Wednesday 7 December 2011

ஆத்தா!!! நான் ஹாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானது)

யம்மா.. நான் மேற்படிப்புக்கு வெளியூருக்குப் போய்த் தங்கிப் படிக்க வேண்டியிருந்தா என்னை அனுப்புவீங்களா?..”இப்படித்தான் ஆரம்பிக்கும் என் பெண்ணின் கலாய்ப்பு நேரம்.

அதுக்கென்னா.. தாராளமா போயிப் படிச்சுட்டு வாயேன். இதுக்கெல்லாம் அனுப்பாம இருப்பாங்களா என்ன?.. படிப்பு விஷயத்துல விளையாடக் கூடாது தெரியுமா?..” நான்  விட்டுக் கொடுக்காம பதிலளிப்பேன்.

அப்போ என்னைத் தேடவே மாட்டீங்களா?.. என் ஞாபகமே வராதா உங்களுக்கு. ச்சே!!.. ஒரு பேச்சுக்காவது ‘உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது, தொலைதூரத்துக்கெல்லாம் உன்னை அனுப்ப மாட்டேன்’னு சொல்லுறாங்களா பாரு.”ன்னு செல்லமா அலுத்துக்குவா.

“அதெப்படிம்மா.. படிப்பு விஷயமாச்சே.. வெளியூரென்ன? வெளி நாடென்ன? அனுப்ப வேண்டி வந்தா அனுப்பித்தானே ஆகணும்.” நானும் சளைக்காம சீண்டுவேன்.

“உன் தொல்லை இல்லாம வீடு அமைதியா இருக்குமில்ல..”என் சீமந்த புத்திரன் தன் பங்குக்கு எரியுற தீயில் ரெண்டு ஸ்பூன் நெய்யை வார்ப்பார்.

“பையா,.. உன்னை யாரு கேட்டா??.. நீ சும்மாரு..”ன்னு அவரை ‘அன்பா’ அடக்கிட்டு, “நல்லதுக்கு காலமே இல்லை.. யாராவது ஒருத்தராவது வேண்டாம், நீ போகாதேன்னு சொல்றாங்களா?. அப்பா.. நீங்க சொல்லுங்க”ன்னு மேடம் ரங்க்ஸைப் பிடிச்சுக்குவா.

“நானா?.. எனக்கும் உன்னைத் தேடாதே.. ஏன்னா, தேடுச்சுன்னா அடுத்த நிமிஷம் நீ இருக்கற ஊருல வந்து நின்னுடுவேன்ல..”ன்னு சொல்லிட்டு “நாங்க உன்னை பார்க்காம இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொதல்ல உனக்கு வீட்டு ஞாபகம் வராம இருக்குமான்னு சொல்லு.”ன்னு மடக்கவும் “ஹி..ஹி..ஹி..”ன்னு தோல்வியை ஏத்துக்குவா. “சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும், காசு குடு”ன்னு மறுநாளும் இந்த எபிஸோட் தொடங்கும்.

அப்டி ஒர் நாள்லதான் இப்படி வெளியூர்ல தங்கிப் படிக்கிறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது. தனியா தங்கிப் படிக்கிறதோட நன்மைகளை எடுத்துச் சொன்னேன். என் தோழியின் பெண்ணுக்கு வீட்லேருந்து காலேஜுக்கு போக வர பயணத்துலயே நேரம் சரியா இருந்துச்சு. படிக்க நேரமில்லை, நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வர வேண்டிய நிலைமை, அதனால வீட்ல உள்ளவங்களுக்கு டென்ஷன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள். அதனால, காலேஜ் பக்கத்துலயே தங்கிப் படிக்கலாமான்னு ஒரு யோசனை. ஏனோ தெரியலை, ஹாஸ்டலை அந்தப் பொண்ணு உறுதியா மறுத்துட்டது.

