Wednesday 10 March 2010

ஆணென்ன....பெண்ணென்ன.!!!


ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..

ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .

சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!

இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.

நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.

இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.

சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....

31 comments:

கண்ணகி said...

அருமையான பதிவு சாரல்..

மகளிர் மசோதா நிறைவேறிய சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

கண்ணகி said...

என் மகனுக்கு சமையல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்...சாரல்..

ராமலக்ஷ்மி said...

//சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.//

மிக அருமையான பதிவு அமைதிச்சாரல்!

சந்தனமுல்லை said...

நல்லா சொல்லியிருக்கீங்க..இந்த பாரபட்சம் வீட்டுலேருந்துதான் முதலில் ஒழிக்கப்படணும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

மகளிர் மசோதாவால் நல்லதே நடக்கும்ன்னு நம்புவோம்.

இன்னொரு நளனுக்கு வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி.

அம்பிகா said...

\\தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..\\

\\ தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.\\

\\ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'.. \\

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அவசியமான இடுகை, அமைதிசாரல்.

கண்மணி/kanmani said...

இந்த பாரபட்சத்தை ஒழிக்க நாமதான் முதல் ஸ்டெப் எடுக்கனும்.

ஹுஸைனம்மா said...

ஆமாங்க, நம்ம பசங்கள சரியா வளர்த்தாலே போதும். நானும் அடிக்கடி சொல்வதுண்டு, அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவும் மகன், தன் மனைவிக்கு உதவுவதைக் கேவலமாக நினைக்கமாட்டான். என் மாமியாருக்கு நன்றி!!

"உழவன்" "Uzhavan" said...

வரதட்சணை தாங்க பெரிய பிரச்சனை

goma said...

அமைதிச்சாரல் இன்று காட்டாறாய் புறப்பட்டிருக்கிறது

நசரேயன் said...

//goma said...

அமைதிச்சாரல் இன்று காட்டாறாய் புறப்பட்டிருக்கிறது
//

எனக்கும் அப்படித்தான் தோணுது

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

உண்மைதான், எந்த ஒரு செயலுமே வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது, இல்லையா..

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி மேடம்,

ஆமாங்க, நம்முடைய தலைமுறையிலாவது, இதை ஆரம்பித்து வைத்தால் எதிர்காலத்திலாவது 50:50 ஆக இருப்பாங்க இல்லையா..

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஆமாம்..நீங்க சொல்றது கரெக்ட்தான்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

வரதட்சணையும் ஒரு பிரச்சினை. அதில்தான் ஆரம்பிக்கிறது குடும்ப வன்முறை.. இன்னபிற எல்லாம். நாம கொடுக்கிறதை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அட்லீஸ்ட் வாங்குறதையாவது நிறுத்தலாம் இல்லையா...

இப்பல்லாம் வரதட்சிணை மகளுக்கான பரிசு என்ற பேரில் கொடுக்கப்படுகிறது.வசதி படைத்தவர்கள் வீட்டில் வரதட்சிணை பேசப்படுவதில்லை.ஏன்னா, கேக்காமலேயே நிறைய கொடுப்பாங்கன்னுதான்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமா,
வாங்க நசரேயன்,

ஹி..ஹி.. அது ஒன்னுமில்லை,..கடைசி பத்தியில் சொல்லியிருந்தேனே அந்த செய்தியை படிச்சதும் சீ..ன்னு ஆகிடுச்சு. ஆண்குழந்தை மோகம் சமூகத்தை எப்படி ஆட்டி வைக்குது பாருங்க.இவங்களையெல்லாம் நிக்க வெச்சு சுடணும்ன்னு தோணிச்சு.அதுக்கு துப்பாக்கி சப்ளை வேணும்ன்னா நம்ம பின்லேடன் அண்ணாச்சிகிட்டதான் சொல்லணும். அவரை அமெரிக்கா கண்டுபிடிச்சப்புறம் நாம ஆர்டர் கொடுத்துக்கலாம்ன்னு, இப்போதைக்கு பதிவு போட்டுட்டேன்.

வரவுக்கு நன்றிப்பா..

வல்லிசிம்ஹன் said...

சாரல்,,
காலங்கள் எவ்வளவோ மாறியிருந்தாலும், ஆண் என்றால் அதிகக் கவனிப்புதான்.
எங்கள் வீட்டில் எல்ல்லோரும் சமம். பிள்ளைகளுக்குச் சமைக்கவும் தெரியும்.
நல்லதொரு பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா மேடம்,

ரெண்டு மாசத்துக்கு மேலாகியும் வாடாத மணம்மிக்க பூங்கொத்துக்கு நன்றிங்க.

