Saturday 12 November 2011

கெளம்பிட்டாங்கய்யா.. கெளம்பிட்டாங்கய்ய்யா...

படம் கொடுத்ததுக்கு நன்றி கூகிள் அண்ணாத்தை
'இந்திய நண்டுகள்' கதை கேள்விப் பட்டிருக்கீங்களா?..  நிச்சயமா கேள்விப் பட்டிருப்பீங்க. கேள்விப் படாதவங்களுக்காக இன்னொருக்கா சொல்றேன்.

வெளிநாடுகளுக்கு ரகசியமா விலங்குகளைக் கடத்தல் செஞ்சுட்டிருந்த ஒரு கூட்டம் தனக்குச் சொந்தமான ஒரு கப்பல்ல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்ப வேண்டிய விலங்குகளைப் பத்திரமா காற்று நுழையும் வசதி கொண்ட கண்டெய்னர்கள்லயும், சிலதை சின்னச்சின்ன கூடைகள்லயும் அடைச்சு வெச்சு தயார் செஞ்சுட்டிருந்தாங்க. (இது கதை, அதனால லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. சொல்லிட்டேன் :-))) அதுல நண்டுகள் இருந்த ஒரு கூடையை மட்டும் மூடாம அப்படியே விட்டு வெச்சிருந்தாங்க. இதை அந்தக் கம்பெனியில புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு ஊழியர் கவனிச்சுட்டார். ஐயய்யோ.. அதெல்லாம் வெளிய ஓடிடுமே.. அப்றம் சட்ன்னு பிடிக்கவும் முடியாதே'ன்னு அவருக்கு கவலையாப் போச்சு. உடனே கூடையை மூடி வைக்கிறதுக்காக தன்னோட மேலதிகாரி கிட்ட போய் உதவி கேக்கப் போனார். 

மேலதிகாரி அவரை லட்சியமே செய்யலை. 'ஒண்ணும் சிரமப்பட வேணாம். அப்படியே விட்டுடு'ன்னார். தொழிலாளிக்கு ஒண்ணும் புரியலை, 'அப்படியே விட்டுட்டா அது ஓடிப் போயிடாதா?'ன்னு அவரோட அடிமனசுலேர்ந்து கேள்விகள்  தண்ணி பட்ட ஈனோ உப்பு மாதிரி குபீர்ன்னு பொங்குது.'உனக்கு சந்தேகமாருந்தா அந்தக் கூடையை நல்லா கவனிச்சுப்பாரு'ன்னுட்டு மேலதிகாரி போயே போயிட்டார். குழம்பிய தொழிலாளி கூடைக்குள்ள பார்த்தா நல்லா கொழுகொழுன்னு பத்துப்பதினஞ்சு நண்டுகள் உள்ள கிடக்குது. அதுல ஒண்ணு மெதுவா மேல ஏறி வெளியே வரப் பாக்குது. பாதி வழி ஏறிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு நண்டு கபால்ன்னு முதல் நண்டோட காலைப் புடிச்சு கூடைக்குள்ள இழுத்துப் போடுது. இப்படியே விளையாட்டு தொடருது. மொத்தத்துல ஒரு நண்டு கூட கூடையை விட்டு வெளியே வரலை. இதைக் கொஞ்ச நேரம் கவனிச்சுட்டிருந்த நம்மாளு, மேலதிகாரி கிட்டப் போயி, 'மொதலாளி.. கூடைய மூட வேணாம்ன்னு நீங்க ஏன் சொன்னீங்கன்னு இப்பத்தான் புரியுது. ஆனா, இவ்ளோ நண்டுக் கூடைகள் இருக்கறப்ப அந்த நண்டுகள் மட்டும் ஏன் அப்படி வித்தியாசமா நடந்துக்குது. எனக்கு ஒண்ணும் புரியலை"ன்னார்.