அப்டீன்னா, ரெண்டு மூணு பொண்ணுங்க தனியா வீடு எடுத்து தங்கிப் படிக்கலாமேன்னும் ஒரு யோசனை அவங்களுக்கு. மும்பையில் இது இப்போ ஜகஜமாகிட்டு வருது. ஆளுக்கொரு சாமான் செட்டைக் கொண்டாந்துரலாம். வாடகை, அட்வான்ஸ், மற்ற செலவுகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கறதுனால கையையும் கடிக்காது. இங்கெல்லாம் அபார்ட்மெண்ட் கலாச்சாரம்தான். ஒவ்வொரு பில்டிங்கிலும் செக்யூரிட்டி அனுமதியில்லாம யாரும் உள்ளே நுழைஞ்சுட முடியாது.. அதனால பாதுகாப்புக்கும் கவலையில்லைன்னு முடிவெடுத்தாங்க. கடைசியில கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டுப் பார்த்துட்டு, “வேணாம், நான் வீட்லேர்ந்தே போயிக்கறேன்”ன்னு அந்தப் பொண்ணு டமால்ன்னு பல்டியடிச்சுட்டுது.

ஹாஸ்டலோ, தனிக்குடித்தனமோ ரெண்டுலயும் நல்லது கெட்டது ரெண்டும் இருக்குது. நல்லதைச் சொல்லிக் கொடுத்துட்டா அப்றம் கெட்டதை அவங்களே உதறித் தள்ளிட மாட்டாங்களா என்ன?..

பசங்களுக்காவது பரவால்லை. பொண்ணுங்க அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டே ஆயுசுக்கும் சுத்த முடியாது. கல்யாணமோ, மேற்படிப்போ இல்லை வேலை வாய்ப்போ வந்து பிரிக்கத்தான் போகுது. முதலாவது காரணத்துனால பிரிவு ஏற்படறப்ப, நினைச்சப்ப எல்லாம் அம்மா வீட்டுக்கு வர்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை. அந்தப் பிரிவுக்கு இது ஒரு வெள்ளோட்டமா இருக்கட்டுமே. கணவனும் மனைவியும் மட்டுமல்ல ரூம்மேட்ஸோ, நல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்.

அப்டி அமையலைன்னாலும், ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு வந்துட்டுப் போறப்ப அம்மா கொடுத்து விடற ஊறுகாய், முறுக்கு, அதிரசம், இன்ன பிற தீனிகளை அவங்க கூட பகிர்ந்துக்கிட்டு அவங்க கூட நல்ல நட்பை ஏற்படுத்திக்கிட்டா, அவங்களே உடன் பிறவா உடன்பிறப்பாகி சிலசமயம் வீட்டு ஏக்கத்தைக் குறைப்பாங்க J. தன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமயும் அதே சமயம் மத்தவங்களை மதிச்சும் நடக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாச்சே. இப்படி கலந்து பழகற குணமிருக்கறவங்க கண்டிப்பா புகுந்த வீட்டிலோ இல்லை அலுவலகத்துலயோ தன்னைச் சுலபமாப் பொருத்திக்கிடுவாங்க.

தனி வீடுன்னா பிரச்சினையில்லை. ஆனா, ஹாஸ்டல்ன்னாலே கலாட்டாவுக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் காலேஜ் திறந்த புதுசுல ராகிங்கும் சேர்ந்துக்கும். இந்த மாதிரியான சமயங்கள்ல பயந்து ஓடக் கூடாது. இப்பல்லாம் ராகிங் செஞ்சா கடுமையான தண்டனையும் உண்டு. அதனால சீனியர்களே கூட பெயர் கேக்கறது, தரையில் நீச்சடிக்கச் சொல்றதுன்னு சிம்பிளா இறங்கிட்டாங்க. இதெல்லாம் புதுசா வர்றவங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறதுக்காக நடத்தறது. சில கல்லூரிகள்ல ஜூனியர்களை உற்சாகப் படுத்த சீனியர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடத்தறாங்களாம்.

