Friday 10 December 2010

அடைக்கோழி..

அப்படித்தான் ரிஷிகேஷுக்கு அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் பட்டப்பெயரிட்டிருந்தார்கள். குடிவந்து ஒருமாதமாகியும், அங்குள்ள தன்வயதொத்த சிறுவர்களுடன் விளையாடுவதோ, இல்லை.. பேசிக்கொள்வதோ கூட கிடையாது. பள்ளி விடுமுறையில் மற்ற பசங்களெல்லாம், அதகளம் செய்துகொண்டிருக்க, இவன் மட்டும் வீட்டுக்குள்ளேயே கிடப்பது சற்று வினோதமாகவே இருந்தது .  விடுமுறையின் ஆரம்பத்திலேயே இந்தவீட்டுக்கு வந்துவிட்டதால், ஸ்கூலுக்கு போகும்போதும் அவனைப்பார்க்கமுடிவதில்லை

"டேய்.. அவங்க வீட்டுல எப்பப்பார்த்தாலும் வீடியோகேம்ஸுலதான்,  விளையாடிக்கிட்டிருக்காண்டா"... குமார் வீட்டுக்காம்பவுண்டில் விழுந்த பந்தை எடுக்கும் சாக்கில் உளவு பார்த்து வந்து சொன்னான் நாத்ஸ் என்று காரணப்பெயரிடப்பட்ட நாதன். விடுமுறையை சாக்கிட்டு குளிக்காமல் கொள்ளாமல், எந்நேரமும் விளையாடிவிட்டு வியர்வை வாசத்துடன் இருப்பதால் அந்தப்பெயர்.

"அவங்கப்பா, கெவர்மெண்டுல பெரிய உத்தியோகஸ்தர் தெரியுமா!!.. கொஞ்ச நாளைக்குத்தான் இங்க இருப்பாங்களாம். அப்றம் கோட்டர்ஸ் கிடைச்சதும் காலிபண்ணிட்டு போயிடுவாங்களாம். கோட்டர்ஸ்ன்னா, நாம இருக்கோமே, அது மாதிரியில்ல,.. பெரிய பங்களாவே கிடைக்குமாம்".. அவங்கம்மாவும், குமாரின் அம்மாவும் பேசிக்கொண்டதை, இங்கே ஒப்பித்தான் சரவணன்.

"அப்புடியா!!.. அதாம் பய பவுர்ல திரியுதானா??" .. அரை டவுசரிலிருந்து முழுடவுசருக்கு அப்போதுதான் பிரமோஷன் வாங்கியிருந்த ஒரு விடலை முணுமுணுத்துக்கொண்டான்.

குமாரின் அம்மாவும், அப்பாவும் கூட எவ்வளவோ சொல்லிச்சொல்லிப்பார்த்து சலித்துவிட்டார்கள். மற்ற பசங்களுடன் சும்மா பேசிப்பழக.. கொள்ளக்கூடாதா என்று ஆதங்கப்பட்டாலும் ஒன்றும் பிரயோசனமில்லை.

வீட்டில், ஒன்று கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் மூழ்கியிருப்பான், இல்லையென்றால், டிவி அலறும். எதுவுமில்லையென்றால், அப்பாவுடைய காரை வரச்சொல்லி நூலகத்துக்கு போய்விடுவான். அங்கே அவனுக்கென்று ஒரு அமைதியான இடமுண்டு. அங்கே, நாலாவது அலமாரி அவனுக்கு மிகப்பிடித்தமானது. அதற்க்கும், சுவருக்குமிடையே வசதியாக அமர்ந்துகொண்டு அலமாரியிலிருக்கும் காமிக்ஸ், குழந்தைகளுக்கான நூல்கள் என்று தன்னுடைய உலகத்துக்குப்போய்விடுவான்.

'த்தடார்'.. பசங்கள் அடித்த பந்து, குமாரின் அறைஜன்னலோரம் வந்து விழுந்தது. "டேய்.. போயி எடுத்தாடா".. என்று விரட்டப்பட்டான் இருப்பவர்களிலேயே பொடியன் ஒருவன்.

"நானா,.. ஐயோ.. மாட்டேன்"

 "இப்ப நீ எடுத்துட்டு வரல, அப்றம் ஆட்டத்துல சேர்க்கமாட்டேன்"

பயந்துகொண்டே மெல்ல ஜன்னலுக்கருகில் வந்து, பந்தை எடுத்துக்கொண்டு திரும்பியவன், ஆர்வக்கோளாறில், மெல்ல ஜன்னலுக்கருகில் வந்து, உள்ளே எட்டிப்பார்த்தான். யாரையும் காணவில்லை,... கம்ப்யூட்டர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. மெதுவாக,  உள்ளேபார்த்து உரத்த குரலில்,"அடைக்கோழி" என்று கத்திவிட்டு ஓடினான். காம்பவுண்டுக்கு வெளியே வரும்போது திரும்பிப்பார்த்தான்.., ஜன்னலில் ஒரு பையனின் சிவந்தமுகம் தெரிந்தது.