"புரியாததாலதான் நீ இன்னும் தொழிலாளியா இருக்கே. புரிஞ்சுக்கிட்டதாலதான் நான் மேலதிகாரியா ப்ரமோஷன் வாங்கி வந்துருக்கேன். சரி. சொல்றேன் கேட்டுக்க. அதெல்லாம் இந்தியாவுலயும் அதைச் சுத்தியிருக்கற கடற்பகுதிகள்லயும் பிடிச்ச நண்டுகள். ஏதாவது ஒரு நண்டு முன்னேற முயற்சி செஞ்சாலும், பக்கத்துல இருக்கற நண்டுகள் காலைப் பிடிச்சு இழுத்து அதை முன்னேற.. அதாவது கூடையை விட்டு வெளியேற முடியாம செஞ்சுடும். இது அதுங்களோட இயற்கைக் குணம். புரிஞ்சதா?"ன்னுட்டுப் போயிட்டார்.

'இந்தியர்களான நமக்கு நம்மில் ஒருத்தர் முன்னேறுனா பொறுக்காது'ங்கறதை சொல்றதுக்காக கட்டி விடப்பட்ட கதை இது. இத மொதமொதல்ல உருவாக்குன ஆளு மட்டும் கையில கிடைச்சார்... அந்த நண்டுக் கூடையிலயே போட்டு அடைச்சு, கூடுதலா நாலஞ்சு நட்டுவாக்காலிகளையும் விடணும். கிர்ர்ர்ர்... ஆனா, கொஞ்சம் உங்க சொந்தச் செலவுல ரூம் போட்டு யோசிச்சுப் பாருங்க. இலைமறை காய் மறையா கொஞ்சம் உண்மையும் எட்டிப் பாக்குதுன்னுதான் சொல்லணும். தனக்குத் தெரிஞ்சவங்களோட,.. முக்கியமா சொந்தக்காரங்களோட, வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து எத்தனை பேர் உண்மையிலேயே மனசார சந்தோஷப்படறோம்? இது ஒரு கேள்விக்குறியாவே ஏன் எப்பவும் இருக்குது?.

ஆனா, எப்பவுமே எதுவுமே அப்படி இருக்கறதில்லை. முன்னே பின்னே தெரிஞ்சவங்க முன்னேறுனா வேண்ணா பொறாமைப்படுவோமா இருக்கலாம். ஆனா, முன்னே பின்னே தெரியாதவங்களை முன்னேத்தியே தீருவோம்ன்னு வைராக்கியமாஒரு கூட்டமே அலையுது தெரியுமோ?.  நம்ம ஈமெயிலுக்கு ஒரு லெட்டர் அனுப்பி, 'உங்க மெயிலுக்கு பெரிய தொகையொண்ணு பரிசு விழுந்துருக்குது.. ஃப்ரம் டுடே நீங்க ஒரு கோடீஸ்வரர்'ன்னு சொல்ற நல்ல மனசோ,..  இல்லைன்னா, தன்னோட சொத்துல ஒரு பகுதியை நம்ம பேருக்கு எழுதி வெச்சுட்டு செத்துப் போற பெரிய மனசோ வெளிநாட்டுக் காரங்களுக்கு மட்டுந்தான் இருக்குது. நம்மள்ல எத்தனை பேருக்குங்க இருக்குது?... :-)

அட.. மெயிலை விடுங்க.. அது ஓல்டு யுகம். டெக்னாலஜி முன்னேறும்போது கொளுகையை பரப்பற வழியையும் முன்னேத்தணுமா இல்லியா?.. அதனால அடுத்தாப்ல மொபைல்ல மெஸேஜ் அனுப்ப ஆரம்பிச்சாங்க. காசு பணம் மட்டும் கொடுத்தாப் போதுமா?.. அதனால முத்துமாலை, தங்க நெக்லஸ்ன்னு அவங்க நமக்குக் கொடுக்கற அன்புப்பரிசு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. பாசக்காரங்களா இருக்காங்களேப்பா :-))))