இப்படி ஆபத்தில்லாத ராகிங்கா இருந்தா மறுபேச்சு பேசாம அவங்க சொல்றதைச் செய்யறது நல்லது. அப்படியில்லாம உடலுக்கோ உள்ளத்துக்கோ கஷ்டம் கொடுக்கற ராகிங்கா இருந்தா தயங்காம தைரியமா அவங்க முகத்துக்கு நேரயே, ”இது தப்பு”ன்னு எச்சரிக்கை செய்யறது நல்லது. அப்டியும் கேக்கலைன்னா வார்டன் கவனத்துக்கு கொண்டு போறது நலம். தனக்கு ஒரு கெடுதல் நடக்குதுன்னா அதைத் தட்டிக் கேக்கற தைரியம் இதனால வளர்க்கப்படுது இல்லியா. இதுமாதிரி சின்னச்சின்ன விஷயங்களைத் தானே சமாளிக்கிறதால தன்னம்பிக்கையும் வளருதே. பூச்சி புழுவே எதிர்த்து நிக்கிறப்ப, ஆறறிவு மனுஷங்க நாம ஏன் எதுக்கெடுத்தாலும் பயந்து சாகணும்??

ஹாஸ்டலோ தனிவீடோ, தன்னோட உடைமைகளைத் தானே பத்திரமா பார்த்துக்கறது நல்லது. அதுக்காக என்னவோ புகுந்த வீட்டுக்குப் பொண்ணை அனுப்பற மாதிரி நகைகளை மாட்டி அனுப்பாதீங்க. இப்பல்லாம் மாணவிகள் மத்தியில் ‘நோ கோல்ட்’தான் ஃபேஷன். அதான் அவங்களுக்குப் பாதுகாப்பும் கூட. முடிஞ்சா அவரவருக்குன்னு தனியா குட்டி பீரோவோ, பூட்டிக்கிற வசதி இருக்கற ஷெல்போ வெச்சுக்கறது நல்லது. விலை கூடின பொருட்களையோ, பணத்தையோ இல்லை துணிமணிகளையோ பத்திரமா வெச்சுக்கலாம். கண்ட இடத்துல இறைச்சுட்டு, அப்றம் அதைக் காணோம் இதைக் காணோம்ன்னு தேடற வேலை மிச்சம். விலை கூடின பொருட்கள் காணாமப் போயிருந்தா நம்ம ரூம்மேட்ஸை தேவையில்லாம சந்தேகப்பட்டு உறவே பாழாகும்.

பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கவும், பட்ஜெட் போட்டுச் செலவு செய்யவும் சொல்லிக் கொடுக்கறதும் அவசியம். நாம அனுப்பற பணத்துக்கு கரெக்டா கணக்கு வெச்சிருக்காங்களான்னு செக் செய்யறதும் முக்கியம். அவங்க தங்கியிருக்கும் ஊர்லயே ஒரு நம்பகமான வங்கியில கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்து, அதை அவங்களையே பராமரிக்கவும் சொல்லணும். படிப்பு, சாப்பாடு மாதிரியான முக்கியச் செலவுகளுக்கு முதலிடம் கொடுக்கணும். முடிஞ்சா அதுல அவசரத் தேவைகளுக்குன்னு கொஞ்சம் சேமிச்சும் வைக்கச் சொல்லிக் கொடுக்கலாம். திடீர்ன்னு ஏதாவது படிப்புச் செலவோ, இல்லை உடம்பு சரியில்லாம டாக்டர் கிட்ட போகவோ வேண்டி வந்தா, வீட்லேருந்து பணம் வர்ற வரைக்கும் சேமிப்பு கைகொடுக்கும்.

காலேஜ்ல, ஹாஸ்டல்லன்னு பொருளாதாரத்துல ஏற்றத் தாழ்வுள்ள பசங்க ஒண்ணா படிக்கிறப்ப, சிலபேர் தாம்தூம்ன்னு செலவு செய்வாங்க. புதுச்செருப்பு வாங்குனதுக்கெல்லாம் ட்ரீட் கொடுப்பாங்க. அதுமாதிரியெல்லாம் எல்லோராலயும் இருக்க முடியாதே. சிலருக்கு பிடிக்கவும் பிடிக்காது. அதுவும் ரொம்ப நெருங்கின நண்பர்கள் ட்ரீட் கேட்டு நெருக்கடி கொடுக்கற சமயங்கள்ல தன்னோட நிலையை உடைச்சுச் சொல்லிடறது உத்தமம்.