"ஏய்ய்ய்.. எல்லோரும் ஓடிடுங்க.. அடப்பாவி, இப்படி எல்லாத்தையும் மாட்டிவிட்டுட்டயே" என்று திட்டியபடி அனைவரும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கிக்கொண்டு குமார்வீட்டு வாசலை எட்டிப்பார்த்தார்கள். யாரும் திட்டுவதற்கு வரவில்லை.

வீட்டினுள் இருந்த குமாருக்கும் ஏக்கமாகவே இருந்தது.. கூடவே கழிவிரக்கமும். பசங்களிடம் பேச முயற்சிக்கும் ஒவ்வொரு கணமும் ஏதோவொன்று அவன் நாவை கட்டிப்போட்டுவிடும். இப்போதும், பந்தை எடுக்கவந்தவனைப்பார்த்து புன்னகைத்துவைக்க எண்ணி, அந்தமுயற்சியின் தோல்வி கோணல்களாக நெளிந்தது. மனதளவில் எப்போதோ பட்ட காயங்கள் இன்னும் ஆறாமல், இன்னும் வலித்துக்கொண்டேயிருந்து.. கூண்டைவிட்டு வெளியே வரத்துடிக்கும் அவனை இன்னும் உள்ளே இழுத்துப்போட்டது. தன்னுடைய தனிமையை மறக்க நூல்களையும், கேம்ஸையும் நண்பர்களாக்கிக்கொண்டுவிட்டான்.

"ஐயோ.. அம்மா" அலறியபடி விழுந்துகிடந்த சுபாஷின் அலறல் அவனை நினைவுக்குக்கொண்டுவந்தது. மற்றவர்கள் உதவியுடன் சமாளித்து எழுந்து நின்ற சுபாஷின் முழங்காலிலிருந்து, கொடகொடவென்று ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கீழே பதிந்து கிடந்த கண்ணாடித்துண்டின் கைங்கர்யம்.. ரத்தத்தை பார்த்ததும், பயத்தில் அவனுக்கு லேசாக தலைசுற்றத்தொடங்கியது.

 'விழுந்து வெச்சிடாதேடா'..

'சீக்கிரம் எங்கவீட்டுக்கு கொண்டாங்க'..  என்று யாரோ அழைப்பது போல் கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள், சுபாஷை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டிருந்தவர்கள்.

ஜன்னலில் குமார்தான் அவர்களை சத்தம்போட்டும், கைகளை ஆட்டியும், கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தான்.

அனைவரும் தயக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டாலும்,  அவர்களையறியாமல் மெல்ல வீட்டை நோக்கி நகர்ந்தார்கள்.

"கதவு திறந்துதானிருக்கு,.. உள்ளே வாங்க"

மெல்ல கைவைத்ததும் கதவு திறந்துகொண்டது. தயக்கத்துடன் உள்ளே வந்தவர்கள், அங்கிருந்த பெஞ்சில் சுபாஷை வசதியாக அமரச்செய்துகொண்டிருந்தபோது, உள்ளிருந்து முதலுதவிப்பெட்டியுடன் வந்தான் குமார்.

"காலை நல்லா நீட்டிவை" என்று சொல்லியபடி தன்னுடைய சக்கர நாற்காலியை வாகாக தள்ளியபடி சுபாஷிடம் சென்று, டெட்டால் நீரால் காயத்தை சுத்தம் செய்தான்.

"காயம் ரொம்ப ஆழமா இருக்கும் போலிருக்கே" துடைக்கத்துடைக்க வந்து கொண்டிருந்த ரத்தத்தை கட்டுப்படுத்த ஒரு கை நிறைய பஞ்சை எடுத்து, "இதை நல்லா அழுத்திப்பிடிச்சுக்கோ" என்றபடி பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்தான்.

"ம்.. ஆஹ்ங்" உளறியபடி வாங்கிக்கொண்ட சரவணன் தன்னுடைய நண்பர்கள் குழாமை மெல்ல ஓரக்கண்ணால் பார்த்தான். அனைவர் முகமும் பேஸ்தடித்தமாதிரி இருந்தது.