இப்ப லேட்டானாலும் லேட்டஸ்டா இன்னொரு ஹைடெக்கான வழியைக் கண்டுபிடிச்சுருக்காங்க. இப்பல்லாம் நம்ம நம்பருக்கே போன் செஞ்சு நேரடியா அட்டாக்தான். எப்படியாவது நம்மை கோடீஸ்வரங்களாக்கியே தீரணும்ன்னு விடாமுயற்சி செய்யற அந்த அன்பை நினைக்கிறப்ப கண்கள் பனிக்கின்றன.. காதுகளும் இனிக்கின்றன :-)

அப்படியொரு உடன்பிறவா உடன்பிறப்பு கிட்டயிருந்து சமீபத்துல எனக்கும் ஒரு போன் கால் வந்தது. கைவேலையா இருந்ததால ரங்க்ஸே அட்டெண்ட் செஞ்சார். இது எங்களுக்குள்ள ஜகஜம்தான்.

"ஹலோ.."

"......"

"நெஜமாவா.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்லலியே.."

"...................."

"ஹைய்யோ... என்னால நம்பவே முடியலை. ஆச்சரியமா இருக்குது."

".................."

"ஆனாலும், உங்களுக்குப் பெரிய மனசுங்க. இவ்ளோ பெரிய தொகை.... எப்டீங்க? எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போலிருக்கே"

"..................." 

இதுவரைக்கும் ரங்க்ஸ் கொடுத்த ஓவர் ஆக்டிங்லயே என்னவோ வில்லங்கம்ன்னு புரிஞ்சு போச்சு. இந்தச் சமயத்துல மொபைலைப் பிடுங்கி லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு, மறுபடியும் ரங்க்ஸ் கைல கொடுத்தேன்.

"உங்கூர்ல இருக்கற '****' பாங்க்ல பணத்தைப் போட்டுடுவோம். அதை வெளிநாட்டு பேங்க்லேர்ந்து கொண்டு வர வேண்டியிருக்கு இல்லியா.. அதுக்கான சார்ஜை மட்டும் நீங்க கொடுத்தாப் போதும். உங்களுக்கு இருபத்தஞ்சு லட்சம் கிடைச்சுடும்"ன்னு பேசிக்கிட்டிருக்கச்சயே லைன் கட்டாகிடுச்சு. க்ளைமாக்ஸ் சீன்ல மலை விளிம்புல நின்னுட்டிருக்கற ஹீரோயினை வில்லன் காப்பாத்துவாரா?.. இல்லை ஹீரோ காப்பாத்துவாரா?.. ன்னு நகத்தைக் கடிச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கறப்ப கரண்ட் கட்டானது மாதிரி இருந்தது.

யாரு என்ன?.. ன்னு ரங்க்ஸ் கிட்ட விவரம் கேட்டேன். விஷயம் ரொம்ப சிம்பிள்தான். ஈமெயில்ல அடிக்கடி நடக்கறதுதான். என்னோட மொபைல் நம்பருக்கு குலுக்கல் முறையில் பரிசு கிடைச்சுருக்கு. ஜஸ்ட் இருபத்தஞ்சு லட்சம் ரூபாய்கள். ஒரு வெளிநாட்டுக் கம்பெனி பரிசு கொடுக்குது. வெளிநாட்ல உள்ள பாங்கிலிருந்து இங்கிருக்கும் பாங்குக்கு பணத்தைக் கொண்டாந்து நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவாங்களாம். அதுக்கு ச்சார்ஜா குறிப்பிட்ட அமவுண்டை அவங்க கொடுக்கற அட்ரசுக்கு அனுப்பிட்டா, நமக்கு இந்தியாவுலயே ஒரு அட்ரஸ் கொடுப்பாங்க. அந்த அட்ரஸுக்குப் போய்ப் பார்த்தா நம்மூரு பாங்குக்கான ஏஜண்ட் இருப்பார். அவர் கிட்ட நமக்கான பரிசுப் பணம் இருக்கும். அவர் கூடப் போனா நம்ம பாங்குல நம்ம அக்கவுண்டுல நம்ம கண்ணு முன்னாடியே பரிசுப் பணத்தை டெப்பாசிட் செஞ்சுடுவாங்க. இந்த மாதிரியெல்லாம் தில்லுமுல்லு நடக்குதுன்னு ரங்க்ஸுக்கும் தெரியும். அதனாலத்தான் முதல்லே எதிர்முனையில் இருந்த பார்ட்டி அடிச்ச கூத்துக்கெல்லாம் பதில் கொடுத்துட்டிருந்தார் :-))