வீட்ல அனுப்புன பணமும் பத்தாம, அதிகப்படி செலவுக்காக வீட்ல பொய் சொல்லிப் பணம் கேட்டு வாங்கி வீண் பந்தாவுக்காகச் செலவு செஞ்சு அப்றம் மாட்டிக்கிட்டு முழிக்கிற அவஸ்தை தேவையா என்ன?.. இதனால பெற்றோருக்கும் பசங்க மேல இருக்கற நம்பிக்கை குறைஞ்சு போகுதே. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் மெஸ் ஃபீஸ்ன்னு ஒருதடவையும், சாப்பாட்டுக் கட்டணம்ன்னு இன்னொரு தடவையும் வாங்கிக் கிட்டிருந்தார். படிப்பறிவில்லாத பெத்தவங்களை ரொம்ப நாளுக்கு ஏமாத்த முடியலை. மாட்டிக் கிட்டப்புறம் செம அர்ச்சனை நடந்தது

தன்னோட இருப்பிடத்தைச் சுத்தமா வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். அது உலகத்துக்கும் நல்லது. காலேஜ் விட்டு வந்ததும் துணிங்களை ஒரு மூலையிலும், புத்தகங்களை இன்னொரு மூலையிலும் விட்டெறியறது வீட்டுல வேண்ணா நல்லாருக்கும். எடுத்து வைக்க ‘அம்மா’ங்கற ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும். ஆனா, தனியா இருக்கறப்ப மூக்கால அழுதுக் கிட்டாவது அதை நாமதான் செஞ்சுக்கணும்ன்னு முதல்லயே அவங்க புரிஞ்சுக்கணும்.

ரூம் மேட்ஸ் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செஞ்சுக்கிட்டா மலையும் தூசு மாதிரியாயிடும். சுத்தமான இடத்துல உக்காந்து படிச்சா பாடமும் கடகடன்னு மண்டைக்குள்ள ஏறும். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்

ஹாஸ்டலோ, தனி வீடோ பசங்களுக்கு டால், உப்புமா, ப்ரட் டோஸ்ட்ன்னு ஒரு அவசரச் சமையல் செஞ்சுக்கச் சொல்லிக் கொடுக்கறது உத்தமம். “போம்மா,.. நான் படிப்பேனா, சமையல் செய்வேனா?..”ன்னு கேக்கற உங்க பிள்ளைச் செல்வம், “நேத்திக்கு ஸ்ட்ரைக்கா!!, மெஸ்ல/ஹோட்டல்ல ஒண்ணும் சாப்பிடக் கிடைக்கலை. கடைசில நீங்க குடுத்து விட்ட சின்ன ரைஸ் குக்கர்ல கொஞ்சூண்டு சாதம் வெச்சு, பருப்புப் பொடியோட சமாளிச்சேன். என் ரூம் மேட்டோடயும் பகிர்ந்துக்கிட்டேன். சூப்பர்மா!!.. எப்படிம்மா உங்களுக்கு இந்த யோசனை தோணிச்சு?..”ன்னு கேக்கும். அடுத்த தடவை புள்ளை ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகறச்சே புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி, ஜாம், ஊறுகாய்ன்னு தனியா இன்னொரு லக்கேஜும் ஹாஸ்டலுக்கு படிக்கப் போகும்.

அப்படி முடியலைன்னா, பசங்க தங்கியிருக்கற இடத்துக்கு சாப்பாடு சப்ளை ஏதாவது இருக்குதான்னு விசாரிச்சுக்கோங்க. மும்பையில் நிறைய இடங்கள்ல இந்த டப்பா சர்வீஸ் இருக்குது. மாசம் பணம் கட்டிட்டாப் போதும், மூணு வேளையும் சுடச்சுட சாப்பாடு நாம இருக்கற இடத்துக்கே வரும். அளவு அதிகமாருந்தா ரெண்டு பேர் பகிர்ந்துக்கலாம். இதனால பணமும் மிச்சப்படுது.