'இதுதான் அவன் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதற்கு காரணமா.. விளையாடாவிட்டாலும் சும்மாவாவது பேசிப்பழகலாமே.. என்ன போச்சு!!!'.. மனதில் தோன்றியதை கேட்டுவிட்டான் சுபாஷ்.

"என்னவோ!! திடீர்ன்னு தோணுச்சு. ஒருத்தன் எம்மனசுல உண்டாக்கிய காயம்,.. இன்னிக்கு நீ பட்ட காயத்தால ஆறத்தொடங்கிடுச்சுன்னு வெச்சுக்கோயேன்.. அதிருக்கட்டும்,..  எங்கப்பா ஆட்டோ அனுப்பியிருக்கார். இப்ப வந்துடும், அங்கிள் கொடுக்கிற ட்ரீட்மெண்டுல சீக்கிரமே சரியாயிருவே..  எங்கப்பாவோட ஃப்ரெண்டு ஒரு டாக்டர், தெரியுமா!!" புன்சிரித்தபடி, சுபாஷின் ரத்தம்வழிந்துகொண்டிருந்த,.. போலியோவால் மெலிந்திருந்த காலில் கட்டுப்போட்டுவிட்டு,

"ஃப்ரெண்ட்ஸ்??".. என்று நீட்டிய கையை,

"ஃப்ரெண்ட்ஸ்!..." என்று நாலைந்து கைகள் பதிலுக்கு நீண்டு பற்றிக்கொண்டன.

அடைக்கோழி, தானிருந்த காலியிடத்தைவிட்டு மெதுவாக எழுந்து, சோம்பல்முறித்து,  புதுவுலகைப்பார்த்தது.






21 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறுகதை நல்லா இருக்கு. மாற்றுத்திறனாளிகள் பற்றி சொன்னது மனதைத் தொட்டது.

எல் கே said...

மனதைத் தொட்ட கதை

Chitra said...

அடைக்கோழி, தானிருந்த காலியிடத்தைவிட்டு மெதுவாக எழுந்து, சோம்பல்முறித்து, புதுவுலகைப்பார்த்தது.


...very nice ending!

ஸாதிகா said...

மனதினை நெகிழ வைத்தது அமைதிச்சாரல்.

வேங்கை said...

நல்லா இருக்குங்க "ஃப்ரெண்ட்ஸ்!..."



வேங்கையின் கனவுகள்

சந்தனமுல்லை said...

Gud one.


நோட் பண்ணிக்கறேன்..அப்புறமா பப்புக்கு சொல்ல உபயோகமாகும்.

Prabu M said...

Story touches!! :)
so sweet...

Philosophy Prabhakaran said...

அட... என்று சொல்லவைத்த சிறுகதை...

அம்பிகா said...

நெகிழ வைத்த கதை அமைதிச்சாரல்

ஜெய்லானி said...

கைய குடுங்க நானும் ஃபிரண்ட்ஸ்தான்

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நல்லாயிருக்கு சாரல். எடுத்துக் கொண்ட கருவும் முடித்த விதமும் அருமை.

//இப்போதும், பந்தை எடுக்கவந்தவனைப்பார்த்து புன்னகைத்துவைக்க எண்ணி, அந்தமுயற்சியின் தோல்வி கோணல்களாக நெளிந்தது.//

வரிகள் சிறப்பு.

இன்னும் கதைகள் எதிர்பார்த்து...

சொல்லிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்:)!

வல்லிசிம்ஹன் said...

அருமையாகக் கொண்டு சென்றீருக்கிறீர்கள்.
சாரல் மாற்றுத் திறன் கொண்ட நல்ல கதை.

Unknown said...

meeeeeeeeee

the first..

nice story...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான சிறு கதை...

ஹேமா said...

சில நேரங்களில் தவறித்தான் போகிறோம்.எங்களையறியாமலே எத்தனை மனங்கள் புண்படுகிறதோ !

மாதேவி said...

மனத்தைத் தொடும்கதை.

Asiya Omar said...

நல்ல சிறுகதை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடைக்கோழி, வெளியுலகம் கண்ட கதை, நல்லா இருந்ததுங்க.. முடிவு சூப்பர்..

சாந்தி மாரியப்பன் said...

கருத்துக்கள் சொன்ன உங்கள் அனைவருக்கும்...

[im]http://www.orkutpapa.com/scraps/thank-you-101.gif[/im]

Unknown said...

குழந்தைகள் உலகை அழகாக உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள்.
கதை சொல்லும் விதம் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரத்..பாரதி,

ரொம்ப நன்றி :-))

LinkWithin

Related Posts with Thumbnails