ஆஹா!!.. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு நம்ம வித்யாசாகர் ஒரு கதை எழுதியிருந்தாரேன்னு ஞாபகம் வந்தது. அதுல ஹீரோ ஏமாந்துடுறதா கதை முடியும். அந்தக் கதையை ரங்க்ஸ் கிட்ட சொன்னேன்.  கொஞ்சம் யோசிச்ச ரங்க்ஸ் அந்த நம்பரைக் கூப்பிட்டார். 

"சார்.. நீங்க சொன்ன அமவுண்டை அனுப்பிடறேன். எங்கே அனுப்பணும்ன்னு சொல்லுங்க.."

"நீங்க மொதல்ல காசை அனுப்பிடுங்க.. அப்றம் நானே அட்ரசை மெஸெஜ் அனுப்பிடறேன்"

"சார்.. " அப்டீன்னு ஆரம்பிச்சு ரங்க்ஸ் பாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டே போறார். போனையே முன்னே பின்னே பார்க்காத ஒருத்தர், கத்திப் பேசுனாத்தான் எதிர் முனையில் இருக்கற ஆளுக்கு கேக்கும்ங்கறமாதிரி நினைச்சுக்கிட்டு ஊரையே கூட்டுவாரே.. அந்த மாதிரி ஹை டெஸிபல்ல பேசுறதையும், மீட்டர் கணக்குல ரீல் உட்டதையும் கேட்டுக்கிட்டிருந்த நாங்க ஒரு கட்டத்துல வாயை இறுக்கப் பொத்திக்கிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சுட்டிருந்தோம். சிரிப்புச் சத்தம் கேட்டு எதிராளி உஷாராயிடக் கூடாதே. 

பசங்க வேற 'அப்பா.. போதும்'ன்னு சைகை காட்டுதுங்க. இவரானா மணிக்கு இத்தனை கி.மீங்கற வேகத்துல ரீல் விட்டுக்கிட்டிருக்கார். 'ஆஹா.. ஒரு அடிமை சிக்கிட்டார்டா..'ன்னு இவருக்கு ஒர்ரே பூரிப்பு. ஒரு வேளை எதிராளியும் அப்படித்தான் நினைச்சுருப்பானோ??.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பேச்சு வாக்குல, 'சரீங்க.. உங்க அட்ரசைச் சொல்லுங்களேன்"ன்னு நைசா ஒரு பிட்டைப் போட்டார்.

".............."

"ஹலோ..ஹல்லோ.."

அவ்ளோதான்.. லைன் கட். இவர் மறுபடி மறுபடி அந்த நம்பருக்கு போன் செஞ்சுட்டே இருக்கார். லைன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுன்னு ஒரு பொண்ணு கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்குது. பாவம்.. தொண்டை கட்டிக்கப் போவுதுன்னுட்டு பரிதாபப்பட்டு போன் செய்யறதை விட்டுட்டார்.

