை, அதுவும் அது வந்தவுடனேயே படிக்கலைன்னா தலை வெடிச்சுடும் சிலருக்கு :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

ஹுஸைனம்மா said...

//சரி.. சரி.. நீங்க காலையில் எழுந்திருக்க விரும்பறதில்லைங்கறதை நாசூக்கா சொல்லியிருக்கீங்க//

அவ்வ்வ்வ்... உங்க படத்தை அவ்வளவு ரசிச்சேங்கிறதைச் சொல்லவந்தா... ’சுபுஹூ’ எனக்கும் உண்டுங்க. அதுவுமில்லாம, எங்கூட்டுக்கார் 6.15க்கே கிளம்பணும். அப்புறம் எங்க தூங்க..

இதுக்காகவே என் கிச்சனிலிருந்து சூர்யோதயத்தைப் படம்புடிச்சேன் இன்னிக்கு. அதப்பாத்த நானே நொந்துபோயிட்டேன், உங்ககிட்டல்லாம் காமிச்சா, (உங்கக்) காமிராவக் கடாசிடுவீங்களோன்னு பயமாருக்கு!!

Learn said...

அருமை உங்கள் பூக்களை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்கும் அனுப்பி வைக்கலாமே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

LinkWithin

Related Posts with Thumbnails