எல்லாத்தையும் விட முக்கியமானது ஒண்ணு இருக்கு. அதான் தனியா இருக்கக் கிடைச்ச சுதந்திரத்தை தவறாப் பயன்படுத்தாம இருக்கறது. இதுலயே கிட்டத்தட்ட எல்லாமும் அடங்கிடுது. பசங்க தங்கற ஊர்ல நம்ம சொந்தக்காரங்க இருந்தா இன்னும் விசேஷம். நம்மைக் கண்காணிக்க ஆளிருக்குன்னு அவங்க ஒரு கட்டுப்பாட்டோடயும் இருப்பாங்க, பாதுகாப்பும் கூட. நாம இருக்கிற இடத்துக்குன்னு தனி விதிமுறைகள் இருக்கலாம். அதையெல்லாம் அனுசரிச்சு நடக்கப் பழகிக்கணும். ‘விதிமுறைகள்ங்கறதே மீறத்தானே’ன்னுதான் இள ரத்தம் நினைக்கும். எதெல்லாம் கூடாதுன்னு சொல்றோமோ அதெல்லாம் செய்யணும்ன்னு துடிக்கும். இதை சகஜம்ன்னு எடுத்துக்கிட்டா ஆபத்து வர்றதும், மீள முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறதும் சகஜம்தான்னும் எடுத்துக்கணும்.


டிஸ்கி:நவம்பர் மாத லேடீஸ்ஸ்பெஷல்ல வெளியான இந்தக் கட்டுரையை உங்களுடனும் பகிர்ந்துக்கறேன்.



30 comments:

ஹுஸைனம்மா said...

ஹாஸ்டல் வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான்.. மேலும் பிரிவு பரிவையும் வளர்க்கும்.

கடைசில, அம்மணி ஹாஸ்டல் போறது என்னாச்சு? போறேன்னு ஒத்துகிட்டாங்களா இல்லையா? :-)))))

பால கணேஷ் said...

ஹாஸடல்லயோ, இல்ல தனியா வீடெடுத்தோ தங்கிப் படிக்கறது நல்லதுதான். ஆனா நீங்க கட்டுரையில சொல்லியிருக்கற மாதிரி தன்னோட பொறுப்புக்களை முதல்ல கத்துக் கொடுத்திட்டா பிரச்சனையில்ல... நல்ல விஷய்த்தை பகிர்ந்திருக்கீங்க. நன்றி...

ஸாதிகா said...

ஹாஸ்டல் வாழ்க்கைப்பற்றிஒய சுவாரஸ்யமான பகிர்வு.லேடீஸ்ஸ்பெஷலில் வந்ததற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

ஹேமா said...

வாழ்த்துகள் சாரல்.சமையல் தெரியாமல் தனியாகப் படிக்க,வேலைக்குப் போகிறவர்களுக்கு நல்ல குறிப்புகள் !

ADHI VENKAT said...

// ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்//

இது நல்லா இருக்கே...:))))

எல்லாத்துலயும் நல்லது, கெட்டது இருக்கு. நாம புரிஞ்சு நடந்து கிட்டா எல்லாம் நல்லதா இருக்கும்.

லேடீஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
த.ம -2
இண்ட்லி - 2

RAMA RAVI (RAMVI) said...

ஹாஸ்டல் வாழ்கை சுவாரசியமாகவும் இருக்கும்.பொறுப்பையும் கற்றுக் கொடுக்கும் என்பது என் அனுபவம்.

லேடிஸ் ஸ்பெஷலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை. எனது குழந்தைகளுக்கும் தேவைப்படும். நன்றி சகோ!

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

குறையொன்றுமில்லை. said...