அப்றம் ஆற அமர உக்காந்து இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதுதான் அந்த நம்பரை நமக்குத் தெரிஞ்ச போலீஸ் நண்பர் மூலமா ட்ரேஸ் செஞ்சு ஆளைப் பிடிக்கலாமேன்னு ஒரு நினைப்பு. பிடிச்சு மரியாதை செலுத்த வேணாமா?.. ஏன்னா, நமக்கு தொலைபேசுன ஆளு ஒரு இந்தியன். இந்தியன் முன்னேறணும்ன்னு துடியாத் துடிக்கிற ஒரு இந்தியனுக்கு மாலை மரியாதை கூட செய்யலைன்னா அப்றம் எப்படி?.

மொபைலை எடுத்துப் பார்க்கறச்சே.. 'ஆஹா!!,... வட போச்சே..'ன்னு நொந்துட்டேன். கால் ஹிஸ்டரி ரொம்பி வழிஞ்சதால பேச்சு வாக்குல என்னையறியாமலேயே அத்தனையையும் க்ளியர் செஞ்சுருக்கேன்.. அடப்பாவி மக்கா!!! மறுபடியும் எங்க கிட்ட இல்லைன்னாலும் வேற யார் கிட்டயாவது மாட்டாமயா இருப்பே :-))

ஆகவே மக்களே.. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்கறதா சொல்லிக்கிட்டு எந்த ரூபத்துல வேண்ணாலும் பொறி வைக்கப்படலாம். மாட்டிக்காம எச்சரிக்கையா இருந்து தப்பிச்சுக்கோங்க.. ஆனா, அறியாமையாலும், பேராசையாலும் இப்படிப் பட்ட ஆட்கள் கிட்ட மாட்டிக்கிடற பாமரர்கள் கதிதான் பரிதாபத்துக்குரியது. 

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சரி. சொல்றேன் கேட்டுக்க. அதெல்லாம் இந்தியாவுலயும் அதைச் சுத்தியிருக்கற கடற்பகுதிகள்லயும் பிடிச்ச நண்டுகள். ஏதாவது ஒரு நண்டு முன்னேற முயற்சி செஞ்சாலும், பக்கத்துல இருக்கற நண்டுகள் காலைப் பிடிச்சு இழுத்து அதை முன்னேற.. அதாவது கூடையை விட்டு வெளியேற முடியாம செஞ்சுடும்.//

ஆஹா! இப்படி உண்மையைப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்களே!

நல்ல பதிவு. பாராட்டுக்கள். vgk

raji said...

எனக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும் நீங்க சொல்ற, அந்த இந்தியனை முன்னேத்த துடிக்கற பாழாப் போன மெசேஜ் வந்து கழுத்தறுக்குது சாந்தி! பாக்கும்போது அப்படியே பத்திக்கிட்டு வரும்

CS. Mohan Kumar said...

நண்டு கதை சுவாரஸ்யம். ஈ மெயிலில் இப்படி விஷயம் வரும். போன் பண்ணி கூட பேசுறாங்களா?

அப்புறம்: இந்த பதிவுக்கும் " ஆன் லைனில் பணம் சம்பாதிக்கலாம்" ன்னு ஒரு கமென்ட் வருது பாருங்க :))

வல்லமை said...

அன்பின் சாந்தி,

சூப்பர்..... போங்க. கலக்கிட்டீங்க. உண்மையைப்புட்டு புட்டு வைச்சிட்டீங்க.......

RAMA RAVI (RAMVI) said...

நண்டு கதை ஏற்கனவே கேள்வி பட்டிருந்தாலும்.உங்க எழுத்தில் படிக்கும் போது சுவாரசியமாக இருந்தது.
இந்த மாதிரி ஏமாற்றுவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

Asiya Omar said...

ஆஹா நண்டு கதை கேள்விபட்டது தான்,ஆனால் நான் இங்கு ஸ்கூலில் வேலை பார்த்தப்போ வேறு வேறு மொழி பேசுறவங்க கூட உதவினாங்க,ஆனால் ஒரே மொழி பேசுற அவங்க என்னை கவுக்க போட்ட திட்டம் இருக்கே சொல்லி முடியாது.ரொம்ப சரிங்க,இந்த நண்டு கதையை எழுதினவங்களுக்கு என்னை பொருத்தவரை மாலையே போடலாம்.