Thekkikattan|தெகா said...

மிகச் சரியான பதிவு! வீட்டிலிருந்து அம்மா வளர்ப்பில இருந்து இது போன்ற ஆரோக்கியமான சிந்தனை ஆரம்பிக்கிதுங்க.

உ.தா-க்கு இந்த வரதட்சிணை விசயத்தை எடுத்துக்கங்களேன், அதில என் பையனுக்கும் வாங்க மாட்டேன் பொண்ணுக்கும் கொடுக்க மாட்டேன்னு ஒரு நிலை எடுத்து நிக்க முடியுமா? ஒரே பையனை வைச்சிருக்கும் அம்மாக்களின் நிலை என்ன??

துளசி கோபால் said...

ஒரு மாறுதலுக்கு என் மகளை ஆம்பளைப்பிள்ளைபோல வளர்த்துருக்கேன்.

வீட்டு வேலை ஒன்னும் செய்யப் பழக்கலை. ஆனால்.... அவள் இப்போ தனக்கான வேலைகளைச் செஞ்சுக்கிட்டுத் தனியா இருக்காள்.

ரொம்ப வருசத்துக்குப்பிறகு பிறந்ததால் அதிகச் செல்லம்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெகா,

முதல்வரவுக்கு நன்றிங்க.

வரதட்சணையை பொறுத்தவரை, பையனுக்கு வாங்கமாட்டேன்னு ஒரே நிலையை எடுத்தாலே மறைமுகமா முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துடுதே.பையன் வீட்டுக்காரங்க வாங்கலைன்னா பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கொடுக்கப்போறாங்க?.

கருத்துக்கும் வரவுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

ஆனாலும்,.. தனக்குன்னு வரும்போது எதுவும் சொல்லிக்கொடுக்காமலேயே சமையல் உட்பட எல்லா வேலைகளையும் செஞ்சுக்கறாங்க இந்த குழந்தைகள் :-))))

நன்றி.

துளசி கோபால் said...

"தனக்குத் தனக்குன்னா முடுக்காக் களை வெட்டுவானாம்"


பழமொழி!!!!

Thekkikattan|தெகா said...

//பையன் வீட்டுக்காரங்க வாங்கலைன்னா பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கொடுக்கப்போறாங்க?//

பையன் வீட்டிலயும் பெண்கள் இருக்காங்கள்லே அவங்க ஏன் தான் திருமணம் கட்டிக்கிட்டு வரும் பொழுது எவ்வளவு தூரம் தன்னோட பெற்றோர்கள் கஷ்ட நஷ்டமுற்று தன்னை தள்ளி விட்டாங்கன்னு தெரிஞ்சிருந்தும், அது மாதிரி தன்னோட பையனுக்கு கொடுக்க மாட்டேன்னு ஒரு நிலை எடுக்க மாட்டேங்கிறாங்க அதிலும் குறிப்பா - இந்த அம்மாக்கள்?

அப்படியே இங்கும் பொயிட்டு வாங்க நேரமிருந்தா அதில பின்னூட்டங்களை அவசியம் படிங்க, வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மக்களுக்கு எது மாதிரியான பட்டங்கள் சமூகம் கொடுக்குதின்னு :-) பெண் வீட்டார்களும், மதிகெட்ட மாப்பிள்ளைகளும்...!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

பழமொழி ரசித்தேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெகா,

உண்மைதான்.. வரதட்சிணை வேணாம்ன்னு சொன்னா அந்தப்பையனுக்கு கிடைக்கிற பட்டங்கள் எக்கச்சக்கம்.ஆனாலும் பிடிச்ச பிடியில் நிலையா இருக்கிற பசங்களும் இருக்கத்தான் செய்யறாங்க.

வரதட்சிணை கொடுக்க மாட்டேன்னு சொன்னாலும் கொஞ்ச நாளுக்கப்புறம் சுற்றுப்புற கெடுபிடியால் அந்த நிலையிலிருந்து பெண்கள் நழுவவேண்டி வருது. இப்ப, கொஞ்சம்கொஞ்சமா காலம் மாறிக்கிட்டு வருது. நல்லதே நடக்கும்ன்னு காத்திருப்போமே.

நன்றிங்க பகிர்வுக்கு.

ரிஷபன் said...

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.

எனக்குப் பிடித்த வரிகள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

ரொம்ப நன்றிங்க.

தாமதமான பதிலுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் :-))

LinkWithin

Related Posts with Thumbnails