என் சின்னப்பொண்ணு முதல்லலாம்
ஹாஸ்டல்ல தஙமாட்டேன்னு ஒரேஅழுகை படிப்பு முடிஞ்சதும் ஹாஸ்டலைவிட்டு வீட்டுக்குவரமாட்டேன்னு அழுகை. ஹா ஹா

ராமலக்ஷ்மி said...

விடுதியில் தங்கிப் படிக்கையில் கவனிக்க வேண்டியவற்றைப் பற்றி விரிவாய் அருமையாய் சொல்லியுள்ளீர்கள். பலருக்கும் பயானாகக் கூடியவையும். லேடீஸ் ஸ்பெஷல் வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்!!

Kousalya Raj said...

ஹாஸ்டல தங்கி படிகிறதுல இவ்வளவு விஷயம் இருக்கா ?!

சுவாரசியமாக சொன்ன விதம் மிக ரசித்தேன்...

சில டிப்ஸ் எடுத்து வச்சுகிட்டேன்...
பின்னாடி என் பசங்களுக்கு தேவைப்படுமே... :)

லேடிஸ் ஸ்பெஷல்ல வெளிவந்ததுக்கு என் வாழ்த்துகள்

கோமதி அரசு said...

எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். //

இனி மேல் இதைச் சொல்லி எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க சொல்லி விடுகிறேன்.

லேடீஸ் ஸ்பெஷலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

நான் முதல் முதல் ஹாஸ்டலில் தங்கியது, வேலைக்கு சேர்ந்த புதிதில் தான். திண்டாடிப்போய்ட்டேன்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான அனைவரும் ஒரு முறை படித்து
மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய பதிவு
சில விஷயங்க்களை இந்தக் காலச் சூழலில் தவிர்க்க
இயல்வில்லை.அதுபோன்ற சமயங்களில் தாங்கள்
கட்டுரையில் குறிப்பிடுவதுபோல் நல்லது கெட்டதை
பகுத்து ஆராய்ந்து நம்மை நாமே சீர்செய்து
கொள்ள வேண்டியதுதான் வேறு வழியில்லை
மனம் தொட்ட அருமையான பதிவு,வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு.அனுபவித்து எழுதியிருக்கீங்க, இருபது வருடங்கள் முன்பு 4 வருட என்னோட ஹாஸ்டல் வாழ்க்கை தான் நினைவிற்கு வருது.

Unknown said...

இந்தக் கட்டுரை மலரும் நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கிறது. இது மிகவும் பயனுள்ளக் கட்டுரை.
பகிர்வுக்கு நன்றி.
லேடிஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

RVS said...

எழுத்தாளருக்கு பாராட்டுகள்!

ஆத்தா இது அற்புதமா இருக்கு!! :-)

வல்லிசிம்ஹன் said...

மிகச் சிரத்தையோடு ஹாஸ்டல் வாழ்க்கையை அறிமுகப் படுத்தி இருக்கீங்க.

மனம் நிறைந்த வாழ்த்துகள் சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அம்மணி எப்பவோ ரெடிதான்.. என்னை ஒத்துக்க வைக்கிற முயற்சிதான் நடக்குது. ஒடன ஒத்துக்கிட்டா எப்டி?.. அதான் கொஞ்சம் போக்குக் காட்டிட்டு கடைசியில் ஒத்துக்கிட்டேன் ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

பொறுப்ஸ் பிள்ளைங்க எங்கேருந்தாலும் பிழைச்சுக்கும் இல்லையா..

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆதி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமா,

உங்க அனுபவங்களை நீங்களும் ஏன் எழுதக் கூடாது.. :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

ஆஹா... ஜூப்பரு :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

மாதேவி said...

ஹொஸ்டல் வாழ்க்கை பொறுப்பாக நடக்கவைக்கும்,தன்னம்பிக்கையை வளர்க்கும். சின்னுவின் அனுபவத்தில் நான் கண்டது :)))

வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

அனுபவஸ்தங்க சொன்னா சரிதாங்க :-)

LinkWithin

Related Posts with Thumbnails