நானும் முதலில் ஈமெயிலில் எனக்கு பரிசு விழுந்திருக்குன்னு வந்தப்போ பல வருடங்கள் முன்பு என் கணவரை என்னன்னு பாருங்கன்னு சொன்னது நினைவிற்கு வருது,இதெல்லாம் சும்மா அந்த மெயிலை டெலீட் செய்திடுன்னு சொன்னார்,இப்ப தான் அது மோசடின்னு அம்பளம் ஆகிவிட்டதே..

மாதேவி said...

ஹா...ஹா :))

வல்லிசிம்ஹன் said...

உங்க வீட்டுக்காரர் இதை ஹாண்டில் செய்த வகை நினைக்க நினைக்க சிரிப்பு வருகிறது.
இப்பப் பதிவுகளுக்கும் வந்துட்டாங்களே.
நண்டுகள்...பயங்கரமானவை.

கோமதி அரசு said...

மக்களே.. உங்களைக் கோடீஸ்வரன் ஆக்கறதா சொல்லிக்கிட்டு எந்த ரூபத்துல வேண்ணாலும் பொறி வைக்கப்படலாம். மாட்டிக்காம எச்சரிக்கையா இருந்து தப்பிச்சுக்கோங்க.. ஆனா, அறியாமையாலும், பேராசையாலும் இப்படிப் பட்ட ஆட்கள் கிட்ட மாட்டிக்கிடற பாமரர்கள் கதிதான் பரிதாபத்துக்குரியது.//

நல்ல விழிப்புணர்வு பதிவு.
இந்த காலகட்டத்திற்கு அவசியமான பதிவு சாந்தி.

குறையொன்றுமில்லை. said...

மொபைல்போன் வச்சிருக்கிரவங்க அடிக்கடி சந்திக்கும் இதுபோல காமெடிகளை சுவையாக ச்சொல்லி இருக்கே சாந்தி.

ஹேமா said...

சாரல்...சிரிக்க வச்சு சிந்திக்கவும் வச்சிட்டீங்கப்பா.நண்டுக்கதை நாம் பொதுவா எல்லாத் தமிழர்களுக்குமே உதாரணம் !

pudugaithendral said...

நண்டுக்கதை அனுபவிச்சவங்களுக்குத் தெரியுமா. :(

சாக்கிரதையா இருந்துக்கச் சொல்லி உங்க பாணியில அழகா சொல்லியிருக்கீங்க. நன்றீஸ்

வெங்கட் நாகராஜ் said...

எந்த விதத்திலாவது ஒரு கோழி மாட்டாதா என்று எதிர்பார்ப்பு இவர்களுக்கு....

இவர்களது வலையில் ஏதாவது ஒருவர் மாட்டிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.... :(

ராமலக்ஷ்மி said...

புதுசு புதுசா கெளம்பிட்டேதான் இருக்கிறார்கள். நாமதான் விழிப்பா இருக்கணும் என்பதை உணர்த்திய விதத்தை ரசித்தேன்:)!

RVS said...

நண்டு கதையை கொண்டு வந்து தெறமையாக் கோர்த்தீங்க பாருங்க... அது.... :-)))

ஷைலஜா said...

நண்டுகதையையும் கொண்டுவந்து.//: ரசித்தேன் அப்றோம் சாரல் இன்றைய என் மழ்லைகள் தொடர் பதிவில் உங்களை அழைக்க இருக்கிறேன் வாசிக்கவும் பிறகு எழுதவும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட நட்புகள் அனைவருக்கும் மிக்க நன்றி :-)

LinkWithin

Related Posts with Thumbnails