Sunday 3 December 2017

சாரல் துளிகள்

ஜன்னலோர இருக்கையிலமர்ந்து, இரவில் முழுமையடையாத தூக்கத்தைத் தொடரும் அவளுக்கோ அருகமர்ந்திருந்த மற்றவர்களுக்கோ, அவளது நிறுத்தத்தை ரயில் கடந்து செல்வது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

மடியிலிருத்திய குழந்தையை
முந்தானையால் மூடிக்காப்பதையொத்ததே
கொத்தாய்க் காய்த்தவற்றை
இலைகளால் கவிந்து காக்கும் மாமரத்தின்
தாய்மையும்.

தன் மனப்போக்கில்
எல்லாம் செய்து முடித்தவன்
இறுதிவிளைவுகளுக்கு மட்டும்
விதியைத் துணைக்கழைக்கிறான்
நினைக்க வைத்ததுவும்
நடத்தி வைத்ததுவும் விதியேயென்றால்
முடித்து வைத்ததுவும்
அதுவேயாய் இருக்கட்டும்.

சிலர் இறந்தபின்தான் அத்தனை நாள் அவர்கள் இருந்ததையே நினைவுகூர்கிறோம்.

செம்பாய் இருக்கும் இலைகளை மரகதமாக்கும் இயற்கையை விடப்பெரிய இரசவாதி யாருமில்லை.

விலகிச்செல்வது போல் போக்குக் காட்டி விட்டு சரேலென்று திரும்பி தாக்க வரும் யானையைப்போன்றதே, நீளுறக்கத்திலிருந்து மறுபடியும் விழித்தெழும் பிரச்சினைகள்.

கிளம்புவதும் சென்றடைவதுமாக, இன்னும் நிலை சேராமல் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன சாலைகள்.

பூசைகள் முடங்கிய வனக்கோவிலாயினும் ஆண்டிற்கு ஒருமுறையேனும் சிறப்பு கிடைத்து விடுகிறது தேவியாய் அமர்ந்த தெய்வத்திற்கு.

விழுந்து விழுந்து படித்த பதிலை மாங்கு மாங்கென்று விடைத்தாளில் எழுதிக்கொண்டிருந்தபோது கணகணவென்று அடித்த கடைசி மணியால் பாதியிலேயே விட்டு வந்ததையெண்ணி மூசுமூசென விசும்பிக் கொண்டிருந்த போது கிணுகிணுவென அடித்தது மொபைல் அலாரம்.

எதையாவது ஏற்றுக்கொள்ளவோ தள்ளிப்போடவோ இயலாவிடில், சமயோசிதமாக சமாளித்து விடல் நன்று. இம்மூன்றில் பிற இரண்டு அம்சங்களுக்கும் கூட இந்த விதி சாலப்பொருந்துவது ஒரு முக்கோணக்காதல் கதையை ஒத்திருக்கிறது.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொகுப்பு.

இங்கேயும் சேமிப்பது சிறப்பு.

Unknown said...

நன்று!

LinkWithin

Related Posts with Thumbnails